Wednesday, April 30, 2008

இலங்கையில் யுத்தம்:அறுவடையாகும் இந்திய-உலக நலன்கள்.

"எலிக்கறி உண்பவன் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம்
கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!"

உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.யுத்தம் தவிர்கப்படவேண்டும்.ஆளும் சிங்கள அரசின் மிலேச்சத்தனமான கொலைகள் நம்மை நடுங்க வைப்பவை.அதுபோலவே இயக்க அரஜகங்களும்.நமது தாயகத்தில் சுதந்திரமான-யுத்தமேயற்ற சூழலில்-அடிமைவிலங்கொடித்த வாழ்வைத் துய்க்க மனம் அவாவுற்றபடியே வாழ்வு நகர்கிறது!எமது மக்களின் அவலமானது வெறும் அரைவேக்காட்டுத் தனமான குறுந் தேசிய வெறியாகவும் அதுவே அரஜகமாகவும் மாறமுடியாது!ஆனால்,இதுவரையான அனைத்து நகர்வுகளும் எமது மக்களுக்கெதிரானதாகவே நடந்து முடிகிறது.எங்கும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வடக்கென்ன கிழக்கென்ன-அனைத்து மக்களும் அராஜ-இயக்கப் பயங்கரவாதத்துக்குள் தமது அடிப்படை உரிமைகளை மெல்ல இழந்து வருகிறார்கள்-குடும்ப ஆட்சிகள் நாட்டின் ஜனநாயகச் சூழலையே இல்லாதாக்கி வருகின்றது!இன்றைய கிழக்கு மாகாண அரசியற் சூழலில் புதிய புதிய அணித்திரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கை ஜனாதிபதியின் ஈரான் ஜனதிபதிக்கான வரவேற்புரை கச்சிதமாகச் செயற்படுகிறது.புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியரை புத்தளத்தில் அம்போவென்ற கைவிட்ட இலங்கை அரசுகள் இப்போது அவர்களுக்காகக நீலிக் கண்ணீரோடு ஈரான் ஜனாதிபதிக்கு முறையிடுகின்றன. முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியாவோ ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக் காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.

முகமாலையில் நடந்த யுத்தம்வரை எமது குழந்தைகள் எம் விடிவிற்காய் தாம் மரிப்பதாக நம்பிக் கொண்டே "ஐயோ அம்மா"என்றபடி கத்திக்கொண்டு வெடித்துச் சிதறினார்கள்.அந்த நம்பிக்கை நிசமாகவேண்டுமானால் நாம் இலங்கை வாழ் சகல இனங்களுடனும் ஐக்கியப் பட்ட தோழமையைக் கட்டியொழுப்பி முழு இலங்கைக்குமான புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதே சரியானது.இதைவிட்ட அரசிலானது களத்திலுள்ள போராளிகளின் மனநிலையை அறிந்துகொள்ளப் பேட்டியெடுக்கிறது.இது முற்றிலுமானவொரு புரட்சிகரமான இராணுவத்துக்குப் பொருந்தாது.ஆனால்,இன்றைய புலிப் போராளிகளுக்கு இது பொருந்தவே செய்கிறது!புரட்சிகரமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலை தமிழ் பேசும் மக்களினமீது ஆதிக்கஞ் செய்யும் அமைப்பாண்மை இடங்கொடுக்காதபோதும் முற்போக்குச் சக்திகளின் சாத்தியமான சிலவெற்றிகளின் உலகச் சூழ்நிலையால் தாம் யுத்தம் எதிர்ப்புக்குள்ளாகிறது.இந்த யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டேயாகவேண்டும்.யுத்தத்தால் அழிவுறும் இளைய தலைமுறை தமிழ் பேசும் மக்களின் இருப்பையே அசைக்குமொரு வெற்றிடத்தைத் தந்துகொண்டேயிருக்கிறது.

புலியிலிருந்து பிரிந்த கருணா-பிள்ளையான் துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது கிழக்கிலங்கையில் தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் மக்களை இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்த நோக்கமானது,புலிகளின் இன்றைய இருப்புக்கான போராட்டச் சூழலில் புலிகளைப் பலவீனப்படுத்துவதும்,அவர்களிடம் முழு அதிகாரமும் போய்ச்சேருவதைத் தடுத்துத் தமது கைகளுக்குள்ளும் சிலவற்றைப் பங்குபோடவெடுக்கும் நோக்கமும்,கூடவே தமது இருத்தலை ஆபத்தாக்காத-உயிருக்கு உத்தரவாதம்கோரும் தந்திரத்தோடு கிழக்கு மக்களையணுகிறார்கள்.

இவர்களேயிப்போது நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை இலங்கைக்குள் ஏலவே உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய தலைமைத்துவத்தை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த ஆட்சியையும் இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆயுதம் வேண்டுவதற்கான குறைந்த வீத வட்டியுடனான கடனைக் கொடுக்க முனைகிறது.இது உண்மையில் இந்தியாவிடமிருந்துமட்டும் எழுந்த கருணையில்லை.மாறாக உலக ஆயுதக் கம்பனிகள் மற்றும் அவைகளின் அரசுகளின் அரசியலோடு எழுந்த திட்டமாகவே இனம் காணத்தக்கது.தொடர்ச்சியான இலங்கை யுத்தத்தால் ஆதாயமடைய முனையும் உலக நலன்களுக்காக நமது மக்கள்-சிறார்கள் செத்தேயாகவேண்டியுள்ளது.தொடர்ச்சியான ஆயுத வழங்கல்கள் தங்கு தடையற்ற சிறார் இராணுவச் சேர்க்கையைச் செய்தே தீரும்.இத்தகைய தருணத்தில் உலகம் சிறார்களுக்காகக் கண்ணீர் வடித்தென்ன காலில் விழுந்தென்ன? எல்லாம் பொது இலாப வேட்கையின் வெவ்வேறு நாடகங்கள்.


இந்தவகை அரசியலுள் அப்பாவி மக்கள் அழியும் யுத்தம் தொடர்கிறதே-இதைத் தடுத்து நிறுத்த முடியாதா?ஈழம் என்பதன் முடிந்த முடிவான தீர்வுக்கு பேச்சு வார்த்தையென்பது சாத்தியமில்லை.எனினும்,புலிகளின் நடேசன்களும் மற்றும்,கோபால்சாமிகளும் கருணாநிதிகளும் பேச்சு வார்தையை நோக்கி அரசியல் செய்வதும்,அதன் தொடர்ச்சியான கருத்தாடல்களும் எதற்கானது?


உண்மையில் நமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!

இதை எங்ஙனம் தடுப்பது?

தற்போதைக்காகவேனும் இருதருப்பும்(புலி-சிங்கள அரசு) ஆத்ம சுத்தியோடுகூடிய ஜனநாயக அரசியற்சூழலை ஏற்படுத்த வேண்டும்.அது மக்களின் நலனையே மையப்படுத்தி உருவாகவேண்டும்.ஒருபோதும் பெரும்பான்மையின ஆதிக்கத்தைத் திணிக்காத-சிறுபான்மையினங்களையொடுக்கவொண்ணாத-முற்போக்கு அரசியலாக இருக்கவேண்டும்!இதற்காக யுத்தத்துக்கு எதிரானவொரு போராட்டத்தை மக்களே முன்வந்து செய்தாகவேண்டும்.இது சாத்தியமாகாத சூழலைத்தாம் உலக வல்லரசுகள் இலங்கையிற்தோற்றுவிக்கின்றன.குறிப்பாக இந்தியப் பிராந்திய வல்லரசு.இலங்கைக்கான நிதி உதவிகள் இலங்கை மக்களின் யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்பாக இருக்கவேண்டுமேயொழிய ஆயுதத் தளவாடங்கள் வேண்டுவதற்பான நிதி உதவியாக இருக்க முடியாது.

இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது இன்றைய இலங்கையினதும் புலிகளினதும் மற்றும் குழுக்களினதும் யுத்தங்கள்-கோரிக்கைகள் அரசியல் சூதாட்டங்கள் யாவும் மக்களினது மீட்சிக்கானதோ அல்லது மக்களால் முன்வைக்கப்பட்ட விருப்புகளோ அல்ல. தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின்-அரசுகளின் நலனும் ஒன்றல்ல என்பதே.இயக்கங்களின்-குழுக்களின்-கட்சிகளின் நலன்கள் தவிர்க்க முடியாது மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன்கள் குறிப்பிட்ட அமைப்புக்களின் நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும், அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.இதனால் பாசிசச் சிங்கள அரசினது தமிழ் மக்கள்மீதான அழித்தொழிப்பு யுத்தத்தை நிலைப்படுத்துவதற்கானவொரு சரியான உந்துதலைப் புலிகளின் இருப்பே தீர்மானிக்கிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.இத்தகைய அரசியலை வைத்தே கோபால் சாமிபோன்றோர் இந்திய மத்திய அரசுக்குத் தூது விடுகிறார்கள்.கருணாநிதிகள் மத்திய அரசிடம் இலங்கைக்கான சமாதானத்தைக் கோருகிறார்கள்.இங்கேதான் சூத்திரதாரியின் உண்மை முகம் பளிச்செனத் தெரிகிறது.நோர்வேயில் நின்று நக்சலைட்டுக்களால் இந்தியாவுக்குப் பிரச்சனையெனக் கத்தும் கோபால்சாமிக்குப் புலிகளின் போராட்டம் விடுதலைக்கானதென்பதன் புரிதல் இருப்பது நியாயமானதுதான்!இனம் இனத்தோடு.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றதென்பது அவர்களது கால் நூற்றாண்டுப் போராட்டச் செல் நெறியிலிருந்து இனம் காணக்கூடியதே.இதனாற்றான் கோபால் சாமிகள் இந்திய மத்திய அரசிடம் நமது பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகிறார்கள்.புலிகளும் இந்தியாவோடு பேரம் பேசுவதற்கான நிபந்தனையற்ற "விட்டுக் கொடுப்புகளுக்கு"கோபால்சாமி வடிவில் தூது விடுகிறார்கள்.இதுவே புலிகளைப் பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது என்ற மிகக் கறாரான குற்றச் சாட்டுக்கு ஒப்புதல் மொழிவல்ல.எனினும்,புலிகளின் இன்றைய போராட்ட இலக்கு நமது மக்களுக்கு மீளவுமொரு பாரிய இழப்பைத் தந்துவிடப் போவதன் அறிகுறிகளைச் சொல்வதற்கானவொரு எடுகோள் மட்டுமே.


புலிகளால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.ஈழம் குறித்த கனவினது உடலுக்கு புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.இதுவே இன்றைய கிழக்கு மாகாண அரசியல் நகர்வுகளுக்குப் பாரிய ஒத்துழைப்பு நல்கிறது.இயல்புக்கு மாறான அணிச் சேர்க்கைகள் இங்கே நடைபெறவில்லை.அனைத்தும் இந்தப் போராட்ட முறைமைகளின் அறுவடையிலிருந்தே தோற்றம் பெறுகின்றன.புலிகள் அமைப்பு போட்ட குட்டிகளான கருணா-பிள்ளையான் தரப்புகளின் அணிச் சேர்க்கையானது புலிகளின் இயக்கத்துக்குள் உட்கட்சி ஜனநாயகமற்ற போக்குகளிலிருந்தே மையங்கொண்டது.இதையே இந்திய-உலக அரசியல் ஆர்வங்கள் தத்தமக்குச் சாதகமாக்கி வருகின்றன.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்சத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.


இலங்கை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வரும் உலக வல்லரசுகளின் அப்பட்டமான விருப்பை இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் உதவிகளுடாக அச்சொட்டாக இனம் காணமுடியும்.இத்தகைய இந்திய உதவிகளுக்கான மூலகாரணம் புலிகளின் புதிய வர்க்கத் தோற்றத்துடனேயே ஆரம்பமாகிறது.இன்றோ புலிகளின் மேல்மட்ட அமைப்பானது புதிய ஆளும் வர்க்கமாக மாறுகிறுது.அது தரகு முதலாளியமாகத் தன்னை உலகுக்கு இனம் காட்டுகிறது.உலகம் பூராகப் பரந்து வாழும் அகதித் தமிழ் மக்களிடம் வேண்டப்பட்ட யுத்தகால அவசர நிதிகள் மற்றும் மாதாந்த உதவிகள் பெரும் மூலதனமாகத் திரள்கிறது.இது ஏதோவொரு வடிவில் புதிய ஆதிகத்தைத் தமிழ் பேசும் மக்களிடம் ஆயுதப் போராட்டத்துக்கூடாகத் திணித்தே வந்துள்ளது-இதுவே,ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சேர்ப்புக்கான கட்டாய இராணுவப் பயற்சியை விடுதலையின் பெயரால் முன்நிறுத்தித் தமது படையணிகளுக்கான கட்டாய ஆட்பிடியைச் செய்து வருகிறது.அத்தகைய நிலையில் பெற்றோர்களின் விருப்பத்துக்குமாறான ஆட்சேர்ப்பு தத்தம் பிள்ளைகளைமீளத் தரும்படி வற்புறுத்துவதாக இருக்கும்போது,அத்தகைய சூழலில் பிள்ளைகளை மீளக் கையளிப்பதற்கான அபராதமாகப் பணம் முன்னிறுத்தப்படுகிறது.இதன் அடிப்படையில் கணிசமான தொகை திரட்டப்பட்ட பின்பே பிடிக்கப்பட்ட சிறுவர்கள் மீளப் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுகிறார்கள்.பணம் கட்ட முடியாதவர்களின் குழந்தைகள் இந்த யுத்தத்தில்"மாவீரர்கள்"என அழிந்து போகிறார்கள்.இது மிக ஆபத்தானவொரு மனித அவலத்தைத் தமிழ்பேசும் குடும்பங்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.தேசத்தின் விடுதலை என்ற பெயரினால் பட்ட துன்பங்கள் இப்போது மிகக் கொடுமையான மனித மனமுடக்கமாகி அவர்களது வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்தி வருவது மிக மோசமானதாகும்.இத்தகைய மக்களின் இருண்ட வாழ்வு இலங்கை அரசுக்கு மிகச் சாதகமான பக்கங்களை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தி வருகிறது.இன்றைய யுத்தம் இன்னும் ஆயிரக் கணக்காக உயிர்களைக் குடிக்கும்.எனினும்,புலிகள் சொல்லும் தமிழீழம் என்பது கானல் நீரே!


ப.வி.ஸ்ரீரங்கன்
30.04.2008

Tuesday, April 29, 2008

டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்

குத்தகைக்கு எடுக்கப்படும் யுத்தம்!


தேசத்தின் வடக்குத் தெற்கு இருமுனையிலும்
யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம்
ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம்
இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது
"யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில்
மறுபுறம்,
மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்!

எவருக்குத் தெரியும்
தாய்மையின் பிரசவ வலி?
சுருங்கக் கூறிவிடலாம்,
சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்
சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்
சிலகாலம் உயிர்த்திருக்கும்
மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக

பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் பூக்கொண்டோட
பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி
தேசங்கள் தேவ தூததர்களின் தயவில்
இரும்புகளைக் காவித் திரிவதில்
மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி
புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும்

எலிக் கறியுண்பவன் தேசம்
சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில்
அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி
இலங்கையின் இறைமையை ஏந்தி
பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்"நடாத்தும்

யுத்தக்களத்தில் போராளிகளின் மன நிலையையும்
விசாரித்து வைக்கும் சில ஊனத்துப் பிறவிகள்
"விடுதலைப் போராளிகளும்"ஜந்திரமான கூலிப்படையாய்
மெல்ல மாறியதான சாட்சியாய் விரியும் அந்த விசாரிப்பு!

அன்றுமின்றும் குண்டுகள்தான் ஓடுபிரித்து உயிர் கொல்லும்
இப்போது"தேசிய விடுதலையும்"ஓடு பிரிக்கும்,
ஒடுங்கிய சிறுசுகளை அள்ளிச் செல்லும்
சில ஆயிரம்
"டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்" என்ற
புதிய பதிவு தொடரும் பெட்டிகளாய்!

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?
தவித்துப் போவது தாய்மை மட்டுமல்லத் தேசமும்தான்!
தட்டிப் பறித்த சில்லறைகளுக்குப் பதிலாக
உலகம் உயிர்களை எண்ணிக்கொள்ள முனைகிறது
யுத்தின் பெயரிலும்
உணவுத் தேவையின் பெயரிலும்
இங்கு ஒழுங்குற இயங்கும் வியாபாரம்

என்றபோதும்,
எனது நெஞ்சில்
"இறுதிப் போராளி உள்ளவரை
விடுதலைப் போர் தொடரும்"ரீல் விடும் காலம்


மலந் துடைக்கும் காகிதங்களாய் தாய்மையின் வலிகள் ஒதுங்கும்
வறுமையில் அவளது உயிரோ ஊசலாடும்
நம்பிக்கை மட்டும்"பெட்டி"வரும்வரை
மகவுகளின் உடலில்
உயிர் நிலைத்திருக்கும் கனவை விதைத்தபடி...


