Sunday, September 24, 2006

சமாதானம்,ஜனநாயகம்...

சமாதானம்,ஜனநாயகம்...


உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.

"உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:"Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden."என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது.

இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தரணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.

தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் இனத்துவ முரண்பாடுகள் தேசியவிடுதலையைக் கோரிக் கொண்டபோது, அதை அங்கீகரிக்க முடியாத அந்நிய தேச நலன்கள் நம்மை வெறும் இனக் குழுக்களாகி,நாகரீகம் அற்றவர்களாக்கிக் குறுக்கி அரசியல் செய்யும் கரவு நிறைந்த அரசியலில்"ஜனநாயகம்"எமக்குக் கற்பிக்கின்றன.

இதையும் புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ. வானொலியில் கவிதைகட்டி வம்பளக்கின்றனர். இந்தக் குரங்குகள் உதாரணங்காட்டும் நாடுகள்தாம் மேலே நான் காட்டும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.இவர்கள் கூறித்திரியும் "ஜனநாயகம்"அதன் உள்ளடக்கமென்பது இந்தக் கோலமாக இருக்கும்போது, "சங்கரி ஐயா"ஊடாக இலங்கையில் "ஜனநாயகம்" மலரப் போவதாகக் கவிதைபாடும் காகங்களை என்னவென்பது!


"ஜனநாயகம் உயிர்த்தெழும்" ஆம் ரீ.பீ.சீ.க்காரரின் பணப்பெட்டிக்குள் அது தவம் கிடக்கும்போது கட்டாயம் உயிர்த்தெழும்.மக்களை இன்னும் மடையர்களாக்க முனையும் புலிகளைப் போலவே புலியெதிர்ப்பு "மாபியாக்களும்" மக்களை இன்னும் மடையர்களாக்கி வரும்போது, அதற்குத் தலைமை கொடுக்கும் ஜெயதேவன்களோ அல்லது மனிதவுரிமை பேசும் பசீர்களோ மேலே காட்டிய நாடுகளின் பம்மாத்துக்கு ஒத்தூதுவதைத் தவிர வேறொரு மண்ணையும்-எமது இனப் பிரச்சனையில் காத்திரமான பங்கை வகிப்பதற்கில்லை.

இவர்கள் அந்நியர்களின் நலன்களை இலங்கைக்குள் திணிப்பதற்குதவும் அற்ப மனிதர்கள்தாம் என்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடு நிறுவ முடியும். எமது மக்கள் இனங்களாகவும்,மதக் குறுங் குழுக்களாகவும் சிதறுண்டு முரண்பாடுகளைக் கையாள முடியாத வெறும் மந்தைக் கூட்டமாகச் சண்டையிட, இந்த இவர்கள் கூறும் ஜனநாயக நாடுகளே முதன்மையான காரணகர்த்தாக்களாக இருக்கும்போது இந்தப்"படித்த அறிஞர்கள்"எங்கள் மக்களுக்குப் "புலிப் பாசிசம்,ஜனநாயகம்"பற்றிப் பாடம் நடாத்துகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை 16.09.2006 அன்று அப்பாவி முஸ்லீம்களை பொத்துவிலில் கொல்லும் அரசியல்தாம் என்ன?

இதற்குப் பின் நோக்கம் பெறும் அரசியல் நோக்கு நிலை என்ன?

மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால்,இத்தகைய ரீ.பீ.சீக் கும்பல் நனைந்த இடத்தில் குழி தோண்டுகிறது.


உலக அரசுகளின் அடிபடைச் சட்டங்கள் வன்முறைப்படைகளால் "ஜனநாயகம்" காக்கப்படுமென்று ஒப்புதல் வழங்கும்போது இது குடிசார் உரிமைகளுக்கு எதிராகத் தனது நிலையை எடுக்கிறது.சிவில் சமூகம் என்ற இந்த அரசியல் வார்த்தையே ஜனநாயகத்தின் பொய்மைத் தன்மையில் கானல் நீரகவே இருக்கிறது.

இந்த ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் அற்பத் தனமான கனிவளச் சுரண்டலுக்கும்,தமது நிதி மூலதனத்தைக் காப்பதற்கும் தொடர்ந்து தமது ஜந்திரங்கள் இயங்குவதற்கான முறைமைகளில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போடுவதற்குமாக அர்த்தம் பெறுகிறது.

இதனால்தாம் நாம் "ஜனநாயகம்"என்று இவர்கள் பிதற்றும் இந்தச் சாமான் போலியானது, மக்கள் தமது இறைமைகளைக் காப்பதற்காக புதிய ஜனநாயகத்தை நிறுவும் புரட்சியை முன்னெடுக்காத வரை இது சாத்தியமில்லை என்கிறோம்.இத்தகைய தரணங்களை மறுத்தொதுக்குவதற்கு இந்தவுலகத்துக்கு எந்த நியாயப்பாடுமில்லை.

இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் "புலிகளின் பாசிசத்தை" மையப் புள்ளியாக்கும் இந்தப் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு உலகமே புலிகளுக்குள் அடங்குவதாகப் பிரமை தட்டுகிறாதா அல்லது திட்டமிட்டு மக்களை இத்தகைய மக்கள் விரோத அரசியலால் காவுகொள்வது நோக்கமா?

உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.

இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.

இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.

கூடவே இப்போது "ஆயுதங்கள் மக்களைக் கொல்வதில்லை.மனிதர்களே மக்களைக் கொல்கிறார்கள்.ஆயுதங்கள் மக்களைக் காப்பதற்கானது".எனும் மக்கள் விரோத ஏகாதிபத்தியக் கருத்தானது, இத்தகைய நோக்கு நிலையின் இன்னொரு வடிவமாகும்.இது தமது இருண்ட பக்கங்களான குவிப்புறுதிப் பொருளாதார முன்னெடுப்பின் வாயிலான அனைத்து வகைக் காரணிகளையும்,அது யுத்தமானதாக இருந்தாலென்ன அல்லது உயிர்கொல்லி ஆயுதத் தயாரிப்பானதாக இருந்தாலென்ன அனைத்தும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் நலனின் வெளிப்பாடாக்க முனைகின்றன.இதையும் வாந்தியெடுக்கும் தேனியின் அர்சுனனுக்கு தமிழ் மக்கள் இன்னும் விட்டேந்திகள்தாம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2006

Sunday, September 17, 2006

மீண்டும் நாசிகளாகிவரும்...

