Wednesday, December 31, 2008

வருக புத்தாண்டே, வருக!

"புது வருஷம்"

உயிர் உதிரும் உடலும் உணர்வுந்துறந் தொதுங்குங்
களத்தில் புதிதாய்ப் புலம்ப வருக புத்தாண்டே, வருக!
தாயும் சேயும் வான்படைக் குண்டாற் சிதையுமொரு தெருவில்
வன்னி விடுவிப்புக் கொடும் போர் துரத்தக்
கொடுங் கோன் முறை அரசு செய் மகிந்தா தமிழாய் உதிர்க்க

தமிழர் இல்லமும் வீழ்ந்தது
இரத்தமும் கொட்டியது
சிதறிய அன்னை விழியில்
ஈக்கள் மொய்த்தன ஒன்றாய்ப் பத்தாய்
இடியாய் நீ கொட்டிய குண்டுகள்

மக்களுக்கானது அல்ல என்பாய்
பயங்கர வாதத்துக்கு எதிர் எனும்
பம்மாத்து இலங்கைத் தேசியத்துள்
என்னைக் கரைக்க முனைகையில்
ஆத்தையின் பிணத்தில் அடுப்பெரித்து

அன்னம் புசிக்க -நீ
அரிசிப் பருக்கை இட்டு யாழ்ப்பாணத்தில்
வடக்கும் தெற்கும் ஒன்றாய்ப் புணர்ந்ததை
ஒப்புக்குரைத்து கிழக்கின் வசந்தம் மீட்டுகிறாய்
ஒத்துக் கொள்கிறேன், வடக்கும் தெற்கும் பிணைந்தே கிடக்கட்டும்!

அதுவே வரலாறு முழுதும் சாத்தியமுங்கூட-இஃது
சரியானதுங்கூடத் தலைவரே!இலங்கைத் தேசத்தின்
ஒப்பாரும் மிக்காருமற்ற தேசியத் தலைவரே-நீ
ஐ.நா.வில் மட்டுமல்ல யாழ்பாணத்துக்கும் தமிழில்
உனது அரசியலை மொழி பெயர்க்கிறாய் வான்படை வழி

தேசத்தின் மொழிகள் இரண்டையும் தெரிந்திருக்கும் தலைவர்
மதிக்கத் தக்கவரே!, மாண்புடையவரே!!என்றபோதும்
காரணமே இல்லாது களத்தில் மட்டுமல்ல
பன்னைப் பாயிலும் கொல்லப்படுவோரைப் பயங்கரவாதிகள் என்கிறாயே?
அடுக்குமா? பிணத்துள் பால் குறித்து ஆய்தலும்

எதிர்ப்பால் வினைபுரிதலுக்குச் சோடிசத்தின் சுகம்
அனுபவித்துக் களிகொள் மனதொடு
தேசத்தின் மகத்துவஞ் சொல்லும் நீங்கள்
தேசத்தைப் புணர்ந்தவருள் அடக்கமில்லையா?
கொண்டையுள் மலர் திணித்திருப்பவர்கள்

யோனியில் சன்னம் புதைத்துக்
காட்சிக்குக் காட்சிப் புணர்வுயர் நெகிழ்ச்சியில்
புண்ணாக்காக்ப்படும் பிணம்கூடப் பால்வினைப் பயனுள்

புத்தன் தேசத்துக்கு மகிமை சேர்க்க்கலாம்
ஆத்தையின் சேலையையுருவி உன்னிடந்தந்து

இலங்கைத் தேசியத்துள் பிணைந்து புணர
எமக்கொன்றும் உன் இராணுவத்தின் அரிப்பு இல்லை-அது
இல்லவே இல்லை!கோவணத்தைக் குடையும்
உன் கூட்டத்தின் பசிக்குப் பண்ணைகளைத் திறந்துவிடு
தெற்குள் திரண்டகொங்கைக்குக் கோவணங்கட்டி

புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும்
மரணங்களும் அப்படியே எமக்கு-எனினும்
புணரும் தருணம் பிணமென்ன
பெண்ணென்ன பேரின்பம் வதைத்தலில் வந்து போகும்-என்
தேசத்துப் புத்தர்களுக்கு இனியும்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008

Tuesday, December 30, 2008

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்:

"காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!"

கடந்த முப்பத்தியாறு மணி நேரத்துக்குள் சுமார் 360 பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலால் கொல்லப்பட்டும்,1000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.காயப்பட்ட அப்பாவி மக்களில் 80 வீதமானவர்கள் படுகாயமடைந்து இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் என்றும் ஜேர்மனிய ஊடகங்களும்,அல் ஜெசிரா தொலைக்காட்சியும் தெரிவிக்கிறது!


"நாம் நடத்தும் வான் தாக்குதல் மக்களைக் குறி வைத்தல்ல.மாறாக,காமாஸின் கட்டமைப்புகளை நோக்கியது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரானதேயொழிய மக்களுக்கு எதிரானது அல்ல"-இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர்.

ஒரே குரல்,ஒரே அர்த்தம்! உலகம் பூராகவும் ஒடுக்கு முறையாளர்கள் ஒரே இலக்குடன் செயலாற்றுகிறார்கள்.அது,மகிந்தாவானாலுஞ்சரி அல்லது இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரியானாலுஞ்சரி எல்லோரும் ஒரே தளத்தில் நிற்கின்றார்கள்.

"பொது மக்கள் இதற்கான விலையக் கொடுக்கவேண்டியதும் கவலையானது"-சிபி இலீவ்னி இஸ்ரேலிய வெளிவிவகார மந்திரி.அன்றைய அமெரிக்க வெளிவிவகார மந்திரி அல்பிறைட் அம்மையாரை விழிமுன் நிறுத்துகின்றார் சிபி இலீவ்னீ(Außenministerin Zipi Livni, "bezahlen leider auch Zivilisten den Preis").

குழந்தைகளும்,பெண்களும் இவ் வான்தாக்குதலால் மிகவும் பாதிப்புற்றுள்ளார்கள்.எங்கும் அப்பாவி மக்களின் குருதி தோய்ந்த முகங்கள் கண்ணீர் மல்கித் தெருவில் ஓலமிடுகிறது!உலகம் காமாஸ் இயத்தின் அழிவுக்கு இது அவசியமானதாக இனம் காணுவதன் அரசியல் முற்றுமுழுதான மேற்குலகப் பொருளாதார ஆர்வங்களோடு சம்பந்தமுடையது.இது,வரலாற்றில் கட்டவிழ்த்த யுத்தங்கள் யாவும் இந்த முதலாளியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கானதாகவே இருக்கிறது.

இங்கேயும்,பாலஸ்த்தீனக் காஸாப் பள்ளத்தாக்கிலும் அதே கதையோடு காமாஸ் முகமூடியாகிறது.இலங்கையில் புலிகள் போன்று!இரண்டுக்குமிடையில் நிலவும் பொருளாதார நோக்கம் ஒன்றே-அது,சந்தை வாய்ப்பையும்,உற்பத்தியையும் நோக்கியதே!இங்கே,தேசிய இனச் சிக்கல்கள் இந்த முறைமையிலான அரசியல்-பொருளாதார இலக்குகளால் மிகவும் நுணக்கமாகச் சிதைக்கப்பட்டுப் பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது.பயங்கர வாதத்தை அழிப்பதற்கெடுக்கும் நடவடிக்கையாக யுத்தம் இப்போது நியாயமான சட்ட அங்கீகாரத்தோடு அரச பயங்கரவாதமாக அப்பாவி மக்களை அண்மிக்கின்றன.வன்னியில் வதைபடும் மக்களின் துயர் உலகை எட்டவில்லை!எனினும்,மானுட அழிவில் ஆதாயம் அடைபவர்களை நாம் மிகவும் கவனமாக இனங்காண வேண்டும்.

என்றபோதும்,இவ்வகை யுத்தங்களால் மக்கள் அழியலாமா?அழியலாம்-அழியவேண்டும்!இது,மேற்குலக-அமெரிக்க ஜனநாயகம்.இதை எவராலும் மாற்ற முடியாதென்கிறது இன்றைய யுத்தச் சூழல்.அதாவது, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனப் புரியவேண்டுமென்கிறார்கள்!

இஸ்ரேலிய தரப்பு நியாயத்தின்படி, "யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை"(Kampf bis zum bitteren Ende)நடைபெறும்.இப்போது,வான் தாக்குதலில் முனைப்புடைய இஸ்ரேலிய இராணுவம், தரைப்படையையும் தயார் நிலைக்குள் வைத்துத் தரை தாக்குதலைச் செய்வதற்கான முனைப்பில் காரியமாற்றுகிறது.உத்தியோக பூர்வமற்ற தகவலின்படி காஸா நோக்கிய தாங்கிகள் அணிவகுப்பு ஆரம்பமாகிறது.

பாழாகும் மனித வாழ்வு பாலஸ்த்தீன மக்களின் அனைத்து வகைத் தார்மீக எதிர்பார்ப்புகளையுங் குலைத்து, அவர்களை மேலும் பழிவாங்கும் மன நிலைக்குள் தள்ளியபடி, அவ்வினத்தைத் தொடர்ந்து சிதைப்பதில் இஸ்ரேலிய அரசுக்கு என்ன வகை ஆதாயம் இருக்கிறது?

2006 இல் நடந்த தேர்தலில் காமாஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்க முடியாத உலகம், இப்போது நடைபெறும் யுத்தத்துக்கு அன்றே ஆரம்பப் புள்ளியைக் கீறியிருக்கிறது.எனினும்,யுத்தம் இவ்வளவு விரைவாக எழுவதற்கும்,அது பெரும்பாலும் பெருந்தொகையான மக்களின் உயிரைக்குடித்தபடி வான் தாக்குதலாகவும்,தரைத்தாக்குதலாகவும் பாலிஸ்தீனர்களின் அனைத்துக் குடியிருப்புகளையும் அழித்துவிடுமளவுக்கு நகரத்தக்க யுத்தமாக விரிவுறுவதன் பின்னால் நடந்தேறும் இலக்கு என்னவென்பது மிக அவசியமானதாக இருக்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இஸ்ரேலிய அரசுக்கான உதவிகளைச் செய்யத்தக்க வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் இல்லாதிருப்பினும், இவ் யுத்தம் சாரம்சத்தில் அண்மைக் கிழக்கு அரேபிய நாடுகளில் ஒன்றான பாரசீக-ஈரானிலேயேதாம் மையங்கொண்டது.எனினும், இந்த யுத்த இலக்கு காமாஸ் களையெடுப்பென்று இப்போது பாலிஸ்த்தீனக் காசாப் பள்ளத்தாக்கில் குருதியாற்றைத் திறந்திருப்பதற்கு அவசியமான புறக்காரணியாக எண்ணைச் சந்தை நிலவரமே காரணமாக இருக்கிறது.

இஸ்ரேலின் குண்டுகள் பாலஸ்த்தீனத்தைத் தாக்கி மனிதர்களைப் பலியெடுக்கும்போது, பங்குச் சந்தையில் மசகு எண்ணை பெறலுக்கு 6 டொலர்கள்கூடியுள்ளது.34 டொலர்கள் விற்ற மசகு எண்ணை திடீரென 40 டொலர்களாக உச்சம் அடைவதால் பங்குச் சந்தைச் சூதாடிகளின் முகத்தில் வெற்றிக்களிப்பு.

வரும் ஆண்டு ஏப்பிரலுக்குள் எண்ணை விலையை 70 டொலருக்கு ஏற்றுவதற்கேற்றபடி எண்ணை உற்பத்தியை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை வரவழைத்து இந்திய-சீனா போன்ற தேசங்களின் எண்ணைத் தேவையைப் பூர்த்தி செய்யாதளவு சந்தையில் தட்டுப்பாட்டைக் கொணர்வதற்கும்,அதனால் சந்தையில் எண்ணையின் விலையைப் பழையபடி 100 டொலர்கள்வரை ஏற்றிவிடவும் எண்ணை மாபியாக்கள் திட்டம் செய்திருக்கிறார்கள்.

இப்போதைய இஸ்ரேலிய அத்துமீறிய அழிவு யுத்தத்தால் பயனடைபவர்கள் இந்த எண்ணை முதலாளிகளாக இருக்கும்போது,இவ்யுத்தம் உண்மையில் காமாஸ் களையெடுப்பென்பதன் அர்த்தத்தை இழக்கின்றது.இது,சாரம்ஸத்தில் பற்பல முகங்களைக் கொண்டியங்குகிறது:

1) இவ் யுத்தத்தின்மூலம் தொடரப்போகும் ஈரான் யுத்தத்துக்கான ஒத்திகை.அரபு உலகத்தின் எதிர்வினைகளைக் காணுவதற்கும் அதை எதிர் கொள்வதற்குமான மிக தெளிவான திட்டமிடல்களுக்கும்,

2) பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் பாதளச்சரிவை குறைந்தளவாவது ஸ்த்திர நிலைக்கு மாற்றுவதற்கு,

3) சரிந்து வரும் எண்ணைச் சந்தைப் பெறுமதியைச் செயற்கையாக உயர்த்தி, இழந்த மூலதனத்தை மேலும் இழக்காது காத்துக் குறுகிய காலத்தில் மூலதனத்தைத் திரட்டுவதற்கான யுத்தச் சூழலை உண்டாக்குவது,

4) காமாஸ் இயக்கத்தின் பெயரில் பாலஸ்த்தீனியர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மையையும் அவர்களது அரசியல் ரீதியான போராட்டவெற்றிகளை அழித்து,வெறும் இராணுவவாதத் தலைமைக்குள் அவர்களைத் தள்ளி விடுவதற்கும்,

இவ்யுத்தம் ஆரம்பமாகிறது.

இந்தக்காரணங்கள் நான்கும் மிக அவசியமானவொரு வான்தாக்குதலையும் அதன்வழித் தரைத்தாக்குதலையும் பாலஸ்த்தீனத்தின்மீது கட்டவிழ்த்துவிடுவது அவசியமாக இருக்கிறது இந்த அமெரிக்க-மேற்குலக மூலதனத்துக்கு.

