Sunday, July 29, 2007

இரமணிதரனும்,மாலனும்...

இரமணிதரனும்,மாலனும்...



-சில கவனக் குறிப்புகள்.


//என் முன்னைய
இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான
சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை.
ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத்
தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான
எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும்.//-/பெயரிலி.


கருத்துகட்குட்பட்ட எல்லைகளிலிருந்து ஒரு வகைப்பட்ட மையத்தைத் தேடுவதும் பின்பு அதன் சாத்தியத்தைக் குறித்து எந்தவகைத் "தெரிவும்" ஒரு எல்லையைத்தாண்டிச் செல்வதும்,அங்ஙனம் செல்லும் வழியில் எவரோ,எப்போதோ வீசியெறிந்தவைக்காக விழிகசக்கிச் சிந்தித்து வருவதும், அந்தச் செயலில் மாண்டு-மூழ்காது போவதும் அவசியம்.இந்த அவசியத்தில் ஆர்த்தெழும்போதும் அங்கே அந்தவுலகம் மிகப் பெரிதாக இருக்கிறது.இன்றையவுலகத்தில் வரலாற்றைத் திருடுவது பின்பு அதைத் தமதாக்குவதும் பண்டுதொட்டு மானுடம் ஆற்றும் செயற்பாடுதாம்.அங்ஙனமின்றி இந்தவுலகத்தில் உண்மையான வரலாறாக எந்த வரலாறுமில்லை.அன்றைக்குஞ்சரி இல்லை இன்றைய அதிபுரட்சிகரமான தகவற்றொழில் நுட்ப வலுவிலுங்சரி உண்மைகளை உரக்கச் சொல்வது சாத்தியமில்லை.இது மனித செயற்பாட்டின் அனைத்துத் தடங்களையுங்வுட்கொண்டே சொல்லப்படுகிறது.ஆக பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயத்தின்மீதான வரலாற்றுத் திருட்டுத்தனங்கள் அவர்களை வரலாறற்ற அல்லது வரலாறு தெரியாதவர்களாக்கிய செம்மையான அந்நியத் தலையீடு அந்தச் சமதாயத்தின் இருப்பையே அழித்து விட்டதென்பதை எல்லோரும் உணரக்கடவது.இந்தவகையில் தங்கள் "தெரிவு"அவசியமென்பதை மறுபதற்கில்லை.என்றபோதும் இரமணி இந்த வட்டம் பெரிதென்பதை நீங்கள் உணர்திருப்பீர்கள்.இதுள் பாரபட்சமற்று மனித செயற்பாட்டின் அனைத்துத் தளங்களையும் ஒருவர் கடந்தேகவேண்டும்.இது தொழில் நுட்பத்துக்குள்ளோ அன்றிக் கணினியியல் கருவூலங்களுக்குள்ளோ குறுகிவிட முடியாதல்லவா?அப்போ இது ஒரு சிறு பகுதிதாம்.அந்தத் "தெரிவின்"பாரிய பக்கம் இன்னும் இருள் சூழ்ந்தே கிடக்கிறது.அங்கே மக்கள்தம் உண்மையான வரலாற்றைப் பேராடும் பல்கலைக்கழகங்கள்கூட விஞ்ஞான பூர்வமாய் கற்கை நெறியாக்குவதுமில்லை.அப்படிச் செயற்படுத்தும் வரலாற்றுக் கற்கையும் அதுசார்ந்த தேடுதல்களும் ஆளும் அதிகாரத்தின் எல்லைகளையும் அவற்றைத் தக்கவைக்கும் முனைப்புகளுக்கிசைவானவையாக இருக்கும,; இந்தச் சூழலில் உங்களின் மேற்காட்டிய இந்தக் கூற்று எந்தத் காரணத்துக்கும் பொருந்துமென்றே கருதுகிறேன்.



//மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும்
இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும்
கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை
ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.//

இங்கேதாம் இரமணி ஒரு உண்மை மிகக் காட்டமாக உணர்வில் உறைகிறது.ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.அங்கே பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்தது.வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால,; அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தரணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் நீங்கள் வைத்திருக்கும் கால் மிக நீண்ட வெளிகளைக் கொண்டிருக்கிறது.தம்பி வெற்றி இணையத்தில் எடுத்துவைக்கும் சிறுபிள்ளைத் தனமான விளக்கங்களைப்போன்று நீங்கள் நிச்சியம் செய்யமாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.எனினும்,இயன்றவரை வரலாற்றுத் தரவுகளை எந்த வர்க்கத்தையும் திருப்பத்திப்படுத்தாது காலத்தைச் சார்ந்து-காலத்தில் எழுதுவது மிகப் பொருத்தமானது.தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இதற்கு எங்கள் வித்துவான்களும்,நாவல்லவர்களும்,பேராசிரியப் பெருந்தகைகளும் காரணம் மட்டுமல்ல.நிலுவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்தாம்.அரசியல் அதிகாரம் என்பது ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞான பூர்வமாகப் பதிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.இதைச் சுட்டுவது இந்தத் தரணத்தில் எமக்கு நன்மையே பயக்கும்.


//இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும்
அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல்
இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே
உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள்
இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின்
வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு,
திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே
எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த
காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய
கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம்.
இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக
ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின்
தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும்
போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே -
கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே
கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும்
அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன்
தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க
முயன்றிருக்கமாட்டார்கள்.//

