Sunday, March 06, 2016

தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்


 தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள் :ஈழத் தமிழ் அகதி இரவியின் (தற்)கொலை -சில குறிப்புகள்


இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான இனவொடுக்குமுறையின் சாட்சிகள் நாம்! ;உலகெல்லாம் இடம் பெயர்ந்து அகதிகளானோம். ;மேற்குலகத்தில் அகதிகளாகக் குடியேறிய நாம் ,மேற்குலகத்துப் பூர்வீகக் குடிகளுக்குள்ள அனைத்துரிமையுடனும் வாழும் மேற்குலகச் சனநாயகச் சூழலினுள் ,தம்மைப் போல் நாமும் மனிதர்களாகவேனும் வாழ அநுமதித்திருக்கும் இந்த மேற்குலகம் நமக்கு எந்தவிதத்திலும் ஒட்டோ -உறவோ கிடையாது.எனினும்,நம்மைக் காத்துத் தமது குடிகளாக அநுமதித்த தேசங்கள் நமக்கு அந்நியரே!


ஆனால்,இந்தியா ? ; தமிழ் நாடு?? நமது தொப்புட்கொடி உறவாமே? ;ஒரே இரத்தமாமே! ; பூர்வீகத் தாயகமாமே?


என்ன செய்கிறது நம்மை?

அடிமைகளாக -கொத்தடிமைகளாக நமது மக்களைச் சொந்தச் சகோதர இனமே நடாத்துகிறதென்றால் ,அத் தேசத்தின் அரசியல் -சனநாயகச் சட்டவாதத்தின் கோலம்  என்ன?


இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான தமிழின அழிப்பிலிருந்து தப்பி ,உயிர்வாழ்வதற்காய்த் தமிழகஞ் சென்ற சுமார் 3 இலட்சம் தமிழ்பேசும் ஈழமக்களும் தமிழகக் காவற்றுரையினதும் -தமிழகப் பாசிச அரசினதும் சட்டத்து இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு ,அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன.










மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, ரொயோற்ரா ஷொ ரூம் [ Toyota showroom ]பின்புறமுள்ள உச்சம்பட்டி ,ஈழ அகதிகள் முகாமில் வாழ்ந்த இரவியின் படுகொலையானது(இரவி தற்கொலை செய்தாலும் இது படுகொலையே அரசியல் ரீதியாக : https://www.youtube.com/watch?v=nuh… )இந்தத் தமிழக அரசினது அரசவொடுக்குமுறையின் திட்டமிடப்பட்ட கொலையே இது ! ;கடந்த பல ஆண்டுகளாக அகதியாகவே வைத்திருந்து நமது மக்களைக் கொத்தடிமைகளாக்கிய இந்தத் தமிழக -இந்திய அரசுகளது மனிதவுரிமை துஷ்பியோகமே இந்த நூற்றாண்டின் மிகப் பெருங்கொடுமை ; இது மனித நாகரீகத்துக்கே இழுக்கானது!


அரசியல், பிராந்திய பூகோள இராணுவ, பொருளாதார நலன்களுக்காக ஈழமக்களைத் தமிழகத்துள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கொடிய ஒடுக்குமுறையானது உலகெங்கும் காணமுடியாத ஒன்று!இது ஐ.நா. அகதிகள் குறித்த சட்டவிதிகளுக்கே முரணானது!

சதந்திரமாக நடமாடவும் ; வாழவும் ;தனி -மனிதவுரிமையை வழங்கித் தமிழகத் தமிழனுக்கு என்னவுரிமையுண்டோ அதைத் தாம் பொறுப்பேற்ற -தஞ்சஞ்கொடுத்த மக்களுக்கு வழங்க மறுத்த அரசியல் என்ன?;இது, இலங்கைப் பாசிச அரசானது ஒரு நூற்றாண்டாக மலையகத் தமிழ் மக்களுக்குச் செய்த இனவொடுக்குமுறைக்கு ஒப்பானதில்லையா?; அல்லது, அதன் எதிர் விளைவா இஃது?


தமிழக அரசு -இந்திய அரசு நமது மக்களுக்குப் பிராஜாவுரிமையை வழங்க மறுப்பதன் அரசியல் என்ன?