எனினும்,நவ உலகக் குடியரசுகள் ஒரு புறம் யுத்தத்தைத்தாலாட்டி வளர்த்தபடி மறுபுறத்தில் தமது வாலாட்டியை வைத்து யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்றும் பேசுகிறார்கள்.யு.என்.செயலாளர் திரு.பான் கீ மூன் இன்றைய தினத்தில் தனது குரலை ஓங்கி ஒலிக்க விடுகிறார்!அவரது கூற்றுப்படி இஸ்ரேவேல் உடனடியாக வான் தாக்குதலை நிறுத்திப் பேச்சு வார்த்தைக்குச் செல்வது ஒரு புறமிருக்கட்டும்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் Ehud Barak கூறும்"யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை தொடரும்"என்பதன் அர்த்தம் என்ன?

இதன் உண்மையான முகம் பாலஸ்த்தீன மக்களிடம் உண்மையான அரசியல் விழிப்புணர்வுடைய போராட்டச் செல்நெறியமைவது தடுக்கப்பட வேண்டும் என்பதே.இதற்கேற்ற அரசியலலைக் காமாஸ் இயக்கத்தின் இஸ்ரேல்மீதான-அதன் இருப்பை அங்கீகரிக்காத அரசியல் வங்குரோத்தும் காரணமாகிறது.இன்றைய உலகப் புறச் சூழலில் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை எவரும் அழித்து அந்த மக்களையும் அரசியல் அகதிகளாக்குவதென்பது படு முட்டாள்தனமான அரசியலாகும்.இங்கே,காமாஸ் இந்தக் கோரிக்கையூடாகப் பாலஸ்த்தீன ஆளும் வர்க்கத்தை குளிர்ச்சிப்படுத்தித் தனது இருப்புக்கான நிதி ஆதாரத்தைத் தேடினாலும் அதன் மறுவிளைவு அவ்வியகத்தைப் பூண்டோடு அழிப்பதில் இஸ்ரேலுக்கு நியாய வாதத்தைக் கொடுக்கிறது.இதன்பலன் மக்களின் விடுதலையைக் காட்டிக் கொடுப்பதே!

இது நாள்வரை காமாஸ் இயக்கம் பெற்ற அரசியல் வெற்றிகள் யாவும்,இஸ்ரேலின் இருப்பை மறுக்கும்போது காமாஸ் இயகத்தின் இருப்பை அசைப்பதாக மாறவில்லை.மாறாகப் பாலஸ்த்தீனியர்களின் தெளிவான அரசியல் செல் நெறியை உடைத்துக் குறுந்தேசிய-மதவாதத் தலைமைகளின் கீழ் இராணுவவாதக் கோரிக்கைகளுக்கு அடிமையாக்குவதில் முடிகிறது.இதையே உலகமும் விரும்புவதால் இந்த இஸ்ரேலிய அத்துமீறிய யுத்தம் பல வழிகளில் பாலஸ்தீன விடுதலைக்குச் சாவு மணியடிப்பதன் தொடராகவே முன்னெடுக்கப்பட்டாலும்,இதன் இன்றைய தேவை,மேற்குலகுக்குச் சாதகமானதும்,அவைகளின் பொருளாதார இலக்குகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது என்பதற்காகவுமே.இதன் பொருட்டே ஒரு பரிட்சார்த்தமாக யுத்தம் நடைபெறுவதற்கான உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ஆனால்,அழிவு அப்பாவி மக்களுக்கே.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.2008

Sunday, December 28, 2008

கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்

தீபம் தொலைக்காட்சி:

"கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்".

-சிறு குறிப்பு.

இலங்கை மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனம்,மொழி,மதங் கடந்து, தாம் அனைவரும் இலங்கையின் குடிகள்-உழைப்பவர்கள் என்றுகூவி அணிதிரளமுடியாதளவுக்குத் தமிழ்-சிங்களக் குறுந்தேசிய வெறிகளை மக்கள் விரோத அதிகார வர்க்கம் திட்டமிட்டுப் புனைகிறது!மக்கள் தத்தமது முயற்சியிலும்,உழைப்பிலும் காலத்தைக் கழித்துவரும்போது இத்தகைய மனித விரோதிகள் தத்தமது இருப்புக்காகப் புதிய,புதிய பாணியில் இனவாதத்தைக் கக்கி வருகிறார்கள்.இத்தகைய இனவாதிகள் கட்டித் தகவமைக்க முனையும் கருத்துவெளியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களுக்கும் எதிரானது!

"தமிழீழம்" கதை புனைந்து மக்களின் வாழ்வைக் கருவறுத்தவர்கள்,

யுத்தத்தைச் சொல்லி இதுவரை பணப்பெட்டிகளை நிறைத்தவர்கள்,

சுனாமியைச் சொல்லிச் சுதந்திரமாக உலக மக்களின் உதவிகளைச் சொந்தச் சொத்தாக்கியவர்கள்,

இலட்சம் மக்களின் உயிர்களைக் குடித்தபின்பு இன்னும் தமிழீழம் கேட்டுவருபவர்கள்,

தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கனுப்பிப் பாதுகாத்தவர்கள் மாற்றான் பிள்ளைகளைப் பிடித்துக் களத்துக்கு அனுப்புவதில் முனைப்புடையவர்கள்,

யாழ்ப்பாணத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் முஸ்லீம் மக்களை அடித்துதைத்து வெருட்டி அகதியாக்கியவர்களென இந்தத் தமிழ்த் தேசியக் கயவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து,

மக்களை இன்னும் ஒட்டச் சுரண்டுவதற்குப் பெயர் "கண்ணீர் வெள்ளம்"எனப் புரிந்துகொண்டால்-

நீலிக் கண்ணீர் வடித்துக் கண்ணீர் வெள்ளம் கதைவிட்டுக் காசு சேர்ப்பதற்கும், பொருத்தமாக இனவாத்தைத்யே தெரிவுக்குட்படுத்தி,அதையே மிகக் காட்டமாகவும்,நுணுக்கமாகவும் விதைத்துப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒட்டச் சுரண்டுவதற்கும்,சுரண்டிய பணத்தை வைத்துச் சொத்துச் சேர்ப்பதற்கும் யாழ்பாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் அப்பாவி மக்களின் வாழ்வே இப்போது இத்தகைய திருடர்கள் அனைவருக்கும் கூடவே, தீபம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அவசியமான விளம்பரமாகிறது,என்ற முடிவுக்கு வருவதில் எந்தத் தப்புமில்லை!-இதுவே, கடந்தகாலச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் நமக்குத் தந்தபாடம் என்பதும் நாம் கண்ட வரலாறு.


இத்தொலைக்காட்சியானது இதுவரை புலிகளின் ஊடகங்கள் செய்த வேலையை இப்போது திறம்படத்தாமே செய்து, புலிப் பினாமிகளுக்குச் சேவை செய்வதில் தனது பங்கைக் குறிவைத்து இயங்குகிறது.அதற்காகச் சுனாமியில் செத்தவர்களின் பிரேதங்களை இன்னுமொரு சுற்றுக்குவிட்டுக் காசுசேர்க்கும் கயமைத்தனத்தோடு காரியமாற்றுகிறது.

இலண்டனிலுள்ள சில மேட்டுக்குடித் தமிழர்களின் கயமைத்தனமான கூச்சலோடு, தொலைக்காட்சியில் தோன்றும் இந்தக் கேடுகெட்ட "கோட்-சூட்" கயவர்கூட்டம் இன்னொருமுறை புலம்பெயர்ந்த மக்களைச் சுரண்டித் தமது வருவாயைப் பெருக்கக் கத்துவது மக்களின் நலுனுக்கானதாக இருக்கமுடியாது!காசு சேர்ப்பதற்கு இலகுவானவொரு வழியை மிக இலகுவாகத் தெரிந்துகொண்டவர்கள் யுத்தத்தில் பாழாய்ப்போன மனிதர்களையும்,சுனாமியில் செத்த பிணங்களையும் காவி வந்து,அதைவைத்துப் பிழைப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியில் மீளவும், இலங்கையின் இனங்களுக்கிடையிலான இனவாத முரண்பாட்டையும் தொடர்ந்து கூர்மைப்படுத்துவதிலும் தமது இருப்புக்கும்,புலியின் இருப்புக்கும் மிக நெருங்கிய முறையில் சேவை செய்கிறார்கள்।இந்தச் சேவையை மக்களது நலனுக்கானதாகச் சொல்லிப் புலம் பெயர் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்க முனையும் இவர்கள் இதுவரை மக்களுக்குச் செய்தது என்ன?

"தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,
சிறங்கை
உதவுங்கரங்கள்,
வெண்புறா" இப்படி எத்தனை பேர்களைச் சொல்லி இக் கயவர்கள் நம்மைச் சுரண்டினார்கள்!

சுனாமியைச் சொல்லி,இறந்த மக்களின் உடலங்களை இனரீதியாகப் பிரித்துத் தமிழர்களே சுனாமியில் மிகுதியாக இறந்தார்கள் என்பதும்,தமிழ்ப் பிரதேசங்களே சுனாமியில் மிகவும் பாதிப்படைந்ததென்றும் கூறுபவர்கள், இலங்கை அரசு எதுவுமே செய்யாது உலக உதவிகளைச் சிங்கள மக்களுக்கே பயன்படுத்தியதாகவும் பூச் சுற்றுகின்ற வேலையூடாக இனவாதத்தோடு கோடுகிழித்துத் தமது கைகளுக்குப் பல கோடிகளைத் திரட்ட இன்னொரு வியாபாரத்தைச் செய்வதில் மேலும் பல்லாயிரம் மக்களைப் பலியெடுக்க முனைதல் மிகவும் கேவலமானது.இத்தகைய மனிதர்கள் இலங்கை அரசை எதுமே செய்யவில்லையெனும் அதே கருத்தையும் பார்வையையும் ஏன் வன்னியில் அரசாட்சி செய்யும் புலிகள்மீது இதுவரை செய்யவில்லை?

சுனாமியில் சேர்க்கப்பட்ட நிதியுதவிகளை இவர்களும்,புலிகளும் மனச் சுத்தியோடு மக்களுக்குப் பகிர்ந்தளித்தார்களா?அந்த மக்களுக்கு மறுவாழ்வளிகத்தக்க என்ன முன்னெடுப்பைச் செய்தாகள்?


அந்தச் சுனாமிச் சாவுகளை வைத்துப் படங்காட்டிப் பிழைத்தவர்கள், இறுதியாக இலங்கை அரசுக்குப் பறி கொடுத்த பணத்தின் தொகை 72 மில்லியன்கள் இலங்கை இரூபாயாகும்.இவர்கள் மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் பறிகொடுத்த தொகைகள் பல்லாயிரம் கோடிகளைத்தாண்டும்.அதைவிட இன்று மக்களின் அவலத்தையும்,தமிழீழத்தையும் சொல்லிக் காசு-நிதி சேகரித்த இத்தகைய கயவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாகத் தமது வளத்தைப் பெருக்கியுள்ளார்கள்?

ரஜனிகாந்தை வைத்து 150 கோடி இந்திய இரூபாய்களுக்குப் படந்தயாரிப்பதுவரை நமது மக்களின் சில்லறைகளை இவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.இவர்களே,இப்போதும் அதே கதைகளோடு இனவாதத்தையும் ஒருங்கே சேர்த்துக் குழைத்துக் காசு சேர்ப்பதற்கு இலகுவான-இசைவான புலம் பெயர் தமிழ் மனத்தை உருவாக்க இந்தக் கேடுகெட்ட தீபம் தொலைக்காட்சி உடந்தையாக இருக்கிறது!

இன்று,சுனாமி நிதிக்கு என்ன நடந்தது?அப்பணத்தை வைத்து ஆயுதங்களும் அவரவருக்கு வீடுகளுமாக வேண்டிக் குவித்தவர்கள்,அந்த மக்களை அம்போவென விட்டத்தன் சாட்சிகளை பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகளுடாக நாம் அனைவரும் கண்டறியமுடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து அடித்துவெருட்டப்பட்ட முஸ்லீம்கள் இன்னும் தமது வரலாற்று மண்ணில் வாழ முடியாது புத்தளத்தில் அகதிகளாகச் செத்து மடிவதை இத்தகைய திருடர்கள் எப்போதாவது "ஒப்புக்காவது" பேசுகிறார்களா?அவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்த இந்தக் கேடுகெட்ட "தமிழீழ யுத்தம்"எத்தனை ஆயிரம் மக்களை இதுவரை பலியாக்கியது-கொலை செய்தது?

இன்னும் மக்களை அழிப்பதற்கும்,அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்கும் முனைப்புடைய இக் கயவர்கள், இலங்கையில் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் காசு சேர்க்கிறதான பாவனையில் தொடர்ந்து இனவாதத்தை ஊட்டி வளர்ப்பதிலும்,தமிழ்க் குறுந்தேசியவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதிலும் கவனமாக இருக்கிறார்கள்.இதுவே,தம்மைக் காப்பதற்கான தெரிவாக இனவாதத்தைத் தூண்டும் இவர்கள் இதுவரை செய்தவை இலட்சம் மக்களைக் கொன்றுகுவித்ததைத் தவிர வேறொன்றும் இல்லை. கூடவே, முஸ்லீம் மக்களின் அவலத்தை-அடித்து வெருட்டியத் தமிழ் இனவாதச் சகதியை மிக நேர்த்தியாகத் தமது கோட்-சூட்டுக்குள் மறைத்து விடுகிறார்கள் இந்தக் கயவர்கள்!

தமது இருப்புக்காகவும்,நல் வாழ்வுக்காகவும் இலட்சம் மக்களையே யுத்தத்தில் கொன்று போலித் "தமிழீழக் கோசம்"போட்டுவரும் இந்தக் கேடான மேட்டுக்குடித் தமிழர்கள், நமது மக்களின் அவலத்தைத் தமது பணப்பெட்டிகளை நிரப்ப எடுக்கும் முயற்சிக்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமானது.இதைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் அவசியமானது.

மக்கள் தத்தமது உறவுகளைக் காப்பதற்குத் தாமே மனமுவந்து உதவிகளைச் செய்வதற்கு இடையில் இத்தகைய கயவர்கள் அவசியமில்லை!