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.08

Tuesday, April 22, 2008

தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்...

அத்தான்:சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு.

"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இதைச் சொன்ன என்ர ஆசான் இன்று மூச்சை நிறுத்தி விட்டதாக அவனது மகள் சொல்ல நான் உருகிறேன்.அத்தான்-ஆசான்,அறிவிட்டவன்,அடித்தவன்-அணைத்தவன்.அவனது சாக்குக் கட்டிலில் முழு இடத்தையும் நான் எடுத்துத் தூங்கியபோது எனதருகில் ஒண்டியவன்...



தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!


"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.


"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"


பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.


இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.


"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.


"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.


பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் 20 ரூபாய் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.

வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!


"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"


நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!


எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.


சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.


பத்தைக்குள் நின்று பீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,உருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!


இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள?;,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-இரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.


பத்து வயதில் எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.


இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.


கிட்லர்!


சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"


ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.


"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான் அத்தான் மகாதேவன்.


அத்தான்-ஆசான்!


இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.


ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.


ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.


இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது!

"தானுண்டது போயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.


எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இதைச் சொன்ன என்ர ஆசான் இன்று மூச்சை நிறுத்தி விட்டதாக அவனது மகள் சொல்ல நான் உருகிறேன்.அத்தான்-ஆசான்,அறிவிட்டவன்,அடித்தவன்-அணைத்தவன்.அவனது சாக்குக் கட்டிலில் முழு இடத்தையும் நான் எடுத்துத் தூங்கியபோது எனதருகில் ஒண்டியவன்...


"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."


இதுதான் என் நிலையும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.

Sunday, April 20, 2008

உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு...

தானியங்களைக் குறிவைக்கும் ஊக வணிகம்.


உலகம், வர்த்தகத்தில் மனித அத்தியாவசியத் தேவைகளையே ஏலமிட்டுக்கொள்கிறது.அது, குறித்து இலக்காக வைத்திருக்கும் அதிமானுடத்தேவையான உணவு "இன்று" புவிப்பரப்பெங்கும் மட்டுபடுத்தப்பட்ட நிலையில், அதன் உற்பத்திப் பொறிமுறை இயங்குகிறது.எங்கும் விலைவாசி-தானியப் பற்றாக்குறை, பண்டமாற்றுக்கான ஊடகத்தின் மிகமிக பற்றாக்குறையான சுற்றோட்டம் உலகத்தில் பலகோடி மானுடரைப் பதம்பார்த்துவருகிறது.எங்கு நோக்கினும் உணவுப் பொருட்களின் விலை வானைத் தொடும் நிலைக்குச் சென்றபடி.ஆப்பிரிக்காவில் மணிக்குப் பல்லாயிரம் உயிர்கள் பட்டுணிக்கு இரையாகிவருகிறார்கள்.90 கோடி ஆபிரிக்க இன மக்கள் வரும் பத்தாண்டுகளில் சரி அரைவாசியாகக் குறைவார்கள்!இதற்கு,எய்ட்சும் உணவுமே காரணமாக இருக்கும்.

இது உண்மையிலேயே ஒரு சோகமான நிலையா?,

உலகின் தானிய உற்பத்தியில் தேக்கமுள்ளதா?

அல்லது, போதாத விளைச்சல் மிகுதியாக உலகை வேட்டையாடுகிறதா?

உண்மையில் தானியத்தின் கையிருப்பும்-விளைச்சலும் திட்டமிட்டு அமுக்கப்படுகிறது!.

செயற்கையான தானிய அழிப்பால் சந்தையைத் தக்க வைக்க முனைந்த சந்தைப் பொருளாதாரமானது இன்று தானியத்தை உலகின் ஊக வணிகத்துக்குள் கொணர்ந்தபின் பங்குச் சந்தைச் சூதாட்டமானது தானியத்தின் செயற்கையான பற்றாக் குறையைவேண்டி நிற்கிறது.ஊக வணிகத்தைச் சூதாட்டமாக வைத்தியக்கும் உலக மூலதன மாபியாக்கள் இன்று தமது வர்த்தகத்தில் தானியங்களைக் குறித்த கவனக்குவிப்பை மேன் மேலும் வளர்த்து,அதைப் பணங் கொழிக்கும் ஊக வணிகமாக்கிப் பங்குகளைவிற்றுப் பணமாக்கி, மூலதனத்தைப் பெருக்கும் குறிக்கோளோடு மனித உணவுத் தேவையையும் சூறையாடிவருகிறது.

இதை முன்னிறுத்தியியங்கும் மேற்குலக ஊக வணிகத் துறையானது தத்தமது பங்குதாரர்களைக் கவரும் மூலோபாயமாகத் தானியத்தின் விலையை மிகமிக உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்காகவே இன்றைய தானிய விளைச்சலைத் திட்டமிட்டு செயற்கையாக அழிப்பதும் அதன் தொடர்ச்சியாகத் தானியத்திலிருந்து பயோ டீசல்;(Ethanol-E10)உற்பத்தியைத் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது. பெற்றோலோடு இவ்வெண்ணையை;(Ethanol-E10) 10 வீதம் கலந்து விற்பனையை ஊக்குவிக்கிறது.இத்தகைய உற்பத்திக்குப் பெயர் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலென்று மேற்குலக அரசுகள் கூறுகின்றன.ஆனால்,இது அப்பட்டமான பொய் என்பதை உலக உயிரியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

சாரம்சத்தில் தானியத்திலிருந்து பெறப்படும் எரிபொருளானதன் உற்பத்திச் செலவானது அதை விற்பதைவிடப் பலமடங்காகும்.அத்தோடு, அதன் இறுதி மூலமான CO2வின் வெடிப்பானது பெற்றோலியத்தைவிட மிகமோசமாகச் சூழலைப்பாதிக்மென்றும் கூறப்படுகிறது!

இத்தகைய கெடுதியையும் பொருட்படுத்தாது தானியத்திலிருந்து எரிபொருள் எடுக்கும் உற்பத்தியையும் அதன் பாவனையையும் ஊக்குவிக்கும் அரசு அதன் பலாபலனாக வாகனங்கள் மிக விரைவாகப் பழுதடைவதையும் அதன் வாயிலாக மேலும் பல பக்க விளைவையும் திட்டமிட்டே ஊக்கப்படுத்துகிறது.இது, தேங்கிய கனரக உற்பத்தியை மேலும் விரிவாக்கவும் அதன் வாயிலாகத் தொடரும் சந்தைத் தேக்கத்தைத் தடுக்கவும் ஒரு விய+கமாக இதைக் கணிப்பிடுகிறது.இத்தகையவொரு உற்பத்திப் பொறிமுறையின் இன்னொரு வடிவாக உள்வாங்கப்பட்ட ஊக வர்த்தகத்தின் இரும்புப்பிடியில் சிக்கியுள்ள தானிய வர்த்தகம் தனது மிக உபரியைக் குறிவைத்தபடி தானிய உற்பத்தியை கட்டுப்படுத்தும்போது அங்கே செயற்கையான தட்டுப்பாட்டையும்,உலக உணப்வுப் பற்றாக் குறையையும் ஏற்படுத்தி ஊக வணிகத்தின் பொறிவைத் தடுத்துக்கொள்ள முனைகிறது.இதன் ஒரு பகுதி உண்மையைத் தினக்குரலில் கோகர்ணன் மறுபக்கம் வாயிலாகச் சொல்கிறார்.அவரது கட்டுரை முழுமையாக இதன் வர்த்தகப் பொறிமுறையை விளக்க முன்வரவில்லை.எனினும்,தானியங்களின் பற்றாக்குறை,விலையுயர்வு மற்றும் பயோ டீசலாக்க முனையும் தானியத்தின் அழிவால் பசி பட்டுணி உருவாகும் போக்குகளுக்குள் நிலவும் பொறி முறையானது சந்தைப் பொருளாதாரத்தின் தேக்கம்-பின்னடைவு,ஊகவணிகத்தின் பொறிவை தடுத்துக்கொள்ளும் விய+கத்தோடு நடந்தேறுகிறதென்பதை நாம் மறுத்தொதுக்க முடியாதபடி உலக வல்லுனர்களின் ஆய்வுகள் நம் முன் இருக்கிறது.

கடந்த காலங்களில் யுத்தத்தின் மூலமாக அழிவுகளை ஏற்படுத்திச் சந்தைத் தேக்கத்தை நிவர்த்தி செய்த சந்தைப் பொருளாதாரத் தாரளவாதிகள் இப்போது யுத்தத்தை மூலவளத் திருட்டுக்காகச் செய்தபடி, சந்தைத் தேக்கத்துக்கு யுத்தத்தைப்பின் தள்ளி உணவுத் தட்டுப்பாட்டை-தானியத்தை ஆயுதமாக்கி வைக்க முனைகிறது என்பதே உண்மையானது.

புதிய புதிய உத்திகளுடாய் நகரும் மூலதனத்தின் பாய்ச்சல் மனிதவளத்தைத் தடுத்து நிறுத்துவதற்கானவொரு ஆயுதமாக அதையும் நாடுவதற்கானவொரு பகுதி உண்மையையும் அதற்குள் மறைத்தே வைக்கிறது.2050 ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகை 900 கோடியாக உயரவுள்ளது.இதைத் தடுப்பதற்கான பல ரூப மதிப்பீடுகளில் ஒன்று உணவு.மற்றவை:யுத்தம், நோய்க்கிருமிகள் உற்பத்தி,மருந்துத் தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கல் என்று தொடருகிறது.இவை அனைத்தும் ஆபிரிக்கா மற்றும் ஆசியக் கண்ட மக்களைக் குறிவைத்தே இயங்குகிறது.இதை முறியடிப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கைகளோ இன்னும் மனித நலமேம்பாடு குறித்த பர்வையாளரிடம் மேம்போக்காகவே இருந்து வருகிறது.வர்த்தகச் சூதாடிகளின் பின்னே அணிவகுத்திருக்கும் உலக வர்த்தகக் கழகமானது மூன்றும் மண்டல உலகத்தை இங்ஙனம் வேட்டையாடுவதற்கான தொடர்ச்சியாகத் தானியங்களை ஆயுதமாக்கி வருகிறது.இதன் தொடர் தாக்குதலில் ஒன்று மூன்றாமுலக விவசாயிகளுக்கான அரச மானியத்தை அடியோடு குறைத்து இல்லாதாக்கி அவர்களை முடக்குவதால் மூன்றமுலகத்தின் மனித வளத்தைக் கட்டுப்படுத்திக் கணிசமாகக் குறைத்திட முடியுமென்று அதன் திட்டத்தின் ஒரு பகுதி இயங்கியே வருகிறது.


கோகர்ணனின் மறுபக்கக் கட்டுரையில் குறித்துரைக்கும் உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு இவற்றையும் பொருத்தும்போது இதன் யுத்த முனை மிக வலுவாக இயங்குவதை இனம் காண முடிமென்று கருதுகிறோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
20.04.2008





மறுபக்கம்



இன்றைய உலக உணவு விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், மனிதருடைய உணவுத் தேவையைக் கணிப்பில் எடுக்காமல் லாப நோக்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனாலேயே உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்ற அடிப்படை உண்மையை யாராலும் மூடிமறைக்க இயலாது.


உலக மயமாதலுடன் சேர்ந்து விருத்தி பெற்று வருகிற நுகர்வுப் பண்பாடு பல முக்கியமான வழிகளில் உலகின் தானியத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில் உருவாகி வளர்ந்து வந்துள்ள புதிய நடுத்தர வர்க்கமும் புதிய பணக்காரப் பரம்பரையும் கைக்கொள்ளுகிற உணவுப் பழக்கங்களில் ஆடம்பரமான உணவுகளும் உணவின் விரயமும் முக்கியமானவை. பெருமளவிலான மாமிச உணவு நுகர்வு காரணமாக மனிதரது உணவுக்குத் தேவையான தானியம் கோழி, மாடு, பன்றி போன்ற விலங்குகளுக்கு தீனியாக்கப்படுகிறது. நான்கு முதல் எட்டுக் கிலோகிராம் வரையிலான தானிய உணவின் மூலமே ஒரு கிலோகிராம் மாமிசம் கிடைக்கிறது. இவ்வாறு பெறப்படுகிற பண்ணை மாமிசம் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது ஒரு புறமிருக்க, அதன் விளைவான தானியத் தட்டுப்பாடு மிகவுஞ் சமூகக்கேடானது.


நுகர்வுப் பண்பாட்டின் இன்னுமொரு விளைவு ஏதெனில், உணவு பயிரிடப்படுகிற விளைநிலங்கள் வணிகப் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படத் தொடங்குகின்றன. ஏற்றுமதி வணிகத்தின் கவர்ச்சியால் ஒரு புறமும் பொருளாதார விருத்தி பற்றிய கோணற் பார்வையின் விளைவாகவும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நெருக்குவாரங்களின் விளைவாகவும் விவசாயிகள் தானிய உற்பத்தியையும் அத்தியாவசிய உணவுப் பயிர் உற்பத்தியையும் கைவிட்டு ஏற்றுமதி வணிகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு பல மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போக்கு இன்னமும் தொடர்ந்து வருகிறது.


இவற்றைவிடப் பயிர்ச்செய்கைக்கான விதை விநியோகத்தின் மீது சில பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கி வருகிற ஏகபோகம் பல மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வீரிய விதைகள் என்ற பேரில், பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வந்த விதைகளின் இடத்தில், அதிக விளைச்சல் தருகிற புதிய, மரபணு மாற்றப்பட்ட அல்லது கலப்பின விதைகள் பயன்படுகிறபோது அவற்றுக்குத் தேவையான இயந்திரப் பசளை, பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் செலவுகள் சராசரி விவசாயிகட்கும் கட்டுப்படியாவதில்லை. மேலதிகச் செலவுக்கு மேலதிகக் கடனும் கடனுக்குக் கடும் வட்டியுமாக விவசாயிகள் கடனாளிகளாகி மேலும் வறுமைக்குட் தள்ளப்படுகின்றனர். சிலர் போதிய பசளையும் மருந்துகளும் பாவிக்க இயலாமல் குறைவான விளைச்சலால் நட்டப்படுகிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பத்தால் செழிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற இந்திய பொருளாதாரத்தின் கீழ் விவசாயிகளின் தற்கொலை விகிதம் உயர்ந்து வருகிறது.



கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களை காப்பது நகரப் பொருளாதாரத்தின் செழிப்பல்ல. கிராமங்களின் பொருளாதாரத்தின் சிதைவு தான் அதற்கான முக்கிய காரணம். இத்தகைய ஒரு பின்னணியில் உலக உணவுத் தட்டுப்பாடு என்கிற அபாயம் பற்றி சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் அக்கறையுடையோர் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர்.


இப்படிப்பட்ட ஒரு பின்னணியிலேயே அண்மைக் காலமாகச் சோளத்திலிருந்து சாராயம் உற்பத்தி செய்து அதைப் பெற்றோலுடன் கலந்து எரிபொருளாக்குகிற தொழில்நுட்பம் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. உலக எண்ணெய் விலையின் அதிகரிப்பின் பயனாக அது லாபகரமானதாகவும் அமையலாம். ஆனால், மனித உணவுக்கான தானியமோ தாவர எண்ணெய்ப் பொருளோ எரிபொருளாக்கப்படுவது ஒரு சிலர் சொகுசாக வாழ்வதற்குப் பல கோடிப்பேரைப் பட்டினியிற் தள்ளுகிற காரியமாகும்.


மேற்கூறிய விதமான தாவர எரிபொருட் பாவனை என்றும் சூழலுக்குக் குறைவான தீங்கையோ விளைவிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது பொய்யானது. இத்தாவர எரிபொருளிலிருந்து வெளியேறுகிற மாசின் அளவு சொற்ப அளவு குறைவாயிருந்தாலும், அதன் உற்பத்தியின்போது சுற்றுச் சூழலைச் சென்றடைகிற மாசின் அளவு பெரிது. எனவே மனிதருக்கு உணவாக வேண்டிய பொருட்களும் அவற்றை விளைவிக்கிற மண்ணும் ஒரு சிலரது லாப நோக்குக்காகப் பறிக்கப்படுகின்றன என்பதே உண்மை. இப்போக்குத் தொடருமேயானால் அது உலகின் பல நாடுகளை நிரந்தர உணவுப் பற்றாக்குறைக்கும் பொருளாதாரச்சிதைவுக்கும் ஆட்படுத்தி விடும்.


