Thursday, January 29, 2009

இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு

இந்திய-இலங்கை அரசுகளின் இறுதி இலக்கு:அது, என்ன?

அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே முத்துக்குமாரென்ற வீரமிகு தமிழ்மைந்தன் தன்னைத் தீக்கு இரையாக்கிவிட்டான்!தமிழகத்தில் அவனது குடும்பம் என்ன வலியில் இருக்குமென்பதை ஈழத்தமிழர்களாகிய நமக்குப் புரிந்துகொள்ள முடியும்.நாம் தமிழகத்துக்காக எதுவுஞ் செய்யவில்லை!எனினும்,நமது சகோதரர்கள் நமக்காகத் தம்மைத் தீக்கு இரையாக்குவதுவரை இந்தப் பாசம் செல்கிறது!

நாம் பலரை இழந்துவிட்டோம்!

வீரமிகு பல இளம் போராளிகளை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்திய அரசின் மிகக்கெடுதியான அரசியற்போக்ககுளால் நாம் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டோம்.எமது இளைஞர்களின் வீரமிகு கரங்கள் தரையில் மல்லாந்துகிடக்கின்றது.எங்கள் மக்கள் இந்திய அரசினதும் அதன் குண்டுகளினதும் அகோரத்தாண்டவத்தால் தமது உயிர்களைத் தினம் இழக்கின்றார்கள்.இதை எதிர்த்து எமக்காக, தியாகத் தமிழ்மகன் முத்துகுமாரன் தனது உயிரைத் தீக்குள் திணித்துவிட்டார்.

அவரது ஓர்மம் மிக்க இந்தத் தியாகத்தை மதிக்கின்றோம்.

மனதுடைந்து அவரது குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்.நிர்க்கதியான அவரது குடும்பத்தவருக்கு என்ன உதவியையுஞ் செய்யவும் நாம் தயாராக இருக்கின்றோம்.எங்கள் தாயகத் தமிழ் மகனுக்கு எம் சிரந்தாழ்த்திய வீரவணக்கத்தைத் தெரிவித்தபடி மேலுஞ் சிலவற்றைச் சொல்கிறோம்.



ஈழத்தில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகிறார்கள்.வன்னி பெரு நிலப்பரப்பெங்கும் மனித அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது!எமது தலைவிதியை நாமே தீர்மானித்திருக்கவேண்டிய காலத்தையெல்லாம் கடாசிய புலிகள் இப்போது செய்வதறியாது ஏனோதானோவெனப் போரிடுகிறார்கள்.

வீரமிகு போராளிகள் ஆயுதத் தளபாடம் மற்றும் வழிகாட்டலின்றி, இருக்கின்ற ஆயுதங்களோடு களமாடி மரிக்கின்றார்கள்.அவர்கள் அனைத்து வடிவிலும் போராடிப் பார்க்கின்றார்கள்.எனினும்,எதிரி மிகப்பெரும் படைவலுவோடு அவர்களைத் தோர்க்கடித்து வருகிறான்.

எதிரிக்கு மிகப் பக்கப்பலமாக இந்திய ஆளும் வர்க்கம் இருக்கிறது-இலங்கைப் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவம் இந்திய ஆயுதத் தளபாடத்தோடும்,இந்தியாவின் அதிமேதமையுடைய இராணுவ வல்லுனர்கள் வழிகாட்ட இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோல்வியுற்று, எமது போராளிகள் மரித்துவருகிறார்கள்.இன்றோ,சோமாலியாவில் கடத்தப்பட்ட ஜேர்மன் எண்ணைக்கப்பலை விடுவிக்க இந்தியக் கடற்படை ஒத்துழைப்பு நல்கிறது.ஆனால், இலங்கை அரசின் இனவழிப்பில் சிக்கிய பல இலட்சம் தமிழரைக்காக்க இந்திய அரசால் முடியவில்லையே!இது,ஏன்? இதுதாம் வர்க்க நலன்-வர்க்கக்கூட்டு!(தமிழகச் சட்டசபையில் திரு.அன்பழகன் கூறும் கருத்து:"இலங்கைத் தமழர்களின் அவலத்தைக் குறைக்க இந்தியாவின் முயற்ச்சி ஏற்கத்தக்கது"என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாகும்.)


