Thursday, June 30, 2011

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும்.

-சில கருத்துக்கள்


வரலாற்றில் புலிப்போராட்டம்:

புரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.

இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்).

புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் "மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு" என்று "மாற்றுக் கருத்துக்கு" மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது புலி அமைப்பு!

இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த முள்ளிவாய்க்கால்வரையிலான புலிப்போராட்ட இரகசியப் பேரங்கள்-சரணடைவுகள்,வரலாற்றில் புலிகள் குறித்த மர்மத்தை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.இந்த மர்மத்தின் மறு விளைவு தமிழ்பேசும் மக்களை இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துகு அடிமையாக்கியது மட்டுமல்ல சிங்கள மக்களின் சாதாரணக் குணாம்சத்திலும் தமிழ்பேசும் மக்கள் குறித்து ,ஏளனமான பார்வையைத் தோற்றுவித்திருக்கிறது.



தமிழ்பேசும் அடிமைகள்?:

அடிமைகளைக் கைக்கொள்ளும் நிலைகளில், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விவகாரங்களும் நமது மக்களைக் காலவோட்டத்தில் மனத் தாழ்ச்சிக்கும் அடிமைத்தனத்துக்குமான சூழலுக்குள் தள்ளிவிடப்போகிறது.இதிலிருந்து மனவூக்கத்தைச் செய்யும் திறவுகோல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களது கைகளிலேயே தங்கியிருந்தும் அப்படியானவொரு செயற்பாட்டை-முன்னெடுப்புகளை இந்த மக்கள் செய்வதற்கேற்ற ஒழுங்கமைந்த தலைமைக்குள் ஒருமைப்பட முடியவில்லை.புலிக்கு மாற்றானவொரு புரட்சிகரக் கட்சி எந்தவகையிலும் உருவாகிவிட இயலாதளவுக்குச் சிக்கலானவொரு சூழல் தளத்திலும்,புலத்திலும் நிலவுகிறது.

புலியினது (வி)தேசிய விடுதலைப் போராட்டம்இன்றோ இருந்த இடம் தெரியாது பூண்டோடு அழிக்கப்பட்டு வருடம் இரண்டாகிறது!எனினும்,தமிழ்பேசும் மக்களது விடுதலைகுறித்த இயக்கப்பாடு,ஒருகிணைவு,மக்களை ஸ்தாபனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியால் இலங்கையில் மேற்கொள்ள முடியாதிருக்கிறது. பேருக்கு மார்க்சிய-லெனியக் கட்சிகள்-புதியஜனநாகக் கட்சிகளென"அப்பன் கொல்லைக்குள் இல்லை"என்றபாட்டில் தளத்திலும்-புலத்திலும் முன்னணிகள் முளைக்கின்றன. இந்தச் சூழலிற்றாம் புதியதிசைகளை நோக்கிய கருத்தாடல்களும்-செயற்பாடுகளும் அவசியமாகி நம்முன் சூழல் எழுகிறது.இதை,எங்ஙனம் எதிர்கொண்டு காரியமாற்றுவது?

மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ள தமிழ்பேசும் மக்களது ஆண்மை,அவர்களது எதிர்கால வாழ்வுக்கு நெருப்பை அள்ளித் தலையிற்போட்டபாடாய் புலிகளது மர்ம அரசியலது தொடர் நடவடிக்கைகள்"நாடுகடந்து அரசாங்கம்"அந்தக் குழு இந்தக் குழுவென மீளத் தகவமைக்கும் அதே மர்ம அரசியலை என்னவென்பது? இந்த அரசியலை வரலாற்றில் தொடைத்தெறிந்து புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பது நம்மால் முடியாததா?



அதே புலிவழியான அராஜக அரசியல்:

சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில் முளையரும்பும் அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்"புலி-புலி"எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்கியதையும் நாம் இன்று புரிந்துணரும்போதுகூட,இன்றைய மர்மப் பணப்புலிகளது (நாடு கடந்த அரசாங்கம்,நெடியவன்-கே.பீ.குழு வென இன்னபிற...)தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டத்தை ஜெயலலிதாவடிவில் அரவணைக்கின்றன.

அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடைச் செய்ய முனையும் இந்தச் சூழலிற்கூட புலிகள் குறித்த சீரிய பகிரங்க விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை!

