Saturday, March 22, 2008

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?


இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் கூட்டும் என்று இன்னொரு புதிய அத்தியாயத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா திறந்து வைக்கிறது.

20.03.2003 ஆம் ஆண்டு ஈராக்கை இராணுவரீதியாகத் தாக்கி அழித்த அமெரிக்கக் கொடும் யுத்தத்தை புஷ் கோமாளி சரியானதென்பது அவரது புத்திஜீவித்துவப் பிரச்சனையல்ல.மாறாக,அதுதாம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு."இதுவொரு யுத்தம், அமெரிக்கா அதை வெல்வதற்கும்,அவசியத்துக்குமானதாகும்,துருப்புகளை மீளப்பெறுவதற்கென்ற கேள்விக்கே இடமில்லை"என்று பெண்டகேனில் வாந்தியெடுக்கும் புஷ்சின் பிரச்சனை அமெரிக்க வங்குகுரோத்துக் கம்பனிகளின் பிரச்சனையாக இன்னொரு அத்துமீறிய எண்ணைவள நாட்டைக் கைப்பற்றும் அரசியலோடு சம்பந்தப்படுகிறது.இது உலகத்தின் அனைத்து மக்களினங்களின் ஜீவாதார உரிமைகளுடனும் மிகப்பெரும் இராணுவக் குறுக்கீட்டை செய்யும்-நியாயப்படுத்தும் அரசியலாக விரிகிறது.

ஈராக் குறித்த ஆய்வை ஜேர்மன் ஊடக முகாமையாளர் டாக்டர் யுர்கன் ரோடன்கோவ்பெர் என்ற பத்திரையாளர்"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?"என்ற தனது ஆய்வு நூலில் தான் நேரடியாகப் பார்த்தை-அநுபவித்தைப் பதிவு செய்திருக்கிறார்.ஈராக்கில் அமெரிக்கத் துரப்புகளின் அட்டூழியத்தை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் ஈராக்குக்குள் நுழையவிடும் பத்திரிகையாளர்களை தமது கட்டுப்பாட்டின்கீழ்த்தாம் இடங்களைக் காண்பிப்பதும்,எந்தெந்த இடங்களைப் பார்வையிடலாமென்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே தீர்மானித்துத் தமது கண்காணிப்பின் கீழ்தான் அனைத்தையும் அநுமதிப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
//Das ist keine Kritik an Journalisten. Erstens sind bereits über 200 mutige Journalisten im Irak gestorben und zweitens gab es für einen Journalisten, zumindest in den letzten drei Jahren, nur noch die Möglichkeit, als „embedded journalist" ins Land zu kommen. Deswegen sind Berichte, die Sie im Fernsehen sehen, ich würde sagen zu 99,9%, in Begleitung von schwer gepanzerten amerikanischen Kampffahrzeugen mit schwer bewaffneten amerikanischen GIs entstanden. Und natürlich bringen die amerikanischen Presseoffiziere die Journalisten nur dahin, wohin sie sie bringen wollen. Dass es trotzdem weltweit ein kritisches Bild gegenüber diesem Krieg gibt, verdanken wir den Journalisten, die trotz des begrenzten Zugangs in den Irak sich eine unabhängige Meinung gebildet haben. Ich bewundere diese Journalisten. //-Dr. Todenhöfer இது அமெரிக்க அரசியல்.இந்தியாவையோ அல்லது இலங்கையில் தமிழர்கள் பலியெடுக்கப்படுவதையோ மனிதவுரிமை மீறலாக அது பார்க்காது.அல்லது, இத்தகைய நாடுகளுக்கோ அது ஒருபோதும் குற்றப் பத்திரிகை தயாரிக்காது.இதையும் நாம் புரிவதில் சஞ்சலம் இருக்குமாயின் தொடர்ந்து மேலே செல்க!

ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.11 இலட்சம் மக்கள் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.பாக்தாத்தில் ஒவ்வொரு இரண்டவது வீடும் ஏதோவொரு வகையில் குறைந்தது ஒருவரையாவது பலிகொடுத்திருக்கிறது.ஈராக்கின் முழுமையான குடியிருப்புகளில் 40 வீதமான குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மேற்காணும் தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனமான ஓ.ஆர்பி. மிகக்கடினமான ஆய்வுகளுக்குப் பின்பு கடந்த 2007 இலையுதிர்காலத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேற்குலகத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஆய்வை-நூலைத் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் எழுதியிருக்கிறார்."மேற்குலகத்தவர்கள் மிகவும் கொடுமையானர்கள் இஸ்லாமிய உலகத்தவரைக்காட்டிலும்"என்று தடாலடியாகவே குறிப்பிட்டுத் தனது ஆய்வை ஈராக்குக்குச் சென்று-அநுபவித்து எழுதியுள்ளார்.