"உலகத்தின் நான்காவது பெரிய இராணுவம், ஒரு சிறிய விடுதலைப்போராட்ட இயக்கத்துக்கு இவ்வளவு பேரிழப்பை அழித்து அந்த அமைப்பைத் தாங்கிய தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க நினைப்பது மிகவும் கோழைத்தனமானது-அராஜகமானது-அநீதியானது!காந்தி பிறந்த மண்ணின் குணமா இது?"என்று சராசரி ஈழத்தமிழர்கள் நொந்து போகின்றார்கள்-தாய்த் தமிழகத்தில் தம்மைத்தாமே தீயிட்டு உயிர் நீத்துவருகிறார்கள்.

நாம் இதைக்கடக்க முனைகிறோம்.

இந்தியாவின் இலக்கை ஓரளவு புரிய முற்படுகிறோம்.இந்திய அரசு,தனது அகண்ட பாரதக்கொள்கையூடாகத் தனது பெரு முதலாளிகளின் பொருளாதார நலனுக்காக ஈழத்தமிழர்களைப் பூண்டோடு அழிக்க முனைவதின் உட்காரணங்களை அறிய முற்படுகிறோம்.இந்தியாவினது இராணுவப்பலத்தோடு ஈழஞ் சுடுகாடாகிற இப்போதுங்கூடப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் தீரமுடன் போராடிப் பார்க்கிறார்கள்-போராடிச் சாகிறார்கள்!இது, அவர்களது இறுதி இருப்புக்கானமுயற்சி.இலங்கை அரசை மிக மூர்க்கமாகப் போராட வைத்திருக்கும் இந்தியா, இலங்கைக்குத் தொடர்ந்து யுத்தத் தளபாடங்களைக் கொடுத்துத் தனது பிராந்திய மற்றும் செல்வாக்கு மண்டலத்தைத் தக்கவைப்பதிலும் அதன்வழிப் பொருளாதார வெற்றியையும் குறித்துத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புடையதாக இருக்கிறது.இது, யதார்த்தம்!


இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு:


இக் கிழமையின் ஆரம்பத்தில்,கொழும்புக்கான இந்திய வெளிவிவகார மந்திரியின் பிரயாணம், இந்திய ஆதிக்கத்தின் நிலைப்பாட்டை-தளத்தை-ஸ்த்தானத்தை உலகுக்குக் காட்டுவதாகும்.இலங்கையின் அனைத்து விடையங்களையும் நிர்ணயிக்கும் செல்வாக்கும், அந்தச் செல்வாக்கு மண்டலத்துக்கு எவருமே நெருங்க முடியாதென்பதை மேனனின் வரவில் இந்தியா எடுத்தியம்பியது.மேனின் வரவுக்குப் பின்பான பிராணாப் முகர்ச்சியின் விஜயத்துள் பன்முகப்படுத்தபட்ட அரசியல் குறியீடுகள் இருக்கின்றன.அவை, புலிகளை முற்று முழுதாக அழிக்கும் இந்திய இராணுவத்தின் பழிக்குப்பழி அரசியலின் சாணாக்கியமும், அந்த இராணுவத்துக்கு அரசியல் தலைமை கொடுக்கும் காங்கிரசின்(ராஜீவ் குடும்பத்தின் வலி) வரலாற்றுவலிக்குமான பதிலிகளும், பிரணாப் முகர்ச்சியினது வரவில் குறித்துரைக்கப்பட்ட கருத்துக்களில் தொக்கியுள்ளது!"புலிகளின்மீது அநுதாபமெனும் பேச்சுக்கு இடமில்லை" என்பது சோனியா காந்தியின் குரலாகவும்,"தமிழ் மக்களைப் பற்றிய கரிசனையும், அவர்களது அழிவைக் குறைப்பதற்கான முயற்சியில் இந்தியா தொடர்ந்து உதவும்"என்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட நாட்கனவான இலங்கைக்கான அரைகுறை அரசியல் தீர்வினது இறுதி முடிவுகளுமாகும்!இது, மிக இலகுவாக இன்று நம்முன் சொல்லப்படும் அரசியலாகும்.