ஜேர்மனியர்கள்:மீண்டும் நாசிகளாகிவரும்...


இந்தவுலகத்தில் மீண்டும்,மீண்டும் இனவாதிகளே மக்களின் அதீத பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கும் பிதாமக்களாகி வருகிறார்கள்.இதுவரை பலகோடி மக்களை இரத்த வெள்ளத்தில் அள்ளிச் செல்ல வழி வகுத்தவர்கள்,பல கோடி அப்பாவிகளை வருத்தித் தமது தொழிற்சாலைகளில் புதைத்தவர்கள்.இதனால் மாபெரும் நிதி மூலதனத்தைப் பெருக்கியவர்கள்.இவர்கள் எல்லோரும் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் பிதா மக்கள்!இவர்களின் தயவு மீளவும் ஒவ்வொரு இனங்களுக்கும் தேவையாக இருக்கிறது.இந்த இனவாதிகளை உற்பத்தி பண்ணும் இந்தப் பொருளாதார அமைப்பில், சிக்குப்பட்டுத் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் படும் சிக்கல்களை, அவர்களே முழுமையாக அறிவதற்கில்லை.

தேசியத் தலைவன்:ஊடோ வைக்ற்
நம்மிடம் வந்து சேர்ந்த வானொலிகளும்,தொலைக்காட்சிகளும் சினிமாவையும்,நாடகத்தையும் உலகின் எல்லைகளாக்கியபின் நம் மக்களிடம் பரந்த உலக நடப்புகள்"என்ன செல்வி பார்தீரோ?"என்ற கதையாய் போகிறது!

இந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் மெல்ல மாற்றமுறும் புறச் சூழலை நம்மில் எத்தனைபேர்கள் புரிந்து கொள்கிறோம்?

நமது வாழ்வும் சாவும் இங்குதாம் என்றாகிய பின்பும்
இது குறித்து என்னத்தைப் பார்க்கவேணும்?-நீங்கள் நகைப்பது புரிகிறது!

எமது அடுத்த தலைமுறை இங்கே வாழ்வது சாத்தியாமா?

அவர்களது கல்வி நேர்த்தியகச் செல்லும் சூழல் தொடர்ந்து நிலவ முடியுமா?

எங்கள் குழந்தைகள் எந்தக் கவலையுமின்றித் தனியே உலாவிக்கொள்ளும் இந்தச் புறச் சூழல் எதுவரை நீடிக்கும்?-இது கேள்விகள் மட்டுமல்ல.வாழ்வின்,எதிர்காலத்தின் நோக்கு நிலைகளும்தாம்!

இன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலில் இனவாதக் கட்சிகள்-நாசிகள் பதவிக்கு வருகிறார்கள்.

உப தலைவன்:கொல்கா அப்பில்


கொலண்டில்,
அவுஸ்திரியாவில்,
சுவிசில்,பிரான்சில்,டென்மார்க்கில்,
இப்போது ஜேர்மனியில்
பற்பல மாநிலத்தில் பலம்பொருந்திய கட்சியாகத்
தங்கள் உறுப்பினர்களை
பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.


இணைந்த ஜேர்மனியில் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள இடைவெளி இருவேறு வகுப்பாக மக்களைக் கூறுபோட கிழக்கு ஜேர்மனியர்கள் பொருமுவதும் கூடவே மேற்கில் தம்மைவிட வேலை வாய்ப்புக்களோடு வாழும் அந்நிய தேசத்தவர்களை-கருப்பு நிறத்தவர்களைக் கண்டு பெரும் மன வதைக்குள் வீழ்ந்து அவர்கள்மீது தீராத பகையோடு வாழ்கிறார்கள்.இவர்கள் மிக இலகுவாக இனவாதக் கட்சிகளிடம்-நாசிகளிடம் தம்மை இழக்க, இந்த நாசிகளும் தொடர் தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கிறார்கள்.இது ஒரு சுருக்கமான விளக்கம்.

இதற்குப் பலபத்துக் காரணங்கள் உந்துதலாக இருக்கிறது அவற்றை விளக்கியெழுத நேரமில்லை.

இந்த ஜேர்மனியின் சமூகக் கட்டுக்குக் கீழே நாசியக் கருத்தியல் தொடர்ந்து நிலவுகிறது.இத்தகைய நிலையில் கருத்தியலை உருவாக்கும் வெகுஜன ஊடகமாகத் தொடர்ந்து இயங்கிவரும் கல்வி ,நாசியக் கனவுகளோடு நிலைபெற்று வருகிறது.இது அந்நிய எதிர்ப்பைத் தனது பிரச்சார யுத்திக்காகத் தொடர்வதும்,அத்தோடு அதை பொருளாதார மட்டத்தில் பிரச்சனைக்கான மூலகாரணமாகவும் காணுகிறது.இதுதாம் இன்றைய நாசிகளை வெற்றிக்கிட்டுச் செல்லும் திறவு கோலாகிறது.

நிதி மூலதனத்தின் தீராத பாய்ச்சலால் பற்பல தொழிற்சாலைகள் மலிவுக் கூலிக்காக மூன்றாம் உலகுக்கு உற்பத்தியை மாற்றிவிட, ஐரோப்பிய நாடுகளில் வேலையற்ற பட்டாளம் பெருகிக் கொள்கிறது.இதனால் இளைஞர்களின் வேலைவாய்பு இல்லாமல் போகிறது.

இளைஞர்கள் கொதித்துப்போய் வீதிகளில் அலைகிறார்கள்.நாசிகள் வலையைப் போடும்போது இவர்கள் வசமாய் மாட்டுவதும் சுலபமாகிறது.வீதியின் ஓரத்தே ஒரு கருப்பு மனிதனைக் காணும்போது அவனைத் தாக்கித் தமது வெறியைத் தீர்ப்பதும் நிகழ்கிறது.இது என்ன வகை எதிர்காலத்தை நமக்குத் தரும்?

