Saturday, December 17, 2005

அவசியம் அறிந்து கொள்வோம்.

இதையும்
அவசியம்
அறிந்து கொள்வோம்.


உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.
ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா?


போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு
இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் பூராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது.



நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழங்குடி மக்களும்,
மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் நலக் காப்பாளர்கள் மக்களோடு இணைந்து போராடும் நிலையில், இத்தகைய உரிமைகளை நீதி மன்றங்கள் பறித்துவிடுவதைப் பார்க்கும்போது
பாசிசத்தின் உச்சக்கட்டம் நம் முன் விரிவது தெரிகிறது. கனடாவில் நடந்த சூழல் பாதுகாப்பு மாநாட்டை அமேரிக்கா நிராகரிக்கிறது.உலகச் சூழல் பாதுகாப்பை நிராகரிக்கும் அமேரிக்கா வளர்முக நாடுகளைத் தனது பங்குக்குத் திட்டித் தீர்க்கிறது.


உலக வங்கியோ நர்மதாவை மட்டுமல்ல தென் சூடான் எண்ணைக் குழாய்கள் வட சூடான் போர்டோ துறைமுக நகரத்தை 1600 கிலோ மீட்டர் தாண்டித் தொடுவதற்காக(1999 இல்) பல பத்து இலட்சம் மக்களை வருத்தித் திட்டம் போட்டுக் கொன்றொழிக்கிறது.அவ்கானிஸ்தானிலிருந்து துருக்கியூடாக ஜேர்மனியை வந்தடைய இருக்கும் எண்ணை-எரிவாயுக் குழாயோ சுமார் 6000 கிலோ மீட்டரைக் கடக்கப் போகிறது.இந்தப் பிரதேச மக்கள் தலைகள் பையப்பைய உருண்டு விடப்போகிறது.இதற்கெல்லாம் சூத்திரதாரி உலக வங்கி.


சூடானில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக 'எண்ணை ஆதிக்கத்துக்கான' போர் சூடானில் நடைபெறுகிறது.சூடானின் எண்ணை வளத்தைக் கொள்ளையிட முனையும் வல்லரசுகளும் அவைகளின் இராட்சத
எண்ணைக் கம்பனிகளும் இதுவரை இரண்டு மில்லியன்கள் சூடானிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.32.6 மில்லியன்கள் சனத் தொகையில் 2 மில்லியன்கள் மக்களை அந்த நாடு பறி கொடுத்துள்ளது!மொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது
உலகம் பூராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன?
மக்கள் உரிமையின்-மனிதஉரிமையின் கதை கந்திரயாகிப் போனதை
இங்கே நடை பெறும் உரையாடல் நம்மை அதிர வைக்கும்.




'வணக்கத்துக்குரியவர்களே!


இன்று நடைபெறும் இந்தவுரையாடல் நமது நோக்கத்தைப் பற்றியும்,அதையடையும் வழிமுறைகளையும் பேசுவதாகும்.-

மிகத் தெளிவாக ஆதர்சத்தோடு பேசிக் கொண்டான், முதலாளிகளுக்கான ஆலோசனை மையத்தின் பிரதிநிதி.(அவனது நீண்டவுரையைக் கேட்பதற்காக கூடியவர்கள் அனைவரும் 'வர்த்தகக் கூட்டு'மையத்தின் முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான 'சந்திப்பை' கோங் கோங்குக்முன் பல நாடுகளிலும் செய்தவர்கள்.இத்தாலியில் இந்தக் கூட்டின் சந்திப்பை எதிர்த்த பொதுமக்கள் சிலர் பொலிசின் துப்பாக்கிக்குப் பலியானார்கள் 2004 இல்,இது குறிப்பிடத்தக்கது.)


அந்தப் பிரதிநிதி இப்படி மேலும் தொடர்கிறான்:


வேலை!உற்பத்தத்திறன் மிகுதியாகக் கூட்டப்படவேண்டும்.ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலைத்திறனைக் மிகுதியாக் கூட்டியாகவேண்டும்.அவர்களை நீண்ட உழைப்புக்குத்
தயாராக்கி உழைப்பைக் கறாராகப் பெறவேண்டும்.அத்தோடு இப்படி உடலுழைப்பைப் பெறும் நாங்கள் இதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர் செய்யும் போராட்டங்களை ஒடுக்கியாகவேண்டும்.


இதன் அடிப்படைக் கருத்து இதுதாம்:


அதாவது 'நுகத்தில் மாட்டிய மனிதன், தான் நுகத்தில் மாட்டியிருப்பதை உணரக் கூடாது'.இதன் அர்த்தம் அவனால் இழுக்கப்படும் வண்டி அவனாலேயே ஓடுவதை அவன் ஒருபோதும் உணரப்படாது!
எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே
என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,

சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும்!மக்களில் பலரை நாங்கள் வேலை செய்யும் மிருகங்களாகவே உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.இப்போது
அப்படித்தாம் அவர்களை நாம்,நமது துறைசார் மொழியில் புரிகிறோம்.


இத்தகைய மிருகங்களுக்கு நாம் மிகக் குறைந்த கூலியை அவர்களது நாளாந்த உணவுக்கும்,உறையுளுக்கும் கொடுப்போம்.இவர்கள் எமது தொழிற்சாலைகளில்,பண்ணைகளில் ,விற்பனை அங்காடிகளில்,உயர்தர நட்சத்திரக் கோட்டல்களில்,நகரப் பராமரிப்பு-சுத்திகரிப்பில் தமது உடலுழைப்பைக் கொடுத்து இந்தவூதியத்தைப் பெறுவதாக 'எப்பவும்'இருக்கவேண்டும்.இந்தத் தொழிலாள மிருகங்கள்

ஒரு போதும் தமது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கும்படியாகக் கூலி இருக்கப்படாது.இது மிக மிக அவசியம்.உண்பதற்கோ,உடுப்பதற்கோ பற்றாத கூலியைக் கொடுப்பதுதாம் இந்த முறைமையைக் காக்கும்.சேமிப்பானது சுதந்திரத்தைக் கோரவைக்கும்,அவசியம் இதை நீங்கள் இன்று புரிய வேண்டும்.இன்றைய ஐரோப்பாவுக்கு இதுதாம் சீரழிவைத் தந்தது.தொழிற் சங்கம்,வேலை நிறுத்தம்...என்னயிது?முதலாளிகளாகிய - பங்குப்
பணமிட்டவர்களைக் காப்பது ஒவ்வொரு சுப்பர் மனேச்சர்களினும் கடமை.

கூடியிருக்கும் அத்தனை மனேச்சர்களும் இதைக் காதில் வேண்டவும்.


சேமிப்பு இல்லையேல்... தொழிலாள மிருகம் சிந்திக்காது!

தொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.

நுகத்தை விட்டகலா இந்த மிருகம்

நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:'மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்'என்று!இதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.

இது மகிழ்ச்சிக்குரிய விடையமே!எனினும் தேவாலயங்களுக்குச் செல்லும் வேலைக்கார மிருகங்கள் குறைந்து வருகிறது, இது ஆபத்தானது.திட்டமிட்டு பலவர்ணக் கலவையில் தேவலாயங்கள் தம் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம்.


இவர்களது வருவாய்,இவர்கள்தம் சீவியத்துக்குப் பற்றாக் குறையாக இருக்கும்போது இவர்களைக் கடன் பெறத் தூண்ட வேண்டும்.வங்கிகளில் தமது கடன்களைப் பெறும் வசதியை நாம் இலகுப் படுத்திவிடுவது உசிதம்.சிட்டி பாங் இதில் நமக்கு நல்ல உதாரணமிக்க பங்காளியாகும்.இப்படிப் பணம் கடனாகப் பெற்றுவிடும் இந்தத் தொழிலாள மிருகங்கள்,தமது கடனுக்காகவும் கடுமையாக உழைப்பதை நோக்கமாகக்கொண்டு நமது நுகத்தில் தொடர்ந்து பூட்டப்பட்டிருக்கும்.


இத்தோடு நாம் தொடர்ந்து உலகம் பூராகவும் வேலையற்றவர்களை-வேலையில்லாத் திண்டாட்டத்தைச் செயற்கையாக உருவாக்கி அதைக் குறைத்துவிடாத முறைமைகளில் வருடாவருடம் வேலையற்றவர்களின் தொகையைக் கண்காணித்து வரவேண்டும்.இப்படிக் கண்காணித்து வரும்போது ஒரு வேலையில்லாப்பட்டாளம் தொடர்ந்திருக்கும்.இதன் இருப்பில் தொழில் புரியும் மிருகங்களுக்கு நாளாந்தம் அச்சம் பெருகும், தாமும் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவோமோவென.இத்தகைய உளவியல் சிக்கல் அவசியம்.என்னென்றால் இதை உலகம் பூராகவுமுள்ள தொழிலாள மிருகங்களுக்கு அவரவர் வித்தியாசங்களுக்கேற்றபடி இதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள்
விவேகமாக நாம் விளையாட வேண்டும். இவர்கள் இனிமேல் தொழிற் சங்கங்கள் உருவாக்குவதை நாம் உடைத்தெறிவதற்குத் தயங்காது உழைக்வேண்டும்.அதற்காக இந்த'வேலையற்ற-வேலையிலுள்ள'பிரிவும்,பிளவும் மிக அவசியம்.


வேலையற்றவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் நிரந்தரமான பொறாமையையும்,எரிச்சலையும்ஆத்திரத்தையும் ஏற்படுத்தி
வளர்தெடுப்பதை யாரும் நீங்கள் மறக்கப்படாது.இவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது அதற்கான காரணத்தில்

நாம் பின்னிருந்து வெற்றி பெறுவதை அவர்கள் அறியமாட்டார்கள்.


இத்தகைய நிலைமையில் நாம் இன்னொரு சிறிய குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலைகளை இப்படி ஒப்படைக்கணும்: அதாவது இந்த மாபெரும் கூலிப்பட்டாளத்தை எந்த ஓட்டைகளுமற்ற முறைமையில் தொடர்ந்து வேவு பார்க்கணும்!, எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும்

கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது!)இதைவிட மிகப் பெரும் வேலைக்கார மிருகப்பட்டாளத்தை-அதன் மாபெரும் பலத்தைத் தொடர்ந்து பிளவுப்படுத்திப் பிரிக்கவேண்டும்.இங்ஙனம் நாம் செய்விக்கும்போது வேலைக்கார மிருகங்களின் ஒற்றுமைப்படுதலும்,அதனூடாகப் புரட்சிசெய்யத் தோழமைப்படுதலும் வெகுவாகத் தடுக்கப்படுகிறது(இப்போது சபையில் பலத்த கரகோசம் வானை அதிர வைக்கிறது).


அமைதி,அமைதி! மினறால் வோட்டரைப் பருகியவண்ணம் கைகளைத் தூக்கிச் சபையை வேண்டிக் கொண்டான்.சபை நிசப்தமாகியது!


அவன் மேலும் தொடர்ந்தான்:


அன்பான செல்வந்தர்களே!,இந்தவுலகத்தின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்றவர்களே!!,உலகத்தின் பெரும் பகுதி மனிதர்களுக்கு உணவளிக்கும் கொடை நிறைந்தவர்களே!!! நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது
அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள்!அங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காது!வேலை இழப்பதுக்கரிய மாபெரும்
விஷயமாக எண்ணிக்கொண்டு அதை விட்டகலாது தொடர்ந்து பணிவோடு உற்பத்தி செய்யும்.நாங்கள் தொடர்ந்து வித்தியாசங்களையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருவோம்!அதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே'உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்'என்று!அதை நாம் உடைத்துவிட்டோம்.(சபையில் மீண்டும் பரத்த கரகோசை,விசில் அடி,எல்லோரும் எழுந்து நின்று கரகோசை செய்துவிட்டு அமர்ந்தனர்.) இத்தகையவர்களில் ஒரு நிறுவன அதிகாரி ஆர்வ மேலீட்டால் இப்படியுரைத்தான்:


'ஓ, இது சிறப்பபாக இதுவரை நடக்கிறது!,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது?'கேள்வியோடு அசடுவழிய அமர்ந்துகொண்டான்.


நாங்கள் பலமானவொரு அரச அமைப்பை முன்னமே வைத்திருக்கிறோமல்லவா?இதை உலகச் சிறுசிறு அரசுகளோடு கூட்டாகி,அவர்களின் சகல அரச வடிவங்களையும் நாமே கட்டுப்படுத்த, அத்தகைய நாடுகளின் வறுமையைப் பயன்படுத்துவோம்.அதுக்காக நமது கட்டுப்பாட்டிலுள்ள உங்களது பணத்தால் இயங்கும் உலக நாணய நிதியத்தை,உலக வங்கியைப் பயன் படுத்தி விடுவோம்.அப்போது சகல அரசுகளும் நமது கட்டுபாட்டுக்குள் வருகிறது.இது தொடர்ந்து வர்த்தகக் கூட்டால், வோட்டோ,காட் ஒப்பந்தம் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து கடுமையாக வரி அறவிடப்படுதலும்,மானியக் குறைப்பையும் நாம் செய்து வருவோம்.இதனால் நமது அழுத்தமே தெரியாது மூச்சுவிடும் இந்த அமைப்பு.இதுதாம் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை.


எமது அடுத்த குழு... இதுவும் வேலைக்கார மிருகம்தாம்!என்றபோதும் இதைக் கொஞ்சம் விரிவாக உங்களுக்கு விளக்கவேண்டும்.இன்றைய அதிகாரிகள்,மனேச்சர்கள்,முதலாளிகளுக்கு பணம் சம்பாதிக்குமளவுக்கு நமது அரச அமைப்புப்பற்றி விளங்குகிறதில்லை.அதனால் அரசோடு மோதுவது நடக்கிறது.வரிகொடுப்பதில்லை...அப்பிடிச் செல்கிறது உங்கட நடவடிக்கை.எனவே இதையும் கொஞ்சம் பார்ப்போம்.


எதுவுமற்ற பட்டாளத்துக்குள்ளிருந்து நமது அடுத்த சிறு குழுவானதை இப்படிப் பெற்றோம்:அது அரச பணியாளர்களாகவும்,நீதீவான்களாகவும்,பொலிஸ்,

சிறையதிகாரிகள்,

சிறைக் காவலாளிகள்,புலானாய்வுத் துறையாளார்கள்,இராணுவத்தினர்கள் என்று!இவர்கள் எமது அரசு ஜந்திரத்தை மிக நேர்த்தியாக நிர்வகித்து எமது'பொடிக் காட்டாக'-அடியாளாக எந்த நேரமும் இருக்கிறார்கள்.

நிச்சியமாக இந்த வேலைக்கார மிருகங்களுக்கு நாம் கொஞ்சம் சிறப்பாகக் கூலியைக் கொடுக்கவேண்டும்.சாதரண வேலைக்கார மிருகத்தைவிட இந்த மிருகத்துக்கு நாம் பாதுகாப்பான வேலை உறிதிப்பாட்டை வழங்கவேண்டும்.எப்போதும் துரத்தப்படாது அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படுவதை செயலில் காட்டவேண்டும்.இவர்களுக்குச்

சலுகைகள் கொடுத்து,இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிடவேண்டும்.இதனால் இந்த வாழ்க்கைத் தராதரம் வேலை மிருகங்களுக்குள் இந்த இரண்டு பிரிவையும் மிக மிக அந்நியப்படுத்தி அவர்களுக்குள் பதட்டத்தை,பிளவை வலுப்படுத்தித் தம்மைத்தாமே ஒடுக்குவது சுலபமாகும்.இந்தப் பாதுகாப்புப்பிரிவை

உளவாளிகளைக்கொண்டு வலுவாகக் கண்காணித்து

ஆபத்து வராதவரையும் நம்பவேண்டும்.இவ்வளவு இருந்தால் போதுமா நமக்குப் பாதுகாப்பு?


