Thursday, February 15, 2024

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

 // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!)


அரங்கனார் சொன்ன மேற்கோள்

Die Welt ist viel zu gefährlich, um darin zu leben – nicht wegen der Menschen, die Böses tun, sondern wegen der Menschen, die daneben stehen und sie gewähren lassen


The world is far too dangerous to live in - not because of the people who do evil, but because of the people who stand by and let them 


அரங்கனாரின் மொழிபெயர்ப்பு:

 “ இவ்வுலகானது வாழவே முடியாத அதிபயங்கரமானது . இந்நிலை தீயவர்களாலோ அன்றி, ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல . மாறாக , இத்தகைய கொடியவர்களுக்கு உடந்தையாக இருந்தபடி அவர்களின் அட்டகாசத்தை அநுமதித்து , அங்கீகரித்துவிடுபவர்களாலேயே இவ்வுலகம் ஆபத்தானதாகின்றது “. -


இவ்வுலகானது வாழவே முடியாத அளவுக்கு பேரளவும் தீயது (ஆபத்தானது, viel zu gefährlich). இந்நிலை தீயது செய்பவர்களால்  (ஏற்படுவது) அல்ல ( nicht wegen der Menschen, die Böses tun), மாறாக தீயவை செய்பவர்களுக்கு துணையாக உடன் நிற்பவர்களாலும் (sondern wegen der Menschen, die daneben stehen ) அவர்கள் (தீயவர்கள்) தீமைகள் செய்ய விடுவதாலுமே.


(அரங்கனார் Sri Rangan Vijayaratnam மிகச்சிறந்த இடாய்ச்சு மொழியறிஞர். நானோ வெறும் கற்றுக்குட்டி. ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பில்  " ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல" என்னும் கூற்று எங்கு வருகின்றது என்று தெரியவில்லை. மேலும் 

 sie gewähren lassen என்பது தீயதைச் செய்ய விடுதல்  (தடுக்காமல், வாளவிருந்து செய்ய விடுதல்) என்றுதானே பொருள் தரும் அல்லவா? அரங்கனாரை விலக்கம் தர வேண்டுகின்றேன்)//  — பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் 


=============


செல்வா , தங்கள் கருத்துக் நன்றி . தமிழ் இலக்கிய உலகினுள் “இலக்கியம் சார்ந்து சிறந்த மொழிபெயர்ப்பை முன்வைத்த “  பேராசானின் தளத்தில் (முகநூல் முற்றத்துள் ) நான்  , மொழி பெயர்ப்புச் சார்ந்து உரையாடுவதில் பெரு மகிழ்வுடன் பங்கெடுக்கிறேன் . 


செல்வா , நான் இடொச்சு மொழியில் பாண்டீத்தியம் பெற்றவன் அல்ல . அப்படி , உருவாக முடியாது . டொச்சு மொழியில் சிறப்பாக எழுந்த கோத்தே கூடத் தன்னை ஒருபோதும் டொச்சு மொழி பாண்டிதர் என்று கூறார் . 


என்வரை , இம் மொழியை ஓரளவு புரியவும் , எழுதவும் , வாசிக்கவும் தெரியும் . என்றபோதும் , என் புரிதல் டொச்சு மொழியில் பயன்படும் காலம் ; இடம் , பொருள், நிலவிய சமூகச் சூழல் , பண்பாடு , அரசியல் , சமூக நிலவரங்களை அறிந்தே ஒரு சொல்லை மொழியாக்கஞ் செய்வேன் . 


ஐயனே , தங்கள் கேள்விகள் , மொழியர்பு வாக்கியங்கள் அனைத்தும் சரியானது . ஆனால், நேரடி மொழி பெயர்பு எனக்கு உகந்தது அல்ல . நான் , மொழியாக்கஞ் செய்பவன் . இது , டொச்சுச் சூழலைத் தமிழிற் சொல்லும் கரிசனையுடையது. 


மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை . அதிலும் , டொச்சு மொழியை -வாக்கியத்தை நேரடியாக மொழிபெயர்த்தால் இது, முழுக் கொலையாகிவிடும் . 


