Sunday, December 31, 2006

வருமாண்டைக் குறித்து...

வருமாண்டைக் குறித்து...


அன்பு வாசகர்களே,
அருமை நண்பர்களே-தோழர்களே!
இன்றும் தொலையும் 2006,
இனியும் வரக் காத்திருக்கும்
ஒரு புது வருடத்தில்
புலம்புவதற்குப் பல இருக்கின்றன.

பசியும் பட்டுணியும்
பாருக்குள் கொலையும்,அநீதியும்
பண்டத்தைக் குறித்தே...

இவை அநுதினம் மலிய
அன்பாய்-ஆதரிப்பாய்
எப்படி அளவளாவ?

இருந்தும்,
ஒரு செக்ற்(உவையின்) போத்தலைத்
தனிமையில் திறந்தபோது
"நான் சமைக்க இருக்கிறன் நீ குடி"என
என் தோழி-துணைவி புலம்ப
புது வருடம் வரப்போகுது.

வெடிகள் கொஞ்சம் வேண்டினேன்
என் மழலைகள் மகிழ்வதற்கென!
எல்லாம் சேர்த்து,
பதினைந்து பொருள்களென
என் சின்னவன் கல்குளேற்றரில் பார்த்துச் சொன்னான்.
அவர்கள் வெடிப்பதற்குத் தயாராக...
நான் இரவு பன்னிரெண்டுவரையும் பொறுக்கச் சொன்னேன்.

இதுதாம் நமது
மகிழ்வு,அழுகை,வருத்தம்,தைப் பொங்கல்,
எல்லாம்!

உங்களோடு
உறவாடும் ஒரு பொழுதைத் தவிர
எனக்கென்று எந்த விருப்புமில்லை!


இந்தவுலகத்தில்
மானுடம்
அமைதி,சாந்தம்
இன்பம்,
சுகம்
இதயம் மலர்வாய்
இருப்பதைத் தவிர
எதுவும் நாம் கேட்கவில்லை!


எல்லோரும் இன்புற
இனியவொரு உலகைத் தவிர
எது வேண்டும் எமக்கு?


நானொரு குடிகாரன்.
நல்லதற்காய்,
கெட்டதற்காய் நடுச் சாமத்திலும் குடிப்பேன்.


குடிப்பதனால்
வாழ்கிறேன்,
குரைப்பதனால் நோகிறேன்.


எனக்கும்
நாய்க்கும்
வித்தியாசம் உருவத்தில்...


எல்லாம் தொலைக!


இதயம் மலர்வாய்
இருப்பவர் வாழ
ஏனிந்தவுலகம் எதுவும் செய்வதில்லை?


என்றபோதும்
ஒரு "குடி"பொழுதில்
ஏதோவொரு பாசத்தோடு
எல்லோருக்கும்
அன்பு,அமைதி,ஆரோக்கியம் சேர
வரும் புத்தாண்டு பொறுப்பாக
வாழ்த்துகிறேன்!


போதும்
என் புலம்பல்,
போதை ஏறும் தரணமிது;
பொல்லாத உணர்வு பிதற்றச் சொல்லும்.

"................................"

எனவே,
சந்திப்போம் தொடர்ந்து,
இன்புற்றிருங்கள்!

உலகில் எதுவும் நடக்கும்,
எம்மால்
முடிந்தது...

நட்போடு,

ஸ்ரீரங்கன்.
31.12.2006.

Saturday, December 30, 2006

படுகொலை செய்யப்பட்ட சதாம் !

படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்...


கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன?


1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.

2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.

3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி பேசுபவர்கள் யாபேரும் ஒரு தேசிய இனமல்ல.

4:எண்ணை வயல்களைச் சொந்தமாக்கிய அரேபியர்கள் எந்தச் சொத்துமற்ற அரேபியர்களுக்கு பாதுகாவலர்களில்லை.

5: எண்ணை டொலர்களே ரிம்மில் ஓடும் அமெரிக்கப் பாசிச இராணுவத்தின் இருப்புக்கு மிக உந்து சத்தியாகும்.

6: உலக ஏகாதிபத்தியத்தின் கனி வளத் தேவைக்கு எந்தத் தேசத்தின் இறமையும் ஒரே நொடியில் சிதைக்கப்பட்டு,பிற தேசங்களின் வளங்களை ஒட்டச் சுரண்டும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலதனம்.

7:இந்த ஒழுங்குக்காகவே தமது அடிவருடிகளைப் பயன்படுத்தும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் பிற சமூக ஏகாதிபத்தியங்கள்,அந்த அடிவருடியைத் தமது தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் கொலைகளைச் செய்வதற்குக் தூண்டித் தேவையுருவாகும்போது அதையே காரணமாக்கித் தமது அடிவருடியைக் கொல்லவும் முனையும்(இந்த இடத்தில் இந்தியச் சமூக ஏகாதிபத்திய-தரகு முதலாளியத்தை ஞாபகப்படுத்துவோம்:இந்திய ஆளும் வர்க்கம் புலிகளின் தலைவரைக்கொண்டே அநுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களை வெட்டிக் கொலை செய்ய வைத்தது.இராஜீவ் காந்தியையும் படுகொலை செய்வித்தது.இது பல நேரங்களில் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு மிக அவசியமானதாக இருக்கிறது).

மக்கள் இந்தக் கொடுமையான முதலாளித்துவ உலகில் வர்க்கங்களாக இருக்கிறார்கள்.வர்க்கச் சமுதாயமாக இருக்கும் மக்கள் கூட்டத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமே.

இந்த அடிப்படையிலேயே உலகத்தின் வளங்களைச் சுருட்டி வைத்திருக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும் பான்மையான மக்களை அனைத்து வகை ஒடுக்குமுறை அலகுகளாலும் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள்.அதை இங்கே பார்க்கவும்.

மக்களின் விபத்தாக உருவாகிய அனைத்துப் பிரத்தியேகியக் கூறுகளையும்(மொழி,மதம்,பண்பாடு)கூர்மைப்படுத்தி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் பகையாக்கி இன-மதப் போர்களை உருவாக்கித் தமது சுரண்டலை நிறுவிக்கொள்ளும் இன்றைய நவ பாசிஸ்ட்டுக்கள் ஜனநாயத்தின் பெயரால் மக்களைக் கொன்று குவிப்பது தமது தொழிற்சாலைகளுக்கு வளங்களை-மூலவளங்களைத் தொடர்ந்து தங்கு தடையின்றிக் கிடைப்பதற்கே!


சதாமின் கொலையை ஆதரிப்பதற்காக ஒரு சிறுபான்மைச் சனத்தை அமெரிக்கா தனது தேவைக்கேற்றபடி தயாரித்துப் படம் காட்டுகிறது.இது ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்தச் சிறுபான்மை இனத்தின் உரிமையைப் பயன்படுத்துவதாகும்.

1965-1970 ஈராக் சிரியா மற்றும் குர்தீஸ் போராளிகளுக்கிடையிலானB-1 இரக யுத்தம் கூடவே 1974-1975,மற்றும்1976-1979 வரையான ஈராக் குர்தீஸ் பிரிவனைவாதப் போராளிகளுக்குள் இடம் பெற்ற B-2 வகையிலான யுத்தம்கூட அமெரிக்க அரசின் தூண்டுதலோடுதாம் நடை பெற்றது.

இது போலவே 1980 இல் நடைபெற்ற ஈரான்,ஈராக் யுத்தம் C-2 வகையிலானது,இதுவும் அமெரிக்க-ருஷ்சியப் பலப் பரீட்சையாகவே இந்த மண்களில் நடைபெற்றது.

இத்தகைய இன்னொரு யுத்தமானது 1961 இல்B-1 இரகம், அமெரிக்காவுக்கும் இருஷ்யாவுக்குமானதான யுத்தமாக எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியாவுக்குமான சுதந்திரப் போராகப் படம் காட்டப்பட்டு பல இலட்சம் மக்கள் பலியாக்கப்பட்டதற்கும் இந்த அமெரிக்காவே முதல் காரணமாக இருக்கிறது.


ஈரக்கின் முன்னாள் அதிபர் சதாமைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமைகிடையாது.அது சதாமால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஞ்சரி அல்லது சதாமின் தேசத்து மக்களுக்குஞ்சரி இந்தக் கடமை இல்லை.

சதாம் மக்களின் உண்மையான அதிகாரத்தின் முன் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்.அவரை எந்த அதிகாரத்தினதும் முடிவும் கொல்வதற்கு தீர்ப்புக் கூறமுடியாது.இது எந்த வர்க்கத்தின் நலனுக்கும் பொருந்தும்.மக்கள் விரோதிகளைத் தூக்கில் போடுவதல்ல மக்கள் நலனின் நோக்கு.எதிரியையும்,அவ(ள்)ன் வாழும் உரிமையைக் காத்து ,அந்த எதிரியின் வாழ்வைத் திருத்துவதே மக்களினதும் ஜனநாயகத்தினம் உண்மையான நோக்காக இருக்கும்.இதுதாம் இன்றைய புதிய ஜனநாயகக் கோரிக்கைகளில் அதி முக்கியமான மனிதவுரிமைக் கோரிக்கையாகும்.


இந்த நோக்கற்று சதாமின் இருப்பை இல்லாதாக்குவது அமெரிக்க அதிகாரத்தினதும்,அவர்களினது தேசம் கடந்த ஆதிக்கத்தினதும் மிகக் கொடுமையான அச்சுறுத்தலாகும் இது.இத்தகைய கொலைக்கூடாகத் தம்மை எதிர்க்கும் எந்தத் தேசத்துத் தலைவர்களுக்கும் இதுவே கதியென்ற மனோவியல் தாக்குதல் இதுவாகும்.தமது சுரண்டல் நலனுக்குக்கு குறிக்கே நிற்கும் தேசங்களுக்கும்,அந்த் தேசத்து வளங்களைக் காக்க முனையும் அரசுகளுக்கும் அமெரிக்க-ஐரோப்பிய முதலாளிகளால் விடப்படும் மிகப் பெரிய கொலை அச்சுறுத்தல் இதுவாகும்.

இந்தத் திமிர்தனமான அதிகாரம் அமெரிக்க முதலாளித்துவத்தோடு இணைந்த உலகத்தின் அனைத்து முதலாளிய நாடுகளுக்கும் விடப்படும் அச்சுறுத்தலாகும். அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு எதிராக இத்தகைய நாடுகளின் அரசியல் மாற்றமுறுமானால் அத்தகைய நாடுகளை அமெரிக்க-ஐரோப்பியர்களான நாம் சதாமின் நிலைக்கு உந்தித் தள்ளுவோம் என்று அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் விடும் சவால் இது!


இதை மீறிய எந்தத் தேசத்தின் முடிவும் இந்த ஈராக்கின் நிலைக்கு மாறியே தீருமென்று உலகப் பகாசூரக் கம்பனிகளின் அடியாளாகிய அமெரிக்கப் பயங்கரவாத அரசினூடாக இன்று உலக மக்களுக்கும், அவர்களின் இறைமைக்கும்,அவர்களின் தேசங்களின் வளங்களுக்கும் விடப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் இது.


இத்தகைய உலகப் பயங்கரவாதக் கம்பனிகளால் மக்களின் நலன்கள் எங்ஙனம் இல்லாதொழிக்கப்படுகிறதென்பதை பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை.உலகமயப் பொருளாதாரத்துக்கு முன்பே இவர்களின் காலனித்துவக் காட்டுமிராண்டித்தனங்களையும்,கொலைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.உலகத்தின் எத்தனையோ யுத்தங்கள்,அழிவுகள்,அணுக் குண்டுத் தாக்குதல்கள் யாவும் மிகப் பெரும் உண்மையை நமக்கு உணர்த்தி நிற்கின்றன.அவை இந்தக் காட்டுமிராண்டித் தனமான முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையென்ற மக்கள் விரோதத் தனியுடமைச் சர்வதிகாரத்தின் சர்வ வல்லமை படைத்த பாசிச வெளிப்பாடே.


அன்றைய கொலம்பஸ் முதல் இன்றைய ஜோர்ச் புஷ்வரை முதலாளித்துவ நலன்களுக்கான-தனியுடைமைச் சுரண்டலுக்கான அடியாட்களேயென்பது நாம் அறிய வேண்டிய உண்மையாகும்.இந்தப் பேய்களின் பின்னே தங்கு தடையின்றி சுரண்டிக்கொண்டிருக்கும் பாரிய தொழிற்கழகங்கங்கள் சதாமைமட்டுமல்ல இப்படி பல கோடி சதாம்களை-மக்களை தமது கனிவளத் தேவைக்காக நாளாந்தம் கொன்று குவித்து வருகிறது.

ஈராக்கின் எண்ணை இருப்பானது 490 கோடிகள் தொன்களாக இருக்கிறது.இது இன்னும் பத்தாண்டுகளுக்குள் கொள்ளையிடப்பட்டு விடும்.ஈராக்கைவிட ஈரானில் கிட்டதட்ட 780 கோடிகள் தொன்களுடைய எண்ணையிருப்பு இருக்கிறது.இதையும் கண்ணைத் துருத்திக்கொண்டு கொத்துவதற்குத் தயாராகும் அமெரிக்கக் கழுகு ஈரானியப் பிரதமரையும் வேட்டையாடக் காத்திருக்கிறது.

சதாம் என்பவர் பாசிச வாதியென்பதும் மக்கள் விரோதியென்பதும் ஒரு புறமிருக்கட்டும்.ஆனால் அவரொருவர் மட்டுமேதாம் ஈராக்கிய நாட்டின் எண்ணைக் கிணறுகளைத் தனது சொத்தாக மாற்றாமல் தன் தேசத்துச் சொத்தாக மாற்றியவர்.அரபு நாடுகளில் பெரும் பாலும் அனைத்து எண்ணை வயல்களும் தனியுடைமாயாகவும், பெரும் எண்ணைக் குடும்பங்களாக இருக்கும் சில அரபுக் குடும்பங்களுக்குச் சொத்தாக இருப்பதால்,இத்தகைய தேச விரோத அரேபியர்கள் எண்ணையால் வரும் முழுப் பணத்தையும் உலக வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.இப்பணம் பல பத்தாயிரம் றில்லியன்கள் டொலராகும்.இந்தப் பணமே அமெரிக்க ஆதிக்க இராணுவத்துக்கு தீனிபோடுவதற்குடைந்தையாக இருக்கிறது.அரபுத் தேசங்களை சில குடும்பங்களே ஆளுகின்றபடியால் தமது பணங்களை அமெரிக்கா தனதாக்கி விடும் என்ற காரணத்துக்காக தமது அயல் தேசத்தில் எது நடந்தாலும் மூச்சு விடாமல் இருக்கின்றன, பல அரப்புத் தேசங்கள்.இங்கே வர்க்க நலனே முதன்மையானது.மற்றும்படி முஸ்லீம்,அரபு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து இவர்களுக்கு.

உலகத்திலுள்ள எண்ணைச் சுரண்டல் கம்பனிகள் ஏழு.இவற்றுள் 5 பெரும் எண்ணைக் கொன்சேர்ன்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும்.ஒன்று இங்கிலாந்து மற்றது அங்கேலோ-கொல்லாந்துக்குச் சொந்தமானது.மற்றெல்லாம் நடுத்தரமான சிறியவை.அவைகள் இந்தப் பெரும் பகாசூரக் கம்பனிகளால் மட்டுமே உயிர் வாழும் தகமையுடையவை.அமெரிக்காவின் எக்சோன்((Exon) மற்றும் அங்கேலோ- கொலன்ட் செல்(anglo-Hollaend Shell)உலகின் அனைத்து எண்ணை வயல்களையும் ஆளுகிறது.இவையேதாம் உலகத்தின் எண்ணை விலையைத் தீர்மானிக்கின்றன-சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன.இங்கேதாம் சதாம் குறுக்கே நின்றார்.அவர் தனது தேசத்தின் ஆளுமைக்குள் சந்தையைச் சுதந்திரமாக்க முனைந்தார்.அந்தோ அவர் கதையும் முடிந்தது.British Petrileum Company(BP)பிரித்தானியாவின் அரச நிறுவனமாகும்.எனவேதாம் எண்ணைச் சந்தை முரண்பாடுகள் உருவாகியபோது இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் வின்சன் சேர்ச்சில் பீ.பியை தேசப்பற்றுடைய நிறுவனமாகவும் செல் எண்ணை நிறுவனத்துக்கு மாற்றாகவும் சொன்னது ஞாபகம்.(அந்தோனி சிம்சன்: ஏழு சகோதரிகள் ஆங்கலப் பதிப்பில் எப்போதோ வாசித்ததாக ஞாபகம்.)

