Monday, August 28, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(1)

அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது.

நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!

அகதி!

அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.

எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.


எதற்காக நான் அகதியானேன்?


இது கேள்வி மட்டுமல்ல!-தேசத்தின் இருப்பையும் அதன் தன்மானத்தையும் பேசுவது.


இந்தச் சூழலை மறுதலித்துவிட்டு எனது ஜேர்மனியப் பிராஜாவுரிமையோடு என்னைக் கழுவிக் கொள்வதில் நாட்டமில்லை.நம்மில் பலர் தம்மை அகதிகள் என்பதைக் கேட்கச் சகிக்க மாட்டார்கள்.

என்றபோதும் பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.


தேசம் தொலைத்தவனின் வயிறு எரியும் மனப் போராட்டம்.தான் வளர்ந்து மண்ணளைந்த ப+மியைப் பார்க்க முடியாது தவிக்கும் வாழ் சூழல் இந்தவுலகத்தின் அனைத்து ஒடுக்கு முறையிலும் மிகக் கொடியது.இந்தவுணர்வைத் தேசத்தில் உழையாது,பிறர் பணத்தில் உண்டு ,ஏப்பமிட்டுத் தனக்கு பக்கத்தில் உடல் உழைப்பை நல்கும் மனிதர்களைச் சாதி சொல்லித் திட்டும் ஏப்பத்தால் உணரமுடியாது.-இது ஒரு தேச அவமானம்.தேசம்!...

உயிர் வாழும் வலையம்:

மனித அவலம் தொடர்கிறது.

பல்லாயிரம் மக்கள் இடம்பெயரப் ப+மியின் பெரும் பகுதி அகதிகளின் பெருக்கத்தைக் காண்கிறது.

இன்றைய மதிப்பின் படி புவிப்பரப்பெங்கணும் 370 கோடிகள் மக்கள் அகதியாகியுள்ளார்கள்.

இந்தப் பெரும் மனித அவலமானது மனிதவுயிர்வாழும் சூழலுக்கானவொரு போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.இந்தப்போரில் நம்மிடம் நவீனச் சுடு கருவிகளோ அல்லது தாங்கிகளோ,ஆட்லெறிகளோ கிடையாது.அல்லது நம்மிடம் மதமோ இல்லை எந்த மொழிவாரி,இனவாரிக் கோசங்களோ கிடையாது.மாறாக நம்மை உயிர் வாழ-உழைத்துண்ண விடு,என்ற தார்மீகக் கோசமே ஆயுதமாக இருக்கிறது.இதைக் கண்டு அஞ்சும் நிலை ஆளும் வர்கங்களின் விழிகள் முன் வருகிறது.வாழும் சூழல் இல்லாதாகும்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழலை நோக்கி இடம் பெயர்வது சாத்தியமே!

இது உலகத்தில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.வலுவுள்ளது மட்டும் வாழுமென்பது உயிரியலுக்கும் அன்றையச் சமூகவாழ்வுக்கும் பொருந்தட்டும்.ஆனால் இன்றைய நவீன மனிதர்களுக்கு இது பொருந்தத் தேவையில்லை.

நாம் இன்று பின் நவீனத்து சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம்.இன்றைய சமூகப் பொருளாதார உற்பத்தித் திறனாது மனிதர்களின் எந்த நிலையானவர்களுக்கும்(ஊனம்,பலமற்றவர்கள்...)சமூகக் காப்புறுதியையும் தீவனத்தையும் உயிர் வாழும் தகுதியையும் கொடுக்க முடியும்.இதுதாம் இன்றைய பின்தேசிய அடையாளமாக(postnationalen Identitaet) விரியும் உற்பத்தித் திறன்மிக்க இனங்களுக்குள் முகிழ்க்கும் பொதுவறித் தளமாக விரிகிறது.