"தலைவர் வருவார்,வரலாறு விடுதலை செய்யுமென"ப் போலி வாதங்களுக்குள் மக்களை கட்டிப்போடும் இந்தப் போக்குகள் ஜெயலலிதாமீது நம்பிக்கையைக்கொள்ளும்படியும் நமது மக்களை முட்டாளாக்குகிறது.

மிகவும் கண்டிக்கத்தக்கது இது.இதை அம்பலப்படுத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி, நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு தமிழ்க் கட்சிகளது மூடத்தலைமைகளை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடியப்போகிறது.

தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன பணப்புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவைiயும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.





அழிவு அரசியலை நியாயப்படுத்தும் போக்கு:

சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள் -படுத்துகிறார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை சேரன்கள்-உருத்திருகுமார்கள் இன்னும் நமுக்குள் முளைத்துக்கொள்வார்கள்?

கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.

போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்திவிட்டுச் சரணடைந்த புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் "துரோகி" சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.

இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.இங்கே, ஜெயலலிதா அம்மையார் தமிழ் பேசும் மக்களது விடுதலைத் தேவதையாக ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இன்னும் சிறிது காலத்தில் ஜெயலலிதா தேசியத் தலைவியாகவும் போற்றப்படலாம்.இந்த விவஸ்த்தையற்ற கருத்து வெளிக்குள் நாம் மீளவுஞ் சரிந்துவிடுவோமா அல்லது உண்மையான விடுதலைக்கு பங்களிக்கப் போகிறோமா?பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாகக் கயிறு திரித்த ப(பி)ணப்புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை- இயக்கத்தைக் கட்டமுடியாது, தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இப்போது, அதே பாணியில் ஜெய லலிதாவையும் நோக்கி மக்களைத் தள்ளித் தமது பிழைப்பை மேலும் மெருக்கேற்றுவதற்கும்,இருப்பை வலுப்படுத்தவும் ஒரு ஆயுதமாகப் பார்க்கும் பணப் புலிகளுக்கு விடுதலை-தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.இதை நிர்மலன்போன்ற புலிப் பினாமிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.


புலிகளது தவறுகள்,சிங்களமயப்படும் எதிர்காலம்:

புலிகள் இயக்கம் தனது வர்க்கத் தளத்துக்கு-குணாம்சத்துக்கேற்ப எப்போதும் தவறிழைத்தவர்களல்ல!தமது வர்க்கத்து இசைவாகவும்-நியாயமாகவே தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காய் அடித்தார்கள்-காட்டிக் கொடுத்தார்கள்.அவர்கள் தவறிழைத்தது பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது நலனின்மீதே.அத்தகைய இலக்கில் புலிகள் செய்தது பாரிய வரலாற்றுப் பழி!

இந்தப் புரிதலோடு முரண்பட்டவர்கள்,புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று கூறுமிடத்து, அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது, உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது, வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.வன்னி நிலப் பரப்பெங்கும் புதிய குடியேற்றத் திட்டங்கள் மெல்லச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்படுகிறது.இதையெல்லாம் நியாயப்படுத்த கே.பி.போன்ற பணப் புலிகள் புலத்திலும் உண்டு-தளத்திலும் உண்டு!

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.



தமிழ்பேசும் மக்கள்பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த இராணுவவாத முன்னெடுப்பு, முதலில்தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து(புத்த விகாரை ஒரு சிறிய உதாரணம்), அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய அரசியல் வியூகத்தைச் செய்வதற்குப் பணப் புலிகளது மர்மமும்,நமது கட்சி அரசியல்வாதிகளது சுய இலாபங்களும் முக்கிய வகிபாகத்தை இந்த முள்ளி வாய்க்காற் தோல்வியின் பின் சாத்தியமாக்கிறது.மக்களை எதை நோக்கியும் சிந்திக்க விடாது,தனியே உணவுக்காகக் கையேந்தும் பிரதேசிகளாக்கியபடி ஓட்டுக் கட்சிகள் மெல்ல முன்னெடுக்கும் இந்த நரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி, மக்களை விளிப்புணர்வுகொள்ள வைக்கும் எந்த முயற்சிக்கும் தடையாக,சிங்கள இராணுவத்தின் கண்காணிப்பும்,ஓட்டுக் கட்சிகளது ஏமாற்று அரசியலும் ஒரே தளத்தில் இருவேறு வியூகமாக விரிகிறது!இதுவே,இன்றைய நவலிபரல் கொள்கையின் இன்னொரு முகமாகும்!இதைப் புரிவதற்கு நோமிக் கிளைன் எழுதிய[The Shock Doctrine-By Naomi Klein ] எனும் நூலில்சில பக்கங்களைப் புரட்டினாலே போதும்!