அரைகுறைத் தீர்வோடு(ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு அண்மித்த), புலியில்லாதவொரு ஈழத்தமிழ் மக்களின் அரசியலை முடித்துவைப்பதிலுள்ள வேகம் இனிவருங்காலத்தில் எடுக்கப்படும் என்பதை இவர்கள் குறியீடாக்கிவிடுகிறார்கள்.இதற்காக, ஏலவே ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் கருணாவரை இந்தியா தயார்ப்படுத்திய குழுக்களைக் காய்வெட்ட அன்றைய வரதராஜபெருமாள் இன்னுமொரு துருப்புச் சீட்டாக வரப்போகிறார்.இந்தியா தொடர்ந்து அவரையே தனது நம்பிக்கைக்குரிய கைத்தடியாகக் கருதுகிறது.இதன் சரியானவொரு சூழலை மதிப்பிடுவதற்கான பல கோரிக்கைகளை இனிவரும் காலத்தில் மேற்சொன்ன சிறிய இந்திய விசுவாசிகளிடமிருந்து நாம் கேட்கலாம்.இத்தகைய கோரிக்கைகளுடாகத் தம்மைக்காய்வெட்டமுனையும் இந்தியாவுக்கு அரசியல் அழுத்தங்கொடுக்க இவர்கள் முனையும்போது, நமது மக்களின் அபிலாசைகளே கோரிக்கையாக எழும்.இதை, இப்போது ரீ.பீ.சீ.வானொலியும் அதன் அதிபர் திரு.இராமாராஜனும் முன்வைக்கத் தொடங்கி வருவதை உதாரணமாகச் சொல்ல முடியும்.

திரு.இராமாராஜன் மிகக் கைதேர்ந்த அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் என்பதை அவரது ஈ.என்.டி.எல்.எப் இயக்கக் கடந்தகால அரசியல் பாத்திரம் நமக்கு நன்றாகவே உணர்த்துவது.இத்தகைய அரசியல் நடாத்தையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளின் வெற்றிடம் இவர்களால் நிரப்பப்படும் போக்கில், நாளைய பொருளாதாரப் போக்குகள் இலங்கையில் மிகவும் கொடுமையான அரசியல் எழுச்சிகளை முன் தள்ளப் போவது உறுதியாகிறது.இதைச் சமாளிப்பதற்கான அடுத்த அரசியல் என்னவாக இருக்கும் என்பதை நாம் மிகக் கவனமாகவே அணுகுகிறோம்.இது,இலங்கையில் இன்னொருவகை பயங்கரவாதமாக இலங்கையின் இடதுசாரிகள்மீது இராணுவவாதத்தைக் குவிக்கும்.இதுவரை இந்த வேலையைப் புலிகளிடம் ஒப்படைத்த அந்நியச் சக்திகள்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம்,இப்போது தனது வளர்ப்புப் பிராணியைத் தானே அழித்த பின்பு, அதன் வேலையை இலங்கை இராணுவவாத முன்னெடுப்புக்குள் இனம் காணுகிறது.இது,பெரும் பாலும் சிங்கள இடதுசாரிகளைக் குதறுவதற்குச் சரியானவொரு தெரிவாக இனங்காணப்படுவதிலுள்ள அரசியலாக விரியும்.இதற்கு மகிந்தா குடும்பம் சரியானதொரு பங்குதாரராக இலங்கை ஆளும் வாக்கத்தின் ஒரு பிரிவுக்குத் தலைமைதாங்குவது உண்மையான யதார்த்தம்.

இந்தியாவுக்கு இனிமேல்தாம் பாரிய அரசியல் சாணாக்கியம் அவசியமாக இருக்கப் போகிறது.அதன் உச்சபச்சத் தெரிவாக இலங்கையை இந்தியா மிகவும் தாஜா செய்து, ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு உடந்தையாக இருக்கிறது.இது, இலங்கையின் பாதுகாப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்காக இலங்கைக்கு இந்தியா தனது போர்த்தளபாடங்களையே தந்துதவுவதாக இருக்கிறது.இதன் பொருட்டு மிக உயர்ந்த போர்த் தளபாடத்தை அது வழங்கும்.அதன்வழி, இனிமேற்காலத்தில் இலங்கை இராணுவத்தைத் தனது அடியாட்படையாகப் பயன்படுத்த இந்தியா இப்போது பலவழிகளில் இலங்கை இராணுவ ஜெனரல்களுடன் தொடர்புகளை வைத்திருக்கிறது.இங்கே,மகிந்தாவுக்குக்கூட இந்தியா ஆப்புவைத்து இலங்கை இராணுவ ஜெனரல்களைப் பதவிக்குக்கொணரும் ஒரு சூழலும் நெருங்குகிறது.இந்த இலக்கை இந்தியா எட்டுவதற்கு அடுத்த தேர்தலிலும் ஆளும் மகிந்தவே ஆட்சிக்கு வருவது அவசியமாகும்.எனவே,யு.என்.பி.யைப் பிளப்பதற்கானவொரு தெரிவையும் இந்தியா செய்வது அவசியமாகிறது.இதைக் கவனப்படுத்துவதோடு இப்போது நிறுத்துவோம்.