இன்று பல நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கலவரங்கள் நடக்கின்றன. இந்தக் கலவரங்கள் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளாகவும் சிலவேளை புரட்சிகர எழுச்சிகளாகவும் மாறலாம். ஏகாதிபத்தியத்துக்கு நண்பர்களாகவுள்ள எகிப்திய, பங்களாதேஷிய ஆட்சியாளர்களால் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதையே முக்கியமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை முன்னெடுக்க இயலாது. எனவே ஒருபுறம் பற்றாக்குறையும் கிளர்ச்சியும் இன்னொருபுறம் இராணுவ அடக்கு முறையுமாகவே இந்த நாடுகளின் உடனடியான எதிர்காலம் அமையும்.


இவ்விடயத்தில் மாஓ சேதுங் சீனப்புரட்சியின் வெற்றிக்கு முன்பும் பின்பும் தானிய உற்பத்திக்கு வழங்கி வந்த முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுவது பொருந்தும். போதிய உணவு உற்பத்தி இல்லாமல் புரட்சிகர இயக்கத்தால் நின்று நிலைக்க இயலாது. எனவே போராட்டம் என்பது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உற்பத்தியை மேம்படுத்துகிற போராட்டமாக நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்து வந்தது.
மக்களைச் சார்ந்து இயங்குகிற எந்த விடுதலை இயக்கமும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி மிகுந்த கவனஞ் செலுத்துவது அவசியமானது. அவ்வாறு செய்யத் தவறுகிறபோது, அது மக்களிடமிருந்து அந்நியப்படுகிறது. பின்பு அது மக்களுடன் முரண்பட்டு விடுதலை இலக்கையே இழந்து விடுகிறது.



இன்று ஏகாதிபத்திய கல உலகமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் நுகர்வுக் கலாசாரமும் சேர்ந்து உருவாக்கியுள்ள உணவுப் பற்றாக்குறை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் உணவு உற்பத்தியையும் ஒரு முக்கியமான ஆயுதமாக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கிற ஒவ்வொருநாடும் உணவில் தன்நிறைவு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.



ஏகாதிபத்தியமும் அடக்குமுறை ஆட்சியாளர்களும் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். மக்களின் அரசியல் விடுதலைக்கு அவர்களது அடிப்படையான தேவைகளிலிருந்தும் மக்கள் விடுதலைபெற வேண்டும். அது அவர்களது குறைந்த பட்சத் தேவைகள். முற்று முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறுகிற போராட்டத்தால் மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த இயலாது.
உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க இயலாமல் இன்று ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கும் உலக மயமாக்கலுக்கும் எதிரான ஒரு போராட்டமாகிவிட்டது.


உணவு மறுப்பு ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகிறபோது, உணவு உற்பத்தியும் உணவின் முறையான விநியோகமும் அதற்கு எதிரான விடுதலைக்கான போராட்டக் கருவிகளாகின்றன.


மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்துகிற எந்த ஆட்சியும் எந்த விடுதலை இயக்கமும் உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்குகிறபோது அது தவிர்க்க இயலாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிர்மாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு உந்தப்படுகிறது. ஏகாதிபத்தியத்துடனான சமரசங்கள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளின் மறுப்பாகவே அமைய முடியும். இது வரலாறு மீண்டும் மீண்டும் மேலும் வலுவாகக் கூறிவருகிற பாடமாகும்.



http://www.thinakkural.com/news/2008/4/20/sunday/marupakkam.htm

Tuesday, March 25, 2008

தடா பொடா தமிழச்சி தமிழ்மணம்.

"தமிழ்மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்"



வலைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் தமிழ் மணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்?.இ·து,தற்செயல் நிகழ்வல்லவென்று நாம் உணரத்தக்கபடி தமிழச்சிதம் தனிநபர்சார் காழ்ப்புணர்வு இயங்கி வருகிறது.இது,அவரது செயற்பாட்டிற்கு ஒருபோதும் அழகல்ல.சமூகச் சீர்திருத்தம் என்பதை அவர் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்த"அழகு"இங்கே முன் வைக்கப்படுகிறது!தொடர்ந்து பெயரிலியைத் தாக்கி விசனிப்பதன் வெளி "சகவோடிகளால்"நிறுவப்படும்போது-அங்கே,தமிழச்சிமீதான சுய செயற்பாடு அடிபட்டு,முன்னைய எதிர்பார்ப்பு எவரெவருக்காகவோ நிறைவேற்றப்படுகிறது.இதை இனம் காண மறுக்கும் தமிழச்சி தொடர்ந்து தனிநபர் தாக்குதலக்கு "இலக்கு"வைத்த பதிவுகளையே-பின்னூட்டங்களையே எழுதுகிறார்.



நாம், புரிதலில் நீண்ட பயணத்தைத் தொடரவேண்டும்.எமக்குப் புரியாதவைகளைச் சிறுவர்கள் மனத்திலிருந்துகொண்டு புரியவும் முனைகிறோம்.இதுவே அவசியமானதும்.ஆனால்,மற்றவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் தமது கருத்துக்கு உடன்பாடற்றுப்போனால் அவைகளை எதிரி(ர்)க்கருத்துக்கள் நிலையில் தள்ளப்பட்டு,தாக்குதலாக விரிவுறும்போது இன்றைய நிலை உருவாகிறது!இது தவிர்த்திருக்கூடியது.எனினும்,சமூக நிலைகளைப் புரிந்துகொண்ட முறைமைகளை யதார்த்தப்படுத்தத் தவறும் ஒவ்வொரு தருணத்திலும் இத்தகைய "தாக்குதல்-வசவு"மேலெழுந்து தாம்கொண்ட செயற்பாட்டையே கேலிக் கூத்தாக்கும் நிலைமைகளை உணர்வெழிச்சியின் உந்துதல் தந்துவிடுகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது ஓசை செல்லா களத்தில் இறங்குகிறார்!இது கூட்டு மனப்பாண்மையைக் குதறிவிட்டுத் தனிநபர்களின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்ட சில நபர்களின் மனவூக்கமாக முன்னெடுக்கப்படுகிறது.இங்கே,எந்த சமூக நலனும் முன்னிற்பதாகத் தெரியவில்லை.பொதுவான சமூக இயகத்தைப் புரியமறுக்கும் மேட்டிமைப் பண்பு புரிதலற்ற-ஆழ்ந்த அநுபவமற்ற சூழலில் தோற்றமுறும்.தமிழச்சி இதை உணர்வதிலிருந்து பின் வாங்கும் ஒவ்வொரு பொழுதும் காழ்ப்புணர்வே மேலெழும்.சரியான தெரிவைவிட்டுத் தடுமாறும் சூழலை மனிதவுணர்வு முன்னிலைப்படுத்தும்.இங்கு, மிக அவதானமாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.



சமூகமாற்றமென்பது தனிநபர்களால் செய்து முடிக்கப்படுவதல்ல என்பதை முதலில் எவர் புரிகிறார்களோ இல்லையோ தமிழ்மணம் மிக விரிவாக அதைத் தொட்டுள்ளது!தமிழச்சியின் பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வு"தமிழச்சி புரிய மறுக்கிறார்"எனும் உணர்வே.இன்றைய சமூக ஒழுங்குகள் யாவும் நிலவும் அமைப்புகளுக்கு இசைவாகவும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.இதைப் புரிந்துகொண்ட தமிழச்சி புரிய மறுத்தது சமூகத்தளத்தில் இதற்கெதிரான கருத்தாடலை எங்ஙனம் கொண்டு செல்வதென்பதே!



தனிநபர்சார்ந்த உணர்வுகளால் சுயமுனைப்பை முன் நிறுத்துவது நடுத்தரவர்க்கத்துக்கான பாரம்பரியமாகவே இருக்கிறது.நாம் சமூகமாற்றை விரும்புகிறோமெனில் முதலில் நம்மைக் கொன்றாக வேண்டும்.அங்ஙனம் கொன்றபின் நாம் முன்நிறுத்தும் செயற்பாட்டுக்குமுன் நம்மை முன் நிறுத்தும் செயல் அடிப்பட்டுப் போகும்.இதைத் தவிர்த்துவிட்டு நாம் மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட முடியாது.இது, பொது மனிதக் கூட்டுக்குள் வேலைத் திட்டத்தை முன் தள்ள முனையும் ஒரு அமைப்பின் செயற்பாட்டிலுள்ள முன் ஆலோசனைகளில் ஒன்று!மக்களிடமிருந்து கற்பதும் அதை(கற்றதை)அவர்களுக்கே மீள அளிப்பதும் செயற்பாட்டின் ஆரம்பப் புரிதல்களாக இருக்கிறது.இங்கு மாணவ நிலையிலேயே நாம் இருந்தாக வேண்டும்.நமது சிந்தையில் உட்புகுந்துள்ள படிமங்களைக் கொன்று குவித்துவிடுவதற்கு நீண்ட போராட்டம் தேவை.இதுவே தமிழச்சியிடம் நாம் காணும் பலவீனமாகும்.



தமிழச்சிதம் கடந்த-சமீபத்து எழுத்துக்கள் சுட்டும் உடற்கூறுகளைக் குறித்த பதிவுகளைப் பெரிதுபடுத்தும் நிலையற்ற எமக்கு-அவரது தாக்குதல் தனமான பொதுபுத்தி எழுத்துக்களையே பெரிதும் சலிப்புடன் பார்த்தது. பொதுவில் வலைபதியும் எவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு,மனித கெளரவம்,சுயமதிப்பின் தொடர் பங்கீட்டுச் சக மனித மேன்மை மதிக்கப்படாத அவரது போக்கு மிகவும் வருந்தத் தக்கது!எதிரிகள் நம்மை நாயிலும் கேவலமாக அவமதித்தாலும் நாம் பொது மனித கெளரவத்தை அவர்கள் பாணியில் நொருக்க முடியாது!இது புரட்சியல்ல.சிறுபிள்ளைத் தனம்.பெரும் பொறுபுணர்வுமிக்க அரிய செயல் வடிவத்தை(பெரியாரியம்)மிகவும் மலினப்படுத்திய நிலைமைக்குத் தமிழச்சிமட்டும் பொறுப்பேற்க முடியாது!-நாமும்தாம்!செயற்பாட்டை எங்ஙனம் முன்னெடுப்பதென்ற முயற்சிகளை ஓரளவு செயற் திட்டமாகக்கூட வரையறை செய்யாதவொரு சூழலைத்தாம் தமிழ்ச் சூழல்கொண்டிருக்கிறது.பெரியாரைச் சொல்லிப் பிழைப்புறும் கூட்டமாகப் போன முன்னாள் பெரியாரியத் தொண்டர்கோடிகள் இன்னாள் பெரும் முதலீட்டாளர்களானபின் இத்தகையபோக்கு நிலவத்தாம் செய்யும்!எனவே,தமிழ் மணம் இதைப் புரிந்துகொள்ளும் தருணத்தில் தமிழச்சியின் பதிவுகளைத் திரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்வதே சாலச் சிறந்தது.தமிழச்சி முதலில் இத்தகைய சூழலின் சுய விமர்சனப் புரிதலை முன் வைத்தாகவேண்டும்.



என்றபோதும்,கடந்த செயற்பாடுகளை,அதன் விளைவுகளைப் பார்த்து,நாம் தமிழச்சியை எத்தனைவிதமாக(நட்பாக-தோழமையாக) அணுகினாலும்,தமிழச்சி அதைக் கூர்ந்துணர முடியாது"தனக்கெதிரான தாக்குதலாகப் பார்த்திருக்கிறார்"தத்தளித்திருக்கிற தருணங்களில் அவர் எழுத்து தனிநபர் தாக்குதலாக சக பதிவர்களைத் தாக்கி இருக்கிறது.எனினும்,தமிழச்சி இது குறித்து மிகையான சுய மதிப்பீடுகளை உருவாக்கித் தாக்குதல்களை வார்த்தைகளினூடாகக் கட்டமைத்தபோது,அவரைத் தொடர்ந்து சிந்திக்கும்படி நாம் கட்டுரை எழுதினோம்.அதீத சுய மதிப்புத் தன்மீதான அழுத்தங்களைத் தனக்கெதிரான திசையில் விவாதமாக்கியது.இதைத் தமிழச்சி உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை "சகவோடிகள்"விட்டுவைக்காது தமிழச்சியை உருவேற்றும் எழுத்துக்களைப் பதியமிட்டபோது,இதன் வரிசையில் முன் நிற்பவர்கள் திருவாளர்கள் இலக்கி மற்றும் ஓசை செல்லா.இவர்களைத் தாண்டி நாம் இக்கட்டுரையூடாகச் சிலவற்றைச் சொல்ல முனைந்தோம்.அவ்வளவுதாம்.


தொடர்ந்து தமிழச்சி குறித்த கட்டுரை எதுவும் எழுதுவதில்லை.


"தமிழ் மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்" என்ற எமது நம்பிக்கை வீண்போகாது.


தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்
25.03.2008

Sunday, March 23, 2008

அல்லகண்டம் தொலையா இலங்கை

பேரப்பூச்சி.

ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி

அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை

கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்

மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!

பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது

அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!

என்ன நம் இழுதை!

ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.

ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!

இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.

Saturday, March 22, 2008

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?


இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் கூட்டும் என்று இன்னொரு புதிய அத்தியாயத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா திறந்து வைக்கிறது.

20.03.2003 ஆம் ஆண்டு ஈராக்கை இராணுவரீதியாகத் தாக்கி அழித்த அமெரிக்கக் கொடும் யுத்தத்தை புஷ் கோமாளி சரியானதென்பது அவரது புத்திஜீவித்துவப் பிரச்சனையல்ல.மாறாக,அதுதாம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு."இதுவொரு யுத்தம், அமெரிக்கா அதை வெல்வதற்கும்,அவசியத்துக்குமானதாகும்,துருப்புகளை மீளப்பெறுவதற்கென்ற கேள்விக்கே இடமில்லை"என்று பெண்டகேனில் வாந்தியெடுக்கும் புஷ்சின் பிரச்சனை அமெரிக்க வங்குகுரோத்துக் கம்பனிகளின் பிரச்சனையாக இன்னொரு அத்துமீறிய எண்ணைவள நாட்டைக் கைப்பற்றும் அரசியலோடு சம்பந்தப்படுகிறது.இது உலகத்தின் அனைத்து மக்களினங்களின் ஜீவாதார உரிமைகளுடனும் மிகப்பெரும் இராணுவக் குறுக்கீட்டை செய்யும்-நியாயப்படுத்தும் அரசியலாக விரிகிறது.

ஈராக் குறித்த ஆய்வை ஜேர்மன் ஊடக முகாமையாளர் டாக்டர் யுர்கன் ரோடன்கோவ்பெர் என்ற பத்திரையாளர்"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?"என்ற தனது ஆய்வு நூலில் தான் நேரடியாகப் பார்த்தை-அநுபவித்தைப் பதிவு செய்திருக்கிறார்.ஈராக்கில் அமெரிக்கத் துரப்புகளின் அட்டூழியத்தை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் ஈராக்குக்குள் நுழையவிடும் பத்திரிகையாளர்களை தமது கட்டுப்பாட்டின்கீழ்த்தாம் இடங்களைக் காண்பிப்பதும்,எந்தெந்த இடங்களைப் பார்வையிடலாமென்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே தீர்மானித்துத் தமது கண்காணிப்பின் கீழ்தான் அனைத்தையும் அநுமதிப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
//Das ist keine Kritik an Journalisten. Erstens sind bereits über 200 mutige Journalisten im Irak gestorben und zweitens gab es für einen Journalisten, zumindest in den letzten drei Jahren, nur noch die Möglichkeit, als „embedded journalist" ins Land zu kommen. Deswegen sind Berichte, die Sie im Fernsehen sehen, ich würde sagen zu 99,9%, in Begleitung von schwer gepanzerten amerikanischen Kampffahrzeugen mit schwer bewaffneten amerikanischen GIs entstanden. Und natürlich bringen die amerikanischen Presseoffiziere die Journalisten nur dahin, wohin sie sie bringen wollen. Dass es trotzdem weltweit ein kritisches Bild gegenüber diesem Krieg gibt, verdanken wir den Journalisten, die trotz des begrenzten Zugangs in den Irak sich eine unabhängige Meinung gebildet haben. Ich bewundere diese Journalisten. //-Dr. Todenhöfer இது அமெரிக்க அரசியல்.இந்தியாவையோ அல்லது இலங்கையில் தமிழர்கள் பலியெடுக்கப்படுவதையோ மனிதவுரிமை மீறலாக அது பார்க்காது.அல்லது, இத்தகைய நாடுகளுக்கோ அது ஒருபோதும் குற்றப் பத்திரிகை தயாரிக்காது.இதையும் நாம் புரிவதில் சஞ்சலம் இருக்குமாயின் தொடர்ந்து மேலே செல்க!

ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.11 இலட்சம் மக்கள் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.பாக்தாத்தில் ஒவ்வொரு இரண்டவது வீடும் ஏதோவொரு வகையில் குறைந்தது ஒருவரையாவது பலிகொடுத்திருக்கிறது.ஈராக்கின் முழுமையான குடியிருப்புகளில் 40 வீதமான குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மேற்காணும் தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனமான ஓ.ஆர்பி. மிகக்கடினமான ஆய்வுகளுக்குப் பின்பு கடந்த 2007 இலையுதிர்காலத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேற்குலகத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஆய்வை-நூலைத் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் எழுதியிருக்கிறார்."மேற்குலகத்தவர்கள் மிகவும் கொடுமையானர்கள் இஸ்லாமிய உலகத்தவரைக்காட்டிலும்"என்று தடாலடியாகவே குறிப்பிட்டுத் தனது ஆய்வை ஈராக்குக்குச் சென்று-அநுபவித்து எழுதியுள்ளார்.

காலனித்துவத்திலிருந்து இன்றுவரையும் பல கோடி இஸ்லாமியர்கள் பலிகொள்ளப்பட்ட வரலாற்றைச் செய்தவர்கள் "பழைய ஐரோப்பாவின்"குடிகளே!இன்றைய அமெரிக்கா அதன் அடியொற்றி அழிப்பு அரசியலை மேற்கொள்ளும்போது இந்தப் பழைய ஐரோப்பாவின் நவ லிபரால்கள் ஆங்காங்கே அமெரிக்காவுக்குப் பின்னால் பதுங்கியபடி ஐனநாயகம் பேசுகிறார்கள்.இவர்களின் மனோத்திடமானது ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியை அமெரிக்க அத்துமீறிய ஆக்கிரமிப்பால் முன்னெடுக்கமுடியுமென்பதுமட்டுமல்ல அதன் வாயிலாக வந்தடையும் மூலவளத்தை கணிசமானளவு ஐரோப்பியச் செல்வமாக்குவதில் அமெரிக்காவுக்கான தார்மீக இராணுவ-அரசியல் ஒத்துழைப்பாக இருக்கிறது.ஈராக் யுத்தத்துக்காக ஜேர்மனிய அமெரிக்காவுக்குக் கொடுத்த நிதி 4.000 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது ஒரு மெய்யான மதிப்பீடு.இன்றைய புஷ்சின் பின்னே மறையமுனையும் ஐரோப்பியக்கூட்டுக்குள் நிலவும் முரண்பாடுகள் அமெரிக்க மூலதனத்தோடு மல்லுக்கட்டும் போக்கை மிகுதியாக மறைத்தபடி அமெரிக்காவின் முதுகில் குத்த முனையும் அரசியலை ஜேர்மனியும்,பிரான்ஸ்சும் முன்னெடுக்கும்போது போலந்து அமெரிக்காவுக்கு மிக விசுவாசமான நாடாக இருக்க முனைகிறது.அங்கே,அமெரிக்காவுக்கான நம்பகமான இராணுவத் தளம் நிலைபெற்று ஏவுகணைத் திட்டம் நிறைவேறி வருகிறது.இது இருஷ்சியாவின் வயிற்றெரிச்சலாக விரிந்து கொசோவோ எதிர்ப்பாக மாறுகிறது!

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர்Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும,; இன்றைய புஷ்சினது நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.அன்றோ காலனித்துவக் கொடூர நெடுமுடிகள் ஆட்சியல் அமர்ந்தபடி உலகை வேட்டையாடியதற்கும் இன்றைய நவீன"ஜனநாயக"க் காவலர்கள் ஆட்சியில் அமர்ந்தபடி"சகோதரத்துவம்,ஜனநாயகம்,அமைதி,சமாதானம்"சொல்லி உலகை வேட்டையாடுவதற்கும் அடிப்படையில் ஒற்றுமை தமக்குச் சொந்தமில்லாத சொத்தை தமதாக்கும் செயற்பாடாக இருக்கின்றதெனினும் உலகைத் தொலைத்துக்கட்டும் பொருளாதார முனைப்பின் அதி நவீன அணுவாயுத இராணுவக் குறுக்கீடானது இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பே மிக மோசமான வன்முறையாக உலகைத் தொலைக்க முனைகிறது!இன்றைய அமெரிக்காவின் இராணுவ விய+கமானது"Ground-Based Midcourse Defense System" (GMD) திட்டமாகவும் உலகைச் சுற்றிப் பொறிவைக்க முடியுமென்பதற்கு அமெரிக்க-இருஷ்சியப் பேச்சுவார்த்தைகளில் தென்படுகின்றன.இத்தகைவொரு சூழலில்தாம் நாம் அமெரிக்க வல்லாதிகத்தின் போர் வெறியானது வெறுமனவே மூலவளத் திருட்டுக்கானதுமட்டுமல்ல அது இனவாத அரசியலின் இன்னொரு தொடர்ச்சியை வற்புறுத்துவதாகத் தொடர்ந்து கூறிவருகிறோம்.அமெரிக்காவின் இத்தகைய அரசியல் உள்ளீடுகளை மறைப்பதற்கானவொரு தயாரிப்பில் நாளை திருவாளர் ஒபாமா அமெரிக்க அதிபாராகவும் வாய்புண்டு.ஏனெனில், முகமிழக்கும் அமெரிக்க ஜனநாயகத்தை நிறப்பாகுபாடற்ற அமெரிக்க நவீன அரசியல் தடுத்து நிறுத்துவத்தின் இராஜ தந்திரத்தில் இனவாதக் கழிசடை அழிப்பு யுத்தத்தின் வீரியத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளில் ஓபாமாவும் ஒரு கருவியாக இருப்பதைத் தவிர வேறென்ன அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு அவசியம்?

இங்குதாம் ஜேர்மனிய ஊடகவியலாளர் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் தனது ஆய்வுகளை ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களது எழுத்தின் எல்லை மேற்குலகச் செழுமைமிகு மூலதனவொழுங்குக்கானதாகவே இருக்கிறது.இது உலகு தழுவிய அத்துமீறிய அமெரிக்க-ஐரோப்பிய இராணுவக் குறுக்கீட்டுக்குத் தடையாக முன்வைக்கப்பட்டாதாக இருப்பினும்,உலக மூலவளங்களைப் பெறுவதற்கான இன்னொரு வகையான முதலாளிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறது.அது சாரம்சத்தில் இராணுவவாதத்தை மறுப்பதற்குப் பதில் அதையும் செழுமையாக்க முனைகிறது.இத்தகைய இருவகைப்பட்ட முகத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய அமெரிக்காவின் அதீத கொடுமைகளைச் சொல்லும் ஆதாரப+ர்வமான உண்மைகளை அது உலகுக்குத் தருகிறது.நாம் அவரோடு கூட நின்று"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?" என்று கேட்காது நீங்கள்,எதற்காக உழைப்பவர்களைக் கொல்கிறீர்கள் என்று கேட்டுவிடலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.03.2008

Sunday, March 16, 2008

இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்

இன்னொரு கொசோவா உருவாகிறது!


இன்றைய தினம்வரை திபேத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்,கொலைகள்,கைதுகள் குறித்துரைக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாகவே இருக்கிறது.உலகத்தின் பெரும் பகுதிகளிலும் சீனத் தூதுவரலாயங்கள்முன் அணி திரண்டுவரும் திபேத்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பின்னே உலக மூலதனவாதிகள் மறைந்திருந்து சீனாவுக்கு அம்பு விடுகிறார்கள்.இதற்கு அகிம்சை-காந்திக் குறியீடுகள்வேற துணையாகின்றன.அன்றுஞ்சரி இன்றுஞ்சரி காந்தியைச் சரிவரப் புரிந்தவர்கள் ஐரோப்பியர்களே!


இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்-ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை வகிப்பவர் தலாய் இலாமா என்பது எல்லோராலும் கூறப்படும் ஒரு மாதிரிப் பதில்கள்தாம்.எனினும்,இன்றைய பிக்குகளின் ஆர்ப்பாட்டத்திலும்,அதன்வாயிலான அரச படைகளின் எதிர்த் தாக்குதல்களாலும் சிலர் இறந்துள்ளார்கள்.திபெத்துக்கான எக்ஸில் பாராளுமன்றம் இந்தியாவில் கூறுகிறது கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் வரை சீனாவால் கொல்லப்பட்டதாக,மேற்குலகம் சீனாவுடன் இன்னொரு அடுக்கு மொழியையும் கூடவே இணைக்கிறது,அது கொம்ய+னிசச்சீனா என்பதாக இருக்கிறது.சீனாவோ உலகத்தில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப்பிடித்திருக்கிறது.இது ஜேர்மனிக்குப் பின்னால் உள்ள ரேஞ்சாக இருந்தும் அங்கே இன்னும் கொம்ய+னிசம் இருப்பதாகக் கயிறுவிடும் மேற்குலகம்-காரணத்தோடுதாம் இந்த இத்த கயிற்றை ஒப்புவித்துவருகிறது!

கிட்டத்தட்ட மேற்குலக நாடுகள் பலவற்றின் பெரும் கம்பனிகள் சீனாவில் தமது தொழிற்சாலைகளை இயங்க வைத்துச் சீனத்துத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியபடி சீனாவையும் கொம்ய+னிசத்தையும் இணைத்தபடியே தத்தமது வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள்.தமது தேவைக்கேற்ற சீனாவை உருவாக்கும்வரையும் தெபேத்தியத் தலாய் இலமா புனித மனிதவாதியாகவும் அவரது சொல் மந்திரமாகவும் இருக்கவே செய்யும்.என்றபோதும்,இன்றைய தெபேத்திய அரசியல் வன் முறைகளுக்கும் அதுசார்ந்த புலம்பெயர்ந்த தெபேத்தின் பாராளுமன்றத்தினதும் கருத்துகள் மற்றும் அந்நியத் தொடர்புகளுக்குமுள்ள இணைவுத் தொடர் நிகழ்வுகள் இன்னொரு கொசோவோவை ஞாபகப்படுத்துகிறது.இந்நிலையில்,இந்த அரசியலுக்கும் சீன ஆதிக்கத்துக்கும் இருக்கும் பிணக்குகள் வெறுமனவேயான திபேத்தின் சுதந்திரத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்துக்குமானதாக இருக்குமுடியும்h? கடந்த 49 ஆண்டுகளாக அரசியல் தஞ்சத்தில் இந்தியாவிலிருந்தபடி மேற்குலகத்துக்கு விசுவாசமாக அரசியல் நடாத்திவரும் தலாய் இலாமாவுக்கு மீளவும் திபேத்தின்மீதான அகிம்சை அரசியல் அரங்குக்குவருகிறது-இன்னொரு காந்தி உதயமாகி வருகிறார்!

இன்றைய நிலவரப்படி சிட்னி முதல் பேர்ளின்வரையிலான உலகத்தின் பல பாகங்களிலும் தெபேத்தியவர்கள் ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள்,கைதாகிறார்கள்.தலாய் இலாமா தரப்பிலிருந்து, ஐ.நா.சபை திபேத்துக்கானவொரு பிரத்தியேகக் கண்காணிப்பாளர்களை அனுப்பும்படி கோரிக்கை முன்வைகப்படுகிறது.கடந்த 49 ஆண்டுகளாக நடந்துவரும் சீன-திபேத்திய இழுபறிக்கான அரசியல்காரணங்கள் மேற்குலகத்தின் சீனாமீதான அழுத்தத்திலிருந்தே தொடங்குகிறது.இத்தகைய அழுத்தம் சீனாவின் முழுமொத்தப் பொருளாதார நகர்வோடு சம்பந்தப்பட்டு இன்றுவரையும் சீனாவின் அதிவேக வளர்ச்சியின் உந்துதலால் உள்வாங்கப்படும் முலப்பொருள்களின் சந்தைப் பங்கீட்டோடு முரண்பாடாக எழுகிறது.சீனாவின் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் மூலவளத் தேவைகளின் அதீத முனைப்பு மேற்குலக அரச விய+கத்தோடும் அமெரிக்கப் பொருளாதாரத்தோடும் போட்டியைச் சந்திக்கிறது.

கடந்த ஆண்டிலிருந்து சீனாவானது எண்ணை மற்றும் மூலவளத் தேவைக்காக ஆபிரிக்கக்கண்டத்தைப் பங்கு போடுவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் முட்டிமோதுகிறது.இரும்புத் தேவையானது என்றுமில்லாதவாறு சீனாவை உலகத்தோடு போட்டியிடவைத்ததால் இரும்புவிலை மிகமிக உச்சத்துக்போனது.அவ்வண்ணமே மசகு எண்ணையின் மிகப்பெரும் அழிவு சீனாவின் பொருளாதார வளர்சியால் மேலும் பல மடங்கு உயர்ந்தது.சீனாவும் தனது பொருளாதாரத் தேவைகளோடு மிகுதியாத் தேவையாகும் எண்ணைக்காக ஈரான்முதல் ஆபிரிக்கக் கண்டம்வரைத் தனது விய+கத்தை விரித்துவைத்து மேற்குலகுக்கு இடைஞ்சலாகவே இருப்பதால் அமெரிக்க மற்றும் மேற்குலகம் சீனாவைத் தடுத்து,ஒரு சிறு தேக்கத்தை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றன.சீனாவின் எரிபொருள் தேவையானது எண்ணைவள நாடுகளின் கூட்டின்(ஒபெக்)ஆதிகத்தை மேலும் விருத்தியாக்கி வருவதால் உலகச் சந்தையில் ஒரு பெறல் மசகு எண்ணை 108 டொலராக உயர்கிறது.இது ஐரோப்பாவுக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லாதிருந்தும் ஐரோப்பாவில் எண்ணை விலையை அமெரிக்க எண்ணைக் கம்பனிகள் கிடுகிடுவென உயர்த்தியே வருகின்றன.ஒரு ய+ரோ நாணயத்தின் பெறுமதி இரண்டு டொலராக இருந்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவைப்போட்டு ஆட்டுகிறது.இதன் தொடர்ச்சியில் ஒரு பொறியாக மேலெழும் திபேத்தியச் சுயநிர்ணயப் போராட்டம் மேலுமமொரு கொசோவோவின் அரசியல் வித்தையாக நகரும்போது அங்கேயும் சீனத்துருப்புகளின் கைகள் பல பொதுமக்களை வேட்டையாடுகிறது.

சீன முதலாளித்துவத்தை இன்னும் கொம்ய+னிசமெனப் பறைசாற்றியபடி மேற்குலக அதிதீவிரத் தனியார் துறை மேலும் தனது வலுக்கரத்தை மறைத்துச் சீனாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்த முனைதல் மேற்குலக-அமெரிக்கப் பொருளாதார முரண்பாட்டின் அப்பட்டமான சதியாகவே நகர்கிறது.இது வளர்ந்துவரும் மேற்குலக முதலாளித்துவத்தின் அதிபயங்கர அராஜகத்தை மறைப்பதற்கும் இந்தப்பயங்கர வாதத்துக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்சியைத் தகர்ப்பதற்காகவும் சீனாவை வலிந்து கம்ய+னிசத் தேசமாகக்காட்டிப் பயங்கரவாதச் செயற்பாட்டை கம்ய+னிசத்துக்கும் பொதுமையாக்கி மக்களைத் திசை திருப்பும் ஒரு யுக்தியாகவே ஏகாதிபத்தியம் பொய்யுரைத்துவருகிறது.சீனாவென்பது மேற்குலகத்துக்கு இணையானவொரு ஒடுக்குமுறைத் தேசமாகவே இருக்கிறது.அங்கே கொம்ய+னிசம் மருந்துக்கும் கிடையாது.சீனாவை நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீன ஆளும் வர்க்கமானது உலகத்து மாபியாக்களோடு தமது உறவை வளர்த்துச் சீனாவையும் அதன் கடந்த காலப்பாரம்பரியத்தையும் கடந்த முப்பதாண்டுக்கு முன்பே குழி தோண்டிப் புதைத்தாகிவிட்டது.இதற்கு டெங்கு கும்பலுக்கு நன்றியை மேற்குலகஞ் சொல்லியாக வேண்டும்.எனினும்,பொருளாதார முரண்பாடுகள் அந்த நன்றியை இப்படிச் செய்து தென்கிழக்காசியத் தொழிலாளரை மொட்டையடிக்க ஒரு தலாய் இலாமாவைத் தயார்படுத்தி வருகிறது.இதற்கு ஜேர்மனியே நல்ல உதாரணமாக இருக்கிறது.