சதாம் அமெரிக்கா சொல்வது போன்று தன்னிச்சையாக மக்கள் விரோதியாக வாழ்ந்தவர் அல்ல.சதாமை உருவாக்கியது அமெரிக்காவே.சதாம் தனது இறுதிக் காலங்களில் அமெரிக்காவின் அடிவருடியாகச் செயற்பட மறுத்தபோது அவர் ஈராக்கின் வளங்களைத் தேசத்தின் வளமாக்க முனைந்து, அமெரிக்க அடிமைத்தனத்துக்கு குறுக்கே நிற்க முனைந்தார்.அதுவே அவரது அழிவுக்குக் காரணமாகவும் மாறியது.இங்கே ஈராக்குக்கு ஆதரவாக எழுந்த மக்கள் எழிச்சியையோ அல்லது ஜனநாயகக் குரல்களையோ அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு பொருட்டாக மதிக்காது, ஈராக்கை வேட்டையாடியது.இந்தப் படிப்பனவு அமெரிக்காவை வலுவான வகையில் ஆயுதம் மூலமாகப் பாட்டாளிய வர்க்கம் எதிர்காதுபோனால் இந்தப் புவிப்பரப்பில் உயிர்கள் நிலைக்க முடியாதென்பதே இன்றைய மிகப் பெரும் உண்மையாகும்!

இதற்குச் சதாம் அவர்களின் இன்றைய வாழ்வும் சாவும் நல்ல உதாரணமாகிறது.

அமெரிக்கா என்பது உலகப் பாசிசத்தின் அதியுச்சக் கொடுமுடியாகும்.இந்த அமெரிக்கா மனித சமூகத்துக்கே எதிரான விசச் செடியாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.2006





Tuesday, December 26, 2006

சுனாமியைச் சொல்லியழ...

சுனாமியைச் சொல்லியழ...

ஒவ்வொரு நிகழ்வும்,அது துக்கமானதாகவிருந்தாலென்ன மகிழ்ச்சியானதாகவிருந்தாலென்ன அனைத்தும் இலங்கையில் சம்பிரதாயமாக மாறிவிட்டது!வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதவுணர்வுகளுக்கு எவரால் கொடுக்க முடிந்தது?இன்றைய இலங்கையில் சுனாமியலையால் அழிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு எந்தவொரு கட்சிக்கோ அல்லது இயக்கத்துக்கோ அருகதையுண்டா?மக்களின் மீதேறி யுத்தச்சவாரி செய்யும் இலங்கையரசுக்கோ அல்லது புலிகளுக்கோ இந்தத் தார்மீகக் கடமையைச் செய்யும் அருகதையுண்டா?எத்தனை தலைமுறை சென்றாலும் நீங்கா நினைவாக நெஞ்சில் நெருடும் இந்தச் சுனாமி அழிவானது, எம் தேசத்துக்கு மட்டும் சொந்தமில்லாத முழுவுலகுக்குமே பொதுவான நினைவு நாளாக இருக்கிறது.இங்கே கட்சி இயக்க வாத நலன்களைக் கடந்து, மக்களால் நினைவு கோரவேண்டிய இந்தக் கோரச் சம்பவத்தை, யுத்தத்தையே தொழிலாகக் கொண்ட அரசுகள்,கட்சிகள்-இயக்கங்கள் நினைவுகூர்ந்து தம்மை மக்களின் நண்பனாக்க முனையும் கபடத் தனத்தை என்னவென்பது!

கடந்த ஈராண்டுகளுக்கு முன் பல பத்தாயிரம் பிஞ்சுகள் சுனாமிக்கு இரையானபின் நடந்தேறிய இலங்கை அரசியலானது மிகவும் கீழ்தரமானது.அது மக்களின்-அழிந்தவர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்த முனைந்ததேயொழியப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு மீள் நிர்மாணப் பணியையும் செய்யவில்லை.மக்கள் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியான கொடூரத்தைப் பக்கம் பக்கமாகக் காட்டிப் பணம் சம்பாதித்தவர்கள், இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை யுத்த்தால் கொன்று குவித்து வருகிறார்கள்.இவர்களின் மிகக் கேவலமான யுத்த முனைப்பால் வாகரையில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயர்ந்து அவலப்படும் இன்றைய பொழுதிலும்,யாழ்ப்பாணத்தில் அப்பாவி மக்கள் உண்ண உணவின்றிச் சாவதே மேலென்று ஒப்பாரியிட்டு,சிக்கன் குனியா நோய்க்குள் வதங்கும்போதும் யுத்தமே மக்கள் தலையில் குண்டைப்போட்டுக் கொல்லும்போது, இந்தச் சுனாமியில் செத்தவர்கள் பற்றிய புலிகளினது,இலங்கை அரசினது நினைவு கூரல்கள் எல்லாம் வெறும் வெற்றுத்தனமான சடங்கு நிகழ்வாகவே மாற்றப்படுகிறது.அப்பாவி மக்களை யுத்த ஜந்திரத்துக்குப் பலியாக்கி, அவர்களை மீளவும் கொன்று குவிக்கும் கட்சி-இயக்க நலன்கள் இலங்கைத் தேசத்து மக்களின் எந்த நலனையும் காக்கும் குடிசார் நலன்களை முதன்மைப் படுத்தவில்லை.மாறாக மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்தெறிந்து, அவர்களைப் பட்டுணிச்சாவுக்குள் தள்ளிவிட்டு,சுனாமியால் செத்தவர்களுக்கு இரங்கல் உரை நிகழ்த்துவது மகாக்கொடுமையிலும் கொடுமை!

இன்றைய நிலவரப்படி இந்த யுத்தமானது தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் அவர்களின் வாழ்விடங்களைவிட்டொழுப்பியுள்ளது.இந்த யுத்தப் பேய்களால் பல்லாயிரம் மக்கள் நோய்கும்,பசிக்கும் இரையாகிவருகிறார்கள்.இடம் பெயர்ந்தலையும் மக்கள் ஒண்டுவதற்கு இடமின்றி அநாதைகளாகக் காட்டில் அலைகிறார்கள்.அப்படிக் காட்டில் தஞ்சமடைந்த மக்களை இலங்கையரசின் குண்டுகளும்,புலிகளின் பொல்லாத செல்லடிகளும் கொன்று குவித்துவருகிறது!எவரிடமும் முறையிடமுடியாத மக்கள் தம்முயிரைக் கையில் பிடித்தபடி மரணப் போராட்டம் செய்கிறார்கள்.இத்தகைய வாழ் சூழலை மக்களுக்கு வழங்கும் கொடூரமான அரசும்,புலிகளும் செத்தவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனமானது.

யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் பேசுகிறோமென்று சொல்லிக்கொண்டே யுத்தம் செய்து, மக்களைக் கொல்லும் இந்த அரசியலானது இன்று நேற்றுத் தொடங்கிய கதையல்ல!

இது, சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே கதையோடே யுத்தம் செய்து மக்களைக் கொல்கிறது புலியும்,சிங்கமும்!.மக்களை ஏமாற்றிக் கொலை புரியும் இந்த அரசியல், உயிர் வாழும் அப்பவிகளை இன்னும் ஒருபடி மேலே சென்று தமது பேரத்துக்காகப் பட்டுணி போட்டுக் கொல்லும் கொடூரம் இப்போது முனைப்பாக நடைபெறுகிறது.இன்றைய யாழ்ப்பாணத்து மக்கள் யாழ்பாணத்தைவிட்டு இடம் பெயரவும் முடியாது,பசிக்கும் நோய்க்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்வதே மேலெனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்!இந்தவுண்மையைப் பாதிக்கப்பட்ட மக்களே கண்ணீரோடு கதிறிப் போனில்(தொலைபேசி) அழும்போது, நமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!

யாழ்ப்பாண நகரில் சீனியின்றிப் பரித்தித்துறைக்குச் சென்று, கால்கிலோ சீனிக்கு 100.ருபாய் கொடுத்து வேண்டப்படுகிறது.ஒரு லீட்டர் தேங்காய் எண்ணை 1400.ரூபாய்க்கும்,மாவு 350 ரூபாய்க்கும்,அரிசி 300 ரூபாய்கும், கத்தரிக்காய் கிலோ 400.ரூபாய்க்கும்,மீன்1400.ரூபாய்க்கும் கிலோ விற்கப்படும்போது, எவனால் யாழ்ப்பாணத்தில் வாழ ழுடியும்?உலகத்தில் பெரும் படைப்பலம் முடைய இந்தியா-சர்வ வல்லமை பொருந்திய இந்தியா இலங்கை அரசியலில் இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கு இன்னும் எண்ணையூற்றி வருகிறது.மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.அதைச் செய்ய வேண்டிய தரணத்தில் உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனினும், இலங்கை அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகளைத் தத்தமது இயக்க-கட்சி அரசியல் நலனுக்காகப் புலிகளும்,இலங்கையை ஆளும் கட்சிகளும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்.அப்பாவிகளின் அடிப்படையுரிமைகளைப் பறித்து அவர்களை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் மக்களின் மிகப்பெரும் துயரத்தைத் திரைபோட்டு மறைக்கிறது.யாழ்பாணத்திலும்,வாகரையிலும் மக்கள் செத்து மடியும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மூதூரில் ஒத்திகை பார்த்த மாபெரும் மனித அவலம் இப்போது தேசமெங்கும் அரங்கேற்றப்படுகிறது.அப்பாவி மக்களை இனத்தின்-மதத்தின் பெயரால் கொன்றுபோட முனையும் இந்தப் போராட்ட அரசியலைத் தடுப்பதற்கான எல்லா வகை அரசியல் நகர்வையும் நாம் ஆற்றவேண்டிய மிகக் கடினமான சூழலில் இருக்கிறோம்.

சமாதானம்,
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பேச்சு வார்த்தையென்று இந்தப் பயங்கரவாதிகள் பூச் சுற்றும் அரசியலில் உண்மையில் மக்களின் நலனைப் பின்தள்ளிய இயக்க-கட்சி நலனே முதன்மையுறுகிறது.இவர்கள் நடாத்தும் இந்த நாடகத்தை சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்:

"நாம் சமாதானத்தின் கதவுகளை அடைத்து விடவில்லை.சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பாதைகளை மூடிவிடவில்லை.சமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால் நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.சமாதானத்தை தோற்றுவிக்கும் நல்லெண்ண நோக்குடன் இங்குவரும் சமாதானத் தூதுவர்களை நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்று வருகிறோம்.போரை நிறுத்தி,சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாண எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறதென்பதை நாம் இவர்களுக்கு மேலும் மேலும் வலியுறுத்தி வருகிறோம்.எமது நல்லெண்ணத்துக்குச் சான்றாக சமாதானச் சமிஞ்சிகளை காட்டவும் நாம் தவறவில்லை."(08.03.1994 அனைத்துலகப் பெண்கள் தினத்துக்கான பிரபாகரனின் அறிக்ககை.-எரிமலை ஆனி 1994.பக்கம்:14.)

இந்தக் கூற்றைக் கடந்த மாவீரர் தினவுரையிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.ஏன் ஒவ்வொரு மாவீரர் தினவுரையிலும் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.ஆனால் இவர்கள் சொல்லும் மக்களுக்கு, இவர்கள் என்ன நீதியைக் கொடுத்துள்ளார்கள் இன்றுவரை?இவர்களே சமாதானம் என்று அடிக்கொரு தடவை சொல்லிக்கொண்டு, இன்று வரை மக்களுக்கெதிரான யுத்தங்களைச் செய்கிறார்கள்.என்னவொரு கபடத்தனமான அரசியல்?கடந்த பன்னிரெண்டாண்டுகளாகச் சமாதானஞ் செய்ய முடியாத மர்மம்தாமென்ன?மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் அரசியலானது நிச்சியமொரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும்!அனால் இங்கே 2004 இல் இடம் பெற்ற இயற்கையின் கோரத் தாண்டவத்தில் எழுபதாயிரம் உயிர்களைப் பறி கொடுத்த இந்தத் தேசத்தின் அரச அமைப்புகள் இன்னும் அதேயளவு உயிர்களைக் கொன்றுபோடும் யுத்தத்தில் மூழ்கிக் கிடப்பதன் மர்மம்தாமென்ன?இவர்களில் எந்தத் தரப்புக்கும் மக்களின் அவதிகளில் அக்கறையில்லை.மாறாக மக்களின் அவலத்தில் அரசியல் பிழைப்பு நடாத்தும் மிகக் கேவலமான அரசியல் வியூகத்தை இவர்கள் மக்கள் நலனென்கிறார்கள்.இதையும் மக்களின் பெயரால் வரவு வைத்தபடி அந்த மக்களைக் கொன்று குவிக்கும்போது நாம் இந்தப் பாழாய்ப்போன யுத்த வெறியர்களைச் சபிப்பதைத் தவிர வேறுவழியின்றிக் கிடக்கிறோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2006




Sunday, December 24, 2006

ஒரு செம்பு சுடு தண்ணீர்.

ஒரு செம்பு சுடு தண்ணீர்.


மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்தபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்று கொண்டேயிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம் மார்கழியில் வரும் திருவெம்பாவைச் சங்கொலியும்,அதிகாலைத் தேவாரமும் என்னைத் தாலாட்டியிருக்கிறது.விடியலில் எழும்பித் திருநீறு வேண்டுவதற்காகத் திருவெம்பாவை பஜனைக்கூட்டத்தை நோக்கி ஓடுவோம்.எனது தம்பி மார்களும் நானுமாக இந்த மார்கழி மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறோம்.இந்தப் பாசம் வரும் தைப் பொங்கலை நோக்கியே இருந்திருக்கிறது.

தைப்பொங்கல்!

இந்தப் பொங்கலில் எங்கள் புளியங்கூடல் சந்தி மிகவும் களைகட்டிச் சிரித்து நிற்கும்.கனகசபை மாமாவின் கடையில் மான்மார்க் வட்டப்பெட்டி வெடியும்,வாணங்களும் ஒரு பெரிய அலங்காரமாக அடுகப்பட்டிருக்கும்.பொங்கல் பானைகளெல்லாம் குவிந்திருக்கும்.ஊரே பொலிவுற்றுக் கிடக்கும்.அம்மா புதிய அடுப்புக் கல்லை மண்ணில் செய்து காயவைத்திருப்பார்.அப்பர் பொங்கலுக்காவே எங்களுக்கு உண்டியல் போடுவதற்கு நிறையக் காசுகள் தருவார்.நாங்கள் வெடிகள் வேண்டுவதற்காகவே உண்டியலிடுவோம்.பொங்கலுக்கு முந்திய இரவில் விடப்படும் வாணத்துக்காகவே நாங்கள் கனவுகளைக் காணத் தொடங்குவோம்.இப்படிப் பொங்கலுக்கான ஒரு புதியவுணர்ச்சி எங்களுக்குப் புதுவுலகாக எங்கள் கிராமத்தை மாற்றுவது வழமை.

ஊரெல்லாம்கூடிப் பொங்குகிற இந்தவொரு நிகழ்வு மார்கழி மாதத்தை மனதுக்கு விரும்பியவொரு மாதமாகவே எனக்குப் பழக்கப்படுத்தியது.இந்த மார்கழியில் ஜேர்மனியும் இவ்வளவு குதகலாகமாகி சிறப்புற்றுக் கிடக்கிறது.நத்தார் பண்டிகையோடு இந்த நாடே ப+ரித்துக்கிடக்கிறது.தேங்கிக்கிடந்த சந்தையெல்லாம் பெருநீர் கண்டு உடைபடும் கண்மாய்க் கரையைப்போல் உடைப்பெடுத்து நுகர்வோரால் நிறைந்து வழிகிறது. இந்த வ+ப்பெற்றால் பெருநகரின் அங்காடிகள் நிறைந்த பகுதியில் மெல்ல நடந்து கொள்ளும்போது ஊரின் ஞாபகம் உள்ளத்தைத் தாக்கியது.மெல்லச் சிந்தும் விழி நீர் அந்த மண்ணைச் சுற்றியே தொடரும் உணர்வின் ஒரு குறிப்பாய் நிலத்தில் வீழ்ந்து வெடிக்கிறது.மௌனித்திருப்பதற்கான எந்த மந்திரமும் என்னிடமில்லை.இப்பேதெல்லாம் தேசத்தின் கதை எப்படியோ போய்விட்டது!