புலிகளின் அழிவு, முடிந்த முடிவு:

"மக்களை அழிப்பது இனிவருங்காலத்தில் ஆயுதங்களின்வழியல்ல.
அது பெரும்பாலும்
இந்திய மேலாதிக்கத்தின் பொருளாதார உறவுகளின்வழி நடந்தேறும்."


இலங்கையில் புலிகளைப் பூண்டோடு கைலாசம் அனுப்பிவைப்பது இனிவரும் சூழலுக்கு அவசியமானவொரு இந்திய-ஆசியத் தெரிவு.இது,இந்தியாவினது சரியானவொரு தெரிவாக இருந்தாலும் இந்தியாவை எதிர்த்துப் புலிகளைக் காப்பதற்கு மேற்குலகம் விரும்பவில்லை.நலிந்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளால் இந்தியாபோன்ற நாட்டின் நட்புறவு மிக அவசியமானவொரு பொருளாதார நலன்சார்ந்த தெரிவாக அமெரிக்காவும், மேற்குலகமும் கருதுவதால் புலிகளை எவரும் காப்பாற்ற முடியாது தத்தளிக்கிறார்கள்.புலிகள் எவ்வளவு முயன்றாலும் அவர்களது பழைய எஜமானர்கள் புலிகளுக்குக் கை கொடுப்பதற்கில்லை.இதனால், இன்னுஞ் சில வாரத்தில் பிரபாகரனின் உடலங்கூடக் கிடைக்கவில்லை எனப் பதில் வரும்.இது, கசப்பான உண்மை.கிட்லருக்கு நேர்ந்த அதே கதையை ஈழத்திலும் நமது சிறார்கள் எதிர்காலத்தில் சரித்திரத்தில் வாசிக்கப் போகிறார்கள்!

கடந்தகாலத்தில் புலிகளின் அரசியல் தற்கொலையாக, ராஜீவ் கொலையில் இனம் காணத்தக்க அரசியல் இருக்கிறது.இது,திட்டமிட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிவலையோடு ரோவினால் புலிகளை வலையிற் சிக்கவைக்கப்பட்ட அரசியலாகும்.எனவே, இந்தியாவென்பது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் பொதுவான எதிர்ப்பாத்திரத்தை எப்போதோ எடுத்துவிட்டது. இந்த நிலையில்,எமது மக்களுக்கும்,தேசத்துக்கும் முதற்றரமான அயல் நாட்டு எதிரி இந்தியாவென்பதை மறைத்து,அவர்களை எமது நட்புத் தேசமாகவும்,நமது மக்களின் நலனில் அக்கறையுடைய அண்டை நாடாகவும் புலிகள் தொடர்ந்து நம்மை ஏமாற்றியதன் வினை, இன்று இவர்களின் உண்மை முகம் வெளிசத்துக்கு வரும்போது புலி விசுவாசகளால் சகிக்க முடிகிறதில்லை.அவர்கள் குய்யோ,முறையோவெனப் பதிவிடுவதுவரை நமது வெளியுலக அறிவு கொடிகட்டிப்பறக்கிறது. இந்நிலையில்,தமிழ்நாட்டுத் துக்ளக் சோவினது பாத்திரத்தை வெறும் தனிநபர்-ஒரு சாதியின் நடாத்தைக்குள் இனம் காணும் "படித்தவர்களை"(பல்கலைக்கழகத்துள் குப்பை கொட்டுபவர்கள்) நாம் வலையுலகத்தில் இனம் காணமுடியும்.

