Sunday, November 15, 2009

நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது...

அச்சமுடையவர்கள்,
அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக்
குறித்துக் கனவு காண்கின்றனர்!


னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?
 
நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?
 
இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?
 
உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.
 
உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த "மேல்நிலையை"(Übermensch)உருவகப்படுத்துகிறது.உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.
 
நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தடியைக்கொடுத்தாள் கிட்லருக்கு-ஒருத்தி!
 
ஏனென்றாள்,எதற்கென்றாள் தனக்குள்!
 
அவளது விருப்பத்துக்குரிய மேல்நிலை மனிதன் வந்துவிட்டான்-பிறந்துவிட்டான்.அவனது பின்னால் அவனைத் தகவமைத்த ஈ.ஜீ.பார்ப்பன்(I G Farben) இரசயானத்தை உலகுக்கு வழங்கியபோது,அதன் தெரிவில் உலகாளும் மேல்நிலை அவசியத்தைப் பிரதி பண்ண நீட்சேக்கு நன்றிக்கடனாகத் தடியைத் தன் கனவானுக்குக் கொடுத்தாள் அவன் தங்கை(Therese Elisabeth Alexandra Nietzsche).
 
 
 
எல்லோரும் வாருங்கள் வாசல் வரையும் வந்து தரிசிப்போம்
எங்கள் மேலவனை-வெல்வதற்காகவே நாம் சூரியக் குழந்தைகளாகப் படைக்கப்பட்டோம்.
 


 
கடவுளது கட்டளைக்காரர்களுக்கு(Der Rat der Götter;Die Aufsichtsratsmitglieder der I. G. Farben nannten sich im internen kreis "Der Rat der Götter"ஈ.ஜீ.பார்ப்பன் என்ற இரசாயனத் தொழிலகத்தின் மேற்பார்வையாளர்கள்-கட்டுப்பாட்டாளர்கள் தம்மைத் தாமே உள்ளக ரீதிய அழைத்துக்கொண்ட வார்த்தை"கடவுளின் கட்டளையாளர்கள்"என்பது..),கடவுள் செத்துவிட்டான் என்றவன் சாக,அவனது தெரிவின் மேல்நிலை மனிதன் கனவினது வடிவத்தில் ஆரியக் குழந்தைகளாவும் அகலக் கால்வைக்கும் ஆண்டவக் குழந்தைகளாகின.
 
இதன் தெரிவில் செத்தவன்போக,சிறந்தவன் கிட்லர் என்றே இன்றும் ஜெர்மனியர்களில் பலர் அக மகிழக் கூட்டம் வான் நோக்கிக் கை அசைக்க, "மேல்நிலை" அவர்களுக்குள் தெளிவாகவே புரிகிறது.நீ,எங்கு-எது செய்தாலும் நீ வெல்வோனாக இருவென ஆண்சார் புடை நெஞ்சு அகவ,அத்தனைக்கும் ஆரியமே ஆளுந்தகமையுள்ள அதி மானுடத்தின் திசையில் மேல் நிலையுள் மெலிதானவர்களைப் புதைத்தே ஆகவேண்டும்.
 
நீ,நஞ்சை உற்பத்தி செய்திடினும்-அது
கீழ்நிலையானுக்குப் பிணியகற்றும் ஓளடதம்
கொன்றழித்தலென்பது விருப்ப-வடிவத்தின் வினை என்ப
உனக்கே எனது அண்ணனின் திசையைத் தெரிவாக்கிறேன்!
 
கைத்தடிதாம் இது?
இல்லை,உலகை ஆள்வதற்கான செங்கோல்
செஞ்சேனை கட்டிக்காத்த இருஷ்சிய மண்ணில்
சோகமாய் கிட்டலர் காலில் தொங்கிய மானுடம் கீழ்நிலை
 
கொடிய வதைகள் எல்லாம்
விருப்ப மானுடத் தெரிவில் உலகைக் கடைந்தேற்றும்
கோபுரமுள்ள கோவில்கள் என்று கொடியை ஏற்று-அது
ஆரிய சாம்பிராஜ்யத்தை அழகு என்று சொல்லும் அதிமானுடன் வணங்க!
 
 
தத்துவத்துக்கும்,நடைமுறைக்குமான புள்ளியில் அறுபது மில்லியன் மக்களுக்குச் சமாதிகட்டக்கூடிய வலுவுக்கு உரம் போட்டது இந்த "மேல்நிலை"மனித நிலை-விருப்பு.இந்த உரத்தோடு வளர்தெடுத்துச் செல்வத்தின் இருப்பைக் கொள்ளையிட முனைந்தவர்கள் மேல்நிலையை விரும்பியவர்கள்.அப்போது,விருப்பமென்பது ஒரு நிலை.அது,ஒரு குழுவுக்குரிய விருப்பாகவே என்றும் இருப்பதால் அந்தக் குழுவிலிருந்து அந்நியப்படும் பெரும்பகுதி மக்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்.
 
அதீத புனைவுக்கு எது அவசியமான தெரிவாக இருக்கிறது?
 
அச்சமுடையவர்கள்,அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்!
 