தொட்டிலையும் ஆட்டிக் குழந்தையையும் கிள்ளிவைக்கும் ஜேர்மனியோ "பலாத்தகாரத்தால் எந்தப்தரப்பும் எந்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது"என்று ஒப்பாரி வைத்தபடி தலாய் இலாமாவுக்கு மேலும் ஒரு உந்துதலைக் கொடுக்கிறது.பலாத்தகாரத்தால் எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாதென்று கூறும் ஜேர்மனியோ அவ்கானிஸ்தானில் பலாத்காரத்தைபயன்படுத்தி அங்குள்ள எரிவாயுவைக் கொள்ளையிடுகிறது.இன்றைய உலக நடப்புகள் யாவும் மூலவளத் தேவைகளைக் கையகப்படுத்தும் போராட்டமாகவே விரிகிறது.ஆங்காங்கே சுயநிர்ணயத்தைக் கோரும் சிறுபான்மை இனங்களின் அனைத்துவழிப் போராட்டங்களையும் இத்தேவையை மையப்படுத்தியே உலகம் பயன்படுத்தி வருகிறது.எமது தேசத்தில் நடந்தேறும் அரசியலும் அதன் வாயிலான போராட்டத்தையும் இதே உலகம் தத்தமது தேவைக்கேற்றபடி உபயோகப்படுத்தி வந்த இன்றையபொழுதுவரை நாம் இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம்.இன்று உலகத்தின் மூலதனச் சுற்றோட்டம் தேவைகருதித் தேசங்களைப் பிரித்தெடுத்துத் தமது மூலதனத்தைப் பெருக்கும் உற்பத்திப் பொறிமுறையைத் திறம்பட விருத்தியாக்கி வருவதற்கு ஆங்காங்கே அப்பாவி மக்கள் பலியாவது தொடருகிறது.1949 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றங் கண்ட சீனா தனது மக்கள் விடுதலை இராணுவத்தூடாக 1950 இல் திபேத்தைச் சீனக் கட்டுப்பாட்டுக்குள்கொணர்ந்தது.அன்றுதொட்டு இன்றுவரையும் கம்ய+னிசத்தின்பேரால் கூட்டிப் பெருக்குகிறது மேற்குலகம் திபேத்தியப் பிரச்சனையை.

மடாலயங்களாலும் மகிமையுடைய சுதந்திரத் தாயகம் அமைக்க முடியுமெனவொரு அரசியல் நகருகிறது.இதுள் வெற்றியுறும் தருணங்கள் மெல்லத் திபேத்தின் பக்கம் கனிந்து வருகிறது.அமெரிக்க-ஐரோப்பிய-சீனாவின் முரண்பாடுகள் திபேத்தில் சுயநிர்ணயப் போராட்டமாக வெடிக்கிறது.இதில் வெற்றிபெறும் தரப்பு நிச்சியமாக சீனாவாக இருப்பதற்கில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
16.03.2008

Saturday, March 15, 2008

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்...

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் அனைத்துச் சிக்கல்களும்-அது சிந்தனைத் தளமாகட்டும் அல்லது சமூக மாற்றத்துக்கான கருத்தாடல்கள்,வேலைத்திட்டமாகட்டும்-அனைத்தும் தனிநபர் வாதக் கண்ணோட்டத்தோடு தன்முனைப்புக்கொண்டே எதிர்கொள்ளப்படுகிறது.இத்தகையவொரு சூழலில் முன்தள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் இன்னுஞ் சொல்லப்போனால் செயலூக்க முனைப்புகள் யாவும் ஏதோவொரு தனிநபருடைய அறிவுப்பயனாகக் கட்டியமைக்கப்படுவதே நமக்குள் நிலவும் அபத்தம்.இத்தகைய பார்வையின் தொடர்ச்சியான சமூக வறட்சி தனிநபர்களை உச்சியில் தூக்கி வைத்து அவர்களுக்குள் முழு உலகத்தையும் பார்ப்தாக முடிவடைகிறது.இன்றைக்குத் தமிழ் மணத்தில் நடைபெறும் தெருச் சண்டைக்கு மூல காரணம் எதுவென்று தேடுமிடத்து அங்கே புரிதலற்ற வெறும் வெத்துவேட்டுத் திமிரே காரணமாகிறது.

ஒரு விடையத்தை ஒருவர் முன் வைக்கும்போது அதன் தாத்பாரியத்திலிருந்து பார்ப்பதல்லப் பார்வை,மாறாக தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் புரிவதே சரியானதாக இருக்கிறது.இதற்கு நீண்ட படிப்பு அவசியமாக இருக்கிறது.ஒருவர் தனது அடிப்படையான பொது அறிவை வைத்து எதையும் எழுதிவிடலாம்.ஆனால், சமுதாயத்தின் பற்பல முரண்பாடுகள் அது சார்ந்த செயற்பாடுகளை நோக்கிக் கருத்தாடும்போது மிகக் கூர்மையான ஆழ்ந்த படிப்பும் அறிதற் புலமும் அவசியமாகவே இருக்கிறது.ஒருவர் முன்வைக்கும் கருத்தை ஆழ்ந்து நோக்குவதற்கு நீண்ட வாசகத் தன்மையிலான அநுபவம் அவசியமாகவே இருக்கிறது.இன்றைக்கு தமிழ் மணமெங்கும் அல்லோலகல்லோலப்படும் தனிநபர்வாத முனைப்போடு எழுதப்படும் அரைவேக்காட்டுத் தனமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் மிக மோசமான தனிநபர் முனைப்புடையவர்களாக இருக்கிறார்கள்.இவர்களே மிகவும் கூர்மையடைந்த அதி தனிநபர் வாதத் தன்மையோடு ஆழ்ந்த கருத்துடைய எழுத்துக்களையே தூசாகத்தட்டித் தமது புலம்பல்களைக் கடைந்தேற்றும் மகா கோபத்தோடு கிறுக்கித் தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.

நிதானமிழந்த எந்த எழுத்தும் இதுவரை தர்க்கத்தோடு வந்ததாகச் சரித்திரமில்லை.அதுவும,; சமுதாயம் சார்ந்து மக்கள் நலனுக்கான பெரியார் கருத்துக்களைப் பரப்புவது,அதனூடாகச் "சமூகச் சீர்திருத்தம்"செய்வதாகச் சொல்பவர்கள் முதலில் சமுதாயத்தின் அனைத்து முரண்பாடுகளையும் அதை உற்பத்தி செய்யும் பொருளாதாரப் பொறி முறைகளையும் ஓரளவாவது புரிந்துகொள்ள முனைவது அவசியமான முன் நிபந்தனையாகும் மேற்காணும் செயற்பாடுகளுக்கு.இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு "வாழ்வியல் மதிப்பீட்டைக்"கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட"ஜனநாயகம்"எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் "ஒப்பாரி" எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் "பிரதிநித்துவப்படுத்தும்" ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.

பதினாறாம் நூற்றாண்டின் பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையானது காலனித்துவம் மற்றும் உலக மகாயுத்தங்களுக்குப் பின்பான ஐரோப்பிய மையவாதச் சிந்தனையோட்டச் சிதறல்களாகிப் பொருளாதாரத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் ப+ர்ச்சுவாக்களாகவும்,பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது.அளவுமுறையற்ற மூலதனவ+க்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல.இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும்,சாதிய-நிற-பால் ஒடுக்குமுறைகள் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது-ஆடுகிறது!இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத்திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.

இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும்,மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது.இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி,கலை,விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது.இத்தகைய செல்நெறியானது அரசியலைப் ப+hச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும்,அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது.இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே ஏதேவொரு தத்துவத்துக்குத் தாரவார்த்துக் கொடுத்த வாரீசாக முன்னிறுத்தி வியாக்கியானஞ் செய்கிறார்கள்.பெரியாரின் சமூக முன்னெடுப்பும் அதன் சமூகத் தன்மையும் வெறும் பார்ப்பனியத்துக்கு எதிரானதாக இருப்பதாக இருந்தால் அது நிச்சியம் என்றோ சிறைப்பட்டுப் போயிருக்கும்.எனினும்,அது இன்றுவரையும் உயிர்வாழ்வதாக உணரப்படுமாயின் அதன் சமூகத்தன்மையும் உயரிய போராட்டத் தளமும் நிச்சியம் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் ஏதோவொரு வகையில் தன்னுள் கொண்டிருப்பதாகவே இனம் காணத்தக்கதாகும்.இங்கே,தத்துவம் வேண்டாம்,அறிவியல் மட்டுமே போதும் என்பதும், நான் சமூகஞ் சார்ந்து சிந்திக்கவில்லை,சமூக சீர்திருத்தம் பேசுகிறேன் என்பதும் சுத்த அபத்தமாக இருப்பதை உணரச் சமூகக்கல்வி இன்றியமையாதது.இத்தகைய நிலையிலும் தம்மைத்தாமே முதன்மைப்படுத்தியபடி சமூகச் சீர்திருத்தம் பேசுவதே அறிவிலித்தனமாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மிகக் கொடுமையான தாழ்வு மனப்பாண்மையானது மிகக் கெடுதியான திமிராக மேலெழுகிறது.இது ஏன்-எப்படி உருவாகிறதென்பதை உணரத் தவறும் ஒவ்வொரு பொழுதும் குறிப்பிட்ட நபர் தன்னையும் எம்மையும் முட்டாளாக்கி விடுகிறார்.


இத்தகையவொரு சூழலில் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு"அதிகாரவர்க்கம்"செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்கள் தம்மை ஏதோவொரு சமூகக் கருத்தாண்மைக்குப் பலிகொடுத்துவிட்டுச் சமூகச் சீர்மை செய்வதாகக் கனவு காண்கின்றனர்.இத்தகைய கனவை முன்தள்ளிக்கொள்ளும் முனைப்புக்குப் பெயராகப் பெரியாரை-மார்க்சை,அம்பேத்காரை,அண்ணாவை என்று தமக்குத் தெரிந்த தெரிவுகளோடு முன் வந்துவிடுகிறார்கள்.ஆனால்,அவர்களது செயலூக்கத்தைச் சரிவர அவர்களே புரியாது தடுமாறுகிற நிலையில் மற்றைய கருத்துக்களை மனதார ஏற்பதற்கான சிந்தனைத் தெளிவற்று அனைத்தையும் போட்டுக் குழப்பி எடுப்பதில் தமது காலத்தை விரையாமாக்கி விடுகிறார்கள்.இதுதாம் அப்பாவித்தனமானது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இவர்களே எல்லோரையும் தமது சொந்த அளவுகோல் கொண்டு அளந்தெடுக்கிறார்கள்.தத்தம் படிப்புக்கு-அறிவுக்கு நிகராக மற்றவர் இல்லை என்றும் வாதிடுகிறார்கள்.இவர்களே பற்பல கட்டத்தில் தமக்கு மட்டுமே கல்வி-மொழியறிவு,பிறமொழியறிவு இருப்பதாகவும் மற்றவர்கள் சோணைகிரிகள் என்றும் சிறுபிள்ளைச் சிணுங்கலைக் கட்டவிழ்த்துவிட்டுத் தாண்டவம் ஆடுகிறார்கள்.இத்தாண்டவத்தை "சோபா சக்தி-யமுனா இராஜேந்திரன்" குடுமிப்பிடிச் சண்டையில் மிக இலகுவாக நாம் இனம் காணமுடியும்.இத்தகையவொரு நிலை ஏலவே தமிழ் மணத்தைப் பிடித்தாட்டுகிறது.அது பற்பல உடலியற் கூறுகளைத் தனக்குக் குறியீடாக்கியபடி ஏதோ சொல்ல முனைந்து தோல்வியில் தத்தளிக்கிறது!

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும் பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் "கருத்தியல் வலுவை" எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவு;வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த ப+ர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதன் தொடர்ச்சியே இப்போது அதீத தனிநபர் வாத்தைத் தூண்டிவிட்டபடி நமது பல்தேசியக் பகாசூரக்கம்பனிகள் படுத்தும்பாடோ எத்தனையோ பெயர்களில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முனைகிறது.அதன் போராட்டக்காரர்களே இப்போது நாத்தியெடுக்கின்றார் நம்மை,நாமோ முகத்தைத் திருப்பி வேறுதிசை பார்த்திருக்க முடியாது இதையும் எழுதித்தாம் தீரவேண்டியுள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்.
15.03.2008

Sunday, February 17, 2008

ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள்...

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும்
கொசோவோ மற்றும்
அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்.


"Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić, Serbia’s Ambassador to France said.




இன்று கொசோவா தனி நாடாகப் பிரகடனஞ் செய்துள்ளது!

இது, அதன் பதினேழு ஆண்டுகளான யுத்தத்தால் நிகழ்ந்த பெறு பேறா?

அதன் மக்களால் நடாத்தப்பட்ட புரட்சிகரமான பணியினால் செர்பிய இனவாத அரசு முறியடிக்கப்பட்டு,வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பான பிரகடனமா?

தமது மக்களின் அனைத்துரிமைகளையும் உள்ளடக்கியவொரு விடுதலைகொண்ட கொசோவோவா இந்தப் புதிய தேசம்?

இவை நமக்குள் எழும் கேள்விகள்!

இன்றைய(17.02.2008) தினக்குரலில் திரு.கோகர்ணன் என்ற புனை பெயர்கொண்ட (அறியப்பட்ட )பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்றைய தமிழ்த்தலைமைகள் தொடக்கம் இன்றைய தமிழ்த்தலைமைகள் வரை விமர்சனத்துக்குள் அடக்கியுள்ளார்கள்.பேராசிரியரின் கருத்துக்கள் மிக யதார்த்தமாக நாம் இனங்கண்ட உண்மைகளாகவே இருக்கிறது.இந்த நிலையில்-

எமது மக்களின் தலைவிதியை எவரும் தீர்மானிக்க முடியாதென்பதற்கு இன்றைய கொசோவோ நல்ல உதாரணமாக இருக்கிறது!

ஆனால்,தமிழர் தலைமைகள் அன்னியத் தேசங்களையும் அவர்களின் ஆசியையும் காத்திருக்கும்போது,அவர்களே கடந்தகாலத்திலிருந்து இன்றைய நிகழ்காலம்வரை நம்மை ஏமாற்றிச் சிங்கள ஒடுக்குமுறையை மிகவும் தந்திரமாக நம்மீது கட்டவிழ்த்துவிட்டதற்கான கடந்தகால அரசியல் நிலைமைகளைச் சொல்கிறார் நமது பேராசிரியர்.

போராட்டம்,கொலை, அழிவு,குருதி,பசி,பட்டுணி-வாழ்விடங்களைவிட்டகலும் அவலம்!இவையெல்லாம் நமது அன்றாட வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும் நம்மை எவரும் கண்டு கொள்வதே இல்லை!நமது மக்களின் அழிவுக்கும் குருதிதோய்ந்த வாழ்வுக்கும் நாம் நம்பும் இத்தகைய அன்னிய தேசங்களே காரணமாக இருக்கின்றவை என்பதை நாம் நமது கடந்தகால அனுபவத்திலிருந்தும்,இந்த மறுபக்கக் கட்டுரையாளரின் எழுத்திலிருந்தும் அறிய முடியும்!



இன்றைக்கு கொசோவோ எனும் தேசத்தை அங்கீகரிப்பதாகச் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையும்,மேற்குலகத்தின் ஐரோப்பிய ஒன்றியுமும் நேற்று 16.02.2008 அன்றே தமது நீதிபதிகளையும்,சட்ட வல்லுனர்களையும்,சுங்க அதிகாரிகளையும் மற்றும் இராணுவவல்லுநகர்களையும் கொசோவோ நோக்கி அனுப்பிவைத்தன என்கின்றன!ஆனால்,நாமறிய இவர்கள் 90களிலிருந்து அங்கே நிழல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொசோவோவின் வளங்களைத் தமது தேசங்களுக்குக் கொணர்ந்துள்ளனர்.இதற்காகவே அவர்கள் அன்றிலிருந்து கொசோவோவை ஒரு நவகாலனிய அரசாங்கத்தின் கீழ் கொணரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.இதன் பொருட்டு இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்தூடாகச் சட்டபூர்வமானவொரு தமது ஏஜென்டைக் காத்துத் தமது மூலவளத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும்,அதன் வாயிலாகத் தமது தொழிற்சாலைகளின் அதீத உற்பத்தியையும் தொடர்ந்து நிலைப்படுத்தும் ஒரு உறுதியான பங்காளியைத் தயார்ப்படுத்தும் அவசியத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்!


அன்னிய தேசங்களின் கொடிகளைத் தமது தேசத்தோடான நட்புறவுக் கொள்கைகொண்ட தேசங்களாக கொசோவோ மக்கள் கொண்டாடும் நிலையை ஊடகங்கள் உருவாக்கின.