நண்பன் யார்,எதிரி யார் என மதிப்பிடுவதில் புலிகளின்வழி சிந்திப்பவர்களுக்கு இன்று
உண்மை வெறுப்பாக இருக்கிறது.எனினும்,எமது மக்களின் இவ்வளவு பெரும் அவலத்துக்கும்
எங்கே ஊற்றுள்ளதென அறிவு பூர்வமாக நாம் சிந்தக இன்னும் முயலவேயில்லை!


இந்தியாவென்றவுடன் தமிழ்நாட்டுக்குள் படம் ஓடும் எமது மனங்களக்கு இந்தியப் பெரு நிலப்பரப்பின் ஆளும் வர்க்கத்தையும் அதன் மனிதவிரோதப் பொருளாதார நலன்களையும் இன்னும் நிசமாகவே புரிந்துகொள்ள முடிவதில்லை.எனவே, கருணாநிதி துரோகஞ் செய்துவிட்டார்,ஜெயலலிதா துரோகஞ் செய்துவிட்டார்கள் எனும் ஒப்பாரி அவர்களுக்கு இழவு ஓலை அனுப்புகிறது.


எங்கள் இதுவரையான போராட்டச் செல் நெறியும்,வெளியுலக அரசியல் தொடர்புகளுமே நம்மை இவ்வளவுதூரம் அவலத்துக்குட்படுத்துகிறது.புலிகளின் இருப்பை அன்று விரும்பிய அந்நிய சக்திகளின் இன்றைய தேவை-நலன் வேறோரு வகைமாதிரியான பொருளாதாரத் தெரிவோடும் அதையொட்டிய உறவுகளோடும் தமது வர்க்கத் தளத்தில் நின்று புலிகளை வேட்டையாடும்போதும், புலிகள் தமது மிகக் கெடுதியான அரசியல் முட்டாள்தனமான பாத்திரத்தை இதுவரை சுய விமர்சனஞ் செய்யவுமில்லை,மக்களைத் தமது தலைமையைத்தாமே தெரிந்து போராட விடவுமில்லை!தமது அழிவோடு அவர்களின் உரிமைக்கான சாவுமணியையுங்கூடவே அடித்துவிடுவதில் தமிழ் ஆளும் வர்க்கங்களின் மனவிருப்பை அச்சொட்டாகச் செய்து, அப்பாவி மக்களையும்,தமது அடிமட்டப் போராளிகளையும் சிங்கள வன் கொடுமை யுத்தத்துக்குப் பலியாக்குவதில் புலிமுனைப்புடன் இருக்கிறது.இந்த முனைப்பு இன்றுவரையும் யுத்தத்தில்தாம் வென்று தமிழீழத்தைப் பெற்றுத் தமிழ்மக்களுக்குக்கொடுப்பதாகவே தம்பட்டம் அடிக்கப்படுகிறது.

இலங்கை அரசின் மிகக்கொடிய யுத்தக்கூட்டோ புலிகளால்கூறப்பட்ட தமிழர்களின் "நட்பு நாடான" இந்தியாவை மிகவும் அணைத்துக்கொண்டு அதை வைத்தே புலிகளையும் அவர்களது பக்கஞ் சாய்ந்த மக்களையும் வேட்டையாடி வரும்போது,இன்னும் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாகவே கருத்துரைக்கிறார்கள்.இவர்கள் மக்களையும்,புலிகளையும் போட்டுக் குழப்புவதுமட்டமல்ல கொடிய போருக்குள் சிக்குப்பட்டுப் பலியாகும் மக்களின் உண்மை நிலையையும் மறைத்து மக்கள் புலிகளுக்குப் பின்னால் மனமுவந்து போராடுவதாகவும் காட்ட முனைகிறார்கள்.

இத்தகைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட புலிகளோ மறுபுறத்தில் மக்களின் அவலத்தை முன் தள்ளி யுத்த நிறுத்தத்துக்கானவொரு சூழலை எதிர்நோக்கி அதற்காவே அரசியல் செய்கிறார்கள்.இது இலங்கையினதும்,இந்தியாவினதும் மற்றும் மேற்குலகத்தினதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வர்க்கங்களின் நலனை மெல்லப் பின் தள்ளிவிட்டு வெறும்"துரோகம்"எனும் தட்டையான வார்த்தையால் இன்றைய போர்ச் சூழலை மையப்படுத்தி மக்களை இன்னும் இத்தகைய தேசங்களை நம்பும்படியும்,இந்தியாபோன்ற தேசம் இனியும் தமிழருக்கு உதவும் எனும் போர்வையில் கருத்துக்கட்டுகிறார்கள்.இது,புலிகளின் அழிவைத் துரிதப்படுத்திவருகிறது.இனிப் புலிக்கு வாழ்வில்லை!