அந்த அதிகாரம் நம்மிடம் புலிவடிவிலும்,பிரபாகரன் வடிவிலும் நிலைத்திருந்தது.அதன் முடிவு,கிட்லரது முடிவோடு நெருங்கும்போது எஞ்சியது ஏமாற்றம் மட்டுமல்ல.அது,நோக்கிய விருப்பின் தெரிவில் கற்பனைக்குள் "அழ்மன விருப்பு" அதி மானுட நடாத்தையும் தான்.இந்த விருப்பு இன்றுவரையும் ஜேர்மனியர்களை எங்கும்-எதிலும் முதன்மை பெறவேண்டுமென்ற துடிப்புக்கும்,மற்றவர்களை ஏற்காது-பரிகாசிக்கும் பண்புக்கும் விரட்டிக்கொண்டிருக்கு.
 
 
கட்டுக்குள் இருக்கும் அதிகாரம்,கண்டுகொள்ளவதற்கு நீட்சே சொன்ன வடிவ-விருப்பு"மேல்நிலை"மனித நடாத்தை புரியத்தக்கபோது புரியாத புதிராக நம்மை ஆட்டும்.மதத்தினதும்,பெண்ணினதும் இயல்புகளைச் சதா வருத்தத்துக்குரிய பகுதிகளாகக் கண்ட நீட்சேக்கு சரதுஷ்டரா துணைக்கு வருகிறான்.சொல்லாத பக்கங்களென்ற ஒன்றிக்கு அவன் கொடுத்த "ஊபமென்ஸ்"தன்முனைப்பின்பாற்பட்டதென்று சொல்வதிலும் சிக்கலொன்று உண்டாக்குவதற்கு அவனுக்குக் கைகொடுத்தது"அதிகாரத்தின் ஆண்மை"இது திரும்பத்திரும்ப வரும்.அழியும் அழிந்து மீளத் தன்னைத் தகவமைக்கும்.இந்த நிகழ்வூட்டத்தோடு திசை நோக்குகிறது இன்றைய புதிய நாசிகளது திசைவழி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
15.11.2009

Thursday, November 12, 2009

சமூக விரோதிகளின் திசையமைவு

உண்மைகளை இனங்காணும் பாதை...
 
 
னவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணையிழந்து புகலிடம் தேடிய வாழ்வு, தாயகத்தை நோக்கிய திசையில்...
 
யார் யாருக்காகவோ மனிதர்கள் செத்தார் நம்மிடம்.
 
நாடு பிரிப்பதற்காய்ப் போராடி அனைத்தையும் இழந்து அடிமைப்பட்ட இனம்,பணத்தைக் குறிவைத்தும்,பதவியைக் குறிவைத்தும் எமக்கு எகத் தாளமாய் அரசியல் சொல்கிறது.கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மனிதர்கள் குறித்து அது மீளவும் நியாயப்படுத்துகிறது.இதுவரையான கொலைகளுக்கு உடந்தையானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
 
சமூக விரோதிகளின் திசையமைவு:
 
 
இத்தகைய கொலைஞர்கள் கட்டியமைக்கும் "தமிழர் நல அரசியல்" என்பது இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும் மக்களை ஒட்டச் சுரண்டும் கயமையோடு,அவர்களது அறிவை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசிய வெறியை மீளவூட்டுவதாக இருக்கும்.இதற்காகப் பிரபாகரனை மீளத் துதிப்பதிலிருந்து இது ஆரம்பிக்கப் போகிறது.வரும்"மாவீரர்"நினைவு நாட்கள் இத்தகைய தெரிவின் முன்னே கட்டமைக்கப்படுகிறது.
 
துதி பாடும் அரசியல் இதுவரை செய்த தீங்குகள் குறித்து எவருமே அலட்டிக்கொள்ளவில்லை.தமிழின்பெயரால் தாயகம் தேவை என்பவர்கள், தாம் சேகரித்த செல்வத்தோடு மீதமாகவும் செல்வம் குவிக்கப் புறப்படும் திசை "தமிழர் நலம்,தேசம்,விடுதலை" என்று விரிகிறது.இவர்களைத் திருத்துவதென்பது அவசியமற்றது.இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும்,இதுவரை இலங்கையில் கொலைகளை "தமிழ் மக்கள் விடுதலை"யெனும் பெயரில் கட்டியமைத்தவர்கள் என்பதாலும் கிரிமினல் பேர்வழிகளாவார்கள்.
 

பெருந்திரளான மக்களது வாழ்வாதாரத்தையும்,உயிரையும் கொள்ளையடித்தவர்கள் என்பதால் இவர்களைக் கண்டிப்பாகத் தண்டித்தாகவேண்டும்.ஐரோப்பிய மண்ணில் பலாத்தகாரமகத் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்கும்,மனமுடக்கத்துக்கும் உள்ளாக்கும் உளவியற் போரைச் செய்யும் இந்தச் சமூகவிரோதிகள், பழைய புலிகளது இன்றைய செயற்பாட்டாளர்களாக இனம் காணப்படுகிறார்கள்.இவர்கள் குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.
 