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்:

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்"(தேசம் ஜெயபாலன்,தேனி ஜெமினி-கங்காதரன்,கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,சுகன்,தேவதாசன்,சோபாசக்தி,நிர்மலா-இராகவன்,சுசீந்திரன் இன்னபிற...) கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.


யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதியைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரச சார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன மந்தைகள்வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் சில கீரன்களை-கொன்ஸ்சன்ஸ்ரையன்களை, நம்முன் உலாவிடுகிறது.இது ஆபத்தானது-அனைத்தைக்காட்டிலும்!


புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.


சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி" இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் கீரன்போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா?


முள்ளி வாய்க்காலில் அழிந்துபோன புலிகளோடு புலிச் சித்தாந்தமென்பது தமிழ் மேட்டுக்குடியினது சித்தாந்தமேயென்பதும் மிக இலகுவாகப் புரிந்து போச்சுதா? இதிலிருந்து மீள்வதற்குத் தயக்கமென்ன?புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஆற்றலை இளைய தலைமுறையினருக்குக்கற்றுக்கொடுப்பதென்பது காலத்தின் கடமையாக இருக்கும்போது அதை இத்தகைய லொபிக் குழுக்களோடிணைந்து உரையாடுவதால் சாதிக்க முடியுமா? சஞ்சீவ் ராஜ் போன்றோர் இது குறித்து பதில் கூறவேண்டும்.


இலங்கைப் பாசிச இனவொடுக்குமுறை அரசியலால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!இதை மறுத்து மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்குவது மக்களுக்கு எதிரானது.


இன்றுவரை,நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய இலங்கை-இந்திய அரசுகளால் எமது வாழ்வாதாரங்களை இழந்த நாமே,அதைப் பெற்றுத் தருவது-காப்பது இத்தகைய அரசுகள்தாமென வாதாடும்போது நாம் யார்? கீரன்-கொன்சன்ஸ்ரையன்,தலித்துவ மேம்பாட்டு முன்னணி,இராகவன்-நிர்மலா,எனத் தொடரும் இந்த நீண்ட லொபிக் குழுக்களால் நிகழப்போகும் அபாயம் புலிப்பாசிசத்தைவிடப் பன்மடங்கானதென்பதே எனது கணிப்பு!புலிகள் நேரடியாகவே மக்களது எதிரிகளென மக்களுக்குத் தெரிந்தளவுக்கு இந்த மர்ம மனிதர்களை இலகுவாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை!இனவாத ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்பேசும் மக்கள் அன்று போராடியபோது-புரட்சிகரமாக அணிதிரண்டபோது,பாசிசப் புலிகள் மூலமாக அனைத்தையுஞ் சிதறடித்த அந்நிய-இந்திய நலனானது இப்போது அதே பாணியில் இத்தகைய லொபிக் குழுக்களை வைத்து மீளவுருவாகும் புரட்சிகரமான அணித்திரட்சியை-உணர்வை உடைப்பதில் கவனமாக இருக்கிறது.இவர்களே அனைத்து வழி முறைகளையும் கைப்பற்றி அதைச் சிதைப்பதில் திறம்பட இயங்குகிறார்கள்.


தேசிய விடுதலையை நேசிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனிமேல் கவனப்பட வேண்டிய முக்கிய போக்கானது இது :


" முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.அது,நமது அடிமை விலங்குங்கூட என்பதே!"


எனவே,நாம் புரட்சிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்து உள்வாங்குவதும் அதன் வழி அணித் திரட்சியடைவதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களின் விடுதலையை-செல் நெறியை திறம்படச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய லொபிக் குழுக்களை ஓட விரட்டவும், புரட்சிகரமாக இயங்குவதே அவசியமான காலக் கடமை.இனவாத ஒடுக்குமுறைக்குள் தமது அடையாளங்களைத் தொலைக்கும் ஒரு தேசிய இனத்துக்கு இதைவிட வேறு வழியிருக்கா?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.2011

Sunday, June 26, 2011

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?