இல்லை!,அப்போது? இதையுங் கேளுங்கள்.நம் முன்னோரின் அறிவை இன்னும் மேம்படுத்திவைப்போம்.நாங்கள் இன்னுமின்னும் ஒழுங்குகளையும் அதைச் செயற்படுத்தும் பல்லாயிரக்கணக்கான சட்டங்களையும் ஏற்படுத்துவோம்.இதை எவரும் படித்துப் புரியாதபடியும்,

அதையொட்டியொழுக முடியாதபடியும் இவைற்றை எழுதிவைப்போம்.இதன்படி எவரையும் எந்த நேரத்திலும் கிரிமனல்,பயங்கரவாதியென கைது செய்யமுடியும்.அல்லது கொல்ல முடியும்.இது வேலைக்கார மிருகங்களிடம் பயத்தையும்,பணிவையும் ஏற்படுத்தி நவீன அடிமைகளாக நாம்கூறும் ஜனநாயகத்தில் வாழ்ந்து- இல்லையில்லை எமது நுகத்தில் மாட்டுப்பட்டு எமக்காகச் சாகும் இந்த வேலைக்கார மிருகங்கள்!இத்தோடு பிரத்தியேகமாக

மிக நேர்த்தியான நமது விஞ்ஞானிகளின் துணையோடு நுட்பம் நிறைந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் வேவு பார்க்கும் திட்டத்தை ஒழுங்காகச் செய்வோம்.இங்கே செய்மதிகளையும் அதனால் இயக்கப்படும் கமராக்களையும்,கட்டளைகளையுமே நான் முன் மொழிகிறேன்.


'இந்த வேலைக்கார மிருகங்களுக்கு முன்புபோல் கொத்தடிமை மாதிரி வாழ்க்கையில்லையே?அதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்?...' கேட்டுக் கொண்டான் ஒரு பயாந்தாங்கொள்ளி முதலாளி.


உரையாற்றியவன் மெள்ளப் புன்னகைத்தான்.தலையை அங்குமிங்குமாக ஆட்டிவிட்டுத் தோள்பட்டையை மேலே அசைத்து,இதழைக் கடித்துவிட்டுத் தனது செக்கிரிட்டிப் பெண்ணை வரவழைத்தான்.அவளைப் பக்கத்தில் வரவழைத்துத் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்: இதுதாம் எமது மையப் புள்ளி.(அந்தப் பெண்ணைச் சுட்டிக்கொண்டான்.அவள் தனது மெல்லிய இடையை அவனோடு உரசிக் கொண்டாள்.அந்த நளினமான சூழல் எல்லோரதும் வயிற்றுக்குள் ரொக்கட்டைச் செலுத்தியது காதலுணர்வு).அவன் தொடர்ந்தான்.நாங்கள் ஆண்,பெண் உறவை ஒரு பம்பரத்தை ஆட்டுவிக்கும் விசை நூலின் முறமைக்குள் வைத்திருக்கிறோம்.இதனால் ஒருவரையொருவர் வருத்துவதை நுட்பமாக்கி வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? இது என்னவென்றால் ஆண்கள் பெண்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வருவதாகக் கருத்தியல் தளத்தில் ஒருவகையான

பூர்வீக மனதை உருவாக்கி வைத்துள்ளோம்.இதை எமது குடும்பமெனும் அமைப்பால் செயற்படுத்தி வருகிறோம்.ஆண்களால் மட்டுமே அவர்களது கடுமையான உடற்பலத்தால் முன்னேற முடியுமென நாம் கருத்துக்களை விதைப்போம்.அப்போது நிரந்தரமான ஆண்,பெண் பொறாமை நிலைக்கும்.

இது புதிய நுகத்தை இந்த கூட்டத்துக்கு கட்டுவதாகும்.இந்தப் பொறி பூர்வீகமான பெண்ணின் பாதுகாப்புப் பிராணியான ஆணை அவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கு முறையாளர்களாகவும்,போட்டியாளர்களாகவும் உருவாக்கிவிடும்.அப்போது பெண்கள் தம்மை விடுதலையடைய வைப்பதற்காக ஆண்களையே எதிரிகளாக்கி நம்மைக் காத்துவிடுவார்கள்.சண்டை வேறுதிசையில் செல்லும்போது நம்மீதான நேரடி எதிர்ப்பு இல்லாது கவனம் வேறு திசையில் செல்லும்.அப்போதும் நாம் செய்யவேண்டியது இதை வளர்தெடுப்பதற்காக பெண் சிந்தனையாளர்களைப்'பெண்ணியலாளர்களாக'உருவாக்கிப் புதுப்புது ஒடுக்கு முறைகளையும்,அதனால் பெண்விடுதலையடைவதே முதற் பிரச்சினையாகவும் அவர்களுடாகப் பறைசாற்றுவோம்.கூடவே பாலியல் திருப்த்தி பற்றியும் ஓப்பிணாகக் கதைக்க வைப்போம்.



பெண்களே பெண்களைப் பற்றிப் பேச வேண்டுமெனச் சொல்லும் கருத்தியலை அவர்களது குரலினூடாகவே பேச வைப்போம்.

அப்போது ஆண் வேலைக்கார மிருகம் தாளாத சிக்கலில் பல பக்கத்துக்கு முகங் கொடுக்கணும்.அதனால் நம்மை எதிர்க்கத் திரணியேற்படாது.தொடர்ந்து வேலையில் இருப்பதே மேலெனச் சிந்தித்து வீட்டை மறந்து நுகத்தில் கட்டுண்டு கிடக்கும்.பெண்ணும்

தனது சுமைகளை ஆண்தாம் வழங்குவதாக நம்மை மறந்து

தமது கணவனின் பக்கம் சதா போர்தொடுப்பாள்.இது எப்படியிருக்கு?இதோடு நமது திட்டம் முடிவதில்லை.புதிய விவாகரத்துச் சட்டங்களை அவளுக்குச் சொல்லி ஆணிடமிருந்து நிரந்திரமாகப் பெண்ணை பிரித்திடவேண்டும்.ஒரு பெண்ணை மனம் நோகாது பாதுகாத்து வர பணம் அதிகம் வேண்டுமென ஆண் உணரும்படி வைப்போம்.அப்போது பெண்ணுக்காக மீளவும்

கடுமையாக உழைப்பான்.அதோடு சமூகத்தில் பெண் பற்றாக் குறையாக இருத்திவைப்போம்.பெண்மீது அளவுகடந்த தாகம் ஆணுக்கு ஏற்படும்போது அவன் தலையில் பெண்ணே சஞ்சரிப்பாள்.இதனால் அவன் சிந்தனையாற்றல்,எதிர்ப்பாற்றல் குன்றிவிடும்.பெண்ணை அடைவதற்காகவே முயற்சிகள் நடக்கும்.அதனால் நாமே நலமடைவோம்.இன்றைய பின் நவீனத்துவ மூலவர்களான தெரிதாவையும்,பூப்காவையும் மட்டுமல்ல அருந்தி ரோயையும்,அற்றாக்கையும்-உம்பேர்ட்டே எக்காவையும் உளுத்துப் போன இனப் பிரச்சினைகளையும், அதைவலுவாக்கிப் போராடும் மூன்றாமுலக அரசியலையும்,அங்குள்ள சேவை நிறுவனமான நமது 'வேர்ல்ட் விசன்'நிறுவனத்தைப் போல ஆயிரம் தன்னார்வ அமைப்புகளையும் நாமே வழி நடத்துகிறோம்.


'ஓ சபாஷ்!நல்ல திட்டம்.நாங்கள் புரிந்து கொண்டோம்!'கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்க,ஒரு கஞ்சன் தன்னை வெளிப்படுத்தினான்:


'ஓம் நல்லது!இத்தகைய அரச வடிவம் நல்லதுதாம்.இதுவரை அதுக்குப் போடும் தீனீ அதிகமாகுதே?இதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்?'-அவன் கேள்வியை நிறுத்து முன்பே உரையாற்றிவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.அவன் இப்படிக் கூறினான்:


'நீங்கள் எங்கே அரசுக்கப் பணம் கொடுக்கிறீர்கள்?சும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்கு!'


'அப்போ யாருதாம் இதுக்குப் பணம் போடுகிறார்கள்?'அதிசயமாக இன்னொரு முதலாளி கேட்டான்.அவனது பார்வையில் வெகுளித்தனம் தெரிந்தது.


சகலாகலா வல்லோனான அந்த உரையாளன் மெல்லக் குரலெடுத்து அமைதியாகச் சொன்னான்:'நாங்கள் செய்திருக்கும் சட்டதிட்டங்கள் வேலைக்கார மிருகங்களே தம்மை வேவு பார்க்கும்,ஓடுக்கும் தமது ஒரு பிரிவுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பணம் செலுத்திவிடுவதற்கு வழி செய்கிறது.அந்த மிருகங்கள்தாம் இதுவரையும் பணம் கொடுக்கிறார்கள்-இனியும் அந்தமிருகங்களே வழங்குங்கள்.அந்த வகையில்தாம் நமது வரிமதிப்புத்திட்டங்களும்,நுகர்வுச் சந்தையும் கட்டப்பட்டுள்ளது.இதைத்தாம் சந்தைப் பொருளாதாரமென்று நுட்ப வார்த்தையில்-கலைச் சொல்லில் என்னைப்போன்ற வல்லுனர்கள் சொல்கிறோம்! இப்படிப் பல சுமைகளை இந்த மிருகங்களுக்கு நாம் ஏற்றிவிடுவதால் இந்த மிருகங்கள் ஒருபோதும் சிந்திக்காது.கூடவே நமது பொழுது போக்குத்துறை அவர்களுக்குச் சொல்வதும்,வழிநடத்துவதும் நமது பாதுகாப்புக்கேற்ற முறைமைகளே.இதையெல்லவற்றையும்விட நமது மதங்களும் அவைகளின் அற்புதமான மூளைச் சலவையும்,அதுபோல நாம் உருவாக்கிய கல்வியும் நாம்மால் கட்டுப்படுத்தப்படுகிறது.எனவே எமது பாதுகாப்பு அரண் பாரியது இதை மீறி இந்த மிருகங்கள் நம்மை நெருங்க முடியாது.


'அற்புதம்' எல்லோரும் வழிமொழிந்தார்கள்.


நன்றி அன்புக்குரிய நிர்வாகிகளே,செல்வந்தர்களே!நான் கூறியபடி தொடர்ந்து இந்த முறைமைகளை வலுப்படுத்தி உலகம் பூராகவும் நமது வலுவைப் பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்க ஒப்புதல் தந்ததாகவே உங்கள் குரலைப் பதிவு செய்கிறேன்.இதுவே எமது அடுத்த வர்த்தகக்கூட்டின் இலக்கு.முடித்துக் கொண்டான் உரையை அந்த நிபுணன்.


கோங் கோங்கின் நகர மைதானத்தில் அற்றாக்கின் துணையோடு "உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள்" அணி திரளும் இன்றைய பொழுதில் அவர்களை அந்த அமைப்புத் தனது எஜமானர்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தனது உளவாளிகளின் மூளையை உசார் படுத்தியது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.12.2005.



Wednesday, December 07, 2005

அன்னையின் மடி தேடி...

அன்னையின் மடி தேடி...


அந்நியர்களின் விருப்பாய்
அழிவு வந்தது ஈழமென்று!
குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின்
செல்லக் கால்கள்
எங்கள் தெருவெங்கும்
ஒடிந்து கிடக்கின்றன.

அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத்
தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன
கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி, தங்கை சிரசுகள் இழந்து
நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்!


எம் முன்னோர் தோணிவிட்ட
வளம் நிறைந்த எங்கள் கடலை வழித்து நக்கும் அந்நியன்
எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே
இன்னுமெமது சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு
மாவீரர் பாட்டோடு தீராத கொலை வேட்கையுடன்
அலைகிறான்.

இந்த நிலையில்
என் தேசக் குஞ்சுகளுக்கு
சில வற்றைச் சொல்வேன்:


மற்றவர்களின் விருப்புக்காய்
மடிந்தது போதும்,மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு
வயதாகிப் போகவில்லை!
அதோ,
வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல்
துள்ளி விளையாடத்தக்க உங்கள் மனதைக் கெடுக்கும்
கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள்.


'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்'
என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில்
வாழ்வின் உண்மையையும்
வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும்
நான் தரிசிக்கிறேன்.


ஏழைத் தாய் பெற்றெடுத்த குஞ்சரங்களே!
இறந்தபின் எதுவுமே உங்களைச் சேரா,
இருக்கும்போதே வாழ்வீர்கள்!!



தலைவர்களின் குழந்தைகள் போல
மேலைத் தேசங்களில் கல்வி பயின்றும்
சொகுசு வாகனங்களில் சாவாரி செய்யும்
படாடோபம் உங்களுக்குக் கைகூடாது போகினும்
அன்னையின் கரங்களினால்
பரிமாறப்படும் அந்தப் பழையசோறும்
அப்பனின் வியர்வையில் ஒதுங்குவதும்
"எமக்கு" அமிழ்தம் என்பதை உங்களுக்குச் சொல்வேன்.



மற்றவர்களின்
மயக்கும் மொழியினை நம்பாதீர்கள்
அவை உங்கள் தலையைக் கொய்யும்
அந்நியனின் அம்புகள்!


தேசமென்றும்
தேசியம் என்றும் சொல்பவர்கள்,
இதற்குமேலாக "உனது மொழி" உயிரென்போர்,
அதையும் தாண்டித் தேசத்துக்காய் மரித்தால்
தேகம் மறைந்தும் நீங்கள் வாழ்வதாய்க் கதை சொல்வோரை
மோதி மிதித்துவிடுவீர்கள்!


உங்கள் கரங்களிலும்
தோள்களிலிலும் இருப்பது-தொங்குவது
குரும்பட்டிகளோ
கிட்டிப் பொல்லோ அல்ல,
அவை
உங்களின் சிரசுகளைக் கொய்து
மாற்றானுக்கு மாலையாக்கும் ஜந்திரங்கள்!
தூர வீசுங்கள்!!
இனித் திரும்பியும் பார்க்காது
அன்னையின் மடி நோக்கிச் சின்னக் கால்களை அசையுங்கள்.



போதும்!
உங்கள் தலைகள் உருண்டது போதும்!!
இனியும் உங்கள் ஈரவுதடுகள்
புழுதியைப் புணர்வதும்
ஆசைகளைத் தேக்கி வைத்த மனத்துடன்
அன்னையின்
சேலைத் தலப்பைப் பிடித்தவுங்கள் கரங்கள்
அதே நினைவுடன் தரையைப் பற்றிப்பிடிக்கும்
அந்தக் கணச் சாவு
வேண்டவே வேண்டாம்!!!



விளையாட்டில்
நண்பன் அளப்பி அடித்வுடன்
'அம்மா'என்றோங்கி அழும் நீங்களா
அந்நியர் அடியாட்படையாய் மாறியது?
அதோ பாருங்கள்!
எங்கள் அன்னைகளின் அடுப்புகளில்
பூனைகள் ஒய்யாரமாகத் தூங்குகின்றன!



அப்பனை அள்ளிச் சென்றவர்கள்
காடத்துக்கும் எலும்புகளைத் தரவில்லை!
உங்களையும் கழுகுகளிடம் பறிகொடுத்தவளோ
பாடையில் போவதற்குள்
பருக்கை கொஞ்சம் உண்ணக்கூடாதா?


நேற்றுப் பெய்த மழையில்
அவள் விறைத்துக்கிடக்கிறாள்
கூரையோ
சிற்றொழுக்கிலிருந்து
பேரொழுக்காகி பேதையவள் உயிரை உறிஞ்சியபடி...
உங்களுக்குப் பசிபோக்கிய
முலைகள் வரண்டுகிடக்கிறது
அவள் மனத்தைப் போலவே!


இனியும்
தாமதித்திருப்பதில் அர்த்தம் உண்டா?
அந்நியனின் கூலியில்
ஆரும் "தமது தேசத்தை" விடுவித்ததாக வரலாறில்லை,
நீங்கள் அறிந்திருப்பீர்கள்!