1): இலங்கையில் கொலை அரசியலைச் செய்வதற்கு புலம் பெயர் மக்களைத் தமக்காகான வழிகளில் திரட்டி, அவர்களது எழிச்சியின் திசையில் கொலைகளை நியாயப்படுத்தியது,
 
2):புலம்பெயர் மக்களை தமிழீழ விடுதலை எனும் பெயரில் வெறியூட்டி அவர்களைப் பொருளாதார ரீதியாகவும்,பௌதிக ரீதியாகவும் சுரண்டியது,
 
3):இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது சமூக வாழ்வைத் தொடர்ந்து திருடுவது,
 
4):இலங்கையில் யுத்தத்தில் சீரழிந்த சமூக வாழ்வைச் சீரமைப்பதற்குத் தடையாக மீளவும், தமிழ் தேசியவெறியைக் கிளறிவிட்டு,அவர்களை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்துப் பலியிட முனைவது,
 
5):நாடுகடந்த தமிழீழ அரசு,நாடாளுமன்றம் எனும் திசை வழியில் புலம்பெயர் தமிழ்-இளம் சந்ததியை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது செயற்றிறனை மழுங்கடிப்பதும்,அவர்களை வைத்து இலங்கை அரசோடு பேரம்பேச முனைவது,
 
மேற்காணம் சமூகவிரோதச் செயற்பாடுகளின்பொருட்டு இவர்களைத் தண்டித்தாகவேண்டும்.ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து ஏமாற்றியபடி,அக் குழுமத்தின் சமூக இருப்பைக் கொந்தளிப்புக்குள்ளாக்குவதும்,அவர்களை பயங்கரவாதச் செயற்பாட்டுக்குள் தொடர்ந்து இருத்தி வைப்பதும் மிகப் பெரிய சமூ விரோதமாகும்.பொது மக்களது பரந்துபட்ட வாழ்வையும்,அவர்களது அமைதியையும் சீரழிக்கும் இக் கொடிய சமூக விரோதிகள், செல்வம் சேகரிப்பதற்காக ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து வருத்துவதென்பது தண்டனைக்குட்பட்ட குற்றச் செயலாக இருப்பதால்,இவர்களைச் சர்வதேசச் சட்டங்களுக்குட்பட்ட வகைகளில் தண்டனைக்குட்படுத்த வேண்டிய தேவையும், அனைத்து மக்கள் நலச் சக்திகளுக்கும் உண்டு.இலங்கையில் அமைதிக்கும்,சகோதாரத்துவத்துக்கும் எதிராகச் செயற்படும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கும்-இனவாதக் கட்சிகளுக்கும்,இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
 
சிந்தனைச் சோம்பல்:
 
நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.
 
அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தத் தமிழ்-ஈழ அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.
 
"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.
 
இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரிந்திருந்தது,தலைவர்...தலைவர்,தலைவர்..."
 
விளைவு?
 
அதோ கண்ணில் தெரியுது, கருங் குருதி!
 
 
வன்னி யுத்தத்தில் வடிந்த குருதி உலர்வதற்குள்,வாய் நெறையப் பொய்யுரைக்க நாம் உசாராகிறோம்.
 
புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.
 
 
ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இன்று இருக்கிறது.
 
இந்நிலையில்...
 
அ): மனித சக்தியை விரயமாக்கிப் புரட்சிக்கு எதிரானவொரு சூழலைத் தொடர்ந்திருத்திவைக்கும் சதியை உலகக்கூட்டோடு செய்துவரும் புலம்பெயர் புலிக் கயவர்களையிட்டுத் தமிழ் பேசும் இளைஞர் சமுதாயம் விழிப்படையவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமானது.இதையிட்டு இளைஞர்களிடம் இத்தகைய சதியைக் குறித்தான பரப்புரைகள்-ஆய்வுகளை முதலில் கொண்டு செல்வதும் காலத்தின் தேவைகளில் ஒன்று.தமிழீழப் போலி கனவுகள் மேலும் ஒரு இனத்தை மொட்டையடிப்பது என்பது தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமான பணி.
 
 
ஆ): எமது சமுதயாத்துக்காக, அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில், அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும், அந்நியர்களுக்குப் புலிகள் போன்ற அமைப்புகள் அடியாளாக இருந்த இத்தகைய நடாத்தையின் பொருட்டே எமது போராளிச் சிறார்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.
 
 
இ): தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.உலகத்தின் செயற்பாடுகள்-இவர்களைச் சார்ந்திருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்புகள் இன்று நேற்றைய கதைகளில்லை.தமிழ் மக்கள்,இலங்கையின் அனைத்து மக்களின் பன்முகத் தன்மையிலான வெளிப்பாடுகளை அங்கீகரித்து,அதையே புரட்சிகரமானமுறையில் இலங்கையினது மாற்றினங்களது தோழமையோடு,தமிழ்-சிங்கள இனவாதச் சியோனிசத்துக்கெதிரானதாக வளர்த்தெடுக்கும்போதுதாம் இலங்கையின் சிறுபான்மை இனமக்கள் தம் விடுதலைக்கான முதற்கல்லை எடுத்துவைப்பர் என்றே நாம் இப்போதும்-அப்போதும் கருதி வருகிறோம்.
 
 
இப்போதும்-அதுவும் பூண்டோடு புலித் தலைமையும்,போராளிகளும் அழிந்த பின்பும்,தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.புலம்பெயர் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறது.இந்தப் புலிவழித் தமிழீழப் போராட்டத்தில் நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.இது குறித்துப் பூசி மெழுகிவிடுகிறோம்!
 
நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.
 
 
இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.இந்தக் கொடுமையிலும் இங்கே நாடுகடந்த தமிழீழப் பிரகடனமும்,பங்கீட்டுச் சண்டையும் மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
13.11.2009
 

Wednesday, November 11, 2009

கிழக்கு ஜேர்மனியின் மதில்கள்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
மக்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 

 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...
 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 

கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து
,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009
 

Monday, November 09, 2009

நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.

மக்களைக் கருவறுக்கும்
பணச் சேகரிப்பு அரசியல்
 
நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள்
பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...
 
"தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள் உள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.
 
இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம்பறிக்கும் வியாபார உத்தியோடு அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்மண்ணைப் போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது ஜீ.ரீ.விக்குள் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.
 




 
 
எனினும்,இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில், தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லியும்,கூடவே, இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலைச் சொல்லியபடி "வன்னி மக்களுக்கு உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு,பணப்பறிப்பை நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் அரசியல் அநாதைகள் முயற்சிப்பது பணத்தை-செல்வத்தைத் மிக இலகுவாகத் திரட்டிக் கொள்வதற்கான எதிர்பார்ப்பிலிருந்தே தோன்றுவதாக எண்ணிக்கொள்வதற்கான சாதகமான போக்ககள் இப்போது உருவாகிறது.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதை மீளத் தொடக்கி வைப்பது ஜீ.ரீ.வீ என்றாக இருக்கும்.இது,பழைய புலிகளது"துரோகிகளின்"-இன்றைய "நாணயப் புலிகளது" ஊடகமாக உருபெறத் துடிக்கிறது.
 
 
"எமக்கு உருப்படியாய்ப் புலராத வாழ்வு
ஓடாய் உழைத்தும் கடன்பட்ட
நெஞ்சோடு சோற்றுக் கோப்பை
விரல் நனைத்த கணமே மறு வேலை
துரத்தும் எமை...
 
உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்
 
குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத ஜீ.ரீ.வீ. ஊடகக்காரர்!..."
 
 
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.
 
இந்த ஊடகமோ,மேலும் தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது.இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இறுதியில் சரணடைந்து செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.
 
மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும் அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது, பணம் பொறுக்கும் பண்புக்குட்பட்டதென்பதற்கு ஜீ.ரீ.வீக்கு காசு சேர்க்கும்-பிச்சை கேட்கும் என்.ரீ. ஜெகனது பாங்கே உறுதிப்படுத்துகிறது.
 
அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
 
இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாகத் தொலைக்காட்சியில் வீராப்புப் பேசுகிறோம்!
 
இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.
 
புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்"என்று ஒப்பாரி வைத்துப் பணங்கறப்பதில் குறியாக...இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
09.11.2009

Saturday, October 10, 2009

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!
 
2009-இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,
 
ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,
 
இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்
   
இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.
 
 
அந்த நலன் என்ன?
 
உலகத்தில் சமாதானந் தழைத்தோங்கி,உலக மானுடர்கள் சகோதரத்துவத்துடன் தத்தமது தேசத்தின் வளங்களை நெறிமுறையோடு பகிர்ந்துண்டு வாழ்வதா இதன் நலன்?அல்லது,சில தேசங்களது கூட்டோடு,உலக வளங்களைச் சுருட்டித் தமது இனத்துவ அடையாளத்தைப் பேணி,உற்பத்தியைத் தக்கவைத்து உலகைத் தமது விருப்புக்கமைய ஆளுவதா?
 
 

இத்தகைய கேள்விகள் இரண்டும் சமகால அரசியல் போக்குகளால் எழுவது.கடந்தகால ஐரோப்பிய மக்களதும்,அவர்களது இராசதானியங்களதும் மனித நடாத்தையானது இத்தகைய கேள்விகளுக்குள் நம்மைத் தள்ளிவிடுபவை மட்டுமல்ல, அதன்வழி இன்றுவரை ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நடாத்தையுமே இத்தகைய கேள்வியின்பால் நம்மைக்கொண்டுசென்று இயக்குகிறது.
 
இன்றைய நோபல் பரிசுக் கமிட்டியின் முழுப்பரிணாமத்தையும், புரிந்துகொள்வதற்கும்முன் அதன் இருப்பு அவசியமாக உணரத்தக்க அரசியலைப் புரிந்துகொள்வதே நம்மெல்லோருக்குமான தேவைகளில் ஒன்று.
தற்போதைய வர்த்தகச் சூழலில்-சந்தைப் பொருளாதாரப் போக்குகளில் பாரிய நிதியளித்துக் காக்கப்படும் நோபல்பரிசு அறக்கட்டளையை தத்தமது தேவைக்கேற்பவும்,தமது அரசியல்-பொருளாதார மேலாண்மைக்குமாகவே மேற்குலக-அமெரிக்க தேசங்கள் பயன்படுத்துவதை மிகவும் நாணையத்தோடு ஒத்துக்கொள்ளவேண்டும்.அவர்கள்,தமது எதிர்காலத்தையும் அதில் தமது இருப்புத் தொடர்ந்து சிதையாதிருக்கும் பலமுறைகளில் திட்டமிட்டு இயங்கின்றார்கள்.இயற்கை விஞ்ஞானம்,மருத்துவம்,இரசயனம்,பொறியியல்,சூழலியல்,மனிதவளம்-இன இருப்பு,வர்த்தகம்,நெறியாண்மை,அரசியல் ஆதிக்கம்,அதிகாரம்,சட்டம்,தாக்குதல்வலு,பண்பாட்டு மேலாண்மை,பாராளுமன்றம்,நீதி போன்ற பலபடிகளில் ஒன்றாகத்தாம் நோபல் பரிசு அறக்கட்டளையையும் புரிந்தாகவேண்டும்.
 