எங்கள் ஊரின் மாரி மழையில் தோட்டம் துரவெல்லாம் மூடுண்டு போவதும்.பயிர் அழிவதும் அப்பப்ப நடப்பது.இந்த மாரிகாலத்து மார்கழியில் ஊர் பெருக்கெடுத்து ஓடும்.நீர் வடிந்தோடுவதற்கு அப்போதெல்லாம் பாரிய மதவுகள் குறைந்த எங்கள் கிராமத்தில் வெள்ளம் பல நாட்கள் தேங்கி நிற்கும்.வீதியைப் பிளந்து நீரை மறுபக்கம் ஓட வெருட்டுவார்கள் ஊர் பெரியவர்கள்.எங்களுக்கு கடலிலிருந்து வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவரும் மீன் குஞ்சுகளைப் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.நாங்கள் இப்படி நீராடி மகிழ்ந்த ஒரு வருஷம் 1970.அப்போது எங்கள் ஊருக்கு வாந்திபேதி வருத்தம் வந்து தொலைய,ஊரெல்லாம் பதட்டம்.கோலரா நோய் பரவியதாகப் பறையடித்துச் சொன்னார் நல்லான்.எங்கள் ஊரில் அப்போதெல்லாம் இப்படித்தான் செய்திகள் ஊருக்கு வரும்.நல்லான் அப்பு கிரமச் சங்கத்தில் உறுப்பினர்.அவர்தான் எப்பவும் எங்களுரின் செய்தித் தொடர்பாளர்.எங்களுக்குச் சந்தோசம் கரை புரண்டோடியது.எங்கள் பள்ளிக்கூடத்துக்கு காலவரையற்ற மூடுவிழா.

ஒவ்வொரு பகலிலும் பாடசாலைக்குள் வைத்தியர்களும்,பொலிசும் இருப்பார்கள்.அவர்கள் மருந்து கொடுப்பதும் ஜீப் ஓடுவதாகவும் இருப்பார்கள்.

ஒரு நாள் காலை நான் வீட்டிலிருந்து ரோட்டுக்கருகிலிருந்த பாடசாலை நோக்கி நடந்தேன்.

ஜீப்பையும்,ஊசிபோடும் ஆட்களையும் வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வமாகி இருந்தது.என்னைக் கண்ட துப்பாக்கிதாங்கிய பொலிசார் இருவர்"தம்பி இங்கே வாங்க"என்றார்கள்.என்னையழைத்தவரின் தமிழ் கொச்சையாக இருந்தது.அவர் என்னிடம் "தம்பி உணு வத்துறு கொண்டு வாறீங்களா"என்றார்.மற்றவர் சுடுதண்ணி என்றார்.எனக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும்.எனது தந்தையார்.பலாங்கொடையில் கடை வைத்திருந்தவர்.அவரது கடை 1967 இல் நட்டத்தில் போக ஊரில் சிறு விவசாயி ஆகியிருந்தார்.அப்பரின் மடியில் தூங்கும்போதெல்லாம் அப்பர் பலாங்கொடைக் கதைகளையும்,சிங்களத்தில் தானங்களையும், சிறு சிறு சொற்களையும் சொல்லித் தருவார்."உணு வத்துறுவும்"நான் அறிந்த வார்த்தைகளில் ஒன்றாய் இருந்தது.

இப்போதெல்லாம் யோசிக்கிறேன்.அன்றைக்குப் பொலிசைக் கண்டு பயம் கொள்ளவில்லை.அவர்களிடமிருந்த துப்பாக்கியும் அச்சம் தரவில்லை.எனக்கு அதன் உருப்படி பார்ப்பதற்கு ஆசையாய் இருந்தது.அம்மாவிடம் "சுடுதண்ணியாம் பொலிசுக்காரன்கள்"என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கி பற்றிய கேள்விகளைத் தொடுத்தேன்.அம்மா சுடுதண்ணியை அடுப்பில் வைத்து விட்டுச் செம்பைத் தேசிக்காய்த் தோலால் சாம்பல் சேர்த்து மினுக்கினார்.கூடவே சொன்னார்.துவக்கு ஆட்களைச் சுடும்.துவக்கு வைச்சிருக்கிறவர் ஒருத்தருக்கும் பயப்பட மாட்டார்.கள்ளர்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் சொன்னார்.

அன்று அம்மா சொன்னதன் அர்த்தம் பின்னாளில் அதைத் தாங்கியபோது புரிந்தது.துப்பாக்கி இருக்கும்போதும்,ஊருக்குள் உலாவரும்போதும் ஊரிலிருக்கும் எல்லோரும் எனக்கு மீன் குஞ்சுகள் போலவும்,காலுக்குள் நெளியும் மண் புழுப்போலவுமே தெரிந்தது.

அன்றைய சுடுதண்ணிக்குப் பின்னால் ஒரு சின்னப்பொறி உள்ளத்தில் கிடக்கிறது.அந்தப் பொறி இன்றுவரையும் இனிக்கிறது.

பொலிஸ்காரர்களில் அழகாய்த் தமிழ் பேசியவர் தமிழராகத்தான் இருக்கவேணும்.அவர் "டேய் அதைத் தொடதே!"என்று என்னை உறுக்கினார்.மற்றவர் கொச்சைத் தமிழ்பேசினாலும் மரியாதையாய் அன்று உரையாடியுள்ளார்.இன்றும் அதை உணரத்தக்கதாகவே இருக்கிறது."தம்பி வாருங்கள்",துவக்கைத் தொடாதீர்கள்!"என்றார்.எனினும் துவக்கைத் தொடுவதற்கு அநுமதித்தார்.பின்பு ஐம்பது சதத்தைத் தந்து,"அதோ அந்தக் கடையில் போய் ஐம்பது சதத்துக்கு சொக்லேட் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்றார்.

எங்கள் வீட்டுத் தெருவில் ஒரேயொரு பெட்டிக்கடைதான் இருக்கிறது.அது இராமனின் கடை.ரொம்ப ரொம்ப இருமியபடியேதான் அவர் கடை நடத்தியது இன்றும் ஞாபகம்.நாங்கள் இராமரின் கடையில்தான் பொரியுருண்டைவேண்டுவது,தோடம்பழ இனிப்பு வேண்டுவது.அம்மாவிடம் வேண்டும் ஐந்துசதமும்,பத்துச் சதமும்தான் இராமருக்கு வருமானம்.அப்பப்ப அவரிடம் அழி இரப்பர்,பென்சில்,இரட்டை றூள் கொப்பி,சிலேற்றுப் பென்சிகளையும் வேண்டுவோம்.இப்படிப் புதுக் கொப்பி,பென்சில்,அழி இரப்பர்களை வேண்டும்போது பள்ளிக்குப்போவது விருப்பமாக இருக்கும்.புத்தம் புது அழி இரப்பரை மோந்து,அதன் வாசத்திலொரு மகிழ்ச்சி எனக்கு வருவதையும் நான் அநுபவித்திருக்கிறேன்.கொஞ்சக் காலத்தில் அந்த இரப்பர் என் காற்சட்டைப் பையில் இருக்கும்.

இன்றைக்கு இந்த மண்ணில் இத்தனைகாலம் வாழ்ந்த மனிதர்களின் சுவடே காணக்கிடைப்பதில்லையாம்.எல்லோரும் இறந்தும்,இடம் பெயர்ந்தும் நாடோடிகளாகவும் தொலைந்து போய்யுள்ளார்கள்.போனவர்கள் போனவர்களாகவே இருக்கப் புதுப்புதுத் தலைகள் இந்தத் தீவுக்குள் கிடக்கும் மிச்சசொச்ச செல்வங்களைத் திருடிக்கொண்டிருக்க காலம் போகிறது.

நான் வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைத்தேன்.சோடினைகளைச் செய்தார்கள் சின்னவர்கள்.மரத்துக்கடியில் பரிசுப்பொருள்கள் வருமென்பது அவர்களின் கனவு.இந்தப் பண்டிகைகள் மனதுக்கு மகிழ்வைத் தந்திருந்தாலும் இறை நம்பிக்கையென்பது வேறு வகையானது.இந்தப் பொழுது இரம்மியமானதாக இருக்கலாம்.உலகத்தின் பலபாகத்தில் குருதிசிந்தப் பசியுறும் மானுடம் நோய்கும் நொடிக்கும் மரித்த காலம்போய், யுத்தத்தால் அழிவுற்றுச் செல்கிறது.தத்தம் வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடும் இவர்களது விருப்பம், தொடரும் யுத்த முனைப்புகளால் சிதறடிக்கப்படுவதும்,விருப்பத்தையுணரும் உடலும் உயிரையிழக்க நமக்கு எந்த மாதமும் காலப் போக்கில் மகிழ்வைத் தருவதற்கில்லாமல் போகலாம்.

இராமர் இரண்டு கையும் நிறையச் சொக்லேட்டுக்கள் தந்தார்.

கைகள் நிறைந்த சொக்லேட்டுக்களோடு அந்தப் பொலிஸ்காரரை அண்மித்து, அவரிடம் அவற்றை ஒப்படைக்க முனைந்தேன்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:"எல்லாம் தம்பிக்குத்தான்"என்று, மழலைத் தமிழில் சொல்லிச் சிரித்தார்..எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது.தமிழ் பொலிஸ்காரர் "டேய்" என்றார் நான் வீடு நோக்கி நடக்க முனையும் போது, செம்பைத் தந்து, இன்னொரு செம்பு சுடுதண்ணீர் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.நான் காற்சட்டைப் பைகள் இரண்டிலும் சொக்லேட்டுகளைத் திணித்துச் செம்பை வாங்கினேன்.அவர் எனக்குச் சொக்கா தரவில்லை.இது எனக்கு எட்டுவயதில் அநுபவமானது.இரண்டு பொலிக்காரர்கள்.இருவரிடமும் இரண்டு வகை மனதிருந்திருக்கும்.இப்பவும் இந்த மகிழ்வை எனது குழந்தைகள் நான் கொடுக்கும் சில்லறைகளில் மகிழ்வார்கள்.ஆனால் மீன் குஞ்சுகளையும்,மாரித் தவக்கைகளையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு நாம் கண்ட ஆனந்தம் இவர்களுக்கிருப்பதற்கில்லை.

குண்டுகள் வெடிக்கத் தலையில் கைவைத்துக் கொட்டும் குருதியைத் தடுத்தபடி, வானத்தைப் பார்க்கும் சிறுவர்களை இலங்கைத் தேசம் இன்று உருவாக்குகிறது.

அன்று, தைப்பொங்கல் வெடிகளில் மகிழ்ந்த சிறுவர்களை, இன்று குண்டுகளால் அச்சப்படுத்தும் ஒரு தேசமாயும்,சொக்லேட் தந்த பொலிசே இன்று தோட்டாவால் துளைக்கும் எதிரியாகவும் போனது எதனால்?

ப.வி.ஸ்ரீரங்கன்
24.12.2006





Saturday, December 23, 2006

சதிகாரக் கூகிள் கணக்கு...

தேவையின்றித் தளத்தைக் கூகிள் கணக்கிற்கு மாற்றியதன் பின்பு, தமிழ் மணத்தின் கருவிப்பட்டையை நிறுவினாலும் அது தெரிவதும் இல்லை.இயங்குவதாகவுமில்லை!புதிய பதிவையும் தமிழ் மணத்தில் சேர்க்க முடியாதுள்ளது.கூகிள் சதி செய்து குழப்பி விட்டது.பேட்டா விஷனோ அல்ல என்ன மண்ணாங்கட்டியோ.இப்போதைக்கு எதுவும் தோணுதில்லை.கூகிளிடம் அனைத்தையும் பறிகொடுத்தாச்சு.
"..........................................."


பிளக்கர் பேட்டாவுக்கு மாறிய பின் பரவலாகப் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரிவது இல்லை.மீளவும் பதிவைப் புதிதாகப் பதிந்த பின்பே பதிவு தெரிகிறது.

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.




23.12.2006

Thursday, December 21, 2006

அரசியல் அண்ணாச்சியும்...

அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,
ஆசியன் கடையும்.


டேய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?

அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.

சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!

என்னண்ணோய் சொல்லுறியள்?

அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?

இனியென்ன?

பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!

எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...

சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?

இருக்காதா அண்ணே!
எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.

ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?

அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.

எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).


எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.

எட இழவு,என்னடா நடந்தது?

அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.

உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.

அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!

எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?

ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!

சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!

எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.

ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...

கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.
தலையெண்டிறபோதுதான் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.

நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.

அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.

மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.

சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக்க ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?

நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!

ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.

மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...

சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...

அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...


போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?


பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.


ப.வி.ஸ்ரீரங்கன்
21.12.2006

Tuesday, December 19, 2006

பாட்டுக் குயில் பாடையில்...


பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி...


ன்று, எழுதக்கூடியளவுக்கு ஒரு மரணம் என்னைத் தூண்டுகின்றது.கடந்த இரு கிழமைகளாக வைத்தியசாலையில் நான்.எனது தொண்டையில் அறுவைச் சிகிச்சை மூலமாக ஒருவித நோயைக் கட்டுப்படுத்திய பின் மீளவும் எழுதக்கூடிய நிலையில் நான் இல்லாதிருப்பினும்,இந்த மரணம் மிகவும் பாதிப்பைத் தருகிறது.

கடந்த 09.12.2006 இல் எனது கிராமத்தின் அதியற்புதக் கவிஞன்,சு.வி.என்ற சு.வில்வரெத்தினம் அவர்கள் அற்ப வயதில் காலமாகியுள்ளார்.இவரின் இழப்பானது ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத இழப்பென்பது எனது கருத்து.தேசத்தில் எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்துவிட்டன!இந்தக் கொடுமைகள் எல்லாம் எழுத்தில் வரமுடியாதளவுக்குக் காரணகாரியங்கள் மலிவுற்றுக் கிடக்கின்றன.இத்தகைய இடருக்குள்ளிருந்துகொண்டு-நெற்றிக்கு நேரே நிமிர்ந்து நிற்கும் துப்பாக்கியைத் தரிசித்தபடியே தமது குரலைப் பதிவிடவேண்டிய ஈழத்துச் சூழ்நிலையில், எவரொருவர் உருப்படியாக எழுதமுடியும்?எனினும் சு.வி. தன் அகத்தைப் பற்றவைத்துக்கொண்டு இந்தச் சூழலைத் தரிசித்திருக்கிறார்.அவரது படைப்புகள்மீதான விமர்சனங்களுக்கப்பால் அவர் மனித அவலங்களைப் பாடிய பாங்கு அளப்பெரியது.நம்பிக்கையையே அவர் மூலதனமாக்கியிருக்கிறார்.படைப்பின் உறுதிபோலவே நம்பிக்கையால் கட்டப்பட்ட வலுவான அத்திவாரமாக அவர் வாழ்ந்தும் இருக்கிறார்!-மறைந்தும் போய்விட்டார்!!

எங்கள் கிராமத்தின்(தீவின்) இடப்பெயர்வே ஈழத்தின் அனைத்து இடப்பெயர்வுகளுக்கும்,வலிகளுக்கும் முன்பாக நிகழ்தது(1991).சூரியக் கதிர் நடவடிக்கைக்குப் பின்பான யாழ் இடப்பெயர்வைக் குறித்துப் பற்பல ஒப்பாரிகள்,பரப்புரைகள் இடம்பெற்றளவுக்குத் தீவக இடப்பெயர்வு முக்கியம் பெறவில்லை.தீவகத்தில் வாழ்ந்த நாற்பதினாயிரம் மக்களும் தமது வாழ்விடங்களை-வளங்களைவிட்டு அகதியாகி இடம்பெயர்ந்த வலியானது சொல்லித் தீரக்கூடியதல்ல!

1996 இல் இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வை"வலிகாமத்தின் முற்றத்திலிருந்து எம்மைக் குடியெழுப்பிக் கலைத்த..."(சூரியக்கதிர்,புலிகளின் வெளியீடு-பக்கம்:12.)என்று மிகவும் உணர்வு ப+ர்வமாகக் கருத்தாடுகின்ற புலிகளின் பரப்புரைகள் இந்தத் தீவின் இடப் பெயர்வைக் குண்டி மண்ணைத் தட்டியது போல"தீவுப்பகுதி எமக்கு கேந்திர முக்கியமற்ற பகுதி"என்றார்கள்.இவர்கள் தமது வளங்களைத் இந்தத் தீவுக்கூட்டங்களுடாகப் பெற்றுவிட்டு,அந்த மக்களை அம்போவென்று தவிக்கவிட்டுத் தமது வளங்களோடு ஓடித் தப்பியபோது, தீவுப்பகுதி மக்களின் அவலம் தொடர்கதையாகியது.கையில் கிடைத்ததோடு உயிரைக் கையில் பிடித்தபடி எனது உறவுகள் யாழ் மண்ணை நோக்கி அராலித்துறைய+டாக நடந்து-தரவைக்கடலைக் கடக்கும்போது, இராணுவத்தால் கொன்றழிக்கப்பட்டுத் தப்பியவர்கள், யாழ் பெரு நகரில் தெருவெங்கும் அலைந்தார்கள்.