இங்கே இன்னொரு அவசியமான கேள்வி எழுகிறது.பாடசாலைகளில் மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா?அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை.அது தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது.வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.பொதுவாகத் தமிழ்ப் பெளத்தர்கள் இலங்கையின் வடபுலத்துள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் அநுராதபுரம்வரைத் தமது தொடர்ச்சியான குடிப்பரம்பலைக் கொண்டிருந்ததும் உண்மையான வரலாறகவே இருக்கிறது.இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு குறித்த ஆழமான ஆய்வொன்றைப் கலாநிதி சி.க.சிற்றம்பலம் செய்தும் உள்ளார்.பூனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆய்வு இது.இதில் எமது வரலாற்றை அவர் விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதில் பல சான்றுகளை முன்வைத்துள்ளார்கள்.சிங்களச் சமுதாயம் இப் பெருங்கற்காலப்பண்பாட்டின் முகிழ்பபென்பதும்,அது தென்னிந்தியாவில் எங்ஙனம் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளும் என்று தோற்றுவித்ததோ அவ்வண்ணமே தமிழ்,சிங்களம் என்று இலங்கையில் தோற்றுவித்துள்ளதென்பது பரவலாக ஏற்புடையது.ஆரிய வம்சம் எனும் புரட்டுச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகலாம்.இது புத்தமத மறுமலர்ச்சியைத் தூக்கி நிறுத்திய சமூகக் காரணி மிகக் கூர்மையாக விளங்கத் தக்கது.அது காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையில் கிறித்துவத்தின் வாய்ப்புக்களையும்.வசதிகளையும் தட்டிப்பறிப்பதற்கும் கூடவே அந்த மத்தால் பயனுற்ற படித்தவர்களை ஓரங்கட்டுவதற்காவும் இருந்ததை நாம் அறிய முடியும்.இது ஒருகட்டத்தில் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகக் கிளம்பியதை இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டறிவதே சாலச் சிறந்தது.கந்தோரடை பற்றிய அகழ்வராச்சியில் அன்றீடுபட்ட(1967 என்றே நினைக்கிறேன்) பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்து அரும்பொருளக ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலப்பண்பாடு நிலவியதை முதன்முதலில் விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.விமலா பேக்கிலி மற்றும் பென்னற் புறொன்சன் போன்றோர்களின் ஆய்வுகள்-வெளிப்படுத்தல்கள் யாவும் இதை உறுதிப்படுத்துபவை.ஆனால் அந்த அகழ்வாராச்சியின் முடிவுகள்-அறிக்கைகளை இதுவரை நாம் கண்ணிலும் காணவில்லை.ஏன்-எவரால் முடக்கப்பட்டதென்பதை நம் தமிழ் வரலாற்றாய்வாளர்களால் இதுவரை குறித்துச் சொல்லப்படவில்லை.இங்கேதாம் நம் வரலாற்றாளர்களின் தவறுகளும்,மதிப்பீடுகளும் சிங்கள பெளத்த பொய்மையையும்,பெளத்த மதத்தைப் பற்றிய தளம்பலிலிருந்து விட்டு வேறொரு தொலைவுக்கு உயர்த்தியது.இது தமிழரென்பவர்கள் சைவத்தை மதமாகக்கொண்டவரென்பதும்,பெளத்தம் சிங்களருக்கே உரித்ததுமாகக் கற்பனையில் மூழ்கடித்தது.அங்கே வலுவுறும் தரணம் சிங்களவருக்கானது.கடந்தகாலத்துத் தவறுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான முன் நிபந்தனை எனஇன?அந்தத் தவறுகளைப் பகிரங்கமாக விமர்சனத்துக்குள்ளாக்குவது.அதை நாம் சரியாகச் செய்வதாக இருந்தால் இன்றைய போராட்டத்தவறுகளும் பகிரங்கமான விமர்சனத்துள் மையங் கொண்டிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் தனக்குள் ஒடுக்குமுறையை ஏவிவிட்டுத் தன் சொந்தத்தையே குட்டிச் சுவராக்கும்போது அந்நியப் புறச்சக்தி எம்மை ஒடுக்குவது வியப்புக்குரியதல்ல.

//அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக,
புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே
அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே
தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச்
சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே
ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின்
தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை
மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி
நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம்
இவ்வகைப்படும்.//


தமிழருக்கு வழிகாட்டிகளாவதும்,அவர்கள் கூறுகின்ற தமிழர்கள் என்பவர்கள் யாரென்பதும் தங்கள் கூற்றுள் பொதிந்துணரப்படத்தக்கதாக இருப்பினும்,தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்.இங்கே மாலன் என்பவர் குறித்துரைத்தவை அவரையொத்த பலரின் கருத்துக்களாக இருப்பதாக அவரது கூற்றே தெளிவுப்படுத்தும்போது,அந்தத் தனிமனிதர் இந்த நிறுவனத்தின் உறுப்பினராகிறார்.அவரே நேரே வந்து ஒப்புதல் அளித்தும்விடுகிறார்.ஆக மொத்தத்தில் மாலன் வெறும் குறியீடாக இருக்கலாம்.ஆனால், தங்கள் கருத்துத் தளம் விரியும் இன்னொரு பரப்பு ப் பார்ப்பனியத்தின் உட்கூறுகளையும் அதன் ஆதிக்கக் கருத்தியல் தளத்தையும் நோக்கியதாக இருப்பதே சாலச் சிறந்தது.இத்தகைய தரணத்தில்மட்டுமே உளம்சார்,சிந்தைசார் விடுதலைக்கான வாசற்கதவு திறக்கப்படுகிறது.அதை நோக்கிய வழிகள் யாவும் ஆளும்வர்க்கத்துப் பெரும் ஊடககங்களாலும் காவி பூசிய கல்வியாலும் தடைப்படுத்தப்பட்டிருப்பதைச் சொல்லும் அறிவு நாணயம் அவசிப்படுந்தறுவாயில் விமர்சனம் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்தச் சுதந்திரத்தை வலியுறுத்தும் நீங்கள் முதலில் அந்தச் சுதந்திரத்தின் எதிரிகளைத் திறம்பட இனம்காணத்தக்கபடி மக்கள் முன் நிறுத்தவேண்டும்.இத்தகையவொரு முன்னெடுப்பைக் கருத்தியற் தளத்தில் ஆழமாகச் செய்வது அவசியமானதாகும்.ஆதிக்க வாதிகளிடமிருந்து விடுவித்துக் கொள்வதுற்கு அந்த ஆதிகத்துக்கு மாற்றானதை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.பார்ப்பனியத்தின் ஆதிகத்துக்கு என்ன மாற்றீடு முன்மாதிரியாக இருக்கும?;.நமது பண்பாட்டைச் சிறைப்படுத்திய பார்ப்பனியத்துக்கு நாம் தொடர்ந்து படியளப்பதும் அதையே நமது பண்பாடாக உணர்ந்து, எமது உடல்களை அதற்காகத் தாரைவார்ப்பதும் இன்றைய சர்வசாதரண வாழ்வியலாக நமக்குள் முகிழ்க்கும்போது அதை நிலைப்படுத்தும் தரணங்கள் மிகுதியாகக் கொட்டிக்கிடக்கிறது எமது சிந்தையுள்.அதை விலக்கும் மாற்று என்ன?இத்தகைய வியூகமற்றுச் செய்யப்படும் விவாதம் எத்துணை தூரம் மேற்சொன்ன சிந்தை-உளசார் விடுதலையைச் சாத்தியமாக்கும்?


//மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது
உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும்
வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை
விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே
கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின்
சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு
உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார்
விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே
நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.//


மிகச் சரியான வரையறுப்பு.நல்லது!இந்தக் குடியேற்ற வாதிகளை வெளியேற்றிவிடுவது மிக இலகுவானது.ஆனால், அவர்களது கருத்தாகங்களும் வரலாற்றுப்படுத்தப்பட்ட விஞ்ஞான விளக்கங்களையும் அவ்வளவு இலகுவாக விட்டொழிக்க முடியுமா?இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள் பெயரிலி?இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா? அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் வளங்களாலேயே முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தரணத்தில் எங்கே செல்லும்?அதை அப்பட்டமாக விடுதலைக்கான முன்னகர்வென்றழைக்க முடியுமா?

//இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம்
காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்;
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை,
ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்:
"ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர்
என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த
வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை
செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்;
தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக,
மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக
வேண்டும்.//


பெயரிலி,இங்கே இன்னொரு மனவிருப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனமான பாசப்பொழிவு புலப்படும் சிந்தனை இதுள் தூக்கலாக இருக்கிறது.அங்ஙனம் நீங்கள் கூறாதபோகினும் இதுள்மையமிடும் உணர்வு அத்தகையவொரு உணர்வினைத் தூண்டமுடியும்.எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய வியூகம் அடிபட்டுப்போகிறது.எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஞனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறுத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.

//இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும்
நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும்
காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று
அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர்
இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல்,
இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு
அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும்
ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே
எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான
எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும்
குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே
வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக
வெளியிட்டுக் கக்குகின்றது.// "


...புவிசார் வாழ்வுக்கு ஈடான இரண்டாம் நிலை(இணைய)தமிழ்வாழ்வினையே சுதேசமித்திரன் பாரம்பாரியம் என்ற சொல்லாடல்..."பண்டுதொட்டு தமிழக வர்த்தகச் சஞ்சிகைகள் உலகு தழுவிய சந்தைக்காகத் தமிழ்பேசும் உலகத்தை மொட்டையடிப்பது வெறும் பொருட்தளத்தில் மட்டுமல்ல.அது அதைத் தக்க வைப்பதற்காகவே உள்ளேயும் வெளியேயும் பற்பல சிறப்பான மேலாதிக்க மனோபாவதைக் கருத்துக்களாகக் கொட்டுகிறது.இது வெறுமனவே ஒரு இனத்தின்மீதான காழ்புணர்வொடு சம்பந்தப்பட்டதல்ல.அதிகாரத்தைச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனா முயற்சியென்ற வகையில் பெயரிலியின் இக் கூற்றோடு உடன்படமுடியும்.அது மட்டுமன்றி ஒருகமைந்த செயற்கையான இந்தியாவில் தாம் கொண்டிருக்கும் ஆதிகத்தைத் திறம்படத் தக்கவைப்பதும்,ஒட்டச் சுரண்டுவதற்கும் இத்தகைய கருதாண்மை அவசியமாவும் இருக்கிறது.இது தமிழகத்தின் விடுதலையை மொட்டையடிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களின் சுய விடுதலையைக் கொச்சைப்படுத்தும்.இங்கே சோ இரமாசாமிபோன்ற காரியவாதப் பார்ப்பனர்கள் இதுள் முக்கிய பங்காற்றுவார்கள்.இவற்றுள் பற்பல அடுக்குகளாகப் பார்ப்பனக் கருத்தாண்மை நம்மைப் பலவீனப்படுத்திப் பண்பாட்டு ஒடுக்குமுறையையும்,உளவியற் தாக்குதலையுஞ் செய்கிறது.அந்தத் தளத்தின் உறுப்புக்களாக இருப்பவை இன்றைய ஊடகங்களே.


//சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான்,
வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த
மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும்
வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள்.
(ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி
ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது,
"யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு
ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2;
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது;
கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம்
சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட
ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்"
தந்திருக்கின்றது.
தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது.
(அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை
எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது
தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது,
ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த
சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது?
சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே
மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?)
தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும்
சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து
முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு
பிரேமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத்
தந்திருக்கின்றது.//


·பெரும்பாலும் பெயரிலி குறிப்பிடாத இன்னொருவிடயம் இங்கே உண்டு.ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் அவர்களிடம் இவற்றைக் கோரிக்கையாகவோ அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை.ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகெளரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?இது தாழ்த்தப்பட்டவர்கள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது?தமிழரசுக் கட்சியும்,இராசலிங்கம் போன்ற தாழ்த்தப்பட்ட அரசியல் வாதிகளின் நிலையும் புரிந்துகொள்ளத்தக்கதே.ஏன் இன்றைய உண்மையானவொரு சமூக யதார்த்தம் பேராசிரியர் சிவத்தம்பியின் திறமைக்கு என்ன தகுதியை வழங்கியதென்பதைப் புரிவதில் தெளிவுறும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முதல்வர் பதவிக்கு அவரைவிட அறிவிலும் வயதிலும் கீழ்மைப்பட்டவர்கள் வந்தபோதும் இவருக்கு மறுப்பு எந்தவடிப்படையில் நிகழ்ந்தன?அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்குத்தானே?



//இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே
இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் -
தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும்
திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம்
மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை
செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள)
வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும்
உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத்
தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால்,
தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவையமைந்தாயுள்ளது//



இங்கே எவர் எவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பது?வரலாற்றைப் படைப்பவர்கள் எவர்கள்?எந்த வரலாற்றை விடுவிப்பது?மாலனின் கைகளில் வழமையாக இருப்பது ஊடகப் பலமும்,அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆதிக்கப்பலமும்தாம்.இதைக் கடந்து மாலன் வரலாற்றைத் தடுத்திடவோ அல்லது திசை திருப்பிடவோ முடியாது.வரலாறு தன் ஓட்டத்தோடு நம்மை அழைத்துச் செல்கிறது.எம் மொழி,குடி,பண்பு வரலாற்றை நாம் மாலனிடமிருந்தல்ல விடுவிப்பது மாறாக நிலவுகின்ற இன்றைய சமுதாய அமைப்பிடமிருந்தே விடுவிக்க வேண்டும்.மாலன் சேவகன்.ஒரு மாலன் போனால் பற்பல மாலன்கள் பின்தொடர வாய்ப்புகள் அதிகம்.இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாகவூன்றியுள்ளன.இவற்றைக் கடந்து நாம் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட அதைப்படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில,; வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது.அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினு}டாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக மாலன்கள் குறுக்கே நின்று கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய அவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


//எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒரு போதும்
இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்கு
படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின்
பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள்
இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட
எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும்
நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள்,
செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும்
பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான
தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால்,
ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.//



இதுதாம் இன்றைய மிகப் பெரிய அப்பாவித்தனம்.யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?முடிந்தால் சோபா சக்தியைத் தமது தேவைக்காகப் பயன்படுத்த முனைவார்கள்.அங்கே, நமது குரல் பதிவிடப்படுவதல்ல நோக்கம்.தமது நோக்குக்கு உரம் சேர்ப்பது.அந்த வகையில், இவர்களிடம் போய் நம் குரலைக் கேட்கவில்லையென்பது அப்பாவித்தனமா இல்லைப் புத்திஜீவிதத் தொந்தரவா?என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்கள் கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?இதிலிருந்து இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா?இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்.ஐயோ,அவர்கள் எங்கள் குரலைப் பதிவிடவில்லையே என்ற ஆதங்கமா?பெயரிலி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.அதை இங்கே மிகவும் கவனமாகச் சுட்டுகிறேன்!


//இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர்
முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா
உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக
குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே,
தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட
வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர்
தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி
கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக்
காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள்
உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த
எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள்
நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக்
காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய
பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா? //



பெயரிலி இது எங்களது தவறேயன்றி அவர்களது தவறில்லை.நாம் நம்மை அறிவதில் நாட்டமின்றிப் பொத்தாம் பொதுவான கருத்து நிலைகளால் சூழப்பட்டபோது இங்ஙனம் காரியமாற்றினோம்.குமுதம்,ஆனந்தவிகடன் எம்மைக் கவருவதற்கான அவர்களது தந்திரத்தால்மட்டுமே ஏமாற்றப்பட்டோம்.அவர்கள் ஒருபோதும் தம்மை நம்பும்படி நமக்குக் குரலிடவில்லை.அவர்களது நலனையும்,அவர்களது வர்க்கத் தளத்தையும்"தமிழர்கள்"எனும் பொதுக் கூப்பீடால் ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம்.ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!இதைக்கடந்த எந்த உறுவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இதுவொரு உதாரணம்.




//இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம்,
வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே,
கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய
கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?//


இங்கே கேள்விமட்டுமல்ல பெயரிலியின் சமூகப் பார்வையே முக்கியமாகும்.அவரது வர்க்க அறிவுப்பரப்பும், அதை அவர் எந்த வர்க்கஞ்சார்ந்து சிந்திக்கிறாரென்ற நோக்குமே இனி முக்கியம் பெறும்.இது நாள் வரை இப்படிச் சிந்தித்துவிட்டோம்.இனியும் இப்படியல்ல.அவர்களைத் தோலுரித்து ஆதிகத்தை-அதிகாரத்தை உடைப்பதற்கான அறிவை எழுத்து மூலம் வைப்பதே சாலப் பொருத்தம்.அப்படிச் செய்யும் ஆற்றலும்,அறிவும்,அநுபவமும் உங்களுக்கு உண்டு.அந்தப் பலங்களினு}டே நீங்கள் எழுதும்போது மாலனிடமிருந்தென்ன மற்றெல்லோரிடமிருந்தும் நாம்,நம்மை விடுவிக்க முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.07.2007

Friday, July 27, 2007

பல்கேரியப் பயணம்:2

பல்கேரியப் பயணம்:2


அது மிகவும் தெளிவான கடல்.பாசிகள் நிரம்பிக் கிடக்கக் கண்டோம்.பிறகென்ன தெளிவான கடல்?ஐரோப்பியர்கள் கருங்கடலுக்குச் சொல்லும் விளக்கம் தெளிந்த நீரென்பதாக இருக்கிறது.அந்தக் கடற்கரையொன்று பல்கேரியாவின் பெரு நகர் வார்னா நோக்கி விரிகிறது.அந்தக் கடற்கரையை நான் எனது மண்ணான வேலணை வெள்ளைக் கடற்கரையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.வெள்ளைக் கடற்கரையில் எவ்வளவோ நாட்கள் நேரம் போவதே தெரியாது எனது நண்பன் சிவகுமாரோடு உரையாடி இருக்கிறேன்.அந்தக் கடலில் குளித்துப் பள்ளிவாசற் கிணற்றில் அள்ளிய நன்னீரில் உப்புக் கசிவைப் போக்கி,வீடுமீளும் வழியில் கள்ளருந்திப் புகைத்து மகிழ்ந்திருக்கிறோம்.வீசியடிக்கும் காற்றுத் தென்னங் கீற்றில் கிழிபடும்.இங்கோ நாம் விரத்துக் கடற்கரையில் ஊன்றிய குடைகளை பிய்த்தெறிந்தது.


நீண்ட நேரமாக இரு இளைஞர்கள் எங்களைக் கவனித்தபடி தங்கள் அழகிய-கவர்சியுடைய காதலிகளுடன் கொஞ்சி மகிழ்வதும் பின்பு நம்மைப் பார்ப்பதுமாக இருந்தார்கள்.நான் அவர்களைத்தாண்டிக் கடலில் இறங்க முனையும்போது என்னிடம் பேசிக்கொண்டான் அதிலொரு இளைஞன்.


"நீங்கள் எங்கிருந்து இங்கு வந்துள்ளீர்கள்?"-அவன்.


"நான் இலங்கையைச் சேர்ந்தவன்,ஜேர்மனியிலிருந்து வந்துள்ளோம";.-இது நான்.


"இலங்கையில் அழகான கடற்கரைகள் உண்டென்பது எனக்குத் தெரியும்.எனினும்,எங்கள் கடற்கரைகள் எப்படியுள்ளது?"-அவன்.


எனக்குச் சிரிப்பு வந்தது,சிரித்தேன்.பின்பு சொன்னேன்:"கடற்கரைகள் எப்பவும் அழகுதாம்.அது இலங்கையென்ன பல்கேரியவென்ன எங்குமே இயற்கை விரிந்து மேவுகிறது.ஆனால், மனிதர்கள்தாம் அவற்றைக் கெடுக்கிறார்கள்."