வெள்ளைத் தேசங்கள்
செம்புக் காசுக்கும்
'தாளை' எதிர்பார்த்தே இருப்பவர்கள்
சும்மாவா கோடிகளைக் கொட்டுகிறார்கள்?
அவர்கள்
உங்கள் உயிருக்கல்லவா விலை தந்துள்ளார்கள்!


ஆசையாய் பெற்று
அமுதூட்டி வளர்த்தவள் அழுதுகிடக்க
யாருக்கோ தலைகொடுத்து
அழிவது
மாவீரமோ?
தேசம் விடுதலையாவதும்,
தேசியம் நிலைப்பதும்,
தமிழ் மொழி ஆளுவதும்
உங்களின் உயிரைக் குடித்துத்தாமென்றால்
நிச்சியம் அந்த விடுதலை
உங்களுக்கில்லை!


அந்நியனிடும்
கோடிகளின் பின்னே
கேடிகள் உள்ளனர்!


இன்னுமா
இவர்களை நம்புகிறீர்கள்?
ஆத்தைமாரின் கொட்டில்களே
அவர்களுக்குச் சொந்தமில்லை
இதற்குள்
தேசம் சொந்தமாகிடுமா?
போங்கள்,
போய் அன்னைகளின் கரங்கள் பிடித்து
அடுப்புகளெரிக்க வழியைப்பாருங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.12.2005

Saturday, December 03, 2005

ஈர விழிகளும்,இதய வலியும்...

ஈர விழிகளும்
இதய வலியும்...

லக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி!

போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது.


அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்போம்?ஆருமே அறியாத பேரவலச்சாவு அவர்களைத் தேடிச்சென்று தின்று ஏப்பம்விட்டது.இதைச் சொல்லாமலா போகும் நமது பொழுது?பொழுதுகள் போகலாம்,மாதங்கள் நகர்ந்து வருடங்கள் கழியலாம்-காலம் கடந்து கண்ணீரும் வற்றலாம் என்றபோதும் சுனாமி அள்ளிச்சென்ற எம் பிஞ்சுகளின் குஞ்சுக் கனவுகளை மறக்கமுடியுமா?மௌனத்தில் ஆழ்ந்து சோகம் கப்பிய வலியோடு சென்ற வருடத்தை எதிர்கொண்டோம்.அதே வருடம் கழிந்து இன்னொரு வருடம் எதிர்வரப்போகும் இந்தப் பொழுதில் மீளவும் இதயத்துள் அதிர்வுகளைத் தரும் பொழுதுகளாகப் பிஞ்சுகளின் உடல்கள்...

ஐயோவென்றழைத்த பிஞ்சுக் குரலைக் கேட்டுப் பேசுவதற்காகக் குரலெடுத்த அன்னையின் பாசக்குரலை,நேசக்கரத்தை ஒடித்தெறிந்து,கடலோரத்தே கொன்ற இந்தச் சுனாமியை யார் அறிந்தார்!உப்புக்கு வழிதேடித் தன்னையுருக்கச் சென்ற அப்பன் கடலேறிச் சென்று கரையொதுங்குவதற்குள் அவன்கூடு பிய்த்தெறியப்பட்ட அவலத்தை யார் பாடுவார்? இதயத்தைக் கீறி நொந்த பொழுதுகளை அமிழ்த்தும் சுனாமி, என் தேசத்துப் பிஞ்சுகளைக் கொன்றழித்தபின் இன்னொரு சுனாமிக்கு வழிகோலும் இருளின் தூதர்களுக்கு மத்தியில் இதோ சில குரல்கள்!


என் தேசக் குஞ்சுகளின் தோள்களில் மெல்லக் கரம் பதித்து நேசப் பொழிவுகளைச் சின்னக் குரல்களால் சொல்லும் 'அவர்கள'; நண்பர்களை நான் இங்கு அழைத்துக்கொள்கிறேன்!வாசுகி,அனுஷா,பகீரதி,ஆனந்தப்பா குரலெடுக்க என் அன்புக் கவிஞர் சிவம்,டானியல் ,லிங்கம் வரியமைக்க,உச்சி முகரும் இசையைப் பிழிந்து குழைக்கிறான் சம்பத் என்ற சிங்களத்துச் சோதரன்!அப்பப்பா ...இசை வலியைத் தூண்டி மரணித்த மழலைகளின் கனவுகளைத் தரிசிக்க வைக்கிறது.சின்னஞ்சிறுவரின் செல்லக் கனவுகளைச் சுமந்த டானியலின்,சிவத்தின் ,லிங்கத்தின் மென்னுணர்வை அதிர வைக்கும் இரக்கம் நிறைந்த இந்தப் பாடல்கள் எம் மக்களின்'அவலச் சாவை'இயற்கை அனர்தத்தால்-போரால் சிதைந்த வாழ்வைப் பாடுபொருளாக,இழந்தவுறவுகளை தினம் தேடியலையும் உயிர்த்திருக்கும் சொந்தங்களின் சோகக்கதைகளைச் சொல்லித்திரியும் ஈரவிழிகள்!

நொந்துபோன என் தேசத்து மக்களுக்காக,நைந்துபோன உறவுகளுக்காக ,சிதைந்துபோன அவர் கூடுகளுக்காக-நெஞ்சையள்ளி நினைவைச் சுமந்து நோகின்ற எங்கள் கவிக் காரர்கள் இந்தச் சின்னப் பாட்டுக் குறுந்தகட்டில் கூடிக் குரலிடுகிறார்கள்.

கனடாவின் பரந்த வெளிகளில் அங்கொன்றுமிங்கொன்றுமாகச் சிதறுண்டு வாழும் என் தேசத்து உறவுகள் நீட்டும் பாசக் கரங்கள் பேசும் இசைக் கோலம்தாம்'ஈரவிழிகள்'எனும் ஒலிப்பேழை.ரொறன்டோவின் மானுட நெரிசலில்,அவதியுறும் வேலைப் பளுவுக்குள் இந்த இசைத்தொகுப்பின் முயற்சியானது எமது மக்களின் உயிர்த்துடிப்பான மனிதாபிமானத்தைப் பறைசாற்றுகிறது.அன்பு-தேசத்தின்மீது,தன் குடும்பத்தின்மீது,தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தின்மீது,தேசத்துத் தன் மக்கள்மீது பற்றோடு, பாசத்தோடு அன்பு கொள்வதாலேயேதாம் இந்தவுலகு இதுவரை பல தியாகங்களைச் செய்கிறது!இந்த உணர்வானது கனடாவில் அகதிகளாக வாழும் நம்மில் சிலரை வாழ்விழந்த எம் உறவுகளுக்காக தவித்துக்கொள்ளும் இதயத்தோடு ஒரு துளி நினைவைத் தடம்பதித்துப் பாடல்களாகத் தந்திவிடத் தூண்டியுள்ளது.


தொலைந்த தம்முறவுகளைத் தேடியலையும் மனிதர்களின் குரலாய் ஆனந்தப்பாவின் குரலில் வரும் அற்புதமான பாடல் வரிகளை டானியல் எழுதியிருக்கிறார். இலக்கியச் சந்திப்புகளில் மேசையில் தாளம் தட்டிப் பாடிய அவரது பாடல்களை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்.அற்புதமான கவியாற்றல் நிறைந்த கலைஞன்,தியாகவுள்ளம் நிறைந்த போராளிக்கலைஞன்,தனது மக்களுக்காகத் தன் உயிரையே விடுவதற்குத் தயங்காத அற்புதமான உள்ளங்கொண்டவனின் கவிவரிகள் நம் மனதில் பாச அதிர்வுகளை கிளப்பி எம் உறவுகள்மீது கவனத்தைக் குவிக்கிறது.சுனாமிக்காக,போருக்காக,அவலமாக மக்கள் இறக்கின்றார்கள். துரோகி-தியாகியென மக்கள்,உறவுகள் கொல்லப்படும் நமது சூழலில் ஒவ்வொரு வீட்டிலிலும் மரணத்தின் வலுக்கரங்கள் புதைந்துகிடக்கிறது.தினமும் தரையில் பட்டுத்தெறிக்கும் மனிதக் குருதியானது நமது வாழ்வின் அழகையே கறைப்படுத்திவிடுகிறது.உறவுகள் அழிந்து போகிறார்கள்.சுற்றஞ் சூழல் இல்லாதுபோய் வாழ்விடங்கள் சுடுகாடாய்ப் போகிறது.கவிஞன் தன் தலையிலடித்துக் கொண்டு உறவுகளைத் தேடியலைகிறான்,மனித அரவமேயின்றிக் கிடக்கும் யுத்தபூமியில் நின்று உறவுகளைத் தேடி நெடுந்தூரம் அலைகிறான்.எதுவுமே தென்படவில்லை.அப்போது அவன் உள்ளம் பாசத்தால் துவண்டு,நேசக்கரத்தோடு குரலெடுத்துப் பாடுகிறான்:

'ஈர விழியோடு
கூவி அழைக்கின்றேன்
தூரமான சொந்தம் தேடியழுகின்றேன்
என் அண்ணன் எங்கே,
என் தங்கை எங்கே,
என் அன்னை எங்கே
என் சுற்றம் எங்கே?...'

இந்தக் கேள்விகள்தாம் இன்றுவரை நம்மைக் குடையும் கேள்விகள்!தொலைக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் இலங்கைத் தமிழர்களிடம் இந்த உணர்வே எங்கும்,எதிலும் ஓங்கியொலிக்கிறது.மனதின் மூலையில் மௌனிக்க முடியாத இந்த உணர்வு தேசத்தின் விருப்புகளைக் கடந்து உறவுகளோடு அமைதியாக,அண்மித்துக்கொண்டு கரம்பிணைத்திடவும்,அன்னையின் கைகளால் குழைத்த பழஞ்சோற்றைக் கை நிறையவேண்டி உண்பதைக் கனவுகளாக்கிய காலத்தை எந்த வகையில் நோக? நிலாவின் நெஞ்சு நிறையும் குளிர்ச்சியும்,சித்திரைப் பனியும் சேர்ந்தே வரும் சோழகக்காற்றும் இழந்த இவ்வாழ்வால் சுனாமியின் சோகம் கப்பிய எம்மக்கள்தம் வாழ்வை நான் நெஞ்சு கனக்கப் புரிவது சர்வ சாதரணமானதாக நிகழ்கிறது.நாம் துயருறும் துன்பியலானது பொதுவில் அனைவருக்கும் பொதுவாகிறது. ஈர விழியாலே...என்ற பாடலை மிக நேர்த்தியாக இசையோடு இணைந்து குரலைப் பதப்படுத்தி அற்புதமாக அநுபவித்துப் பாடும் ஆனந்தப்பா எம்மை அதிர வைக்கிறார்.

சின்னஞ்சிறிய பாலகி வாசுகி கதிர்காமநாதன்.

'அம்மா அப்பா எங்கே
அண்ணன் அக்கா எங்கே
மாமா மாமி சின்னத் தம்பி எங்கே' -
என்று மழலை ததும்பக் குரலெடுத்துப் பாடும் அந்தக் கணமானது சுனாமியைச் சபிக்க வைக்கிறது.தன் வயதொத்த மழலைகள் மடிந்துபோன சோகத்தை நெஞ்சுக்குள் நிறைத்துப் பாடலாக்கிறாளா என்று எண்ணும்படி அழகாகப்பாடுகிறாள்.மீளமீளக் கேட்கும்படி மழலையால் தேம்பியழும் சின்னப் பெண்ணின் குரல் செவிகளில் ரிங்காரமிடுகிறது.


'சொல்லவா என் சோகம்
இல்லையே வாழும் தேசம்...'

என்ற பாடலானது சிவத்தின் அதீதமான உணர்வுத்தெறிப்பால் நம் நெஞ்சை உருக்கி விடுகிறது.இந்த அவரது உருக்கத்துக்கு அனுஷா சிவலிங்கம் தன் கணீரென்ற குரலால் வளம் சேர்க்கிறார்.இதற்கு மெட்டுப்போட்ட முறையே நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துவதும்,எமது சோகத்தை இன்னும் அதிகமாக்கி அந்தப் பெரும் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்ட துணையை நினைத்து ஏங்கும் துணைவனின் மனதை எமது செவிகளுக்குப் பாடலாக்கி நமது உள்ளத்தைப் பிழிந்துவிடுகிறார் இந்தப் பாடகி.மிகச்சிறந்த எதிர்காலம் இந்தப் பாடகிக்கு இருக்கிறது.இவர் இன்னும் முயற்ச்சியெடுத்தால் தரமானவொரு பாடகியாக எதிர்காலத்தில் மிளிர முடியும்.

சிவத்தின் இந்தப் பாடலில் அதீதமான வீச்சு உறவுகளின் இழப்பைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வரிகளுக்கே சொந்தம்.தன்னை இழப்பாக்கித் தன்வீட்டில் நிகழ்ந்த கொடுமையாகக் கவிஞன் தன்னையிந்தக் கோரத்துக்குள் திணித்துக்கொண்டு, தானே தன் துணையைத் தொலைத்து நடுத் தெருவில் நிற்பதாக உணர்கிறான்!இந்தக் காரியமானது நம்மை அந்தக் கவிதைகளுக்குள் இழந்துபோக வைக்கும் ஆற்றலை அந்தப்பாடல் கொண்டியங்குகிறது.இந்தச் சுனாமியின் கொடுமை சொல்லத்தக்க சோகத்தை எமக்குத் தரவில்லை.அதன் கொடூரம் நம் சிந்தைக்கள் அடங்காத மகாக் கொடூரம். உலகத்தின் இருப்பையே அசைத்த அந்தப் பேரலைகளைக் காவி வரும் கடலின் பேரதிவர்வையே அதிர வைக்கும் பாடல்களை இந்த ஒலிப் பேழை தாங்கி வைத்திருக்கிறது.

இங்கே-

'என் சோகமே...' என்ற லிங்கத்தின் வரிகள் பகிரதி செல்வராஜாவால் பாடப்படுகிறது.இசையும் பாடல் வரிகளும் தனித்தனியாக இழுபடுகிறது.பாடலின் உச்சமாக இருப்பது பகிரதியின் குரலும் அந்தப்பாடல் குறித்து வைத்திருக்கும் சோகச் சுமை காவும் வரிகளுமாகும்.இந்தப் பாடலுக்கு மெட்டுப் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருப்பினும் அடுத்தடுத்த பாடல்களில் மெட்டுக்கள் மெருக்கேற்றிவிடுகின்றன பாடல் வரிகளுக்கு.

'கேக்கிறதா கேக்கிறதா...' என்ற பாடலுக்கு அமைக்கப்பட்ட மெட்டானது மெல்ல அந்த வரிகளை அணைக்க முனைகிறது.அனுஷா இந்த ஒலிப் பேழையின் சிறந்த பாடகி. ஆனந்தப்பா இப் பேழையின் அதிகமான பாடல்களுக்கு உயிர் கொடுத்து சம்பத்தோடு மெட்டமைத்திருக்கிறார்.அற்புதமான குரலை இசைக் கேற்றவாறு பதமாக்கிப் பாடும் வலு இந்த ஆனந்தப்பாவுக்குக் கைகூடுகிறது.

'ஈர விழியோடு
கூவி அழைக்கின்றேன்...'திரும்பத் திரும்ப நம்மைப் பாட வைக்கும் அற்புதமான பாடல்.

இவ்வொலிப்பேழையின் எட்டுப் பாடல்களும் ஒவ்வொரு வகையில் சுனாமியின் கோரத்தை நம்மோடு பகிர்ந்து நம்மை அந்தச் சோகத்தின் எல்லைக்குள் இழுத்து,மனிதநேயத்தை உரசிப்பார்க்கும் அதே வேளை இந்தக் கொடுமையின் வரலாற்றுப் பதிவுக்குள் வைத்திருக்கும் என்றும்.