உதாரணம் : “Regenschirm “ இதை நேரடியாக மொழி பெயர்த்தால் “மழைக் குடை “ தமிழில் அங்ஙனம் உரைக்க முடியாது . எனவே , தமிழுக்குக் குடை , வெய்யிலிலும் , மழையிலும் பிடிக்கும் ஒரு பொருள் . எனவே , மழையை விட்டுக் குடை என்பதே சரி . மேற்குலகில் அது மழைக்கு மட்டும் பிடிக்கும் Regenschirm ! 


கூடவே , டொச்சு மொழியை பல்வேறு காலக் கட்டங்களில் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்துள்ளது . இது , நேரடியான வார்த்தைகளுக்குள் உள் அர்த்தம் மறைமுகமான எதிர்மறை (Schwarze Rhetorik ) கொண்ட தாக்கத்தைக் குறித்து நிற்பவை . நாசிய காலத்துள் 1920-1945  மூன்றாம் பொற்காலம்(Drittes Reich) என்று வரையறுப்பார்கள் . இக்காலத்துள் டொச்சு மொழியில் அடைப்படை அர்த்த வேறு பாடுகள் திணிக்கப்பட்டன . இது குறித்து „Sprachwandel im Dritten Reich „(Von Seidel, Eugen und Seidel-Slotty, Ingeborg) என்று ஆய்வு நூலே 1961’ஆம் ஆண்டு வெளி வந்தது . 


இங்கு , பாசிசவாதிகள் மொழியை எங்ஙனம் தூஷ்பிரயோகஞ் செய்தார்கள் என்று புரிய சில சொற்களைத் தருகிறேன் :


Schwarze Rhetorik  im Dritten Reich: 


„ Jedem das Seine“ —„Arbeit macht frei“

இதை நேரடியாக மொழி பெயர்ப்பவருக்கு வராலாறு புரியாது போனால் பூர்வீகக் கீரேக்க தத்துவார்த்தக் கருத்தாக அதை “ ஒவ்வொன்றும் அவரவருக்குரியது , வேலை ஒருவரைச்  சுதந்திரமாக்கும் “ என்று மொழி பெயர்ப்போம் . ஆனால் , இவ் வார்த்தைகள் டொச்சு மொழிக்குள் , அவர்களது வரலாற்றில் “ யூதர்களிடம் உள்ள சொத்தைப் பறித்து , அவர்களுக்குக் கடூழியம் கொடுத்துக் கொல் ( Vernichtung durch Arbeit) “ என்பதாகும் . Arbeit macht frei என்பது நாசிகளின் மொழியில் “ கூலியின்றி ,?உணவின்றி உன்னால் உடல் உழைப்பை எங்களுக்குத் தரும் வரை நீ, உயிரோடிருப்பாய்” என்பதே பொருள் . 


இது , மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்யும் கருப்பு சொல்லாட்சி ! 


அடுத்து , டொச்சு மொழியிலுள்ள “ஐன்ஸ்ரைன் கருத்து” எப்போது , யாருக்காக சொல்லப்பட்டது ?; எந்தச் சூழ்நிலையில் இக் கருத்தை ஐன்ஸ்ரைன் உபயோகப்படுத்தினார் ? இக் கேள்விக்கு விடை தேடாமல் நேரடி மொழிமாற்று சரியாகாது . 


1953’ஆம் ஆண்டு இஸ்பானிய இசைமேதை பவ் காசல் (Pau Casals) அவர்களைக் கொளரவிக்கும் விளா பிரான்சில் நடந்தபோது ஜன்ஸ்ரைன் எழுதிய குறிப்பில் இந்த வாசகத்தை எழுதுகிறார் . காரணம் : Pau Casals  அவர்கள் இசுப்பானியச் இராணுவச் சர்வதிகாரி பிரங்கோ(Franco) எதிர்த்தும் , 1933’ஆம் ஆண்டு கிட்லரின் அழைப்பை ஏற்க மறுத்தும் பாசிசத்துக்கு எதிராகப் போராடினார் Pau Casals  அவர்கள் . 