"பல்கேரியாவுக்கோ அல்லது எந்தத் தேசத்துக்கோ இப்போது வித்தியாசம் இருப்பதில்லை.எல்லாமே உலகமய வர்த்தகத்துக்குப்பின் ஒன்றாகிவிட்டது.நான் பிரச்சனைகளைச் சொல்கிறேன்."என்று நறுக்காய் அவன் சொன்னான்.எனக்கு அவனிடம் கதைக்க இன்னும் இருப்பதாகவே பட்டது.

"நீ என்ன தொழில் புரிகிறாய்?" -நான்

"இங்கு கோட்டல் முகாமைத்துவம் படித்தபடி ஊர் சுற்றுகிறேன்!"என்றான் அவன்.

நல்லது.இந்தத் தேச மக்களையும் அவர்களின் இன்றைய வாழ்வையும் சொல்லேன் என்றேன்.

சிரித்தபடி சொன்னான்:பல்கேரியாவில் எழுபது இலட்சம் பல்கேரியர்களும்,வெளியுலகங்களில் ஒரு கோடி பல்கேரியர்களும் வாழ்கிறோம். படித்தவர்கள் பலர் வெளிநாட்டில். நாசாவில்மட்டும் 97 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள்.அந்தத் 97 வீதத்தில் கணிசமானவர்கள் பல்கேரியர்கள்.

எனக்குப் பல்கேரியர்களின் இன்றைய நிலைமைகள் ஓரளவு புரிந்திருந்தது.நான் அவன் பெருமிதத்தைப் பொடியாக்க விரும்பவில்லை.மேலும் தொடராது கடலில் இறங்க முனையும்போது அவன் விடுவதாக இல்லை.

பல்கேரியாவுக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமானோர் ஜேர்மனியர்கள்.

எத்தனையாண்டுகள் சென்றாலும் கடந்த காலத்தின் சாதகமானதும்,பாதகமானதுமான எல்லா நினைவுகளையும் அந்த இளைஞன் பகிர்ந்துகொண்டான்.எப்பவும்போலவே மௌனத்தை மட்டும் பதிலாக்க நான் விரும்பவில்லை.அவனோடு நட்புரீதியாக உணர்வுகளைப் பகிர்வது சாத்தியமாச்சு.இன்றைய பல்கேரியாவை அவன் மோசமான பல்கேரியாவாகவே பார்க்கிறான்.அதிகாரத்துவம் மாபியாத்தனத்துள் நிலைபெற்று,அரசாக மாறியுள்ளதாகவும்.அதிகாரத்திலிருப்பவர்கள் நடாத்தி முடிக்கும் அனைத்தும் பொய்யும் புரட்டுமிக்கதாகவும் இருப்பதென்றும், அன்று அரசவுடமைகளை நிர்வாகித்தவர்கள் இன்று அந்தவுடமைகளுக்குச் சொந்தக்காரர்களானபின் பல்கேரியாவில் பொருட்கள் குவிந்துகிடப்பதாகவும்,அதை நுகர்வதற்கான பணம் கண்ணில்படுவதில்லை என்றும் அலுத்துக்கொண்டான்.


வெய்யில் நம்மைச் சுட்டெரித்தது.

கடலலை வீசியடித்தது.எனக்குச் சிறிய சுனாமியாக அவைகள்பட்டன.குழந்தைகள் அலையோடு அள்ளுண்டு விளையாடினார்கள்.நான் நீருள் காலை விடுவதும் எடுப்பதுமாக நின்றேன்.கடற்கரை மனிதர்களால் நிறைந்திருக்கக் கடலலைகள் கவிதையாய் தெறித்தொதுங்கின.அமைதியாய் நீருள் அமிழ்ந்தபோது ஊர் ஞாபகங்கள் வழமைபோலவே வந்தன.மறுகணம் அடிக்கின்ற காற்றைப்போலவே அவை பறந்துஞ் சென்றபோது அங்குமிங்குமாக நீந்தினேன்.குழந்தைகள் நீந்துவதில் என்னைவிட வீரர்கள்.ஆழத்துக்குச் சென்றார்கள்.நானோ கால் எட்டும்வரை நீந்துவேன்.பின்பு எழுந்து நிற்பேன்.

அந்தக் கோட்டல் கடலின் மிக நெருக்கமான கரையோடு கட்டிமுடிக்கப்பட்டது.உல்லாசப் பயணிகளால் நிறைந்திருந்த கோட்டலில் குழந்தைகளுக்காவே பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.குழந்தைகள் அவற்றை மகிழ்வோடு அநுபவித்தார்கள்.கடற்கரை நிரம்பக் கோட்டல்களே முளைத்திருந்தன.மிகச் சிறபானதான கோட்டல்கள் உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காவே கட்டப்பட்டதாகப்பட்டது.இத்தகைய பெரும்பாலான வலயங்கள் பல்கேரியாவின் உண்மை முகத்தை முக்காடிட்டு மறைப்பதாகவே உணர்ந்தேன்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
27.07.2007

Sunday, July 22, 2007

தீர்வும்,தேசமும்.

தீர்வும்,தேசமும்.



ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.


தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த ஆனந்தசங்கரி,டக்களஸ் வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...அவர்கள் பாரீஸ்,ஜேர்மனியென ஜனநாயக அரசியல் பேசக் கிளம்பியுள்ளார்கள்.குரங்குகள் ஏந்தும் அப்பம்போல் தீர்வுப்பொதிகொண்டு திண்ணைகளில் தவமிருக்கிறார்கள்.