இதே ஊடகங்களும்,அமெரிக்க அரசும் கொசோவின் விடுதலைக்காக அன்று போராடிய யு.சி.கே. அமைப்பை 1998 ஆம் ஆண்டு வரைப் பயங்கர வாத அமைப்பாகவே பிரகடனப்படுத்தி ஒதுக்கி வந்தது.இத்தகைய நிலையில் திடீரென யு.சி.கே அமைப்பானது விடுதலைப்படையாக இப்போது முன்னிறுதப்பட்டு அத் தேசம் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, நமது தேசத்தையும்,புலிகள் அமைப்பையும் அமெரிக்கா அங்கீகரிக்குமா?

பலரிடம் இக் கேள்விகள் இருக்கின்றன.இக் கேள்விக்கு முதலில் நாம் தெரிய வேண்டியவை பலவுண்டு!

புதிதாக மலர்ந்துவிட்ட கொசோவோ "மக்களினால் விடுவிக்கப்பட்ட தேசமாகவா" இருக்கிறது? என்ற கேள்விக்கு நியாயமாக விடை காண்பவருக்கு அன்னிய நலன்களின் கொடுமை மிக இலகுவாகப் புரியும்.

அத்தேசமானது அன்னிய இராணுவங்களின் துணையோடு,இன்று முழுக்கமுழுக்க அமெரிக்காவினது இராணுவத் தேவைக்கும்,ஐரோப்பியாவின் மூலவளத் தேவைக்குமாக அவர்களால் சேர்பியாவிலிருந்து வலு கட்டாயமாகப் பிரித்துத் தமது சட்டபூர்வமான கொலனிய நாடாக்கப்பட்டுள்ளதென்பதே உண்மையானதாகும்.

இத்தேச மக்கள் செர்பிய அரசின் இரும்பு விலங்குக்குப் பதிலாகச் சொந்த நாடெனும் பொன் விலங்கால் மாட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்.அவர்களின் இந்தத் தேசமலர்வுக்கான மகிழ்வானது நிரந்தரமற்றது!

இதைப் புரிவதற்குக் காலமெடுக்கத் தேவையில்லை.

அதை அந்தந்த அன்னியநாடுகளின் அரசியல் மற்றும் வியூகத்தின் போக்குகளிலிருந்தே நாம் அறிய முடியும்.

எங்கள் தேசத்துள் நிகழும் போராட்டமானது சுமார் கால் நூற்றாண்டாக யுத்தக்களத்தைத் தொடர்ந்து நடாத்துகிறது.இருந்தும் நமது தேசத்தை விடுவிப்பதற்கான எந்ததச் சர்வதேச அழுத்தங்களும் இதுவரை எமக்குச் சார்பாக எழவில்லை.இது ஏன்?

எம்மைத் தொடுர்ந்து அரசியல்-யுத்த அழுத்தங்களுக்குள் இருத்திவைத்து ஒடுக்கும் முதற்தர ஒடுக்குமுறைத் தேசமாக இருப்பது இந்தியாவென்ற மிகப்பெரும் பாசிச அரசாகும்.இங்கே,நமது தலைவர்களோ அன்றி சாதாரணப் பொதுமக்களோ-ஊடகங்களோ அன்னியத் தேசங்களால் நாம் விடுவிக்கப்பட்டுவிடுவோமென முழங்குகின்றன.

சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டு,நமக்கான தேசத்தைச் சுதந்திரமாகப் பிரகடனப்படுத்தும் முறைமைக்கு உலகம் ஒருங்கே ஆதரவு தருமென எவராது சிந்தித்தால் அது மிகப் பெரும் தவறென்பதை கொசோவோவின் மீதான ஐரோப்பிய-அமெரிக்க ஆர்வங்களிலிருந்து நாம் அறிய முடியும்.

இதையே தினக்குரல் கட்டுரையாளரும் நிறைவாகச் சொல்கிறார்.

படித்துப் பாருங்கள்.

உலக நடப்புகளில் "நமது அரசியலும்" எங்கே,எப்படியான தளத்தில் நகர்வதென்பதை நாம் அறிந்து திருத்தி மீள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.02.2008



>>>தமிழ்த் தேசியவாதத் தலைமைகள்
எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ
அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள்!<<< -கோகர்ணன்,தினக்குரலில்...


மறுபக்கம் :


//ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு
உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல்
வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று
நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது
என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள்.
இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று
பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு
முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று
நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும். //



தமிழ் மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைவதைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பியதில்லை. எனினும், இலங்கைத் தேசியம் என்ற கண்ணோட்டத்தில் கொலனிய ஆட்சிக்கு எதிரான சிந்தனையின் முன்னோடியாக இருந்தவர் பொன்னம்பலம் அருணாசலம். அவர் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்திலும் ஊக்கமளித்து உதவிய ஒருவர். சிங்களத் தேசியவாதிகளால் ஏய்க்கப்பட்ட அவர் அன்றைய சிங்களத் தேசியவாதத்தின் வர்க்கத் தன்மையையும் இலங்கை என்ற அடிப்படையில் சிந்திக்க இயலாமையையும் சரியாக மதிப்பிடத் தவறியதாலேயே விரக்திக்குள்ளானார். எனினும், அவரால் தனது `சகோதரர் இராமநாதன் போன்றோரின் பழைமைவாதத் .தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்கு நகர இயலவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் வரவும் அதன் வேகமான வளர்ச்சியும் மட்டுமே தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான கொலனிய- ஏகாதிபத்தியம் சார்பான சிந்தனைக்கும் காரணங்களல்ல.


அந்தத் தேசியவாதத்தால் தமிழ் பேசுகிற மூன்று வேறுபட்ட சமூகங்களை காலப்போக்கில் தம்மைத் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்திக் கொண்டவற்றை இணைக்க இயலவில்லை. அதற்குப் பிரதேச வேறுபாடுகளை மீறித் தனது அரசியலை முன்னெடுக்க நீண்டகாலம் எடுத்தது. அதைக்கூட இன்னமும் சரிவர நிறைவேற்ற இயலவில்லை. தனக்குள் இருக்கிற சாதி , வர்க்கம் என்கிற ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகட்கு நேர்மையாக முகங் கொடுக்க இயலவில்லை.


இதற்கான பல காரணங்களைக் கூறலாம். பிரித்தானிய ஆட்சி போன பின்பே தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனாலும், 1957 ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்க தளங்களை பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதை நமது தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாகக் கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீட்டு வரை எதிலுமே பிரித்தானிய அரசு தமிழருக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை.


அமெரிக்கா- பிரித்தானிய - டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும் 1960 இல் தேசியமயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் சொன்னார் . அந்த நன்றிக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதாவது செய்ததா? இல்லை. ஆனாலும், அத்தனை தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகளும் இன்று வரை எந்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக வாய்திறந்ததில்லை.


1959 முதல் சீன- இந்திய எல்லைத் தகராறு மோதல்கட்கு வழி கோரியது. அவற்றைத் தவிர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனப் பிரதமர் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தை இந்தியா புறக்கணித்தது, பிரித்தானிய ஏகாதிபத்தியம் பறித்து எடுத்ததற்கெல்லாம் தானே வாரிசு என்றதும் போதாமல் சீன- இந்திய எல்லைப் படங்களை மாற்றி வரையும் இந்திய ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளிருந்தே உண்மைகள் வெளிவந்துள்ளன. சீன - இந்திய மோதலைத் தொடக்குவதில் இந்தியப் படையினரது சீண்டலுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது என்றும், சீனாவின் பதிலடி இந்தியா எதிர்பாராதளவு கடுமையாய் இருந்தது என்பதுமே இன்றைய தகவல்கள் கூறுகின்ற உண்மை. இவை 1959 முதல் 1961 வரை சீனத் தரப்புச் சொல்லி வந்தவற்றுடன், உடன்படுகின்றன. எனினும், எந்தப் பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் அக்கறையற்றதாகவும் எந்தவிதமான சர்வதேச அலுவல்களிலும் அக்கறையற்றதாகவும் காட்டிக் கொண்டு லுமும்பாவின் படுகொலை பற்றியோ கியூபா மீதான அமெரிக்கப் படையெடுப்புப் பற்றியோ அலட்டிக் கொள்ளாத தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யையும் மிஞ்சிச் சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்று கண்டித்து அறிக்கை விட்டது.


தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஏகாதிபத்திய விசுவாசமே சுதந்திர கொங்கோ, கியூபா, சீனா என்பன பற்றிய பகைமையான பார்வைக்கு உதவியது என்பது சரியல்ல. மேலதிகமான காரணங்களும் இருந்தன. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். எனவே தான், சாதி ஒடுக்குமுறையான, ஊதியங்கட்கான போராட்டம் என்று எது வந்தாலும் தமிழ்த் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கட்குக் கடைவீதியிலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி. தொழிற்பிணக்கு நீதிமன்றம் என்றாலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி.


1947 இல் மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பை ஒரு இடதுசாரியும் ஆதரிக்கவில்லை. மலையக தமிழர் நீங்கலாக பெரும்பாலான தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஆதரித்தனர். இந்தத் துரோக வரலாறு இன்னமும் தொடருகிறது. இவற்றைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால் இன்று வரை தமிழ்த் தேசியவாதத்தை வழிநடத்திய சக்திகள் பற்றிக் கொஞ்சம் விளங்கும்.


ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள் என்பது 1977 க்குப் பிறகு தெளிவாகியிருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும் பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாக அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் ஏற்கப்பட்டதும் மீண்டும் ஏகாதிபத்தியம் பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன. எனினும், கடந்த கால் நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும் இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு, ஐ.நா. அமைதிப் படைகள், ஐ.நா. கண்காணிப்பு என்ற நமது கனவுகள் அடிப்படையின்றி விரிகின்றன.


எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. அதற்கேற்றபடி ஊடகங்களிலும் `நிபுணர்கள்' எழுதி வருகிறார்கள். தமது பிரச்சினைக்கான தீர்விற்கான சாவி சென்னையில் இருக்கிறது என்று கூட அண்மையில் எழுதப்பட்டது. டில்லியில் தான் அது இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கண்ணாடியை அணிந்து கொண்டே எல்லா இடத்திலும் அதைத் தேடுகிற ஞாபகமறதிக்காரர் போல நம்மிடமே உள்ளதை எங்கெல்லாமோ தேடுகிறோம்.


ஒன்று மட்டும் விளங்க வேண்டும். இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய அனுதாப அலையுள்ளது. ஆயினும், தமிழக அரசோ பிரதான கட்சி எதுவுமோ தமிழருக்கு ஆதரவாக எதுவுமே செய்யாது. ஈழத் தமிழர் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டே விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுகிற ஜெயலலிதாவின் கூட்டணி வைக்கச் சிலருக்கு முடிகிறது. அதேபோல, டில்லியின் முடிவுகளை மீற மாட்டேன் என்கிற கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கவும் சிலருக்கு முடிகிறது. இது தமிழக தாயக மரபு.

ஈழத்தமிழருக்கு ஆதரவான மக்கள் அமைப்புகள் உள்ளன. அவை விடுதலைப்புலிகளை விமர்சனமின்றி ஏற்பவையல்ல. அதேவேளை, சென்னையும் டில்லியும் ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆடுகிற நாடகங்களை அவை அம்பலப்படுத்துகின்றன. மாறாக நாங்கள் கேட்க விரும்புகிற பொய்களைச் சொல்கிறவர்களின் மொழி இனியதாயிருக்கலாம். அவர்களது நட்பு சந்தேகத்துக்குரியது.


ஜே.வி.பி. இடையிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும். இலங்கையின் உள் அலுவல்களில் அயலார் தலையீட்டை எதிர்த்தும் பேசும். இந்தியாவைக் கண்டித்தும் பேசும். மறுநாள் தூதரகத்தில் அதன் தலைவர்கள் விருந்துபசாரங்களில் சிரித்துப் பேசி மகிழ்வதைக் காணலாம். இந்தியாவும் அமெரிக்காவும் போருக்கு உதவ வேண்டுமென்று அது கோரும். விடுதலைப்புலிகட்கு எதிரான நடவடிக்கைகளை மெச்சியும் பேசும்.

அப்போதெல்லாம் ஜே.வி.பி. ஒரு இடதுசாரிக் கட்சியா என்ற கேள்வி நமது தமிழ்த் தேசியவாதிகட்கு நினைவுக்கு வராது. ஜே.வி.பி. தனது இடதுசாரி வேடம் கலையாதபடி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிற போது மட்டும் ஜே.வி.பி.யின் பச்சையான இனத்துவேஷமும் அது ஒரு `மாக்சியக் கட்சி' என்கிற கருத்தும் ஒன்று சேர்த்துத்தரப்படும். ஜே.வி.பி.யை இடதுசாரிகள் என்று திரும்பத்திரும்பச் சொல்லி வருகிற சிலர் ஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்று சொல்லத் தகுதியற்றது என்று அறியாமற் சொல்லவில்லை. அவர்கள் மனமறிந்தே பொய்யுரைக்கின்றனர்.



ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள். இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.


கோகர்ணன்,தினக்குரலில்

தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும்?

சுகுணாத் திவாகர்:"தாலி என்னும் சனியனை"க் கட்டித்தானாக வேண்டும்!



"புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப்
போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி
நிகழ்ந்தது?
சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!
எழுத்துக்கும்
வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி
"ஊருக்குத்தான் உபதேசம்
நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!
வாழ்வில் உண்மையாய் வாழ முதலில்
போராடுங்கள்!
உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!
இவர்களே
சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!"



//மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்). //-சுகுணாத் திவாகர்.



ங்கேதாம் எல்லோரும்(போலிப் புரட்சிக் காரர்கள்,பெரியாரீஸ்டுக்கள்,முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்) மிகமிகத் தப்பான முறையில் சமூகப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.தத்தமது விருப்புக்கு ஏற்ற தரணங்களை உருவாக்கியபடி மக்களை மடையர்களாக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரக் கிரிமனல்கள்போலவே இவர்களும் தமக்கான அரசியலைக் கடைவிரிக்கிறார்கள்.சமூகத்தை இங்ஙனம் கேவலமாக்கி,சமூக மாற்றத்தையே கொச்சைப்படுத்தும் இத்தகைய போக்கை முன்வைத்தே"இருபது வயதில் கம்யூனிசம் பேசுபவன் அறிவாளி,நாற்பதிலும் அதைத் தொடர்பவன் முட்டாள்"என்றும் ஐரோப்பாவில் நகைச் சுவைக் கருத்துண்டு.நாம் நம்மையே ஏமாற்றியபடி போலிக்கு எழுதுவதில் என்னதான் முற்போக்கான அம்சங்கள் இருப்பினும் அதை அம்பலப்படுத்தி நிராகரித்தாகவேண்டும்.

இத்தகைய நிராகரிப்பே நம்மைச் சூழ்ந்த ஆத்திக்கப் பண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்க முனையும் முதற்படி.இதுவே,உலகத்தில் புதிய பாட்டாளிய வர்க்கப் பண்பாட்டின் முகிழ்ப்புக்கான விசும்பு நிலை!இதன் உருவாக்கத்தைப் பல தளங்களில் நகர்தாமால் புரட்சியென்பது சாத்தியப்படாத ஒன்று!இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக ஏற்று, நம்மை அதற்குள் திணிக்காத ஒவ்வொரு தரணமும் நம்மை இந்த நிலவுகின்ற அமைப்புக்குப் பலி கொடுத்தபடி அதுள் ஐக்கியமாகி அழிவதையே செய்து வருகிறோம்!சமபந்தி,சாதி மறுப்புப் போராட்டமெல்லாம் வெறும் ஒளிவட்டங்களைக் கட்டும் சுய முனைப்பு முன்னெடுப்பாக அமையுமெனில் இதுவே நாம் செய்யும் துரோகங்களில் முதற்றரமான துரோகம்!சொல்வதற்கும்,செயற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லாது ஊராரை ஏமாற்றிவரும் படைப்பாளிகளை முதலில் இனம் காணுவது அவசியம்.


சமுதாயத்தைக் கேவலமாகச் சுரண்டிக்கொண்டிருக்கும் இந்த ஆதிக்க அதிகார வர்க்கத்தின் உறுப்பாக இருபதில் என்னதாம் "தெரிவு"உண்டு?என்தாம் பின்-முன் நவீனத்துவம் உண்டு?எல்லாமே புனைவெனும் அறிவுக்குத் தாலியென்பது தவிர்க்க முடியாத "தெரிவாக-நிலைப்பாக-வாழ்வாக" மாறிவிடுகிறது!



ஆண்-பெண் இணைவில் தாலியென்பது அவசியமற்றது.

"சமூகத்துக்காகத் தாலி கட்டுவது-சூழலுக்காக,பாரம்பரியத்துக்குச் சம்பிரதாயத்துக்கு-பாதுகாப்புக்காக"என்பதெல்லாம் வெறும் வெற்றுக் கருத்துக்கள்!அதைவிடப் பெண் விரும்புகிறார்,பெற்றோர்களின் ஆசை அது,எனவே,தவிர்க்க முடியாது தாலி கட்டுகிறேன்.என்பவர்களெல்லாம் பொய்யர்கள்!