எமது பரமவிரோதி,முதலிலும் முதற்றரமான எதிரி: இந்திய ஆளும் வர்க்கமாகும்!


இந்தியா எமது மக்களின் பரம விரோதியென்பதும் அது தென்னாசியப் பிராந்தியத்தின் கொடிய ஒடுக்குமுறையாளன் என்பதையும் மறைத்தபடி இன்னும் எமது மக்களை நம்ப வைத்து அவர்களது பின்னால் இழுபட்டுப்போக வைப்பதில் இன்னும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாமென்பதை அவர்கள் தமது எஜமானர்களுக்குச் சொல்கிறார்கள்.இறுதி முடிவு நெருங்கும்வரை தம்மை இந்தியா காத்துவிடுமெனும் நப்பாசையில் புலிகளின் தலைமை இருக்கிறது.என்றபோதும் ,நாம் இந்தியாவை முதற்றரமான எதிரியாகவே நமது மக்களுக்கு,குறிப்பாக இலங்கையின் உழைக்கும் மக்களுக்குச் சொல்வதோடல்லாமல் அனைத்துச் சிறுபான்மை இனங்களக்கும் அறிமுகஞ் செய்கிறோம்.தென்னாசியப் பிராந்தியத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசியவினங்கள் விடுதலையடையவேண்டுமானால் முதலில் இந்தியாவின் பாத்திரத்தை மிகக் கவனமாக வரையறைசெய்து அதைப் போராட்டச் செல்நெறியில் பிரதான எதிரியாக (இந்திய ஆளும் வர்க்கத்தை) நிறுவியாகவேண்டும்.உலகத்துக்கு ஒரு அமெரிக்காபோல், தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு இந்தியாவென்பதை இனம் கண்டாகவேண்டும்.இந்தியா ஒருபோதும் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கும் தேசிய இனங்களக்கு நண்பன் அல்ல.தனது சொந்த நிலப்பரப்புக்குள் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக அகண்ட பாரதத்தை வைத்திருக்கும் இந்தியா, படு பிற்போக்கு ஒடுக்கு முறையான பாரிய வன்கொடுமை இராணுவத்தை வைத்திருக்கும் கொடிய ஆளும் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படுகிற தேசமாகும்.


இப்போது ,தமிழீழப் போராட்ட வரலாறில் புலிகளின் அழிவு தற்செயல் நிகழ்வல்ல.புலிகளது
வர்க்க உறவும் அவர்களது தளமும் அதைத் தீர்மானிக்கிறது.இதற்கு வெளியே அவர்கள் இறங்க
முடியாது.அப்படி இறங்க அவர்களது இன்றைய நிலை விடுவதற்கில்லை.

எனவே,மக்களின் அழிவில் தமது இருப்புக்கானவொரு யுத்த நிறுத்தம்வரை அவர்கள் தொடர்ந்து இந்திய விசுவாசத்துக்காகத் தமிழ்நாட்டைத் தமது பினாமிகள் ஊடாக உசுப்பிவிடவே முனைவதில் குறியாய் இருக்கிறார்கள்.இதைகடந்து இந்தியத் துரோகத்தைத் தோலுரித்து, நமது மக்களைச் சுயமாகப் போராட அனுமதிப்பதில் தமது எதிர்கால இருப்பை அவர்கள் இழக்கத் தயாரில்லை.இதுவே,நமது மக்களின் மிகப் பெரும் அவலமாகும்.எனினும்,இன்றைய தமிழகத்தின் போராட்டவுணர்வு, தீயில் உயிர் நித்துவிடுவதுவரை மேலெழுகிறது!இது,இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசியல்-இராணுவப்போக்கால் நிகழ்ந்துவரும் இனவெழிச்சி!இதைத் தாண்டித் தமிழகக் கட்சிகள் தமது அரசியல் இருப்புக்கான திசைவழியில் இவ் வீரமரணத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள்.இதை வேறுபடுத்தித் தமிழகத்து மக்கள் தமது போராட்டத்தை தமிழகத்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவுஞ் செய்து, அவர்களையும், அவர்களது கள்ளக் கூட்டுக்களையும் அம்பலப்படுத்தி ஈழமக்களுக்கான ஆதரவுப் போரை முன்னெடுப்பார்களாவென்பது பெரும்பாலும் தமிழகத்துப் புரட்சிகரக்கட்சிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.