இலங்கைச் சிங்களத் தேசமானது தமிழ்த் தேசத்தின் இருப்பை உணரத் தொடங்கியுள்ளது.இன்றைய கணிப்பீட்டின்படி ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் ஒழுங்கமைந்த அரசியல் முன்னெடுப்பாக உயரும் தரணம் நிலைபெற்றுவரும்.அதன் சமூக ஆவேசம் அடிப்படையில் மிகவும் பலவீனமானதாக இருந்தாலும், யுத்தக் காலத்தின் புறச் சூழலைப் பார்க்கும்போது அதன் மேம்பாடானது ஓரளவு திருப்தியைத் தரக்கூடியது.இதையுணரும் சிங்களம் தமது கையை விலத்திச் சென்றுவிட்ட தமது "அரச ஆதிகத்தை" மீளவும் தமிழ்த் தேசத்தில் நிலைப்படுத்த முனைவதில் தீவிராமாகச் செயற்படுகிறது.அதன் உச்சக்கட்டமாக கிழக்கு மாகாண யுத்தத்தில் கிழக்குப்பரப்பை முற்றுமுழுதாகக் கையகப்படுத்தித் தனது ஆதிகத்தை மீளவும் நிறுவ முனைகிறது.சிங்கள அரசுக்குக் கிடைத்த தொப்பிக்கல வெற்றியானது அதை மென்மேலும் யுத்தத்தை நோக்கிப் பேரவா கொள்ள வைக்கிறது.அதற்காகப் போலித் தனமான சேவை நலத் திட்டங்களை,சலுகைகளை இந்த அரசு கிழக்கு மக்களுக்குத் தந்து ஆதிகத்தை நிலைப்படுதும்.இதற்கான ஒழுங்குகளாகப் பல வடிவத் திட்டங்கள் இந்திய மத்திய அரசால் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது.


தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.


இந்தவெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்களே புலிகள்தாம்.


புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள்.தமிழ்பேசும் மக்கள் தமது இயல்பான சமூக ஆவேசத்தை வெளிப்படுத்தும் போராட்டத்தை இதுவரை செய்யவில்லை.யார் யாருக்காவோ தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படையாகக் காண்பிக்கமுடியாதவொரு சூழலில் எல்லாமே மக்கள் சார்ந்த வெளிப்பாடாக அமைவதில்லை.மக்கள் பலமற்ற எந்தக் கோரிக்கையும் எங்கேயும் விலைபோவதில்லை!மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும்,தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள்.இது தோல்விமேல் தோல்வியாக அவர்களுக்கு நேரினும்,அவர்கள் தமது நோக்கு நிலையிலிருந்து கடுகளவு மாற்றமும் அடைய வாய்ப்பில்லை.புலிகளுக்குச் சரியானவொரு வழிகாட்டும் மத்திய குழு இல்லை.கட்சிக்குள்-அமைப்புக்குள் ஜனநாயத்தன்மை துளியளவுமில்லை.இது இயக்கவாத மாயையைத்தவிர வேறெந்தப் புரிவையையும் உறுப்பினர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பில்லை.


நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.அது ஆனந்தசங்கரி வகையறாக்கள் சொல்லும்படியுமில்லை.எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் தமிழ்ப் பொறுக்கிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும் பொறுக்கி அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இங்கே நாம் வெறும் வெட்டிகளாக இருத்தி வைக்கப்படுகிறோம்.புலிகள் எல்லா வகைகளிலும் இந்தப் போராட்டத்தைச் சிதைத்தது வெறும் தற்செயலான காரியமல்ல.இது திட்டமிட்ட அரசியல் சதி.நாம் நம்மையே ஏமாற்றுகிறோம்.நமது மக்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசியலை எங்ஙனம் முறியடிப்பது.மண்டை வலியெடுக்கப் புரண்டு புரண்டு சிந்திக்கிறோம்.நமது அரசியல் வெறும் விவாதங்களாகவே விரிவுறுகிறது.நம்மிடம் எந்தக் கட்சிவடிவமும் இல்லை.நமது மக்கள் தம்மையும் தமது வாழ்வாதாரவுரிமைகளையும் வெறும் சலுகைகளுக்காக விட்டுவிட முடியாது.நாம் இதுவரை இலட்சம் மக்களைப் பலி கொடுத்துவிட்டோம்.இதற்காகவேனும் நமது உரிமை நிதர்சனமாகிவிட வேண்டும்.இதைச் சாத்தியமாக்குவதற்கான ஒருயொரு துரும்பு நமது மக்களே.அந்த மக்களோ இன்று அடிமைகளிலும் கேவலமாக நடாத்தப்படும்போது அவர்களின் உரிமைபற்றி அவர்களுக்கே தெளிவில்லை.


எல்லாம் ஒரு தற்செயல் நிகழ்வாக அவர்கள் உணருகிறார்கள்.மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை புலி எதிப்பாளர்களும்,இந்திய விசுவாசிகளும் செய்துவரும்போது இந்தக் கேடுகெட்ட புலிகளோ எந்த அரசியல் வியூகமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்!இவர்களுக்காக வம்புக்கு ஐரோப்பியப் புலம்பெயர்ந்த தமிழ் அகதிகள் ஒன்று சேர்ந்து கூடியழுவது பலம் தரும் விடையமல்ல.


இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!நாம் தமிழ் பேசுபவர்கள்.நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலைப் புலியெதிர்ப்புப் பூனாக்கள் செய்துவரும்போது நாம் மெளனித்திருக்க முடியாது!சித்தார்த்தனும்,டக்ளசும்,ஆனந்த சங்கரியும் அடுப்பூதுவதற்குக்கூட இலாயக்கற்ற கபோதிகள்.இவர்களுக்கு நவீன அரசியல்,அது கொண்டிருக்கும் பரிணாமம்,அது சார்ந்தெழும் பொருளாதார வியூகங்கள்-விஞ்ஞானம்,இன உளவியல் பற்றியெந்த அக்கறையுமில்லை.ஒரே நோக்கம் பதவி,பந்தா,பணம்,பொருள்.நமக்கோ நமது வரலாற்றுத் தாயகம் சிதைவதில் வேதனை.நம் மக்களின் எதிர்காலம் அழிந்து,அவர்கள் அடிமைகளாக வாழ்வதற்காகவா நாம் இதுவரை கற்றோம்.உலகமெல்லாம் சென்று உருப்படியான உண்மைகளை உணர்ந்தும் அதைப் பலத்தோடு நமது மக்கள் சமூகத்துள் பரிசோதிக்க முடியவில்லையானால் நாம் யார்?காட்டுமிராண்டிகளைவிட மோசமானவர்களா?நமது மக்களை ஏமாற்றும் துரோகத்தை நாமும் செய்துவிட முடியாது.இதோ உயிர் வாழ்கிறோம்.இது உண்மையானது.எனினும்,நாம் அடிமைகளாகவும் நமது வாரீசுகள் நாடற்ற கபோதிகளாகவும் அந்நிய மண்ணில் தவிக்க எங்கள் கையாலாகத் தனமும் காரணமே.புலிகள் என்ற ஒரு குழு தமிழரின் எல்லா அறிவுசார் மதிப்பீடுகளையும் தீர்மானிக்கமுடியாது.அவர்கள் அங்ஙனம் செய்வது துரோகத்தனமாகும்.நாம் நடாற்றில் தவிக்கும்போது தமது பதவிகளுக்காக யாராவது ஒரு தமிழர் காரியமாற்றுவது முழுமொத்தச் சமுதாயத்தையுமே புதை குழிக்குள் தள்ளுவதாகும்.