என்னைச் சொல்கிறேன் கேளுங்கள்!-இது,மார் தட்டுதலல்ல!!

நானும் மரபு,ஆச்சாரம்,அது-இது என்று பார்க்கும் மிக இறுக்கமான குடும்பத்தில்தாம் மணம் முடித்தவன்.எனினும்,தாலிப் பிரச்சனை பெரிதாக உருவெடுத்தபோது இக் கல்யாணம் தேவையில்லையெனப் பிடிவாதமாக மறுத்து அத்தகைய மணப் பெண்ணுறவைவிட்டு ஒதுங்க முடிவெடுத்தவனும் நான்.பின் அதில் வெற்றியோடு தாலி,ஐயர்,அறுகரிசி,முகூர்த்தம் மறுப்புக் கல்யாண நிகழ்வைச் செய்தவர்கள் நாம்(ஆண்-பெண்)!-ஊர்கூடியல்ல சில உறவினர்கள்,நண்பர்களோடு நமது இணைவுகுறித்த எமது பார்வைகளை அவர்கள் முன் வைத்துவிட்டு, மோதிரங்களை மாற்றிக் கொண்டோம்.இங்கே,மோதிரங்கள் இணைவினது வெறும் குறியீடுமட்டுமே.அது அன்பினது அடையாளமென நீட்டத் தேவையில்லை!இப்போது அந்த மோதிரங்கள் எந்த மூலைக்குள் கிடப்பதென்று எமக்கே தெரியாது!

நாம்(பெண்-ஆண்)இருவர் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தரணங்களில்தாம் மற்றவர்களின் தயவு-இணைவு தேவையாக இருக்கிறது.சமுதாயத்தில் மற்றவர்களுக்காக வாழ்வதென்பது இத்தகைய சுயத்தை இழந்தல்ல.நமக்குச் சரியானதாகப்பட்டது முழுமொத்த மக்கள் கூட்டத்தில் தவறாகவே இருக்கிறது.அது தவிர்க்க முடியாது ஒவ்வொரு குடும்பத்துள்ளும் பிரதிபலிக்கிறது.எனினும்,நாம் சமூக மாற்றத்துக்காப் போராடுகிறோமா?அதற்குள் நம்மை மாற்றியாகவேண்டும்.பெண்ணின் விருப்பமாக இருக்கலாம் தாலி!ஆனால்,உண்மையில் அந்தவிருப்பம் நிலவுகின்ற அமைப்பின் கருத்தியல் புனைவு.

அது,நமக்குள் திணிக்கப்பட்ட சமூக ஒடுக்குமுறை.இதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பு-புண்ணாக்கென்றால் உங்களுக்கெல்லாம் சமூக மாற்றமென்பதெல்லாம் ஒரு கேடா?பிறகெதற்கு இறை-மதம் மறுப்பு?,சடங்கு-சம்பிரதாய மறுப்பு?

புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப் போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி நிகழ்ந்தது?

சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி"ஊருக்குத்தான் உபதேசம் நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!

வாழ்வில் உண்மையாய் வாழ முதலில் போராடுங்கள்!உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!இவர்களே சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!


எத்தனையோ தடைகளை உடைத்துப் போராடுவதே வாழ்வு!குடும்ப வாழ்வில் முற்றுமுழுதான புரிந்துணர்வென்பது எந்தத் தரப்பிடமும் இல்லை!அது சமூக ஒடுக்குமுறையாகவே-ஒரு பெரும் நிறுவனமாகவே குடும்பம் நமக்குள் வாழ்கிறது.எனவே,நம்மால் முடியக்கூடிய தாலி மறுப்பு,முகூர்த்தம் பார்த்தல்,ஐயர்வழி நடாத்தப்படும் மண நிகழ்வு,இவையெல்லாம் மறுத்து-ஒதுக்கியே நாம் இணைந்தவர்கள்!இது கடினமான பணி.திடமாகப் போராடி,விளக்கும்போது யாவும் கைகூடும்.

இத்தகையவற்றில் விட்டுக் கொடுப்பென்பதற்கும்,ஓட்டுக்கட்சி அரசியலுக்கும் எந்த வித்தியாசமுமில்லை!



இது,தனிபட்டவர்மீதான விமர்சனமில்லை.


பொதுவான சமூகத்தின்மீதான-பொதுப் புத்திமீதான விமர்சனம்.


சுகுணாத் திவாகர்களோ தாலியைச் "சனியன்"என்று கூறியபடி தப்பிக்க முனைகிறார்கள்!அதைக் கடக்கும் போராட்டத்தைச் செய்து,அதை (தாலிமறுப்பு)மறுத்து ஒத்துக்கி வைத்தல்-மனதாரப் புரிந்தபடி தவிர்த்தல் மிக அவசியமான முன் நிபந்தனை சமூகப்பண்பாட்டு மாற்றத்துக்கு.இதைத் தவிர்த்தபடி,தமக்குத் தமக்கென வரும்போது போலிச் சாட்டுக்களைக் காவிக் கொண்டு பூப்புனித நீராட்டு விழா,தாலிகட்டும் திருமண நிகழ்வு,சுபமுகூர்த்தம் பார்த்தல்-ஐயரை அழைத்து விவாகம் நடாத்தித் தாம்பாத்யம் பகிர்தல் நடை பெறுவதும் நமக்குள் கண்கூடு!

புரட்சி பேசியவர்கள்,போலித்தனமாகப் புத்தகங்கள்,பத்திரிகைகள் போட்டவர்கள்-வெளியிட்டவர்கள்,எத்தனையோ தடவைகள் இத்தகைய செயலுக்குள் தம்மை இணைத்தபடி"மகளின் பூப் புனித நீராட்டு விழா மனுசியின் விருப்பம்,ஐயரை வைத்துத் தாலி கட்டுவது பெண்ணின் பெற்றோருக்கு விருப்பம்-வயசானவர்கள்,அவர்களின் விருப்பத்தை மறுக்க முடில்ல"என்றபடி இந்த அமைப்பைக் காத்தே வருகிறார்கள்,தம்மைப் புரட்சியாளர்களாகக் காட்டியபடி-பெரியாரிஸ்டுக்களாக முன் நிறுத்தியபடி.

குடும்பம் என்ற அமைப்பே இதைக் காக்கும் ஒரு வடிவம்தாம்.எனினும்,இன்றைய நிலையில் அதைக்கூடப் புரட்சிகரமாக்கியபடி செல்ல முடியவில்லையானால் நாமெல்லோரும் போலிகளே!


ஒவ்வொரு அங்குலம், அங்குலமாகப் போராடியே இவற்றைக் கடந்தாகவேண்டும்.

இங்கே,சமரசம் செய்பவன்-செய்பவள் சமூகத்தை ஏமாற்றும் போலிகள்!உங்களையும் நேரடியாகவே சொல்வேன்:நீங்கள் போலித் தனமாகவே புனைகிறீர்கள்!சமூகத்தை ஏமாற்றிக்கொள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்,பெரியாரைத் துணைக்கழைக்கும் ஒரு செயலைச் செய்கிறீர்கள்!


என்றபோதும் நண்ப,
நீவீர் நீடூழீ நிலைத்து(ஆணும் பெண்ணும் மனம் ஒன்றிப் பிரிவகற்றி) வாழ
வாழ்த்துகிறேன் நெஞ்சார!

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
17.10.2008
வூப்பெற்றால்.

Saturday, February 09, 2008

அங்கேயும் கருப்பு நாசிகள்...

அங்கேயும் கருப்பு நாசிகள்,
இங்கேயும் வெள்ளை நாசிகள்,
நாம் போகும் இடம் இனி எங்கே?




இன்றைய ஜேர்மனி குறித்து நிறையச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இத் தேசத்தைப் பற்றிய பழைய புரிதலில் அதன் மக்கள் விரோத அரசியலானது ஜேர்மனிய ஆளும் வர்க்கமான பெரும் தொழிலகங்களுக்குச் சொந்தக்காரர்களான குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே இயங்கி வந்திருக்கிறதை நாம் இரண்டு பெரும் உலக மகா யுத்தத்தின் மூலமாகச் சிந்தித்தும்,வரலாற்று ஆய்வாளர்களின் அறிக்கைகளிலிருந்தும் அறியக்கூடியதாகவே இருக்கிறது.மூலதனத்தின் அதீத திரட்சியானது மனித சமுதாயத்தில் சிறுபகுதியை மிகவுஞ் செல்வத்தில் கொழிக்கவும், பெரும்பான்மை மக்களை வறுமையிலுமாக விட்டுவிடுகிறது.இதை கண்முன்னே காணவிரும்பின் நம் இந்தியாவைக் கண்முன்னே நிறுத்துவோமானால் அதன் கோரமுகம் நம்மை அண்மித்து வருவதை இனம்காணமுடியும்.


பசி,பட்டுணி-நோய்,நொடி,ஒட்டிய வயிறும் ஒளியிழந்த விழிகளும் வானத்தை விழிக்கத் தெருவோரம் படுத்துறங்கும் மனிதர்கள்.அத்தகைய மனிதர்களை மேட்டுக் குடிகளின் கார்களே மோதிக் கொன்றுவிடும் ஒரு நொடியுமாகவும்,பழைய பத்திரிகைகளை வீதியில் பொறுக்கி விற்று வயிறு நிறைக்கும் சின்னஞ்சிறு பாலகர்கள் மறுபுறமாகவும் இந்தியா இருபத்தியோராம் நூற்றாண்டில் "வல்லரசாக" மாறிவருகிறது!இது இந்தியாவினது மட்டுமல்ல உலகத்தின் பல முதலாளிய நாடுகளின் கோலமும் இதுவே.இது, முதலாளியப் பொருளாதாரத்தின் நிச வடிவிலான சமூகயதார்ததத்தின் மறு விளைவாக உலகத்தில் யுத்தத்தையும்,பஞ்சத்தையும் ஏற்படுத்தப்படுகிறது.மனிதர்களை இலட்சக் கணக்கில்-கோடிக் கணக்கில் கொன்று குவிக்கிறது,முதலாளியச் சுரண்டல் அமைப்புகளும் அதன் வல்ல இராணுவமும்!கண்ணால் காண முடியாத கோலங்கள் அல்ல இவை!இந்தியாவின் வறுமையையும் அந்தத்தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் நய வஞ்சகத்தனமான சுரண்டலையும் அம்பலப்படுத்திய மீரா நாயரின் சலாம் பம்பாய் உலகமெல்லாம் திரையிடப்பட்டது.இது இந்தியா பற்றிய பல பிரமைகளைச் சிதைத்தெறிந்து அதன் கொடூரமான முகத்தைச் சாதாரணப் பாமரர்களும் புரிய வைத்த திரைப்படம்.


உலகத்தில் எந்தப்பகுதியிலும் இல்லாதபடி இந்திய இந்து அதர்ம முறையானது இந்தியாவில் 240 மில்லியன்கள் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி வைத்து சமூகக் கிரிமினலாகத் தனது பக்கங்களை உலகத்தில் நிரப்பிவைத்திருக்கிறது.உலகத்தின் இன்றைய அரசியலானது இதே இந்தியாவை ஒத்த முன்னெடுப்பாகவே இன்றுவரையும் நிகழ்ந்து மனித சமூகத்தை அழித்து வருகிறது-ஒடுக்கி வருகிறது!இதன் தொடர்ச்சியில் நாம் தொழில்முறை-இன்டர்ஸ் ரீரீயல் இன அழிப்புக்களை பலகோடி மக்களின் அழிவில்பார்த்தோம்.நாசிய நரவேட்டை,நாகசாகி-கீரோசீமா அணு வன்தாக்குதல் இதற்கு நல்ல உதாரணம்!அதே நாசியத் தாக்குதலே இக்கட்டுரைக்கான கருப்பொருளும் இன்று.கடந்த ஞாயிற்றுக் கிழமை(03.02.2008) நாசியத் தீ மூட்டலில் உயிரிழந்த ஒன்பது துருக்கிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அநுதாபம்.ஏனெனில்,நானும் அகதியாக நாசியத் தேசத்தில் வேண்டாத குடியாய்க் காலத்தை ஓட்டும் தமிழர்களில் ஒரு உறுப்பினன்தானே?அதோ,தீ என்னையும் தொடருகிறது.நானே ஒரு கதையில் எனது பிள்ளையைப் பறி கொடுத்ததாகச் சொன்ன "ஆவீன மழை பொழிய..."இன்றைய அன்றாட வாழ்வாக நமக்கு ஐரோப்பாவில்-ஆசியாவில்-ஆபிரிக்காவில் ஆ...என்ன உலகம் பூராகவும் இதே கதைதாமே?பின்ன-இதுதானே முதலாளியமும் அவர்களது ஜனநாயகமும்!



நாசி ஜேர்மனியானது கிட்லர் ஊடாக விதைத்த இனவாத்மானது இந்திய இந்து அதர்மச் சாதியத்தின் மனிதவிரோதப் போக்கோடு ஒன்றித்திருப்பது.இது இன்று வரையும் உலகில் கொன்று குவித்த அப்பாவி மக்களின் தொகையானது 140 மில்லியன்கள் மக்கள் தொகையாக இருக்கிறது.இது தனியே ஜேர்மனிய இனவாதக் கழிசடை அரசியல்-உற்பத்தி ஆர்வங்களால் நிகழ்ந்தபோது, இதை வெறும் ஒரு பாசிசக் கோமாளி கிட்லரின் தவறாக நிறுவியது முதலாளிய உலகம்.இன்றோ கிட்லர் அழிந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கழிந்த பின்பும் இதே நாசிய இனவாதமானது பல் பத்து வேற்றினதைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது ஐரோப்பாவில்-ஜேர்மனியில்!


இந்த இனவாத முன்னெடுப்பை முதலாளியத் தேசங்கள் எங்கும் மிக இலகுவாக அறியமுடியும்.அதாவது, ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கின்ற எந்தத் தேசத்தை எடுத்தாலும் இந்த இனவாத மனதும் அது சார்ந்த அழிப்புவிருப்பும் நிறைந்தே இருக்கும்.இதையும் இந்தியாவில் உதாரணமாக எடுத்தால் அநுதினமும் இறைவனைப் பிராத்திப்பதாகவும் மனிதர்களுக்கு-உலகுக்குச் சேமம் உண்டாவதற்காவும் பிராத்தனை செய்வதாகச் சொல்லும் பிராமணனின் வீட்டில் சாதிகள் பார்க்கப்பட்டுத் தம்மைப் போன்ற மனிதர்களைச் சமூகவதைக்குள் தள்ளிக் கழித்துவைப்பதை மனதிரைக்குள் கொணரும்போது, இத்தகைய முதலாளியக் கருத்தியலை மிக நுணுக்கமாக அறியமுடியும்.இவற்றைப் பூண்டோடு அழிக்க முனையாத பிராமண அம்பிகள்கூட ஐரோப்பாவில் நாசிகளிடம் வேண்டும் உதையைத் தம்மோடு பொருத்துவதாகத் தெரியவில்லை!மடிக் கணினி எங்கோ ஓரிடத்திலும்,ஐயர் உடல் இன்னொரு புறமுமாகக் கிடந்ததைக் கண்டவர்களும் நாமே.


இந்த உலகத்தில் யுத்தங்களைச் செய்து மக்களைக் கொன்ற ஐரோப்பாவானது இன்று ஜனநாயகம் வேடம் பூண்டபடி மெல்ல வேற்றின மக்களை அழித்துவருகிறது.இன்றைய ஜேர்மனியில் திடீர் திடீரென ஜேர்மனியர்கள் அல்லாத குடும்பங்களின் வீடுகள் தீப்பற்றி எரிகிறது.ஒவ்வொரு தீ மூட்டல்களிலும் 5-10 என வேற்றின மக்கள் அழிந்து மாண்டு போகிறார்கள்.தீயில் கருகும் மனிதர்களின் அழிவில் ஜேர்மனிய மண்ணைச் சுத்தஞ் செய்துவிட முடியுமென ஜேர்மனிய நாசிகள் கருதுகிறார்கள்.இத்தகைய நாசிய கட்சிகளையும் அவர்களது படையணிகளையும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திலொரு பகுதி ஒத்துழைப்பு நல்கி அதன் பின்னாலிருந்து இயக்கி வருகிறது.சட்டப்படி நாசியக் கட்சிகளுக்கான நிதியை ஜேர்மனிய அரசு வரிப்பணத்திலிருந்து கொடுக்கிறது.உலகம் பூராகவும் இனவாதம் தலைகால் தெரியாது மக்களைக் கொல்லுகிறது!இது ஐரோப்பாவில் நாசியாக நமது நாடுகளில் வர்ணாச்சிரம சாதியத் தாக்குதலாக...