இவர்களது நடாத்தையைச் சுனாமி நிதியோடு நாம் பார்த்துவிட்டோம்.எனவே,இத்தகைய கயவர்களின் நீலிக் கண்ணீரை நம்பிச் சில்லறைகளை இழக்காது,ஒவ்வொரு புலம்பெயர்ந்த இலங்கை மக்களும் தத்தமது உறவுகளுக்கு அவசியமான நிதிகளை அவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்க, இன்று எம் முன் உள்ள தெரிவாக வெஸ்ற்றன் யூனியன் வங்கியின் பணமாற்றே சாலச் சிறந்தது.இலங்கையில் பாதிப்படைந்த குடும்பங்கள் பலவற்றின் கிட்டிய-எட்டிய உறவுறுப்பினர்கள்தாம் புலம்பெயர்ந்து இங்கு வாழ்வதால் அவரவர் இதைச் செய்யும்போது, பணமானது தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகிறது!

பாதிக்கப்பட்ட மக்களைச் சொல்லிப் பணஞ் சேகரித்த இந்தத் தமிழ் வியாபாரிகளை இனியும் நம்புவது நம்மை நாமே ஏமாற்றுவதில் முடியும்!

மக்களின் எந்த அவலத்தையுஞ் சொல்லிக் காசு புடுங்கும் மிகக் கெடுதியான சமூகக் குற்றத்துக்கு உடந்தையாக இருக்கும் தீபம் தொலைக்காட்சியோ, சமீக காலமாகக் காட்சிப்படுத்தும் இனவாதஞ்சார்ந்த கருத்துப் பரப்புரைகளுக்கு ஏதுவாக, இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களினது அதிமானுடத்தேவைகளும்,சுனாமியில் செத்தவர்களின் உடலங்களும் மிக அவசியமான பின்னணிகளாகவும்,இனவாதத்தை மேலும் விருத்தியாக்கித் தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,இலங்கையில் யுத்தத்தை அனைத்து வகையிலும் மக்கள்மீது திணிக்கவும்,அவர்களது குழந்தைகளைப் பலியெடுக்கவும்,தத்தம் தேவைக்கேற்ற முறையில் பணஞ் சம்பாதிக்கவும்-இவையனைத்துக்குமாக இனவாதம் ஒன்றே அவசியமாக இருக்கிறது தீபம் தொலைக்காட்சிக்கு.இதன் தெரிவு, நமது தலையில் மேலும் குண்டுகளை இலங்கைச் சிங்கள இராணுவம் கொட்டுவதாக இருக்கும்! இத்தகைய யுத்தச் சூழலால் தாம் பிழைத்துவிடலாமென இந்தக் கயவர் கூட்டம் கணக்குப் போடுவதன் முன் உதாரணங்களே இலட்சம் மக்களை இதுவரை பலி கொண்டதை நாம் ஒருபோதும் மறத்தலாகாது!

இலங்கையில் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் யுத்தம், சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல அது தமிழ் வியாபாரிகளுக்கும் நல்ல வரும்படியை மக்களின் அழிவில் தந்துகொண்டே இருக்கிறது.இதன் சாட்சிகள் பல. சிற்றூர்களான ஜக்கச்சிக்கும், பளைக்கும் இடையில் கிடக்கும் கரந்தைக் குளத்தில் இருக்கும் பாரிய தென்னந்தோப்புக்களுக்கு இதுவரை எந்தக் குண்டும் விழாததும்,கடலில் மீன் பிடிக்கத் தடைவிதித்தபடி டின் மீன் இறக்குமதிமூலமாகக் கோடிகோடியாகச் சம்பாதித்த கொழும்பு வாழ் தமிழ்த் தரகு முதலாளிகளுக்கும் இராணுவத்தோடு நல்ல வகையான உறவுகள் புலிகளைப் போன்றே தொடர்கின்றன.

எனவே,எத்தகைய வடிவிலும் இனவாதமும்,தொடர்ந்த நிதித் திரட்டல்களும்,வியாபாரங்களும் நமக்குள் தொடர்கதையாக வரும்.வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு முகங்கள் நமக்குள் அறிமுகமாகிறது.அவைகள், மறக்காது இனவாதம்,சிங்கள இனவெறுப்பு,தமிழீழம் என்று மொழிபெயர்க்கிறது.நம்மை அகதிகளாக்கி, நமது மக்களைத் தொடர்ந்து அழித்த இந்தப் பேர்வழிகளை இனம் கண்டு, நிராகரிப்பதற்கு முதலில் இத்தகைய தீபம் தொலைக்காட்சிகளை பார்ப்பதற்காகச் சந்தா அட்டைகளை வேண்டுவதைத் தவிர்த்து விடுதலே மேலானது.

சிங்களவர்கள் மத்தியில் மாத்தையாப் போடும் தீபம் தொலைக்காட்சியில் தோன்றுபவர்கள்,தமிழ்மக்கள் மத்தியில் சிங்களவர்களோடு இணைந்துவாழ முடியாதென்கிறார்கள்!வியாபாரிகள்,வியாபாரிகள்தாமெனத் தமிழீழ விடுதலை வியாபாரிகளிடமிருந்து நன்றாகவே கற்க முடியும்!இவர்கள் தமது வளங்களைப் பெருக்குவதற்கு இன்னும் எத்தனை மனிதர்களின் தலையை உருட்டுவாகள்?இதையும்,இனிமேல் நாம் அனுமதிக்கத்தான் முடியுமா?


ப.வி.ஸ்ரீரங்கன்
28.12.2008

Friday, December 26, 2008

இலங்கையராய் இருக்க...

ன்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவிலங்கையர்கள்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!

கடுமழையில் விழுதுடையும் ஆல்போல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து தமிழ்த்தேசிய அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண் புலி-சிங்கம் வடிவில்!

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்கொலிக்கும் தமிழ்த் தினாவெட்டு

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஊர்த்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் இலங்கைத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து யுத்தத்துக்கு உருவேற்றி...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய?தூ...

2009 ஆவது தேசத்தில்
யுத்தம் தொலைத்துத் தமிழரை
உயிரொடு உலாவவிடத் தமிழ்க் கூத்து ஒழிக
ஓங்குக இலங்கையர் ஒற்றுமை உறவு!


ப.வி.ஸ்ரீரங்கன்

Thursday, December 25, 2008

பிணங்களைப் புணர்வதில் உலகமே உடந்தையாக!

அன்பு வாசகர்களே,வணக்கம்!
மகிந்த இராஜபக்ஷ போப்பாண்டவரோடு கைகுலுக்கியபடி தனது வன்கொடுமை இராணுவத்தைக் காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் போராளிப் பெண்களைக் கொன்று புணருகிறான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியென்றபடி தமிழ்பேசும் மக்களைப் பாலியல் ரீதியாத்தாக்கிச் சிதைத்து,மானபங்கப்படுத்திக் கொன்று குவிக்கும் இராணுவச் சர்வதிகாரியாக இந்த இலங்கையின் சிங்களத் தலைவன் புத்தனுக்கும்,கிறிஸ்த்துவுக்கும் புகழ்பாடுகிறான் இன்றைய தினங்களில்!.ஆனால், உயிரோடிருக்கும் மனிதரைக் குண்டுகள்போட்டுக் கொன்றபடி...

இலங்கையின் தேவாலயங்களின் அழகாக உடைத்தரித்து வழிபடும் பெண்கள் தமது சகோதரிகளைப் புணரும் ஒரு தேசத்தில் கிறிஸ்துவுக்குக் கொண்டாட்டஞ் செய்து பூரிப்படைகிறார்கள்!நாளை இவர்களையும் புணரும் இன்னொரு வடிவமாக இந்தப் பாசிச அரசுமாறும்போது, இவர்கள் எவரைத்தாம் துதிப்பாரோ?

எமது,மக்களின்-போராளிகளின் வாழ்வைச் சிதைப்பதற்கு எத்தனை வடிவங்களிலிருந்து இந்த இராஜபக்ஷ முனைகிறான்!

மக்களுக்குத் தலைமை தரும் உத்தமனாகத் தன்னைவுலுகுக்குக்காட்ட போப்பாண்டவரிடம் ஆசிபெறப் போகிறான்.அங்கே,தமிழ்பேசும் மக்களைப் புணர்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறான்.இதே உலகத்திடம் அமெரிக்காப் பாணியில் "ஜனநாயகம்,சமத்துவம்,சகோதரத்துவம்" பேசி, நமது மக்களைப் பூண்டோடு அழிப்பதற்குப் புலியினது பாசிசம் மகிந்தாவுக்குக் கைகொடுக்கிறது.

இன்றோ,இவ்வுலகு கிறிஸ்த்துவின் இன்னொரு பிறந்த நாளையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.எனினும்,நமது மக்களும்,போராளிகளும் இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவத்தால் குண்டுகள்போட்டுக் கொல்லப்படுவதுமட்டுமல்ல,அவர்களால்(சிங்கள வன்கொடுமை இராணுவத்தால்) கொல்லப்பட்ட புலிப்போராளிப் பெண்களை மிகவும் கேவலமாக அம்மணப்படுத்திப் புணருகிறது-அம்மணமானவுடலை இரசித்து,மேலும் பல தடவைகள் கொன்று வருகிறது, சிங்களப் பாசிச இராணுவம்!

ஈராக்கில்,யுக்கோஸ்லோவியாவில்,அவ்கானிஸ்தானில் அமெரிக்க வன்கொடுமை இராணுவஞ் செய்த அதே கொடுமைகளை இலங்கை வன்கொடுமை இராணுவமும் தமிழ்பேசும் மக்களுக்கும்,புலிகளின் போராளிப் பெண்களுக்கும் கட்டவிழ்த்துவிடுகிறது.

இதை அம்பலப்படுத்தி உலக நாடுகளின் பல பொதுநல அமைப்புகளுக்கு இதுவரை மின்னஞ்சல் அனுப்பியும் எவருமே நம்மைக் கண்டுகொள்ளவில்லை.இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புலிப் போராளிகளை மனிதாபிமானமுறையில் நடாத்தாமல், மிருங்கங்களைப்போல் அம்மணப்படுத்தி இரசித்து மகிழ்கிறது இலங்கை அரசபயங்கரவாதம்.எனினும், மக்களின் நல்வாழ்வுக்காக கிறிஸ்மஸ்வாழ்த்து உரையாற்றுகிறார் இலங்கை ஜனாதிபதி.அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இராணுவமோ தமிழ் மக்களைக் குண்டுகள்போட்டுச் சிதைத்தபடி, அவர்களது போராளிப் பெண்களைப் பிணமாக்கிப் புணரகிறது.இதை எவர்களால் அங்கீகரிக்கமுடியும்?அல்லது,மௌனமாக இருக்கத்தான் முடியுமா?மனிதாபிமானமுள்ள எவரும் இதுகுறித்துப் பேசவே முற்படுவார்.ஆனால்,களத்தில் மரணமான இப் போராளிப் பெண்களை மனிதர்களாகக்கூட நமது உணர்வுகள் அங்கீகரிக்க மறுத்து போர்க்களத்தில் எல்லாஞ் சாத்தியமெனக் கிடக்கிறதான நமது போக்குகள் மெல்லச் சிங்கள வன் கொடுமை இராணுவத்துக்கு அருகினில் நிற்கிறது!

பொதுப் புத்திக்கு இவ்வீடியோ(சிங்கள இராணுவம் மரணித்த புலிப்போராளிப் பெண்களோடு ஆணாதிக்க முறையில் பாலியல் பலாத்தகாரஞ் செய்வது) ஒழுக்கக் குறைவான நிகழ்வுகளை மறுவிளைவாக்கிறதாம்.எனவே,அதைப் பார்க்காமல் தவிர்த்து, இலங்கை இராணுவம் கோணேஸ்வரியின் யோனிக்குள் குண்டுவைத்ததை-வைப்பதை மேலும் தொடரும்போது மௌனமாக அங்கீகரிக்கட்டாம்.தூ...மக்கள் விரோதிகளே!
இன்று, நாம் படும் வேதனைகளுக்கெல்லாம் இலங்கைப்பாசிச இராணுவம் மட்டுமல்ல உங்களைப் போன்று "ஓழுக்க"வாதிகளுமேதாம் காரணமாகிறார்கள்.நாலு சுவருக்குள் நீலப்படங்காட்டும் நீங்கள் "பீப் சோவ்" மன நிலை குறித்துப் புலம்புகிறீர்கள்!எது, அரசியல் சார்ந்த நிகழ்வு-எது,கிரிமனல்சார்ந்த நிகழ்வு என்பதை தனித்தனியே அரசியலை துண்டித்து இனம்காண்பவர்கள் நீங்கள்.நாங்கள் இவையனைத்தும் அரசியல்-சமூகப் பிரச்சனைகளின் இருவேறு முகங்களாகப் பார்க்கிறோம்.

உலகு தழுவிய முறையில் இலங்கைப்பாசிச அரசின் ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்கும்போது, அவற்றை மௌனமாக அங்கீகரிக்க முனையும் இந்தப் பேடித்தனம் இன்னும் எத்தனை புலிப் போராளிப் பெண்களை மானபங்கப்படுத்துமோ நாம் அறியோம்.போர் வீரப் பெண்களைக் கௌரவமாக நடாத்த முடியாதளவுக்கு ஆணாதிக்கத் திமிராக போராளிப் பெண்களின் உயிரற்றவுடல்களை பாலியல்ரீதியாக அனுபவிக்கும் மனோவியாதி பிடித்த சிங்கள இராணுவத்தை உலக நீதிக்கு முன் நிறுத்துவதும், அதன் தலைவன் இராஜபக்ஷவைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவசியமானது.இது, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரதும் அவசியமானபணி!

பாசிசத்தைத் தமிழ்மக்கள்மீது சிங்கள இராணுவமும் உலகமும் கட்டவிழ்த்துவிடுவதற்குத் துணையான பலகூறுகளை நமக்குள் விதைத் பாசிசப் புலிகளால்-இதன் பாத்திரமாக அவர்களது போராளிப் பெண்களையே சிங்கள இராணுவம் கொன்று புணருவதுவரை நமது வாழ்வு சிதைந்துகிடக்கிறது.புலிகள் இயகத்தின் மிகக் கீழ்த்தரமான போராட்டப் பாசிச நடவடிக்கைசார்ந்த கூறுகளால் மக்கள் சிங்கள வன் கொடுமை இராணுவத்திடம் பலியாகியும் பாலியல் பலாத்தகாரத்திலிருந்து விடுதலை பெறவில்லை!