இறுதியாக ஆனந்தப்பா தவிர்ந்து அனைத்துப் பாடகிகளும் வார்த்தைகளை விழுங்கியே பாடுகிறார்கள்.இவர்களுக்கு அற்புதமான குரல் வாய்த்திருக்கிறது.அதை வளர்தெடுப்பதும்,வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதும் பாடல்களை-வரிகளை உள்ளது உள்ளமாதிரி விளங்கிக் கொள்ள அவசியமாகும்.

இந்த நேரத்தில் என்னால் இன்னுமொன்றையும் புரிந்துகொள்ளமுடிகிறது! இந்தச் சிறிய பாடகிகள் யாவரும் மேல் நாடுகளில் பிறந்து அந்நிய மொழியில் கல்வி பயில்பவர்கள்.அவர்களது இந்த வாழ்வியலோடு தமிழை இந்தக் குழந்தைகள் இவ்வளவு அழகாகப்பாடுவதே மேல்தாம்!

இந்தப் பேழையின் உச்சபச்ச உருக்கமானது எங்கள் மக்களின் அவலத்தின் துயரச் சுமைகளை,வாழ்வின் விதியை-இயற்கையின் முன் மனிதர்கள் பட்ட அவதியைச் சொல்வதாகும்.அதைச் சொல்வதிலும் ,அந்தச் சோகத்தைப் புரிந்து கொள்வதிலும் குறியாகவிருக்கும் இந்த ஒலிப் பேழையின் கவிஞர்கள் தமது நோக்கத்தில் வெற்றியீட்டிவிடுகிறார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி.
03.12.2005


Saturday, November 26, 2005

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமிய...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமியத் தகவமைப்பும்...


>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,

மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,

அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<

இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம்(இவர் 'யூரோ இஸ்லாத்தை' முன் மொழிபவருங்கூட) இங்ஙனம் உரைத்தார்,கடந்த இலண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னரான உரையாடல் ஒன்றில்.


அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி எங்ஙனம் நிகழ்தது என்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.

யோசித்துப் பார்க்கின்றபோது நமது இன்றைய 'தமிழ் அரசியலோடு' இது வெகுவாக ஒன்றிப்போகிறது.

இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' நியூயோர்க்,ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர்
திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும்
கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'
இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை இந்த மேற்குலக நாடுகள் சொல்வதும்.இத்தகைய செயல் "தற்கொலைத் தாக்குதல்" போன்ற பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிப்பது இனிமேல் அதி தீவிரவாதக்-குறுங்குழுவாதப் போராட்ட முறைமைக்குத் தோல்வியாகும்.



நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.

இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால்(கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.

1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்தத் தளத்தை

மேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.


கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!


இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார்.இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!


ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் போன்ற எமது 'சுயநிர்ணயப'; போராட்டம்கூட தமிழ்த் தேசியத்தின் அதீத பயங்கர வாதத் தாக்குதல்களால்,கொலைகளால் இந்த மக்களிடம் எமக்கு ஆதரவான மனநிலையைக் காண முடியாத சூழலையுருவாக்கி விட்டுள்ளது.ஏன் நாம் பல தூரம் போவான்?நமது போராட்டத்துக்கு,வெற்றிக்கு மிகவும் அவசியமான 'உந்துதல்'எங்கிருந்து வரவேண்டுமோ அதுவே நம்மைத் தடை செய்யுமளவுக்கு நமது பயங்கரவாதம் தமிழகத்தை அந்நிய மண்ணாக்கி விட்டுள்ளது.



இங்கே நாம் மேலே குறித்துச் சொன்ன தமிழ் அரசியலோடு நெருங்கி வருவதென்பது 'கருத்தியலால் உந்தும் மனிதர்களை'உருவாக்குதலும்,அவர்களைப் பின்னிருந்து தூண்டும் தத்துவார்த்தத்தையுமே பொதுமைப் படுத்துவத்தைச் சொல்கிறோம்.


இங்கே மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய 'குறுந்தேசியத்தின்'இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.அது ஆண்டுக்குப் பல முறை ஒவ்வொரு புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறது.உதாரணத்துக்கு'மாவீரர் தினம்'இந்தாண்டு'தேசிய மாவீரர் தினம்'என்றாகிறது.இது மக்களிடம் ஆயுத சாகசங்களையும்,தனிநபர் வழிபாடுகளைங் காட்டுவது மட்டுமல்ல கூடவே சிறார்களைப் பலி கொடுத்த பெற்றோர்களைக்கூட விட்டுவைக்காது-தமது சின்னஞ்சிறு குழந்தை பலியானது சரியானதாகவும்,அவர்கள் இறந்து போகவில்லையென்றும்,வீரத்தில்-தேசத்தில் உயிராகத் தம்மோடு வாழ்வதாகக் கருத்துக் கூறுமளவுக்கு அந்தப் பெற்றோர்களைத் தயார்ப்படுத்திக் கேவலமாக்கிறது.இந்தத் 'தேசியத்துக்குள்'சிக்குண்ட இந்தப் பெற்றோர்கள் தேசியத்தை முன்னெடுப்பவரின் ஊடககங்களில்,தொலைக்காட்சிகளில் மலர்ந்த முகத்தோடு தமது மழலகைள் 'வீரச்சாவடைந்தது'மகத்தானது என்றும்,அந்தச் சிறார்களை'அவர்,இவர்' என்று அழைத்துக்கொள்வதும்,தேசத்தின் விடுதலையில் பற்றுள்ளவராகவும்,இலங்கையரசின் அட்டூழியங்களைப் பற்றியும்,தமிழர்கள் விடுதலையடைய வேண்டுமென்ற நியாயப்பாடுகளையும் தினம் தமக்குக் கூறுபவராகவும் ,மாணவராகவும் இருந்தார் என்றும்,இதனால் தேசத்துக்காப் போராடித் தெய்வமாகினார் என்கிறார்கள்.பதின்ம வயதுச் சிறார்கள் வாழ்ந்து கெட்ட பெரிசுகளுக்கு,பெற்றோருக்கு'சிங்கள அரசின்'அட்டுழியங்களைச் சொன்னார்களாம்!-அப்போ இந்தத் தடிமாடுகள் எந்தவுலகத்தில் வாழ்ந்தார்கள்?தமக்கு அநுபவப்படாத இந்தக் கொடுமைகளை,இன்னல்களை,நியாயப் பாடுகளைச் சிறார்கள் சொல்லித்தாம் தெரிந்துகொள்ளும் நிலையிருந்தவர்கள் எப்படித்தாம்'பிள்ளைகளை' மட்டும் மண்ணை நேசிக்கும் மகத்தான மனிதர்களாக வளர்த்தார்களோ தெரியவில்லை!


இன்றிருக்கும் தமிழ்க் கருத்தியல் தளமானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு மிகவும் பொருத்தப்பாட்டோடு நகர்கிறது.இஸ்லாத்தின் அதீத கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.


பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் 'தமிழ்தேசியத்தை'விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மௌனிக்கத்தக்க செயலில்லை.நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழர்களில் பலர் உள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.நமது நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்'தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்'வானொலிகளில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்களை உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.இங்கே தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு!


தமிழர்களுக்கு மகத்தான நாளாகவும்,நன்றி கூறத்தக்க நாளாகவும் ஆக்கப்பட்ட'27.11.'(கார்திகை 27)இந்த வகைப்பட்டவொரு'மாதிரி'தமிழ் மனிதர்களை உருவகப்படுத்தும் தந்திரத்தை தன்னகத்துள் வைத்திருக்கிறது.இது மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்'உயிர் வாழ்வதாக'உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான'வீரமாகவும்'தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது தமிழ் ஆளும் வர்க்கம்.இது தகவமைத்து வைத்திருக்கும் இந்த 'மாதிரி மனிதர்கள்'இஸ்லாமியப் பழிக்குப்பழி போராட்டத்தைப் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான 'சுயநிர்ணயவுரிமை' அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது. சாதரண இஸ்லாமியர் ஒருவர் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் 'மாதிரி மனிதர்களும்'தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்,தலைவரின்'மாவீரர் தின'உரையில் வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும்-இஸ்லாமியனுக்கு 'புனிதக் குரான்'போன்று இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டு,அர்த்தமாகிறது.இவர்களே தமது தலைமையை-தலைவரைத் தெய்வமாக்கி வழிபடும் அளவுக்குக் கருத்துக்களால் வார்த்தெடுக்கப்பட்டபோது தலைவரின் "51வது" பிறந்த நாளுக்கு 51 பொங்கற் பானைகளில் பொங்கிப் படைத்து மகிழ்வதுவரைச் செல்கிறது.வாழ்க தமிழ்ப் பண்பாடு!

மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,

>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,

மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,

அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<

தமிழ் மக்களின் இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது

கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

********************************************************


ஒப்பாரி,
ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!


பானையிலே போட்டரிசி
பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை
பாதகர்கள் தந்திருந்தால்
பால்வார்த்துப் பார்திருப்பேன்!

பாவீ நானும் பட்டழ
பரதவித்துப் போனாயோ?
மாவீரர் மகனென்ற மமதையிலே மடி மறந்து போனதுவோ?

* மந்திகைக்குப் போன கதையாய்
மாசம் சுமந்த கதை போச்சு
மக்களில்லா வீட்டிற்கு மகத்துவமுண்டோ?

மடைச்சி நானும் மயங்கிப்போனேன்
மாவீரர் கதைகேட்டு
மகனே உனைமறந்த மரக்கட்டையை மன்னிப்பாயோ
என்ர குஞ்சரமே கொழுக்கட்டையே!
2
குஞ்சரமே குளத்தடியே
கொப்பனுக்குக் கற்கண்டே
கொட்டி வைத்த முத்தெல்லாம் மோதுண்டு சிதறியதோ?
மோடர் மலம் மிதித்திட்டால் மூன்றிடத்தில் நாசமென்று
சீலைக்குள்ள தவம் கிடந்து சிக்கனமாய் பெத்த குஞ்சே!

சண்டாளி நானெருத்தி சகதிக்குள்ளே கிடந்தழ
சாய்த்துவிட்டார் உனையல்லோ!
சாய்த்து வைத்த சுளகுபோல சாய்ந்தாயோ நீயுமங்கு?
ஏழை பெத்த பிள்ளையெல்லாம் எதிரயிடம் செத்துப்போக
கட்டுடலாய் காத்துவிட்டார் தத்தமது உடலையெல்லாம்

காயடித்த கடுகுப்பிஞ்சுகள் கருகிவிழ
காலிப்பயல்கள் கதைபோட்டார் மாவீரர் திரைபோட்டு
கால்வலிக்க நடக்கின்றோம் மகவுகளின் உடல் புதைத்த குழி தேடி
காலமெல்லாம் கனவுகளாய் அவர் முகங்கள்
3

நாசமாய்ப்போனவங்கள் தேசத்தை ஆளயிங்கு
நாயிலும் கேவலமாக நான் கிடந்து அழுந்திடவோ?
நாதியில்லை நக்குவதற்கு
நமக்கிங்கு நல்வாழ்வாம் கடவுளிட்ட கற்கண்டே
கனியமுதே தேனமுதே

கக்கூசு கழுவவைக்கும் காலிப்பயல்கள்
சாதியப் பெருந்தடிப்பில் சதிராடி தமிழீழக் குரலெடுக்க
நாடுவொன்று வேண்டுமென்று நாங்களிங்கு செத்துப்போனோம்.

சின்னவயசுப் பயல்களெல்லாம் இப்போ
சீட்டியடிச்சுப் போகையிலே
சித்திரமே பத்திரமே
சிணுங்குகிறேன் உனை நினைத்து

கூட்டிவைத்துக் கதை சொன்னார்
கும்மியடி தமிழ் என்றார்
குரைத்து நின்ற எதிரொலியில் குறைகளெல்லாம் குறையுமென்று
குனிந்து நாங்கள் கும்பிட்டோம்

குனிந்த தலை நிமிர்வதற்குள் குடிகுலைந்துபோக
குளமாடி நின்ற கண்கள் குளிருடலில் புதைந்தனவே
குஞ்சரமே குண்டலமே நீ
வெஞ்சமரும் வேதனையாய் உணர்ந்தாயோ?
4

ஆருதாம் இருந்தென்ன
ஆனை கட்டி வாழ்தென்ன?
அமெரிக்கா சொன்னவுடன் அத்தனையும் பறந்துவிடும்
அப்பனுக்கு வைத்தநேத்தி அம்போவென்று போனதுவே!

பெட்டகமே புத்தகமே
பேதையிங்கு தவிக்கையிலே
போண்டியான கோசங்களும் போடும் வரி கொஞ்சமல்ல
வாழ்ந்து நீயும் பார்திருந்தால் நிம்மதிக்காய் வாய்திறப்பாய்
போட்டிருப்பார் உன் கழுத்தில் தமிழினத்தின் துரோகியென்று

அம்மாவின் அருமருந்தே அப்பனுக்குப் பொக்கிசமே நீ
கச்சைக்குள்ள வெடி சுமந்த காலமெல்லாம்
கற்பம் கரைந்த கதையாச்சு

கண்மணியே கடைக்குட்டியே நீ
கால்தெறிக்கப் போனயோ அன்றி
போகுமிடம் தெரியாது பொழுதெல்லாம் அலைந்தாயோ?

வெஞ்சமரும் வேதனையும்
நீ சுமந்த காலமெல்லாம் நான் கலங்கி
நிம்மதிக்காய் அம்மனிடம் மோதிக்கொண்டு
நெஞ்சு நோக வீடுமீளும் காலமதை நீயறிவாய்

இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்

காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!
5

கட்டிவைத்து உதைத்தவர்களும்
கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்
சிரட்டையிலும் போத்தலிலும் நீரருந்த வைத்தவர்களும்
கட்டிவைத்த மனைகளுக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுத்தவர்களும்
தமீழக்கோட்டைக்குள் சோடிசேர அழைத்தார்கள்

சேர்ந்து தோள் கொடுத்த நம்மை
அடக்கிவிட துடிக்குமிவர் ஈழமெனும் கோசத்தால்
ஈட்டியெய்தார் எம் முதுகில்
சொந்த வாழ்வின் சுகத்துக்காய் இன்னுமெமை ஏய்த்தபடி

ஐயா குஞ்சரமே!
மாலைவேளை மதியை கருமேகம் காவுகொள்ள நீ
மிதமான கனவோடு மிதிவெடியும் தாட்டு வைத்து
காத்தருந்த காலமதை பெத்தமனம் பித்தாகி

பேசும் வாய்க்கு மொழியில்லை

கள்ளமனம் படைத்த காசுக்கார கூட்டமின்று
சிங்களத்துச் சந்தையிலே கடைவிரித்துச் சமாதானம் விற்க
கட்டுக் கட்டாய் பணம் சேரும் அவர் கணக்கில்
வறிய நாம் வாடுகிறோம் வாழ்விழந்த எங்கள் மழலைகளுக்காய்

தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள்கொடுக்கப் போனதாகச் சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய்மனது!

மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்துபோகும்
வார்த்தையின்றிச் சோர்ந்துவிடும் வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்றுவரை?.


*(மனநோய் வைத்திய சாலை

மந்திகையெனும் ஊரில் இருப்பதால் மந்திகை குறியீடாகிறது.)

ப.வி.ஸ்ரீரங்கன்
26.11.2005

Tuesday, November 22, 2005

எச்சம்!

எச்சம்!

பனியுதைக்கும் அதிர்வில்
விறைத்தொதுங்கிய உணர்வும்
இளமைக்கு விடைகொடுக்கும் உடலும்,
இழப்பினது கனவுகளுமாக
இந்தக் குளிர் காலம்.
சற்று முன்
நிலாவின் ஒளியை
நுகர்ந்த என் மனது மௌனித்துக் கிடக்கிறது!

மாலை நேரத்துப் பொலிவுகளை
சிறார்களின் துள்ளலிலும்,
சிரித்தொதுங்கும் 'அம்மாக்களின்'
விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை!

இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு
எந்தப் பொலிவுமில்லை!
இது
கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில்
மௌனித்த காலத்தின் அதிருப்தியாய்
மனதைக் கிளறிவிடும்

கார்த்திகையில் விளக்கிட்டு
தேவாரம் பாடிய மனதும்,
வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய
எனது தீபமும்
நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு.
அந்த மனதின்
நினைவுத் தோப்பில்
தீராத வடுவாய்
நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம்.

தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும்
பேசவெழுந்த நாவின் முனகலும்
குருதியின் அதிர்வில்
நிலைமறுத்திருக்கு
என் தேசத்து முற்றத்தில்.

இருண்டவெளியின்
நெடும்பாதையில்
தேசத்தை நோக்கிய
நெஞ்சு
வனப்பிழந்து கிடக்க,
பார்த்துப் பழகிய பூமியும்
பாய்விரித்துப் படுத்த முற்றமும்
பாட்டுச் சொன்ன குயிலும்,
பக்குவமாய் கட்டிய வீடும்
பால் குற்றிய ஆலமரமும் தொலைத்து
சிலநொடியில்
முளையெறிந்த'தேசக் கனா'
என்னைப்
பரதேசம் அனுப்பியது ஒரு காலம்.


இன்றோ
விழித்திருக்கையில் மரணமும்
தூக்கத்தில்
ஆத்தையும்,அடுப்படியும்
பிடரிக்குள் வருகின்றன.

உடல்வியர்க்கும்
சூடான வானத்தையும்
சுகமாய்த் திரியும் மெல்லிய தென்றலையும்,
மேனியெங்கும் பட்டுவிலகும் வண்டுகளையும்
கால்வலிக்கத் துணைவந்த
தோழமையையும்-
தோளில் தொங்கிய துணிப்பையையும்
எங்கோ தொலைத்துவிட்டேன்!

--<-<--@ எவருமறியா இந்தப் பொழுதுகளின் 'எச்சில் இரவுகள்' எதற்கெடுத்தாலும் வெருட்டிக் கொண்டிருக்கு. குளிர் ஒரு புறமும், புறத்தியான் என்பதாய்ப் புகல் தேசமும் பால்யப் பருவத்து மார்கழித்'திருவெம்பாவை'யையும் திருநீற்று நெற்றியையும் சங்கின் ஒலியையும் உணர்வின் ஒரு மூலையுள் துரத்துகிறது. ஆத்தைபிடித்த "புதிய" அடுப்பும் அப்பன் சூடடித்த சிவப்பரிசியும் தையில் பொங்க, அண்ணன் சுட்ட வெடிகளும், பூந்திரிகளில் பூத்த எங்கள் "மனமும்"(பன்மையொழிந்த ஒருமை ;-( .) அன்றைக்குத் 'தம்பி',தங்கை, அக்கா,அண்ணன் உறவிருந்த தடயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கு! ===~ கனவு வாழ்வு குருதியுறையும் குளிர் பொழுதில் தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்கும் போசனத்து எச்சமாக... ப@ :-0 ப.வி.ஸ்ரீரங்கன் 22.11.2005

Sunday, November 13, 2005

தமிழுணர்வு:அரசியல்.

போராட்டம்,வாழ்வு,தமிழுணர்வு:அரசியல்.


இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக்
கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு 'வாழ்வியல் மதிப்பீட்டைக்'கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம், நிலவுகின்ற அமைப்பாண்மை
வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட'ஜனநாயகம்'
எனும் கருத்தாக்கத்தால் உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல்
'ஒப்பாரி' எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் 'பிரதிநித்துவப்படுத்தும்' ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.

இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய'அரசியல்-பொருளியல்'வலுவும்
அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர்
தயாரிப்பான இந்த 'அலகுகள்' அந்ததந்த நாடுகளில் இன்னும்
ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய'அலகுகளை'உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் 'பொருளாதாரச் சிக்கல்கள்' அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.இதுவே நமது நாட்டில் இன்றைய கடைக்கோடி அரசியலாக நாற்றமெடுக்கிறது.இங்கு புலியென்ன ,ஈ.பி.டி.பீ என்ன எல்லாம் அராஜகக் கம்பனிகள்தாம்!



இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற 'ஊனங்களும்'அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் 'துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது'ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான'உளவியற் கருத்தாங்களால் 'கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட 'மனிதவுடலானது'அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக'மக்கள் விரோதமாக'இருந்தும்
அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் 'நாம'
மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும்
கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு'விரோதி,துரோகி'என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்.தியாகிதுரோகி' என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழ்க் குறுந்தேசியமானது தனது இருப்பை
இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.இங்கே புதுவை இரத்தினதுரைகளும்,காசி ஆனந்தன்களும் சமூகத்தின் அறங்காவலர்களாகப் பாடிக்கொண்டே தமது அடிவருடித் தனத்தைச் செவ்வனே செய்து பிழைப்பதில் காலத்தைத் தள்ளுவார்கள்.இவர்களைச் சுற்றிய ஊடகங்கள் இத்தகைய கருத்துக்களைத் தேசத்தின்-இனத்தின் நலனாக வாந்தியெடுத்து மக்களின் ஒரு பகுதியை இந்த இருண்ட
பகுதிக்குள் கட்டிப் போடுகிறது.இதை வளர்த்தெடுக்கும் இயக்க நலனானது இவற்றைத் தேசிய எழிச்சியாகவேறு பிரகடனப்படுத்தி மக்களை இனவாதிகளாகச் சீரழிக்கிறது.இங்கே கொலைகளும்,மனங்களைச் சிதைப்பதும்,கொடூரமான வசவுகளும் மலிந்து'கொலைக்காரக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக'தமிழ்ச் சமூகம் சீரழிந்து போகிறது.

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும்
பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் 'கருத்தியல் வலுவை' எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவ்வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

இதிலிருந்து எங்ஙனம் மீள்வது?
இங்கேதாம் நமது எல்லை பிடரியில் மோதுகிறது.இவ்வளவு ஒழுங்கமைந்த கட்டமைப்பை-அரசியல் அதிகாரத்துவ நிறுவனங்களை எப்படி வீழ்த்துவது?இதைச் சில உதிரிச் சிந்தனையாளர்களால் வீழ்த்த முடியுமா?உதிரிகளாக அங்கொன்றுமிங்கொன்றுமாகக் கருத்திடும் நம்மால் முடியுமா?பதில் இல்லையென்பதே!பூர்ச்சுவா வர்க்கம்- கட்டமைப்பு தன்னை வலுவாகத் தகவமைத்துப் பாரிய நிறுவனங்களாகச் சமுதாயத்தில் அதிகாரத்தைக் குவித்து ஒழுங்கமைந்த கட்சியோடு வன்முறை ஜந்திரத்தைக்
கட்டிவைத்துத் தன்னை மக்கள் பிரதிநிதியாகக் காட்டிக் கொலைகளைச் செய்யும்போது'சில உதிரிகள்'இவற்றுக் கெதிராகக் கலகஞ் செய்வது வரையறைக்குட்பட்டது,
இது ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.இங்கே ஒழுங்கமைந்தவொரு 'புரட்சிகரக் கட்சி'யின்றி எதுவும் சாத்தியமில்லை.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த 'தீவுகளாக' வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் 'பொதுவான' வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.

அதிகார வர்க்கமானது 'புரட்சிகரக் கட்சியின் 'தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு'பின் நவீனத்துவ'தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.

இன்றைய நிலையில் எவரெவர் 'புரட்சிக் கட்சி'க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்'மனமுடக்கங்களும்,சிதைவுகளும்'
தனிநபர்வாதமாக மாறுகிறது.இது தவிர்க்க முடியாதவொரு இயங்கில்போக்காகும்.

இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருக்கேற்வாறு'அதிகாரவர்க்கம்'செயற்படுகிறது.
இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை 'ஜனநாயக வாதிகளாக'க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்(ஈ.பி.டி.பீ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளட் இப்படிப் பலர்...).இவர்களுக்குப் பாசிச உள்நாட்டு-உலக அதிகாரவர்க்கத்தோடு பாரிய கூட்டுண்டு.இவர்கள் நிலவுகின்ற கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்பது போல்(டக்ளசின் தினமொருமடலை அவரது வானொலியான இதயவீணை
காவி வருவதைக் கவனிக்கவும்) தம்மைக் காட்டி மக்களைக் கருவறுக்கும் அரசுகளுக்கு-அதிகாரங்களுக்குத் துணைபோகின்றனர்.

இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்'கொடூர அராஜக' அரசியலுக்கும் வித்தியாசம்'அடியாட்'படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.எனவே நமக்கு நாமே துணையென மக்கள் தமது 'ஸ்தாபனமடையும் வலுவைப்' பேணி 'புரட்சிகர'அரசியலை முன்னெடுக்க உதிரிகளான நாம் முதலில் ஒன்றிணையும் நிலைக்கு வந்தாகவேண்டும்.
இது இல்லையானால் எமது எல்லைக்குட்பட்ட நகர்வு இறுதியில் நம்மைத் தோல்வியில் தள்ளிவிட்டு, நகர்ந்து வெகு தூரம் சென்றுவிடும்.இந்த நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு'மாகாண சுயாட்சி'சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை எவராலும் தடுக்க முடியாது. இங்கே ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப்
பலிபோவது உலகம் பூராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.


ஐக்கியப்பட்ட இலங்கைப் புரட்சியானது நேபாளத்தின் 'நிலைக்கு'
மாறுவதை உலகம் விரும்பவில்லை,குறிப்பாக இந்திய
ஆளும் வர்க்கத்துக்கு
இது பாரிய தலையிடி.இங்கே இந்த நிகழ்வை முளையிலேயே
புலிகள் கிள்ளி எறிந்தும் இவர்கள் திருப்தியின்றி மேன்மேலும் புரட்சிகர அரசியலைச் சிதைக்கப் பலரூபம் எடுக்கிறார்கள்.அதில் ஒரு உரூபம் ஈ.பி.டி.பீயும்,டக்ளசும்.மற்றது ஆனந்தசங்கரி...சிங்களத் தரப்பில் ஜே.வி.பீ,பேரினவாதக்கட்சிகள்,பௌத்த துறவிகளெனப் பல வடிவங்களாக இது விரிகிறது.நாமோ
உதிரிகளாகி உருக் குலையும் நிலையில் ஓலமிடுகிறோம்.

மக்கள் அராஜகத்துக்குப் பலியாகிக் கொத்தடிமையாகிறார்கள்.அகதியாகி அல்லல் படும் நாம் 'சொகுசு'வாழ்வோடு கத்துகிறோமென்று கருத்துவளையத்துக்குள் தலையைக் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள்.
காலம் நம்மெல்லோரையுங் கடந்து நகர்கிறது.அதை விட்டுவிட்டு,அதன் பின்னால் நாம் நாய்யோட்டம் போடுகிறோம்.வாழ்க மக்கள் ஜனநாயகம்.

பிற்குறிப்பு:

படங்கள் தேனீ மற்றும் பெயர் மறுந்துபோன தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.அத்தளங்களுக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2005
வூப்பெற்றால்,ஜேர்மனி.



Wednesday, November 02, 2005

'மகனும் ,ஈ கலைத்தலும்'

"வனத்தின் அழைப்பு"

அஸ்வகோஸ்:'மகனும் ,ஈ கலைத்தலும்'

(சிறு குறிப்பு)


'...என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப் படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்...'

ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்,
நான் துயருற வேண்டி.

சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக
நான் கொள்ளும் தியானம்!
படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி.

'இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது
இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை'

சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள்.

என்னயிது?
சவப்பெட்டி நட்டநடுவே.
ஒன்றல்ல, பல.
ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி.
என் கைகள் நாலாபக்கமும் வீசியடித்தபடி,வேகமாயின.

முடியவில்லை.

அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன்.
யாருமேயில்லை!
எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள்?
இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு.
சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈக்களின் மொய்ப்பில் அவை ஊளையிடுகின்றன.

நான் தனியாகவேயுள்ளேன்.

கனவுதாம்.



ஒரு கவிதைத் தொகுப்புக்கூடாகக் கனவுதாம்.

நிஜம் கனவாகிறதா?
ஏன்?
நான் வெகு தூரத்தில்.
மிகப்பெரிய இடைவெளி உறவுகளுக்கும்,இன்றைய என் வாழ்வுக்கும்.

'வதை தாங்காது அழுது சென்றவர்களும்
வார்த்தையின்றி மௌனித்தவர்களும்
நடந்த தெரு,முற்றமிது
வெறிச்சோடித் துயருடன்

எத்தனையோ இரவுகளில்
புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள்
சாய்ந்து போன உடல்களாய்
சவப் பெட்டிகளுள் ஈயுடன் போராடி...' வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை.

தெருவோரச் சொறிநாய் மாதிரி ஊளையிட்டுக்கொள்ளும்

இலக்கியச் சூழலில் இப்படிச் சிலர்,அஸ்வகோஸ் போல்...
இரத்தமும் சதையுமான வாழ்வோடு வருவதுதாம் கவிதைகள்.ஒரு பாரதிபோல,சு.வில்வரெத்தினம் போல.

'இத்தனை காலமும்
ஏங்கித் தவித்ததின் அர்த்தமென்ன?
நீங்கள் கூறுங்கள்
தாய்மையின் கதறல்
கேலிக்குரியதா?'

இல்லை!

உனக்கும் தெரியும்,எனக்கும் தெரியும் இரஞ்சகுமாரின் சீலனுக்கும்,குலத்துக்கும் என்ன நடந்ததென்று.

கோசலையின் நிலை,ரொம்ப ரொம்ப எங்கள் அம்மாக்கள் அநுபவப்பட்டதுதாமே?

எங்கள் உடன் பிறப்புகள் சீலனுக்கும்,குலத்துக்கும் நடந்ததையிட்டு கோசலைகளாக மாறிய அம்மாக்களின் கதறல்கள் கேலிக்குரியதாக மாறிவிட்டால்:

'பாழாய்ப்போன தேசமே நீ மீண்டும் பாழ்!
மனித வதை,மனித வதை,
இலங்கையில் மட்டுமல்ல
இந்தப் பூமிப்பந்தில் எங்கும்!' ஒவ்வொரு வகையில் தொடர்கிறது.எல்லாம் 'ஒவ்வொரு'நலத்திற்காக.யார்,யாரோ சாகிறார்கள்,யார் யாரோ அரியாசனம் அமர்கிறார்கள்!

எங்கள் நிலை?

'விலங்குகளுக்கெல்லாம் விலங்குகள் செய்த விடுதலை' குறித்துப் பேசியவர்கள்கூட தம்மைத் தாமே அழிக்கமுனைந்த இருள் சூழ்ந்த இழி நிலை,இன்றைய நம் நாட்டில்.இது குறித்து:

'எம் சோகம் சிறையிருந்த
காலம் போதும்
செவிடராய் மௌனித்துப் போன
மக்களின் செவிகளில்
அலைகளை மீட்ட வா!' என்று,அஸ்வகோஸ் அழைப்பு விடுப்பது மிகவும் சரியானதுதாம்.இல்லை?

'நிறையவே சிந்திக்க வேண்டும்!'

மனிதவிடுதலை குறித்து,தேசவிடுதலை குறித்து,தோழமை குறித்து...
உண்மைதாம்!
கடந்தகால அல்லோலகல்லோலப்பட்ட இயக்கவாத மாயையில் நாம் ரொம்பத்தாம் முடமாகிப் போய்விட்டோம்.

அஸ்வகோஸ் புது இரத்தம் பாய்ச்சுகிறார்.
கவிதை ஒருவாழ்வு.
'வாழ்வு கவிதையாக வேண்டும்.கவிதை வாழ்வாக வேண்டும்'என்று சேரன் அடிகடி கூறிக் கொள்வார்.

இங்கு அஸ்வகோஸ் கவிதையில் வாழ்ந்து பார்க்கிறார்.

சமூகசிவியம் சீர்குலைந்து,சின்னாபின்னமாகி மனித இருத்தலே கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் குரலாய் ஒலிக்கும்

'வனத்தின் அழைப்பு' ஒரு காலக்கட்டத்தின்(சமகால) தேச தரிசனத்தைத் தரவில்லை?