இந்த மக்களின் மண்ணில் விளைந்து கிடந்தவற்றை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தவன் இன்று மந்திரியாகச் சிங்களப் பாராளுமன்றத்தில் இருக்கிறான்!தீவுப்பகுதி மக்களின் புகையிலையையும்,மிளகாயையும்,வெங்காயத்தையும் அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துப் பாரிய பெட்டிகளாகச் செய்து, அவற்றை அதற்குளிட்டுக் கொழும்புக்குக் கடத்திப் பெரும் பணத்தைச் சம்பாதித்தான் டக்ளஸ் தேவானந்தா!ஆனால் அந்தப் பயிர்களைத் தமது குருதியால் விளைவித்த மக்களோ யாழ் மண்ணில் நாடோடிகளாக அலைந்தார்கள்-ஒரு சோற்றுப் பருக்கைக்குப் பேயாய் அடிபட்டார்கள்!

இந்தச் சோகத்தைச் சொன்னவன் அந்த மண் பெற்றெடுத்த புதல்வன் சு.வில்வரெத்தினம் மட்டுமே!




"சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும். "-(19.09.94, காற்றுவழிக்கிராமம் )என்று,எமது வதைகளைச் சொல்வதற்குத் அந்தத் தீவு பெற்றெடுத்த புதல்வனால் மட்டுமே முடிந்தது!


காற்றடிக்கலாம்,மழை சோவெனக் கொட்டலாம்,மண் விளைவதற்கு மனிதர்கள் இருந்தாக வேண்டும்.அதுபோலவே நாட்டில் அனைத்தும் நிகழலாம்-கிராமத்தில் குடிகளே அழியலாம்.அந்த வலியைச் சொல்வதற்கு அந்த மண்ணில் தப்பியவொரு உயிர் இருந்தேயாகவேண்டும்.எங்கள் மண்ணைப் பாடுவதற்கு இனியாருமில்லை!எங்களிடமிருந்தவொரு பாட்டுக்குயில் பறந்து,காத தூரம் போய்விட்டது.நமக்கென்றொரு வலியிருக்கிறது.அதைக் குறித்துப் பேசுவதற்கு வ.ஐ.ச.ஜெயபாலன்களால் முடிவதில்லை.ஆனாலும் நமது வலியை அதன் உண்மைத் தனத்தோடு சொல்லும் கொரிலாக்களையும் இந்த மண்பெற்றெடுத்துப் பாக்கியம் செய்தே இருக்கிறது.குறைந்த பட்சமாவது நம் வலியைப் பேசிய இந்தச் சு.வி. என்ற தீவுமகன் என் மனத்திலிருந்து நீங்கா அமரனாக நிலைத்தே இருப்பதற்காகக் காற்று வழி எனது கிராமத்தைப் பகிர்ந்து,ஒதுங்கியுள்ளான்.


"முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல." -காற்றுவழிக்கிராமம்


"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல நமது மண்ணை இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு,எங்கள் உறவுகள் நாயாய் அலைந்தபோது,நமது சோகம் சொல்ல எந்தவொரு ஊடகங்களும் முன்வரவில்லை!பெட்டிச் செய்திகளோடு பாம்பாய்ப் படுத்துறங்கிய கொடுமையை நாம் அறிவோம்.புலிகளின் பரப்புரையில் தீவின் இடப்பெயர்வு முக்கியமற்றவொரு விஷயமாகவே இருந்தது! இந்தப் பொழுதில்தாம்
சு.வி. தன் ஆன்மாவை வருத்திப் பாடுகிறான்.


"நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்".-காற்றுவழிக்கிராமம் .


இங்கேதாம் இந்த ஓரவஞ்சனையைக் கண்டு,கொதித்தெழும் சு.வி.,மக்களின் மனதைத் தனது பாடல்களுக்கூடாகக் காட்டி இந்தவுலகத்திடம் நியாயம் கோருகிறான்.அவன் கண்டடைந்த உண்மையானது,நம்மைக் கருவறுத்த அரசியல் சூழ்ச்சிகள் எங்கள் கிராமத்தையும் மக்களையும் நடாற்றில்விட்டுத் தப்பித்து விட்டதென்பதே!


இது கொடுமை!


நம் கிராமத்தின் முதுகெலும்பை உடைத்துத் தேசியம் பேசியவர்கள்,தேடுவாரற்று யாழ் மண்ணில் அலைந்த தீவாரைக் கண்டும் காணாததுபோல அரசியல் செய்தார்கள்.இந்த நல்ல மனிதர்களின் நரித்தனமான விடுதலைப் பண்ணுகள் எல்லாம் வலிகமத்தைச் சுற்றியே வந்தவை.அவை மருந்துக்கும் தீவுப்பகுதியைப் பாடியதில்லை.அந்த மண்ணை முடிந்தளவுக்குத் தமது வளர்ச்சிக்குப் பயன்படுத்திய அமைப்புகளெல்லாம் இறுதியில் அந்த மண்ணை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்துக் கற்பழித்தார்கள்!இது வரலாறு.


"இன்று மாலையும்
படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்
உடைத்தபெட்டகம் ஒன்றின்
ஒடிந்தகாலை.

கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே
களவாடப்பட்டு விட்டன.
ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.
பறிபோயின
பேச்சொலியும், கைவளையோசை வீச்சு நடையும்
பிறைநுதற் திலகமும்
அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.

சந்திவிருட்சங்களின் கீழே
இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை
குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.

வல்லிருளின் ஆட்சி,
வழிப்போக்கிலும் இருள்தான்
வாழ்விடங்கள் எங்கும் இருள்.

பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்
எங்காவது ஓர் இடுக்கிடை
எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல
வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர். "-காற்றுவழிக்கிராமம்

நம் தீவுமகள் திராணியற்றுக் கிடக்கிறாள்.அவளைத் தினம் புணரும் அந்த மகளின் புதல்வர்களே,அவளின் இன்றைய நிலைக்கும் காரணமானவர்கள்.எனது வீடும்,தோட்டமும்,துரவும் காடாகிவிட்டது.பெரு மரங்கள் வளர்ந்து, அனைத்துப் பகுதியும் காடுகளான பின்பும்,அந்த மண்ணை மறக்க முடியாது தவித்திருக்கும் ஒரு ஆன்மாவை எனது உடல் கொண்டிருக்கிறது.நிலத்தின் அனைத்துப் பரப்புகளிலும் புதைவெடிகள் கொட்டப்பட்டுத் தீவின் எந்தப் பகுதியும் மனித நடமாட்டத்துக்குத் தோதான பகுதியாகவின்றித் திருடர்களின்-காடேறிகளின்-பேய்களின் கூடாரமாக மாற்றப்பட்ட பெருங்கொடுமையைச் சொன்ன எங்கள் சு.வி. என்ற தீவின் பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி நான் நொந்து கொள்வது,எனது கிராமத்தை எண்ணிக் கொள்வதற்காவும் இருக்கலாம்.


மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கிறது.அது வாழ்வுக்கும்,வளர்வுக்குமாகப் பற்றிப்படர்ந்து தொடர்கதையாகிறது.இந்தத் தொடர்கதையில் ஒரு பாத்திரத்தைச் சு.வி. ஏற்றிருந்தார்.அவர் மனித வாழ்வின் ஒவ்வொரு திசையையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.தனது மக்களினதும்,ஊரினதும் மகத்துவத்தை வேட்கையாகக் கொண்டு,பாட்டுக் கட்டியவர்.ஒரு கிராமத்தின் அழிவைப் படைப்பாக்கி, அதை அமர இலக்கியமாக்குவது அவரது நோக்காக என்றும் இருந்ததில்லை.மாறாகத் தனது கிராமத்தின் அழுகோலத்தை-அக்கிராமம் கற்பழிக்கப்பட்ட ஈனத்தனத்தை உலகறியச் செய்வதும்,அதற்காக நியாயம் கேட்பதும் அவரது பாரிய மனிதவிருப்பாக இருந்தது.


எங்களுரின் இதயம் எப்பவோ நின்று விட்டது.


அந்த இதயத்தை மீளவும் இயக்குவதற்குப் பாடுபட்ட இந்த மாபெரும் தீவு மைந்தன், தன் அமரகாவியத்தால் மடைதிறந்து என்றும் பேசுகிறான்,அந்தக் கிராமத்தின் நோய்களுக்கு மருந்திடும்படி விண்ணப்பித்தபடி...


"உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்."-காற்றுவழிக்கிராமம்


எங்களுக்குத் தெரியும் இன்றைய யுத்தங்களின் நோக்கங்கள் என்னவென்று.


நேற்றைய நிகழ்வுக்கு முந்த நாள் இட்ட தீ காரணமானது.
இன்றைய காட்டுத்தீக்கு நேற்றைய வினை காரணமாகிறது.
இன்றைய சூழ்ச்சி நாளை என்னத்தை எமக்களிக்குமென்பதை நாமறிவோம்!


எனினும், நமது வாழ்வின் விருப்புகள் வலியவொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதாகவிருக்குமென்று நாம் பகற்கனவு காண்பதற்கில்லை.


இந்தவிடத்தில்தாம் வெறும் நம்பிக்கை மனித இருப்பின் ஒரு சாட்சியாகப் படர்கிறது.அந்த நம்பிக்கையப் பாடியதுதாம் சு.வி.யின் மகத்தான படைப்பாற்றலாகும்.நம்பிக்கையற்ற எந்த நோக்கமும் வெற்றி பெற்றதல்ல.நம்புவோம் நாம் இன்னும் மனிதர்கள்தாமென.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.12.2006













Sunday, December 03, 2006

தொடரும் யுத்தம் சொல்வதென்ன?

அழியும் மனிதவளம்:

எந்தப் பக்கம் திரும்பினாலும் கொலைகள்,மனித வெடிக் குண்டுகள்,தனிநபர்-அரச-இயக்கப் பயங்கரவாதக் கொலைகள் என்றபடி மிகப்பெரும் சமூக அவலம் என்றுமில்லாதவாறு மிகக் காட்டமாக இலங்கையில் இயங்குகிறது-நிலவுகிறது.அப்பாவி மக்களைக் கேவலமாக நடாத்தும் இந்த அரசியலானது தனது பாசிசக் கட்டமைப்பை இலங்கை மண்ணில் வலுவாகக் கட்டமைத்து, வளர்த்து வருவதும்,அத்தகைய இராணுவவாதச் சர்வதிகாரத்தை நிலைப்படுத்தி, மக்களின் சகல உரிமைகளையும் நசுக்கி வருகிறது.

இத்தகையவொரு நிலைமையில் இலங்கையின் எதிர்காலமானது வெறும் இராணுவவயப்பட்ட கட்சியரசியலை முன்னிறுத்தி அதையே மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முகமூடியை வலுகட்டாயமாக அணிவிக்கும் போக்குக்கு, இந்த உலகமயச் சூழலில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகள் அனுமதி வழங்குவதும்,அதையே ஜனநாயகத் தன்மையானதென்றும் பரப்புரை செய்வதுமாக நிலமை மாற்றமுறுகிறது.

இவ்வகை அரசியலை அடித்தளமாக நிறுவிக்கொண்டு, தமிழ்பேசும் மக்களுக்கான அரசியலை முன் தள்ளும் "ஜனநாயக"ச் சக்திகளெனும் போர்வையில் இன்னொரு கட்சியரசியலைக் கனவு காணும் தமிழ்த் தரப்புகளிலொன்றுக்கு(புலிகளின் எதிர் தரப்பு) இந்தக் கொலைக்கார அரசியல் வெறும் "பயங்கரவாதத்துக்கு எதிரானவொரு நடவடிக்கையாக" மலினப்படுகிறது.எனினும் இத்தகைய மறைமுகமான மர்ம அரசியலைக் கைக்கொண்டிருக்கும் "அகிம்சை"ப் பேர்வழிகள் தமிழ் பேசும் மக்களின் இதுவரையான துன்பத்துக்கு-சமுதாயச் சிதைவுக்கு எந்தவிதமானவொரு ஆரோக்கியமான அரசியலை இதுவரை முன் மொழிவதாகவுமில்லை!



முடிந்தால் தனிநாடு இல்லையேல் சமஷ்ட்டி!இதற்கப்பால் மக்களுக்கான எந்த அரசியலும் இல்லையென்றும் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறைமைக்கப்பால் வேறொரு உற்பத்திப் பொறிமுறை கிடையாதென்று அவர்கள் புரிந்துள்ளார்கள் போலும்.

மக்களின் யுத்தக்கால அவல நிலையைத் தமது நலனுக்கான கருவியாக்கி எதிர்ப்புக் குரலிடுகிறார்கள்.ஒவ்வொரு வர்க்கமும் தத்தம் நிலையிலருந்துகொண்டு சிந்திக்க முடியும்.இன்று இலங்கை மக்களின் அரசியலை ஆக்கிரமித்துள்ள தரகு முதலாளிய வர்க்கம் தனது இருப்புக்கும்,எதிர்காலத்துக்கும் இலங்கையின் இனப் பிரச்சனையைக் கருவியாக்கி,அந்த வர்க்கத்தின் நலனிலிருந்து சிந்திக்க முனைகிறது.மக்களையும் அங்ஙனம் சிந்திக்கத் தூண்டுகிறது,"வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடைப்படையாக இருக்கிறது".இது உலகமயப் பொருளாதார நகர்வால் மிகவும் உந்தப்பட்டு மக்களின் அடிப்படையுரிமைகளைத் தமது அரசியல் ஸ்த்திரத்தைக் காப்பதற்காகக் கையகப்படுத்தி, கயமைத்தனமான அரசியல் பேரங்களோடு யுத்தம் செய்வதற்கு முனைப்புறுகிறது.

பரிதாபத்துக்குரிய அப்பாவி மக்கள் தமது அனைத்து உரிமைகளையும் இந்தக் கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சிக்கும் அது கொண்டிருக்கும் குறுந்தேசிய வெறிக்கும் அடகுவைத்து,விடிவுக்காகத் தவமிருக்கிறார்கள்-பிச்சையெடுக்கிறார்கள்-கொலையாகிப் போகிறார்கள்.அல்லது இதை இங்ஙனம் கூறலாம்: இராவணுவத்துக்கு-இயக்கத்துக்கு அடியாளாக மாற்றமுற்றுப் போகிறார்கள்.மக்கள் சமூகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளை நோக்கிய அரச-இயக்க வன்முறை ஜந்திரம் அவர்களைக் கொன்று தள்ளி, மக்களின் தன்னெழிச்சியை முடமாக்கியுள்ளார்கள்.

படு பிற்போக்குச் சக்திகளே மீளவும் மக்களுக்கான குரலாகத் தமது இலாபத்துக்காக மனிநேயம் பேசிப் பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.இங்கே இத்தகைய அரசியல் கிழார்கள் தம்மை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அகிம்சா மூர்த்திகளாகவும் அப்பப்பச் சொல்வதற்குத் தயங்கவுமில்லை.மக்களை மந்தைகளாக்க முனையும் இவர்களின் சூழ்ச்சிகள் வெற்றிபெற்று வருவது இலங்கையின் முற்போக்கு சக்திகளின் வரலாற்றுத் தோல்வியாகவே நாம் காணுகிறோம்.

மிகக் கடினமான இந்தச் சூழ்நிலைமீதான முற்போக்குச் சக்திகளின் போராட்டப் பணி முற்று முழுதாகக் கொலையரசியலால் முடமாக்கப்பட்டுள்ள நிலையில்,கருத்தியல் தளத்திலான போராட்டத்தைக் கடந்த கால் நூற்றாண்டாகச் செய்துவரும் முற்போக்குச் சக்திகளில் தோழர் இராயாவின் பங்கு மகத்தானது மட்டுமல்ல,நமக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.இது முதுகு சொறியும் கருத்தல்ல.மாறாக இன்றைய மெய்பாட்டு உண்மையானது இப்படித்தாம் உள்ளது.

புலிகளும் யுத்தமும்:

புலிகளின் போராட்ட நெறிமுறைகள் யாவும் இந்த அரசியலை இருப்புக்குட்படுத்தவும்,அதை நிலை நிறுத்தி அன்றாட அரசியல் நெறியாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இத்தகையவொரு நிலையில் புலிகளால் முன் தள்ளப்படும் போர்களும்,அதுசார்ந்த அரசியல் நகர்வுகளும் மேற்காணும் வியூகத்தின் வெளிப்பாடுகளாகவே அரசியல் நகர்வுகளுக்குள் செயலூக்கம் பெறுகிறது.இதிலிருந்து முகிழ்ப்புக்குள்ளாகும் மொழிவழி பேசப்படும் உரிமைகள் குறிப்பிட்ட மொழிபேசும் மக்களைச் சார்ந்து,அவர்களின் சமூகப் பொருளாதார விருத்திக்கும்,அவர்களின் வாழ்வாதாரக் குடிசார் உரிமைகளுக்குமான அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே நிற்கிறது.இவைகள் சமுதாயத்திலுள்ள அரசியலாதிக்கம் பெறத்துடிக்கும் வர்க்கத்தினது வர்க்கவுணர்வாக மேலெழுகிறது.