இத்தகைய முறைமையில் நாம் பல வெளிநாட்டு பொது நிறுவனங்களுக்கு இவ் நிகழ்வை அம்பலப்படுத்தி வெகுஜனப்படுத்தப்பட்ட போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
25.12.2008

Monday, December 22, 2008

சில குறிப்புகள்

தமிழ்மக்களும் புலிகளும்,இலங்கை அரசும்


புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காத்து நமது மக்களின் அடுத்த கட்டப் போராட்டப் பாதையைத் தகவமைப்பது குறித்து,நமது மக்கள் இன்று நடைபெறும் போருக்கெதிராகக் குரல் கொடுக்கவும்-அது,இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெடித்துக் கிளம்பியாக வேண்டுமெனக் கூறிய நான், இப்போது பிரமைக்குள் காலத்தைக் கடத்துகிறேன்!

புலிகள் இயக்கத்தை உலகநாடுகள் பல எதிர்க்கின்றன-தடைசெய்கின்றன,அவைகளுக்கான நலன் அடிப்படையில் இவை நிகழ்கின்றன.இது, புலிகளுக்குப் பாதமாக இருப்பினும்,சாரம்சத்தில் புலிகள்சார்ந்த மக்களின் ஆதரவு இருக்குமாயின்-மக்களோடு மக்களாக இருக்கும் பட்சத்தில் எவரும் எந்த அமைப்பையும் அழித்துவிடமுடியாதென்பது உண்மை.ஆனால்,சொந்த மக்களே இப்போது புலிகளுக்கெதிராக ஊர்வலம்-ஆர்ப்பாட்டஞ் செய்கிறார்களென்றால் புலிகளின் நிலை என்ன?அதுவும் பல்லாயிரக்கணக்காகத் திரண்டு புலிகளை எதிர்த்து ஊர்வலம் போகிறார்கள்!இது, நமது போராட்ட வரலாறில் எப்பவும் நிகழ்ந்தது இல்லை.

கடந்தகாலங்களை, இராணுவம் கைப்பற்றிய வலயத்துள் வாழநேரிட்டதன் அடிப்படையில், தமது அன்றாட வாழ்வைக் கவனித்தார்களேயொழிய ஈழப்போராட்டத்துக்கெதிராக ஆர்ப்பாட்டவூர்வலுஞ் சென்றதாக நான் அறியேன்.இப்போது நடந்தேறும் ஊர்வலத்துக்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு இருக்கிறதாக இருக்கலாம்.ஆனால்,இவ்வளவு பெருந்தொகையாக மக்களை இராணுவம் திரட்டமுடியாது.அல்லது, டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகளோ இவ்வகை ஊர்வலங்களைச் சொல்லி மக்களை இவ்வளவு பெருந்தொகையாகக் கடந்தகாலத்தில் அணிதிரட்சிகொள்ளத் தூண்டுதல் சாத்தியமற்றிருந்தது.இன்றிவை சாத்தியமெனும்போது புலிகளின் ஆதிக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டதென்றாகிறது.ஆதிக்கத்தை இழந்து வெறும் வன்முறைசார்ந்த யுத்த ஜந்திரத்தைத் தமது இயக்கத்தைக்காக்க வைத்திருக்கும் இந்த அமைப்பையும்,மக்கள்மீதான ஆயுத அடக்குமுறைக் கடந்தகாலத் தவறுகளையும் மக்கள் இனிமேலும் பொறுத்திருக்க முடியாமற்றிப்போது துணிந்து எதிர்க்கிறார்களாயின், புலிகளின் தோல்வி நிச்சியமாக்கப்பட்டுள்ளது.அது,இன்னொரு முறை மக்களாண்மைமிக்க அமைப்பாக உருக்கொண்டு,புரட்சிகரமான படையணியாக மாற்முறுவதாயின் அடுத்த ஐம்பதாண்டுகளுக்குச் சாத்தியமில்லை என்றாகிறது இந்த நிகழ்வுகளினூடாக!

சொந்த மக்களே பெருந்திரளாக எதிர்கிறதான இந்தப் புலிகளின் நிலை மாற்றமுறுவதானது"ஈழப்போராட்டம்-தமிழீழம்"எனும் பொய்மைக் கோசங்களுக்குக்கிடைத்த பெருந்தோல்வி மட்டுமல்ல இதன் மூலந்தொலைக்கப்பட்ட வாழ்வைத் தேடுகிற பயணமாகவும் இருக்கலாம்.ஆனால்,எத்தகைய சக்திகளோடிணைந்து இந்தத் தேடுதலைச் செய்வதென்பதில் தமிழ்பேசும் மக்கள் மீளவும் பெருந் தவறிழைக்கின்றார்கள்!இது,வரலாற்றில் தம்மை அடிமைகொள்ளும் ஆதிக்கத்துக்குத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுப்பதாக இருப்பதை அவர்கள் அறியக்கூடிய அரசியல் தெளிவு இல்லாதிருப்பதன் தொடர்ச்சியாக மக்கள் வெறும் மந்தைகளாகப் பின் தொடர்வதில் இந்த அடிமை அரசியல் உச்சம் பெறுகிறது!

ஈழத்தமிழ் மக்களின் சிறந்த பெரியோர்கள்-கல்வியாளர்கள் எல்லோரும் பலியாகிப்போனார்கள்.தமிழீழத்தைச் சொல்லிப் போராடிய நாசகார இயக்கங்கள் தத்தமது அந்நிய விசுவாசத்துக்காக நமது கல்வியாளர்களைத் துரோகி சொல்லிச் சுட்டுக்கொன்றுவிட இந்த மக்கள் சமுதாயம்போதிய அறிவற்று அழிவுவாதிகளின் பின்னே அள்ளுப்பட்டுப்போகிறது.அதன் முன்னறிவிப்பே இன்று புலிகளுக்கெதிரான பெருந்திரளான மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்.பூனகரியின் இராணுவவெற்றியை யாழ் முற்றவெளியில் கொண்டாட ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் தமிழர்கள் திரண்டதாகவும் சொல்லப்படுகிறது!

தமிழரின் கலாச்சாரக் குறியீடான யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களின் புலிகளுக்கெதிரான ஆர்பாட்ட ஊர்வலத்தை யாழ்மக்கள் இலங்கை இராணுவத்தோடு இணைந்து பாரியமுறையில் நடாத்தியுள்ளார்கள்.சுமார் 16.000.மக்கள் கலந்துகொண்ட இந்தப் பாரிய பேரணி புலிகளையும்,அவர்களது போராட்டத்தையும் எதிர்த்துக் குரல்கொடுத்த பேராணியாக உலகில் காட்டப்பட்டுள்ளது.

உண்மையில், யாழ்ப்பாண மக்கள்மட்டுமல்ல கிழக்கிலும்,வன்னியிலும் மக்கள் புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணிகளை இலங்கை அரசோடிணைந்து செய்து முடிக்கும் மன நிலையை எங்ஙனம் புரிந்துகொள்வது?

இலங்கையில், புலிகளை இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ தோற்கடிக்கவில்லை-அது,மக்களால் தோற்கடிக்கப்படுவதாகச் சமூகவியலாளர் தோழர் இரயாகரன் தொடர்ந்து எழுதிவருவருவதை இந்த மக்களின் செயற்பாடு மிகவும் உறுதிப்படுத்தி வருகிறது.நாம்,மிகவும் காத்திராமகச் சிந்தித்தபோது தோழர் இரயாவை சில கட்டத்தில் நிராகரிப்பதில் எமது கருத்துக்களைக் கக்கி வந்துள்ளோம்.எனினும்,அவர் எதைக்கூறுகிறாரோ அது நிசத்தில்-யதார்த்தத்தில் நடந்தேறி முடிகிறது.

இன்று,பாசிச இலங்கை அரசை இலங்கைத் தமிழர்களில் பெரும்பகுதி மக்கள் ஆதரிக்கும் காரணி என்ன?-ஏன் ஆதரித்து, இலங்கை வன்கொடுமை இராணுவத்தின் பின்னே செல்கிறார்கள்? இத்தகைய கேள்வி மனதில் பெரும் அச்சத்தைத் தந்தாலும் உண்மை மிக இலகுவானது.இதன் தார்மீகப் பொறுப்பு அனைத்தும் ஈழ விடுதலையை முன்னெடுப்பதாகக்கூறும் பாசிசத் தமிழ் இயக்கங்களுக்களையே சார்ந்தது.இவர்களால் பழிவாங்கப்பட்டு, மக்கள் சந்தித்த அடக்குமுறைகளே இப்போது ஆர்ப்பாட்டப் பேரணியாக இலங்கையெங்கும் தமிழ்மக்களால் நடாத்தப்படுகிறது.இப் பேரணிகள் புலிகளை எதிர்த்தும் ,இலங்கை அரசை ஆதிரித்தும் நடை பெறுகிறது என்பது மிகவும் கூர்ந்து நோக்கத் தக்கது!

இது குறித்து எமது மக்கள் மிகவும் தெளிவற்றே அரசியல் செய்கின்றார்கள்.அவர்களது ஆன்ம விருப்பு இன்று புலி எதிர்ப்பாக விரிவடைவதற்கான காரணிகளைப் புலிகள் மறுதலித்த மக்கள் நலன்களிலிருந்தும், மொன்னைத் "தமிழ்த் தேசியம்"பேசியபடி அவர்களை ஒடுக்கியதன் விளைவிலிருந்தும் சமூக ஆவேசமாக மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள்.இதுவே ஒரு கட்டத்தில் மக்கள் இராணுவத்தின் பின்னே தமது தெரிவுகளைச் செய்து பின்தொடர ஈழப்போராட்டம் மரணப் படுக்கைக்குப் போகிறது!அப்பாடா என்றபடி புலிகளை எதிர்த்துப் பேரணிகள் எழுகின்றன!


இது குறித்து,மிகவும் ஆழ்ந்து நோக்கும்போது சில விடைகளை நாம் கண்டடைய முடியும்:


1: சமாதானக் காலக்கட்டத்தில் ஓர் அரச வடிவத்தைக்கொண்டியங்கிய புலிகள், தமிழ்பேசும் மக்களை ஓடுக்கிப் பலாத்தகாரமான ஆட்சியை நிறுவியது(இதை எதிர்பார்த்த அந்நிய சக்திகளுக்குப் புலிகளின் தனிகாட்டுத் தர்பார் பெரும் அனுகூலமான இன்றைய நிலையை முன்கூட்டியே தெரிவுக்குள்ளாக்கியது இதன் வழி).

2:மிகவும் கொடுமையாக மக்களைக் கருவறுக்கும் வரிகளை மக்களின் அதிமானுடத்தேவைகள்மீது விதித்தது.

3:மக்களைச் சுயமாகச் செயற்பட அனுமதிக்காது அவர்களை ஆயுத ரீதியாக அடக்கி ஆளமுனைந்தது.

4:மக்களின் எந்த விருப்பையும் தமிழ்த் தேசியப் போராட்டத்தைச் சொல்லி நிராகரித்தது,அவர்களின் குழந்தைகளை வலுகட்டாயமாகப்பிடித்துச் சென்று களமுனையில் சிங்கள இராணுவத்திடம் பலியாக்கியது(இதற்கு ஆதாரம்: வன்னியில் வாழும் என் உறவினர்களின் பல குழந்தைகள் செத்து மடிந்தது).


இந்த நான்கு முக்கிய கூறுகளும் இன்று இலங்கை இராணுவத்தை நோக்கி மக்கள் பின்தொடரும் கதவைத் திறந்துள்ளது.


புலிகளின் கொடுமையான ஒடுக்குமுறைக்குள் முகங்கொடுதத் தமிழ்மக்கள் இனம்காணும் இராணுவப் பக்கமுள்ள சாதகமானது:


அ):புலிகளின் ஆயுத அடக்குமுறைக்கொப்ப இலங்கை இராணுவமும் அதே செயலைச் செய்யத்தாம்போகிறது.எனினும்,இலங்கை அரசு தனது மக்களுக்கு இதுநாள்வரை வழங்கிய அதிமானுடத்தேவைகளை நிச்சியம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கும் செய்யத்தாம் போகிறது எனும் நம்பிக்கை-அதை இலங்கை செய்யத் தொடங்குகிறதென்பது கண்கூடு.

ஆ):மக்கள்மீது கொடிய வரி மற்றும் உணவுப்பொருட்களுக்கான கெடுபிடிகள், மற்றும் அதன்மீதான எதேச்சை வரிவிதிப்பு இலங்கை அரசிடம் இல்லாதிருப்பது

இ): பாரிய யுத்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதும் மற்றும் அத்தகையவொரு சூழலை இனியும் எதிர்கொள்ள விருப்பற்றதுக்கும் இராணுவ வலயம் சாத்தியமானது.

ஈ): யுத்தத்தைச் சொல்லித் தமது வாழ்வாதாரங்களை இழந்து அகதியாக அலைவதில் மக்கள் உடன்பாடற்றதும் தமது இளைய தலைமுறையை புலிகளுக்கு அடியாளாக அனுப்புவதை-பறிகொடுப்பதைத் தவிர்ப்பதும் இலங்கை அரசைச் சாரும்போது நிகழ்கிறது.

இத்தகைய வினைகளின் பின்னே, இலங்கை அரசின் மிகச் சாதுரியமான அரசியல் வெற்றிகள் நிலை நாட்டப்படுகிறது.இது,புலிகளை மேலும் பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்தியுள்ளது.

இன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்யோடும் தமிழர்கள் இராணுவத்தின் பின்னே தமது எதிர்காலத்தைத் தேடியோடுவதன் உண்மைகள் இங்ஙனம் இருக்கும்போது, புலிகள் தமது யுத்தம் மக்களின் பலத்தோடு நடைபெறுவதாகப் பூச்சுற்றுவதில் தமது எதிராளியை இன்னும் பலப்படுத்திவிடுகிறார்கள்.