அவர்களைத் தீண்டத் தகதவர்காக்கிய அரசியலானது இந்திய மக்கள் தொகையில் 230 மில்லியன்கள் மக்களோடு மக்களாக்கிய அரசியலென்பதைப் புரிந்தாகவேண்டும்.அந்த 230 மில்லியன்கள் மக்கள் விடுதலையடையாதவரை -அவர்களை மானுடர்களாக இந்திய ஆளும் வர்க்க நிறுவனங்கள் அங்கீகரிக்காதவரை ஈழத் தமிழர்கட்குத் தமிழகத்தில் ஒருபோதும் மானுட சுதந்திரங் கிடைக்காதென்பதே உண்மையானது!


உணவு , உடை , உறையுள், மருத்துவம் , கல்வி , தொழில், பாதுகாப்பு, சமய வழிபாடு , போக்குவரத்து உட்பட சாதாரண ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்தும் ஈழத் தமிழ் மக்களுக்கு அறவே தமிழகத்துள் -இந்தியாவுள் மறுக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் சார்ந்த அச்சு ஊடகங்களும் முழுமையாக செயலிழக்கும் அபாய நிலை தமிழகத்துள் ஏலவே ஏற்பட்டுருக்கிறது!



அனைத்துக்குமே பிறரிடம் கையேந்தும் அடிமைத்தனம் ,அவல வாழ்வு, வெளிப்படையாக எதையும் பேச முடியாத நிலை, இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய பிச்சைக்கார வாழ்வு என, இன்றைய ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு தமிழகத்து அரசால் -இந்திய ஆளும் வர்க்கத்தால் சூறையாடப்பட்டுள்ளது! ; இந்த ஈனமிக்க அரசியலது காட்டுமிராண்டிச் சட்டத்தையும் ,அதன் சனநாயகப் போலிப் புரட்டல்களையும் ; தமிழகத்துப் போலி அரசியற் தலைவர்களையும் அம்பலப்படுத்தும் இரவியின் இந்த மரணத்தின் அரசியலானது இந்தியாவில் கொத்தடிமையாகவிருக்கும் அனைத்து மக்களதும் விடுதலையின் அரசியலாகும்; இலங்கைப் பாசிச அரசின் தமிழின ஒடுக்குமுறைக்கெதிரான அரசியலாகும்!


ப.வி.ஶ்ரீரங்கன்
06.03.2016


Saturday, February 27, 2016

இஸ்லாமியத் தகவமைப்பு : மாற்று மதத்தவர்கள்மீதான நிந்தனையும் -கொலையும்!

'07.07.2005 துன்பியல் நிகழ்வு [On the morning of Thursday, 7 July 2005, four Islamist extremists separately detonated three bombs in quick succession aboard London Underground trains across the city and, later, a fourth on a double-decker bus in Tavistock Square. ] நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'


இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம் (Chief Imam ,Dr. Khalifa Ezzat) இங்ஙனம் உரைத்தார்,கடந்த 07.07.2005 ஆம் ஆண்டு , இலண்டன் குண்டு வெடிப்புக்குப் பின்னரான உரையாடல் ஒன்றில்.



அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி[ https://en.wikipedia.org/wiki/List_… ] எங்ஙனம் நிகழ்ததென்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.


இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' சமீபத்துப் பாரிசுத் தாக்குதல் [ The Bataclan concert hall following fatal shootings in Paris, Nov. 13, 2015. ]முதல் நியூயோர்க், ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர் திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை நாம் மறுக்கவோ -மறக்கவோ கூடாது!


இத்தகைய "தற்கொலைத் தாக்குதல்" மிகக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிக்கிறத! இதுமேலும் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப்போல் அதி தீவிரவாதக்-மதவாத இசுலாத்தின் குறுங்குழுவாதப் பயங்கரவாதமானது தமிழ்நாட்டை வேட்டைக்காடகக் காணுந் தருணமொன்று தவ்ஹீத்ஜமாஅத் அமைப்புகள்போன்று , இந்தியாவில் இன்னொரு மோடித் தாண்டவத்தின் ஊற்றுக்கண்ணைத் திறக்கப் போகிறது.



நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட 'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.


இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.
இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால் (கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.



1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தத் தளத்தைமேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.


கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.


இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!


இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான 'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.


இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார். எனவேதாம் ,"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " என்று தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பு அறைகூவலிட்டு எச்சரிக்கிறது!



இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே, இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.


இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.


அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!
ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.


உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகக் காட்டுவதில் இசுலாமிய டிப்படைவாதம் மேற்குலகுக்கு உதவுகிறது - இசுரேலுக்கு உவப்பானதாக் காரியமாற்றுகிறது.


நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினுள்ளும் பலருள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.



நமது தேசங்களது எம்.எஸ்.சையது இப்ராஹீம்களது [ https://www.facebook.com/MEDIATNTJ/… ] நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் ,இசுலாத்தை ; ஷரியச் சட்டத்தை விமர்சிப்பவர்கள் சனநாயகச் செயற்பாட்டாளர்கள் - மனிதர்கள் , இவர்கள் 'பொதுத் தளத்தில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்கள்.இவர்களை இசுலாமிய அடிப்படைவாதம் உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.


இங்கே, தமிழ் நாட்டிலுள்ள இசுலாமியக் குழுக்களுக்குள் தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு! இதுவுமொரு மூலக் காரணம் ,குசாரத்து மோடியின் (இன்றைய பாரதப் பிரதமர் அவர்)படுகொலை அரசியலுக்கானதென்பதை நாம் பரவலாகச் சொல்லவில்லை!


மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,

'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம், ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'


தமிழ் நாட்டு இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளது இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.


ப.வி.ஶ்ரீரங்கன்.

Saturday, January 16, 2016

தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும்...

விழிப்போடு இருப்போம்!
தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும் அரசியல் வியூகம்!-சிறு குறிப்பு.
இன்று,தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு மட்டுமல்ல உலகம் பூராகவும் வாழும் -விடுதலைபெறத் துடிக்கும் -இனங்களைப் பிளந்தொடுக்குவதில் நிலவுகின்ற அரசுரித்துடைய இனங்கள் பல்வேறு வியூகங்களினது "தெரிவை"க்கொண்டு, வழிகளைக் கண்டடைகின்றனர்.

முக்கியமாக,கொலனித்துவக் காலத்துள் இலங்கையில் சைவக் கோவில்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டாட்டங்களைத் தடைசெய்தனர் ,கொலனித்துவ வாதிகள்.இதற்குள், இயங்கும் அரசியல் மக்களது அடையாளங்களை அழித்து, அவர்களது பண்பாட்டை இல்லாதாக்குவது.இதுவொரு இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தித் தமது ஆளுமைக்குள் கொணரும் ஆதிக்கத்தின் இருப்புக்கான தெரிவு.

இதையுரைத்துப்பார்க்க பல்வேறு ஆய்வுகள் தேவையில்லை! வெள்ளையர்கள் குடியேறிய அமெரிக்க - அவுஸ்ரேலியக் கண்டங்களில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள்மீது நடாத்தப்பட்ட கொடுமைகள் போதுமானது.தற்போது , ஈராக் ;இலிபியா ;சிரியா ;அவ்கானிஸ்த்தான் போன்ற தேசங்களில் நடந்த அடையாள அழிப்புகள் ;அதையதை வைத்தே ஒரு பகுதி மக்கள்மீது இன்னொரு பகுதியை எதிரியாக்குவது, பின்பு, இந்த அடையாளமானது "உங்களை ஒடுக்கும் " கருவியாகியதெனப் பிரச்சாரஞ் செய்து ,கருத்தியல் மட்டத்தில் அதையொரு அரசியல் ஆயுதமாக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இதன் முன்னோடிகள்.



கடந்த இருபதாண்டுகளாகபப் புலம் பெயர் மாற்றுக் குழுக்களுக்குள் நுழைந்த இந்த வியூகமானது கணிசமாக இலங்கைத் தமிழினத்தின்மீது ஏவப்பட்டும் ;பரிசீலிக்கப்பட்டும் பல பிளவுகளை த் திட்டமிட்டுருவாக்கினர் ஆதிக்க இனங்கள்.