அது,இத்தகைய மேற்குலக நலன்சார்ந்த பின்னணிகளோடுதாம் இயங்குகிறது.இதன் பாத்திரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு, அதன் இன்றையதும் கடந்தகாலத்துக்குமான நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகரம் வழங்குவதும் அதன் வாய்ப்பாக அடுத்த தசாப்பத்தில் மேற்குலக நலன்சார்ந்த அடுத்தகட்ட ஆதிக்கத்தை மேலும் நிலைப்படுத்துவதில் மையங்கொள்கிறது.
 
இதையிங்ஙனம் புரிந்துகொள்வது அவசியம்:
 
1):வெறும் ஆலோசனைகளும்,அபிப்பிராயங்களும் சொல்பவருக்கும்,
 
2):ஆணு ஆயுதமற்ற உலகைக் குறித்து வெறும் கனவு காண்பவருக்கும்,
 
3):அவ்கானிஸ்த்தானைப் புதிய வியாட்னாமாக்கிப் போர் நடாத்துபவருக்கும்
 
சமாதானத்துக்கான நோபல் பரிசு-கீரிடம் வழங்கப்படுவதானது அவரது அரசியலுக்கு அங்கீகாரம் அளிப்பது,அடுத்த கட்ட அனைத்துவகை அமெரிக்க அரசியல்-ஆதிக்க நடவடிக்கைகளை நியாப்படுத்துவது-நிலைப்படுத்துவது,முடிந்தால் அதை உலகு தழுவிய வகையில் விஸ்த்தரித்து ஒற்றைத் துருவ ஆதிக்கத்தை மற்றைய குடிசார் சமூகங்களுக்குள் திணிப்பதுவரை நிகழ்த்துவதே இதன் புரிதலாகும்.இதன்வழி அமெரிக்கா முன்னெடுக்கும் அனைத்துவகை விஸ்த்தரிப்பும் உலக சமாதானத்துக்கான முன்நிபந்தனையென்பதை இப்பரிசின்வழி நியாயமுறுத்துவதாகும்.
   
கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,,ராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.
   
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.
 
ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.
 
சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து காரியமாற்றுகிறது.இது,அமெரிக்கக்கூட்டினது கணிசமான ஆதிக்கவலுவைத் தோற்கடித்தபடியேதாம் சாத்தியமாகிவரும் இன்றைய சூழலில்,ஓபாமாவுக்கான சமாதான நோபல் பரிசு அமெரிக்கா முன்னகர்த்தும் இன்றைய "பதுங்கிப்பாய்தல்-நட்பாகிக் கொல்லல்,உட்புகுந்து தாலியறுத்தல்"போன்ற அதன் வெளியுலக அரசியலுக்குத் தர நிர்ணயமாகும்,அதை நியாப்படுத்தி உலகை ஏமாற்றிக்கொள்ளவும்,அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைச் சமாதானப்பிரியனாக வேடம் இட்டுள்ளது.இதை வலுப்படுத்தி மேலும் கட்டியமைக்க இன்றைய நோபல் பரிசின்வழி அமெரிக்க மூலதனம் முயன்றுவருகிறது.
 
அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும்.சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது.அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய"ஜனநாயக"ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது "சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்"என்று பெயராகிறது.சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும்.என்றபோதும்,இருஷ்சிய-சீன வல்லரசுகளின் அரசியல் ரீதியான நகர்வையும் அவை கொண்டியங்கும் தூர நோக்கையும் முடக்குவதற்கான பரிந்துரையாகவே அமெரிக்கா தனக்குத் தானே பரிசளிக்க முனைந்துள்ளது.
 
 

கடந்த 23.09.2009 அன்று ஐ.நா.வில்(GENERAL DEBATE OF THE 64TH SESSION OF THE UNITED NATIONS GENERAL ASSEMBLY )உரையாற்றிய இருஷ்சியத் தலைவர் மெட்வேடேவ் தனது உரையை மிக நிதானமாகச் செய்திருக்கிறார்.அவர் உலகத்துக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் வெள்ளையின நாசியப் பயங்கரவாதம்வரை தனது உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அமெரிக்க-மேற்குலக நிறவாத அரசியல் தகவமைப்புகளையுஞ் சாடியபோது மாற்றுக்கருத்தற்ற மேற்குல வெள்ளையினவாதம், மிகச் சாதுரியமாகத் தமது நடாத்தைகளைச் சமாதானத்துக்கான முன் நிபந்தனையாகவும், அமெரிக்க அதிபர் வடிவினில் அமெரிக்காவை முன்நிறுத்துகின்றன.இந்த வகை அரசியலது தொடரில் இந்தச் சமாதானத்துக்கான நோபல் பரிசை தனியே "ஸ்க்கன்டால்"(Scandal: Obama gets the "peace prize)என்ற மொழிவுக்கூடாகத் திசை திருப்ப முடியாது.ஈராக்,அவ்கானிஸ்த்தான் யுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவின் அடுத்த நாடகத்தை மறைக்க முனையக்கூடாது.ஆனால்,ஜார்ன் ஓபேர்க்(Jan Oberg ist Leiter des Friedensforschungsinstituts TFF in Lund, Sweden )செய்து முடிக்கிறார்.
 