இந்த நிலையில் இந்தியாவின் பாத்திரத்தை இதுவரை புலிகள் மறைத்து வருகிறார்கள்.இந்தியா நமது நட்புத் தேசம் என்கிறார்கள்.இது,தம்மை முற்று முழுதாக அழிக்க முனையும் நமது மக்களின் எதிரிகளைப் புலிகள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் மக்களுக்கு எமது நண்பர்களாக இதுவரை உரைப்பதும், அதன் தொடரில் துரோகம் எனக் குறுக்கியும் வருகிறார்கள்.இந்தியாவின் பிராந்திய நலனை அம்பலப்பத்தி, அதற்கெதிராக மக்களைத் திரட்டாத கடந்தகாலத் தவறு இப்போது இந்தியாவின் பாத்திரத்தைத் துரோகம் என்பதோடு நிறைவடைகிறது! இவர்களை எதிரியாக வரையறுத்துப் போரை முன்னெடுக்க மறுப்பதும் புலிகளால் தமது உடமை இருப்பை இழக்கமுடியவில்லையென்பதையே காட்டுகிறது.இலங்கை அரசு இவையாவையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து புலிகளைப் பூண்டோடு அழிப்பதில் அவர்களது எஜமானர்களிடமிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறது.இதன் தொடர் விருத்தியே இன்று நமது மக்களின் தலைகளில் செல்களாக விழுந்து வெடிக்கின்றன.இதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகச் சகஜமே.ஈழத்தைவிட ஆயிரம்மடங்கு பாலஸ்த்தீனத்தில் படுகொலையைக் கட்டவிழ்த்த இஸ்ரேலை வேடிக்கை பார்த்த இந்த உலகம், நம்மையும் அதே பார்வையில் வேடிக்கையாக அணுகுவதில் நாம் நொந்தென்ன நோகாதிருந்தென்ன?அனைத்தும் ஒன்றே!


என்றபோதும்,நமது கண்ணீரை வழமைபோலவே இடதுசாரிய ஊடகங்களே உண்மையோடு அணுகின்றன.இங்கே,நமது மக்களின் குருதிசிந்தும் வாழ்வை நாணயத்தோடு யுங்க வெல்ற் எனும் இடதுசாரியத் தினசரி எழுதுகிறது.நாம் மிகவும் ஒடுக்கப்பட்டுவரும் இந்த வேளையிற்கூட நமது மக்கைப் பெரிதும் மதிக்காது போர்மூலம் போக்குக்காட்டும் அரசியலை இந்தியா செய்து, தமது பிராந்திய நலனை- பொருளாதார வளத்தின் உறுதிப்பாடுகளைக் காக்க முனைவதில் கவனமாகக் காய் நகர்த்துகிறார்கள்.இதன் தொடரில் பிரணாப் முகர்ச்சி இலங்கை வந்து அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகளைச் சந்தித்துக் குசலம் விசாரித்துச் செல்கிறார்.இதையே தமது வெற்றியாகக் கருணாநிதியும் அவரது கட்சியும் கொண்டாடுகிறது.வர்க்கம் வர்க்கத்தோடு சேர்ந்தே அரசியல் செய்யும்!இதுதாம் வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் என்பது!


எனவே,இலங்கையில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இந்திய-ஆசியக் கூட்டுக்கள் வற்புறுத்தும் இந்தப் போர்ச் சூழலில் புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டபின் நமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைக்கடந்த அரசியல் கோரிக்கைகள் இரண்டாம்பட்சமென்பது அனைவருக்கும் புரியும்.எனவே,மக்கள் வயிற்றுப்பாட்டிற்குத்தாம் முதலிடம் கொடுப்பார்களேயொழிய சுயநிர்ணயப் போருக்கு அல்ல.வன்னியில் இவ்வளவு மோசமாக யுத்தத்தால் பாதிக்கப்படும் இந்த மக்கள் ஒருபோதும் போரை விரும்பார்.இதுவே,இந்திய-இலங்கையின் இன்றைய வெற்றி.இதைப் புலிகளே சாதித்துக் கொடுக்கின்றார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
29.01.2009

+++++++++ +++++++++++ ++++++++++++

தீயிட்டு மாய்ந்துபோவதற்குமுன் தியாகத் தமிழர் முத்துகுமாரன் எழுதிய வாக்கு முலம் இதுவென்கிறார்கள்:



Anonymous said...