இதை எமது முன்னோர்களின் அறிவே நிலை நாட்ட உதவுகிறது.சதா தன்னைச்(சுய சோதனைக்குள் தம்மை ஈடுபடுத்திய விஞ்ஞானிகள்) சிதைத்து கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலறிவு குறிப்பிட்டவொரு இனத்துக்கோ அல்லது தேசத்துக்கோ-தொழிற்கழகத்துக்கோ சொந்தமில்லை.இது முழுமொத்த மனித இனத்துக்கும் பொதுவான சொத்து.இங்கே மானுடம் உயிர்வாழப் போராடும் இழி நிலை.

வாழும் இருப்பிடம்,கிராமம்,நகரம்;-பயிர் விளையும் மண் நாசமாகிறது!-நஞ்சாகிறது.நீர் நிலைய+ற்றுக்குள் வற்றி வரண்டுபோகிறது.நதி நீர் நஞ்சாக்கப்படுகிறது.இங்கே மீளவும் கனிவளங்களை வேட்டையாடிக் கொள்ள மேற்குலகத் தொழிற்கழகங்கள் யுத்தம் நடாத்தக் குண்டுகள் வெடிக்கின்றன.வாழும் வலையம்(Lebensraum)சிதைக்கப்படுகிறது.இதற்கு நல்லதொரு உதாரணம் நர்மதா அணைக்கட்டு விவகாரம்.இதுகுறித்துப் பேசும்போது, நாம் நமக்கு அருகினில் பிரச்சனையிருப்பதை இன்னும் அதிகமாகவே உணர்கிறோம்.

யாருக்காக
யார் வாழும் இடங்களைப்
பறிகொடுப்பது?


"Laenger als ein halbes jahrhundert haben wir geglaubt,dass die grossen Staudaemme die Bewohner Indien von Hunger und Armut befreien wuerden.Das Gegenteil ist eingetreten."-(Arundhati Roy,indische Schriftstellerin)


"இந்தியக் குடிமக்களின் பசியையும்,பட்டுணியையும் நர்மதா அணைக்கட்டு போக்கிவடுமென அரை நூற்றாண்டுக்கு மேலாக நம்பிக்கொண்டோம்.ஆனால் நடந்ததென்னவோ எதிர் நிலைதாம்."என்கிறார் அருந்ததி ரோய்.


மனிவுரிமைச் சங்கத்தின் 2000 ஜுனிக்கான(ஜுனி என்பதை ஜுன் என்று வாசிக்கவும்,ஜேர்மனிய மொழிப் பயன்பாட்டின் வெளிப்பாடது.) மனிதவுரிமைக்கான கோரிக்கையின் அறிவுப்பு நர்மதா மனித அவலத்தை மேத்கா பட்டர் மூலம் அறிவிக்கிறது.அது பொருளாதாரத்தின்மீதே கோரிக்கைகளை முன்வைத்துச் செல்கிறது.(ISBN 3-89290-044-2 என்ற சர்வதேச நூற்சுட்டியின் மூலம் இவ் நூலைப் பெறமுடியும்.)

1.5 மில்லியன் மக்கள் குஜராத்,மகாரிட்ஷ்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அகதிகளாகப்பட்டு வருகிறார்கள்.இவர்கள் தமது வாழ்விடங்களைப் பறி கொடுப்பதும்,அகதிகளாக உருப்பெறுவதும் பாரிய தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைக்காவேதாம்.1993 ஆம் ஆண்டளவில் நர்மதா அணைக்கட்டுக்கு உலக வங்கி உதவி வழங்கி மக்களை அகதிகளாகத் திட்டம் தீட்டியது!அது தனது வாலைச் சுருட்டிப்பதுங்கும் நிலைக்கு மக்கள் நலக் குழுக்களின் தீவிரமான போராட்டம் காரணமானது.எனினும் 2000 க்குப் பிறகு அதே உலக வங்கி 450 மில்லியனகள்; டொலர் நிதி உதவியை வழங்கி மீளவும் தனது வலுக்கரத்தை இந்த அப்பாவி மக்கள்மீது வைத்து,அவர்களை அகதிகளாகி அநாதையாக்கிறது.இது நர்மதாவின் கதை.