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்க எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே இப்பரிசினது நோக்காக இருப்பதற்கு வலுவான காரணிகளாக இருப்பது இன்றைய அமெரிக்க வியூகமே.
 
இனிவரும் கால அமெரிக்க அரசியல் நகர்வில் ஒபாமா அரசு செய்யும் அரசியல்:
 
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
 
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
 
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.
 
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
 
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
 
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
 
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
   
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா(Nabucco) எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,
 
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,
 
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
 
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதன் உச்சபட்சத் தெரிவானது உலகில் அமெரிக்க ஆதிக்கத்தைச் சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவும்,இதுவே உலக அமைதிக்கான பணியாகவும் காட்ட முற்படும் அமெரிக்க மூலதனம்,உலகில் தனக்கெதிரான அனைத்தையும் தனிமைப்படுத்தும் முதன் தெரிவாகத் தன்னைத்தானே உலகச் சமாதான அரசாக இந்த நோபல் பரிசின்வழி சொல்கிறது.அதையே அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது சொல்லி வருகிறார்.இது,அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது அமெரிக்காவின் தலைமையை உலகத்தில் நிலைநிறுத்துவதற்கான புதிய தெரிவுகளாகின்றன.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி (Zbigniew Brzezinski )என்பது உலகறிந்த உண்மை.
   
உலகை ஏப்பமிட முனையும் ஏகாதிபத்தியம்,பாசிசத்தின் கடைக்கோடி நிலையாக இத்தகைய நோபல் பரிசின்வழி உலகைத் துடைக்க முனைவதை போராட்ட இயக்கங்கள்-ஒடுக்கப்படும் இனங்கள்சார்பாக எழும் எழிச்சிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
10.10.2009

Thursday, October 08, 2009

இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.

நோபல் பரிசு இலக்கியத்துக்கு?
 

"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது
ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
ன்று ஜேர்மனியில், "இலக்கியத்துக்கான நோபல் பரிசு" கிடைக்கப்பெற்ற கேர்த்தா முல்லருக்குத்(Herta Müller) தடாலடியான கட்டுரைகள் மற்றும் இலக்கியப் பிரமுகர்களதும்,அரச அதிபர் அங்கேலா மேர்க்கலதும் பாராட்டுக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது-இவை,சிலவேளை விண்ணை எட்டினாலும் எட்டும்.
 
 
அப்படி என்னதாம் இந்தக் கேர்த்தா முல்லர் எழுதித்தள்ளியுள்ளார்?
 
இவரது எழுத்துக்கள் எத்தகைய இலக்கியத் தரமுள்ளதோ இல்லையோ, அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததான செய்தியில், பெரும் பத்திரிகைகள் அவரது கடந்தகால மேற்குலகச் சேவகத்தை நன்றி பகிர்ந்தே பாராட்டுக்களாகக் கட்டுரைகள் எழுதுகின்றன.
 
 
செவ்செஸ்கோவினது(Ceausescu-Regimes) இருமேனியாவில் வாழ்ந்த கேர்த்தாவுக்கு, கம்யூனிசக் கொடுமை சகிக்கவில்லையாம்.செவ்செஸ்கோ கம்யூனிசத்தின்வழி பரப்பப்பட்ட பரப்புரைகளது எதார்த்தம் ஐரோப்பாவின் சதிகளோடு நிரம்பியிருந்த அன்றைய காலத்தில், இத்தகைய கேர்த்தா முல்லர்களே மிகச் சாதுரியமாகக் கடமைகள் செய்திருக்கின்றார்கள்.இதை இன்றைய பத்திரிகைகள் நன்றியோடு பகிர்கின்றன.
 
 

 
 
இவரது நீடருங்கன்("Niederungen" (1984), Erzählungen)எனும் கதைத் தொகுப்புக்குப் பரிசு எட்டியாதானது அத்தொகுப்பு வீழ்ச்சிகள் குறித்த கதையாடலாக இருப்பதால்மட்டுமல்ல என்பது,ஜேர்மனிய முன்னணிப் பத்திரிகை வாயிலாக நாம் கண்டடையமுடியும்.
 
 
கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரைகளை செய்ததும்,செவ்செஸ்கோவைக் கம்யூனிச ஆட்சியாளராகப் பரப்புரை செய்ததிலும், கேர்த்தாவுக்குப் பெரும் பங்கிருக்காது போனாலும், அவர் மேற்குலகத்துக்குக் குறிப்பாக ஜேர்மனிக்கு மிக நெருக்கமாக இருமேனியாவை வேவு பார்த்துக் கொடுத்தவர்களுள் ஒருவர் என்பது சரியானதாகும்.
 