நாளொன்றுக்குப் பத்துப் பேராவது நாசிகளால் ஜேர்மனியில் தாக்கப்படுகிறார்கள்.மாதத்தில் ஒருவராவது உயிர் பிரிய நேரிடுகிறது.இந்த இலட்சணத்தில் நாசிகள் ஆட்சிக்கட்டுக்கு வருகிறார்கள்.

ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,ஊடகத்துறையினர்,

அரசவ+ழியர்கள்,நகரசபையினர்கள் என்று பற்பலரும் நாசியக் கருத்துகளுக்குள் தொடர்ந்து மூழ்கி வருகிறார்கள்.
அந்நியர்களைக் கொல்லும் அழிவுப்படை


வேலையற்ற பாட்டாளிகளும்,உதிரிப்பாட்டாளிகளும்,வேலையோடு ஏனோதானேவென்று வாழும் மனிதர்களும் நாசியத்தையும்,கிட்லரையும் விரும்புகிறார்கள்.

இதோ,இன்று நடந்த மாநிலத் தேர்தலில் நாசிக்கட்சியான என்.பீ.டி. வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை தொடர் வெற்றிகளோடு வளரும் இக் கட்சி கடந்த சக்ஷன் மாநிலத் தேர்தலில்(die NPD im September 2004 in Sachsen mit 9,4 Prozent für Aufsehen gesorgt) 9.4வீத வாக்குகளைப் பெற்று டசின் கணக்கான உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது.இப்போது இன்றைய மெக்கலன்பேர்க் போர்பொம்மன் மாநிலத் தேர்தலிலும்(Die NPD hat bei der Landtagswahl in Mecklenburg-Vorpommern offenbar den Einzug in den Schweriner Landtag geschafft. Nach den Hochrechungen von Infratest dimap am Wahlabend kommen die Rechtsextremen auf rund sieben Prozent der Stimmen.) 7 வீத வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களை மாநில அவைக்கு அனுப்பி வைக்கிறது.

இது வரப்போகும் சோகம் நிறைந்த இனவாதத் தாக்குதல்களுக்கு
வழிவகுக்கும் அரசியல் வெற்றிகள்.

நாம் எதை அறிவோம்?

நமது நாடும் இனவாதிகளிடம் சிக்கித் தவிக்க,நாமும் வெள்ளை இனவாதிகளிடம் நமது வருங்காலச் சந்தததிகளைச் சிறைப்படுத்த நமக்கென்றொரு போராட்டம்,ஈழம்,தனிநாடு...

ப.வி.ஸ்ரீரங்கன்
17.09.2006

Saturday, September 16, 2006

இந்திய அமைச்சர்: பாரிய சொத்து...

இந்திய அமைச்சர்:ஜேர்மனியில் பாரிய சொத்து...


இன்று இந்த இந்தியத் தேசத்தில் பல கோடி மக்கள் வறுமையிலும்,வேலையில்லாத் திண்டாட்டத்திலும் கிடந்து செத்து வரும்போது, இந்திய அரசியல் வாதிகள்,அமைச்சர்கள் இந்தத் தேசத்தைச் சுரண்டி அந்நிய தேசங்களில் சொத்தைச் சேர்க்கிறார்கள்.இது இந்த மண்ணின் சாபக்கேடாகவே இருந்து வருகிறது.ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தமது ஆட்சிக்காலத்தில் மாநிலத்தையோ அல்லது முழுத்தேசத்தையோ முற்றுமுழுதாக மொட்டையடித்துத் தமது பினாமிகள் மூலமாகச் சொத்துக் குவிப்பது சர்வ சாதாரணமாகிறது.




இந்தியா மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையிட அனுமதிக்கிறது!

தேசியம்,தேசவொற்றுமை,தேசியக் கொண்டாட்டம்,இந்தியச் சுதந்திர தினமென்றெல்லாம் மக்களைக் குருட்டுத் தேசிய வெறிக்குள் கட்டிப்போட்டுத் தமது நலனை மையப்படுத்தி, இந்தத் தேசத்தைக் கொள்ளைபோடும் இந்திய அரசியல் வாதிகளை மக்கள் இனம் காணுவது மிக முக்கியமாகும்.


நானறிய ஜேர்மனியச் சிறு நகராமான சுவெலம்(Schwelm) ஆஸ்பத்திரியில் ஒரு கேராள மலையாளிக் குடும்பம்,பெயர் தடாதில்( Family Mercy and Joseph Thadathil)- கணவனும் மனைவியுமாக நோயாளிகளைப் பராமரிக்கும் தாதி வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்கள் மிகச் சாதரணமான"கண்காணி"(இலங்கையில் நோயாளிகளைப் பராமரிப்பவர்களை இப்படிக் கூறுவது வழமை)வேலை பார்ப்பவர்கள், பெரும் அடுக்குமாடி வீடமைத்து திறக்க முடியுமா?


43 வீடுகள் கொண்டதும் கூடவே வைத்தியர்கள் "கிளினிக்"வைப்பதற்கும் கடைகள் நடத்துவதற்குமான இந்தக் கட்டிடம் நிச்சியம் ஜேர்மனிய யுரோவில் 15 மில்லியன்கள் முடியும்.அதவது இந்திய ரூபாயில் 75 கோடிகளாகும்.

இவ்வளவு பெருந்தொகை முடியும் இக்கட்டிடத்தை ஒரு பெரும் தொழில் நிறுவனமே கட்டிக் கொள்ள முடியும்.


ஜேர்மனியில் இத்தகைய சிறு தொழிலாளக் குடும்பம் இதைச் சாத்தியமாக்க முடியாது.