அதற்காக , கொளரவப்படுத்த ஐன்ஸ்ரைன் கீழ்வரும்படி எழுதுகிறார் : “Pablo Casals hat klar erkannt, dass die Welt mehr bedroht ist durch die, welche das Übel dulden oder ihm Vorschub leisten, als durch die Übeltäter selbst."
Albert Einstein


இதன் பொருள் : “ பாப்லோ காசல் அவர்கள்,  “இவ்வுலகினுள் தீமை செய்பவர்களை விட தீமையை பொறுத்துக்கொள்ளும் அல்லது ஊக்குவிப்பவர்களால் உலகம் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை தெளிவாக உணர்ந்தார்” . இதுதாம் , ஐன்ஸ்ரைன் குறித்த சரியான இடஞ் சூழலுட் சொன்ன கருத்து . இது குறித்துப் பல நூறு விளக்கங்கள் வெளியாகிவிட்டென! செருமானியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பொழிப்புகள் வெளியிடப்பட்டன . 


அடுத்து > gewähren< என்ற சொல்லுக்குப் பல்வேறு அர்த்தம் . இடம் , சூழல் , காலம் இவற்றைக் கணக்கெடுத்தால் எதையாவது தேரடியாகப் போட்டு நிரப்ப முடியாது . ஆக, 

[1] ஒருவருக்கு விரும்பிய ஒன்றைச் செய்ய அநுமதி வழங்குதல். [2] யாரோ ஒருவருக்கு ஏதாவது தயார் செய்ய ஒப்புதல் வழங்கல் (கண்டும் காணாமலும்-வாளதிருத்தல்) இத்தோடு ஒத்த சொற்கள்: அனுமதி, கொடு, வழங்கு, ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்.நான் , என் மொழியாக்கத்துள் அநுமதி என்கிறேன் . 


இங்கு , ஆத்திரக்காரர் ; முரடர்கள் என்று நான் சுட்டியது >பொதுப்புத்தி தீயவர்கள்< என்பதை அமைப்பின் அதிகார வர்க்கத்தைத் தமிழில் சுட்டவே . நாம் , மரபு ரீதியாகத் தீயவர்கள் /சண்டாளர்கள் என்பது தனிநபர் நடாத்தையாகப் பார்ப்பதால் அங்ஙனஞ் சுட்டுவது தமிழ்ச் சூழலுக்காக ! 


கடந்த 40!ஆண்டுகளான ஈழப்போராட்டத்துள் பு~லி~ கள் எங்ஙனம் தமிழ் மொழியைத் துஷ்ப்பிரயோகஞ் செய்தார்கள் என்றும் நோக்கினால் இந்தப் பாசிச மொழியைப் புரியலாம் .


ஈழத்தில் “கரும்புலி ; தற்கொடையாளி “ என்பதை பிறமொழியுள் சொல்லும் போது “குண்டுதாரி, மனித வெடிகுண்டு “ என்றுதாம் மொழியாக்கஞ் செய்ய வேண்டும் . 


ஈழத்தில் அடிக்கடி தாயிடம் பிள்ளைகள் சொல்லும் செய்தி ஒன்று கீழ் வரும்படி : 


“ அந்த மாமா , கடையில் நின்றபடி எனக்குத் தன் சாமானைத் துக்கிக் காட்டினார் “ என்று சிறுமிகள் சொல்வார்கள் . இங்கு , சாமான் என்பது கடையிலுள்ள பொருள் /பண்டம் அல்ல ! இதை நேரடியாக மொழி பெயர்த்தால் முழு அர்த்தமும் பாழ் ! 


—ப.வி.ஶ்ரீரங்கன்    11.02.24

Wednesday, February 14, 2024

வாழ்க,வாழ்க காதலர்-கள்!

 ஏன், வலைன்டன் மட்டும் ?


வாழ்க,வாழ்க காதலர்-கள்!

வெறி கொண்ட எதிர்-பால் வினை

"காதலர் தினம்" சொல்லி

சந்தையில் நுகரும் ரேபோக்களைத்

தானியங்கி தந்தது அசிமோ.


அசிமோக்கள் காதல்

செய்வதை நீ,அறிவாயோ?-நான் அறியேன்,

என் பராபரமே!


ஏன், வலைன்டன் மட்டும் ?


என்னிடம் கம்பன் மகன்,

"அம்பிகாவதி-அமராவதி"

விழி எதிரே

மையல் நூறு இசைத்துச்

செவியுள் ஒலியாய்... 