இந்தவுணர்வினது தான்தோன்றித்தனமான யுத்தப் பிரகடனம் கட்சி-இயக்க அரசியலின் சமூக மட்டத்திலான அதிகாரத்தின் வெளிப்பாடாகவும்,கட்சிகளின்-இயக்கங்களின் ஆயுட்காலத் தலைமையின் அதீதத் தன்முனைப்புக்கும் அந்த முனைப்புக்கு உறுதுணையாக இருக்கும் யுத்த ஜந்திரத்தின் மேலாண்மைக்குள் குவிந்திருக்கும் பொருள் நலத்திற்கும் அவசியமாக இருக்கிறது.இது மக்களின்-உழைக்கும் மக்களின் வர்க்கவுணர்வைச் சிதைத்துக்கொண்டே அந்த வர்க்கத்துக்குள் குறுந் தேசியவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு யுத்தத்துக்கு ஆளணியைத் திரட்டிக் கொள்கிறது.இங்கே மிகவும் வலுவாக இந்த யுத்த ஜந்திரத்தோடு அப்பாவி இளைஞர்களை இணைக்கும் வியூகமானது மொழிசார்ந்த அதீத வற்புறுத்தல்களாகும்.அது குறிப்பிட்டவொரு மொழிவழிசார்ந்த மனிதவுணர்வை அதன் கடைக்கோடிநிலைக்குத் தள்ளி மக்களுக்கிடையிலான அனைத்துச் சாதகமான ஒற்றுப்மைப் பண்புகளையும் வேரோடு வெட்டிச் சாய்க்கிறது.

இந்த அவலமான சமூகச் சூழலை வலுகட்டாயமாக முன் தள்ளி அதைக்காத்துவருவதற்காகவே யுத்தம் மிகவும் அதி அவசியமாக இருக்கிறது.இத்தகைய யுத்தத்தால் ஆதிக்கத்தையும்,அதிகாரத்தையும் பகிர்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் அத்தகைய சந்தர்பங்காளால் பெறப்படும் அரசியல் மேலாண்மையைக் கட்டிக்காப்பதற்கும் அப்பப்ப மனித வெடிகுண்டுகளும்,தாக்குதல் யுத்தமும் அவசியமாகிறது.இலங்கையின் அரை இராணுவத் தன்மையான அரசவடிவத்துக்கு இதுவே எந்தக் காலத்துக்குமான கட்சி-இயக்க அரசியலாக இருத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வகை அரசிலைத் தவிர்த்து ஒரு பெயரளவிலான முதலாளித்துவ ஜனநாக அரசியலையோ அல்லது குடிசார் உரிமைகளையோ இலங்கையைக் கருவறுக்கும் அந்நிய பொருளாதார நலன்கள் விரும்பவிலை.எனவே புலிகள்போன்ற இயக்க அரசியலும்,இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அரசியலும் ஒன்றையொன்று ஆரத் தழுவியபடியே தனது எதிர்கால இருப்பை உறுதி செய்கிறது.இங்கே மக்களுக்கான அரசியல் உரிமைகளை கட்சி அரசியல் உரிமையாக மாற்றிக்கொண்ட இலங்கை அரசியல் நிர்ணயச் சட்டங்கள்,நீதிமன்றங்களால் மக்களின் பொருள்சார்ந்த பண்பாட்டு வாழ்வை,மொழிசார்ந்த சமூக ஒருங்கிணைந்த கூட்டுணர்வை வாழ்விடங்களால், புவித் தோற்றங்களால் கூறுபோட்டுப் பிரித்தெடுத்து, அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தைச் சிதைத்துத் தமது ஆதிக்கத்திற்குப் பலமான எதிரிகளற்ற அரசியலை முன்னெடுக்கின்றது.

இது மக்களின் பொதுப் பண்பாடுத் தேசிய அலகுகளைக்கூட அதன் ஒத்த தன்மைகளை அழித்து பிரதேச ரீதியாக உணரப்படும் சில எதிர் நிலைகளை முதன்மைப்படுத்தி மக்களை ஒரு பகுதிக்கு இன்னொரு பகுதி வேறுபாடானது என்று கற்பிக்க முனைகிறது.இதன் அடிப்படையிலெழும் அரசியல் நிர்ணய முனைப்பானது பிரதேசரீதியான நிர்ணயத்தைக் கோருகிறது.இது முற்றிலும் இலங்கைபோன்ற இனவாத அரசியலுக்கு மேற்குலகம் கற்பித்துக் கொடுத்த வியூகத்தின் வெளிப்பாடுதாம்.இந்தவகையிலான குரல்கள் மக்களின் உரிமைகளை அழிக்க முனையும் இன்றைய உலகமயப் பண்பாட்டுக்கு அவசியமாகிறது.

மக்களின் கூட்டு முயற்சிகளை அடியோடு சிதைத்து,அவர்களின் அனைத்து வாழ்வாதராங்களையும் மேற்குல முதலாளிகளின் ஜந்திரத்தின் கச்சாப் பொருள்களாக மாற்றப்படுகிறது.இதற்காக மக்கள் யுத்தக்களின் பேரால்-அரசியல் நிர்ணயங்களின் பெயரால் அழிக்கப்படுகிறார்கள்.இது கட்சி-இயக்க அரசியலின் மிகக் கடைக்கோடி நிலையாகும்.இந்த வினோதமான அரசியலையே மூன்றாமுலகத்துக்கு ஜனநாயகமாகக் கற்பிக்கிறது உற்பத்திச் சக்திகளுடைய மேற்குலகத் தொழில்வள நாடுகள்.


உலகமயப் பொருளாதார ஆர்வம்:


இந்த வகைமாதிரியானவொரு அரசியல் நகர்வில் மூன்றாம் உலகத்தைக் கட்டிப்போட்டு,மக்களின் அனைத்துரிமைகளையும் பறித்து அவர்களைக் கொலை செய்தபடி இந்த உலகமயப் பொருளாதார ஆர்வங்கள் தமது நிலைகளை வலுப்படுத்துகின்றன.ஏதோவொரு அவசியமான அதீத மனிதாயத்தேவையாக இலங்கையில் சமாதானம் பேசும் இந்தச் சக்திகள் மிகக் கபடமாக இலங்கை வாழ் மக்களை மொழியின் பெயரால்-இனத்தின் பெயரால் திட்டமிட்டுக் கூறுபோடுகிறார்கள்.இது இலங்கையின் கட்சி அரசியலையும்,நாடாளுமன்றப் போலி ஜனநாயகத்தையும் காத்துத் தமது அடிவருடிகளைக் காக்க முனையும் பாரிய கபடத்தனமாகும்.

இதற்குள் பேரங்களுக்காகப் போராட்டத்தைச் செய்யும் புலிகள் தமது அரசியல் மேலாண்மையை படைப்பலத்தாலோ அல்லது இலங்கை இராணுவத்தைக் கொல்வதாலோ நிலை நாட்டவில்லை. மாறாகத் தமிழ் மக்களைத் தமது எஜமானர்களுக்காக ஒடுக்குவாதால் மட்டுமே தக்க வைக்கிறார்கள் என்றவுண்மை கசப்பானது.


தொடர் தாக்குதல்களும்,தொடரிழப்புகளுமாக யுத்தம் நகர்வது, பேரத்துக்கானதாகவும்-உழைக்கும் இலங்கை மக்களை ஒடுக்குவதற்காகவும் நகர்கிறது.இந்த யுத்தங்கிளில்,ஒன்று ஈழத்துக்கானது,மற்றது அதைத் தடுப்பதற்கானது.இருதரப்பாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படும் நியாயங்கள் மக்களின் எந்தப் பெறுமானத்தையும் பொருட்டுக்கும் மதிப்பதாகத் தெரியவில்லை!

மனிதாபிமானமற்று யுத்தத்தில் மூழ்கியுள்ள இந்தத் தேசத்தின் அரசுகள் மீளவும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதில் முன்னணி வகித்து,உலகமயப் பொருளாதாரக் கனவுகளுக்கு தென் கிழக்காசியாவில் வாய்ப்புகளையும்,வளத்தையும் உறுதிப்படுத்தித் தமது வர்க்க நலனை உறுதிப்படுத்தித் தம் வர்க்கத்தோடு தோழமையாக ஜெனிவாவிலும்,தாய்லாந்திலும் கை குலுக்கிறார்கள். மக்களோ மாவீரர்-தேச புத்திரர்களுக்காகக் கண்ணீர் மல்கி,தமது மரணவோலத்துக்கு "பேச்சு வார்த்தை-தீர்வு" முடிவு கட்டாதோவென்றும்,தமது வயிற்றுக்காக உழைப்பதற்கு ஒரு தொழில் கிடைக்காதோ-யுத்தச் சூழல் விலகி நிம்மதியாய் ஒரு குவளை சோற்றை மெல்ல முடியாதோவொன்று ஏங்கி நிற்கிறார்கள்.

இந் நிலையில்,


இலங்கையில் இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை "உயிர் வாழும் சுதந்திரத்தை" தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய உலகமயமாதலில் அமெரிக்காவானதும் அதன் பங்காளிகளுமான ஐரோப்பிய யூனியனும் வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.அவைகள் பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தம் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறார்கள்.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பெளதிக இயக்கத்தையும் தமது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறன.இந்த அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் எடுபிடிகாளக மாறியுள்ள மூன்றாவதுவுலகமெனக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியற்ற தேசங்களிலொன்றான இலங்கையில் மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை யார் தீர்மானிக்கிறார்கள்?

இது கேள்வி.


இதற்கு விடை காண்பதுதாம் ஜனநாயகம் பேசும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.2006

Friday, December 01, 2006

விடுதலையென வெடித்துச் சிதறும்!!!

விடுதலையென
வெடித்துச் சிதறும்!!!


மெல்லத் தொலைத்துவிடும் உயிரும்
ஊனுமாகத் தமிழ் சொல்லிக் கருப்பையில்
எல்லோருக்கும் அளவில்லாக் கொலைகளில்
அடுத்தவன் சாவதென்ற நிம்மதி

எங்கப்பன் பிள்ளைகளில்லை
என் பிள்ளைகூட இங்குதானே?
இனியென்ன நமக்கென்றொரு நல்ல தேசம்
தமிழ் வாழ அவள் கருப்பைக்குள் நீ மலர்ந்து
நாடுகாணச் சாவது சாவில்லை
நித்திய வாழ்வின் கரு முகிழ்ப்பென்று
இனிதாய் ஏற்று
உயிராயுதமாவாய்!
வெடித்துச் சிதறு
பொல்லாத"சிங்களவனை" ஓடோட விரட்ட!

எங்கள்-உங்கள்
உன்னதத் தலைவர்கள் அப்பாக்கள் ஆனவர்கள்!
உருவத்தில் எடைகூடிடினும்
உயிரைத் தமிழுக்காய் உருக்கும்
நன்றிமிகு தலைவர்கள்
மேன்மை தகு மெல்லிய இதயத்தால்
சொல்லிய உங்கள் கனவுகளைச் சிரசைக் கொடுத்தும்
சில வருடங்களில் நிசப்படுத்த
மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறு!

தலைவர்கள்,தளபதிகள் இறப்பினும்
மனிதரை வதைக்கும்
சுரண்டும் அமைப்பும் சட்டதிட்டங்களும்
நிலைத்தே இருக்கும்!



ஒரு இரஞ்சன் போக
ஒன்பதுபேர்கள் பினல்னால் வந்தார்கள்
ஜே.ஆர். போகப் பிரமேதாசா பின்...
எத்தனை தலைமைகள்?
அமைப்பை மாற்றாத அடிதடியெல்லாம்
மக்களைக் கொல்வதற்கு வழியே தவிர
விடுதலைக்கானதல்ல

தமிழிச்சி கருப்பையில்
தவழும் தற்கொடைக் குண்டுகளே!
இன்னும் பல"மாவீரர்"தினங்களோடு
உளமாறக் கொண்டாட நாமிருக்கிறோம்
நம்புங்கள் நம் எதிர்கால மா-வீரர்களே!

நாற்றமடிக்கும் புதைகுழிகள்
யுத்தங்களின் மலட்டுத்தனத்தையும்
மையங்களில் கொட்டிக்கிடக்கும் மறைந்த நலன்களையும்
மறைத்துக்கொள்ள

தேசியத்தின் பெயாரால்"வீரத்துக்கு"விழா எடுக்கும்
விடுதலையென வெடித்துச் சிதறும்!!!



விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள்
விதைகளாய்மாற்றப்படும் ஒவ்வொரு நிமிடமும்
மனதுக்குள் அழுதுவடியும் சின்னக் கனவு
சில்லறைகளற்ற அம்மா மடியின் அந்தச் சுகத்தை!

தலைகள் தெறிக்கச் சாவு வந்து
தாய்மைக் கனவை உடைத்துக்கொள்ளும்
தமிழ் சொல்லும்
எல்லா வாய்களும்
தாலாட்டு மறந்து "ஒப்பாரி"சொல்லும் இனியெப்போதும்

இத்தனையாண்டுகள்
இலட்சம் தலைகளை உருட்டின பின்பும்
இதயம் மரத்த
இயக்க வாதம் இறப்பைத் தவிர
எதைத் தந்தது இந்தத் தேசத்தில்?

ப.வி.ஸ்ரீரங்கன்
01.12.2006

Tuesday, November 28, 2006

எனது அன்பார்ந்த மக்களே!

புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் !

...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...

//ஆனால்,எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.//


...ம்...இம்முறை நம்மட தேசியத் தலைவர் "காலம்"குறித்த கடுமையானவொரு ஆய்வைச் செய்து,அதன்வழி தான் கண்டடைந்த தரவுகளோடு,ஞானம்பெற்ற கையோடு,இவ்வாண்டின்"மாவீரர்"தினவுரையை வீடியோக் கமிராவுக்கு முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.எனக்கு இந்தக் கதம்பத்துரையில்(விடலைக் குஞ்சுகள் வினைதீர்க்கக் கொதிக்காதீர்) எந்தவொரு கண்றாவியையும் விமர்சிக்க-விவாதிக்க விருப்பமில்லை,என்றபோதும் தலைவர் தனிநாட்டுக்கான போரை இலட்சம் மக்கள் இறந்த பின்பும் முன்னெடுக்கிறபோது நாம் கொஞ்சமாவது கதைக்கத்தானே வேணும்-இல்லையா?

நம்ம தலைவர் தன்பாட்டுக்குப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்."அது,இது"வென்று மனிதர் பட்டியலிட்டே உலக அரசியலை விமர்சித்துப் புரட்சிகரமானவொரு பொருளாதாரப் புதுயுகத்தைத் தனது வழியில் நிறுவி, ஈழத்தை விடுவிக்கப் போகிறார்.

(மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பி/கு:தலைவரைப் பார்த்துப் புரியவும்)

இதுவரை நடந்தவைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருப்பதைக் கடமையாக ஏற்றுப் புலிகளின் ஊதுகுழல்கள்- பல ஊடகங்கள் இதுநாள்வரை பட்டியலிடும் இவ்வேலையைச் செய்தே வருகின்றன.மீளவும் அந்த ஊடகங்களின் பட்டியலிடலில் திருப்த்தியுறாத "நம் தலைவர்"தன்பாட்டுக்குப் பட்டியலிட்டு,இறுதியில் கால்நூற்றாண்டுக்குப் பின்பாகவும் அதே பல்லவியோடு, "தனியரசு"தனிநாடு என்று கூறிக்கொண்டு,"புலிகளின் தாகம்"சொல்லி உரையை முடித்தார்.


அப்பாடா அருமையான உரை!அவசரப்படாத ஆய்வு!அள்ளவள்ள அறிவாய்ச் சொரியும் அற்புதவுரை.


சிங்களவனிடம் சினக்கிறார்,பின் அவனிடம் மக்களுக்காக உணவுக்கு மடிப்பிச்சை கேட்கிறார்.திரும்பக் கோடானகோடி குற்றங்களைச் சுமத்தி சிங்களவரசுகள் "நீதியான"முறையில்"தீர்வு"தராதென்று சாத்திரம் சொல்லித் தமிழீழப்போரை செய்வாதாகச் சொல்கிறார்.இவர் தமிழீழப் போர் செய்யும் சூழலிலும் சிங்களவனே சாப்பாடு நமக்குப் போடணுமாம்.இவர்போடார்.இவர் அதற்கான முயற்சியோடு ஸ்ரீலங்காவின் ஆதிக்கத்தை உடைத்துத் தனது மக்களின் வயிற்றுப்பாட்டைத் தனது மண்ணிலேயே உற்பத்தியாக்கிக் கொள்ளார்.சுயசார்புடைய பொருளாதார இலக்குகளைச் செய்யாத தலைவர் தமிழீழத் தனியரசு நோக்கிய போரைத் தொடர்கிறாராம்.தனிநாடமைத்த கையோடு உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உலருணவுகள் வழங்குவாராக்கும்!யாரூ கண்டார்?