தடாதில் குடும்பமோ மிகச் சாதாரணமான மருத்துவத் தாதித் தொழில் பார்ப்பவர்கள்.இதே வைத்திய சாலையில்(Marienhospital)-மாரியன் கொஸ்பிட்டலில்- எனக்குப் பல பெரும் மருத்துவர்களைத் தெரியும்.அந்த வைத்திய சாலையில் இன்று பெரும் மருத்துவப் பேராசிரியராகக் கடமை புரியும் ஒருவர் பெறும் மாதாந்தச் சம்பளம் வெறும் 4000.யுரோதாம்.இத்தகைய வைத்தியர்களே இப்படியொரு கட்டிடம் கட்ட முடியாது -ஏன் கட்டிடம் பற்றிப் பேசுவான்-தாம் சொந்தமாகக் குடியிருக்க ஒரு வீடு கட்டுவதே கடினமாக இருக்கும்போது, இந்த மருத்துவ தாதிக் குடும்பம் 15 மில்லியன் யுரோ பெறுமதியான தொடர் மாடிக் கட்டிடத்தைக் காகன்(Hagen) எனும் நகரத்தில் அமைத்து, இந்திய முதியவர்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு ஏதுவாக உதவுவதாகச் சொல்கிறது.இந்தக் காகன் நகரத்தில் வாழும் மலையாளிகள் சுமார் 15 குடும்பமே உண்டு.இதற்குள் வயோதிபர்கள்...என்னவொரு சுத்து.


கேராளவில் பிறந்து வளர்ந்த மத்திய மந்திரி(வெளிவிவகாரம்) வயலார் இரவி தனது பினாமியாக இந்த மருத்துவத் தாதிக் குடும்பத்தை கொண்டிருப்பாரோவெனச் சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியவில்லை.


இந்தியாவில் நடுத்தெருவில் மனிதர்கள் படுத்துறங்கும்போது, இந்திய அதிகார வர்க்க அமைச்சர் தனது பினாமிய+டாக மக்களின் பணத்தில் தொடர்மாடி கட்டித் திறப்பு விழா நடாத்துகிறார்,ஜேர்மனியில்!(இதோ பத்திரிகைச் செய்தியைப் படிக்கவும்).


மருத்துவத் தாதிக் குடும்பமான தடாதில் பெறும் மாதாந்த வருமானமானது அண்ணளவாக 1600. யுரோவாகும்.கணவனும் மனைவியும் சுமார் 2800. யுரோவை மட்டுமே மாத வருமானமாகப் பெறமுடியும்.இதுள் செலவுகள் தள்ளி மீதாமாவது 1000.யுரோவாகும்.இவர்களால் 15 மில்லியன் பெறுமானமான கட்டிடத்துக்கு வங்கியில் கடன் பெற முடியுமா?மாதாந்தம் வங்கிக்கு கட்டவேண்டிய தொகை மட்டும் 60.000.யுரோவாக இருக்கும்,- கட்டுக்காசு.இது கடன் பெற்றிருந்தால்...

அல்லது இந்தக் குடும்பம் போதைப்பொருள் கடத்தியிருக்கவேண்டும்.இப்படியானவர்களிடமே இவ்வளவு பெருந்தொகை புரளும்.

இதைவிட இந்த ஜேர்மனி இவ்வளவு பெருந் தொகையில் வீடு கட்டும் ஒரு சாதாரணக் குடிமகனை எப்படியெல்லாமோ தோண்டித் துருவி இப்பணத்தின் மூலத்தைக் கண்டுவிடும்.

இது அமைச்சரின் பணம்.இந்தியாவிலிருந்து சுவிசுக்குப் போய், ஜேர்மனியை வந்தடைந்து இருக்கணும்.இப்படி வந்ததனால் ஜேர்மனிய அரசும் ஒத்துழைக்கிறது.


வாழ்க இந்திய ஜனநாயகம்!,வளர்க அவர்கள் தேச பக்தி!!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.09.2006

Friday, September 15, 2006

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!

ஆனந்தசங்கரி:ஒரு பலி ஆடு!


தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது(தமிழ் மக்கள்) நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.


இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைத் தமிழரசுக் கட்சியென்ற "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீல்கள் அடங்கியவொரு கூட்டம்" மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்தது.அது இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்தது.இத்தகையவொரு பாரம்பரியமிக்க கட்சியின் காலவதியாகிப்போன தலைவர் ஆனந்த சங்கரிக்கு இந்திய அநுசாரணையுடன்,ஊக்குவிப்புடன்,பரிந்துரைப்போடு "யுனெஸ்கோ விருது" வழங்கப்படுகிறது.இது விருதுகள் குறித்துப் பிரமிப்புகளைக்கொண்ட தமிழர்களுக்குத் துரோகமாகவும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகஞ் செய்த ஆனந்தசங்கரிக்கு வழங்குவது முறையில்லையென்றும் சிறார்கள் கருத்தாடுகிறார்கள்.

இங்கே இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.சகாத்திய அகடமி விருதிலிருந்து நோபல் விருதுவரை அரசியல் நோக்கம் மறைமுகமாக இருக்கிறது.இந்த அரசியலுக்குள் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்கள்,பொருளாதார,அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.இதைக் காரணமாகக் கண்டுகொள்ள முடியாத தமிழ்ச் சிறார்களுக்கு "துரோகி ஆனந்த சங்கரிக்கு விருதா" என்ற ஆத்திரம்.இது இயல்பாக வரக்கூடியதுதாம்.தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தாய்க் கட்சியிலிருந்து அன்றய தமிழர் மகாசபை(மகாதேவா: ஐம்பதுக்கு ஐம்பது...) வரை ஆழம் காணமுடியாத துரோகங்கள் நிறைந்த வரலாறு காரணமாகிறது.இதையெல்லாம் கருத்தில்கொள்ளும்போது ஆனந்த சங்கரியென்ற அரசியல் சகுனிக்கு விருது வழங்க முனையும் இந்தியாவுக்குப் பல ஆர்வங்கள் காரணமாவது நாம் புரிந்துகொள்ளத் தக்கதுதாம்!


இந்த விருதுகளினூடாகத் தனது நலன்களைக் காப்பதற்கானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் இலங்கத் தமிழர்களிடம் தோற்றுவித்து,ஒளிவட்டம் கட்டும்போது,இத்தகைய ஆனந்த சங்கரிகள் மக்களின் அகிம்சைத் தலைவர்கள்,ஜனநாயகத் தலைவர்கள் என்ற காவடி ஏற்றப்பட்டு, உலக அரசியல் அரங்குக்கு அறிமுகமாக்கப்படுவது இந்திய அரசியல் விய+கத்தை இலங்கைக்குள் இழுத்து வந்து, அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்.இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தைச் செய்யும் புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கிய இந்தியா, இப்போது அந்தக் குறுங்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய விருதுகள் முனைப்படைகின்றன.

சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த ஆனந்த சங்கரிகள் அவசியமாகிறார்கள்.கூடவே ஆனந்த சங்கரியென்ற தமது கைக்கூலிக்கு சர்வதேச விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும் கோரும்போது, புலிகளின் கொலை அச்சுறுத்தலில் இருந்தும் தப்பிக்க வைப்பதற்கு இந்தியா மிகவும் பிரயத்தனப்படுகிறது.இன்றைய தமது நோக்கங்களைச் செவ்வனே செய்வதற்கும்,அதைக் "காலிப் பயல்" ஆனந்த சங்கரிய+டாக நியாயப்படுத்தவும், இந்த ஆனந்த சங்கரி அவசியமாகும்.இதைப் பொருட்படுத்திப் புலிகள் "ஆனந்த சங்கரியைப் போட்டால்" இலக்ஷ்மன் கதிர்காமனின் கொலை தந்த நெருக்கடியைவிட ஆனந்தசங்கரியின்மீதான கொலை மிகப்பெரும் அவப் பெயரையும் அரசியல் பின்னடைவையும் புலிகளுக்கு ஏற்படுத்தும்.இதை எதிர்பார்த்திருக்கும் இந்தியா நிச்சியம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்த சங்கரியைத் தனது கூலிப்படையால் ஒரு நாள் கொன்று, புலிகள்மீது அரசியல் பின்னடைவைச் செய்யும்.ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்த முனையும் இந்திய-இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடே இந்த விருதும்,ஒளிவட்டமும்.


ஆனந்த சங்கரிக்கு அறிவு மங்கிப் பதவி ஆசை,ஆனால் இலங்கை-இந்திய இராஜ தந்திரமோ தமிழ் மக்களை அவர்களது தலைமையாலயே கருவறுக்கிறது.இதில் இவர்கள் பெரிய சாதனையைச் சாதித்தே வருகிறார்கள்.

புலிகள் அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது துரையைப்பாவைக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள் ஆனார்கள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தாதவரை இத்தகைய அந்நிய அரசியல் விய+கத்தை உடைத்தெறிய முடியாது.

புலிகள் என்ன செய்தாகவேண்டும்?

தமிழ்பேசும் மக்களின் நலன்களை மையப்படுத்திய கோரிக்கைகளை முன் வைத்து அவர்களைப் போராடத் தூண்டுவதும்,தமிழ் இடதுசாரிகளை தமது வன்முறைக்குப் பலியாக்காது அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதும்,அத்தகைய தரணத்தில் மக்களின் நலன்சார்ந்து தமது அமைப்பை மத்திய குழுவின் ஆதிக்கத்துள் கொணர்வதும்,நியாயமான உட்கட்சி ஜனநாயகத்தைக் கோரித் தலைமையைத் தோற்றுவதும், புலி இராணுவத்தைப் புரட்சிகர யுத்த தந்திரோபாயத்துக்குள் திணித்து, அவர்கயைப் புரட்சிப்படையாகக் கட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது.இதனடிப்படையில் புரட்சிகர அரசியலை உள்வாங்கிச் சர்வதேச அரசியலை முன்னெடுக்காதுபோனால் புலிகளின் அழிவோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் அம்போதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2004

Sunday, September 10, 2006

தேசிய அரசும்,புலிகளும்...

தேசிய அரசும்,புலிகளும்
அந்நிய விய+கமும்.


>>இலங்கையின் ஓட்டுக் கட்சிகள்-போராளிக் குழுக்கள் அந்நியக் காலில் விழ்த்துவது இலங்கையின் எதிர்காலச் சந்ததியையே,எம் மக்களையும் தேசத்தையும் திருடும் யுத்தப் பிரபுக்களை நாம் அம்பலப்படுத்துவோம்-அறிவோம்.<<
(இலங்கையின் சிங்களக் கட்சிகளின் தலைவர்கள்தம் குழந்தை குட்டிகள் வெளிநாடுகளில்
படிப்பதும்,வாழ்வதும்போன்றே புலிப்பிரமுகர்களின் மனைவிமார்கள் குழந்தைகள்
வெளிநாட்டில் வாழ்வதும்,படிப்பதும் சாத்தியமாகியுள்ளது.-இதுவொரு அரசியல்.ஆனால்
நாமதைப் புரிந்து கொள்வது அவசியம்.இந்தவொரு முனையில் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள்
எங்ஙனம் நேர்கோட்டில் சிந்திக்கின்றனவென்பதைக் கட்டுரையின் பின்பகுதியில்புரிந்து
கொள்ள முனைவோம்.)

இன்று, இலங்கை இனப்பிரச்சனைக்காகவே ஒரு தேசிய அரசாங்கம் அவசியமாக இருப்பதாகவும்,அதன் வழி முழுமொத்தக் கட்சிகளையும் ஒரு நோக்கத்துக்குள் இணைத்து, இலங்கை இனங்களுக்குள் நிலவும் முரண்பாட்டைத் தீர்த்திடலாமென அரசியல் பரப்புரைகள் நகர்த்தப்படுகிறது.இத்தகைய பரப்புரைக்கு ஏலவே திட்டமிட்டு, கருத்தியல் தளமொன்றை மெல்லவுருவாக்கிய அரசியல் நகர்வுக்குப் பற்பல சிறு குழுக்களும்,புலிகளுக்கு எதிரான-புலிகளால் எதிர் நிலைக்குத் தள்ளப்பட்ட அமைப்புகளும்,அத்தகைய அமைப்பகளுக்குச் சாமரம் வீசிப் பதவிகளைப் பணத்தைப் பெறும் தனி நபர்களும்,இன்னும் ஜனநாயத்தையும்,அரசியல் அமைதியையும்,இனப்பிரச்சனையையும்-தீர்வையும்; அப்பாவித்தனமாகப் புரிந்த சாதரண நபர்களும் பக்கப்பலமாகவிருந்து, இந்தத் தேசிய அரசாங்கம் எனும் விய+கத்துக்கு மக்கள் கருத்தாரவுப் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமீத்து அரசியல் காய் நகர்த்தலில் மலையக மக்கள் முன்னணியும்,இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் கூட்டாகவே ஆளும் இராஜபக்ஷ ஆட்சியுடன் இணைக்கப்பட்டதும்,அந்தக் கட்சிகளின் சுயதீனமான முடிவோ அல்லது அவைகளின் ஊசாலாட்டமான முதலாளித்துவ உள்ளடக்கத்தின் வினையாற்றலோ காரணமாக இருப்பதற்கல்லவென்பதும் பலருக்குப் புரிந்த விடையம்தாம்.கடந்தகாலத்திலிருந்து இன்றைய தேசிய அரசாங்கக் கருவ+லம் வளர்த்தெடுக்கப்பட்டது.இது முற்றுமுழுதான அந்நிய, அதுவும் இந்திய இராஜதந்திரத்தினது- ஒரு விய+கத்தின் விளைவானதென்பதும் அதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதன-இராணுவ ஆர்வங்களினதும்,அத்தகைய ஆர்வங்களின் அரசியல் நகர்வும் ஒப்புதல்களோடு வழிமொழிந்திருப்பதும் இன்றைக்கு மேற்காணும் இரண்டு கட்சிகள் மலையகத்தமிழ் மக்களின் ஒத்திசைவாக இலங்கையரசுடன் இணைகின்றன.இங்கே இஸ்லாமியக் கட்சிகளை ஒரு ஓரத்தில் இணைத்தும், இணைய விடாமலும் தடுத்துக்கொண்டு அரசியல் விய+கத்தை இந்திய அரசு தெளிவாக நகர்த்த முனைவதில் முனைப்பாக இருக்கிறது.

