Saturday, November 13, 2010

சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!

சிங்கள மேலாத்திக்கக் கனவு:
சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!


சில குறிப்புகள்.



சிங்கள-இந்திய அரசுகள் இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோமா? இத்தகையதும்,ஏலவே தம்மை அரச பரிபாலனத்துக்குரிய இனங்களாகக் கருதும் மேலாண்மைச் சமுதாயங்கள் தம்மிலும் மெலிய இனங்களை தமக்குள் உள்வாங்கி ஏப்பம் விடும் பாரிய யுத்தத்தைப் பல வடிவங்களில் முன்னெடுக்கின்றன.இவை அனைத்துக்கமான அடிப்படை நோக்கானது தகவமைக்கப்பட்ட பொருளாதாரப் பொறி முறைகளுக்கேற்ப இந்தயுத்தம் பொருளாதாரத்தை முழுமையாகக் கையகப்படுத்திய இனங்களுக்குள் இருக்கும் மேட்டுக் குடிகளது நிகழ்சி நிரலுக்கேற்ற படி முறைமைகளைத் தப்பாது திசை வழியாக்கிக் கொண்டிருக்கின்றன.


ஜேர்மனியை உதாரணமாக எடுத்தோமானால்,இங்கே, இனங்களுக் கிடையிலான பரஸ்பர சமூக அசைவூக்கமானது மேலாண்மையைக் கொண்டியங்கும் பெரும்பான்மை டொச்சு மொழிக்குழுமத்தை மையப்படுத்தியே குடியேற்ற இனங்களை உந்தித் தள்ளுகிறது.சில நூறு ஆண்டுகளுக்குட்பட்ட குடியேற்றக் குடிகளுக்கு இது பொருத்தமானதும்-தவிர்க்க முடியாததுமான புறச் சூழலாலும் தமக்கு அந்நியமான சமுதாயப் பொருளாதாரப் பொறிமுறைகளாலும் இது குடியேற்றக் குடிகளுக்கு அவசியமாகவும்,அத்தியவசியமுமாகக் கப்பட்டிருக்கிறது. எனவே,கலந்து காணாமற் போதல் தவிர்க்க முடியாத நெருக்கடியில் தன்னிலையாக இருக்க முனையும் அவர்களது தடங்கள் காலவோட்டத்தில் நெருக்கடிக்கு முன்னேயே அழிந்து காணாமற்போகிறது. இத்தகையவொரு அளவு கோலை இலங்கை போன்ற தேசங்கள் தமக்கு முன்னே வளர்ச்சியடைந்து ஒரு மொன்னைத் தேசிய இனமாக மாற்றப்பட்ட தேசங்களது வழமையான அரசியல்-சமூகக் கோரிக்கைகளைத் தமக்குள் உள்வாங்கவும்,அந்தத் தேசத்துச் சிறுபான்மை இனங்கள்மீது தாந்தோன்றித்தனமாகக்ச் சுமத்தப்படும் பொருளாதாரப் பண்பாட்டு அத்துமீறல்களையும்நியாப்படுத்தும் மேற்குலகச் சிந்தனையாளர்களது வழிகாட்டலில் தகவமைக்கப்படும்நவ பாசிசப் போக்குகளை ஆசிய மூலதனத்துக்கேற்ற புதிய மாதிரிகளாக இலங்கைத் தேசம் வலிந்து தமிழ் பேசும் மக்கள்மீது பரிசீலித்துப் பார்க்கிறது.


புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம்.

சிங்களப் பண்பாட்டு மேலாத்திக்கமானது தமிழ் பேசும் மக்களிடம் பற்பல படி முறைகளால் தகவமைக்கப்படும்போது அதுள் பொருளாதாரம்(அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை மீளக் கட்டுவது எனும் போர்வையில்),சிங்கள வன்முறை ஜந்திரம்,மற்றும் அரச ஆதிக்கம்-ஓட்டுக்கட்சிசார் நலன்கள் இவற்றைச் சிங்கள அகவிருப்புக் கொப்பக் காரியமாற்றி வருவதற்கான பாரிய ஒத்திசைவை ஏற்படுத்திக்கொடுக்கும்போது, பாமர மக்கள் தமது பௌதிக ரீதியான இருப்பின் உறுதிப்பாட்டுக்காகத் தொடர்ந்து சிங்களத் திமிருக்குப் பலியாவதைப் புதிய பாணியில் ஜனநாயகப்படுத்தல் மற்றும்,பல்லினப் பண்பாட்டோடும், இலங்கையர்களெனும் தேசத்துக்குப் பழக்கப்படுத்துவதுமாகப் புதிய கதையாடல்களை நமக்குள் இலங்கை அரசு கட்டிக் கண்ணியாக வைக்கிறது.