இன்றையசூழலில், புலிக்கெதிராக உலக இராணுவவலுவோடு போர் செய்யும் இலங்கை அரசு புலிகளின் பகுதியிலிருந்து தப்பிவரும் மக்களை மிகவும் கண்ணியமாக நடாத்துவதாகக் காட்டிப் படம் போடுகிறது.உண்மையில் அந்த அரசு மக்களைத் தன்மானத்துடன் நடாத்துவதற்கான அரசியல் நடாத்தையை இந்திய மத்திய அரசு கண்காணிக்கிறது.இதன் அடிப்படையில் மக்களின் போர்கால அவலத்தை எதன்வடிவிலும் குறைக்கப்பட்டு அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வமாகச் செயற்படுத்தப்படும் இந்திய அரசின் இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் பின்னே மக்களை அலையலையாகப் பின் தொடர வைக்கிறது.

இங்கே,புலிகள் மிகவும் தனிமைப்படுத்தப்படுவதற்கான இந்த இந்திய-இலங்கை வியூகம் மிகவும் சூழலை மதிப்பிட்ட சரியான தெரிவாகவே இருக்கிறது.இதைப் புலிகளால் வெற்றிகொள்வது இனியொரு யுகத்திலும் முடியாது.

மக்கள் இலங்கை அரசின்மீதுகொள்ளும் ஆத்மீக உறவென்பது பலகாலத்தொடர்புகளின் விருத்தியாகும்.அதை ஒருசில கட்டத்தில் எழுந்தவொரு இயக்கத்தால் மிக இலகுவாகத் தேசியத்தைச் சொல்லி வீழ்த்த முடியாது.ஏனெனில்,மக்கள் இயக்கங்களை-தமிழ்த் தேசியவாதத்தை நம்பிக் குரல் கொடுத்துத் தமது சந்ததிகளைப் போரிடக்கொடுத்தும், தமது வாழ்வு இருண்டதைத் தவிர வேறெதையும் இந்த ஈழப்போராட்டம் வழங்கியதல்ல.எனவே,மக்கள் தமது வாழ்வின் பெறுமதியை உணரத்தொடங்குவதில் இலங்கை அரசின் சூழச்சிகள் சாதகமானதாகவும்,சமீபத்துக் கசப்பான அழிவுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் இலங்கை அரசின் பின்னே மக்கள் தொடர்ந்து செல்வார்கள்.இது,புலிகளை முழுமையாக அழிக்கும் போரில் இலங்கை-இந்தியக் கூட்டு இராணுவத்தை மேலும் உறுதியோடு போரிடத் தூண்டும்.


புலிகளை மக்கள்தான் தோற்கடிக்கிறார்கள் என்ற இரயாவின் சரியான மதிப்பீடு இதிலிருந்து உண்மையாகிறது.




ஜசிகரன்,திசநாயகம்,வளர்மதி:


இன்று இலங்கை அரசோ தன் பின்னே தொடரும் தமிழ் மக்களை மிகவும் கண்ணியமாக நடாத்துவதாகப் படம் காட்டுகிறது.யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, மன்னார் எனத் தொடரும் இந்தப் படங்காட்டல் இன்னொருதளத்தில் மிகவும் ஒடுக்குமுறையாக விரிகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களைக் குறித்துப் பாதுகாப்பு அமைச்சுத் தனது இணையத்தில் கருத்துக் கூறியுள்ளது-புனைந்துள்ளது!இந்தப் புனைவுக்குத் தமிழ் மக்களுக்குள் இருக்கும் அரச சார்பு குழுக்களே உடந்தையாக இருப்பதும் அப்புனைவைத் தெளிவாக வாசிக்கும்போது புரிகிறது.

பத்திரிகையாளர்கள் திசநாயகம் மற்றும் யசிகரன் அவரது துணைவியார் வளர்மதி குறித்துக் கருத்துக்கூறியுள்ள இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு, மிகவும் கீழ்த்தரமாகச் சோடிக்கும் கதைகளோ அதன் பிற்போக்குத்தனமான அரசியலை விளங்கப்போதுமானதாக இருக்கிறது.

ஒரு வெற்றுவேட்டுப் பயங்கரவாத இயக்கம் தெரிவிக்கும் அதே கதையோடு இலங்கை அரசும் கதைவிடுகிறது.அரச பயங்கரவாதத்தை மறைப்பதற்குத் தேச நலன், பயங்கரவாதம் எனும் கதைகளுடாக நன்றாகப் புனைகிறது.மொத்தத்தில் இப்பத்திரிகையாளர்களைக் கொன்று போடுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைக்களுக்கானவொரு வெளியை அது தேடுகிறது.இப்பத்திரிகையாளர்களின் கைது சர்வதேசமயப்பட்டதன் விளைவாகத்தாம் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.அன்றேல் எப்போதோ இவ்வரசு கொன்று குவித்திருக்கும்.

இலங்கையிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களையும் தமது கொடுங்கோன்மை அரசுக்கு விசுவாசமாக நடக்கும்படி இத்தகையக் கதைச் சோடிப்பினூடாகக் கருத்துகட்டுகிறது மகிந்த குடும்பம்-அரசு.

யசிகரனையும் அவரது துணைவியாரையும் மட்டுமல்ல திசநாயகத்தையும் புலிகளோடு முடிச்சுப் போடுவதில் அதன் மானுட விரோதப்போக்கு மேலும் அம்பலத்துக்கு வருகிறது.இன்றுவரை இலங்கை அரசு செய்துவரும் மிகக் கெடுதியான பக்கங்களை இத்தகைய அதன் விளக்கத்திலிருந்து நமது மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

புலிகளின் பாபாவுடன் தொடர்பு படுத்தியகதை போதாதென காலஞ்சென்ற தாரகி சிவராமுடனும் தொடர்புகளை வைத்ததாகவும் அவுரோடிணைந்து புலிகளின் பிரச்சாரத்துக்கு மேற்காணும் பத்திரிகையாளர்கள் துணைபோனதாகவும் கதைவிடுவதிலுள்ள உண்மை என்னவென்றால் கைது பண்ணியிருக்கும் இப் பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதும்-முடிப்பதும் உண்மையாக வருகிறது.யசியின் விடுதலைக்காக ஜேர்மனியத் தெருவில் ஜேர்மனியர்கள் சில்லறை சேர்ப்பது வீணாகிவிடுமா?


யசீதரனை விடுவிப்பதற்காக விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் அவரது உண்மையான செயற்பாடுகள் யாவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமானதென்பதும்கூடவே,ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகளுக்கு எதிரானதென்பதும்.எனினும்,இலங்கை அரசோ மக்களின் நலனைத் தூக்கிப்பிடித்த பேனாக்களைப் புலிக்கு உடந்தையாக வர்ணித்துக் கஷ்ரடியில் போட்டுச் சித்திரவதை செய்கிறது.ஒரு புறம் மக்கள் நண்பனாகக் காட்டும் இராஜபக்ஷ அரசு மறுபுறும் மிகவும் கெடுதியான பாசிசமாக விரிகிறது.இதை நாம் புரிந்துகொள்ளும் மனது எம்மிடம் இப்போது அருகிவருவது எமக்கு ஆபத்தானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.12.2008

Friday, December 19, 2008

அந்நியத் தேசங்களை நம்பிய புலிகள்

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை


மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு
அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால்
பிழைத்துக் கொள்வார்கள்
வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று


விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே
நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள்
இருள் கவிந்துவிடுமாயின்
தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு


கடிப்பதற்குச் சயனைட்டும்
குடிப்பதற்கு ஆற்று நீரும்
உன்னைக் காத்திருக்கும்
நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும்


நெடிய வானம் உனக்கான தேசத்தை
தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு
தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு
தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை


கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து
வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம்
மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக
விழிகளால் பேசிவிடு


ஓ...நியாயமற்றவர்களே!
ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள்
உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்?
அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை


ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால்
எவருக்காவும் எதற்காகவும் நீ துப்பாக்கியைக் களையாதே
மரிப்பதற்குத் தயாராகி விடு
மரிப்பதனால் நீ விடுதலையைப் பெற்றுவிடுகிறாய்


தேச விடுதலை:

இன்று,உலகமே திரண்டு ஈழத்தமிழர்கள்மீது போரிடுகிறது.

மறைமுகமாக இயங்கியவர்களெல்லோரும் பகிரங்கமாகப் போர்ப் பவனி வருகிறார்கள்.வன்னியில் தமது நேரடிப் பார்வையோடும்,கட்டளைகளோடும் உலகமே திரண்டு தமிழர்களைக் கொல்கிறது.

இது, எதனால்-ஏன் நடைபெறுகிறது?

இதற்கான விடை இலகுவானதல்ல!

இன்றைய உலகத்தின் தெரிவில்,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டம் மழுங்கடிக்கப்படுவதற்கான முன் தயாரிப்புக்களைச் செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா,இன்றோ நேரடியாகக் களத்தில் சிங்கள இராணுவத்துக்கு வழிகாட்டித் தமிழர்கள்மீது போர் தொடுக்கின்றன.இத்தகைய பாரிய அழிப்புப்போர்ச் செல்நெறியை எதிர்கொள்ளும் ஆற்றல் எந்தவொரு குட்டிமுதலாளிய இயக்க அமைப்புக்கும் கிடையாது.மக்களின் பலத்தில் ஊன்றி நின்று, அமைப்பைக்கட்டிய விடுதலைப்படைகள் சாரம்சத்தில் மக்கள் விடுதலைப்படையாகப் பரணித்திருப்பவை.அத்தகைய மக்கள் இராணுவத்தை மக்கள் விரோதிகளால் இலகுவாக அழிக்கமுடியாது.இதற்கு வியாட்நாமியப் போர் பற்பல பதில்களைச் சொல்கிறது.

இன்று, நம்மீது தொடுக்கப்பட்ட உலக ஏகாதிபத்தியத்தின் அத்துமீறிய போர், சாரம்சத்தில் நமது மக்களின் மௌன அங்கீகாரத்தோடு நகர்த்தப்படுவதுபோன்றே இலங்கைச் சூழல் நிலவுகிறது.

இலங்கைத் தமிழ்பேசும் மக்களைப் பலவருடங்களாக மதத்தாலும்,சாதிகளாலும்,பிரதேசத்தாலும் பிளந்து பலவீனப்படுத்திய இந்திய-அமெரிக்க வியூகம் தற்போது எமது மக்கள்மீதான முழுமையான இராணுவத் தீர்வைத் திணித்து, நமது தேசபக்தப் போராளிகளை அழித்து வருகிறது.
இத்தகைய தருணத்தில் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத் தவறுகளால் சீரழிந்துபோன மக்கள் விடுதலைப்படையாகப் போராளிகள் மண்ணுக்காக மரித்துவருகிறார்கள்.மக்கள் போராட்டச் சூழலின் பாரதூரமான இந்தப் பின்னடைவு, புலிகள் அமைப்பின் தலைமைத்துவத் தவறுகளால் நிகழ்ந்திருப்பினும் அவ்வமைப்போடு நமது மக்களின் சுயநிர்ணயப்போராட்டம் பிணைந்திருப்பதால் அவ்வமைப்பின் அடிமட்டப் போராளிகளை எமது மக்கள் அம்போவென விட்டுவிட முடியாது.போர் புலிகள் இயக்கத்தை நோக்கி நகர்த்தப்படவில்லை.மாறாக, முற்றுமுழுதான தமிழ்பேசும் மக்களின் உரிமைகளின்மீதும் குறிவைத்துத் தாக்கப்படுகிறது.நமது மக்களின் எதிரிகள், பற்பல தேசத்துப் பூகோள நலன்களினதும்,பொருளாதார நோக்குகளினதும் நலன்களை மையப்படுத்திப் போராளிகளை வேட்டையாடுகிறார்கள்.

புலிகளாகச் சாவது நமது மக்களின் குழந்தைகளே!

இனியும் நமது மக்கள் மௌனித்திருக்க முடியாது.

நமது மக்களினது நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதென்பது நமது தேசபக்தப் போராளிகளைக் காத்தலோடும் சம்பந்தப்பட்டது.இதை மறுத்துவிட்டு மக்கள் நலன்பேசுவது கபடத்தனம்.

புலிகள் அமைப்பின் அழிவைக் குறித்து அரசியல் நோக்கு பற்பல வகைப்படும்.

எனினும்,அப்பாவிப் போராளிகளை உலகமே திரண்டு அழிப்பதற்கு எவரும் உடந்தையாக இருக்கமுடியாது!

இன்றைய சூழலில் நமது போராளிகளை எந்த நிபந்தனையுமின்றி நாம் ஆதரிக்கவேண்டியுள்ள வரலாற்றுக்கடமை நம் முன் நிற்கிறது.சிங்கள அரசுக்கெதிரான போராட்டமாகக் காட்டப்பட்ட இவ்யுத்தம் சாரம்சத்தில் உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமென்றும்,அது, புரட்சிகரமான பாத்திரத்தை எடுத்தாகவேண்டுமென்றும் அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஓயாது உரைத்து வந்துள்ளோம்.புலிகளின் தவறான பார்வைகள்மட்டுமல்ல அவர்களது வர்க்க நிலையும்,சார்வும் தமிழ்பேசும் மக்களை உலக வல்லரசுகளிடம் அடிமைப்படும் இன்றைய நிலைக்குத் தள்ளியுள்ள இந்தப் போர் தோல்வியில் முடியப்போகும் சூழலில் உலகத்து இராணுவத் தளபதிகள் எல்லோருமே நம்மை மேய்ப்பதற்கு வன்னியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இதை முறியடித்து, மக்கள் தமது சுயநிர்ணயப் போராட்டத்தைத் தக்கவைத்து விடுதலையடைவதென்பது புலிகளின் அடிமட்டப்போராளிகளைக் காப்பதிலிருந்தே ஆரம்பமாகிறது.இது, எங்ஙனம் சாத்தியமென்பது களத்தில் போராடிமடியும் போராளியல்லத் தீர்மானிப்பது.மாறாக, மக்களே இவற்றைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.மக்கள் திரள் திரளாக எழுச்சியுற்று, வன்னியில் திரண்டிருக்கும் உலக வல்லரசுகளின் இராணவத் தளபதிகளுக்கெதிராகக் கலகஞ் செய்தாகவேண்டும்.இலங்கை பூராகவும் எழிச்சியடையவேண்டிய மக்களின் கலகம், உலகு தழுவிய முறையில் ஆர்பாட்டமாகவும் வெடித்தாகவேண்டும்.