தருகிறது!,புயலாக.

'போரின் கனத்த குரல்
இப்போது கேட்கவில்லை
அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்
எங்கு என்ற கேள்வி வேண்டாம்
போரின் கனத்த குரல்
ஒலிக்கும்போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்'

தன் சிரசை உயர்த்தி அறுதியிட்டுக் கூறி முடிக்கும் வரிகளால்,தான் மண்ணைளைந்து விளையாடிய மண்ணின் வாழ்நிலை குறித்து ஓங்கியோங்கி ஒலிக்கிறான்,இங்கு இந்தக் கவிஞன்.

எதற்கெடுத்தாலும் கொலை.'டுமீல்',டுமீல்!குருதி வெள்ளத்தில் மானுடம் புதைந்தபடி!!,இது கால் நூற்றாண்டாய் இலங்கையின் அன்றாட நிகழ்வாச்சு.
மனிதர்களின் எந்த விருப்புகளுக்கும் மதிப்பில்லை.மனிதர்களின் விருப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்த விருப்பு, உயிர்வாழும் 'விருப்பு' ஆகும்.இன்று, இலங்கையில் உயிர்வாழ்தலுக்குரிய மதிப்புபெறுமானம் சொறிநாயின்-விசர்நாயின் இருத்தலைப் போலுள்ளது.

'கருணையுள்ளோரே கேட்டீரா
காகங்கள் கரைகின்றன
சேவல்கள் கூவுகின்றன
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன'

இந்தக் கவிதை வரிகளை எதுக்குள் அடக்கமுடியும்?
மரபுக்குள்ளா,நவீனத்துக்குள்ளா?

இதுவா இப்போதுள்ள பிரச்சனை?இல்லை!

இஃது ஒரு'காலத்தின்'பதிவு.இலங்கை அரசியலில் நிகழ்ந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுப்போக்கு.இதைக் கவிஞன் பதிவு செய்வது மட்டுமல்ல,கலகக்காரனாகவும் அவன் தன் இறக்கைகளை விரிக்கிறான்.பேனா முனையின் கூரை இன்னுமின்னும் கூராக்கிக் கொள்கிறான்.
அஸ்வகோஸ்க்கும் அவர் படைப்புகளுக்கும் மரபு ரீதியான

எந்தப் புரிதலும் சரிவராது. அவர் கவிதைகள் இலக்கணத் தளைகளை மீறி வாழ்வாய் மலரும் அதேவேளை,தம்மளவில்

கவிதைக்கான இயல்பைக் கொண்டேயிருக்கின்றன-இயங்குகின்றன.

ஈழத்தின் கவிஞர்களில் பலர் 'வெறும்'கவிஞர்கள் இல்லை.அதாவது பண்டைய மன்னன் புகழ் பரப்பும்,இன்றைய சினிமாவுக்கு கூலிக்குழைக்கும் 'கூழை'க் கவிஞர்கள் போலில்லை.மாறாக இவர்கள் சமுதாயத்துள் ஐக்கியமாகி,அதனுடன் கரைந்தவர்கள்.இவர்களே போராளிகளாக தோளில் சுடுகலங்களுடன் காடும்,மேடும் அலைந்து மக்களுக்காக தம் ஆயுளைச் செலுத்தியவர்கள்.முற்றுகைக்குள்ளான தேசத்தின் இதயத்திலிருந்து பீறிட்டெழும் விடுதலைத் தீயிலிருந்து சுடரெழுப்பும் இக் கவிஞர்கள்,தீக் குஞ்சுகள்!,அக்கினிக் குழந்தைகள்.

இந்தக் கவிஞர்களின் கவிதைகளில் காணும் அநுபவங்கள்

இவர்களின் அசல் நாணயமான அநுபவம்.இவர்களின் வேர்கள் சமூகத்தின் அதியுண்மையான சமூக முரண்களிலிருந்து பத்திப் படர்கிறது.இங்கு ஒரு அஸ்வகோஸ் தோன்றவில்லை.பலருள்ளார்கள்,அவர்களுள் அஸ்வகோஸ் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி வருகிறார்.இவரின் ஒப்புமைகள்,புதிய குறியீடுகளை உருவாக்கிவிடுகிறது.புராண,இதிகாச அநுபவம் அவரது நீண்ட கவிதைகளில் மிகவும் உன்னதமான வடிவில் புதிய குறியீடுகளாக உயிர்க்கின்றன!இவரது மொழியாற்றல் மிக அபாரம்.தமிழைப் புதுப்பொலிவோடு கையாளுகிறார்.

போராட்டம் இவரைத் தத்துவத்தில்,வரலாற்றில்,சமுதாய அநுபவத்தில் பட்டறிவுள்ளவராக்கி விட்டுள்ளது.இவரின் சிந்தனை இவருள் முகிழ்த்த அதியுன்னதச் சிந்தனை.இஃது பிறரிடமிருந்து பெற்றதல்ல.இதனால் இவர் உயிர்த்து நிற்கிறார்.எந்தவித இலக்கணக் கட்டுக்களையும் காவாது பேச்சோசையோடு அநுபவத்தைப் பகிர்வதும்,வாழ்வை அதன் இயல்போடு சித்தரிப்பதும்,வரலாற்றைப் பதிவு செய்வதும்தாம் இம்மாதிரியான கவிதைகளுக்கு இலக்கணம்.

அஸ்வகோஸின் கவிதைகளுக்கும்,ஏன் ஈழத்தின் கவிதைகளுக்கு இதற்கு மீறிய எந்தத் தளைகளையும் நாம் ஏற்றிச் சுமைகாவிக் கொள்ள அனுமதிக்க முடியாது.ஏனெனில் இவை நம் உண்மையான-அசலான வாழ்வு.

குரூரமான நமது மெய்வாழ்வுக்கு எந்தவிதப் பூச்சும் வேண்டியதில்லை.நம் வாழ்வும்,கலையும் நமக்குள் முரண்படவில்லை.அது இரண்டும் ஒன்றாய்ப்போய் நமக்குள் சுடர்விடும் உயிராய் மாறுவதில் வெற்றி பெற்றுவிடுகிறது.'வனத்தின் அழைப்பு' அதற்குச் சிறு உதாரணம்.

இக் கவிதைகள் தம்மளவில் தமக்கானவொரு 'அழகியல் தொடர்ச்சியை'உள்வாங்கியே வெளிப்படுகிறது.இஃது பாரதியிலிருந்து தொடர்கிறது.மனித விடுதலையும்,தேசவிடுதலையும் இந்த அழகியலை இயக்குகின்றன.இக்கவிதைகளின் 'அகவடிவம்'சிறப்புப் பெற்று உள்ளடக்கத்தையும்,உருவகத்தையும் பிரிக்கமுடியாது-இரண்டும் பிணைந்து நிற்கும் ஒரு புதுவகை அழகியலைத் ஈழத்துக் கவிதைகளுக்கு இயல்பாக வற்புறுத்தி வெற்றி கொண்டுவிட்டது.அஸ்வகோஸின் பல கவிதைகளுள் இந்தப் பண்பைக் காணலாம்,உணரலாம்.

இஃதுதாம் இவரது சிறப்பு.இந்தச் சிறப்பு ஆளுமையான படைப்பாளிகளால்தாம் பேணப்படுகிறது,உருவாக்கம் கொள்கிறது.அஸ்வகோஸ் இதற்கு நல்ல உதாரணமாகிறார்.

குதறப்படும் மனித இருப்பின் மெய்யான சூழ்நிலையை ,அதன் உண்மைத் தனத்துடன் படைக்கப்படும்போது அவை சிலவேளைகளில் சகல கவிதை மரபுகளையும் மீறிவிடும்.இத்தகைய மீறலின்றி கவிதை பாரிய எதிர்வினையை வாசககர்களிடம் உண்டுபண்ணமுடியாது.கம்பன் அல்லது வள்ளுவன் பாணியில் இன்றைய நம் அவலத்தைப் பாடினால்-எழுதினால் இஃது மிக மிக அற்ப எதிர்வினையையும் செய்யாத அபாயம் உண்டு.
இத் தேவையால்தாம் மீறல்கள் இயல்பாகிறது.அத்தோடு இந்த மீறல்களால்தாம் கவிதைக்குரிய

புதிய வடிவம் தோன்றிக் கொண்டேயிருக்கு.

நவீனக் கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாகிப் போன இன்றைய புலம்பெயர்வுச் சூழலில,; இத்தகைய'உயர் திறன் கவிதைகள்'கவிதை ஜீவனைக் காவிக் கொண்டே சமூக விமர்சனம் செய்வதால,; இஃது உயரிய இலக்கியமாகவும் விரிகிறது.

அஸ்வகோஸின் மொழியைப் புரிந்து கொள்ளும்போது இவ்வுண்மைகள் புரிந்துவிடும்.

ஒருசில கவிதைகள்(செவல்,நீ போனாய்,ஏவாள்,என் வசந்தம் வராமலே போய்விட்டது) அகம் சார்ந்து வெறும் விபரிப்பு என்ற

பச்சோதாபச் சுற்றுக்குள் முடங்கிவிடினும், அஸ்வகோஸ் ரொம்பவும் நிதானமாகவேயுள்ளார், புறநிலை சார்ந்த கவனிப்புகளில்! அவர் வெறும் ஒப்புமைக்குள்ளோ ஓசை நயங்களுக்குள்ளோ மயங்கவில்லை

'மெய்வாழ்வு' இதற்காகவே எழுத்தை நடைபயில விடுகிறார்.இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வெறும் வார்த்தைக் கட்டுக்குள் முடக்கி விளக்கிட வேண்டிய தேவைகள் இல்லை.கவிதைகள் நாம் அன்றாடம் அநுபவிக்கும் வாழ்சூழலை நம் விழிகள்முன் விரித்தக்காட்டி விடுகின்றென.

இவைகளின் எதிர்வினை நம் எல்லோருக்கும் பொதுவான அநுபவமாகிறது.அதாவது சமுதாய அநுபவம்,ஆவேசம்!

ஏன்?

நாம்'மனிதமறுப்புச் செய்யும் நாட்டின்'குடிகள்.போராட்டமே

வாழ்வாய்ப்போன தேசத்தின் குரல்கள் எம் அகத்துள் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கு,போருழைச்சல் நம் அகத்தை

வாட்டி அழுகுரலாக ஒலிக்கிறது.

'மனித அவலங்கள் நினைவில் எழ
மடுமாத கோயிலில்
ஒதுங்கிய மனிதர்களின்
ஜீவத் துடிப்பாய் எழுந்த
கீதங்களில் எனையிழந்தேன்...'

இக்குரல்கள்தாம் எமக்குள் இக்கவிதைகளை வாழ்வாய்,அநுபவமாய் உணரவைக்கிறது.யாவருக்கும் பொதுவான வன்மத்தை தீயாய்-ஜுவாலையாய் ஆத்மாவுக்குள் நிறைத்து வைக்கிறது.

உலகத்தில் சில கவிதைகளுக்கு ரொம்ப ரொம்ப உயர் ஸ்த்தானமுண்டு.பாலஸ்த்தீனக் கவிதைகள்,இலத்தீன் அமெரிக்க-

ஆபிரிக்கக் கவிதைகளுக்கு,இரஷ்சிய-மாவோ சேதுங் கவிதைகளுக்கு

இந்த ஸ்த்தானம் என்றுமுண்டு.இன்றோ 'ஈழத்துக் கவிதைகள்'

என்றிந்த'உயர் திறன்'மிக்க கவிதைகள் அந்த ஸ்த்தானத்தை

நொருக்கிவிடும்.

ஈழத்தின் நவீனக் கவிஞர்களான மகாகவி,நீலாவாணன்,நுஃமான்,சிவசேகரம்,மு.பொ.,

சு.வில்வரெட்னம் நீட்சியாக ஜெயபாலன்,சேரன்,செல்வி,சிவரமணி தாண்டி அஸ்வகோஸ் உயர்கிறார்.இவரது நீண்ட கவிதைகள் இதை நிச்சியம் ஊர்ஜிதப்படுத்தும்.

மில்டனின் 'இழந்த சொர்க்கத்தின்'மகுடத்தை வனத்தின் அழைப்புத் தொகுப்பிலுள்ள 'இருள்'கவிதை உடைத்து நொருக்கி விடுகிறது.இத்தகைய தகர்வை நாளைய வரலாறு சொல்லும்.நம் சிறுசுகள் அதைச் செய்து காட்டுவார்கள் சர்வகலாசாலைக்குள்ளிருந்து?...

சு.வில்வரெத்தினம்,சோலைக்கிளி போன்றோருக்கு மிக மிக நேர்த்தியாக அநுபவமாகிய 'கவிதைஜீவன்' இந்தக் அஸ்வகோசுக்கு ஒரு சில கவிதைகளுள் எப்படி முகிழ்க்கிறது?

பிடுங்கியெறியப்பட்ட தேசத்தின் புதல்வனின் கவிப்பாங்கு அபாரம்தாம்.மரபுக்குள் மடிந்துபோன 'மக்களின் ஆன்மவுணர்வு'

இவ்வகைக் கவிஞர்களால் உன்னதமான வகையில் சமுதாய ஆவேசமாக வெளிவருகிறது.உருதுக் கவிஞன் இக்பால் போலவே இங்கும் கவிஞர்கள் பீறிட்டெழுகிறார்கள்.

அஸ்கோஸின் கவிதைகளை வாசிக்கும்போது,கவிதைகளுக்குள்

நீரோட்டமாக சதா ஊறிக்கொண்டிருக்கும் சமகால வாழ்வியல்

இயக்கப்பாடு நம்மையொரு இக்கட்டான சூழலுக்குள் நகர்த்திச் செல்கிறது.

இது ஒரு அவஸ்த்தை!

கவிதையூடே அநுபவமாகும் வாழ்வு,நம்முடைய மெய்யான வாழ்வு-குருதி சொட்டும் போராட்ட வாழ் சூழலிது.இந்தச் சூழலுக்குள் நகரும் ஈழத்து வாசகர்களுக்கு கவிதையின் பாரம்பரியப் படிமம்,குறியீடு,உத்தி,உள்ளடக்கம்,இறைச்சி இவைகள் பற்றிப்

பேசமுடியாது போகிறது.

இஃதொரு நெருக்கடி.

இந்தக் கவிதைப் போக்கைச் சமுதாயச் சூழலே தீர்மானிக்கின்ற

யதார்த்தப் போக்கால் இக் கவிதைகளுக்கு எந்தப் பூட்டுக்களையும் போடமுடியாது போகிறது.இந்திய சுதந்திரத்தைப் பாடிய பாரதியின் விடுதலைக் கவிதைகளுக்குக்கூட நாம் விமர்சன ரீதியாக சில

இலக்கண

மீறல்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.ஆனால் இன்றைய ஈழத்தின் கவிதைகளுக்கு இதைச் செய்யக்கூடிய சூழ்நிலைகளை

இக் கவிதைகள் விட்டுவைப்பதில்லை.

'என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமைகளைச் சொல்வேன்
சிதழுறும் காயங்கள் பேசும்
மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்.'

கவிஞரே 'காலச் சூழலைப் பிரதிபலிக்கின்ற மெய்மையை'

தன் படைப்பூடே சொல்லி விடுகிறார்.
உண்மைதாம்! மண்ணின் குறிப்பை-மானுடவாழ்வை,தரிசனத்தை,

வரலாற்று ஊற்றைத் தன்னகத்தே புதைத்துக் கவிதை

வாழ்வாகிவிடுகிறது.

'போரதிர்வுகளில் உயிரிழந்து
சிதைவுகளை நெஞ்சில் சுமந்து
வலிகளைத் தாங்க ஏலாது
முறிந்த வாழ்வுடன்
இடம் பெயர்ந்துழலும் அவலம்...'

இது ஒரு சத்தியப் பதிவு.

வாழ்வின்மீது கவிந்த கயமைப் போக்கால் முறிந்து விடுகிறது வாழ்வு.