இப்படியாகத் தலைவர் தனிநாட்டுப் போரில் முனைப்படையும்போது, மரணம் பற்றி மகத்தானவொரு விளக்கத்தைச் சொன்னார்: >>>...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<<
இதைக் கேட்டபடி வேலைக்குப் போன நான்,பின் இரவு வந்து ரீ.ரீ.என்.தொல்லைக் காட்சியைப் பார்த்தேன்.

அடேங்கப்பா!

என்னவொரு ஆரய்ச்சி!! போராடிச் செத்த இராணுவங்களின் புதைகுழிகள் பற்றியொரு நீண்ட ஆய்வுரையை ஒரு தமிழர் செய்து கொண்டிருக்கிறார்.அப்பாடா,இரண்டாம் உலக யுத்தத்தில் தமது நாட்டிற்காகப் போராடிச் செத்த ஜேர்மனிய "இராணுவீரர்கள்"63 ஆண்டுகளாக உறங்குவதாகக் குழிகளைக் காட்டிச் சொன்னார்.

நல்ல ஆராய்ச்சி!தலைவனுக்கேற்ற தொண்டன்!

அவனவன் உற்பத்திகளை எங்ஙனம் உயர்த்துவதென்றும்,தாம் செய்யும் உற்பத்திகளில் எப்படிப் புதுமைகளைப் புகுத்திச் சந்தையைக் காப்தென்றும் யோசிக்கிறபோது-ஆராய்ச்சிகள் செய்கிறபோது,நாம் கல்லறைகள் குறித்து ஆய்வு செய்வது சரிதானே?அவரவர் எதைச் செய்கிறார்களோ அதில்தாம் ஆர்வம் அதிகமாகி மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.

அட பாவித் தமிழர்களே!

உங்களுக்கு கருக்கு மட்டையால
அடிக்கிறதுக்கு ஆளில்லையா?

இரண்டாம் உலகில் நாடுபிடித்து இனவழிப்பைச் செய்த பாசிச இராணுவங்கள் வீரர்களா?தாய் நாட்டுக்காகப் போராடினதா இந்த நாசிய ஜேர்மனியின் ஈனப்படைகள்?

அதென்னடா "அமைதியான" உறக்கம்?

செத்து மண்ணோடு மண்ணாகி, மக்கிப்போன பிண்டங்கள் இன்னும் உறங்குதோ?

>>>...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<< இப்பிடிச் சுத்திச் சுத்தியே பல்லாயிரக்கணக்காகப் பறிகொடுத்தாச்சுத் தலைவரே!

அதைவிட இன்னும் கொடுக்கிறதுக்காக நார்மண்டிப் புதைகுழிகளை உங்கட தொண்டன்கள் போற்றிப் புகழ்ந்து ஆய்வு செய்து அடுக்கித் தள்ளும் அற்புத வரிகள் மாவீரர் துயிலும் குழிகளை ஒப்பிட்டு உயர்த்துவது இன்னும் அத்தகைய குழியளைத் தோண்டுவதற்குத்தாம் என்பதை நாம் அறிகிறோம்.ஐயா தலைவரே!அப்பாவிகளின் தலையில் இப்பிடி மிளாகாய் அரைக்கலாமோ?

எங்கட வாரீசுகள் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் தூங்கி வழியும்போது அப்பாவிகள் புதைகுழிகளுக்குள் அமைதியாய் துயின்று வரலாற்றில் மகத்தானவர்களாக வரவேண்டுமென்ற உங்கட பெரிய மனசு யாருக்கு வரும்?

நார்மண்டியில செத்தவர்களுக்கும் ஜேர்மனியில் செத்தவர்களுக்கும் வைக்கப்பட்ட தூபிகள்,கல்லுகள் வரலாற்றில் இத்தனை பேர்களை அழித்தது கொடிய யுத்தம் என்பதைச் சொல்வதற்கே!போற்றுவதற்கல்ல,மாறாகப் போரைத் தடுப்பதற்கு!

புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் நார்மண்டியை மட்டுமல்லை வியாட்நாமிலும் போய் புதைகுழிகளை ஆய்வு செய்து,"மாவீரர்களை"த் தயார் செய்வது மகத்தான தமிழ் தேவைதாம்!

வாழ்க:

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!"

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2006

Saturday, November 25, 2006

ரீ.பீ.சீ: வானொலிக்கான தோழமை!

ரீ.பீ.சீ: வானொலிக்கான தோழமை!


பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.

இதுவொரு சாபக்கேடான இழி நிலை.

ரீ.பீ.சீ.வானொலியானது புலிக்கு எதிரானவொரு வானொலியாகக் கருதப்பட்டாலும் அந்த வானொலியானது முழுமொத்த தமிழ்பேசும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான புலிகள் அமைப்பைப்போலவே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகச் செயற்பட்டது.எனினும் அந்த வானொலியின் குரல் வளையை நெரித்தெறியும் உரிமை எந்தக் கொம்பர்களுக்கும் கிடையாது.அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம்.அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எந்தக் காரணத்துக்காகவிருந்தாலும் அதை நாம் வன்மையாகக் கண்டிப்பதும்,மாற்றுக் கருத்துக்கள்-அது எவையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கான உரிமையை எவரும் காவுகொள்ள அனுமதித்து வாளாதிருக்கமுடியாது.

இன்று, நாம் பொல்லாதவொரு அரசியல் அராஜகத்துள் வாழுகிறோம்.தமிழின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகமானது தேசம் கடந்து தனது கோரப் பல்லை நீட்டிக் கொண்டிருக்கிறது.இத்தகைய கொடிய பற்கள் எங்கள் மக்களின் எத்தனை தலைகளை உருட்டியது!இன்னும் எத்தனை தலைகளை உருட்டப்போகிறது?

தமிழ்த் (வி)தேசியவாதமானது அப்பாவி முஸ்லீங்கள்மீது அத்துமீறி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து,அவர்களை நாதியற்றவர்களாக்கி, அடித்து வெருட்டுகிறது.எதிர்க்கருத்துடைய தமிழ்பேசும் மக்களை நாயிலும் கேவலமாககச் சுட்டுக் கொல்கிறது. இதுவென்ன அரசியல்?,இதை இன்னும் அனுமதிக்க முடியுமா-தமிழின் பெயரால்,இனத்தின் பெயரால்,தேசத்தின் பெயரால் அனுமதிக்கமுனையும் ஒவ்வொருகணமும் நமது மக்களின் அழிவைத் துரிதப்படுத்துகிறோம்!


இது ,நாம் ஆற்றும் மிகப்பெரிய துரோகமான இழி செயல் இல்லையா?

எங்கள் மண்ணில் குருதியாறைத் திறந்துவிட்ட தமிழ் விதேசிய அதிகாரமையங்கள் அராஜகத்தை-பாசிசத்தை உலகம் முழுவதற்குமான சங்கிலித் தொடர் நகர்வாக்கிக் கருத்தியல் பரப்புரையைச் செய்வதற்கான தடைக்கல்லாகச் செயற்படும் மாற்று ஊடகங்களை, இல்லாதாக்கும் நகர்வில் தனது வலுக்கரத்தைப் பதிப்பது நமக்கு புதிதில்லைத்தாம்.என்றபோதும் இந்தத் தமிழ் மொழி ஊடாகக் கோடு கிழித்து,மக்களின் உரிமைகளைக் காவுகொண்டு தமது நலனை அடைய முனையும் தமிழ்ப் பாசிஸ்ட்டுகள்-மற்றும் ஆளும் வர்க்கமானது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவரும் தொடர் காரியத்தைத் தன்னையும் அறியாது ஆற்றிவருகிறது.ரீ.பீ.சீ.வானொலிமீதான நேற்றைய (24.11.2006)காட்டுமிராண்டித் தாக்குதலானது மிகவும் கொடூரமானதாகும்.இது மக்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயற்பாடுதாமென்பதில் இருவேறு கருத்து நிலைக்க முடியாது.

இத்தகைய தாக்குதல்களைப் பாசிசப் புலிகள் போன்றவொரு அமைப்பினால் மட்டுமே ஐரோப்பாவில் நிகழ்த்த முடியுமென்பதும்,சாதரணமான மக்களின் எந்த முனைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கான எந்தச் சாத்தியமும் மேற்குலகில் இல்லையென்பதும் நாம் புரிந்துகொள்ளத்தக்கதே!

ரி.பீ.சீ. வானொலி மீதான இந்தத் திடீர் தாக்குதலானது "மாவீரர்"தினக் கூத்துகக்ளை அது(ரீ.பீ.சீ.) கறாராக அம்பலப்படுத்துவதும் கூடவே பிரபாகரனின் அம்மணமான அறிவிலித்தனமானவுரைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு சூழலை இல்லாதாக்குவதாகவுமே செயற்படுத்தப்பட்டுள்ளது.நெருங்கிவரும் இன்னொரு கொடிய சூழலை நாம் மௌனமாக வரவேற்க முடியாது.

அந்த வானொலி(ரீ.பீ.சீ)வரும் 27.11.2006க்கு முன்பாக-விரைவாக வருவது மாற்றுக் கருத்துகளற்றவொரு கொடும் பாசிசச் சூழலுக்குள் இருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானது.இத்தகையவொரு நிலையில் ரீ.பீ.சீ.வானொலிக் கெதிரான தமிழ்ப் பயங்கரவாதமானதை நாம் உலக அரங்கில் அம்பலப்படுத்தி,அந்த வானொலிமீதான தாக்குதல் மாற்றுக்கருத்துக்கு-ஜனநாயகத்துக்கு,மக்களுக்கெதிரானதாகவே நாம் பிரகடனப்படுத்துவோம்.

இந்தவொரு தளத்தில் நாம் ரீ.பீ.சீ.க்கு ஆதரவாகக் கத்தவில்லை,மாறாக மாற்றுககருத்துக்கெதிரான-மக்களின் ஜனநாயகத்துக்கெதிரான அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகவுமே குரல் கொடுக்கிறோம்.அந்தவகையில் எமது தோழமைக் கரம் ரீ.பீ.சீக்கு உண்டு.அது அவர்களின் கருத்துகளுக்கானதல்ல.மாறாக அவர்கள் கருத்தாடும் உரிமைக்கானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
25.11.2006.

Sunday, November 19, 2006

பச்சைத் துரோகிகளின்...

பச்சைத் துரோகிகளின் இச்சைக் கனவுகள்!


தமிழ் பேசும் மக்களின் பரம விரோதிகள் சிங்கள ஆளும் வர்க்கமும் உலக ஏகாதிபத்தியங்களும், புலித்தலைமையுமென்றே நாம் பல் முனைகளில் உரையாடியுள்ளோம், இப்போது இவர்களின் ஏவல் நாய்கள் பலரைப் பச்சையாக இனம் காணத்தக்க சந்திப்பொன்று கடந்த 11, 12 நவம்பர் 2006 இல் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் "இலங்கைத் தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வும், புலம்பெயர் வாழ் தமிழ்பேசும் மக்களினது பங்களிப்பும்"
என்ற தலைப்பில் ஒன்றுகூடிய பதவிவெறிப்பிடித்த ஓடுகாலிகள்,ஒட்டுண்ணிகள்,கைக்கூலிகள்,மற்றும் கடைந்தெடுத்த அரசியல் விபச்சாரக இடைத் தரகர்கள், இலங்கைத் தேசத்தின் முழுமொத்த மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுவேண்டிச் சிந்தித்து "ஆய்வுக்" கட்டுரைகள் வாசித்தும் கூடவே தமிழர்களின் "ஜனநாயகத் தலைவர்"(புகலிடத் தமிழரிடம் தட்டிப்பறித்த "கடிதக் காசுப் புகழ்" ஆந்தைச்சங்கரி)ஆனந்த சங்கரியார் தலைமையில் "தீர்மானங்களும்" பத்து அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டனவாம்.இது சரியான புல்லரிக்கும் ஒரு "ஜனநாயக"
ஒன்று கூடலாகும்!


புல்லர்கள்கள் பலர் ஒன்றுகூடித் தமிழ்பேசும் மக்களின் மிச்சசொச்ச அமைதியையும் 'எங்ஙனம் கெடுத்துத் தமது தேவைகளை நிறைவுப்படுத்தலாமெனச்' சந்தித்துப் பேசிய இந்த நிகழ்வையும்,இவர்கள் பம்மாத்துப்பண்ணிய "தீர்மானத்தையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்" நாம் உடைத்துப்பார்ப்பது மிக மிக அவசியமாகும்.


இந்தப் புல்லர்களுக்குள்-அரசியல் கிரிமனல்களுக்குள்,கைதேர்ந்த தொழில் முறை அரசியல் மாபியாக்களுக்குள் அப்பாவித்தனமாகச் சரடுவிடும் பிரான்ஸ் வாழ் நம்ம கூட்டாளிகளும் பம்பலாகக் கருத்துக்கள் சொல்லியிருக்கினம்.இந்த இவர்களின் பம்பலான வருகையையும்,
கட்டுரைகள் வாசிப்பையும் கண்டு, உச்சத்தில் உசக்கப்போய் ஆனந்தசங்கரி,குமாரதுரை போன்ற எச்சில் பேய்கள் தம்மையும் அறியாது தமது எஜமான விசுவாசத்தைச் செவ்வனவே செய்து முடிக்க,அதையும் மக்களின் மகத்தான வெற்றி,அவர்களின் அபிலாசைகளின் எதிரொலியெனப் புலம்பும் ஆனந்தசங்கரியின் தேனீ இணையமும் இன்னொரு புதுக் குழிப்பறிப்புக்கு உடந்தையாகக் கொட்டும் கேணைத் தனமான இந்தத் "தீர்மானங்களையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்"(கோரிக்கைகள் யாரிடம் விடப்படுகிறதென்று தெரியாதிருப்பினுங்கூட) நாம் சற்று உடைத்துப் பார்ப்பதும் அதனு}டே இந்தத் துரோகிகளும் புலித்தலைமையைப் போன்றே தமிழ்பேசும் மக்களின் எதிரிகள்தாமென்று நாம் நிறுவிக்காட்டுவது மக்களின் விடுதலைக்கு அவசியமாகும்.


பண்டுதொட்டு துரோகத்தையே அரசியல் தாரக மந்திரமாகக் கடைப்பிடித்துவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியானது அதன் தாய்க்கட்சியிடமிருந்து கைமாற்றிக்கொடுக்கப்பட்ட ஏகாதிபத்தியச்
சேவையை நன்றாக செய்துவருகிறது.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைக்குச் சிங்களத் தேசியத் தலைவர்கள்(பண்டா செல்வா ஒப்பந்தம்) போட்ட ஓரளவு முற்போக்கான ஒப்பந்தங்களையெல்லாம் அமெரிக்காவோடிணைந்து செயலிழகச் செய்து, கிழித்தெறிய வைத்தவர்கள் இந்தக் கூட்டணியினரும் இவர்களின் முதுபெரும் தலைவர்களும்தாம்.நாம் வரலாற்றிலிருந்து இதை மறப்பது கொடுமை!இதைப்பிறிதொரு கட்டுரையில் பேசுவோம்.இனி விஷயத்துக்கு வருவோம்.


தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போர் இதுவரைகாலம் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலியெடுத்துள்ளது.மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட அனைத்துவகை இயக்கங்களும் கணிசமானளவு மக்களை நரவேட்டையாடின.சிங்கள அரசோ தொழிமுறைப் படுகொலைகளையும்,திட்டமிட்ட குடியழிப்புகளையும் இவர்கள் மூலமாக ஒப்பேற்றியது-ஒப்பேற்றுகிறது.தமிழ்பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரமும் அழித்தொழிக்கப்பட்டு,அவர்கள் அகதிகளாகவும்,நாடோடிகளாகவும் உயிர்காக்கும் பொருட்டு அலையும்போது இந்தப் பேய்கள்"தீர்மானங்கள்"நிறைவேற்றுகிறார்களாம்-"கோரிக்கைகள்" விடுகிறார்களாம்!


உலக ஒடுக்குமுறையாளர்கள் தமது உள்ளுர் அடியாட்களுக்குப் பதவிகள்,பட்டங்கள்,அன்பளிப்புகள்,பரிசுகள் வழங்க அதையேற்கும் உள்ளுர் அடிவருடிகளிலொருவன் ஆனந்தசங்கரி!தான் தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்ல,இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரிதாமென நிரூபிக்கும் பரிசினை ஏற்கிறான்.

