Sunday, March 13, 2011

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

-சில குறிப்புகள்.

பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை!

அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து இன்றைய ஜப்பானது அழிவுகனை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தரும் விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.
ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் இன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசுகின்றன.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் எல்லையை எமக்குப்படும்பிடித்துக்காட்டுகிறது.


ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளைச் செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.

"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே,அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிடும்.

அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒருபுறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனிதவிரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.

இன்று, ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன.இதிலிருந்தும்,இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்து தமது அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.



மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.

ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லலவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய்க் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.கதிரியக்க மாற்றத்தின் பின்னான சூழலே அதிகமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பலவருடத்துக்குப் பாடாய்ப்படுத்தப்போகிறது அப்பிரதேச மக்களை.அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்:

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.


1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.



அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.


இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.


இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.



இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?


எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:


நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?


இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?


எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?


சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?


"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?


இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!


இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?




அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!


எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.


இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!


யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.


இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).


என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.


அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.


200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்


இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

13.03.2011

Tuesday, March 08, 2011

உரையூக்கம்

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த-அடையும் எந்தப் பெறுமானமும் எல்லாவகைப் புரிதற்ப்பாட்டுக்கும் இடையில் சிக்குண்டுபோன எவரையும் இதுவரை காத்துக்கொள்ளவில்லை!எனக்காகவன்றி எமக்கான"விடுதலை"என்று அறைகூவிச் செத்தவர்கள் செத்தவர்களே.செருக்கும்,தார்ப்பாரும், உள் நோக்கமும் கொண்ட பொருள்சார் உலகத்துள் ஏதோவொரு புலப்பாடு பல புள்ளிகளை அழித்தே இயக்குமுறுகிறது.இது சொல்வதற்கும்,உரையாடலுக்கும் அப்பாலுள்ள இயக்கத்துள் மலினப்படுத்தும் சுதந்திரமென்பது அர்த்தமிழந்த மனித இருத்தலுக்கொப்பானது.புரட்சிப்பயனெனப் பகரப்படும் எல்லா நியாவாதமும் நிறுவனப்பட்டியங்கும் மூலதன வியூகத்துக்கு முட்டுக்கொடுத்தவை என்பதில் எனக்கான தெரிவு மேலுஞ் சிலவற்றை நோக்கியதானது.

அ: பௌதிகவுலகமும்,உணர் அறிபுலமும்

ஆ: புறவுலகப் பருப்பொருளும் ,அந்நியப்பாடும்

இ: இடையுறாத காலக் குறுக்கமும்,நித்தியமும்

என்னை அச்சத்துக்குள்ளாக்குபவை.

என்னைக் காலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கையோடு, குறுகக்கப்படும் வெளியில் மதில்கள் எழும்புகின்றன.எனது கால்களுக்குக் கீழே வளைந்து நெளியும் காலம் இடமின்றித் தவித்தோட முனைகிறது.பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகளை இழந்து வருகிறேன்.



பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,மக்களது "உரிமை"என்ற அடைமொழிக்குட்பட்ட எதிரெதிர் கொல்வதற்கான நியாயம்,"ஜனநாயம்-புரட்சி,விடுதலை"எனப் பரப்பப்படுவதில் முதன்மைப்படுத்தப்படும் நலன்களானது மீளவும் மனிதக் கொலைகளுக்கு வழிவகுக்கும் பொருத்தப்பாடுகளையே உறுதிப்படுத்தும்போது பௌதிகவுலகம்என்பதன் சாரம் என்ன?

எழுதிவைத்து உரைக்கப்படும் அனைத்துமே ஒவ்வொரு கட்டத்துக்குப் பின்னும் திருத்தப்பட்ட நிலைமைக்கொப்பான தெரிவுகளை எங்கிருந்து பெறுவதென்பதன் சுய கேள்விக்குப் பின்பான உண்மையேற்பு-உணர்வு பெறுதல் என்பதிலிருந்து என்னை விடுவித்துவருவதே எனக்கான விடுதலையெனப் பகரமுடியாதபடி என்னைச் சுற்றிய மதில்கள் பெருத்த சந்தேகங்களை கருத்தியற்பரப்புள் புதைத்து வைத்துக்கொண்ட நிலையில், நான் செத்தே போக விரும்புவதில்"சாவு"உனது உரிமையில்லையென மூன்றாவது கண்ணுரைக்கிறது!

பௌதிகவுலகத்துக்கு மூலந்தேடும் பொழுதிலிருந்து எடுக்கப்பட்ட வடிவம் சுருங்கிக்கொண்டே செல்கிறது.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு ,சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது


பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று போட்டும் அதையே அவசியப்பாடனதும், சரியானதுமெனச் சொல்வதிலுள்ள சட்ட-நியாயந்தாம் இன்றைய உரையாடலான வெகுஜன வெளியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. :-(

ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.11

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...