அந்த ஆதிக்கச் சக்திகள் தொடர்ந்து ஈழமக்களது அரசியல் வாழ்வுக்குள் அமுக்கக் குழுக்களைத் தகவமைத்தனர்.அத்தகைய அமுக்கக் குழுக்களது இருப்புக்கு ,இத்தகைய அடையாள எதிர்ப்புக் கூறுகள் அவசியமாவிருக்கிறது.
பொங்கல் என்ற அடையாளத்தை ஒரு ஆதிக்கச் சாதிக் குரியதாக்குவது பின்பு ,அதையொரு ஒடுக்குமுறைக் கருவியாக அரசியல் மயப்படுத்துவது.இதைக் கொண்டு ஒரு ஆதிக்கத் தகர்ப்புப் போராட்டமாக மக்களைப் பிளப்பது என்று , பல்வேறுபட்ட வியூகங்கள் இதற்குள் உண்டு.

தமிழர்கள் பொதுவாகக் கொண்டாடும் ஒரு நிகழ்வானது கூட்டு மனோ பாவத்தை உருவாக்கும்.கூட்டு மனநிலை மக்களை ஒரு கருத்தின்பால் அணிகொள்ளச் செய்யும்.எனவே ,அத்தகைய பொது நிகழ்வு இருக்கப்படாது. அதைவைத்து , ஒவ்வொரு பிரதேசத்தையும் ;சாதிகளையும் எதிர் நிலைக்குத் தள்ளும்போது அங்கு முரண்பாடுகள் பிளவைக் கோரும்.கலகத்தை உண்டு பண்ணும். இப்போது பாருங்கள்: வடக்கையும் ,கிழக்கையும் பிளப்பதற்கு "யாழ்ப்பாண மேலாதிக்கம் "என்ற அரசியற் கருத்தாக்கம் எப்படியொரு பகுதி மக்களைப் பிளந்ததென்று.

அன்று, சைவவேளாள ஆறுமுக நாவலரை வைத்துக் கொலனித்துவம் மக்களைப் பிளந்தபோது, அதன் எதிர்நிலை அதற்கெதிராகக் கத்தோலிக்கத்தின்வழி தகவமைக்கப்பட்டது.

இப்போது, தைப்பொங்கலை மேல்சாதியின் கொண்டாட்டமாக்குவது;சைவத்தின் கொண்டாட்டமாக்கிக் குறுக்குவது.பின்பு, மக்களைப் பிளப்பது.ஒரு பகுதி மக்களுக்கு அதை எதிராக ஆயுதமாக்குவது ;பொங்கல் மேலாதிகத்தினரது பண்பாட்டு ஒடுக்குமுறையென வகுப்பெடுத்து, மக்களை அணிதிரள விடாது குழப்பும்போது மட்டும்தாம் இந்த அமுக்கக் குழுக்கள் உயிர் வாழ முடியும்.அதுவொரு பெரும் அரசியல் வியூகம்.

இதைத் தகவமைப்பவர்கள் தமிழ்பேசும் மக்களது ஒருமைப்பாட்டைக் குலைத்து ஒடுக்க முனையும் ஆதிகச் சக்திகளே.அவர்களுக்குடந்தையாகப் புலத்தில் பல குழுக்கள் இருப்பதை நாம் அறிய வேண்டும்.தலித்துவக் கோரிக்கை முதல் யாழ்ப்பாண மேலாதிக்கவரை நகர்த்தப்பட்ட அரசியலது நகர்வு தற்போது பண்பாட்டு அடையாளங்கள்மீது தாவுகிறது.

இது ஆப்பத்தான தருணங்களை நமக்குள் கொட்டப் போகிறது.மதரீதியான பிளவைக் கூர்மைப்படுத்திப் பிளக்கும் வியூகம் இதுள் உண்டு.இதைக் கூர்மைப்படுத்துபவர்கள் மிக ஆபத்தான பேர்வழிகள் ; அந்நியச் சக்திகளது அடியாட் கூட்டம்!