ஒரிசா மாநிலத்தில் 1993 இலிருந்து ஆதிவாசி மக்கள் துரத்தியடிக்கப்பட்டும்,கொல்லப்பட்டும் அவர்களது நிலங்கள்-வாழும் வலையங்கள் பல் தேசியக் கம்பனிகளின் கால்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தியாவிலேயே ஒரிசா மாநிலமானது மிகவும் தனிச் சிறப்பான தாதுப் பொருட்கள் நிரம்பிய-கனிவளமிக்க மாநிலமாகும்.இந்த மாநிலத்தை அந்நியத் தொழிற்கழகங்கள் வேட்டையாட ஆதிவாசி மக்கள் தமது வாழ்வைப் பறிகொடுப்பதில்போய் முடிகிறது.பாலங்கள்,கட்டுமானங்கள்,தொழில் முன்னெடுப்பு என்று, பல்வகைக் காரணங்களால் இவ் மாநிலம் மக்கள் வாழும் உரிமையைப் பறிக்கிறது.உட்கால் அலுமெனியம் (Utkal Alumina) எனும் பாரிய தரகு முதலாளிய நிறுவனம் ஒரிசாவை அந்நியக் கம்பனிகளான நோர்வே நாட்டு நோஸ்க் கைட்ரோ(Norsk Hydro)மற்றும் கனேடிய அல்கான் அலுமெனியம்(Alcan Aluminium) தொழிற்கழகங்களோடு சேர்ந்து ஒரிசாவின் தாதுப் பொருட்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அலுமெனியம்(INDAL Ltd.)உதவி வழங்கிக் கொழுத்து வருகிறது! லார்சன் அன்ட் ரூப்புரோ(Larsen &Toubro)என்ற மாபெரும் தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பெரும் ஜந்திரத் தொழிற்சாலை.இது அந்நியக் கம்பனிகளின் கூட்டுக்கொள்ளை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள்தாம் போராடும் மக்களை அரச மற்றும் தனியார் படைகளை வைத்துக் கொல்கிறது.அப்பாவி மக்களின் வாழ்விடங்களைப் பலாத்தகாரமாகப் பறிக்கிறது.இந்திய மத்திய அரசோ அந்நியக் கம்பனிகளால் நிர்வாகிக்கப்பட்டு மக்கள் நல அரசியலைப் பறி கொடுத்து அந்நியக் கம்பனிகளின் தயவில் வாழ்கிறது.இதை ராபி மிஸ்ரா போன்றோரின் கைதுக்கும்,விடுதலைக்குப் பின்பும் அவர்களே ஒப்புக்கொண்டு கருத்துக் கூறினார்கள்.தாம் கைது செய்யப்பட்டது தனியார் படையின் மூலமாகவும்,அது உட்கால் அலுமெனியத்தின் அடியாட்படையென்பதாகவும்.(Persecuted for challenging injustice,Human rights defenders in India.)

இதைப்போன்றோதாம் இன்று ஆசிய, ஆபிரிக்க,மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாவெங்கும் மக்கள் வாழும் வலையங்களைப் பறி கொடுத்து, அகதிகளாக்கப்படுகிறார்கள்.


உலக வர்த்தகக் கழகத்தின்(;(WTO)சேட்டில் மாநாட்டில் மனிவுரிமைச் சங்கம் வாய்கிழியக்கத்திய"Multinationale Investoren haben die Verpflichtung zum Schutz der Menschenrechte,unabhaengig davon, in welchem Lande sie taetig werden" சுலோகத்தை இவர்கள் மதிப்பதுமில்லை,காப்பதும் இல்லை!

"எந்த நாட்டில் பல்தேசிய நிதியீட்டாளர்கள் இயங்கினாலும் மனிவுரிமையைச் சுதந்திரமாகக் காத்து இயங்குவது அவர்களது கடமை"என்பதெல்லாம் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்களாகும்.

கடந்த 45 ஆண்டுகளாக நடைபெறும் சூடானிய யுத்தத்தால் 2.5 மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டு,5 மில்லியன்கள் மக்கள் உள் நாட்டில் அகதியாகியும் அந்நியத் தொழில் நிறுவனங்களின் எண்ணை வேட்டை தொடர்கிறது.மக்கள் வாழ்விடங்களைப் பறிகொடுத்து அகதியாக அல்லல்படும் இழி நிலை! ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மேற்குலகத்துக்குள் அநாதைகளாக நுழைந்துள்ளார்கள்.செல்வம்(கனிவளம்) கொழிக்கும் நிலத்தின் மக்கள் அதை அநுபவிக்க முடியாது,அநாதைகளாகி-அகதியாகி...