அமராவதி நீ,

அவசரக்காரி !,

இதன் பெயர் அறிவாயா அமாராவதி

இதுதாம் "காதல்" !! 


ஆம், காதலர் தினம் , கத்தரிக்காய் !

எக்காலத்திலும்,

காமம் எனுங் கச்சாப் பொருள்

"எதிர்ப்பால்"

காதலெனுஞ் சந்தையில் பொய்யுரைத்து

புணர்வு கேட்கும் .


"காதல்" தந்த மறு படைப்பு அன்று :

உற்பத்தி உறவு,

இன்று : அசிமோ உற்பத்திச் சக்தி

உறவறுத்த

தானியங்கித் தந்தது ஏய்ய்ய்...ஐஐஐஐ !

ரோபோக்கள் தந்த காதல்

பள்ளிக்குப் பொதி சுமக்கும் மந்தைகள்.


மூலதனப் பந்தையத்துள் 

போட்டிக்குத் தயாராகும் 

எந்தக் குதிரை ஓடும் ,

எந்தக் கழுதை பொதி சுமக்கும் ?


தெருக்களில் கரையுங் காக்காய்,

வேம்பு மரத்துக் கிளி,

பனை மரத்து மூன்று குறி அணில் அறியா

ரோபோக்கள் எக் காலத்திலும் பண்டமே .


குயிலின் கூவொலி இரசித்து,

அப்பு சாமி சொல்லிக் கை கூப்பி, வான் பார்த்துக்

காதல் என்று நீயும், நானும்

"கேள்வி-கோரல்" செய்து

கேட்பதும் நாம், சீ...தனந்தானே பண்டாரம் ?


போ,போ !, ஆளைவிடு!


காதலும் ,கத்தரிக்காயும்...


-ப.வி.ஸ்ரீரங்கன்

14.02.2024


Saturday, February 10, 2024

கரிஹரன் யாழ்ப்பாணத்தில்

 யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டுச் 

சினிமா கலைஞர்கள் ! 

“எம் காலத்தின் எல்லைகளை நாம் தாண்டிச் செல்ல கலை இலக்கியம் உந்து சக்தியாக இருக்க வேண்டும் “ 

யாழ்ப்பாணம் : கரிஹரன் இசை நிகழ்ச்சியும் , இளைஞர்கள் திரட்சியும் திறந்த சமுதாயத்துக்கான (Die offene Gesellschaft— Karl Poppers  ) „விசும்பு நிலை அரும்புகள்“இவை ? 

யாழ்ப்பாணம் /வடமாகாண மக்கள் கிழக்கிலங்கை ; தென்னிலங்கை மக்கள் போன்று திறந்த சமூகத்தவர்கள் அல்ல , என்பது கடந்த 200 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நிச்சியம் புலப்படும் .

இறுகிய பழமைவாதக் கண்ணோட்டம் , பிடிவாதமான சாதிய/மத அடிப்படை வாதங்கள் , சிதறிய சமூகக் குழுக்கள் , பொருளாதார ஏற்ற இறக்கம் , மொழிவாரியான / பிரதேசவாதியான பண்பாட்டுக் கட்டுப்பெட்டி எண்ணங்கள் என்று யாழ்ப்பாணத்துக்கேயான சைவ வேளாள மதவாத நம்பிக்கைகள் (Fideismus)  என்று , இறுகிய மூடிய சமுதாயமே யாழ்ப்பாணச் சமுதாயமாகும் . 

ஆகவே , ஒரு சமூக அமைப்பு என்பது ஒத்த கருத்துடைய மனிதர்களின் கூட்டாக இருப்பினும் நிலவும் , அதிகாரத்துவத்தின் வழி சட்டவாதமாக எழுந்த அரச பலவந்தத்தின் மூலமே அது சமுதாயமாக நிலைநாட்டப்படுகிறது .