ப.வி.ஶ்ரீரங்கன்

==========================================
 
P/S : 
தைப் பொங்கல் 'தமிழர்களின் விழா' என்பது சரிதானா என யோசிக்கிறேன். இந்தப் பண்டிகையை, இந்து மதத்தினர் தவிர தமிழ் பேசும் ஏனைய மதத்தவர்களாகிய கிறித்துவர்களோ இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லையே.

நிலம், தெருவில் நடப்பதற்கான உரிமை, கோயில்களில் நுழைவுரிமை, மேலாடை அணியும் உரிமை இல்லாதிருந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வரலாற்றுரீதியாகவே இந்தப் பண்டிகைக்கு வெளியேதானே இருந்திருக்க முடியும் எனில் அது வெறும் சாதி இந்துக்களின் பண்டிகையாக மட்டும்தானே இருந்திருக்கிறது.

இதைத் தமிழர்களின் மாதமான தை முதல் நாளில் கொண்டாடுகிறோம் என்பதே சுத்த ஏமாற்றல்லவா. இந்த மாதக் கணிப்பு இந்துக் காலக் கணிப்பேயொழிய தமிழர்களின் தனித்துவமான காலக் கணிப்பில்லையே. சூரியன் பன்னிரு இராசிகளிற்குள் பிரவேசிக்கும் நாட்களை வைத்துத்தான் இந்தக் காலக் கணிப்பு நிகழ்கிறது. சூரியன் மகர இராசிக்குள் நுழையும் முதல் நாளே தை மாதத்தின் முதல் நாள் எனப்படுகிறது. மலையாள மாதங்களில் இந்த மாதத்திற்கு 'மகரம்' என்றே பெயர். இந்த நாளில்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது இந்து காலக்கணிப்பு வழக்கமாகிறதேயொழிய தமிழர் வாழ்வியலிற்கும் இந்த நாளிற்கும் என்ன தொடர்பிருக்கிறது?

தைப் பொங்கல் என்றொரு விழா பண்டைய தமிழர்களின் மரபில் இருந்ததாகவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விவசாயத்திற்கு மழை அருளும் இந்திரனைச் சிறப்பிக்க 'இந்திர விழா' நடத்தப்பட்டதாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்கின்றன.
அவ்வாறெனில் இந்திர விழாவின் எச்சம்தானா பொங்கல் விழா? நிலமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனக் கடவுளை முன்னிறுத்திய விழாவை இன்றைக்கும் செல்லுபடியாகக்கூடிய தமிழர்களின் விழாவாகப் பிரகடனப்படுத்துவது வரலாற்றுரீதியாகச் சரியா?

மதப் பண்டிகைகள் இப்போது சிறப்பு வணிக நுகர்வுக்கானவையாகவும் குடும்பத்துடனும் சுற்றத்துடனுமான கேளிக்கையாகவும் மாறியிருப்பதையிட்டு எனக்கொன்றும் புகாரில்லை. ஆனால் ஓர் இந்துப் பண்டிகையை ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையாகத் திணிக்க முற்படும் செயலை தகுந்த விளக்கம் கிடைக்கும்வரை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

 https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10208294233254986?pnref=story

Saturday, January 09, 2016

பிராமணர்கள் இப்போதே தயார்: தமிழகத் தேர்தல் 2016

பிராமணர்களது வரலாற்றைப் பார்க்கிறேன்
எனக்கு, இந்தப் படத்தைப் பார்த்துப் பிழைப்புவாதி கருணாநிதி அவர்கள்மீது எந்தக்கோபமும் வரவில்லை . அவர் அடிப்படையில் அரசியல் நாணயமற்ற ஊழற்பெருச்சாளி என்பது உலகறிந்த விடையம்.

இன்று, கருணாநிதி குடும்பம் பெரும் பண முதலைகள். பொதுச் சொத்தைக் கொள்ளையிட்ட பெரும் கிரிமனல்கள் இவர்கள். அதிகாரத்தைக் கையகப்படுத்தவும் ;மீளவும் ,பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கவும் கருணாநிதி குடும்பம் அமைக்கும் வலை மிகப் பெரியது.அரசியலில் இவ்வளவு மோசமானவொரு ஊழற் பேர்வழிகளை நாம் வரலாற்றில் பர்ப்பதானால் அங்கே, செயலலிதாவும் இந்தக் கிழ நரியுந்தாம் முன்னணியில் நிற்பவர்கள்.