முதலாளித்துவத் தேசங்களின் முகமூடிகளாக இருக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் முன் ஆர்;ப்பாட்டப் பேரணிகள்-ஊர்வலங்கள் சங்கிலித்தொடராக நிகழ்ந்தாகவேண்டும்.இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் இராணுவ ஆலோசனைகளும் வழங்கும் உலக நாடுகளை அம்பலப்படுத்தித் தமிழ்பேசும் மக்களை அநாதைகளாக்கும் இவர்களுக்கெதிரான ஜநாயகபூர்வமான போராட்டங்கள் இன்றி வன்னியில் நமது போராளிகளைக் காக்க முடியாது.

வன்னியில் உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு,இலங்கை அரசு உடனடியாகத் தமிழ்பேசும் மக்களோடு பேச்சுவார்த்தையைச் செய்து, அவர்களது சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரிக்கவேண்டும்.இது, இலங்கை ஒற்றையாட்சிக்குள் ஒரு மாற்றான மேலான தீர்வைச் செய்யும் முன் நிபந்தனைகளில் ஒன்று.தமிழ்பேசும் மக்களுக்குப் "பொருளாதார அபிவிருத்தித்தான் சுபீட்சமான தீர்வைத்தரும்,அதுதான் பிரச்சனையின் முதற்காரணி"யெனப் பிளேட்டைத் திருப்பும் அமெரிக்கா கிழக்கில் தனது சதி வேலைகளைச் செய்தபடி... இப்போது, வன்னியிலும் மக்களை அழிப்பதற்கான ஆயுதங்களை- ஆலோசனையை இலங்கைக்கு வழங்கித் தனது சதியை மேலும் விருத்தியாக்கி வருகிறது.மறுபுறத்தில்,நியாயவான் வேஷம்போடும் துப்புக்கெட்ட இந்தியாவோ அனைத்துவகைக் குழறுபடிகளையுஞ் செய்து நமது மக்களைப் பூண்டோடு அழிக்கக் களத்தில் சிங்கள முகமூடியோடு போராடுகிறது!
பண்டுதொட்டு அந்நியத் தேசங்களை நம்பிய புலிகள் உயிர்ப்பிச்சைக்காக யுத்தஞ் செய்தபடி, கடந்தகாலவுறுகளை இனிமேலும் புதுப்பிக்கப் புலித் தலைமை ஆர்வங்கொண்டிருப்பினும் நாம் செய்யவேண்டிய பணி வேறானது!

நமது மக்கள் தமது பிரச்சனைகளை அந்நியத் தயவில் வென்றெடுக்கமுடியாதென்பதால் இன்றைய சூழலில் மக்கள் தமது பிள்ளைகளைக் காக்கும் முதற்படியாக அணியணியாகத் திரண்டு வன்னியில் இடம்பெறும் கொடூர யுத்தத்துக்கெதிராகக் கலகஞ் செய்தாகவேண்டும்.ஆனால்,இலங்கையின் இன்றைய சூழலோ மிகவும் கெடுதியானவொரு சூழலைத் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் இராணுவத்துக்குப் பின்னே,கிழக்கு மாகாணம் இராணுவத்துக்கு பின்னே சென்றுவிட்டபின் அங்கெல்லாம் மக்கள் உணவுக்கு-அதிமானுடத் தேவைகளுக்காக ஏங்கிக் கிடப்பதே முதன்மையான பணியாகக் கிடக்கிறது.

மக்கள் தமது பிரச்சனையை வெறும் உணவுப் பிரச்சனையாக உணரத்தக்கப்படி உலக வல்லரசுகள் நம்மையும்,நமது போராட்டத்தையும் திசை திருப்பிவிட்டார்கள்.இதுதாம் கடந்தகாலத்தில் புலிகள் செய்த பேச்சுவார்த்தைகளின்பலன்.

அந்நிய தேசங்களில் அவர்கள் பேசிய அரசியலின் தொடர்ச்சி இப்போது வன்னியில் சர்வதேச இராணுவங்களினது தளபதிகளின் கூட்டு ஆலோசனையாக மையங்கொண்டிருக்கிறது.இது,ஐ.நா.துருப்புகளாக மாற்றப்பட்டு, இலங்கை எங்கும் அந்நியத் துருப்புக்கள் வருவதற்கானவொரு முன் நிகழ்வாக இருக்கிறது.பெரும்பாலும் நமது மக்களின் விடுதலையைச் சிதைப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் புலிகளைக்கொண்டியக்கிய அந்நிய தேசங்கள் இப்போது தமது நேரடியான தலைமையின்கீழ் நமது போராளிகளை அழித்துத் தமது பங்காளியைக் காப்பதற்கெடுக்க்கும் முயற்சியைத் தோற்கடிப்பதற்கான முதற்தெரிவே வன்னியில் யுத்தத்துக்கு எதிரான பாரிய மக்கள் கலகமாக இருக்கவேண்டும்.

இதைச் செய்வதற்கு முடியாதவொரு இனம் வரலாற்றில் தனது உரிமைகளை அந்நிய தேசங்களிடம் பறிகொடுத்து வாழும் நிலைக்குள் தள்ளப்படும்.அது,பெரும்பாலும் ஈழ மக்களாகவே இருப்பார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.12.2008

Sunday, December 14, 2008

இலங்கை:யுத்தத்துக்கான கட்சி,இயக்க அரசியல்.

இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது இலங்கையிலா நடக்கிறதான பார்வையில் வாழ்கிறார்கள்.வன்னியிலோ மக்கள் சிங்கள வான்படையால் கிளெஸ்டர் குண்டுகள் போடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.என்னவொரு தந்திரமாக இலங்கை அரசு யுத்தத்தை நடாத்துகிறது!இதன் பின்னே ஒளிந்து,இவ்வகை யுத்தத்தை வழி நடாத்துபவர்கள் யார்?இவர்களுக்கும் இலங்கை யுத்தத்துக்கும் எதுவரையிலான உறவுகள் பிணைந்துள்ளன?

இலங்கையின் ஆளுங்கட்சிகள்,எதிர்கட்சிகள்,இயக்கங்கங்கள்-குழுக்களென சொல்லமுடியாதளவுக்குப் புதுப்புது குழுக்கள் இவ் யுத்தத்தோடு சம்பந்தமுடைவையாக இருக்கின்றன.எனினும்,அழிவது மக்கள்.புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே இலங்கை ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.ஆனால், தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைச் சீரழிப்பதில் தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,சம்பந்தன்,சிவாஜிலிங்கம்,டக்ளஸ்,ஆனந்தசங்கரி,கருணா-பிள்ளையான்,ஸ்ரீகாந்தா,சித்தார்தன்...எத்தனையெத்தனை வடிவுங்களில் நமது மக்கள் ஏமாற்ப்படுகிறார்கள்!

ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது-இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.இத்தொடர் நிகழ்வில் தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?


இந்தியா 72 மணிநேரக் கெடுவிதித்து மானங்கெட்ட சிவாஜிலிங்கம் எம்.பியைத் துரத்துகிறது.


இந்தியா இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள்.இதுதாம் இன்றைய தமிழ்த் தேசியத்தின் அரசியல் விவேகம்!


இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.இதுள், மிக வேடிக்கையான கட்சிகள் தமிழ்பேசும் மக்களுக்குள் கொலை அரசியலை ஊக்குவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே(இதற்குள் ஆனந்தசங்கரி அணியும் அடக்கம்).இவைகள் நமக்கு ஆபத்தான அரசியலை முன்னெடுக்கின்றன இதுவரை!!

இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.யு.என்.பி.கூறுகிற இன்றைய யுத்தத்துக்கான தார்மீக ஆதரவு இந்த வகைப்பட்ட கட்சியரசியலின் இருப்புக்கும் அதன் ஆதிகத்துக்கும் அவசியமானது.ஆக, யுத்தம் அடுத்த கட்ட அரசியல்-கட்சி ஆதிகத்தைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்பதால் 2009 க்கான பட்ஜெட் யுத்த ஜந்திரத்துக்கான பட்ஜெட்டாக இருக்கிறது.இலங்கை ரூபாய் 17.000.கோடிகள் யுத்த ஜந்திரத்தைத் தகவமைக்க நிதியாக ஒதுக்கப்படுகிறது(பங்குச் சந்தையில் இழந்த நிதிகளை மேற்குலகம் ஓரளவு இதன்மூலம் பெற்றுவிடலாம்).வரும் ஆண்டில் மிகவும் யுத்தம் அகோரமாக நடைபெறப்போகிறது.


ஆனால்,இவ்வருடத்துக்குள் புலிகளை அழித்துவிடுவதாகச் சொல்கிறார் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா!


வரும் ஆண்டு,2009 இல் புலிகள் இல்லாமல் எவரோடு யுத்தம் நடைபெறும்?


ஆகப் புலிகளை முற்று முழுதாக எவரும் அழித்துவிடமுடியாது என்பது புலிகளின் வரலாறாகவும்,வீரமாகவும் வரலாற்றில் குறிக்கப்படும் என்பது உண்மையாக இருக்கும்.எனவே,இலங்கையின் இரண்டு யுத்த ஜந்திரங்களும் அப்பப்பச் சேடமிழுக்குமேதவிர ஒரேயடியாக ஒன்றை இன்னொன்று அழித்துவிட முடியாது-நாசமாகப் போவது இலங்கை மக்கள்தான்! இது எப்படியெனப் பார்ப்போம்.


அதாவது,இலங்கையில் திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது இன்றைய பாரிய "வன்னி விடுவிப்பு" யுத்தம்.இந்த யுத்த ஆர்வத்தின் முதற்றரமான பிரதிநிதி இந்தியா மற்றும் தமிழகத் தூத்துக்குடியை மையப்படுத்திய தமிழக மூலதனம் என்பதைப் புரிவதில் தமிழ்க்கட்சிகளுக்கு அவர்களது வர்க்க நலன் இடமளிக்கவில்லை.இந்திய வெளிவிவகார அமைச்சர் பிராணப் முகர்ச்சியைப் பின்தொடர முனையும் இந்தக்கூட்டம் மீளவும் தமிழர்களை அழிப்பதற்கு முனையும் அரசியலைக்கொண்டியங்குகிறது.இதையே பிரபாகரனின் மாவீரர்தினத்துக்கான உரையிலும் இனங்காணமுடியும்.இந்தியாவோடான உறவில் இதைவிட எந்த வெங்காயத்தையும் நாம் பெறமுடியாது.எனினும்,பிரபாகரன் முதல் சம்பந்தன்வரை இதே அரசியல் வௌ;வேறு முறைகளில் நமக்குள் கொட்டப்படுகின்றன.


அழிந்து வரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் மெல்ல அவர்களைப் பட்டுணிச் சாவுக்குள் திணிக்கும்போது,இந்தியா-தமிழகம்போடும் பிச்சைக்கு நன்றி சொல்வதற்குச் சில உயிர்களைத் தப்ப வைக்கும் இலங்கை அரசின் அரசியல் மிகவும் விவேகமானது!இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.

காலம் கடந்த அரசியல் விய+கங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.


எனவே, நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.


இன்றைய உலக நடப்பில் யுத்தங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அந்நிய நலன்கள் தமது பொருளாதாரத்தைக் குறைந்தளவாவது காப்பாற்ற முனையும் அரசியலைக் கொண்டியங்குகிறது.இன்றைய நிலவரப்படி மேற்குலகப் பொருளாதாரம் கனரக வாகனங்களினதோ அன்றிக் கார் உற்பத்தியையோ நம்பிக் கிடக்கவில்லை!முழுக்கமுழுக்க யுத்த ஆயுதத் தளபாடவுற்பத்தியை நோக்கியே அது விரைவாகக் காரியமாற்றுகிறது.இன்றைய இனப்பிரச்சனைகள் முடிவுக்குவராத தேசங்களை நோக்கி உற்பத்தியாகும் ஆயுதங்கள் நகர்ந்தாகவேண்டும்.எனவே,யுத்தங்கள் இத்தகைய தேசங்களில் வலு மும்மரமாக நிகழ்ந்தாகவேண்டும்.


இந்தவகையில் பரிதாபகரமான முறையில் ஒடுக்கப்படும் புலிகளை நிச்சியம் காப்பதற்குச் சிலர் முனைவார்களென்பது யதார்த்தமாக விரிகிறது.மேற்காணுங் காரணத்துக்காவேனும்,இலங்கையில் புலிகளைத் தாங்க புதிய மேய்ப்பர்கள் கட்டாயம் உதிப்பார்கள்.அவர்கள் தமிழ்பேசும் மக்களின் உரிமை குறித்தும் பேசுவார்கள்.அது,ஐரோப்பா-அமெரிக்காவெனவும் இனிமேற்காலத்தில் உருவாகலாம்.இது, வெளிப்படையாக இனி ஐரோப்பியக் கூட்டமைப்பு அரசியலரங்குக்கு வரும்.


வரும் புதிய ஆண்டில் இன்னும்"உக்கிரமாக"தொடரப்போகும் யுத்தத்தில் பலியாகும் இளைஞர்கள் இருவேறு இனங்களால்"மாவீரர்களாக"த் தொடர்ந்து முன்னிறுத்தப்படப் புதிய புதிய உடல்கள் வரிசையாகப் போரிடக் காத்துக்கிடப்பார்கள்.அதற்காகக் கட்சிகள் தமது எஜமானர்களுக்கான சேவைகளைச் இன்றே செய்து வருகிறார்கள்.இரணில் விக்கிரமசிங்காவின் குரலை இத்தகைய முறையில் விளங்க எந்தப் பயலுக்கும் பெரும் அரசியல் புரிதல் அவசியமில்லை.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருக்கிறது.அது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும் இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில் திருவாளர் பிரபாகரனே இப்போது முதன்மையான தலைவராகச் செயற்படக் காத்துக்கிடக்கிறாரென்பதை அவரது உரையில் உய்தறிவது கடினமானதில்லை.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை.ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.இன்றைய உலகத்தில் தமிழ்பேசும் மக்களின் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது.இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்குப் புலிகளின் அரசியல் மிக வாய்பாக இருக்கிறது.இந்த யுத்தம் சொல்லுகிற உண்மை இந்த இரூபத்திலேயே உள்ளது.

எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது,புலிகளின் ஏகத் தலைமை இந்த இலட்சணத்தில் உருவானதே!


எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது தமிழ்த் தலைமைகள்.தமிழ் ஓட்டுக்கட்சி மற்றும் யுத்த முனைப்புடைய இயக்கங்களுக்கு அவர்களது எஜமானர்கள் வழங்கிய பணியாக மக்களைக் கொல்லும்-ஏய்க்கும் யுத்த-சமாதான அரசியல் மேலெழுகிறது.இதற்குமேல் விடுதலையென்பது வெறும் கோசமே!


ஆதலால்,தமிழ்ச்சமுதாயத்தின் மொத்த அரசியல் விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.இதற்கு வன்னிமக்களின் வாழ்நிலையே நல்ல உதாரணம்! அவர்களின் துயர துன்பங்கள் இன்னும் பலபடி உயர்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தில் எதை எப்படித்தாம் பெறுவது-யாரிடமிருந்து யார் பெறுவது?இரு தரப்புமே மக்களைக் கொன்றதில் அந்நிய அரசுகளோடிணைந்து பெரும் பங்கைச் செய்திருக்கிறார்கள்.இங்கே, மக்களின் உரிமைமகளை எவர் மதிக்கிறார்கள்?வெறுமனவே யுத்தத்தில் உயிர்விடுவது "ஈழத்தை" விடுவிக்க முடியாது.அப்படியொரு தேசம் உருவாகித்தாம் மக்கள் உரிமைகளைப் பெறமுடியுமென்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இற்றைவரையான இயக்கங்களின் போக்கிலிருந்து நாம் பெறமுடியாது.


இன்று புலிகள் செய்யும் போராட்டமோ அடிப்படையில் தவறானது.அது மக்களின் உரிமைகளை மறுத்தபடி மக்கள் உரிமைக்கான போராட்டமென்கிறது!கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.இவை, நமது அரசியல் வலுவை மற்றும் மக்களின் அரசியல் தெளிவை சுக்கு நூறாக்கியுள்ளன!நமது மக்களைப் பிரதேச ரீதியாகப் பிளந்துவிட்டன.நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிகளின் போராட்டம் தொடர்கிறது.அது ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!இதுதான் அந்நியச் சக்திகளின் விருப்பும்-தெரிவும்.இதை வழங்குவதில் புலித் தலைமை இப்போது இந்தியாவின் விசுவாசிகள் தாமெனச் சொல்லும் அரசியல் மிகவும் கவனிக்கத்தக்கது!


இங்கே, மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு,மனித ஆளுமையைக் காவு கொள்கிறது "ஈழவிடுதலை-இலங்கை ஒருமைப்பாட்டு"ப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற அந்நியச் சக்திகள் இலங்கைத் தரகு முதலாளிய வர்க்கத்தைத் தமது நம்பகமான சக்தியாகக் கருதிக்கொண்டாலும் புலிகள் இல்லாத இலங்கையை எண்ணிப்பார்ப்பதற்கில்லை.தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அந்நியச் சக்திகளுக்கு அவசியமாக இருக்கிறது.இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமானது.எனவே,புலிகள் அழிந்துவிடுவார்களென எவரும் கவலையுறத்தேவையில்லை.ஏனெனில்,மக்கள்தாம் அழிந்து வருகிறார்களே!புலிகளின் அடிமட்டப்போராளிகளாகவும்,சிங்கள இராணுவத்தின் அடிமட்ட இராணுவச் சிப்பாய்களுமாக மக்களுக்குள் இணைகிறார்கள்.


ஆதலால், ஒரு தமிழன்-ஒரு சிங்களவன் இருக்கும்வரை எஜமான விசுவாசம் இருக்கும்-யுத்தம் நடக்கும்.கிளிநொச்சி,முல்லைத் தீவு பறிபோகும்.எனினும்,தேசியத் தலைவர்கள், வெவ்வேறு உருவத்தில் பிறப்பார்கள்;தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கிப்படையெடுப்பார்கள்-பாரதமாதாவின் தயவில் தமிழீழத்தை உருவாக்கப் புலிக்கும்,இந்தியாவின் ஆளும் வர்க்கத்துக்கும் பாலம் போடுவார்கள் இவர்கள்;குறைந்தபட்சமாவது அடுத்த கப்பலில் உலருணவு ஈழமக்களுக்கு வந்தால் சரிதாம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
14.12.2008


Sunday, November 30, 2008

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.

இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.


"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!


இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.


இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!


இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.


மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!


பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.


மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்!


அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.


இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!


இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.


அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.


ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.


இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.


இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.


இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.


அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!


இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.



ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008

Saturday, November 29, 2008

தலைவரின் உரையைக்கடந்து...

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும்.


-புரிதலுக்கான உரையாடல்.


2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை மேலும் போராட்டத்தோடும்,புலிகளோடும் ஈழத்தைக் கனவுகாணவும்,நிதிப் பங்களிப்புச் செய்யவும் அவர் தனது பங்களிப்பைச் செய்துவிட்டார்.எனினும்,சிங்கள அரசு போரை நிறுத்தி மக்களினது நலன்களைக் கவனிக்கப் போறதில்லை!அது,இந்திய மத்திய அரசின் சொல்படி யுத்தத்தில் முனைப்புற்றுப் புலிகளைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்துவருகிறது.

தேசியத் தலைவரின் உரை மிக உருக்கமானதாக இருக்கிறது.எப்போதும்போல நாம் அதை இப்போது,உடைத்துக்கூத்துக்காட்ட விரும்பவில்லை!அவர் புலம் பெயர்ந்த இளைய தலைமுறையை மையப்படுத்துகிறார்.இது சரியானதே.எனினும்,தமிழ்பேசும் மக்களைப் புலித் தலைமை ஏமாற்றிய தவறை அவர் இன்னும் உணர மறுக்கிறார்!

இந்த நிலையில்,இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!இன்றைய மகிந்தாவின் குடும்பம் மிக மோசமான இனவழிப்புத் தந்திரத்தோடு,இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றுகிறது.இதைப் புரிவதற்குக் கீழ்வரும் பேட்டியே போதுமானது.கோத்த பத்த ராஜபக்ஷ பெரும் தந்திரத்தோடு பேட்டியளிக்கின்றார்.அரசியல் முதிர்ச்சியும்,விவேகமும் அவர்களிடம் கரை புரண்டோடுகிறது.நம்மிடம் உணர்ச்சி அரசியலைக்கடந்து எதுவுமில்லை!கோபால்சாமி அவர்கள்வேறு,உணர்ச்சியைத் தூண்டும் காரியத்தைவிட எதுவும் செய்யவில்லை!

நாம் தமிழ் பேசுபவர்கள்.

நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.

அது, வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.

நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலைப் புலிகளுட்பட அனைவரும் செய்துவரும்போது, நாம் மௌனித்திருக்க முடியாது!கருணாவும்-பிள்ளையானும் மட்டுமல்ல சித்தார்த்தனும்,டக்ளசும்,ஆனந்த சங்கரியும்கூடப் பாசிஸ்டுக்கள்-பயங்கரவாதிகள்!இவர்களுக்கு நவீன அரசியல்,அது கொண்டிருக்கும் பரிணாமம்,அது சார்ந்தெழும் பொருளாதார வியூகங்கள்-விஞ்ஞானம்,இன உளவியல் பற்றியெந்த அக்கறையுமில்லை.ஒரே நோக்கம் பதவி,பந்தா,பணம்,பொருள்.தமக்கு எதிரானவர்களைக் கொன்று குவித்தல்!

நமக்கோ நமது வரலாற்றுத் தாயகம் சிதைவதில் வேதனை.


இனியும் புலிகள் என்ற ஒரு குழு தமிழரின் எல்லா அறிவுசார்-சமூக மதிப்பீடுகளையும் தீர்மானிக்கமுடியாது.அவர்கள் அங்ஙனம் செய்வது துரோகத்தனமாகும்.நாம் நடாற்றில் தவிக்கும்போது தமது பதவிகளுக்காக யாராவது ஒரு தமிழர் காரியமாற்றுவது முழுமொத்தச் சமுதாயத்தையுமே புதை குழிக்குள் தள்ளுவதாகும்.

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.எதிரி ஈழத்தின் அனைத்துபாகத்திலும் தனது ஆதிக்கத்தைப் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் மூலம் பலப்படுத்தியுள்ளான்.இந்த ஆதிக்கத்தை உடைப்பதற்காக இராணுவத்தைத் தாக்குவது மிகக் கொடிய நிகழ்வுகளைச் செய்யும்.இத்தகையவொரு வியூகத்துள் தமிழ்பேசும் மக்களை வீழ்த்தியுள்ள அன்னிய சக்திகள்.இனவொடுக்குமுறை அரச ஆதிகத்தையும் அதன் அரச வன் முறையந்திரத்தையும் ஒருங்கே இணைத்து,இராணுவ ஆட்சியை நோக்கி மக்ளை வேட்டையாடுகிறான்.இதுவே இன்றைய உலகம் அனைத்திலும் நடந்தேறும் வகையில் அரச-பொருளாதாரச் சூழல் நிலவுகிறது.எனினும்,இலங்கை இத்தகையவொரு நிலையைக் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னமே எட்டிவிட்டது.


தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இப்போது,அமெரிக்கப் புதிய ஜனாதிபதியும் அவரது வெளிநாட்டு மந்திரியாகிவரும் திருமதி கிளின்டனும் நமக்கு எதிர்பார்ப்புடையவர்களாக விரிகிறார்கள்.இவர்களால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது முன் தீர்ப்போ-ஜோதிடமோ அல்ல!

இது(அந்நிய சக்திகளின் தயவை நாடுதல்) ஏற்புடையதல்ல!


இலங்கை-இந்திய அரசுகளின் இன்றைய வன்னியுத்தம் தமிழ்பேசும் மக்களை அநாதவராக்கும் ஒரு யுத்தமாகும்!

வன்னிப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.

தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசும்,இந்திய நாடாளுமன்றமும் செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும், இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.திரு.பிரபாகரனின் மாவீரர் உரையைக் கேட்டபின்,இந்தியா எமக்கு உதவுமானால்,அது எப்போதோ இதைச் செய்திருக்கும்.அதைவிட அந்நியர்களை நம்புந்தோரணத்தில் உரை நிகழ்த்துவதே சுத்த மோசமான நிலை!இதுவும்,இராஜதந்திரமென்றுரைக்கப்படலாம்!


இந்த நிலையில் நம்மை இன்னொருவின அரசியல்-அரசு அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.

நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்.


இதை எதிர் கொள்வதற்கான எந்த வியூகமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.அவர்கள் இனவுணர்வு மேலோங்க உரையாற்றும் பேச்சுக்களுக்கள் காலத்தைக் கடக்க விரும்புகிறார்கள்.

எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.

கோபாலசாமிவகை உணர்ச்சி அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது!

புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டிய இன்றைய நிலையில்,மீளவும் இனப் பெருமைபேசிப் பயனில்லை!இதைப் புலம் பெயர்ந்த மக்கள் புரியவேண்டும்.

மகிந்தாவினதும்-சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் அரசியல்-இராணுவ வியூகம் தொடர் வெற்றிகளைப் பெறுகிறதே,அது எங்ஙனம் சாத்தியமாகிறது?

தமிழர் தரப்பு,இராணவரீதியாகவும்,அரசியல் ரீதியாகவம் இப்போது தோற்றுவருவதற்கு நமது சிந்தனா முறையின் வீழ்ச்சியல்லக் காரணமாகும்.

இதன் காரணத்துக்கு எமது வர்க்க உறவுகளே காரணமாகிப் போகிறது.

நாம் வெறும் பிற்போக்குவாதச் சக்திகளோடு கூடி குலாவிய அளவுக்கு முற்போக்குத் தளங்களை அண்டவேயில்லை.

நமது காலாகாலமான ஓட்டுக் கட்சி அரசியலானது பிற்போக்குத் தனத்தின் கடைக்கோடி அரசியலையே தமிழரின் வீர அரசியலாக்கியது.அதன் அறுவடையே இன்றைய இந்தத் தோல்விகள்,குழறுபடிகள்-குழிப்பறிப்புகள்.

ஒவ்வொரு தமிழ்ப்பிரதேசமும் தனக்கெதிராகவே செயற்படுகிறது.

குறுகிய நலன்கள் எதிரிக்கான நீண்டகால நலன்களை உறுதிப்படுத்துகிறது.


தமிழர்கள் தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது மக்களை உயிரோடு புதைப்பதாகும்.இன்றைய இந்தவுண்மையைப் புலிகளின் தலைவரின் உரையினூடாக மெல்லவுணர முடியும்.எனினும்,இது காலாங்கடந்த ஞானம்.எதிரி குரல்வளையை நசிக்கும்போது இத்தகைய குரலைக்கேட்டு என்ன செய்யமுடியும்?அல்லது,அவரே சொல்வதுபோன்று இந்தியாவிடம் மடிப்பிச்சை எடுப்பதா நமது விடுதலை?

நாம் நிறையச் சிந்திக்க வேண்டும்
தலைவரின் உரையைக்கடந்து,
எதிர்கால அரசியல்-போராட்டம் குறித்து!


ப.வி.ஸ்ரீரங்கன்.
29.11.2008

********************



Fight not against Tamils, but against LTTE terrorism -Defence Secretary


[By: Shanika Sriyananda]
http://www.defence.lk/PrintPage.asp?fname=20081019_01
Wednesday, November 19, 2008

While concerns about the plight of Wanni civilians escalated with more MPs from the Tamil Nadu Government resigning in protest and demanding the intervention of the Indian Central Government, the Sri Lankan Government reiterated its commitment to end LTTE terrorism. While the issue has reached boiling point in Tamil Nadu which is going for its elections soon, Sri Lanka's no nonsense Defence Secretary Gotabhaya Rajapaksa said that it was very unfair for Tamil Nadu to demand of the Indian Government, which has a longstanding relationship with Sri Lanka, to pressurise the Sri Lankan Government to halt military offensives against the LTTE. Rajapaksa, who fought many battles against the LTTE when he was in the Army, told the Sunday Observer that the fight is not against Tamils, but to combat LTTE terrorism.

"More than for us, terrorism is a serious problem to India. Therefore, India should assist us more to defeat
LTTE terrorism", he said.

Excerpts of the interview:


Q: What is the military assistance that Sri Lanka is getting at the moment?