எம் , சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் நாம் கடந்த 50 ஆண்டுகளாக -அதாவது , அரை நூற்றாண்டாக இரண்டு அரச ஜந்திரங்களுக்குள் மாட்டுப்பட்டு இருவேறு நலன்களின் வழி ஒடுக்கப்பட்டவர்கள் . 2009’ஆம் ஆண்டு  முள்ளிவாய்க்கால் வரை பல்வேறு இயக்கவாத ஆயுத அழுத்தம் , பு.லி அரசு/இராணுவ ஜந்திரத்தின் கருத்தியல் -ஆயுத ஒடுக்குமுறைக்குள் கட்டாயமாக உந்தித் தள்ளப்பட்டு யுத்தகால அரசியற் பொருளாதாரத் திசைவழியில் இறுக மூடிய திறந்த வெளிச் சிறைக்குள் வாழ்ந்தவர்கள் ஈழமக்கள் . 

அவ்வண்ணமே , சிங்கள அரசும் அதன் , வன்முறை ஜந்திரமும் நம்மை வலு கட்டாயமாக குறிப்பிட்ட எல்லைக்குள் , நிலப்பரப்புக்குள் தள்ளிக் குண்டுகள் போட்டு , இன ஒடுக்குமுறையை நம் மக்கள்மீது திணித்தது . 

ஒருவகையில் , இஃது, ஆக்கிரமிப்பு இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட ஈழத்துள் “ஈழமக்களும் , அவர்களது தாயகமும்” சிங்கள அரசின் இராணுவக் கொலனியாக (Sri Lankan Military Colonies) மாற்றப்பட்டு இருவேறு அரசுகளின் வன்முறை ஜந்திரங்களுக்கு முகங் கொடுக்கும் நிர்ப்பந்தத்தை தமிழ்மக்களுக்குக் காலம் வழங்கியது . இது சமூக ஒடுக்குமுறை  விலங்காக எழுந்தது . 

ஈழமக்களின் சகல வாழ்வுசார்ந்த சமூக அசைவியக்கமும் அரை நூற்றாண்டாக மட்டுப்படுத்தப்பட்டது . இன்று , இது மாற்றுவடிவில் பண்பாட்டு ஒடுக்குமுறையாக மெல்லமெல்ல நகருகிறது . 

இதனால் , நம் மக்கள் சமுதாயம் பொருளாதார வளர்ச்சியின்மையால் கல்வி , பண்பாடு , உள வளர்ச்சி குன்றிய மூடிய சமுதாயமாக உருமாறியது . 

சனநாயகம் குறுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திடம் ஒருபோதும் அக வளர்ச்சி உச்ச நிலையடையாது . ஒவ்வொரு தனி நபரும் அடுத்த நாள் உயிர் வாழ்வதைத் தீர்மானிக்கும் சகத்திகளாகச் சிங்கள அரசும் ; பு~லி அரசும் கை கோர்த்தன . இதை , நம்மிற் பலர் யோசிக்க மறுக்கும் தருணத்தில் நம்மை நாம் கடந்த ஈழப்போராட்ட வரலாற்றிலிருந்து துண்டித்துக்கொள்கிறொம் . அல்லது , நம் சமூக வாழ்விலிருந்து அந்நியமாகிறோம் . 

இதைப் புரிந்து கொள்ளுங்கள் . 

ஆக , நம் மக்கள் , கடந்த 2009 ‘ஆம் ஆண்டு வரை யுத்த அழுத்தத்துக்குள் மரணப் பயத்துடன்(Angst und Panik )உயிர்  வாழ்ந்தவர்கள்! 

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் யுத்தமே விடியலுள் நகர்ந்தது ; சிங்கள இராணுவ ஒடுக்குமுறை / இயக்கங்களது அராஜக ஒடுக்குமுறை என்று பல்வேறு அழுத்துங்களுக்கு (Im Schatten des Kriegstrauma ) முகங் கொடுத்துத் தினமும் கொலைகளையும் , குண்டுத் தாக்குதலையும் ; யுத்தத்தையும் அநுபவித்து முடங்கிக் கிடந்தவர்கள் , ஈழமக்கள் .

இந்த ஈழமக்கள் தோல்வி , இழப்பு , குடும்பங்கள் குலைவு , மரணம் , வலி, காயம் உடல் -உள , பொருளிழப்பு , பொன்னிழப்பு , குடியிழப்பு -ஊரிழப்பு ; உயிரழப்பு என்று வாழ மறுக்கப்பட்ட / மறக்கப்பட்ட எண்ணங்களோடு (Seelische Last) அழிவுகளைச் சந்தித்தவர்கள் .