இந்த ஒற்றைத்துருவ இனஞ்சார் மதிபீடுகள் வரலாற்றுரீதியாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரவுரிமையையும், அவர்களது வரலாற்று ஐதீகமுடைய இறையாண்மையும், அவர்தம் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து அகற்றும் உள் நோக்கங்கட்கமையவே சிங்கள மேலாண்மைச் சின்னங்கள்-கதைகள்மெல்லக் கட்டியமைக்கப்படும் தமிழர்களது வரலாற்று மண்ணில், வேரோடு பெயர்த் தெடுத்து அழிக்கப்பட்டும் தமிழ் மக்களது வரலாற்று அடையாளங்கள் அவர்களது எதிர்காலத்தை இலங்கையில் கேள்விக் குறியாக்கிறது.எனினும்,தமிழ் பேசும் மக்கள் தமது கடந்தகால அரசியல் உணர்வினூடு துண்டற வெட்டப்பட்ட சூழலில் பாரம் பரியமாகக் கட்டியெழுப்பப்பட்ட காலனித் துவத்துக்குப் பின்பான அரசியல் உணர்வானது இலங்கையின் பேரினவாதத்திடம் சரணடைவதாகவே இருத்தி வைக்கப்பட்டதன் தொடரில், இலங்கையின் அரச ஆதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.அது,தமிழ் பேசும் மக்களிடம் இட்டுக்கட்டும் சமூக உணர்வானது அந்த ஆதிக்கத்தை மீள அவர்களது மனத்தில் அனைத்துக்கும் மேலாக இயலாமையின் மறுவுற்பத்தியாக்கித்தகவமைக்கிறதென்றவுண்மையை நாம் அறிந்தே ஆகவேண்டும்.

இந்தப் புரிதலின்வழியாக நாம் கண்டடையவேண்டிய உண்மையொன்றுண்டு.அதாவது,பரந்துபட்ட தமிழ்பேசும்மக்கள், இலங்கை அரசின்மீதுகொள்ளும் ஆத்மீக உறவென்பது பலகாலத்தொடர்புகளின் விருத்தியாகும்.அதை ஒருசில கட்டத்தில் எழுந்தவொரு தமிழ்த் தேசியவாதத்தால் மிக இலகுவாகத் தேசத்தைச் சொல்லி வீழ்த்த முடியாது.ஏனெனில்,மக்கள் இயக்கங்களை-தமிழ்த் தேசியவாதத்தை நம்பிக் குரல் கொடுத்துத் தமது சந்ததிகளைப் போரிடக்கொடுத்தும், தமது வாழ்வு இருண்டதைத் தவிர வேறெதையும் இந்த ஈழப்போராட்டம் வழங்கியதல்ல.இத்தகைய இறுதி விளைவையே திட்டமிட்டு நகர்த்தியவர்கள் இன்று நம் மக்களை நிர்கதியாக்கிய நிலையில் உளரீதியாகவும் தாக்கிச் சிதைப்பதில் நமது அரசியல்வாதிகளை வைத்தே அதை வென்று வருகிறார்கள்.காலனித்துவத்துக்குப் பின்பான சமூக எண்ணவோட்டமானது இலங்கை வாழ் மக்கள் அனைவரிடமும் இலங்கையின் மேட்டுக் குடிகளது விருப்புக்கொப்பவே வளர்த்தெடுக் கப்பட்டது. அத்தகைய மையச் சிந்தனைப் போக்கானது யாழ் நடுத்தரவர்க்கச் சிந்தனையோட்டத்தை மிக இலகுவாகக் கைப்பற்றிய கடந்தகால அநுபவத்திலிருந்தே இன்றைய அனைத்துப் பரிணாமமும்(தேவதாசன்-இராகவன்,அரசியல்-தலித்துவ வாதங்கள் முதல் வரதராஜப் பெருமாளுக்கு அக்கபூவமான வரலாறு இருப்பதால் அவர் இந்தியாவின் பொம்யெனச் சொல்ல முடியாதெனும் புதிய மாதிரிகளான உரையாடலுடன்கூடிய இன்னபிற) கட்டியமைக்கப்படுகிறது.