A: From the inception of the Sri Lankan Army we are getting military assistance from India and it is mainly the training. We have a good relationship with India and also with its military. Indian military assistance for us is not a new thing and we are getting their help for the last so many years. Among the military assistance, training of military personnel is given priority. But, India is not giving us any offensive weapons like artillery and mortars or aircraft. However, we will continue to have our relationship with India and continue to get whatever the assistance we are getting from India.

Q: But, some political parties in Tamil Nadu have demanded of the Indian Government to stop all military assistance to us until our government stops the war in Wanni.
A: It is a very unfair request by them because we have a long-term bilateral relationship with India. Tamil Nadu should not request that because we are not fighting against Tamils, but against terrorism, which is a deadly menace to the whole world. More than for us, terrorism is a serious problem for India.
In fact, we should get more assistance from India to counter terrorism. Especially the LTTE is a banned organisation. These politicians must not forget that their popular leader, loved by most of the Indians, was killed by the LTTE. They should not forget problems that the LTTE has created in Tamil Nadu. There were LTTE gangs and the law and order was completely messed up by the LTTE. These political parties should realise that the so-called problems faced by Wanni civilians are false propaganda by the LTTE. They must understand the ground realities. Here, we are trying to safeguard Tamils from the clutches of the LTTE. This has been proved very clearly during the last three years. How we have liberated the Eastern Province is the best example. It is clear how we have cleared the area from the LTTE, and how we have transferred the power to their own people. Now they have their own Chief Minister and an MP who were former LTTEers. It is the best example to show the effectiveness of the power of the people rather than power of the gun. There the Government has given the former guerillas to come to the democratic mainstream to develop their much neglected areas. It is the responsibility of everyone to help them to learn the art of living within a democratic framework. It is not an easy task for them too. They have to change their previous stances to adjust themselves into the new life.
On the other hand, only this Government has given the Eastern Tamils the opportunity to have their own administration. The 13th Amendment was brought decades back but till this year it was not practised.

Q: Tamil Nadu politicians are trying their best to halt military offensives in Wanni. Why do you think that they have suddenly become so vociferous about civilians?
A: The LTTE has been trying and waiting for this to happen so long. We know that some of the TNA MPs are living in these areas and they are working hard on behalf of the LTTE. They have also invited the Tamil Nadu politicians to come forward to save the LTTE. Because it is very clear that the LTTE is at a decisive stage. And no one can stop them getting defeated. So, they are trying their maximum to get Tamil Nadu to pressurise the Indian Government to pressurise the Sri Lankan Government. That is what the LTTE want and that is why this sudden pressure is coming. The Government expects this situation as we know there is no other way for the LTTE. Anyway, the LTTE cannot escape facing military offensives now.

Q: TMVP leader Karuna Amman called this a political gimmick as the TN elections are around the corner. What is your comment?

A: Yes, the election is also another factor for them to be so active. These issues would be popular among them to attract Tamils there. The other is the false propaganda by the LTTE to show there is a humanitarian crisis in Wanni.

Q: What are the other major concerns of India apart from the military operations?

A: One issue is about their fishermen. For the last so many years the Sri Lankan Government has allowed Indian fishermen to fish in Sri Lankan waters.But as these waters are in the high security zones the Sri Lankan fishermen were not allowed to do fishing. But as a good gesture the Government has allowed the Indian fishermen to carry on fishing. They have crossed the international borders and are doing fishing in these areas. We have not taken any action but only thing we have requested is for them to stick to the security stipulations because the LTTE was using these fishermen to attack the Sri Lankan Navy. They pretend to be fishermen to carry out these attacks and smuggle weapons. We have asked them not to fish in areas which are very close to military camps and navel bases. Instead of going against the Sri Lankan Government the TN government must thank us for allowing their people to do fishing in our waters. For the last three years we have never prosecuted a single Indian fisherman though they are coming to our areas. Though we have arrested and questioned them, they were not subjected to any legal process. But look at the plight of the Sri Lankan fishermen who are fishing in Indian waters. They are being arrested, prosecuted and detained for over two to three months. There is not a single Indian fisherman in our custody.

The Tamil Nadu Government should educate their fishermen about our security concerns instead of putting pressure on us.
Another issue is the IDPs. It is not a crisis in Sri Lanka. It is very clear how this government tackled the IDP issue in the East. There was a large number of displaced people during the clearing of the East. Over 95 a percent of the IDPs are now resettled and we have solved the issue better than any other part of the world. Now we are prepared to tackle the IDP issue in the North and we have begun sending food and necessary items for the civilians trapped in Wanni. Though the LTTE is holding the land and control people, the administration is run by the Government through the GAs who are responsible for the distribution of food and handling of all other sectors from education to health to welfare.

What the LTTE did and is doing is controlling these civilians by force. Now what the Government is trying is to take this control out from them to establish democracy. No responsible government can allow anyone to terrorise its people. The administrative control is there and we are trying to provide food for the civilians who are trapped in Wanni. The Government will not discontinue sending relief and we will continue to feed these people. Last week over 39 civilians have fled from Mullaithivu to Pulmudei. They did not complaint about lack of food, but the reason that they have come to these areas is because they wanted to escape the LTTE. There is a youth who has got entrance to the Jaffna University, but the LTTE has blocked him so he has come to liberated area with his family. So we have arranged for him to go to Jaffna University. The LTTE is trying to create a humanitarian crisis there for their own benefits.

Q: India is also concerned about civilian casualties. Are there any steps taken to minimise the number of civilian casualties?

A: The policy of the Government in these military offensives is the zero casualty of civilian's. We can proudly boast about the zero casualties in the Eastern liberation. That does not exist anywhere in the world. No military can talk about this concept and only the Sri Lankan military has adopted this concept because the Government is seriously concerned about people of this country. Whether they are Sinhalese or Tamils or Muslims, the Government is bound to look after them all. We consider all these communities as Sri Lankans.

Q: But can the military maintain the same concept when the offensives are getting stronger?

A: At one stage civilians will break all hard rules of the LTTE and come to liberated areas. They will not remain in the midsts of the battle. This is not just a prediction but the reality which happened in the East. People came from Sampur to Vakarai and then crossed into government controlled areas. Same process will take place in Mullaithivu also.The pictures about civilian casualties published in the pro LTTE web sites were not taken in the recent past but very old ones. What I want to reiterate is that the Government is not against Tamils but purely against terrorism.

Q: Another major allegation is that the Rajapaksa Government is encouraging genocide of Tamils in Sri Lanka. What is your comment?

A: I strongly refute that allegation. That is not the truth and genocide is not taking place in Sri Lanka. That is just propaganda by the LTTE. They use these words like 'genocide' to get more international attention. As a responsible government we know exactly who the innocent Tamils are and who the terrorists are. Our responsibility is to look after the innocent Tamil civilians and destroy the terrorists.
Remember, they are only talking about a Tamil population of 150,000 who are living in Kilinochchi and Mullathiv. But what about the Tamils who are scattered throughout the country. They are living with all the communities like in a one family. If genocide is taking place in Sri Lanka how many Tamils living in these areas would have been killed upto now? This is all propaganda work of the terrorists. It is time for the Tamil Diaspora and the international community to understand these ground realities.

Q: If India pressurises to halt military offensives, will the Government stop military offensives to liberate Wanni?

A: I am sure that India will not do so. We have clearly underlined our stand.

The Sri Lankan President reiterated that if there are issues for the Tamils or any other community, those will be solved through political means. The Government is not trying to resolve the national problem through military means. What we are trying is to crush a military matter militarily. The LTTE terrorism is a military issue and sees what they are doing through terror - killing innocent people and politicians who go against them. The LTTE does not spare anyone who stands against them. I believe that there is no other way to control terrorism and it is only through military means.

Q: Indian Prime Minister Manmohan Singh too wanted the Government to come up with a negotiated settlement rather than a military solution.

A: Yes, negotiations should be done among the democratic political parties.

That is what he has meant. That is what the All Party Conference summoned by the President is all about. All the political parties were asked to take part and that is the place for negotiations. President Rajapaksa is committed to negotiate with the political parties. What they can do at the APC is to discuss and come out with a proposal to solve the national problem and then if it is acceptable the President can implement the proposal. But in the mean time he had given them the opportunity to find ways to solve the problem within the frame work of the available Constitution. The best method that we have is the 13th Amendment, but the President asked the APC members whether there is a necessity to go beyond the 13th Amendment.

Q: Is there any possibility to bring Prabhakaran into peace talks?

A: We have tried this several times, but Prabhakaran is a terrorist and not a democrat. The Government does not want to talk to him as we had been cheated previously. Bringing Prabhakaran to the negotiating table is not a new thing and for the last twenty years, five Presidents tried to talk with him. The UNP which tried for 14 years had ended up with Prabhakaran blowing up President Premadasa. Then the Chandrika Bandaranaike Government tried. The international third parties India and Norway intervened but failed.

All these occasions the LTTE strengthened themselves to hit back at the Security Forces. They used peace talks as a cover up to open avenues to procure arms, and recruit new cadres. During the last period of the Ceasefire Agreement what they did was strengthen their military power. The amount of weapons including heavy artillery and mortars, machine guns, explosives that we captured from the East are the evidences for this claim. They got aircrafts and boats for their Sea Tiger Unit during the CFA. They had trained their cadres during the CFA. Recently a person arriving from Malaysia who was taken into custody disclosed where huge amounts of explosives were hidden in some areas.

The stock was brought to Colombo during the CFA and hidden to use later.
We found lots of explosives from the upcountry. They have trained suicide cadres during the CFA and constructed bunkers in strategically important places during the CFA as they had a military plan to capture Trincomalee.
According to their plan, they prepared to declare Eelam. It is fool hardy for anybody to talk with Prabhakaran or the LTTE now. The LTTE is not the sole representative of the people and there are moderate Tamil leaders in this country. They are the people whom the Government should talk with. They are the people that should get involved in the APC and come out with a proposal but not Prabhakaran.

Q: As the Secretary Defence are you happy with the military successes that the Security Forces are gaining?

A: Yes, of course. What we have achieved for the last three years we have never achieved in the last twenty years. We have done extremely well in defeating the LTTE. This is mainly thanks to the Commanders of the three forces and other military leaders at various levels. And also this is due to the commitment of the soldiers. Their courage has brought us military victories.

Q: According to your predictions how soon can the Security Forces capture the entire Wanni?

A: It is very difficult to give time frames because in military operations we never know what obstacles you come across. But, we are confident of liberating Wanni. We have some more areas in Kilinochchi and Mullathiv, where they have been concentrating for longer periods as they know that they have to fight hard with the military one day. But facing whatever the difficulties, the military will capture the entire Wanni.

Q: Talking about the improvement of man and fire power of the Security Forces, are we steady enough to face any offensive in future?

A: Yes, we have developed the strength of the three forces and the Police during the last three years. It is an increase of 30 percent and we are bringing more armour and getting more training. We are superior number wise and also quality wise. Sri Lankan Security Forces have professionalism now. Training is the number one and lots of emphasis has been given to improve training at all levels. Now our forces are well trained and have the capability of facing any situation. The officers are very professional. Well trained and ready to face any situation. At the same time, from the Commanders to the three forces most of the officers have faced the LTTE. They have gone through all the major operations and have lots of experience and knowledge on how to adapt to situations. This has made it easy to change the operational tactics and that has brought lots of success. With regard to fire power we have a high standard and most importantly the morale of commitment is also high among the soldiers.

Q: Do we need additional man power to liberate Wanni?

A: Recruitment and training is going on. It is not only getting the control of Wanni, maintaining the stability is also important. Then only normalcy will prevail. We will continue with the recruiting process and training.

Q: The LTTE had used CF gas thrice to attack the front lines. Is there any information that they will use more deadly chemicals and are we ready to face such attacks?

A: Yes, they have used gas at the front lines. They may be having similar varieties in their hands but they cannot bring more developed ones in large quantities. We are ready to face such attacks and those who are in the front lines have been given protective masks. We have countered those attacks effectively and I do not think it would be a serious problem for us. And I do not think that they would develop more deadly ones. If they had the capability they would have attacked us earlier.

Q: What is your message for the LTTE leaders and cadres and as the Secretary Defence can you guarantee their safety?

A: Yes, definitely we will assure their safety and the Government is compelled to do so if they come unarmed. The best example is the East. Those cadres who were fighting with the Security Forces have given up arms and surrendered. Now the Government is helping them to go back to normal life. They have been rehabilitated and given vocational training.

Similarly, if those who are in Wanni come to us leaving their arms we will welcome them. Those who are unarmed would not be considered as LTTE terrorists but welcomed as normal civilians. So anybody can give up arms and cross to liberated areas, Then we can support them to get back to normal life.
I think these youth should not be caught in the LTTE's false propaganda or their ideologies that they can declare Eelam.
It is very attractive to promise young people to give them a separate country and to motivate them to kill whoever goes against their ideology. It is very easy to give a wrong impression of a government or a particular community. It is also easy to brainwash these young minds. It is time for them to understand, what the LTTE leader brought for Tamils for the last three decades. It is nothing other than destruction.
The LTTE cadres should understand now that they are the people who are suffering.
Prabhakaran has destroyed the lives of his own people, their education and also their culture. These cadres should also remember that the Tamils who are living abroad like Canada, USA, UK and in other European countries while having luxury lives send money not to develop the lives of their own people, who are suffering under the clutches of the LTTE but to strengthen the LTTE.
They put the innocent Tamils more into war while doing good jobs and giving good education to their children. But the children of innocent Tamils are fighting and dying for an unworthy cause.

Q: You had clashes with the media in the recent past. What is your present assessment about media?

A: I have no clashes with the media, but what I have said was that the media has to be responsible in reporting. That is very important as this is not a normal situation. Because now we are facing this problem for more than twenty years. It is very clear that defeating LTTE terrorism is vital if the country needs permanent peace. The Government cannot allow the LTTE to continue like this. How many generations are to go through this? One can forget the past and just talk and write. But in the present context they should analyse and talk.
If they want this country to be a united country, then everybody has to support to destroy the LTTE. It is good to talk about media freedom, but media freedom comes after the freedom of the country. Without a country it is useless to talk about media freedom. Without jeopardising the thing media should help the Security Forces to defeat the LTTE.


Courtesy : Sunday Observer

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...