" எனக்குத் தேசிய அடையாளங்களது புனித விம்பம் என்பது,நிலவுகின்ற ஆளும்வர்க்க அரசியில் ஆதிக்கத்தினது கருவி என்பதும்,ஒடுக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைக்குள் கனவாகிக் கிடக்கும் தேசிய விம்பங்கள் அவர்களது இருப்பைக் காக்கும் அலகுகள் என்ற புரிதலும் இருவேற சூழலில் உண்டு! "


தீபம் தொலைக்காட்சியின் புலிக்கொடி பற்றிய உரையாடலின் பின்பு,புலிக்கொடிக்கு எதிராகக் கருத்தாடிய ராஜ் தாக்கப்படுகிறார்.


இலங்கை அரசுக்குச் சார்பான கொன்ஸ்சன்ஸ்ரையின் அருகினில் இருந்து, அவரது கருத்துக்குத்தோதாக உரையாடிய ராஜ், தன்னை இலங்கை அரசினது போக்குக்கு இசைவானவராகக் காட்டப்பட்ட சூழ்நிலையைக்கடந்து, இந்த விவாத்தின் பின் எழுந்த தேசிய அடையாளங்களது புனித விம்பம்,மற்றும் பாசிசக் குறியீடுகளது இருப்பும் அதன் பின்னான சித்தாந்த வலுவும் குறித்து, கவனத்தைக்கொள்வதும் எனது நோக்கு அல்ல!

இது, குறித்து நிறைய விவாதித்தாகிவிட்டது!தேசங்கடந்த ஆய்வாளர்களது புரிதல் நமக்குப் பல புரிதலைத் தந்துவிட முடியும்.எனவே, நாம்,தமிழர்களது அவல நிலையுள் இந்த விடையங் குறித்துச் சில கவனத்தைச் சுட்ட முடியும்-அவ்வளவுதாம் இக் கட்டுரையின் நோக்கம்.



ஓட்டுக்கட்சிகளது கைங்காரியம்:

இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இருவேறு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றினார்கள்!இனவொடுக்குமுறை நிகழும் ஒரு தேசத்துள் மக்கள் எங்ஙனம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஓட்டுக் கட்சிகள் நிலைமைக்கொப்பத் திசை திருப்பி இதைச் சாதித்தனர்.
இது,நமது யுத்தம்-அரசியல் முன்னெடுப்பது வரலாறாக இருக்கிறதா?சரி!

முள்ளிவாய்க்காற் படுகொலை யுத்தத்துக்குப் பின்பான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொரு ஓட்டுக் கட்சியும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்: "நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை" என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


ஓட்டுக் கட்சிகளுக்கு நிதியாதாரம் வழங்கும் வர்க்கத்துக்குத் தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அவசியமாக இருக்கிறது. இந்தத் தேவை அவு; வர்க்கத்தின் அந்நிய வர்க்க நலன்களது தேவையோடு மிக நெருக்கமாக உறுவு பூண்டு,இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமாகி வருகிறது.

இந்த ஓட்டுக் கட்சிகளது தேவையை-நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வலுப்படுத்தும் புலம் பெயர் ஊடகங்கள் தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவருகிறது. இந்த லொபி ஊடகங்கள்,தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.

அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!தமது எஜமானர்களுக்கு உகந்த முறையில் அவர்களது நலனை மக்களது நலனாக்க முனையும் இந்த நரித்தனமான அரசியல் எடுத்த எடுப்பில் தமிழ் மக்கள் நலன் மறுத்த அரசியல் பேசமுடியாது,தமிழ் பேசும் மக்களது மனதுக்கேற்றவொரு அரசியலை நமது மக்களது நலனை முதன்மைப்படுத்துவதாகவே உரிமைபாராட்டி விஷ அரசியலை நமக்குள் திணிக்கின்றன.இந்த அரசியலுக்கு உடந்தையாகப் புலம் பெயர்"மாற்று"குழுக்கள் பல அடிமையாகிக்கிக் கிடப்பதையும் இதுள் சுட்டிக்காட்டுவோம்!



புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாறறுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் தேசம் ஜெயபாலன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,தேனி ஜெமனி, கீரன்,நிர்மலா,இராகவன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,ரி.பி.சி வானொலி,ஜீ ரிவி,தீபம் ரீவி, ஆகிய அனைவரையும்,அனைத்தையும் புரிவதில் சிக்கல் இருக்க முடியாது!

தமிழ் மக்களது இன்றைய நிலை:

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.

நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது. ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவக் காட்டாட்சியே நடந்தேறிவருவது புலியழிப்புக்குப் பின்பான வரலாறு.எந்தக் குடிசார் அமைப்புகளும் இன்னும் முழுமையாக இயங்கவும்-சுயாதீனமாகச் செயற்படவும் அநுமதிக்கப்படவில்லை என்பது இன்னொரு வகை உண்மையாகும்.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை. ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் புலியின் மறுதொடர்ச்சியான "நாடுகடந்து அரசாங்கம்" முன்வைக்கும் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது. இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், இத்தகைய "நாடுகடந்த அரசாங்கம்"புலிகளது எச்சங்கள்,தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்கு உலக ஏகாதிபத்தியங்களது தயவில் அரசியல் செய்கின்றன.

தேசிய அலகுகள்,குறியீடுகள்,தமிழ் மக்களது ஐதீகச் சொத்தாகவும்,அது மக்களது உரிமையினது ஆகக் குறைத்த குறியீடு என்றும் கூறிக்கொண்டு,எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப் படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது (விடுதலையென்பது வெறும் கோசமே!).


இந்த நெருக்கடிக்குள்ளும்புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே பாசிச இலங்கையின் அரச ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழ்பேசும் மக்களது அனைத்து முன்னெடுப்பையும் உள்வாங்கிக் கொண்டிருக்கும் இவ் வேளையுள்,தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைத் தமது பங்குக்குச் சீரழிப்பதோடு தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.
இலங்கையில் கட்சி அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது எனக்கொள்ளவேண்டும்.

"இந்தியா,ஜெயலலிதா,சீமான் வகையறாக்கள் இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள். இதுதாம் இன்றைய தமிழ்பேசும் மக்களது அரசியற் சூழல்! "


பாராளுமன்றப் பண்டிகள்:

ஓட்டுக் கட்சி வரலாறு நமக்கு எப்பவும்எதிரானதாகவே இருக்கிறது-இருந்து வருகிறது.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும்,டக்ளஸ்சினதும் அரசியல் இதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது.


ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள, இல்லையா?;


அன்றிலிருந்து இன்றுவரை,இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது என்பதை இலகுவாக நாம் புரிந்துகொள்வோமானால்,இன்றைய நமது மக்களுக்கு எந்த அரசியலை எவர் முன்னெடுக்கிறாரென்று சொல்ல முடியும்.


புலம் பெயர் தளத்துக்கான நயவஞ்சக அரசியல்:

முள்ளி வாய்க்காலுக்குப் பின்இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட இலங்கை-இந்தியக்கூட்டு, தமிழ் பேசும் மக்களை இலங்கைக்குள்ளேயே அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.




இலங்கையின் பாசிச இராணுவக் கட்டமைப்புக்குள் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயமாக அடிமைப்படுத்திய மகிந்தாவின் சாணாக்கியம்,புலம் பெயர் தளத்தில் சில திரிவுவாதப் புரட்சியாளர்கiயும்,கைக்கூலி ஊடகங்களையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்தித் தமிழ்பேசும் மக்களது தேசிய அலகுகளையே கேள்விக்குட்படுத்துகிறது!தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத ஒரு இனக் குழுவாக் குறுக்கி வைத்திருக்கும் தந்திரம் இத்துடன் வலுவாக அரங்கேறுகிறது.