எனவே,மக்கள் தமது வாழ்வின் பெறுமதியை உணரத்தொடங்குவதில் இலங்கை அரசின் சூழச்சிகள் சாதகமானதாகவும்,சமீபத்துக் கசப்பான அழிவுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் இந்திய-இலங்கை அரசுகளின் பின்னே மக்கள் தொடர்ந்து செல்ல வியூகங்களை வரதராஜப் பெருமாள் போன்றவர்கள் திட்டமிட்டபடிச் செய்து வருகின்றனர்.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும்முன்னாள் இயக்கத் தலைவர்களும்,அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும தனிநபர்சார் ஆர்வங்களும், ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் முன்னெடுக்கின்றன.இன்றைய அரசியல்சார் இயக்க-கட்சிசார் ஆர்வங்கள் தத்தமது இருப்புக்கும் குழுக்கட்டலுக்குமான திசைவழிகளைத் தேர்ந்தெடுக்கும் தந்திரோபாயத்திலிருக்கும்போது அவர்களை ஏலவே சதிகாரர்களுடன் கைகோர்த்த இயக்கத் தலைவர்கள்-கட்சித்தலைவர்கள் மிக இலகுவாகப் கையப்படுத்தும் அதீத கவனத்தில் மக்களது எந்தவுரிமையையும் தமது நலன்களின்வழியே சிந்திக்க முனைகிறார்கள்.இந்தச் சிந்தனையைத் தகவமைக்கும் இலங்கைச் சிறுபான்மை மக்களது எதிரிகளாக மாறியுள்ள ஆதிக்க சக்திகள், தமது வர்க்க நிலைசார்ந்து தமிழ்பேசும் மக்களின் மேல் தட்டு வர்க்கத்தைத் தாஜா செய்வதில் வெற்றியீட்டியுள்ளது.

வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னால் கணிசமான மக்களின் அடிப்படை வாழ்வு, பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தீர்வு,அதிகாரப் பரவலாக்கமெனச் சரடுவிடும் கூட்டங்கள்-சந்திப்புகள்,வானொலி-தொலைக்காட்சி உரையாடல்கள் யாவும் இந்திய-இலங்கை ஆதிக்க வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கமையவே மீளவும் மக்களை அண்மிக்கின்றன.புலிகளது வெற்றிடத்தில் குந்தியிருந்து மீளத் தலைகளைக் கொய்யும் அரசியலுக்காக மண்டையன் குழுத் தலைவன் வரதராஜப் பெருமாளும், இந்தியாவால் புலம் பெயர் தேசத்தில் வெள்ளோட்டத்துக்காகப் பாடுபடும் உரையாடல்கள் யாவும் ஏலவே தகவமைத்துத் திறபடத் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதன் வியூக நிரல்களை உற்று நோக்கும்போது சமீக கால அரசியலைக் திடீரெனக் கைப்பற்றும் பொருட்டு புலம் பெயர் தேசத்துள் இயங்கிய கருத்து மேல் நிலைசார் வட்டத்தை மிக இலகுவாகத் தமக்கு அண்மையில் இருத்தி வைத்தபடி, அவர்களது தயவோடு தம் கடந்தகாலச் சதி அரசியலை நியாயப்படுத்தும் கருத்தியலைக் குவித்துவரும் இன்றைய புலம்பெயர் ஊடகங்களில் கணிசமானவை தமக்குத் தீனிபோடும் அதிகார சக்திகளுக்கு நமது மக்ளைத் தாரவார்த்துக்கொடுப்பதில் போட்டியிடுகின்றன.இந்தச் சூழலிலேயேதாம் புலம்பெயர் "மாற்றுக்"கருத்தாளர்கள்-படைப்பாளிகளெனச் சொல்லும் கும்பல்களும் ஏதோவொரு மையத்தில் சதிகாரர்களை நியாயப்படுத்துவதில் "அவர்களது மக்கள் விரோதப் போக்கை" நீர்த்துப் போக வைப்பதில் வரலாற்றையே திரித்தெடுக்கின்றனர்!