யுத்தத் தோல்விக்குப் பின்பான காலம் என்பது , பல்வேறு சிதைவுகளுக்கு (die Traumata )ஒத்தடம் போடும் காலம் ! 

இது , உலகம் பூராகவும் நாம் கண்ட வரலாறு . இன்று , நம் மக்களும் இதற்கு விதி விலக்கல்ல . 

இந்த யுத்தத்தின் நிழலுக்குப் பின்பான ஆன்ம/உளக் காயங்களது விலி (Im Schatten des Kriegstrauma) குறித்து நாம் எந்த யோசனையுமின்றி இலங்கையில் / தமிழ் நிலப்பரப்பில் “அது, நடக்குது ; இது நடக்குது “என்று விவாதிக்கின்றோம் ! 

இங்குதாம் யாழ்ப்பாணத்தில் இன்று பெருவாரியகத் திரண்ட மக்களின் உள அவாவை ; விருப்பை , கேளிக்கை மனதைப் புரிந்தாக வேண்டும் . மக்கள் , கூடிக் களித்துக் கொண்டாடி வலிகலைத்தல் /தணித்தில்  என்று இந்த சூழலைப் புரிவதுள் கஷ்ட்டம் என்ன ? 

இது , பின்போராட்டக் காலம் .கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தலைமுறை கனவுகளுடன் வளர்ந்து வருகிறது . அதற்கு , 20 வயது நிறைந்து உலகை மற்றவர்கள் போன்று எதிர் கொள்ள முனைகிறது . இது தமன்னாவிடம் ஈர்ப்புக் கொள்வது எதிர்ப்பால் வினைமட்டுமல்ல . இதுவரை திரையில் பார்த்த பெண்ணுடலைக் கண்ணெதிரே அது காண விரும்புகிறது . தான் கேட்டு இரசித்த பாடல்களது பாடகன் நேரே வருகிறான் என்றால் ஆவல் மேலிட அனைத்தையும் மீறி அவன் முன்னே உந்திச் சென்று விழியெறியும் சுயவிருப்பு எப்படி காட்டுமிராண்டித்தனமாகும் ? 

அடக்கி வைக்கப்பட்ட மக்கள் , பல்வேறு பக்கம் அலைவார்கள் , கோயில்கள் ; குளங்கள் பக்கமும் , சிலைகள் கட்டுவதும் கும்பிடுவதும் , புத்த தரிசனத்தை நாடுவதும் , காதல் செய்வதும் , களிப்பதும் , உடைகள் , அலங்காரங்கள் ; ஆடல்கள் , பாடல்கள்  என்று , மக்கள் கொண்டாட்ட நிலைக்கு- திசைக்கு நகர்வார்கள் ! 

 இது , அவர்களின் ஆன்மீகத் (இறை நம்பிக்கை அல்ல . மாறாக , இது, மனித வரலாற்று அடிச் சுவட்டில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது  இந்த உலகுக்கும் , மானுடனுக்கும் உள்ள உறவு ; உழைப்பு /படைப்பு . படைப்பு என்பதே உலகத்தைப் பற்றிய மனிதர்கள் கொண்டுள்ள சிக்கலான ஆன்மீக உறவுகளின் அதியுச்சப் பிரகடனமாகும் ) தேடல் . எனவே , ஈழமக்கள் தமது மனிதத் தன்மையை  இழக்கமால் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுவர அவர்கள் உழைப்பில் ; படைப்பில் , இரசனையில் , துய்ப்பில் ; கலா தரிசனத்தில் இருந்தே ஆகவேண்டும் . ஏனெனில் , நாம் சமூக மனிதர்கள் என்றுணர இந்தக் கலை உழைப்பு அவசியம் . ஆத்மீகம் , பண்பாடு , கலை வளர்ச்சி , இரசனை , நடனம் , பொழுதுபோக்கு இல்லாத சமுதாயம் தேங்கிய குட்டை . இந்தக் குட்டையில் ஊறிய ஈழமக்கள் இந்தக் குட்டையை விட்டுக் கடலை நோக்கி அருவியாகப் பாய்வதற்கு கலை வாழ்வு அவசியமே ; துய்ப்பு அவசியமே . 