தேசியக் கொடியென்பதை,ஓர் அரசாக-இனமாக எழுந்து நிறுவனப்பட்ட ஆனும் வர்க்கத்துத் தமிராக இனம்காணும் அதேவேளை,ஓடுக்கு முறைக்குள் உட்படுத்தப்படும் ஒரு இனம் தன்னை விடுவிப்பதற்கான-பாதுகாப்பதற்கான போராட்டத்தில்,எழிச்சியில் இந்தத் தேசியக் கொடி-அடையாளங்களைக் காவ வேண்டியதாகவே இருக்கிறது.அது,வர்க்கப் போரைச் செய்யும்போதுஞ்சரி,தேசிய விடுதலைப்போரைச் செய்யும்போதுஞ்சரி வர்க்கங்கங்கள் மொழிவாரியகச் சேர்வதில் சில பிரத்தேயகப் பண்புகளை நாம் இனம் கண்டாகவேண்டும்.அந்தப் பண்புகளில் ஒன்றாகப் புலிக்கொடியும் இணைவதில் சிக்கலடையும் சந்தர்ப்பங்கள்கண்டு, "புரட்சியாளர்கள்" ஒடுக்குமுறையாளர்களது திமிரை இரசிக்கின்றனரா?
ராஜ் புலிக்கொடிக்குள் தேங்க,கொன்ஸ்சன்ஸ்ரையன்முழுமையாகத் தமிழ் பேசும் மக்களுக்குப் பண்பாடு,தேசிய அலகுகள்,வரலாறே இல்லை என்கிறார்.இவை, எவருடைய குரல்கள்?இலங்கையின் ஆளும் வர்க்கதின் குரலாக மட்டும் இதைப் பார்க்க முடியுமா?

இத்தொடர் நிகழ்வில்அரசியல் செய்யும் பிராந்தியங்கடந்த-கண்டங் கடந்த ஆளும் வர்க்கங்களது நலனை-அரசியலை யார் என்ன செய்துவிட முடியும்?

இலங்கையின் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதனாற்றாம் தமிழ்ப் பிரதேசமெங்கும் திடீர் சிங்கக்கொடி பிடித்தலும்,தேசியக் கீதம் சிங்களத்தில் இசைப்பதும் இராணுவக் கண்காணிப்பின்கீழ் நிபந்தனையாக முன்னெடுக்கப்படுகிறது.


சிங்கக்கொடியென்பதன் குறியீடென்ன?


சிங்கள ஆளும் வர்க்கத்துத் திமிராக இல்லையா?


தமிழ் மக்களை வெற்றிகொண்ட அடையாளமாக முன்னிறுத்தப்படவில்லையா?


இத்தகைய உளவொடுக்குமுறைக்குள் திணிக்கப்படும் அராஜகமானது வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்களைக் குரோதத்துடன் தொடர்புப்படுத்தித் சிதைக்கிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இந்தவகைப் புலம்பெயர் இலங்கை-இந்திய லொபிகளுக்கு தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் போக்கு நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக் கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்-இராகவன், நிர்மலா கூட்டம்.


தமிழ் பேசும் மக்களது தேசிய அலகுகள்:


மொழிவாரியாகவும்,இனவாரியாகவும்,சாதிரீதியாகவும் பிளவடைந்த தமிழ் பேசும்மக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


இந்தத் தோரணையில் தமிழ் பேசும் மக்களது அடையாளங்கள்,தேசிய அலகுகள்மீதும்,வரலாற்று ஐதீக நிலப்பரப்பின்மீதும் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்யும்போதும் புலிப் பாசிசத் சித்தாந்தமென வாந்தியெடுத்தே இவற்றை நொருக்கி வருகிறார்கள்.பேரினவாத ஒடுக்குமுறையானது என்றைக்குமே இல்லாத வடிவங்களில்தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. அவர்களது வாழ்விடங்களைத் திருடுவதற்கேற்ற சித்தாந்தங்களை மிக முற்போக்காகச் செய்வதில் புலியினது தவறுகள் ஒத்துழைக்கிறது.


இந்தப் புலித் தவறுகளைத் தூக்கி வைத்து உரையாடும் நபர்கள்,பேரின வாதத்தின் அரசியல் ஆதிக்கத் திமிரையும்,அதன் குறியீடுகளையும் தமிழ் மக்களுக்கான அடையாளமாக்கும்போது மறைமுகமாக இனவழிப்போடு,ஒரு இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்குத் துணை போகின்றனர்.


இனவொடுக்கு முறையைச் செய்யும் இலங்கை ஆளும் வர்க்க நலனானது, தமிழ்பேசும் மக்களை அனைத்து வடிவங்களிலும் ஒடுக்கி அவர்களது வரலாற்றை இல்லாதாக்கும் மகாவம்சத் தொடர் யுத்தத்தைச் செய்யும் இன்றைய சூழலில், தவிர்க்க முடியாது அந்தத் திமிரை எதிர்கொள்ளத் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை முன்நிறுத்தி எதிர்ப்பைக்காட்டுவது அவசியமானது!