புலிகளுக்குப் பயந்து எதுவுமே செய்ய முடியவில்லையெனக் கொட்டாவி விட்டவர்கள் இப்போது தமது அரசியல் இயலாமையைத் தட்டிக்கழித்துத் தம் இருப்பை இலகுவில் நிலைப்படுத்த பழைய பெருச்சாளிகளது கட்சி-இயக்கவாதப் போக்குள்ளும் அவர்களது இந்திய-இலங்கை மற்றும் மேற்க்கு ஆதிக்கச் சக்திகள் சார் நலனுக்குமாகமானதெரிவில் தம்மைத் தொலைத்து, உயிர்வாழப் போரிடுகின்றனர்.இதன் பயனாகத் தமது அரசியற் தற்கொலையை நியாயப்படுத்துவதில் பழைய பெருச்சாளிகளது வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் தலைகொய்யும் தீர்ப்புகளும் வழங்குவதில் முனைப்பாகவே இருக்கின்றனர்.


பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் ப+ச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகள் இலங்கை மக்களின் அடிப்படை வாழ் வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.


இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள், தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.


மக்களைச் சுயவெழிச்சிக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்களை சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.

எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது, நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம், நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துப் புலிகளின் தவறுகளையும்,புலித் தலைமையைக்கொன்று அத்தலைமையைக் கைப்பற்றியச் சதிகாரக்கூட்டத்தையும் இனங்கண்டு முறியடித்தாவேண்டும். இதனூடகப் புதிய முறையில் போராட்டப் பாதைகளைத் தகவமைத்துப் புரட்சிகரமாக இளைய தலைமுறை அணிதிரளவேண்டும்.இவர்களை வழிநடாத்தும் புரட்சிகரத்தலைமை உருவாகவேண்டும்.இது,காலத்தின் தேவையாக நம்முன் இருக்கிறது.போராட்ட அணிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்;களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமது மக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம் தமது குழந்தைகளையும், வாழ்விடங்களையும் பறிகொடுத்து அநாதையாகியுள்ளார்கள்.

தமிழ் மக்களது பிணம் தின்னிகளான வரதராஜப் பெருமாள்போன்ற இந்த முகமூடி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில்குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.இவர்களே இறுதிவரைப் புலித்தலையை வன்னிக்குள் முடக்கிப் பிரபாகரனது குடும்பத்தையே முற்றாகக் கொன்று குவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும், அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை. இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்குத் தோதான புள்ளியில் இன்றைய தலித்துவ நிகழ்வோட்டம் சந்திக்கின்றது.தமிழ்பேசும் மக்கள் சமூகத்துள் இருத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகக் காட்டுமிராண்டித்தனமான சாதியப் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டமானது தன்னளவில் நியாயப்பாடு கொண்டிருப்பினும் அதைத்தகவமைத்து இயக்கும் புள்ளி ஆதிக்கச் சக்திகளது நலன்வழியே உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து தமிழ் தேசியவுணர்வுக்கு எதிரான திசைவழியூடாகப் பகரப்படும் பல் தேசியக் கருத்தாடலானது தன்னளவில் ஒடுக்குமுறையாளரது நீண்டகால நலனோடு சமரசஞ்செய்தே மேலெழு முடிகிறது.இதைக் குறித்தான சரியான புரிதலைக்கொண்டிருப்போர் தமது அரசியல்வங்குரோத்தின்வழி இன்றைய மகிந்தாவின் மைய அரச ஆதிக்க நிலைக்கு எதிராகவெந்தத் துரும்பையும் எடுத்துப்போட வக்கற்றுத் திசையறியாதவொரு புள்ளியில் வரதராஜப் பெருமாளுக்கே காவடியெடுப்பதில் முன் நிற்கிறார்கள்.இதுவே,தேவதாசன் போன்றவர்களின் தற்கொலைப் பாதையான அரசியலைச் சமாந்திரமாகவும் இயக்கி வருகிறது.