கடந்த ஞாயிறன்று 03.02.2008 லூட்விக்ஸ்காபன் எனும் நகரில் துருக்கிய மக்கள் வாழ்ந்த தொடர்மாடி வீடொன்று எரிகிறது.அங்கே,ஒன்பது மக்கள் தீயில் கருகி மரித்துப் போகிறார்கள்.இவ்வீட்டை கடந்த இரண்டு வருடத்துக்குள் மும் முறை நாசிகள் தாக்கித் தீயிட்டபோதும் மூன்றாம் முறையே இது வெற்றியளித்து முழுமையாக எரிந்து, அங்கு உறக்கத்திலிருந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளார்கள்!இதே பாணியிலான துருக்கிய வீட்டின் மீதான தாக்குதல் கடந்த பத்தாண்டுகளுக்குமுன் சோலிங்கன் எனும் நகரப் பகுதியில் ஐந்து மக்களைக் கொன்று குவித்தது.அப்போது பொங்கியெழுந்த துருக்கிய எதிர்புணர்வானது ஜேர்மனிய அன்றாட இயக்கத்தையே ஸ்த்தம்பிக்க வைத்தது.அந்தத் தாக்குதலை நாசிகளே நடாத்தினார்களென உடனடியாக வெளிப்படுத்தப்பட்ட ஊடகங்களின் உண்மைச் செய்திகள், இத்தகைய எதிர்ப்புணர்வைத் தீயாகப் பரப்பியதாக ஜேர்மனி இப்போது உணருகிறபடியால் இந்தப் பெருந்தொகையான மக்களின் உயிரழப்பைத் திட்டமிட்டு மறைப்பதற்கும்,அந்த வீட்டில் நிகழ்ந்தது விபத்தாக இருக்குமோ என செய்திகளை அடக்கி வாசிகிறது ஜேர்மனிய ஊடகங்கள்!


இங்கே,பற்பல இடங்களில் இத்தகைய நாசியத் தாக்குதல்கள் தினமும் நடந்தேறுகிறது.நாசிய இனவாதத் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் மனிதர்கள் யாவருமே ஏதோவொரு முறையில் உடல்-உளப் பாதிப்புள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.கடந்த மூன்று மாதங்களுக்குமுன் கிழக்கு ஜேர்மனியப்பகுதியான மூகெல்ன் எனும் நகரப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட இந்தியச் சீக்கிய இனத்தவர்கள் நாசிகளால் தாக்கப்பட்டு, மண்டைகள் பிளந்து வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.இனவாதத் தாக்குதல்களின் தொடர் நிகழ்வில்,கடந்த ஞாயிற்றுக் கிழமைத் தாக்குதல் முற்றிலும் திட்டமிடப்பட்டுத் தீ வைக்கப்பட்டதாகவே இனம் காணத்தக்கதாக இருக்கும்போது, ஜேர்மனியப் புலாய்வுத்துறையோ அதை இதுவரை திரையிட்டு மறைப்பதற்கான முறையில் உண்மையை மறைப்பதற்காகவே தமது ஆய்வுகளைப் பின்போடுகிறது.இங்கே,உண்மையை வெளிப்படுத்திய துருக்கிய ஊடகங்களை "பொறுப்பற்ற ஊடகங்கள்"என ஜேர்மனிய ஊடகங்களும்,அரசும் குற்றஞ் சொல்லும் அவசரத்தைக் கொல்லப்பட்ட மக்களின் குடியிருப்பில் ஏற்பட்ட-மூட்டப்பட்ட தீயின் முலம்பற்றிய ஆய்வில்காட்டவில்லை!தீயிட்டுக் கொளுத்தியதைப் பச்சைப் பாலகர்கள் கண்டதாகச் சாட்சியம் சொல்லப்பட்டும்,அதைக் கணக்கெடுக்காத ஜேர்மனிய அரசு!


ஜேர்மனிலிருந்து வெளி நாட்டவர்களைப் பூண்டோடு அழித்தும், வெருட்டியடித்தும் ஓட்டிவிட முனையும் புதிய-இளைய கிழக்கு-மேற்கு இணைவுக்குப் பின்பான கூட்டு ஜேர்மனிய மனமானது கனவுகாண வைக்கப்படுகிறது.எனினும், அந்நியத் தேசங்களின் மூலவளம்-கனிவளம் இன்றி ஐரோப்பாவானது ஒரு நிமிடம்கூட உயிர்வாழ முடியாதென்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள்-அரசியல்வாதிகள் அறிந்தேயுள்ளார்கள்.என்றபோதும், இனவாதத் தீயை அணைப்பதற்கான எந்த முன்னெடுப்புமின்றி அதை ஊட்டிவளர்க்கும் ஓட்டுக்கட்சிகள் தமது தேர்தல் வெற்றிகளை நிர்ணியிக்கும் ஒரு ஊடகமாக இந்த"ஜேர்மன் ஜேர்மனியர்களுக்கே"எனும்படியான இனவாதத்தைக் இனம்கண்டு அப்பப்பத் தமது தேவைக் கேற்றபடி வளர்த்தெடுக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டமானது இப்போது ஜேர்மனியக் கெசன் மாநில முதல்வர் றோலான்ட் கொக் வாயிலாக "சிறுவர்கிரிமினல்"களுக்கான சட்டமாக வருகிறது.14 வயதுக்குமேற்பட்ட வெளிநாட்டுச் சிறார்கள் செய்யும் குளப்படிகள் இந்தச் சமூகத்துக்கு எதிரானதாகவும்,இது வெளிநாட்டுச்சிறார்களின் கிரிமினல்களாக இனம் கண்டு அதை ஒடுக்குவதற்காகச் சிறார்களை உள்ளே தள்ளும் சட்டம் வேண்டுமென்று தேர்தலில் பிரச்சாரம் செய்து, தனது படுதோல்வியைத் தடுத்து நிறுத்தி மீளவும் ஆட்சியைக் கூட்டுக்கட்சிகளோடு பேரமிட்டுத் தொடரும் சூழலை ஏற்படுத்துகிறார்,திரு.ரோலான்ட் கோக்.இதேவகை அரசியல் இனிமேல் ஜேர்மனியெங்கும் படையெடுத்து அந்நிய மக்களைத் தொடர்ந்து உளவில் ஒடுக்கு முறைக்குள் தள்ளும் ஓட்டுக்கட்சிகளோ தாமே நாசிகள்தாமென்று தொடர்ந்து நிலை நிறுத்திவரும்போது, துருக்கியப் பிரதமரோடு நட்புறவு பாராட்டி அறிக்கைகள்விடுகிறது§ர்மனிய ஆளுங்கட்சிக் கூட்டணிகள்.அதுவும்,தீயினுள் கருகி மாண்டவருக்காக வருத்தம் தெரிவித்து!இதன் பின்னே இருக்கும் அரசியலை துருக்கிய இனத்தவர்கள் அறியாதவர்களா?


அந்நிய மூலவளங்களான எரிவாயு,மசகு எண்ணை,காரீயம்,யுரொனியம் முதல் சாதரண மரத்தளபாடங்களேயே ஜேர்மனி அந்நியத் தேசங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்குபோதும், அது இவற்றைத் தனது ஒடுக்குமுறை வியூகத்தோடே மிக வலுவாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து நிலைநிறுத்தத் துருக்கி என்ற ஐரோப்பாவின் கதவு அவசியமானது!துருக்கிய மக்கள் மூன்று மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வாழ்கிறார்கள்.அவர்கள் ஜேர்மனியர்களின் வேலையிடங்களை திருடுவதென்பது எப்பவும் ஏற்க முடியாதது.இரண்டாவது உலகமகாயுத்தத்தில் சிதைந்த ஜேர்மனியைக் கட்டியெழுப்பியவர்கள் துருக்கிய மூதோர்கள்.அவர்கள் இன்று நடைபிணமாக நோய் நொடியோடு வாழும்போது அவர்களின் குழந்தைகளை இன்னும் இத்தேச மக்களின் ஒரு பகுதியகக் கணிக்காத ஜேர்மனியின் மனது மிக மோசமானதே!எண்பது மில்லியன்கள் ஜேர்மனியர்களின் குடும்பத்தில் ஆணும் பெண்ணுமென்று அனைவரும் வேலை செய்ய முற்படும் தேவைக்கு ஏற்ற தகமையை ஜேர்மனிய உற்பத்தி வீச்சு ஏலவே கொண்டிருந்தது.எனினும்,கிழக்கு ஜேர்மனியின் இணைவுக்கும் அதன் பின்பான கால உலகப் பொருளாதாரத்தில் பல் தேசியக் கம்பனிகள் சீன-இந்தியக் குறை கூலிகளைத் தேடிய வேட்டையிலும் இன்றைய ஜேர்மனிக்கு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பத்தில் வேலை செய்யும் அவசியத்துக்குத் தீனீபோடும் ஆற்றலில்லை!இது முதலாளியத்தின் தவிர்க்க முடியாத இருண்ட நிலை.எனினும்,இம் முரண்பாட்டை ஜேர்மனில் வாழும் அந்நியக் குடும்பங்கள்மீதான தாக்குதலாக மாற்றுஞ் சதி மிகக் கெடுதியானது.கடந்த சோலிங்கன் தீ மூட்டல் மற்றும் இன்றைய லூட்விக்ஸ்காபன் தீ மூட்டல்கள் இத்தகைய அரசியலின் கோர முகத்தை அம்பலப்படுத்திவிடுகிறது!



எரீயூட்டப்பட்ட லூட்விக்ஸ்காபன் துருக்கிய இல்லத்துக்கு வருகை தரும் துருக்கியப் பிரதமர் ஏர்டோகன் துருக்கிய மக்களுக்கு அமைதியையும்,நேசிப்பையும் புகட்டுகிறார்,கூடவே துருக்கிய மொழியில் கற்கும் பட்டப்படிப்பு-உயர்கல்லூரிகளை ஜேர்மனிய அரசு திறந்து அவர்களுக்கு உதவும்போது,அவர்கள் தாய் மொழியில் சிறப்பாகத் தேறும்அதே தரணம் ஜேர்மனிய மொழியிலும் மிகத் திறமையாகத் தேற்சியுறும் காலம் வருமென்கிறார்.இதையும் ஜேர்மனியக் கட்சிகள் எதிர்த்து"இது இனக் கலப்புக்கு-கலந்து இணைந்து வாழும் சமூகவியத்தைத் தடுக்கும்"என்று தமது இனவாத்தைப் புதிய பாணியில் ஒப்புவிக்க, அவரது பயணத்தின் உண்மை முகம் அம்பலப்படுகிறது.ஒப்பந்தம்-எண்ணைக் குழாய் உரையாடலானது இங்கே அழிவுற்ற மக்களின் அரசியல் வருகையாக ஒப்பேறுகிறது!அவரது வருகையில் அமைதிகொண்ட துருக்கிய இளைஞர்களின் மனது ஜேர்மனியச் சதி வலைக்குள் வீழ்ந்து அமுங்கிவிடுமாவென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.ஆனால்,துருக்கியயென்பது தவிர்க்க முடியாதவொரு அயற் தேசமாகவே இருக்கிறது ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு-குறிப்பாக ஜேர்மனிக்கு.எனவே,துருக்கிய முதலாளிகளுக்குத் தமது தேசம் ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் வருவது தவிர்க்க முடியாதென்பது தெரிந்தே இருக்கிறது!அவர்கள் தமது ஆர்வத்துக்காக இங்கே வாழும் துருக்கிய மக்களின் கழுத்தையும் அறுக்க முனைவர்.இதுதாமே முதலாளியம்?


அடுத்த ஆண்டு தொடரப்போகும் 3300 கிலோமீட்டர் நீள எண்ணைக் குழாய் அமைப்புத் திட்டம் துருக்கியை ஊடறுத்தே தாக்கப்படுகிறது-நிர்மாணிக்கப்படுகிறது.துருக்கியைத் தாஜா பண்ணாது விடும் ஒவ்வொரு பொழுதும் இந்த 500 கோடி யூரோ திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் நீடிக்கிறது!இதன் தொடர்ச்சியாக ஐரோப்பில் எருபொருள்-சக்தி-எரிவாயுவில் தனி ஆதிக்கஞ் செய்யும் இருஷ்சியாவில் தாம் தொடர்ந்து தங்கிவருவதைத் துருக்கியின் பகமை ஏற்படுத்திவிடுமோ என ஒவ்வொரு பொழுதும் அச்சம் கொள்ளும் ஐரோப்பிய-ஜேர்மனிய ஆளும் வர்க்கம் சில கண் துடைப்புச் சட்டங்களை நாசிகள்மீது ஏவும் வாய்புண்டு.இத்தகைய கண்துடைப்போடு அமைக்கப்படும் 3300 கிலோமீட்டர் நீளமுடைய குழாயில் தொடர்ந்து அவ்கானிஸ்த்தான்-ஈரான் எரிவாயும்,எண்ணையும் வந்தாக வேண்டும்.இல்லையேல் அக் குழாய்க்கு எந்தப் பெறுமதியுமில்லை.இதைத் தடுக்க இருஷ்சியாவின் முட்டுக்கட்டை கொசோவோ அங்கீகரிப்பை மறுப்பதாகவும் தொடரும்போது, அமெரிக்காவின் நிலையோ பரிதாபகரமாக நேட்டோவுக்குள் இயங்கும் நாடுகளை மேலும் துருப்புகளைத் தரும்படியும் அவ்கானிஸ்தானின் பயங்கரப்பகுதிக்குள்-மரணப் பொறிக்குள் அனுப்பும்படியும் ஜேர்மனியை மிரட்டுவதாக இருக்கிறது.கூடவே,இக் குழாயில் ஈரானின் எண்ணை ஐரோப்பாவுக்குள் வருவது கூடாதென்றும் மிரட்டுகிறது.இந்த இலட்சணத்தில் துருக்கியின் முக்கியம் இருக்க, துருக்கிய மக்களை மிகக் கேவலமாக அடக்க முனையும் ஜேர்மனிய நாசிகளை நினைக்கும்போது இதன் அடுத்த நகர்வு இன்னும் மோசமாக விரியும்.மாற்றாகளின் தயவில் தாங்கள் வாழ்ந்தாலும் தமது தேசம் தமக்கு மட்டுமேதாம் என்பது ஐரோப்பிய இனங்களுக்கு வழிவழி வந்த மனதின் விருப்பத் தொடர்சியாகும்.


மூலதனச் சுற்றோட்டம் உலகைத் தொடர்ந்து இனவாத-மதவாதச் சீரழிவுக்குள் தொடர்ந்து இருத்திவைக்கும்போது நமது தேசங்களிலோ நடைபெறும் நியாயமான தேசிய விடுதலைப்போராட்டங்களைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து இதே நாடுகள் ஒடுக்கி வருகின்றன.அதிலொரு பங்கைக்கூட நாசிய அமைப்புகளிடம் இவர்கள் காட்டுவதுகிடையாது.நாசிகள் ஜனநாயகத்துக்குட்பட்டே கட்சிகட்டுகிறார்கள் என்பது ஐரோப்பியச் சட்டவாதத்தின் கதை.


இனியென்ன செய்ய முடியும்?


ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு குடியேற்ற வாசிகளும் கொடுங்கரங்கள் நாசிய வடிவில் தம்மைப் பின் தொடர்வதை உணரும்போது தத்தமது தேசத்தில் ஒரு விடிவுக்காக ஏங்குவது தவிர்க்க முடியாது!ஆனால்,இந்த மனிதர்களின் தேசங்கள் நாளும் பொழுதும் தமது சொந்த மக்களையே குண்டுகள்போட்டும்,வெடிக்க வைத்தும் நரவேட்டையாடும்போது,அத்தகைய தேசங்களின் விடிவு இந்த நூற்றாண்டில் இல்லை என்பதே நம் முன் நிற்கும் உண்மையாகும்.



அங்கேயும் கருப்பு நாசிகள்,இங்கேயும் வெள்ளை நாசிகள்.நாம் போகும் இடம் இனி எங்கே?பயப்பட வேண்டாம்,அதோ இடுகாடு.ஆ... அங்கேயும் ஒரு குழியை வேண்ட வேண்டும்-பராமரிக்க வேண்டும்!ஆக,இழப்பதற்கு எதுவுமே இல்லை.அப்ப பிறகென்ன போராடு, இவற்றைப் பெறுவதற்கு.அதாவது,கெளரவத்தோடு உழைத்து உயிர்வாழ ஒரு தேசம்!இதைவிட மாற்று வழி எவருக்கும் இல்லை என்பதே உண்மை!



ப.வி.ஸ்ரீரங்கன்
10.02.2008
வூப்பெற்றால்.





போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...