ஆக , இந்தக் கலைப் படைப்புகளை கொடுப்பவர்கள் (கலைஞன் /படைப்பாளி) புரட்சிகரமான உத்வேகங் கொண்டவர்களாகவும் , சமூகத்தைப் புரட்சிகரமாக அணுகுபவர்களாவும் இருக்க வேண்டும் . இங்குதாம் , நாம் தமிழ்நாடு /இந்திய சினிமாக் காரர்களை எண்ணி அச்சப்படுகிறோம் ! வர்க்க உணர்வு -போராட்ட உணர்வு சிதைக்கப்பட்டு நம்மை மந்தைகளாக்கி விடுமோ இந்திய அரசு என்று அச்சப்படுகிறோம் . இந்த அச்சம் நியாயமானது . ஏனெனில் , நாம் போராடப் புறப்பட்டபோது நம்மைத் தகவமைத்த இந்திய வியூகம் நம் மக்களில் நான்கு இலட்சம் மக்களை நாம் கொன்றுதள்ள வழி வகுத்தது . 

யுத்தம் , இராணுவ ஒடுக்குமுறை , மட்டுப்படுத்துல் ; கட்டுப்பாடு , ஒடுக்குமுறை , சனநாயக மறுப்பு  தளரும்போது மக்கள் தம் வரலாற்று மரபார்ந்த உளவியலூக்கம் மீளப்பெறுவார்கள் . இந்த அடிப்படையில் ,ஆண்-பெண் இனம் மாறி , மதம் மாறி , சாதி மாறிக் காதல் வயப்பட்டு , மணங் கொண்டு வாழ்வார்கள் . இராணுவ இளைஞன் தமிழ்ப் பெண்ணைக் காதலிப்பான் , அவனைத் தமிழ்ப் பெண் - முசிலீம் பெண் காதலிப்பாள் ; கல்யாணஞ் செய்வாள் . கூட்டுப் பண்பாட்டை நுகர்வார்கள் ; கலைகளை ; கேளிக்கைகளைத் தேடி ஓடுவார்கள் . இது, மானுட நடாத்தை . 

ஆக , “சிங்களப் பெண்ணே வா ; தமிழ்ப் பெண்ணே போ “ என்றெல்லாம் பாடி மாறிக் கல்யாணஞ் செய்து , சமூகம் பன்முகத் தன்மை பெறும் . 

ஓர் கலப்பு மக்களினம் என்பது அழகியது . பல்லினப் பண்பாடு (multiculturalism) என்பது யுத்தத்தின் பின்பான காலத்தோடு(Postwar period) அதிகம் ஊக்கமுற்றுச் செயலாக்கம் பெறுவது . 

இதுதாம் , சமுதாயத்தின் பிணியகற்றியாக என்றும் மக்களால் உள் வாங்கப்படுவது .

இதைப் புரிந்தால் , “எந்தச் சிலைகள் ; மதங்கள் , இனங்கள் -சாதிகள் ; பிரதேசங்கள் எங்கு கலந்தால் உனக்கு என்ன-எனக்கு என்ன ?” என்ற உலகப் புரிதல் , உழைப்பால் ஒன்றுபடுதல் புரியும் .

தனித்த குட்டைகள் , இனிமேல் எங்கும் கிடையாது . கிணற்றுத் தவளைகள் அனைத்தும் மேல் நோக்கி நகர்ந்து வெளியேறும் . இதுவே , சமூக அசைவியக்கம் .எல்லாம் , மாறும் ; மாற்றப்படும் . இது, காலத்தின் விதி ! எனவே , கலை இலக்கியம் ; சினிமா , ஆடால் பாடல் எல்லாம் , எங்கும் பரவட்டும் ,மக்கள் மகிழ்ந்திருக்கட்டும் . அதுவே , ஆற்றலுள்ள சமூதாயத்தைப் படைக்கும் . ஏனெனில் , இலக்கியம் என்பது „ Second Nature of life „  ஆக , இரண்டாவது இயற்கையைக் காப்போம் ; வாழ்வோம் . 


—ப.வி.ஶ்ரீரங்கன்                10.02.2024

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...