இலங்கையில் இனரீதியாகவொடுக்கப்படும் மக்களது நியாயமான போராட்டமானதைப் பிளவுபடுத்தும் அரசியற் புள்ளியே தலித்துவ மேம்பாட்டு முன்னணியினது இன்றைய அரசியலாக விரிவுறும் அல்லது உயரும் நிலைமையாக மாற்றப்படும்போது,சாதிரீதியானவொடுக்குமுறையென்பது மீளவும் இருத்திவைக்கப்படுகிறது.அது பூண்டோடு அழிக்கப்படும் அரசியலைச் சிதைத்தபடி,சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களது பொருளாதாரச் சிக்கல்களை ஓரளவு உள்வாங்கித் தீர்மானகரமான சில முன்னகர்வுகள் பொருளாதாரவாதமாகச் சுருங்கியபடிக் கூறுபோடும் தமிழ்த் தேசியவுணர்வில், எந்த மூலையிலும் ஒதுங்க முடியாது சிங்களப் பேரினவாதத்தின் பிரதான பாத்திரத்தைப் பின்தள்ளித் தமிழ்த் தேசியவினத்தினது அக முரண்பாடுகளான பல்வேறு சிக்கல்களை மேல் நிலைக்குச் செயற்கையாக உந்தித்தள்ளுகிறது.இதைக் கவனத்தில் எடுக்காது எந்தத் தரப்பும் விடுதலையடையுமெனக் கொள்ளமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.11.2010

Tuesday, November 02, 2010

"எதிரியின் எதிரி நண்பன்"

"எதிரியின் எதிரி நண்பன்"

சோபாசக்தியின் "முகப் புத்தகம்" கட்டுரையை இரயாகரன் தனது தமிழரங்கத்தில் மீள் பதிவேற்றிவிட்டார்.அப்பாடா தொலைந்தான் எதிரி!


//EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட்சக் கொலை இலக்காகவே இருந்தார். இதிகாசப் பெருமாளுக்காவாது 14 வருட அஞ்ஞாதவாசம். இந்தப் பெருமாள் 15 வருடங்கள் அஞ்ஞாதவாசமிருக்க நேரிட்டது. வரதராஜப் பெருமாளை வெறுமனே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மையெனச் சித்திரிப்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்த நோக்குக் கிடையாது.//

//இலங்கை - இந்திய உடன்படிக்கை இந்திய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். எனினும் இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்ததாலும் யுத்தம் செய்ததாலும் நாம் பெற்றது என்ன, இழந்தது என்ன? சிறு துரும்பைக் கூட நாம் பெற்றுக்கொள்வில்லை. ஆனால் எல்லாவற்றையுமே நாம் இழக்க நேரிட்டது. “ஆனால் மானத்தை இழக்கவில்லையே” என இந்தக் கட்டுரையை மேற்கு நாடொன்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் மீசையை முறுக்கியபடியே முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. கவரிமான்களோடு எனக்குப் பேச்சில்லை. நான் இரத்தமும் ஆன்மாவும் உள்ள மனிதர்களிடமே பேச விரும்பகிறேன்.// -By Shobasakthy

- http://www.shobasakthi.com/shobasakthi/?p=760

சோபாசக்தி அந்த மாதிரிப் புள்ளி விபரத்தோடு அருள் எழிலனை-அவர்கொண்டுள்ள அரசியலை நொருக்கித் தள்ளியுள்ளார்.

சோபா சக்தி மிக நுணுக்கமாகத் தனது இதுவரையான அரசியல் பாதையின் முக்கியத் தளத்தை மெல்லவுடைத்திருக்கிறார்.அது,அருள் எழிலனையும் தாண்டித் தனது அரசியல் இலக்கை எட்ட முனைந்த வொரு திருப்பு முனைக் கட்டுரையாக இருப்பதற்கேற்ற புள்ளியை அங்கே தொட்டுச் செல்கிறார்.

இந்தத் தெரிவு அவருடையது.

அது,அவரது சுதந்திரமான தேர்வு.இன்றைய ஜனநாயகத்தில் அவரது உரிமையுங்கூட.அதை நாம் ஏற்க வேண்டுமென்பது இல்லை.

இரயாகரன் தனது தளத்தில் ஆயிரத்தெட்டுக் கட்டுரைகளை வரதராஜப்பெருமாளை நோக்கியும் அவரது அரசியல் நோக்கியும் எழுதியிருக்கிறார்.மண்டையன் குழுத்தலைவர்களது(...) அரசியல் நீட்சியை நியாயமுற வைப்பதில் சோபாசக்தியை விஞ்சிய செயலே இந்த மீள் பிரசுரம்.(தமிழரங்கம்,இரயாகரன் கோஷ்டியானது புரட்சிகரச் சக்தி அல்லவென்றும் அது புலிகளது பினாமிகள் என்றும் அந்தக் கோஷ்டியின் இலக்கு அந்நிய ஆர்வங்களால் தகவமைக்கப் பட்டதென்றும் நான் மீள,மீளச் சொல்வதும் இன்றுவரை தொடரவே செய்கிறது).