"1. இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்."


இதைத்தாம் காலகாலமாகச்"சோஷலிச ஜனநாயகக் குடியரசு"என்ற போர்வையில் இலங்கை அரச சாசனங்களும் நமக்குச் சொல்கின்றன.நம்ம ஆனந்த சங்கரியாரும் இந்தச் "சோசலிச"க் கனவினில்தாம் இப்படிச் சொல்கிறார் என்று நாம் எடுக்க முடியாது.அவரு ரொம்பக்கறாரான மனிதர்.மாமிசம் புசிக்காத மருக் கொழுந்து."இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை" உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்.

இத்தகைய உயர்ந்த மனித விழுமியங்களை இலங்கையில் ஏற்படுத்தப்படும் "சமஷ்ட்டி"முறைமையுள் உள்ளடக்கப்பட்ட முதலாளித்துவ எல்லைகள் காத்து,இலங்கை வாழ் அனைத்து மக்களையும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ அனுமதிக்குமா? "சமத்துவம்"என்பது என்ன?கூட்டணிப் பேய்கள் 70க்கு முற்பட்ட காலங்களில் காட்டிய சமபந்திப் போசனமா இந்தச் சமஷ்ட்டி,சமத்துவம்-மண்ணாங்கட்டி?


மக்களின் அன்றாட வாழ்க்கை இத்தகைய அதிகாரத்திலுள்ள கட்சிகளாலும்,அதன் பின்னால் ஒளிந்துள்ள ஆளும் வர்க்கத்தாலும் அவர்களில் வேட்டை நாய்களான ஆயுதம் தரித்த அடியாட் படையாலும்,சட்டங்களாலும்,உலக வல்லரசுகளின் பொருளாதார ஆர்வங்களாலும் அழித்தொழிக்கப்படும்போது-சிங்கள இனவாத அரசுகளின்,கட்சிகளின் அத்துமீறிய அதிகாரத் திமிரானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை இனத்துவ நோக்கோடு இரண்டாம்தரப் பிரஜைகளாக்கி அழித்தொழித்துவரும்போது,இதை அநுமதித்து ,இத்தகைய கட்சிகளோடு சகஜமாக உறவாடிப் பதிவிகளையும் வாழ்க்கை வசதிகளையும் தேடிய இத்தகைய ஆனந்த சங்கரிகளும், அவர்களின் அடிவருடிகளும் இன்று மக்களின் சமத்துவத்தை,இனவொற்றுமையை,வர்க்கபேதமற்ற மற்றும் இன,மத,மொழி,சாதி பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்தப் "புலிப் பயங்கர வாதம்தாம்" தடையாக இருப்பதாக பிதற்றுவது மிகவும் உள்நோக்கமுடையது.


இவர்கள் முன்வைத்த தீர்மானங்களே வெறும் வெற்று வார்த்தைகள்தாமென்பதை நாம் மிக இலகுவாக இனம்காணத்தக்க இவர்களின் அரசியல் அறிவே சாட்சியாக இருக்கிறது.மக்களின் சமத்துவமான வாழ்வும்,இன ஐக்கியமும்,பொருளாதார ஏற்றதாழ்வுகளும் நீங்கக்கூடியவொரு அரசியலானது ஓட்டுக்கட்சி அரசியலுக்கும்,பாராளுமன்றச் சட்டவாக்கத்துக்கும் அப்பாற்பட்டதாகும்.இல்லை இத்தகைய சமுதாயத்தை முதலாளித்துவ ஒட்டுக்கட்சி,பாரளுமன்ற அதிகாரங்களால் நிறுவ முடியுமென்றால் இவர்கள் அதை உதாரணத்தோடு முன் மொழிவதற்கும் இன்றையவுலகில் அப்படியெந்த அரசுகளுமில்லை.அடிக்கடி இத்தகைய துரோகக் கும்பல் இனம் காட்டும்,உதாரணப்படுத்தும் இந்தியாவையே உதாரணமாகக் கொள்வேமெனில்,உலகத்திலேயே மிகவும் கொடூரமான அடக்குமுறை நிலவும் நாடு நம்ம பாரத தேசம்தாம்.இந்திய அரசின் எந்தவொரு மாநிலமும் மக்களைச் சுரண்டாது,அடக்கியொடுக்காது,மத,சாதி,இன ஒடுக்குமுறையற்று நல்லாட்சியையும்,மக்களின் சமத்துவத்தையும் தரவில்லை!மாறாகச் சாதிய மற்றும் மத,இன, ஒடுக்குமுறையையும் ஒருங்கே வலுப்படுத்திக்கொண்டு உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுத்துவரும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கமானது மனித சமூகத்துக்கு மிகவும் எதிரானவொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.இத்தகைய நகர்வில் இந்திய

ஓட்டுக்கட்சி அரசியலே மிகவும் கொடூரமான அடக்குமுறைக் கிரிமனல்களால் வழிநடத்தப்பட்டுச் சட்டபூர்வக்கிரிமனல் அரச வன்முறை ஜந்திரத்தால் தூக்கி நிறத்தப்படுகிறது.


தமிழ்நாட்டை உதாரணமாகக் கொள்வோமானால் ஓட்டுக்கட்சி அரசியலானது மக்களின் அனைத்துவுரிமைகளையும் தட்டிப்பறித்து,பண்பாட்டு ஒடுக்குமுறையை எங்ஙனம் செய்கிறதென்பதை நாம் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் திரண்டிருக்கும்(மக்கள் சொத்தைத் தமதாக்கியது) நிதியானது நம்மைத் திகைக்க வைக்கும் பெரும் மூலதனமாகும்.இத்தகைய மூலதனத்தைக் குடும்பச் சொத்தாக்கிய பெரும் கட்சித் தலைவர்கள்(கருணாநிதி,ஜெயலலிதா) பல இலட்சம் கோடிகளைத் தமது வாரீசுகளுக்குத் தாரவார்த்துக் கொடுத்துவிட்டு,மக்களை தினமும் பட்டுணிச் சாவுக்குள் தள்ளி ,அவர்களை அடிமைப்படுத்தும் பொருளாதார வாழ்வை உறுதிப்படுத்தும்போது நமக்கு இத்தகைய ஆனந்தசங்கரிகள் சொல்லும் சமத்துவம் என்னவென்பது புரிகிறது.இன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது எஜமானர்களுக்குச் சேவகம் செய்த காலம் போய் தாமே மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமது பொருளாதார நன்களை முதன்மைப்படுத்தும் அரசியலில் மக்களின் உரிமையென்று என்ன மிஞ்சியுள்ளது?


சன் டி.வி மற்றும் ஜெயா டி.வி களைப் பார்ப்பவர்களுக்கு அநுபவமாவது என்ன?அவதிப்படும் மக்களின் வாழ்வைத் திவசம் செய்யும் இந்தக் கேடுகெட்ட ஓட்டுக்கட்சி அரசியலும் அதற்குச் சேவகஞ் செய்யும் அடியாட்படையும் நம்ம கண்களில் வெறும் காட்சிகளையாவுருவாக்கின்றன?அவை நமக்கு "அடங்கி வாழ்,இல்லையேல் அடக்கப்படுவாய்"என்று சொல்லவில்லையா?


கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இவற்றின் இயக்குனர்கள்.


இத்தகைய கட்சிகளின் ஆசியில் நலம்பெற்று,இன்னும் பதவி-பணம்பெற விரும்பும் இன்னுமொரு சமூகவிரோதக் கும்பல் மக்களின் உரிமைகளைத் தமது வரும்படிக்காகத் திட்டமிட்டுச் சிதைக்கிறர்¡கள்.இவர்கள் மக்களுக்குள் ஒளிந்திருந்தபடி அந்த மக்களையே கொலைசெய்து அவர்களின் குருதியில் தமது குடும்ப நலத்தைத் தக்க வைக்கிறார்கள்.இத்தகைய மனித விரோதக் கும்பலில் ஒன்றுதாம் ரீ.பீ.சீ.வானொலி மற்றும்"தேனீ-ஆனந்தசங்கரி" இணையத்தளம்.


"2.ஜனநாயக உ¡¢மைகள், மனித உ¡¢மைகள், அடிப்படைக்

குடியூ¢மைகள் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் செய்தல்."



ஐயோ பாவத்தை!


ஜனநாயகம் என்றால் என்னவென்றே புரியாத கொடும்பாவிகள் ஜனநாயகத்தையும், மனிதவுரிமையையும்,அடிப்படைக் குடிசார் உரிமையையும் ஒன்றுக்கொன்று எதிராகவுணருவதையும்,இவைகளைத் தனித்தனியலாகாக் காணும்போது இவர்கள் ஜனநாயகமென்றால் வெறும் அரசியல்வாதிகளின் கொழுப்பெடுத்த உளறுமொழியாக உறுதிப்படுத்துகிறார்கள்போலும்.இது என்னமாதிரியென்றால் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தில் ஜனநாயகமென்பது அவர்களது ஆர்வங்களைக் குறித்த நலன்களை வென்றெடுப்பதற்கான ஒரு கருதுகோளகவே அர்த்தப்பட்டிருக்கிறதென்பதை மிகத் தெளிவாக ஆனந்த சங்கரியார் தன் வாயால் குறித்துரைப்பதாகப் படுகிறது.அடிப்படைக் குடிசார்(சிவிலுரிமைகள்)உரிமைகளைத் தகவமைத்து மக்களின் பொருளாதார வாழ்வை அவர்களின் பரிபூரணமான சுயவெளிப்பாட்டோடு அவர்களே அனைத்து வளங்களையும் துய்ப்பதற்கும்,பாதுகாப்பதற்கும்,பங்கிடுவதற்குமாக அர்த்தப்படும் ஜனநாயகம்தாம் உண்மையான ஜனநாயகமாகவுணரப்படுகிறது.அது ஒரு வாழ்வு முறையாகப் பொருளாதாரவுற்பத்தியோடு மக்களின் மிகத் தெளிவான ஆன்மீகவாழ்வாக விருத்தியாகிறது.இதுவே மக்கள் தமக்கும் இந்தப் பொருளுலகத்துக்குமான தொடர்பாடலாகவும்,இடைச்செயலாகவும் பொருளுற்பத்தில் தனது ஆத்மீகத் தேவையை இனம் காணுகிறது.இதைச் செக்குமாடுகளான ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் தத்தம் பிழைப்புக்கான சொல் அலங்காரமாக நமக்குள் குறித்துரைக்கும்போது,இவர்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எங்கே நிற்கிறார்கள் என்று நம்மால் உணரமுடிகிறது.



"3. பாதுகாப்பு, நிர்வாகம் உட்பட சகல துறைகளிலும் இன விகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல்."


இங்கு பாதுகாப்பு என்பதைப் பார்த்தோமானால்,இவர்கள் கூறும் "பாதுகாப்பு" யாருடைய பாதுகாப்பு என்று தெள்ளத் தெளிவாகும்.இந்தப் பாதுகாப்பு தேசத்தினதோ(தேசிய அலகுகளைக் காத்தல்) அல்லது மக்களினதோ கிடையாது.மக்களையும் தேசத்தையும் அந்நிய முதலீட்டாளர்களும், அடிவருடித் துரோகக் கும்பலும் ஒட்டச் சுரண்டவும், வழிவகுத்துக்கொடுக்கவும் இந்த இலங்கை அரசியல் சட்டவாக்கம் மற்றும் ஓட்டுக்கட்சி அரசியலும் இங்கே பாதுகாப்பென்பதாகப் பூச் சுற்றுகிறது. அந்நிய மூலதனத்தைப் பாதுகாப்பதும் அவர்களுடைய கனவுகளை ஒழுங்கிற இயங்குவதற்குமான புறநிலையைத் தோற்றுவிப்பதும், அதைப் பாதுகாப்பாக நிலை நிறுத்துவதுமே பாதுகாப்பென்பதாகும்.மற்றும்படி உழைத்துவாழும் இலங்கைப் பிரஜைக்கு இந்தப் பாதுகாப்பு விலங்கைத் தீர்மானிக்கும் ஒழுங்குகளையே கொண்டிருக்கிறது.இத்தகைய பாதுகாப்பு,நிர்வாகத்துக்கு இன விகிதாசார அடிப்படையில் அடியாட்படைகளைத் திரட்டுவது எங்ஙனம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்?ஒடுக்கப்படும் மக்களை இன்னும் வலுவாக ஒடுக்குவதற்கான முகாந்திரம் இந்தப் பாதுகாப்பு,இனவிகிதாசாரம் என்ற கோதாவுக்குள் நிலவுகிறது.மக்களைத் திட்டமிட்டு ஒடுக்கிவரும் இலங்கைத் தரகு முதலாளியக் கட்சிகளின் தார்ப்பாரில் தினம் பலிக்கடாவாக்கப்படும் உழைப்பாளிகளினது குழந்தைகளைப்"பாதுகாப்பு"எனும் போர்வையில் யுத்தத்துக்கு அணிதிரட்டுவது மற்றும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு படைகட்டுவதாகவே இந்தப்"பாதுகாப்பு"அர்த்தப்பட்டிருக்க இதை மக்களுக்கான பாதுகாப்பாகப் பம்மாத்துப் பண்ணும் ஆனந்தசங்கரிகளை மக்களாகிய நாம் நன்றாகவே இனம்கண்டு வருகிறோம்.



"4.அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைந்து தமிழ் பேசும் மக்களை ஒருமுகப்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் சமூக கலாச்சார உறவுகளைப் பலப்படுத்துதல்."


மீண்டும் மந்திரத்தில் மாங்காய் பறிக்கிற கதையை விடுகிறான்கள் டோய்!"அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக்..."அனைத்து தமிழ் பேசும்...அட பாவிகளே! தமிழில் எத்தனை பிரிவுகளடா இருக்கு?என்ன சொல்ல வாறாங்கள்?தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அனைத்து வேறுபாடுகளைக் களைந்து... என்று சொல்லிக் கொள்ளும் மொழித் திரணியற்றுத்"தீர்மானங்கள்"எழுதுகிறவன்கள் நம் மக்களின் உரிமைகளுக்காகக் கட்சி கட்டுகிறான்களாம்!


"கரியவன் புகையினும்,புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும்,கிழாரும்,வீங்கிசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனி செந்நெல்,கரும்புசூழ் மருங்கிற்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும்,கனைகுரல் நாரையும்,
செங்கால் அன்னமும் பைகாற் கொக்கும்,
கானக் கோழியும்,நீர்நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும்,புள்ளும்,புதாவும்,
வேல்போர் வேந்தர் முனையிடம் போலப்,
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும்..."


என்று இளங்கோவடிகள் ஒரு தேசத்தின் வளத்தைச் சிலம்பினில் சொல்வதுபோன்று ஒரு நிலைக்கு இந்த இலங்கை மாறுகிறபோதும் தமிழ்பேசும் மக்களுக்குள் பற்பல வேறுபாடுகள் நிலவியே தீரும். இது வெறும் கட்சியாலோ அல்லது அரசுகளாலோ தீர்க்கத் தக்க செயலல்ல. இதை மாற்றவேண்டுமானால் சமூகத்தை மாற்றியாகவேண்டும்.சமூகத்தை மாற்றுவதென்பது நிலவுகின்ற பொருளாதாரப் பொறிமுறையை அகற்றி அதற்கு மாற்றான பொருளாதாரப் பொறிமுறைகளை உற்பத்தியல் ஈட்டுவதாகும்.இங்கே எந்தவொரு சமுதாயமும்,தனது வேறுபாடுகளையும்,மக்கள் விரோதக் கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தைத் தகர்க்கவேண்டுமாயின், அதை முற்றுமுழுதாகப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் சமுதாயப் புரட்சியில் ஈடுபட்டாகவேண்டும்.இதுவே புதிய சமூகக் கண்டோட்டத்தையும்,மக்கள் பண்பாட்டையும் கோரிக்கொள்ளும் புதிய பொருளாதாரவுறுகளைக் கட்டியமைத்துத் தேசத்தை புதிதாகப்படைக்கும்.அங்கே மக்களை மந்தைகளாக்கும் ஓட்டுக்கட்சியரசிலுக்கு வேலையிருக்காது.இதைச் சொல்வதாக, ஆனந்த சங்கரியின் தீர்மானங்களைக் கருதிக்கொள்ளும் மனத்தில் மக்களிருப்பதாகக் கனவோடு வலம்வரும் எம் பெருமான் ஆனந்தசங்கரிக்குப் பதவியென்பது மக்களின் மரணத்தில் கொட்டிக் கொடுக்கப்படும் ஒரு பரிசுதாம்-யுனெஸ்கோ விருதுபோல! ஏகாதிபத்தியங்களின் தயவில் எவரெவரோ இடும் பிச்சையில்லைத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகள்.அவற்றை அவர்களே தமது உழைப்பினால் தீர்மானிப்பதும்,மாற்றியமைப்பதும் அவர்களது ஜீவாதாரவுரிமையின் வெளிப்பாட்டில்தாம் நிகழுமே தவிர மாறாக எந்தத் தீர்மானங்களாலுமல்ல.மக்களை இன்னும் விட்டேந்திகளாகக் கற்பனையில் உலாவரும் இத்தகைய மோசமான மனிதர்களால் மக்கள் தமது வாழ்வையே இழந்து நடுத்தெருவுக்கு வந்ததுதாம் மிச்சமானது.இதை மாற்றியமைக்கும் எந்த முன்னெடுப்புமற்று ஓட்டுக் கட்சிகளுக்கே இருக்கும் நயவஞ்சகத்தனமான ஏமாற்றுத் தீர்மானங்களை மீளவும் கயிறுவிட்டுக் கருத்துக்கட்டும் இத்தகைய அரசியல் மாபியாக்களை நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் ஒரு அவசியத் தேவையாகும்.