இனி ஒவ்வொரு திக்குத்திக்காய் வாழ்வின் பாதுகாப்புக்காக-

உயிர் வாழ்தலை அச்சமின்றிப் போக்க இடம்பெயர்ந்துழலும் அவலமாக வாழ்வு விரிகிறது.வாழ்வை அவலம் காவுகொள்கிறது.

கவிஞன் ஆவேசமடைகிறான்,கோபக் கனலோடு உரக்கக் குரலெடுத்து, அவலத்தைச் செய்யும் அரசியல் போக்கை-அதை நகர்த்திச் செல்லும்

வர்க்க மனிதர்களின் முகத்தில் தன் வார்த்தைகளால் ஓங்கியடிக்கிறான் இந்த அஸ்வகோஸ்.

'வாவிகளில் பிணமாய்க் கரைந்து
போகையில்
திறந்த வெளியரங்குகளில்
மலரேந்தித் துதித்தவர்
புதை குழிகளில் ஓய்ந்திருந்ததை
துயில் எழுப்பி
ஊர்த்திகளில்
வேட்டைக்கு அனுப்பியவர்
நீவீர்...'

மனித வரலாறு பூராகவும் கவிஞர்களில் பலர் சமுதாய நீதிமான்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் சமூகச் சீரழிவுகளைச் செய்யும்

நிறுவனங்களை நியாயக் கூண்டில் ஏற்றி,தங்கள்

சத்திய வாக்கால் சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.
சிலம்பு சொல்லும் கதை தெரியும் தானே?
மதுரையையே எரித்தான் இளங்கோ முனிவன்.

இங்கே,அஸ்வகோஸ் தன் கைகளை நீட்டி கயவர்களைச் சுட்டி,

மக்கள் முன் இழுத்து வருகிறான் தண்டனைக்காக.ஏனெனில்,

மக்கள்தாம் வரலாற்றைப் படைப்பவர்கள்.

சமூக விரோதிகளை மக்கள் முன் நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

'குரூரத்தை மறக்க இயலவில்லை
போய்ப் பார்
போர் இளமையை
உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது.'

மானுட விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கத்தக்க நிலைகளாக மாறும்போது, சமூக அக்கறை என்பது ஒவ்வொரு 'உணர்வுள்ள' மானுட ஜீவனுக்குள்ளும் பிரதிபலிக்கும்.ஆனால் விடுதலைவேண்டி அதற்காகப் பாடுபட்ட சமூகத்திலுள்ள ஒவ்வொரு விடுதலைப்பங்காளருக்கும்

நேரடியாக அநுபவமாவது எவ்வளவோ! அவை ஒரு வரலாற்றின்

பதிவுகளாக மாறுவதற்கு முன், மானுட ஆத்மாவுக்குள் கேள்வியாக விரிந்து,தன்னையே கேள்விக்குட்படுத்தி'சுயவிமர்சனம்' செய்வது

இயல்பாகி விடும்.

'எதுவரை உண்மையினை அவர்கள்
கொண்டு சென்றார்கள்
அதுவரை நான் வந்தேன்
எங்கு வைத்துக் கொலை செய்தார்கள்
நான் அங்கிருந்தேன்
என்னால் முடியாத பேரழிவினை
ஊழியில் இயற்ற
என்னையங்கு தயார்ப்படுத்தினார்கள்'

இங்கு மனித இருத்தல் மீளவும் மறு ஆய்வுக்குள்ளாகும்.அஃது புதிய வீச்சோடு மெருகேற்றப்பட்டு,நியாயமான உரிமையாக கிளைபரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும்.

'கணக்குகள்
மீளவும் தீர்க்கப்படுகையில்
நான் அஞ்சுகிறேன்...!!'

என்று ஒவ்வொருவரையும் நோக வைக்கும்.

'பொது மானுட விழுமிய நோக்கை'அஃது இயல்பாக ஏற்படுத்தி விடும்.அப்போது தன்னினம்,தன் மொழி,தன் சுயம்மென்பது சுருங்கி சர்வதேசிகளாக மனிதப் பொதுமைக்காக:

'நியாயம் கூற இயலாக் கண்ணீருடன்
விரட்டப்பட்ட மக்களிடையே
விடுபட்டு உதிரிகளாய்
ஒன்றிப் போன ரசூலின் கதை...' சொல்ல எத்தனிப்புகள் தோன்றும்!,தோன்றிவிடுகிறது. இதுதாம் நாம் யாழிலிருந்து

விரட்டிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு ஆற்றும்,ஒத்தும் ஒளடதம்!

இஃதுதாம் மனிதப் பண்பு.அஸ்வகோஸிடம் இந்தப் பண்பு மிகுதியாகப் படர்வதை அவர் படைப்புகளில் நாம் அறியலாம்,உணரலாம்.

'முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனுக்குத் திருப்தியில்லை
அழுவானென்றும் நம்பமுடியவில்லை...' என்றும்,

'அவன் அறிவான்
கண்முன் நடந்ததைவிட
காணாமற்போனது
எதை விட்டுச் செல்லுமென்பதை...'

இந்த வரிகளோடு மிகப் பெரிய வெற்றிடமாக ஈழமண் மாறிவிடுகிறது,

நம் கண் முன்!யாருமே இருப்பதாக உணர்வு ஏற்குதில்லை.எல்லோருமே அழிந்துபோய் வெறும் சுடுகாடாய் கண்முன் 'தமிழீழம்' விரியும்போது

கவிஞன் ஆவேசம்கொண்டு:

'மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத் தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் வலியை
இனியும் தீர்மானிக்க வேண்டாம்...' என்று ஓங்கி உரைக்கிறான்.

இப்போது இன்னுமதிகமாக சுதந்திர தாகமும்,மானுட விழுமியமும் வேர் பரப்பி விழுதெறிகிறது.

இங்கே அஸ்வகோஸ் எனும் மகாப் பெரிய மானுட நேயன்

உண்மையான வாழ்வின் அர்த்தத்தை இலக்காகக் கொண்டு,

நம் முன் உயர்ந்து நிற்கிறான்!

இவன்தாம் ஒரு கட்டத்தில் தன் மைந்தனையே விடுதலைக்காக

பலியாகக் கொடுத்துவிட்டு,மகனின் உயிரற்ற உடலுக்குப் பாதுகாப்பு அளிப்பான்,

ஈக்கள் மொய்க்காது-காகம்,கழுகுகள் கொத்தாதிருக்கும்படி கவனிப்பான்!

அப்போது அவன் உள்ளத்தில் கேள்விகள் முளைவிட்டு வேர்பரப்பும்:

'அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?'

இஃதுதாம், இன்றுவரை நம் எல்லோர் முன்னும் உள்ள கேள்வியும்.

* * *

(வனத்தின் அழைப்பு(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்:அஸ்வகோஸ்

வெளியீடு:நிகரி,21,மினேரிகம பிளேஸ்,கல்கிசை ,இலங்கை.)

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால் ஜேர்மனி.










Saturday, October 22, 2005

'ம்'-நாவல் விமர்சனம்!

சோபா சக்தி: 'ம்'


அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்!


'............', ம்.... ஆமா,ஓம்-ஓம்! ம்.....


இது? (1)


கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்!இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல்'ம்'சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி,அந்த உளவிலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகர்கள்- என்னிடத்தில் அந்தக் கற்பனை கிடையாது.ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன்.எனது வாழ்வும்,சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்துக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.


இந்நாவல் குறித்தான மிதிப்பீடு,விமர்சனம் என்பதற்கப்பால்-எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்துகொள்வதற்கான நகர்வாகவும்,இந்த நாவலை- 'ம்' என்ற,இந்த நாவலை,மிக உன்னத்தோடு உருவகப்படுத்திக்கொள்வதற்கு ஒருவர் முனைவரென்றால்,இந்த உருவகப்படுத்தலோடு'ம்' நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார்.அப்போ இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அநுபவங்களைச் சுட்டிகளாகக் குறியீடாக விரித்துக் கொள்கின்றனர்.மனித வாழ்வு,அநுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்ஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது.இந்தப்பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளையுடையது.இது மனிதப் படைப்பாளுமையை வேண்டி அதனூடாக நடந்து செல்கின்றபோது,மிக ஆரோக்கியமான மனித,சமுதாயத்தின் வளர்ச்சியையும்-பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது.இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகலானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து,அது ஏதோவொரு கோசத்துக்காக அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக-குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமைமிக்கவர்களுக்காக,ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக-அவர்களது இருப்புக்காக,எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொல்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிகவுண்மையாக,யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது.


இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக்கொடுமையை,துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை,சமூகச்சிதறலை-சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக,நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை,அதன் நிசத் தன்மையோடு ,குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை,தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை,அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல்'ம்'இனது மனிதக் கோசமாகவும் ,கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.


இந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது!'............'கலைத்துவம் என்பதன் பொருள்?... ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்தக்கொண்டால்,நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும்.இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும்.ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான 'விவாதமாக-கருத்தாடலாக-பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல்,அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு(சமூகமாற்றுக்கு)விவாதத்தை நகர்த்தும்.என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்துமுதல் வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல்,அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ-அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான'பண்பு' மாற்றத்தைக் கோரி நிற்கும்!நாமெதை, நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ-அது மற்றவர்களுக்கு மிக,மிக முக்கியமாக விரிவது,வெறும் அறிவு ,உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடையமாகக் கொள்ள முடியாது.இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும்.இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு கோணத்தில் இந்த நாவலை அணுகப் போகிறோம்.

இந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியலாள ஆய்வாளர்களால்,இயக்க-தேசிவாத மாயைக்குட்பட்ட வாசகர்களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ,இலக்கிய விஞ்ஞானத் தன்மையைப் புரியாத கையாலாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே.இங்ஙனம் நமது அரசியல் கையாலாகத்தனத்தை மூடி மறைக்க முனையும் நாம் இவ் வலுப்பெற்ற உணர்வு வெளியைத்தாண்ட முனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப் புரிதல் அவசியம்.

(2)

இதுவொரு வதையைத் தரும் காலம்.மனிதர்களின் வாழ்வானது புனைவுகளுக்குள் சிக்குண்டு,புனைவுகளையே வாழ்வாய் வாழ்ந்து துய்க்கும் நிலையாக இன்றைய 21ஆம் நூற்றாண்டை உலகம் தயாரித்தாகிவிட்டது.இந்தப் பொய்யுலகானது மனித உறவுகளைத் தனது பெரு வாத்தகப் பயன்பாட்டுக்கான சங்கதிகளாக்கியபின் எந்தவொரு படைப்புச் சூழலும் மனதர்களை நோக்கிய-மையப்படுத்திய முறைமைகளில் மையங் கொள்ளாது, பொருட் குவிப்பின் வியூகத்துக்கானதாகவே உருவாகிறது.இந்தப் புள்ளியல்தாம் மனிதம் அழிகிறது!இங்கே மானிடர்களின் தேவைகளானது அதிகார மையங்களுக்குக் கட்டுப்படும்-அவற்றைச் செயல் முறைமைகளின் உளப்பூர்வமாக உள்வாங்கப்படும் நெறியாக உருவகப்படுத்தப் படுகிறது.இது சர்வ வல்லமையுள்ள கருத்தியலாக நிறுவப்பட்டுள்ளது.இந்தவொரு மனித்துவ முடக்கமானது இதுவரை ஆரோக்கியமானதாக நம்ப வைக்கப்படுகிறது.இன்றைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனைகளும் சரி அல்லது மனித்துவத்துக்கான யஅநௌவல ஐவெநசயெவழையெட கூவிக்கொள்ளும்-எழுதிக்கொள்ளும் குறிப்புக்களும் சரி மனிதவிகாரங்களையின்னும் ஆழமாக்குகின்றன.இவற்றுக்கப்பால் எந்தக் கருத்தியலையும் இன்றைய ஆளும் வர்க்கங்கள் விட்டுவைக்கவில்லை.புனைவுக்கும் நிகழ்வுக்குமான தர்க்கவாத அறிவானது சமூகத்தைக் கருத்தியல் தளத்திலிருந்து தாக்குகிறது.அதன் உள்வயப்பட்ட அறிவுவாத ஐரோப்பிய எதிர்ப்பியக்கக் கூறுகள்கூட தமதுவரையில் சில ஆத்மீகத் தேவைகளைக் கோரிக்கையோடும்,கொடிபிடித்தலுடன் பெறத் துடிக்கின்ற இந்தச் சூழலின் ஒரு முனையில் 'ம்' நாவலோடு சோபா சக்தி இந்த உலகத்தை எதிர்கொள்ள முனைகிறார்.


ஈழத்தின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.இதன் முதுகினிலிருந்துகொண்டு மனிதவதைகள் குறித்து ஒரு சராசரி மனிதன் தன் அகம் திறந்து பேசுகிறான்.இவனிடம் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவையொருவர் தேடுவாரானால் தேடுபவரின் கோட்பாட்டறிவே சந்தேகமானது.இங்கு படைப்பென்பது அராஜகத்துக்கெதிரானவொரு போர்ப்பரணியைக் கட்டி நிற்க்கவில்லை.மாறாக அராஜகத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையைச் சொல்கிறது.தான் உயிர்வாழ்வதற்காகத் தன் நண்பனை,தன் எதிரியை,உறவுகளை அராஜகத்துக்குக் காட்டிக் கொடுக்கும் உயிர்த்திருக்க முனையும் ஒருவனும்,எந்தத் தலையுருண்டாலென்ன தனது நலத்துக்காக அனைத்தையும் வளைத்துப்போட முனையும் தந்தையும் ,தமிழ் மக்களின் வாழ்வில் தனிநாடொன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிட்டுமென்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடமைகளைமட்டுமல்ல சரீரப் பங்களிப்புக் கூடச்செய்யும் பேராற்றலை ஞானசீலியாக் காணுவதும்-அதற்காகச் சிறை வாழ்வு, பாலியல் வதை,சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூக சீவியத்தை மக்கள் எதிர்கொண்டேயாகவேண்டிய அரசியற் பொருளியற் சூழலையுருவாக்கிய கட்சி அரசியலையும் அதன் பின்னாலுள்ள வர்க்க அரசியலையும்,நலனையும் இதனூடாகத் தோன்றிய ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது பல்வேறுபட்ட அரச-ஆதிக்க ஜந்திரகளாகி மக்களைக் கொல்லும் இழி நிலையைச் சொல்லும் ஒரு பிரதியாகிறது 'ம்'.இது மக்களின் கையலாக மொழி,மக்களின் பெரு விருப்பான உயிர்த்திருத்தலே இல்லாது ஒழிக்கப்பட்டவொரு சூழலில் மக்கள் அதற்காக இரந்து நிற்கும் இன்றைய அவலத்தைச் சொல்வதற்கானவொரு முனைப்பில் நிகழ்வுகளைப் புனைவதானது தன்னளவில் சமூகத்தின் வழிப்புணர்வோடு மேலெழும் சமுதாய ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.


மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இது இஸ்லாமியர்களாவிருந்தால் தமிழருக்குத் தொப்பி பிரட்டிகளாகவும்-தமிழர்களாகவிருந்தால் சிங்களருக்கு பறத்தமிழன் என்பதுமாய் இனத்துவேசிப்பு கொலுவாச்சி இனங்களை முட்டிமோத வைக்கும் நிலவுடமைக் கருத்துருவாக்கமாக விரிந்துகிடக்கிறது.


மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.இதைச் சோபா சக்தி மிகத் தெளிவாகத் தனது நாவலில் பாத்திரங்களின் வெளிகளில் நிறுவ முனைகிறார்.பக்கிரிக்கும்,நேசகுமாருக்குமான ஒவ்வொரு உரையாடலும் இதைச் சுட்டிக்கொள்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதுவே பாரிய மனித வதைகளைக் கற்பனைக்கெட்டாத வன் கொடுமைகளுடாய்ச் செய்து முடிக்கிறது.இது இரண்டாவது மகாயுத்தத்தில் கிட்லரால் செய்யப்பட்டபோக்கோடு சம்பந்தப்பட்டது.இங்கு எல்லோருமே சிறையதிகாரி உடுகம் பொல போலவே வதைகளைச் செய்கிறார்கள் .இவர்களது பார்வையில் கட்சியமைப்பு-தாம் விரும்பும்,மதிக்கும் தலைவர்-தலைமைக்காக-விசுவாசத்துக்காக எந்தக் கொலைகளையும்,எதன்பொருட்டும் செய்யத் தாயர்படுத்தப் பட்டுள்ளார்கள்.இங்கு மனிதம் தரையில் குற்றுயுராய்க் கிடக்கிறது.'ம்' அதைப் பாரிய சோகத்தோடு சொல்ல முனைகிறது.இதுதாம் இன்றைய இடர்மிகு நமது மொழியாக சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கீழ் நிலவுகிறது.இதையெந்த விடுதலை,உரிமைக் கோசத்தாலும் மறைத்துவிடத் துடிக்கும் தமிழ்த் தரகு முதலாளியம் தன்னைக் கொலைக்காரப் படையாக விருத்திக்கிட்டுச் செல்கிறது.இது தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயகவுரிமைகளையும் தனது கையிலெடுத்து வைத்திருக்கிறது.மக்களின் அன்றாட சமூக இயக்கத்தையே அது கட்டுப்படுத்துகின்ற வல்லமையை ஆயுதத்துக்கூடாக நிறுவியுள்ளது.இங்கு பெயரளவிலான பூர்ச்சுவா ஜனநாயத் தன்மைகூட இல்லாதொழிக்கப் பட்டு அராஜகத்தை அவசியமான போராட்ட வியூகமாக் கருத்தியற்றளத்தில் பரப்புரையாக்கப்படுகிறது.இதைத் தகர்க்கும் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுப்பதே சோபா சக்தியின் படைப்பாளுமையாகவும் இருக்கலாம்!


வெலிக்கடைச்சிறையில் வருத்தப்பட்டுக் கொல்லப்பட்டவுயிர்;களும் அதன்பின்பு தாய்மண்ணிலேயே குதறப்படும் உயிர்களும் தமிழ்பேசுவதால் மட்டுமே கொல்லப்படுவதாக் கருதினால் அது தப்பானது.இங்கு ஒவ்வொரு குழுவினது நலன்களும் முட்டிமோதிக்கொள்கிறது.இந்த முரண்பாடுதாம் தரகு முதலாளியத்துக்கும்,நிலவுடமைச்சமுதாயத்துக்குமான முரண்பாடாக வெளிப்படுகிறது.சிங்களச் சமுதாயமானது நிலவுடமைச் சமுதாயக்கட்டுப்கோப்பைப் பேணமுனைவதும்,தமிழ்ச் சமுதாயமானது தரகு முதலாளியமாகத் தன்னைத் தகவமைத்துக் கப்பல் கட்டுவதும்,கடல்கடந்து வியாபாரஞ் செய்வதும் இலங்கை மக்களினங்களில் மிகப் பெரும் முரண்பாடாகத் தோற்றமுறுகிறது.இதுவே இனப்படுகொலைகளைச் செய்வதும் அதனுடாகத் தமிழ், மக்களை வருத்தும் ஆயுதக்குழுக்களாகத் தமிழ்ச் சமூகத்தில் வேறொரு வகையில் தோற்றமுறுகிறது!


மனிதர்களைத் தினமும் வருத்துவதையும்,அவர்களின் மனச் சிதைப்புகளையும்,தீராத சோகத்தையும்,வேதனைகளையும்,வடுக்களையும் சொல்வதற்காகச் சோபா சக்தி எடுத்துக்கொண்ட சொல்நெறி மொழியானது மிகவும் பின் தங்கப்பட்டவொரு இனத்தின் மொழி.அது நிகழ்வுக்கும் ,புனைவுக்குமான நிஷத்தன்மைகளைத் தர்கத்துக்குள் இழந்து போகும் ஒரு மொழியாக மாறாலாம்.எனினும் இந்த நெட்டூரங்கள் அடித்துச் செல்ல முடியாதுவுண்மைகள்.இவை குறித்தான சமூகப் பார்வையான இன்னொரு மொழியில் பேசப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இந்தச் சமூகத்துள் இதுவரை வெளிவராதிருக்கும் ஒரு சூழலில் இந்த நாவலது மொழி அவசித்தோடான அவதாரமாகவே உருப்பெறுகிறது.இதைமீறியவொரு எந்தக் கொம்பு முளைத்த மொழியும்,படைப்பும் தமிழ்ச் சூழலில் முகிழ்க முடியாது.இது அந்தச் சமூதாயத்தில் விருத்தியிலிருந்தே எழுகிறது.இங்கு பாத்திரங்கள் சுதந்திரமாக உலாவருவதற்காகப் பொய்யுருவாகவில்லை.நிலவுகின்ற மகாக் கொடுமையான வாழ்சூழலிருந்தே பாத்திரங்கள் நம்முன் விரிகிறர்hகள்.அவர்கள் நம்மோடு தமது வாழ்வின் கையாலாக சமூக இருப்பைத் தமது சொந்த முகங்களோடு சொல்கிறார்கள்.இங்கு ஜேர்மனியப் படைப்பாளி குன்ரர் கிராஸ் அவர்களின் சமீபத்து நாவலான ஐஅ முசநடிளபயபெ நல்லதொரு உதாரணமாகக் கொள்ளலாம்.உலகமாகயுத்தத்தால் அள்ளுண்டுபோன பாசிச்சூழலுக்கு முகங் கொடுக்க முடியாத மக்கள் உயிர்வாழப் போராடும் கப்பல் பயணமானது கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட வரலாறை அதன் மொழியில் சொல்லும் அந்தப் படைப்பானது 'ம்' நாவல் பேசும் மொழியுடன் நெருங்கிவருகிறது.
»Warum erst jetzt?« sagte jemand, der nicht ich bin. Weil Mutter mir immer wieder ... Weil ich wie damals, als der Schrei überm Wasser lag, schreien wollte, aber nicht konnte ... Weil die Wahrheit kaum mehr als drei Zeilen ... Weil jetzt erst ...Noch haben die Wörter Schwierigkeiten mit mir. -Gueter Grass.


(3)

கொடுமைகளைச் சுமக்கும் மனிதர்கள் தமது வலியை,வேதேனையைச் சொல்லத்தக்க நேரம் சில வேளைகளில் பின்தள்ளிப் போவதும் அந்த வலியைச் சிலவேளை அடுத்த தலைமுறைதாம் பேசும் நிலையும் வருவதைக் காணுவதற்கு திரு.குன்ரர் கிராசினது கூற்றுச் சரியாகவிருக்கிறது.ஒரு தலைமுறை மிக்கொடூரமாக யுத்தஞ்செய்து தனது இனத்தையே அழிக்கிறது.அதனால் அந்த இனத்து மக்கள் கடல் கடந்து உயிர் தப்ப முனைகையிலும் அழிவு அவர்கள் தலையில் குண்டுகளாக இறங்குகிறது!ஓ ஆண்டவனே!நம் தலைவதியைப் பார்த்தியா?இப்படிக் கத்திய அந்த வலி, மரணத்தையும் கொடூரமான மொழியில் சொல்ல வக்கற்றுக் கடலோடு அமிழ்ந்துபோகிறு.'இந்த வலி கிராசிடம் தோற்றுவித்த மர்மமானவுணர்வானது தாய்மையின் உணர்வுபோன்று மீளவும்,மீளவும்'நீரின் மீது எழுந்த கூக்குரலை-அன்றெழுந்த மரணவோலம்,அன்று ஓலமிடமுடியாத... உண்மையென்பதை மூன்று வரிகளுக்குள் அடக்க முடியாத சிரமத்ததை...வார்த்தைகளின் இயலாமையை உணரும் அவர் ,மனித அவலத்தை இன்று சொல்லும்போது-கிராசினால் வலியோடு அவ்வோலம் படைப்புக்குள் வந்து சேரும்போது- நமது நாளாந்த இந்த ஓலத்தை,மரணவோலத்தை 'ம்'க்குள் சோபா சக்தி பேசுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.இது அக்கறைக்காகவோ அல்லது சமூகத்தைக் காத்துவரும் மேய்ப்பனர்களாகவோ சொல்லப்படவில்லை.மக்களின் அதிகாரமற்ற,எந்த வலுவுமற்ற பலவீனத்தை அதன் மொழியிலேயே பேசுவதுதாம்'ம்'!


'ஆனையிறகிலும் பனாக்கொடையிலும் பெரியவன்தாம் அடிப்பான்,இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான்.இதைதாம் சுவாமி 'அதிகாரத்தைப் பரவலாக்குவது!'என்று சொல்வது.இப்படிப் பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடிவிட்டார்.'-பக்கம் 154-'ம்'


'மாதா(ராதா)தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப் போனான்.பக்கிரி'பக்கிங் வெப்பொன்ஸ்' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலைத் தன் கையால் பற்றி மெல்லப் புறத்தே தள்ளிவிட்டார்.எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்து அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்.'பக்கம்:158-'ம்'


என்னயிது? வெலிக்கடையில் நம்மைக் கொன்றொழித்தார்கள்.கண்களைத் தோண்டி ஊரவிட்டார்கள்,கைகளைத் தறித்து எறிந்தார்கள்.வயிற்றைக் கிழித்துக் குடலால் மாலை அணிவித்தார்கள்.இவர்கள் சிங்கள இனவெறியர்.ஆண்டாண்டு நம்மைக் கொல்வதால்தாம் நாம் உயிர்திருப்பதற்காகப் போராடப் போனோம்.ஆனால் சிங்கள இனவாதிகளைப் போலத்தானே தமிழனும் காரியமாற்றுகிறான்.பக்கிரியையும் மற்றவர்களையும் நாம் வெலிக்கடையில் பறி கொடுக்கவில்லை.மாறாகத் தாயகத்தின் மடியில்-தமிழிச்சியின் மடியில் பறிகொடுத்தோம்.



இது என்ன?,இதன் நோக்கமென்ன??


சிங்கள அரசின் காட்டுமிராண்டிப் படுகொலைகளால் சிதைவுற்ற அதே தமிழ் உடல்கள்-தமிழ் அராஜகத்தால் அதற்குக் கொஞ்சமும் குiறாயாது அதே பாணியில் அழிந்தன,சிதைந்தன!அப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை.அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது.அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்!,எதன் பெயராலும்.


இங்கு,மனித இருப்புக்கும் இன்றைய நவீன பல்தேசியக் கம்பனிகளின் அரசியலுக்குமுள்ள பல்வேறு வகையான கண்ணிகளையிந்த 'ம்' நாவல் ஆராய்கிறது. 71 இல் ஜே.வி.பி. சிறையிலிருந்து மாவோவினைப் படித்துக் கொண்டிருக்க-மாவோவின் ஆயுதங்கள் வெளியில் சிறைக்காவலாளிகளின் கைகளில் இருக்கிறது.அதிகாரம் எந்தத் திசையிலிருந்தாலும் அது தனது வியாபகமான ஆற்றலை இந்தப் பூமிப்பந்தின் அனைத்துப் பாகத்திலும் படரவிட்டுள்ளது.அது உடுகம் பொலயாக,மாதா(ராதா) ,ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்(ஞானப்பிரகாசம்)போன்று உலகெல்லாம் விரிந்து கிடக்கிறது.இங்கே மக்களின் மொழி'ம்' ஆகிவிடுகிறது.இது ஒருவகையில் சர்வதேச மொழியும்கூட.


உடுகம் பொல:சிங்கள இனவாத சிறையதிகாரி!


மாதா:தமிழீழ விடுதலைப் போராளி!


ஜெயக்குமார்:சிங்கள அரசின் தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!



இவர்களுக்கிடையில் வித்தியாசம் மனிதவுணர்வுகளுள்கூட இல்லை!,இவர்கள் அதிகாரத்தைச் சுவைக்கும் ஆளும் வர்க்கத்திக் அடிவருடியள்.



தனி மனிதனை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்.இவர்களிடமிருந்து இந்த மனிதனை எங்ஙனம் காத்து விடுவிப்பது?இதுதாம் 'ம்' நாவலூடாக வியாபித்திருக்கும் பிரச்சனை.இதை நோக்கமாகவும்-கருவாகவும் எடுத்துக்கொண்டு இவ் நாவல் முன்வைக்கும்,நம் விழிகள் முன் விரியவிடும் கதை மாந்தர்கள் அனைவருமே நம்மிலொருவராக எழுகிறார்.இந்த எழுச்சி நம் உணர்வில் தெறித்து உதிர்ந்து விடாது நம் மன வெளியெங்கும் அலையலையாய் எண்ணங்களை உருவாக்கி நம்மில் கலக்கிறது.நாம் நமது இயலாமையைக் கண்டு அஞ்சுகிறோம்.அஞ்சுவதூடாக நமது கையறு நிலையை உணர்வு பூர்வமாக உள்வாங்கி ஆவேசமடைவதில் இந்த நிலை மிகப் பெரும் மனித எழிச்சியைத் தோற்றுவிக்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் எவ்வளவு நாணயத்தோடு நம்மோடு உறவாடுகிறதோ அதே உண்மையோடு 'ம்' நாவல் தன் மொழியை எங்களோடு பகிர்கிறது.இதை நமது -ஈழமக்களின் அநுப வெளிதாண்டிய அநுபவத்தால் ஒருபோதும் புரியமுடியாத சிக்கலை நாம் அறிகிறோம்.


நாவலின் இறுதிப் பக்கத்தில் ஒரு கிளவன் ஒரு பிரேதத்தைக்(தமிழீழக்கோசம்?;) கண்டெடுத்து,அதைக் குழந்தைகளுக்கு(இளைஞர்களுக்கு?) விளையாட்டுக் காட்டுகிறான்.பின்பு தான் வளர்க்கும் மிருகங்களுக்குப்(தம்பிமார்களுக்கு?) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான்.பிரேதம்(ஈழம்) இப்போது சிறுக்கிறது,தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான்(யாருதாம் இந்தக் கிழவன்? செல்வநாயகம்?).பின்பு கிழவன் மது கடையில் இருக்கிறான்... குதிரை வண்டி,நோஞ்சான் குதிரை, மிகப்பெரும் பொதி...(பொதியைப் புரிகிறோமோ?) குதிரைக்காகக்(இது எதன் குறியீடு?கூட்டணி??) கிழவன் அழுகிறான்.குதிரையின் எஜமானிடம்(இந்தியா, இலங்கை அரசுகள்) குதிரைக்காக அடிவாங்கி மனம் பிறழ்கிறது கிழவனுக்கு.



இந்த நாவல் முன்வைத்திருக்கும் 'மனித அவலம்' அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம்.இதுவே முழுமையாகிவிடாது.இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது.'
ம்' எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும்,படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது.
இதை விளங்கிக்கொள்வதும் அதனூடாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும்.இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை.மாறாகத் தன் ஆயுதமானது 'அவலத்தின்'; உட்சுற்றில் நிகழும்,உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது.இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான்.நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ-அதிகாரமோ இங்கு கோலாச்சாது,மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது! இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா?இதை வரலாறே தீர்மானிக்கும்!அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:



(நிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தேடுதல்...பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் அதன் பின் தன்னையே காரணமாக்கம் நேசகுமாரன்.இங்கு இந்த நாவல் , செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில் நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை-அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல முடியாதென்கிறது.)


ஆம்!ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல முடியும்?ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,
துரோகத்தையும் தமிழீழ மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும்?அவளின் மடியில் தவழ்ந்து அவளையே 'கற்பழித்துக்'கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக் காரணமாகிறோம்.
நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான்,அவனைக் கொண்டுபோய்ச் சாத்துகிற 'சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங்' எப்போது இந்தக் கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது?


ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி.
21.10.2005

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...