1956 ஆம் ஆண்டளவில் சூடானில் யுத்தம் வெடித்தது.இது உள்நாட்டு யுத்தமாகவே வர்ணிக்கப்பட்டது.ஆனால் அதன் கதை கனிவளங்களை-எண்ணையை மையப்படுத்தியே போர் ஆரம்பமாகியது.

அங்கு கேட்கப்பட்ட கேள்வியானது:

"யார் எண்ணையை-அந்த ஊற்றை சொந்தமாக வைத்திருப்பது,எவர் அதனால் இலாபம் அடைவது"என்பதே!

அந்நியக் கம்பனிகளின் கனிவளச் சுரண்டலால்,அவர்களுக்காக நடாத்தப்படும் யுத்தத்தால் சுடுகாடாக மாறிப்போனது சூடான்!


இங்கே சூடான்மட்டுமல்ல சமீப ஆவ்கானிஸ்த்தான் முதல் ஈராக்வரை இது தொடர்கதை!

எனவே "அகதி" என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!


அடுத்த பகுதியிலும் சொல்வேன்.



ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006

10 comments:

சின்னக்குட்டி said...

//பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.//


இந்த உண்மையை தெரிந்தும் கூட பலர் ஜீரணிகக கஸ்டபடுகிறார்கள்

ரவி said...

ஏனுங்க...நீங்கதானே யாரோ உங்களை கொல்லப்போங்கன்னு பதிவிட்டு இருந்தீங்க...

இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே..

அப்பாவியாய் அன்புடன்,.
செந்தழல் ரவி

Anonymous said...

தல எப்படிப் புலிகளின் கொலை வளையத்துள்ளிருந்து தப்பினீர்கள்? நீங்க ராஜீவ் ரஜினி திரணகம, நீலன் திருச்செல்வம், சபாலிங்கம், கஜன், நாதன், கேதீஸ்வரன், பிரேமதாஸ, ஆத்துலத் முதலி எல்லோரையும் விட பெரிய ஆள்!!!! என்ன தான் முயற்சி செய்தும் புலிகளால் உங்கள் நிழலைக் கூட நெருங்க முடியவில்லையே! வாழ்த்துக்கள்.

Anonymous said...

ரவி இந்ந நக்கல்தானே வேணாங்கிறது.

Sivabalan said...

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஏய் யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா ..

Anonymous said...

At Tue Aug 29, 10:37:05 AM 2006, Anonymous said...
ஏய் யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா .

பதிவரே வந்து இப்படி கேட்பது ந்ல்லா இல்ல.

குழலி / Kuzhali said...

//அகதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.//
இது எல்லாவிதமான அடக்குமுறைக்குட்பட்டவர்களுக்கும் பொறுந்தும், எப்பொழுது தம்மை உணராமல் தம் பிரச்சினைகளை மறைக்கின்றார்களோ அப்போது நிச்சயம் அடிமைத்தளையிலிருந்து விடுபடமுடியாது, இது தலித்,பெண் விடுதலையிலிருந்து எல்லோருக்கும் பொறுந்தும்....

Anonymous said...

//At Tue Aug 29, 10:37:05 AM 2006, Anonymous said...
ஏய் யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா .

பதிவரே வந்து இப்படி கேட்பது நல்லா இல்ல.//

அதை நீங்க கேட்பது இன்னும் கேவலம இருக்கு ....

Anonymous said...

johan paris இடமிருந்து இப்படி ஒரு
நக்கல் பின்னுட்டமா தனது
தனித்தன்மையிலிருந்து விலக ஆரம்பித்து
விட்டாரா johan

அவரவது வேதனை அவரவர்க்கு
அதை கிள்ளிப் பார்த்து ஆனந்த
படுவது கேவலம்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...