பெரும்பான்மைச் சமூகத்தோடா அல்லது பெரும்பான்மைச் சமுதாயத்தோடா,இனத்தோடா அல்லது இனக் குழுவோடா சமூக் கலாச்சாரவுறுவுகளைப் பலப்படுத்திப் பேணவேண்டும்?


இதை முதலில் தீர்கமாக முடிவெடுத்துக்கொண்டு அங்கே நிலவும் பொதுக் குழுமத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வரலாற்றில் தமிழினமும்,சிங்களவினமும் தற்போதைய நிலைக்கு எத்தகைய பங்களித்துள்ளனவென்ற சமூகப் புரிதலையும் விமர்சித்துக்கொண்டு-எங்கே,எப்படி இத்தகைய முரண்பாடுகள் தோன்றின?இவைகளைத் தோற்றுவித்த சமூகக்காரணியென்ன,இவற்றுக்கும் இன்றைய பொருளாதார நலத்துக்கும்,அதைக் காத்துவரும் அரசுக்கும் என்ன உறவுகள் என்றும் தீர்மானங்களில் மொழிந்தபடி கொஞ்சம் ரீல் விடலாமே?

மனிதவிரோதிகளின் இத்தகைய பொய்மைகளை அகநானூறில் இப்படிக் காணலாம்:

"புலிபுலி யென்னும் பூச றோன்ற
வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித
மூசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்
டியதோ மற்றிம் மாதிறம் படரென
வினவி நிற்றித் தோனே..."அகம் 48


பத்தம்சக் கோரிக்கையின் உடைப்புத் தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

19.11.2006

Saturday, November 11, 2006

"மாமனிதர்களும்"...

"மாமனிதர்களும்"
மடியும் மழலைகளும்!


"மாமனிதர்",
"மாவீரர்",
"பூமிப் புத்திரர்"
"தேசப் பற்றாளர்".

யாரடா இவன்கள்?

மக்களை மாய்க்கும்
மந்தைக் கூட்டமெல்லாம்
மடையர்களின் சபையில்
மதிக்கப்பட்டால்
மக்களின் மரணத்துக்கு மதிப்பு என்னடா??

மரணங்களும் மறைவதாகவில்லை!


மெளனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை
எத்தனை உயிர்கள் இழந்தாலென்ன
எந்தன் தேசம் யுத்தத்தில் கோடியுழைக்கும்

இருந்தும்,

கட்டைவிரலை வெட்டிக்கொடுக்கும்
ஏகலைவன்கள் துணையாய் வாய்க்கப் பெற்ற
துரோணர் இராஜபக்ஷ துடியாய்த் துடிப்பது
தமிழர் பட்டுணி திறப்பதற்காம்


வஞ்சக நெஞ்சுடையோரே!

எத்தனை காலம் எய்திடுவீர்
எம் தலையில் ஏவுகணையும்
ஏய்த்திடும் அரசியல் வஞ்சனையும்
மாய்த்திடும் கொடும் பஞ்சத்தையும்?

பட்டோம் கோடி துன்பம்
ஈழமென்ற கோசமொன்றால்!
ஊரிழிந்தோம் உறவிழந்தோம்
நாடிழந்தோம் அகதியானோம்
அவதிப்பட்டோம்

ஆத்தையும்
அப்புவும் ஆச்சியும் அடுப்பெரிக்க
வெள்ளைத் தேசங்களின் நெருப்பிலுருகினோம்...

எங்கள் மழலைகளும்
அப்பு ஆச்சி
உறவறியா அகதியாக...

சொன்னவன் எவன்டா
தேசத்துக்காய் செத்தான் சொல்!!

பதவிவெறிக்கும்,பகட்டு வாழ்வுக்கும்
பாதிவழியில் தட்டிப் பறிக்கும் பதவிப் போட்டிக்கும்
மரிப்பவனெல்லாம் மக்களுக்காய்ச் செத்தவனென்றால்
இரஞ்சன் விஜெயரெத்தின முதல்
அத்துலத்து முதலியீறாய்
காமினியும் பிரேமாவும் மக்களுக்காய் மடிந்தவரே!

சோரம் போனவ(ள்)ன்கள் சொல்லிய சொற்ப நொடியுள்
சோக்காய்ப் பறந்த சிங்கக் கொடியுள் தோரணைகட்டி
சொகுசு வண்டி,மெய்கும் சிங்களப் படையின்
செல்லப் பாதுகாப்பாய் பவனி வந்து செத்தாலும்

மெல்லச் சொல்லும் ஒரு கூட்டம்:
"மக்களுக்காய் குரல் கொடுத்த" மாவீரன் என்றபடி...
பச்சைத் துரோகிகளின் இச்சையெல்லாம் இப்படியே!
"தன்வினை தன்னைச் சுடும்"தர்மத்தின் விதியுள்
மாய்ந்துபோகினும்"மாமனிதர்"பட்டமொன்றை
மளமளவென்று கொடுத்திடுவான் தேசியத்தின் தலைவனாம்!

மக்களென்ன மண்ணாங்கட்டியென்ன
மரணித்த கையோடு காடாத்திச் சாம்பலையும் ஆற்றிலிட்டு
அடுத்த இழவைப் பார்த்துவொரு நகர்வை
நன்றாய்த் திட்டத்தோடு வகுத்து வை!

கொத்துக் கொத்தாய்ச் செத்து மடியும் செல்லக் குஞ்சுகள்
சூழ்ச்சிகளின் சூத்திரத்தைப் புரிவதற்கில்லை
அந்த நொடியிலும் ஒரு குவளை சோற்றுக்கு அழுதபடியே மாண்டிருப்பார்கள்
அதைச் செய்து முடிக்கும் அரசியலுக்கு நீயோ
அல்லது அவர்களோ பொறுப்பில்லை

மாமனிதர்கள் இல்லைத்தானே
மழலைகள் மண்டையிலிருந்துதிரும் மயிர்தானே?
மக்களென்றால் "மாமனிதரின்"மசிரைவிட முக்கியமா??
மருந்துக்கும் மதிக்காதே, விசாரணைக் கமிஷன் போதும்

ஜனநாயகத்தின் தொட்டில் நாடாளுமன்றம்
நல்ல"மாமனிதர்கள்"மக்களுக்காய் ஓடாய் உழைக்கும்
உலகுக்கு உரக்கச் சொல்லும்
உரிமைக்கு குரல் ஒலிக்கும் கூடம்

ஒருவராய் இருவராய்
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட "மாமனிதர்கள்" அவர்கள்
மடியும்போதும் மக்களுக்காய் செய்த பணி
மக்களுக்கு "மரணத்தைத் தடுக்குமொரு
தக்க அரசியலே!",இல்லை???

தக்க தரணத்தில்
தவறின்றிப் போற்றுதலும்"போடுதலும்"
பொய்யின்றிப் மக்களுக்குப்"பூச் சுற்றுவதும்"
இந்தப் புண்ணிய புத்தனின் பூமியில்
பொழுதெல்லாம் பூஜையென கொள்க!

"மாவீரருக்கு",
"தேச புத்திரருக்கு",
"மாமனிதர்களுக்கு",
"தேசப் பற்றாளர்களுக்கு"
ஆயுதமும்,அதிகாரமும் துணையிருக்கு

அவதிப்பட்டு அழியும் மக்களுக்காய்-
மரணிக்கும் மழலைகளுக்காய்
இந்த மெளனங் கலைத்த
உணர்வுக் கொதிப்பு அர்ப்பணமாகுக!!!



ப.வி.ஸ்ரீரங்கன்
11.11.2006

Sunday, November 05, 2006

மக்கள்,யுத்தம் மற்றும் ஈழம்.

மக்கள்,யுத்தம் மற்றும் ஈழம்.

ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் தோல்விக்குப் பின்பு எந்த முன்னேற்றமும் இலங்கை இனப் பிரச்சனயில் ஏற்படவில்லை-அப்படியேற்படுமென்றெந்த நம்பிக்கையுமில்லைதாம்.இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாடானது கணிசமான தமிழ் பேசும் மக்களை நாடோடிகளாக்கியதும்,ஒரு இலட்சத்துக்கு மேலான தமிழர்களைப் படுகொலை செய்ததும்,அப்பாவிச் சிங்கள இளைஞர்களை அழித்ததுமே வரலாறாக நிலவுகிறது.இதன் மறைமுக நலனானது ஒருசில பெரும் முதலாளிகளைத் தமிழ் இயக்க வாதிகளுக்குள் தோற்றுவித்ததும் கூடவே ஒரு சிலகற்றுக்குட்டிகளை "தமிழரின் "மேன்மை"உடையவர்களாக்கியும் உள்ளது.சிங்கள தரப்பில் பாரிய தரகு முதலாளிகளையும்,தான்தோன்றித் தனமான அதிகார வர்க்கத்தையும் பெரும் செல்வச் செழிப்பிலாக்கியுள்ள இந்த இனப்போராட்டமானது, சாரம்சத்தில் தவறான பாதையில் சென்றதன் விளைவுகள் நமது முகத்தில் ஓங்கியடிக்கிறது.

புரையோடிப்போன யுத்தம்:

இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது தமிழர்களின் அரசியல் முன்னெடுப்பாளர்கள் பலராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.இந்தப் "பயங்கரவாதத்துக்கு எதிரான"என்ற மொழியானது அமெரிக்கப் பாணியிலானதென்ற கருத்தியில் மெத்தனத்திலிருந்து விடுபட்டு, இலங்கைத் தேசத்துக்குள் நிலவும் சிறப்பியல்புகளை-கூறுகளை மையப்படுத்திய விமர்சனப் பண்பால் நாம் உள்வாங்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? இந்தக் கேள்வியினூடு நாம் எமது அரசியல் முன்னெடுப்பைப் பார்த்தோமானால் தமிழ் பேசும் மக்களின் அரசியலானது எந்த முன்னெடுப்புமின்றி அநாதையாகக் கிடக்கிறதென்றவுண்மை முகத்தில் ஓங்கியடிக்கிறது!.மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.

இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.

இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் விய+கங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறிய+டே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.அப்படி வென்றெடுக்கப்படுமென்றால் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறும் இந்தத் தீராத யுத்தத்தால் நாம் அரசியல் மற்றும் சமூக வலுவைப் பெற்றிருக்கவேண்டும்.இத்தகைய கண்ணோட்டத்தில் நமது சமுதாயத்தை விழிக்கும் பட்சத்தில் அந்தச் சமுதாயமானது எந்த நிலையில் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டை எதிர்கொள்கிறதென்று நமக்குப் புலப்படும்.

ஒருநேரக் கஞ்சிக்கு இலங்கை அரசிடம் மண்டியிடும் இந்தத் தமிழ் இனத்தால் எந்தவொரு வலுவான போராட்டத்தையும் செய்யமுடியாது!அப்படிச் செய்யும் மக்கள் திரள் போராட்ட அணித்திரட்சியும் அவர்களிடம் இல்லை.வெறுமனவே ஒரு இராணுவ யந்திரத்தை அதனது இன அடையாளத்துடன் அது தம் மக்களின் விடுதலைக்கான "விடுதலைப் படையாக"வர்ணிக்க முடியாது.அல்லது அத்தகைய இராணுவயந்திரத்திடம் ஒடுக்குமுறைச் சிங்கள அரச இராணுவ ஜந்திரத்தை வெற்றிகொள்ளும் புரட்சிகர வேலைத் திட்டம் இருப்பதாகவும் எவரும் நம்பி ஏமாற முடியாது.புரட்சியென்பதை விட்டுவிட்டு,இன்றைய நமது போர் வாழ்சூழலுக்கு மாற்று என்பதென்ன அல்லது நாம் எங்ஙனம் எமது இந்தப் போரழிவுத் தலைவிதையை மாற்றுவதென்று சிந்தித்தாகவேண்டும்.

ஈழமா அல்லது இயல்பு வாழ்வா?


எம் மக்களிடம் இருக்கும் இன்றைய கேள்வி:


"போர் எதிற்காக?"என்பதே.


இந்தக் கேள்வி மிகவும் பலவீனப்பட்டுப்போனவொரு இனத்தின் இருத்தலுக்குரிய கேள்வியாகும்.


இதை மறுதலித்துவிட்டு எந்தக் கொம்பரும் "விடுதலை,தியாகம்"என்று தத்தமது விசுவாசத்துக்குரிய தலைவர்களுக்குக் கொம்பு சீவ முடியாது.


நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான யுத்தச் சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்-யுத்தம்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.


இந்த நோக்கத்திலான இலங்கை அரச விய+கம் மென்மேலும் மேல் நோக்கி உந்தப்பட்டு,மக்களின் சுயவிருப்பாக மாற்றப்பட்டும் வருகிறது.இதனால் நமது மக்களின்மீது இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பலாத்தகரமான அதிகாரத்துவ மேலாண்மை மெல்ல உடைபட்டு வருவதும் கூடவே அந்தவொரு சந்தர்ப்பத்தை மக்களே மேலும் வலுப்படுத்தும் தரணத்தில் "தேசிய விடுதலைப் போரை" பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தரணம் நெருங்குகிறது.இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தாக்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதாரத் தாக்குதல்களையும் எமது மக்களின்மீது திணித்து நமது மக்களை நவீனமான முறையில் அடிமை கொள்கிறார்கள்.இத்தகையவொரு நிலையை இலங்கை இனவாத அரசு முன்னெடுக்குமென்பதை நாம் பல முறைகள் கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.இந்தவொரு மையப் பிரச்சனையில் மக்கள் கிடந்து அல்லலுறும்போது எந்தத் தியாகமும்,தீரமும் கருத்தில் கொள்ளப்படாது போகும்.இந்தச் சூழலே இலங்தை மற்றும் அந்நியச் சக்திகளுக்கு மிக உறுதியானவொரு அரசியல் நகர்வையும்,அந்த நகர்வுக்கேற்ற வகையான கருத்தியல் வெற்றியையும் தமிழ்பேசும் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதை இனங்காணமுடியாதவொரு தரித்திரமான அரசியல் வெறுமையோடு நமது "இனவிடுதலைப் போராட்டம்"தொடர்ந்து யுத்தத்துள் மூழ்கடிக்கப்பட்டு,அதன் அரசியல் விய+கம் முற்று முழுதாக முடமாக்கப்பட்டு வருகிறது.


இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த ஒரு அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள் நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிகத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கித் தமது வெற்றியை அரசியல் ரீதியாகப் பெற்று நிலைப்படுத்துகிறார்கள்.இதைத் தடுப்பதற்கு வக்கிலாத ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே செல்கிறது.இது எந்தத் தரணத்திலும் இனியொரு கூட்டு ஒத்துழைப்பாக மாறி மக்களிடம் முனைப்புப் பெறுமென்று எவரும் பகற்கனவு காணமுடியாது.


இங்கேதாம் "ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தரணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இதுதாம் இன்றைய உண்மையான நிலைவரம்.இதைமீறித் தமிழ்பேசும் மக்கள் அணித்திரட்சியடைந்து ஒரு "வெகுஜன"எழிச்சியை செய்வதற்கில்லை.காலம் கடந்த ஞானத்தால் எந்தப்பலனுமில்லை.மக்களை மடையர்களாக்கிய மந்தைத்தனமான போராட்ட முறைமகள் அந்த மக்களாலேயே தோற்கடிக்கப்படும் தரணம் நெருங்கி வருவதைக்கூட அறிய முடியாத வகையில்"ஈழக்கனவு"ரீல்விட்டுக் கொண்டிருபதுதாம் இன்றைய பெரிய அவலம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
05.11.2006

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...