Pls
Publish this for your viewers.


தீக்குளிக்கும் முன்பு முத்துக்குமார் அளித்த மரண வாக்குமூலம் - முழு விவரம்வியாழக்கிழமை, ஜனவரி 29,
சென்னை: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.
முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.
தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).
பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!
இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.
உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!
விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!
ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.
'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.
என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?
சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.
ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.
டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.
தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.
ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?
ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.
சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.
அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.
ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?
புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?
தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.
ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.
ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!
இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.
அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

3 comments:

Anonymous said...

"எனக்கென ஒரு வீடில்லாமல், நாடில்லாமல் என்னை நீங்கள் அழிக்கும்போது உங்கள் வீட்டையும் நாட்டையும் அழிப்பதைப்பற்றி நானும் யோசிக்கிறேன்".

இந்தியாவிற்க்கு இது புரியவேண்டும்!!!

மிக்கி மௌஸ் said...

"நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்.....
அஞ்சி அஞ்சி சாவார் இவர்........"

தமிழக மக்களை மிகச் சரியாக கணித்திருக்கிறார் பாரதி....

ம்ஹும்! மனமுடைந்து வருந்துகிறேன், உயிர் துறந்த நண்பருக்காக.

Anonymous said...

தம்முயிரை ஈழமக்களுக்காக கொடுத்த அந்த முகம்தெரியா தோழனுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்.
இவர் தெரிவு செய்தபாதை மிகத்தவறானது. ஆனால் அவருடைய தியாகம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. போலி இனமான வெள்ளைச் சட்டை காடையர்களை நன்றாகவே தன்னுடைய வாக்குமூலத்தில் தோல்லுரிந்துக் காட்டியுள்ளார்.
இன்று அனைத்து சுரண்டும் சக்திகளினால் நடத்தப் படும் ஆக்கிரமிப்புப் போரில் புலிகளின் அதிகார வர்க்கம் என்பது அழிவது பற்றிய பிரச்சனையாகவே எல்லோரும் பார்க்கின்றனர். இந்த நிலையில் தோழர் ரயா/ சிறிரங்கன் போன்றவர்கள் இன்றைய காலத்திற்கான போராட்டப் பாதையை மக்கள் முன் வைத்து வழிநடத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

குறைந்த பட்சம் போலிகளை அம்பலப்படுத்த குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை முன்வைத்து ஒரு வெகுஜனப் போராட்டத்தை இங்கு தொடங்குவது அவசியமாகின்றது. இது புலிகள் அல்லாத நிலை ஏற்பட்டால் கூட நீங்கள் காட்டும் பாதை போலிகளை மக்கள் அரங்கில் இருந்து அம்பலப்படுத்தும்.;

நிபந்தனை இன்றி யுத்த நிறுத்தத்தை கொண்டுவரல்
படைகளை எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் உட்டபக் கூடாது என வரையறை செய்து கொள்ளல்.
மருத்துவ வசதிகளை செய்தல்;
நிவாரண மக்களுக்கு சென்றடைதல் வேண்டும்சூ

பேச்சுவார்த்தை மேசைக்கு அனைத்துப் பிரிவினரையும் அழைத்தல்
புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்ற ஒற்றைக் கோட்பாட்டை கைவிடக் கோரல் '
மக்களை தமக்கான பிரதிதிகளை தெரிவு செய்யும் உரிமையை வழங்கள்
புலிகள் எவ்வித பழிவாங்கல் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்திக் கொள்ளல்.

பேச்சுவார்த்தை
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல்
வட- கிழக்கு இணைப்பு
அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து இனங்களுக்குமான சுயநிர்ணயத்தை அங்கீகரித்தல்.
இவைகள் சில இன்றும் சேர்ந்துக் கொள்ளலாம்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...