ஆனால்,என் பிரச்சனையெல்லாம் தமிழகப் பிராமணக் கூட்டம் [ பார்ப்பனர்கள் ]பற்றியதே.


பிரமணர்கள் சொல்கிறார்கள் தாம் மக்களது நலனுக்காகவே பாடுபடுபவதாக.ஆனால் ,நடைமுறையில் தமது ஆதிக்கத்தையும் கோவில் வருமானங்களையும் காப்பதில் அவர்கள் ,எவர்களோடும் சமரசத்துக்குப் போகின்றார்கள்.இவர்கள் ,உண்மையில் மிக மோசமான அரசியல்வாதிகளைப் போன்ற இன்னொரு ஊழற்கூட்டம்தாம்.

பிராமணர்களது வரலாற்றைப் பார்க்கிறேன்.இவர்கள் , ஒடுக்குமுறையாளர்களோடிணைந்து தமது இருப்பையும் ; தமது ஆதிக்கத்தையும் ;கோவிற் சொத்துகளை -வருமானத்தைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எவருடனும் சமரசஞ் செய்து பிழைக்கின்றனர்.

இதுவரை செயலலிதாவை அரவணைத்தவர்கள் இப்போது , கருணாநிதி பக்கம் வெற்றி சாத்தியமாகலாமெனவுணர்ந்தவுடன் சமரசத்துக்குப் போய்விட்டனர்.இது வரலாற்றுத் தொடர்ச்சி.

அன்று, கிழக்கிந்திய குப்பினிகளது - கொப்பனிகளது தயவை நாடியவர்கள் -காலனித்துவ வாதிகளுடன் சமரசஞ்செய்து பிழைத்தவர்கள்.இராண்டாவது மாகா யுத்தம் ஆரம்பித்த கையோடு மளமளவென்ற அவசரத்தோடு, யேர்மனிய மொழியான டொச்சைக் கற்க ஆரம்பித்தார்கள்.இது ஏனென நினைக்கின்றீர்கள்?


உலகைக் கிட்லர் ஆளும்போது இந்தியாவில் அவர்களது நிர்வாக அலகோடிணைவதற்கும் ,தமது இருப்புக்கான சமரசத்துக்கேதுவாகவும் மக்களைக் காட்டிக்கொடுத்துத் தாம் மட்டும் பிழைப்பதற்கென்றே வரலாறு நமக்குரைக்கிறது.

இப்போது ,கருணா நிதியை அண்டிக்கொண்டு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டப் பிராமணர்கள் இப்போதே தயார்.இது சினிமாப் பிழைப்பு வாதிகளை விட மோசமானவொரு நிலை!பிராமணர்கள் , பார்ப்பனியக் கொள்கைகளைவிட்டொதுக்கி , மக்களை அண்மித்து அவர்களோடு நின்று வேதம் ஓதினால் இவர்கள் மனிதர்கள்.ஆனால்,யதார்த்தில் இவர்கள் மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டு , பணமுள்ள எவர்களுடனும் சமரசஞ் செய்து தம்மைக் காக்கின்றனர்.பெரும் ஆபத்தான கருதியல் மனதுடையோரே இவர்களே!

என்னெவொரு அடக்குமுறைக் கூட்டம்?


சுயநலமும் ;பிழைப்புமா பிரமணர்களது சுயம்?

இவர்களைத் தனது ஊழல் அரசியலுக்கேற்பப் பிழைப்வாதி கருணாநிதி வியூகம் அமைத்துப் பயன்படுத்துவதில் இவர்களை அணைக்கும்போது சாவது மக்கள்தாம்.

அடக்குமுறையாளர்கள் -ஆதிக்கவாதிகள் எத்தனை இரூபத்திலிருக்கிறார்கள்! ; இவர்களை வெல்வதென்பது பெரும் கடினமான பணி.
ப.வி.ஶ்ரீரங்கன்
10.01.2016

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...