 
அன்றைய காலக்கட்டத்தில், அதிகமான கிழக்கைரோப்பியப் போலிச் சோசலிச நாடுகளைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவுக்குப் புலனாய்ந்து கொடுத்த தேசம் ஜேர்மனியாகும்.சமீபத்தில், ஈராக் குறித்தும் புலானாய்ந்து ஜேர்மனிய உளவுத்துறை அமெரிக்காவுக்குத் தகவல்கள் கொடுத்து உதவியது.இத்தகைய உறவுகளுக்கமையப்பெற்ற ஜேர்மனிய அரசின் நிபந்தனைகள்,பரிந்துரைகள் வெறுமனவேயான இலக்கியத்துக்கான தெரிவில் கேர்த்தாவுக்குப் பரிசு கிடைத்ததாகக்கொள்ள வாய்ப்பில்லை.அவரைவிட ஆளுமையான ஜேர்மனியப்படைப்பாளிகளை நான் அறிவேன்.
 
 
இன்று,மாறிவரும் பொருளாதாரச் சூழலானது பெரும் முன்னெடுப்போடு இருமேனிய மண்ணில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறது.மேற்குலகத்துக்கு அத்தேசம் அனைத்துச் சலுகைகளையும் கொடுத்துத் தமது தொழிலாளரை ஒட்டச் சுரண்டுவதுவரை ஒத்துழைக்கின்றது.எனினும்,இருமேனிய மக்கள் குறித்த ஜேர்மனியை ஆளும்,C.D.U.கட்சியின் தலைவர்களில் ஒருவரான ருட்காரது (Rütger) இனவாதக்கருத்து அத்தேசத்து மக்களை மேலும் அந்நியப்படுத்திய சூழலில்,இத்தகைய விருதுகளின்வழி இருமேனியாவின் சார்பு நிலையை-மேற்குலகுக்கு உடந்தையாக இருப்பதென்பதுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் தேவையோடு இணக்கமுறுகிறது.
 
 
இன்னும் சொல்வதென்றால்,கேர்த்தா முல்லர் கைன்றிக் கையின(Heinrich Heine) போன்ற படைப்பாளிகளின்வழி வந்தவரென்று சையிட் ஒன்லையின்ட் எழுதுகிறது.
 
 

அதற்காகக் கையின(H.Heine) தனது புரிதலில் பிரான்சினது கம்யூனிசக்கட்சியையும்,அதன்போராட்ட முறைகளையும் குறித்து எழுதும்போது,"காலத்துக்கு முந்திய பாட்டாளிய வர்க்கச் சர்வதிகாரம் வெற்றி பெற்றிருந்தால் அது முழுமொத்த மனித இனத்துக்கும் பெரும் கெட்ட காலமாகி இருக்கும்."என லுற்ரேற்றியா(Lutetia) பதிவேட்டில் எழுதுகிறார்.
 
 
தொழிற்சாலைப் புரட்சிகளின் காலக்கட்டத்தில் வாழ்ந்த கையினே பாட்டாளிய வர்க்கத்தின் சிதைவுகண்டு வருந்தும் பாடல்களை எழுதியவர்.அவரை கம்யூனிசத்தின் விரோதியாக்க முனையும் இன்றைய காலம்,கேர்த்தா முல்லரது இன்றைய நிலைக்கு அவரது கருத்தைப் பயன்படுத்துவது மிகப்பெரும் அயோக்கியத்தனம்.
 
 
இத்தகைய அயோக்கியத்தனத்தின்வழியேதாம் இவர்கள் உலகைச் சூறையாடும்போது,கேர்த்தா முல்லர் கடந்த காலத்தில் தமது நோக்கை நிறைவேற்ற இருமேனியாவின் ஆட்சிக்கவிழ்ப்பில் ஒரு துரும்பாகவும் இருந்திருக்கிறார்.அதன் சம்பளம் இப்போது பரிசாக வருவதில் எவராவது மையல்கொண்டு, அவர் இன்னல்படும் மக்களுக்காக் குரல் கொடுத்தவராக எவரும் உணர முடியுமா?
 
 
"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
 
அந்தளவுக்கு ஏகாதிபத்தியங்களது நலனுக்கு உடந்தையான முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு நோபல் பரிசினது இன்றைய பக்கச் சார்பையும்,அது,போப்பாண்டவர்களது வேலையையே வேறொரு வடிவில் செய்வதாகவும் கொள்ளமுடியும்.
 
 
 
கேர்த்தா முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
08.10.2009







Saturday, October 03, 2009

வெந்து மண்ணாகினாலென்ன?


சிந்தனை மையமே சிறந்ததென...
 
 
வ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் "உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்."ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அஃது, எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைத்தொடுகிறது.
 
இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.
 
அஃது, என்னையும் மற்றைய மனிதர்களையும் இணைத்துப் பொதுமைப்படுத்திப் பிணைக்கிறது.இஃது, எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது, பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில், புதியதைத் தோற்றுவிக்கிறது.எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு இதுவே!
 
 
இந்தவுலகு குறித்துப் பேசுவதற்கு எனக்கெதற்குக் கூச்சம்?
 