இத்தகைய ஒரு அரசியல் விய+கத் திட்டமிடலில் ஜே.வி.பீ.போன்ற கட்சியை வெறும் இனவாதக்கட்சியினுடைய உள்ளடக்கமாகக் காட்டியபடி அந்தக்கட்சியின் அட்டகாசமான இனத்துவ வெளிப்பாடாகவும் தாம் வழங்கும்-அல்லது பிரேரிக்கும் அரசியல் தீர்வுப் பொதிகளை எதிர்தொதுக்கும் சிங்களச் சமுதாயத்துக்குள் ஒரு பலமிக்கட்சியாகவும் அடையாளப்படுத்த விரும்பும் இந்தியா நமது மக்களினதும்,புலிகளினதும் பாரிய முரண்பாடான ஜனநாயக விழுமியத்தை இன்னும் கூர்மைப்படுத்திக் கொண்டே இத்தகைய ஒரு மிகத் திட்டமிட்ட அரசியல் நகர்வை வலு நிதானமாக நகர்த்தி வருகிறது!

ஈழக் கோசம்:

இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் ஒரு அராஜக இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகிறது.இப்போது"ஈழம்"எனும் அரசியற் கோசம் ஒருவிதக் கேலித்தனமான சொற்றொடராகப் பார்க்கப்படுவதும்,இத்தகைய கோசத்தால் அழிக்கப்பட்ட ஒரு இலட்சம் உயிர்களினதும்,சொத்துக்களினதும்,பாதிக்கப்பட்ட வாழ் சூழலினதும்,இடம் பெயர்ந்து அகதிகளான மக்களினதும் சோகம் கப்பிய வரலாற்றின் பிரிதியாக நம் முன் நிற்கிறது.இந்தப் போராட்டக் கோசம் எமது சந்ததிக்குச் சொல்லப் போகும் வரலாற்றுப்பாடமானது-துரோகம் நிறைந்த போராட்டத்தின் பலனாக-இந்திய-சிங்கள,அந்நிய அரசுகளின்- புலிகளின் அரசியலையல்ல.மாறாக எமது சமூகப் பண்பாட்டினது இயலாமையையும்,அதன் வீரியமற்றச் சிந்தனையோட்டத்தையும் வரலாறு பதிந்து செல்லும்.

கடந்த காலங்களின் வரலாறானது "அந்நிய ஆக்கிரமிப்புக்கும்,அழிவுக்கும்,கொலனித்துவ அடக்கு முறைக்கும் உட்பட்ட இந்திய நிலப்பரப்பு" என்பதாக இருக்கும்போது,அத்தகைய நிலைக்குள் மிகச் சுலபமாக வீழ்த்தப்பட்ட இந்தப் பாரிய அகண்ட நிலப்பிரதேசத்தின் இயலாமையென்பது அதன் சமூகப் புறநிலைகளையும்,பண்பாட்டுச் செழுமையற்ற அறிவுப் பரப்பையும் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்போது,வெறுமனவே "நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் அந்நியர்களிடம் தோற்றோம்" என்பதாக இன்று சொல்வதுபோல், நாளை ஈழத் தமிழ் மக்கள் சொல்வதற்கு ஒன்று இருக்கும்.அது பெரும்பாலும் புலிகளென்ற ஒரு அமைப்பைக் காரணப்படுத்தும் சமூக உளவியலாக விரிந்து பொருள் வாழ்வுக்குள் பிரபாகரன் என்று வழங்கும்.இது காலத்தால் தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வாக மாற்றப்பட்டு வரும் அரசியலின் வெளிப்பாடே இப்போது "தேசிய அரசாங்கம்"என்ற அரசியல் விய+கத்தில் நிலைப்படும் இராஜ தந்திரமாகும்.


இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.

எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா வென்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காகக் காட்டும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்(இத்தகைய நிலையில் ஓரளவு ஸ்தாபன ஆற்றலுள்ள விஸ்வா நந்ததேவன் போன்றவர்களை அன்றைய புலிப் பினாமிகள் இலங்கையரசின் துணையுடன் கொன்றொழித்தார்கள்).பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் (அரசியல் கைக் குழந்தை) வல்லுநகர்களை அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!

தேசிய அரசாங்கம்:

இன்றிருக்கும் இலங்கைப் பொருளாதாரச் சமூக வாழ்நிலையில் தேசிய அரசாங்கமெனும் கருவ+லம் எந்த நோக்கு நிலையில் கட்டியமைக்க முனைப்புப் பெறுகிறது,இதன் தேவை யாருக்கு அவசியமானது?


இந்தக் கேள்வியைப் பெரும்பாலும் இலங்கை வாழ் அனைத்து இன மக்களுக்குமான நோக்கு நிலையிலிருந்தே நாம் கேட்கின்றோம்!