இந்தத் தரணம் பொல்லாத தரணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இது ஏற்புடையதல்ல.நாம் சளையாதவர்கள்.எங்கள் உடல்வலு மிகப் பெரியது.நாம் தொடர் உழைப்பாளிகள்.எங்கள் நாணயம் உலகத் தரத்தோடு ஒப்பிடக்கூடியது.ஆனால,; நமது அறிவு உலகத்தோடு ஒப்பிடத்தக்கதல்ல.நாம் அறிவுடையவர்களா என்பதில் எனக்குச் சந்தேகம்.எனது சமுதாயம் இவ்வளவு மூடர்களாகப் பதவிக்கும்,பவிசுக்கும் தலை சாய்ப்பதா?இந்தச் சமுதாயம் தன் வீரியத்தை இழந்து அகதிகளாக அந்நிய தேசமெங்கும் சருகாக அலையும்போது என்ன தேவையிருக்கு நக்கிப் பிழைப்பதற்கு?உனது தேசம் உருப்படியாக உருப்பெற்றாகவேண்டும்.அதைச் சிங்களதேசமும் இந்தியாவும் உணர்கிறதோ இல்லையோ நாம் அந்த வழியில் சிந்திப்பதற்குப் புலிகள் தடையாக இருப்பதே இன்றைய வேதனையான விஷயமாகும்.புலிகளின் வர்க்க நலன் எம்மைப் படுகுழியில் தள்ளிச் சிங்களத் தேசத்தின் நவீன அடிமையாக்கும் அரசியலை அது செய்துவருவது இதுவரை நாம் உணரத்தக்க அரசியலாகும்.இன்றைய இந்தப்(கிழக்கு யுத்தம்) பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.


மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால் யுத்தம் செய்வதில் நோக்குடையவர்களாகவும்,அந்தத் தரணத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் புலிகள் மார்தட்டிக் கிடக்கிறார்கள்.


நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.
எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.
இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்.



இதை எதிர் கொள்வதற்கான எந்த வியூகமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில் இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சா¡ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனைகிறது.


இதன் அப்பட்டமான வடிவமே இராஜபக்ஷவின் "நாம் இலங்கையர்கள்"எனம் வாதம்.இது சாரம்சத்தில் சிறுபான்மையினங்களையும்,அவர்களின் பண்பாட்டையும் மறுத்தொதுக்கிறது.இனவாதத்தைப் புதியபாணியில் தேசியக் கோசமாக்கிறது.இதற்கு இன்றைய பல்தேசிய உலகமயமாக்கல் ஏதுவாகச் செயற்படுகிறது.புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை.உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. இங்கேதாம் மகிந்தாவின் வியூகம் தொடர் வெற்றிகளைப் பெறுகிறது.அது இராணவரீதியாகவும்,அரசியல் ரீதியாகவம் பலமுடைய வெற்றிகளையீட்டுவதற்கு நமது சிந்தனா முறையின் வீழ்ச்சியல்லக் காரணமாகும்.இதன் காரணத்துக்கு எமது வர்க்க உறவுகளே காரணமாகிப் போகிறது.நாம் வெறும் பிற்போக்குவாதச் சக்திகளோடு கூடி குலாவிய அளவுக்கு முற்போக்குத் தளங்களை அண்டவேயில்லை.நமது காலாகாலமான ஓட்டுக் கட்சி அரசியலானது பிற்போக்குத் தனத்தின் கடைக்கோடி அரசியலையே தமிழரின் வீர அரசியலாக்கியது.அதன் அறுவடையே இன்றைய இந்தத் தோல்விகள்,குழறுபடிகள்-குழிப்பறிப்புகள்.ஒவ்வொரு பிரதேசமும் தனக்கெதிராகவே செயற்படுகிறது.குறுகிய நலன்கள் எதிரிக்கான நீண்டகால நலன்களை உறுதிப்படுத்துகிறது.தமிழர்கள் தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது மக்களை உயிரோடு புதைப்பதாகும்.


இத்தகையவொரு சந்தர்பத்தில் ஜேர்மனி,பிரான்ஸ் என்று ஊர் சுற்றித் திரியும் புலியெதிப்புக் கபோதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களக்கான "தீர்வுப் பொதிகளை"தயாரித்து உலக அங்கீகாரத்துக்காகத் காத்திருப்பதென்பது இந்தியாவின் நலனை ஐரோப்பாவினது ஒத்திசைவோடு இலங்கையில் ஊன்றுவதற்கானதாகவே பார்க்கலாம்.இப்போது உலகம் சுருங்கிவிட்டது.இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இரு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றி வருகிறார்கள்.இவர்களே தமது பழைய பெரிச்சாளிகளை ஜேர்மனியிலும் பிரான்சிலும் சந்தித்து அனைத்து ஒத்துழைப்பையும் மக்களின் பெயரால் செய்து தரும்படி காத்துக்கிடக்கிறார்கள்.



ப.வி.ஸ்ரீரங்கன்
22.07.2007













Thursday, July 19, 2007

பல்கேரியப் பயணம்.

பல்கேரியப் பயணம்.


"மழை கொட்டிக்கொண்டிருக்கு,மின்னல் வெகுவாக இடியோடு மல்லுக்கட்டியபடி."எனக்கு
மழையென்றால் அதியசயத்தக்க இன்பம்,என் மனதெங்கும் கரை புரண்டோடும்.இதை நான்
எப்போதுமே உணாந்தபடி."என்ற கனவோடு சின்னராசா மழையைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.இவன் எந்தப் பொழுதில்,எந்த மாதிரியிருப்பானென்று எவருக்கும்
தெரியாது.மிகக் கொடுமையாளனாகவும் மிக நல்லவனாகவும் இருந்திருக்கச் சாத்தியங்கள்
கூடியபோது அப்படியே இருந்திருக்கிறான்.