எப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.
 
உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.இந்த"நான்"அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான"நான்"சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் எழுதுவதில் முடிகிறது ஆயுள்.
 
"பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல
 
மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ..."
 
 



 
இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்...
 
புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் கௌரியினது பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.அது,"மக்கள் நலம்-ஏதாவது செய்தாகவேண்டும்"மெனப் போடும் கோலமும் புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும்வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை? மேலும்,"விரித்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.
 
"ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்"
 
எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.
 
 
"மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!"
 
 
அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபவங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க...
 
இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.இன்று, இவைகளது அகண்ட கால்கள் வன்னி அகதி முகாமுக்குள் மக்கள் தலையில் எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.மக்களுக்கு,மக்களுக்கென சுவிஸ்சிலிருந்து புனையும் "ஈரனல்"ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு "துரோகி"சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?
 
உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!"எல்லாந்தெரிந்தவர்கள்"தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.
"ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு"
 
 
இவற்றைத் தவிர நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!
 
உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடியலைவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.
 
 
"கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்
கூடுவதும்,சேர்வதும் நாளைய விடியலுக்காவே
நமது கரங்களுக்கும் நட்பும்
தோழமையும் தெரிந்தே இருக்கிறது
சிந்தனைக்கு மையமாக
நாம் சிந்திப்போம்-எதைக்குறித்தும் கேள்வி கேட்டு."
 
 
குப்பறப் புரண்டவனின் வாரீசுகள் இன்றுவரையும் அகதியாகவும்,அடுப்பெரிக்க வக்கற்றவர்களாகவும் உலகெல்லாம் பிச்சையெடுப்பதைவிட ஊருக்குள்ளேயே கையேந்துகிறார்கள்.அகதியாக அலைந்து,ஐரோப்பியத் தெருக்களில் குப்பை பொறுக்கும் நம்மைக் காவு கொடுப்பதற்காகவே கடவுள் பெயரில் மதம்பரப்பிக் காசு சேர்ப்பவர்களோ,கட்டுக்கட்டாகக் கடவுள் பெயரில் சேகரிக்கும் பணம் நம்மைக் காவுகொடுத்துப் பையத்தியங்களாக்கிவிட்டு, தமது எஜமானர்களிடம் அரசியலைக் கொடுக்கிறது.நாம், மெல்லத் தொலைகிறோம்.
 
இனிமேலும்,தொலைந்து காணாமற் போவதற்குள்ளாவது எமது அடுத்த தலைமுறைகளை இவர்களிடமிருந்து காத்துவிடுவதில் மனது விருப்புறுகிறது.ஒரு பக்கம் கடந்தகாலத்து வாழ்வின்மீதான ஏக்கம் மறுபுறும் நிகழ்காலத்துக் கையாலாகாத வாழ்நிலை.இவற்றையுடைத்து மேலெழுவதற்கான எமது சந்திப்புக் கடந்த 26-27 ஆம் தேதி(26-27.09.2009) பிரான்சில் நிகழ்ந்தது.தோழமையோடு சந்தித்துக்கொண்ட இருபதுக்குட்பட்ட நம்மில் பலர், நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.கடந்தகாலத்து அநுபவங்கள்மீதான நமது விமர்சனங்கள் நம்மைக்குறித்துச் சுயவிமர்சனமாகவே அமைந்தது.இது, ஊக்கமிக்க செயற்பாட்டுக்கு உரமாகும்.
 
பாரீசின் ஏதோவொரு தெருவில் மிக எளிமையாகவும்,ஐரோப்பிய வாழ்நிலையோடு ஒப்பிடும்போது வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துவரும் தோழர் இரயாகரன். அவரை எண்ணும் போது எனது அகங்காரம்,திமிர்,நடத்தரவர்க்கக் குணமெல்லாம் கரைந்துபோகிறது(வருடத்துக்கு வருடம் வரும் புதிய கார்கள்மீது இச்சைகொண்டலையும் என் மனது, என்னைக் கேலி பண்ணுகிறது.காருக்காகக் கடனாளியாகிச் சுருங்கும் என் பையிலிருந்து வட்டிக்காகவே பல தாள்கள் போகின்றது.வாழ்வுக்கு எதுவரை வரம்பிட்டுக்கொள்ளலாம்?).
 
இப்படியும் மக்களுக்காகத் தமது வாழ்வை அற்பணித்த பல தோழர்களை நான் முன்னமே இழந்திருக்கிறேன்.அவர்கள்,மாற்றியக்க-இலங்கைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.காலம் ஏதோவொரு வகையில் மீளவும் உயிர்த்துடிப்புள்ளவர்களை எனக்குச் சமீபத்தில் அழைத்துவருகிறது.நாம்,உண்மையாய் உழைப்பது உயிர்த்திருப்பதின் முதற்படிதானே!எனவே,புத்துயிர் பெறுவதும்,அது குறித்துப் பேசுவதும் காலந்தாழ்த்தும் ஐரோப்பியச் சூழலை வெல்வதற்கே-அதுவும் அகதியச் சூழலை என்றால் நன்மையே.
 
"சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?" என்றேங்கிய பொழுதுகள் பல.
 
 
நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜகப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.10.2009