இப்போது புரிகிறதா?

இந்திய அரசியல் வியூகம்?

வரதராஜபெருமாள் எங்கவோ காட்டுக்குள் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி உயிருக்குப் போராடியதுபோல அவரது அஞ்ஞாத வாசத்துக்காகச் சோபாசக்தி பொருமுகிறார்.
அவரது நியாயத்தின்வழி அது சரிதாம்!இந்தியாவானது கிலுக்கட்டியை இப்படியும் எமக்குக் காட்டுகிறது-அப்பு!



17 வயதில் அரசியலில் இறங்கியவர்கள் போராட்டப்பாதையில் எந்த இலக்கோடு மக்களைச்சார்ந்தார்கள்?அவர்களது தெரிவில் இந்தியா போராட்டத்துக்குக் குறுக்கே வரும்,ஒப்பந்தம் போடும்.அதை ஏற்றுக்கொண்டு தமிழ்பேசும் மக்களது உரிமைகளைக் காற்றில் பறக்கவிடுவோமென்றா தொடர்ந்தார்கள்- முள்ளிவாய்க்காலில் கப்பலுக்குக் காத்திருந்த பிரபாகரன் போல?

சோபாசக்திபோலத்தாம் அரசியல்-வரலாறு பேசப்படவேண்டும். இதுவரையான மக்களின் அழிவிலிருந்து இந்தியாவானது திம்புப் பேச்சுவார்த்தை (1985 http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2007/69/pdf/nr4_lkfrieden_1.pdf ) .

அதன் பின், ஜே.ஆர்.-இராஜீவ் ஒப்பந்தம் (1987 http://www.hsfk.de/downloads/rep0803.pdf) எனத் தனது "தர்மீக"ஆதரவைத் தமிழ் பேசும் மக்களுக்காகத் தந்துதவியபோது புலிகளும் ஏற்காது யுத்தம் புரிய-பிரமதாசாவும் ,புலிகளும்- முற்பட்டபோது செயற்பாட்டிலிருந்த வடக்கக்கிழக்கு மாகணம்சரியானதாக மாறுகிறது சோபாசக்திக்கு-வரதராஜப்பெருமாளது அரசியலை புலிகளது இன்றைய நிலையோடு பொருத்தி அன்றைய இந்திய-இலங்கை ஒப்பந்தஞ் சரியானது"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என வாதாடி நியாயமானதாக ஏற்பவர்கள் இந்தியாவினது சதியை ஏற்பவர்கள்.இன்றைக்குத் தமிழ்பேசும் மக்கள் நிர்க்கதியாக நிர்ப்பதற்குப் பின்னே புலிகள் மட்டுமல்லக் காரணம்.அந்த அமைப்பை அங்ஙனம் வளர்த்து, அதை ஒட்ட அறுத்தெறியும்வரை நமது அரசியலைச் சீரழித்ததே இந்த வரதராஜப்பெருமாளைக் காத்த பாரத நாயகன் -நாயகியும்தாம் காரணமாகிறது.

"வரதாராஜப் பெருமாளை வெறுமனவே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மை என்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களது நலன்சார் நோக்கு அல்ல"
என்று ஒரு போடு போடுகிறார் சோபாசக்தி.

மேலேயுள்ள இந்த வாக்கியம் தரும் அரசியல் விளக்கம் என்ன?

இதைப் புரிந்துகொள்பவர்கள் எவரோ அவரே சோபாசக்தியின் இதுவரையான அரசியலையும்உள்ளபடி புரிந்து கொண்டு,சோபாசக்தி எந்தத் தளத்தில் அரசியல் செய்கிறாரென்று அவரோடு"தோலர்"ஆகலாம்.

ஆக,பாசிசப் புலிகளது அழிவில் எத்தகைய அரசியலும் அரங்கேற முடியும் என்பதற்கு நாம் வரதராஜப் பெருமாளையும்,அவரது வனவாசத்தையுங்குறித்துக் கவலையுறும் சோபாசக்தியின் குரலின்வழி புரிந்துதாம் தீரவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.11.2010

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...