வெளியில்
மெளனித்துக் கிடக்கும் காலத்தில் எப்போதும் அதிர்வுகளைச் செய்தபடி சிந்து
இருக்கிறாள்.அவளுக்கு இது முழுமுதற் பொழுதாகவும்-முயற்சியாகவும்
இருக்கலாம்.காலத்தில் வாழும் சிலருள் அவளும் ஒருத்தியாக இருப்பதாகச் சொன்னால்
மேலும் பொழுதுகள் கடந்துவிடும்."நான் திசை தெரியாதிருக்கும் கடல் வழி நடப்பதில்
அதிகம் நாட்டமுடையவள்" என்று அடிக்கடி சொல்வதில் சிந்து பகா சூரி.அவளுக்கு
அவசியமில்லாதவற்றுள் அதிகப்படியான வார்த்தைகளைக் கொட்டியபடி அதை அவசியமாக்குவது
அவளுக்கு அதிகமான இன்பத்தைக் கொடுத்தபடியிருக்க அறுப்பான் சின்னவனுக்கு
எப்பவுமே
அகதியத்திலிருந்து அறுந்து தொலைவதில் கற்பனைகள்
அதிகம்."
மக்களுக்குச் சேவை செய்பவர்கள்.

இந்தப் பொழுதில் ஒரு தேசம் நோக்கிச் செல்வதற்குப் பயணிப்பதே ஆவலாக இருந்தது.அகதியத்தைத் தொலைப்பதற்கு மாற்றாகவே இந்தப் பயணிப்புகள் மனதுள் விரிவது வழமை.

எப்பொழுதும்போலவே இந்தப் பயணமும் பெரும் தொகைப் பணத்தைத் தின்றபோதும் இந்த நாட்டைப்பற்றிய பிரத்தியேக எதிர்பார்ப்பு அதைப் பெரிதுபடுத்தவில்லை!


குழந்தைகளின் பள்ளி விடுமுறையானது எனக்குமான விடுதலையாக விரிந்துவிடும்.இது காலத்தால் தீர்மானிக்கப்பட்டதல்ல.வர்த்தக வசதிகளால் தீ¡மானிக்கப்பட்ட சூத்திரம்.


இவ்வாண்டு ஐரோப்பாவின் வாசல் நோக்கிப் பிரயாணித்தல் நோக்கமாகவிருந்தது.

மக்கள் வாழ்விடங்கள் வகை மாதிரிக்கு


உலகுக்கு:பல்கேரியா-அந்தத் தேச மக்களிடம்:புல்காறியா.


தேசத்தின் மூன்றாவது பெரிய நகரமான வார்னா(ஏயசயெ) விமான நிலையத்தை அடைந்தபோது தேசத்தின் வளங்கள் எத்தகையது என்பதை அறிவதில் நாட்டமாகியது.


முன்பு சோசலிசத் தேசமென்று அறியப்பட்ட தேசம்.


இது பெரும்பாலும் அதிகார வர்க்க அரசமுதலாளியத்துக்கு அன்று புனையப்பட்ட "இடு" பெயர்!எனினும், இந்தத் தேசத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தோல்வியின் இரகசியம் தெரிகிறது.பெரும்பாலும் பல்கேரியா ஒரு இனத்துக்கான தேசமல்ல.அங்கே பல்கேரிய இனம் 83,9 வீதமும், துருக்கிய ஒஸ்மானிய இராச்சியத்தின் வழிவந்த துருக்கிய இனம் 9,4 வீதமும் இந்தியத் தலையிலிருந்து இடம் பெயர்ந்து எங்களைப்போல் அலையும் மக்களான சிந்தி ரோமா 4 வீதமும்,2 வீத ருஷ்சிய மற்றும் ஆர்மேனிய இனக் குழுக்களும் வாழ்கிறார்கள்.என்றபோதும் பல்கேரிய இனத்தின் அதிவேகமான இனத்துவ வெளிப்பாடுகளே ஆதிக்கஞ் செய்கின்றன.சிறுபான்மை இனக் குழுக்கள் தேசத்தின் விளிம்பில் வாழும் நிலையைக் காணத்தக்கதாக இருக்கிறது.


1878 வரை துருக்கியச் சாம்பிராச்சியத்தின் பிடிகள் நிலவிய பல்கேரியா இது.இந்தத் தேசத்தில் இறங்கிய தரணத்தில் முன்னாள் சோசலிசக் கனவுகளும் அந்த மக்களின் மனங்களையும், இன்றைய ஏகாதிபத்தியங்களின் பல்தேசியப் பகாசூர வர்த்தக முன்னெடுப்புகளையும் அறிவதில் நாட்டம் கொண்டேன்.தெருவெங்கும் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களும்,கையேந்தும் மக்களும்,கண்ணீர் மல்கச் சொல்லும் கதைகளுமாகப் பல்கேரியா இன்று "வளங்கொண்ட"நாடாகிறது!


வர்த்தகச் சாம்பிராச்சியத்தைக் கைப்பற்றியவர்கள் யார்?


உல்லாசத் துறையைக் கைப்பற்றியவர்கள் யார்?


நாட்டை ஆள்பவர்கள் யார்?


மக்கள் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொள் முதல் செய்யும்-வாங்கும்-நுகர்திறன் கொண்டிருக்கிறார்களா?


இவை கேள்விகள்.


கண்ணில் எதிர்பட்ட எல்லோரிடமும் கேள்விகளைக் கேட்டேன்.


"நீ எந்தத் தேசத்தில் இருந்து இங்கே வந்தாய்?-இந்தியனா?"என்ற கேள்விகளோடு இந்தியர்கள் படித்தவர்கள் என்ற பதிலும் வந்தது.கேட்கப் பெருமையாய் இருந்தது.


ஒரு தேசம் சிதைவுகளுக்குள்.இன்றைய அதிகாரமிக்கவர்கள் எல்லோருமே அன்றைய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.அவர்களின் இன்றைய இருப்பு மாபியாத்தனத்தின் வெளிப்படையான ஒடுக்குமுறையோடு சாத்தியமாகிறதாகச் சொன்னார்கள்.


"இன்றோ அங்காடி எங்கும் பொருட்கள் குவிந்திருக்கிறது.ஆனால்,வேலையில்லை.பணமும் இல்லை.அன்றோ வேலையிருந்தது,பணமும் இருந்தது.ஆனால் அங்காடிகள் வெறுமையாக இருந்தன.பொருட்களை வேண்டக் கியூ வரிசையாக மக்கள் தவித்தார்கள்."இந்தப் பதில் என்னை மீளவும் சுட்டது.

இது குறித்துச் சிந்திப்பதில் கஷ்டமெதுவுமில்லை.

பதிலும் மிக எளிமையானது.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
19.07.2007


ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...