அது,நியாயமானதும்கூட.அந்த அடையாளங்கள் எந்த வர்க்கத்தினது என்ற கேள்வி விடுதலையடையும் தறுவாயில் மட்டுமே தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எழுப்பப்படும்.அதுவரை அது,எந்த அரசியலையுஞ் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டபின்,புரட்சிகரக் கட்சி நிர்மூலமானபின்ஒரு இனம் தனது இயலாமையில் இந்த அடையாளங்களைக் காவுதைத்தவிர வேறென்ன தீர்வு உண்டு?


மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தளத்து நிலை இராணுவக் காட்டாட்சிக்குள்உட்பட்ட நிலையில், புலத்த மக்கள் புலிக்கொடியைப்பிடிப்பதென்பது தமிழ்பேசும் மக்களது வரலாற்று இருத்தலைக் குறித்து அடையாளப்படுத்தபடுவதுதில்தாம் முடிவடைகிறது.புலிகளது பாசிசமும்,அந்தக் கொடியினது வரலாற்று ஐதீகமும் ஒரு தொடர்ச்சியின் இருவேறு நிகழ்வூக்கமோகவே தொடர்கிறது.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் இனவொதுக்கலுக்கு-அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தயக்கமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க இன அழிப்பு அரசியலுக்கு எதிராகவே இருக்கும்.


இதைத் தடுப்பதாக இருந்தால்,இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் சுய நிர்ணயவுரிமை வழங்க வேண்டும்.அந்தத் தீர்வைச் செய்யாதவரையும் தமிழ்பேசும் மக்கள் தமது தேசிய அலகுகள் எவைகளெனத் தீர்மானிப்பதும், திசையமைத்துக் காப்பதும் எவரையும் கேட்டல்ல-தமது வரலாற்று ஐதீகத்திலிருந்து அது நடைபெறும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
26.06.11

Sunday, June 12, 2011

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி...

Der Mythos des Michael May_Sisyphos


ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை!

ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை!

"Absurd" முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி!

குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் "கழுத்து அறுப்பும்" நிலவுகிறது.

நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

"unsinnig" அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்...அது,"தவறான-தப்பான,நியாயமற்ற"சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்"அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தமற்ற செயலை ஊக்குவிக்கிறது.இவற்றை எதிர்க்கும்"மனநிலை" அபத்தவாதத்தின் தெருக்கோடியில் தஞ்சம் கொள்ளும்வரை எனது பௌதிக இருத்தலின் தஞ்சம் "Diskrepanz" இணைவின்மையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றாய் விரியும்போது, அபத்தமாகவே உலகும் தோன்றுகிறது.இந்த உலகு எதுவரை?



ஒரு இனத்தை வியாபாரத்தனமாகக் கொன்று குவித்துவிட்டுத் தாமும் மண்டியிட்டுத் தலையைப் பிளக்கக் கொடுத்த புலிகளைக் குறித்து விளங்க முடிதல்சிசிப்போவுக்கு முன் கட்டளைப் போட்ட கடவுளது வேலைக்கொப்பவே இருக்கிறது.

நான் தரையிலிருந்து மலை உச்சிக்குத் தாவும்போது எனது இன்றைய அனைத்து ஊக்கமும் இமையசைக்கும் முன்னமே தரைக்கு வந்து விழுந்து நொருங்கும்போது இதை எதிர்த்தல்-வீராப்புப் பேசலாக சமூகத்துக்குள் கொட்டிவிடுகிறேன்.சிசிப்போ கடவுளைவிடப் பன்மடங்கு பலமானவன்.அவன் உணர்வு நிலை அர்த்தமற்றதை"ஒழுங்கை!க் கடைப்பிடித்தல்-ஒப்புக்கொள்ளலென அர்த்தமுள்ளதாக்குவதாகப் புரியும்போது இந்த மாபெரும் மனிதர் Michael May ஆக மேலெழுகிறது.

கடந்த கால் நூற்றாண்டாகப் பொறியியலாளனாகப் பணிபுரிந்த இந்த மனிதர் பெரும் கட்டுமானத்துறையில் செல்வம் குவித்து வைத்திருக்கிறார்.பல மில்லியன்களுக்குச் சொந்தக் காரனான இந்த மிகேல் மாய்க்கு என்ன நிகழ்ந்தது?