காலனித்துவத்திலிருந்து இன்றுவரையும் பல கோடி இஸ்லாமியர்கள் பலிகொள்ளப்பட்ட வரலாற்றைச் செய்தவர்கள் "பழைய ஐரோப்பாவின்"குடிகளே!இன்றைய அமெரிக்கா அதன் அடியொற்றி அழிப்பு அரசியலை மேற்கொள்ளும்போது இந்தப் பழைய ஐரோப்பாவின் நவ லிபரால்கள் ஆங்காங்கே அமெரிக்காவுக்குப் பின்னால் பதுங்கியபடி ஐனநாயகம் பேசுகிறார்கள்.இவர்களின் மனோத்திடமானது ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியை அமெரிக்க அத்துமீறிய ஆக்கிரமிப்பால் முன்னெடுக்கமுடியுமென்பதுமட்டுமல்ல அதன் வாயிலாக வந்தடையும் மூலவளத்தை கணிசமானளவு ஐரோப்பியச் செல்வமாக்குவதில் அமெரிக்காவுக்கான தார்மீக இராணுவ-அரசியல் ஒத்துழைப்பாக இருக்கிறது.ஈராக் யுத்தத்துக்காக ஜேர்மனிய அமெரிக்காவுக்குக் கொடுத்த நிதி 4.000 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது ஒரு மெய்யான மதிப்பீடு.இன்றைய புஷ்சின் பின்னே மறையமுனையும் ஐரோப்பியக்கூட்டுக்குள் நிலவும் முரண்பாடுகள் அமெரிக்க மூலதனத்தோடு மல்லுக்கட்டும் போக்கை மிகுதியாக மறைத்தபடி அமெரிக்காவின் முதுகில் குத்த முனையும் அரசியலை ஜேர்மனியும்,பிரான்ஸ்சும் முன்னெடுக்கும்போது போலந்து அமெரிக்காவுக்கு மிக விசுவாசமான நாடாக இருக்க முனைகிறது.அங்கே,அமெரிக்காவுக்கான நம்பகமான இராணுவத் தளம் நிலைபெற்று ஏவுகணைத் திட்டம் நிறைவேறி வருகிறது.இது இருஷ்சியாவின் வயிற்றெரிச்சலாக விரிந்து கொசோவோ எதிர்ப்பாக மாறுகிறது!

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர்Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும,; இன்றைய புஷ்சினது நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.அன்றோ காலனித்துவக் கொடூர நெடுமுடிகள் ஆட்சியல் அமர்ந்தபடி உலகை வேட்டையாடியதற்கும் இன்றைய நவீன"ஜனநாயக"க் காவலர்கள் ஆட்சியில் அமர்ந்தபடி"சகோதரத்துவம்,ஜனநாயகம்,அமைதி,சமாதானம்"சொல்லி உலகை வேட்டையாடுவதற்கும் அடிப்படையில் ஒற்றுமை தமக்குச் சொந்தமில்லாத சொத்தை தமதாக்கும் செயற்பாடாக இருக்கின்றதெனினும் உலகைத் தொலைத்துக்கட்டும் பொருளாதார முனைப்பின் அதி நவீன அணுவாயுத இராணுவக் குறுக்கீடானது இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பே மிக மோசமான வன்முறையாக உலகைத் தொலைக்க முனைகிறது!இன்றைய அமெரிக்காவின் இராணுவ விய+கமானது"Ground-Based Midcourse Defense System" (GMD) திட்டமாகவும் உலகைச் சுற்றிப் பொறிவைக்க முடியுமென்பதற்கு அமெரிக்க-இருஷ்சியப் பேச்சுவார்த்தைகளில் தென்படுகின்றன.இத்தகைவொரு சூழலில்தாம் நாம் அமெரிக்க வல்லாதிகத்தின் போர் வெறியானது வெறுமனவே மூலவளத் திருட்டுக்கானதுமட்டுமல்ல அது இனவாத அரசியலின் இன்னொரு தொடர்ச்சியை வற்புறுத்துவதாகத் தொடர்ந்து கூறிவருகிறோம்.அமெரிக்காவின் இத்தகைய அரசியல் உள்ளீடுகளை மறைப்பதற்கானவொரு தயாரிப்பில் நாளை திருவாளர் ஒபாமா அமெரிக்க அதிபாராகவும் வாய்புண்டு.ஏனெனில், முகமிழக்கும் அமெரிக்க ஜனநாயகத்தை நிறப்பாகுபாடற்ற அமெரிக்க நவீன அரசியல் தடுத்து நிறுத்துவத்தின் இராஜ தந்திரத்தில் இனவாதக் கழிசடை அழிப்பு யுத்தத்தின் வீரியத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளில் ஓபாமாவும் ஒரு கருவியாக இருப்பதைத் தவிர வேறென்ன அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு அவசியம்?

இங்குதாம் ஜேர்மனிய ஊடகவியலாளர் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் தனது ஆய்வுகளை ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களது எழுத்தின் எல்லை மேற்குலகச் செழுமைமிகு மூலதனவொழுங்குக்கானதாகவே இருக்கிறது.இது உலகு தழுவிய அத்துமீறிய அமெரிக்க-ஐரோப்பிய இராணுவக் குறுக்கீட்டுக்குத் தடையாக முன்வைக்கப்பட்டாதாக இருப்பினும்,உலக மூலவளங்களைப் பெறுவதற்கான இன்னொரு வகையான முதலாளிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறது.அது சாரம்சத்தில் இராணுவவாதத்தை மறுப்பதற்குப் பதில் அதையும் செழுமையாக்க முனைகிறது.இத்தகைய இருவகைப்பட்ட முகத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய அமெரிக்காவின் அதீத கொடுமைகளைச் சொல்லும் ஆதாரப+ர்வமான உண்மைகளை அது உலகுக்குத் தருகிறது.நாம் அவரோடு கூட நின்று"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?" என்று கேட்காது நீங்கள்,எதற்காக உழைப்பவர்களைக் கொல்கிறீர்கள் என்று கேட்டுவிடலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.03.2008

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...