கடந்த காலத்தைப்போல் இலங்கையின்; சமூக வாழ்நிலை இன்றில்லை!இன்றைய இலங்கையானது பாரிய மனித அவலத்துக்குச் சொந்தமான இராணுவப் பொருளாதாரத்துக்குள் மையங் கொண்ட இலங்கையாகும்.இந்த இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குள்ளும் அரைக் காலனித்துவத்துக்குள்ளும் அரசியல் பலமற்றுக் கிடந்தலையும் இலங்கையாக நிலை பெற்றுவிட்டது.முன்னைய இலங்கையில் நிலவிய பெயரளவிலான ஜனநாயகப் பண்புகளே இன்று துளியுமின்றிக் காட்டாட்சியாக மாறிவரும் இலங்கைக்கு ஒரு தேசிய அரசு தேவையாக இருக்கிறது!


இது நாள்வரை தேசிய அரசெனும் கருவ+லத்தை தமது வர்க்க நலன் கருதி, ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கும் ஆளும் வர்க்கங்கள் தத்தமது அரசியல் பாகப்பிரிவினைக்காகப் பேரங்களில் ஈடுபட்டபோது "இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கிலெழுந்த முரண்பாடுகளை"-அமெரிக்க உளவுப்படை தனக்குச் சாதகமாகப் பாவிக்க வழிவகுத்துக்கொடுத்தும்- ஒவ்வொருவினமும் ஒருவரையொருவர் தலைவெட்டப் பாவித்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள்.இத்தகையவொரு நிலையில் மக்கள் நலன் சார்ந்த தேசிய அரசு என்ற இந்தக் கோரிக்கை வெறும் இனத்துவ அடையாளத்தைமீறிப் பொதுத் தேசத்தின் அபிவிருத்தியோடும்,தேசிய இனங்களுக்குள் குறைந்தபட்ச சமத்துவத்தைக் கோருவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்ட ஒரு வடிவமாக முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கிறதென்று பலர் கருத்தாடுகிறார்கள்.ஆனால் இந்தவுண்மையானது எந்தச் சந்தர்ப்பத்தில் சாத்தியமாகுமென்று பார்த்தால் அது பெரும்பாலும் முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சிப்போக்கில்- முதலாளித்துவம் பாரிய வளர்ச்சியை எட்டிக்கொண்டு- சமூக வளர்ச்சிப் படிகளை மிக விருத்திக்கிட்டுச் சென்றிருக்கும் வளர்ச்சியடைந்தவொரு சமூகத்திலேயே இது சாத்தியமானவொரு விளைவைத் தரும்.


இலங்கையிச் சமூகமானது மிகவும் பின் தங்கிய நிலப்பிரபுத்துவ எச்சொச்சங்களையும்,தரகு முதலாளித்துவத்தின் மிகக் கேவலமான நுகர்வடிமைச் சமூகக் கூறுகளையுங்கொண்ட மனிதக் குழுக்களாகப் பின் தங்கியிருக்கும்போது இத்தகையவொரு இலங்கையில் தேசிய அரசுவென்ற கானல் நீர் அந்நிய ஆர்வங்களினது மிகத் தெளிந்த நோக்கங்களுக்காக இலங்கையில் முன் தள்ளப்படுகிறது.இத்தகைய தேசிய அரசாங்கமெனும் இந்த அரசியல் நாடகமானது இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து நீறுப+த்த நெருப்பாக வைத்திருப்பதற்காத் தூவப்படும் ஒரு இரசாயனக் கலவைதாம்.இது இலங்கையினது எந்த இனப்பிரிவுக்கும் சாதகமான வளர்ச்சிப்படிகளையும் தன்னகத்தே வைத்திருக்கவில்லை.முற்றுமுழுதாக இலங்கையை அந்நிய-பிராந்திய ஆதிக்கத்துக்குள் கட்டிவைத்திருக்கவும் அந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தவுமே இது அரசியல் விய+கமாக விரிகிறது.

இந்தியா பிராந்தியப் பொலிஸ்காரன்:

இன்றைய இந்தியாவானது தனது பிராந்தியப் பொலிஸ்காரன் பதவியைத் தொடர்ந்து ஊசலாட்டத்தோடு காப்பாற்றி வருகிறது.இதன் பாத்திரம் மிகவும் பலவீனப்பட்டுள்ளது.நிதிமூலதனத்தின் அதீதப் பாய்ச்சலானது தொடர்ந்து முதலாளித்துவ ஆர்வங்களை மையப்படுத்திய பெரும் தொழிற்கழகங்களுக்கே சாதகமான அரசியல் வெற்றிகளைத் தந்துகொண்டிருக்கிறது.இது பெரும்பாலும் அமெரிக்க-ஐரோப்பிய முதலீட்டுக் கழகங்களுக்கே சாதகமான எதிர்காலத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.இத்தகைய தரணத்தில் தொடர் தோல்வியைச் சந்திக்கும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசுகளோடும் அவர்களின் ஏஜமானர்களான பெரும் தொழிற்கழகங்களோடும் விட்டுக்கொடுப்பு, அரசியல்-பொருளியலுக்கு சமரசமத் தேவையாக இருக்கிறது.


இந்தியத் தேசத்தின் சுயயாண்மையைக்கூட விட்டுக்கொடுக்கும் நிலைக்கு இந்தியக் காங்கிரசுக் கயவாளிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதற்கான உந்துதல் இந்தியப் பெரும் தரகு முலாளிகளிடமிருந்து தொடர் தாக்குதலாகக் கட்சி அரசியலுக்குள் தோற்றம் பெறும்போது,அமெரிக்காவுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களைத் தாரவார்த்துத் தென்னாசியப் பிராந்தியத்தின் சந்தயைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது.ஆனால் இந்தக் கனவைத் தொடர்ந்து, இந்தியா ஆற்றும் பிராந்திய அரசியல் முன்னெடுப்புகள் இலங்கையிலொரு ஸத்திரமான அரசியல் முன்னெடுப்பையும் அது சார்ந்த இந்திய ஆதிகத்தையும்,இந்தியாவின் நலன்களுக்கான இலங்கையாக வைத்திருக்க விரும்புகிறது.தொடர்ந்து இலங்கை யுத்தத்துக்குள் மூழ்கும்போது இந்தியாவைத் தவிர்த்த பல வகை நலன்களைக் குறிவைத்து இலங்கைக்குள் கால் வைக்கும் அந்நிய ஆர்வங்கள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராகவும் இந்தியாவின் சந்தைப்படுத்தும் வலுவையும் மிகப் பலவீனப்படுத்தி, இந்தியத் தரகு முதலாளிகளின் பொருள் உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும்.


யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை"ரெண்டரில்"(குத்தகைக்கு)எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இன்றைய தொழிற்கழகங்கள் சக்திசார்ந்த"எரிபொருள்,மின்சாரம்"மற்றும் இரும்பு,இரசாயனத் தேவைகளையே எதிர்காலத்தின் அதி முக்கிய உற்பத்தி ஊக்கமாகக் கொள்கிறார்கள்.இதன்படி மூலவளத்தை உறுதிப்படுத்துவதும்,தேவைக்கேற்ப உடனடிப் பயன்பாட்டுக்குள் கொணர்வதற்கான வாய்புகளுக்காகவும் பற்பல சதிகளில் ஈடுபடுகின்றன.இதற்காக தத்தமது நாடுகளின் தூதர்களை இதுசார்ந்த பொறிமுறைக்குள் இணைக்கிறார்கள்.இந்தியாவினது இந்தத் தேசிய அரசுக்கான கனவு இலங்கையில் பலித்திடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியிருப்பினும் அந்த அரசியலில் புலிகளை வீழத்;தி முறியடிக்காதும் பார்த்துக்கொள்கிறது.புலிகள் இல்லாத இலங்கையை ஐரோப்பிய-அமெரிக்க நலன்கள் விரும்புவதில்லை.
தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
10.09.2006

Friday, September 01, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(4)

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(4)


நாடுகளும்,யுத்தமும்- உதவியும்.

லெபானானுக்கான நிதி வழங்கும் கூட்டம் இன்று இஸ்ரொக்கோல்ம் சுவீடனில் நடைபெறுகிறது.அறுபது அரசுகளும்,அமைப்புகளும் பங்குபெறும் இக்கூட்டத்தில் ஜேர்மனி 22மில்லியன்கள் யுரோவை லெபனானுக்கு உதவுவதாக உறுதிகூறியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமாக 500.மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்குவதாகச் செய்தியொன்று கூறுகிறது.

இன்று ஈரானுக்கான காலக்கெடு முடிவுக்கு வருகிறது.


அணு குண்டைத் தயாரிப்பதற்கான"Uran-235(யுரேனியம-;235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.)Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம-;235 ம்,நாகசாகியில் புளுட்டோனியம்-239 ம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறது.


இதைத் தடுத்துவிட உலக வல்லரசுகள் முயல்கின்றன.(1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்,ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் அணுப்பிளப்புத் தியரியை விளங்க முற்படும்போது,ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனம் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)


ஈரானிய ஜனாதிபதி அமாடினெட்ஷா கூறுகிறார்:"நாங்கள் எங்கள் வரலாற்றுத் தேவையை தவிர்க்க முடியாது.நாம் அணுத் தேவையை யாருக்காகவும் தவிர்ப்பதற்கில்லை."


அமெரிக்கப் பயங்கரவாதி புஷ் உடனடியாக பதறியடித்துக் கத்துறான்:"நாங்கள் ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதை அநுமதிக்க முடியாது."


நல்லது!


லெபனானுக்கு 500 மில்லியன்கள்,
ஈரானுக்குப் பொருளாதாரத்தடை?


சமீபகாலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி)கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

தலை சுற்றுகிறது.

ஈரான் எவ்வளவு குழந்தைகளை இழக்கும்?

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

லெபனானைக் அடித்து நொருக்கிறது அமெரிக்காவின் அடியாள்.பின்பு அதே அமெரிக்கக் கூட்டு அபிவிருத்தியுதவியாகச் செயற்பட முனைகிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே லெபனானுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே இவ் உதவி வழங்கப்படுகிறது.ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான உதவி.இந்த உதவியை லெபனான் வட்டியுடன் கட்டியாகவேண்டும்.அதாவது ஐ.நா.துருப்புகளின் செலவுக்கு ஒரு நாடு கடன்படுகிறது.

ஜேர்மனி சொல்கிறது.:"Die Bundesregierung stelt 22 millionen Euro fuer den wiederaufbau des Lebanon.das Geld solle fuer die Verbesserung von Grenzkontrollen und den wiederaufbau der wasser vorsorgug eingestzt werden.-N.TV Nachrichten.""ஜேர்மனிய அரசு 22மில்லியன்கள் யுரோவை லெபனானின் மீள்கட்டுமானப்பணிக்காக இடுகிறது.இப்பணத்தை லெபனானின் எல்லைப் புறங்களை சிறப்பாகக் கண்காணிப்பதற்கும் குடிநீர் விநியோக மீள் கட்டுமானத்துக்கும் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்."


ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.லெபனானின் கடல் குடா 250 கி.மீ.தூரம்.இது மத்திய கடலுக்குள் இருக்கிறது.இதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜேர்மனியக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உலகத்தில் அதி நிவீன நீர்மூழ்கிக் கப்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 600 மில்லியன்கள் யுரோவுக்கு உருவாக்கிய நாடு ஜேர்மனி.இப்போது புரிகிறதா?எவரிடம் எதைக் கொடுக்கவேண்டுமென அமெரிக்க மாமாக்களுக்குப் புரிந்தே இருக்கு!"G3,MP5,HK21"(Heckler&Koch) இவைகளின் தாய் நாடல்லவா!இவர்கள்தாம் பணத்தைத் தமது கடற்படையின் செலவுக்கு வழங்கிவிட்டு,அதையே வட்டியுடன் அறவிடப் போகிறார்கள்.நல்ல வியாபாரம்.

மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரப்போகும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்.

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம்,மிதிவெடிப்பலி,அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.


எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!


வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால்!

90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் ப+ராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த ஜுலை மாதம் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...



ப.வி.ஸ்ரீரங்கன்
01.09.2006

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...