உலகத்தின் அதியுச்சத்தில் கோடிக் கணக்கான சொத்துக்களோடு வாழ்ந்து கீழ் நோக்கிய பார்வை எப்படி வந்தது?

இதுவொரு Absurd !

அனைத்தையும் தலை கீழாக்கிப் பார்க்கும் மன நிலை.அவர் தன்னைப் பிரபலப்படுத்த விரும்பாது இருக்கிறார்.ஆனால்,அவர் பேசப்பட வேண்டியவர்.

நம்மில் எத்தனை மனிதர்கள் இந்த மிகேல் மாய் போன்றிருக்கிறோம்?;ஏன் அப்படி இருக்க வேண்டும்??

மக்களிடம் போருக்குச் சேர்த்த,அபிவிருத்திக்குச் சேர்த்த பணத்தைப் புலிப் பினாமிகள் தமது சொத்தாக்கிவிட்டுச் செல்வந்தாகளாக இருக்கும்போது,இப்படியெல்லாம் அபத்தம் நம் முன் நிழலாட நாமும் அதே அபத்த்தின் இன்னொரு முனையில் நிற்க திருவாளர் மிகேல் மாய்வழி செய்கிறார்.

சிசிப்போவுக்குக் கடவுளது இரகசியமான பரிசு கிடைத்திருக்கலாம்.

அவன் மரணத்தை அரிவாள் சங்கிலித் தொடருக்குமேல் வைத்துவிட்டு மரக்கட்டையை உருட்டினான் என்றால் அவனது உணர்வு எத்தகைய ஒழுங்கைக் கொண்டிருக்கும்?

தனது மனைவியினது அன்பைப் பரிசோதிக்கச் சிசிப்போ கடவுளது அர்த்தமற்ற கட்டளையை ஏற்று, உச்சிக்கும் மடுவுக்குமாகக் குற்றியோடு போராடுவதிலிருந்து இந்த அபத்தவுலகை விளக்க வேறொரு பாணி இருக்குமோ?

அதைத்தான் திரு மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

மலை உச்சியை நோக்கிய வெற்றிகொள் போர் ஒரு மனிதனது இதயத்தை நிறைத்திருக்குமாயின், சிசிப்போவை இந்தவுலகத்தின் மிக மகிழ்வுக்குரியவனாகவும்,மதிப்புக்குரியவனாகவும் அபத்தத்தின் முகத்தில் ஓங்கி உதைத்தவனுமாகவே நான் பார்ப்பேன்! அதையேதாம்,இந்த மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

தான் இதுவரை சேர்த்த செல்வத்தை மட்டுமல்ல தனது பெற்றோர் வழி முதிசத்தையும் இந்த மனிதர்கொண்டிருந்தார்.

மிகேல் தனது செல்வத்தையும்விடப்பலமானவர்.சிசிப்போ தான் உருட்டும் பாரிய குற்றியையும்விடப் பலமானவனாகவே பார்க்கத் தக்கவன்.அதனாற்றாம் இரண்டு செயலும் மிக வீரியமானவை!

மிகேல்(பெரும்முதலாளி) கூறுகிறார்: "முதலாளியம்மக்களுக்கு உலகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குத் தகுதியற்றது ("Der Kapitalismus ist unfähig, die Menschen am Reichtum teilhaben zu lassen." ) .


பிற்குறிப்பு : திரு மிகேல் மாய்(Michael May)இதனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும்( 3.059.167.00 € ),கிட்டத்தட்ட முப்பது இலட்சம் யூரோவையும் ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கு நிதியாக-அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு (மார்க்சியக் கல்வியாளர்களைப் பயிற்றுவிக்கவும்,பெண்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்குத் தயார் படுத்தவும் தனது நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனப் பரந்த மனதுடன்...), வாடகை வீட்டில் மாதம்1365.யூரோ பென்சன்-ஓய்வூதியத்தைக்கொண்டு மிக எளிமையாக வாழ்கிறார்.தன்னைக் குறித்த பிரபல்யப்படுத்தலை விரும்பாமல் இருக்கும் ஒரு சாதரண மனிதரானார்.


மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.06.2011

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...