Saturday, March 11, 2006

யுக்கோவின் முன் நாள் அதிபர்!

யுக்கோவின் முன் நாள் அதிபர்!

முன் நாள் யுக்கோஸ்லோவிய அதிபர் திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் இன்று அரசியல் கைதிகளுக்கான சாவதேசச் சிறைச்சாலை( Das UN-Kriegsverbrechertribunal in Den Haag )டென்காக்கில் மர்மமான முறையில் இறந்துள்ளார்!இந்தச் சாவின் மர்மம் என்னவென்பது தெரியாதிருப்பினும் யுக்கோஸ்லோவிய அரசியலிலும்,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதில் இந்தத் தலைவரின் செயல் முறையிலும் நான் அதிக கவனஞ் செய்திருந்தேன், கடந்த காலங்களில்.அதற்கானவொரு வலுவான காரணமானது எப்பவும் எனக்குள் நிறைந்திருந்தது.

திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் ஏகாதிபத்திய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறித்திருக்கும் பிம்பத்துக்குரியவரில்லையென்பதை, அவர் தமது நாட்டின் இனப்பிரச்சனைகளில் நிரூபித்திருந்ததே எனக்குள் ஒரு மரியாதயை ஏற்படுத்திருந்தது.கடந்த கால ஒன்றிணைந்த யுக்கோ ஸ்லோவியா பாரிய பொருளாதாரக்கட்டமைப்பைக் கொண்டு, நாட்டின் கட்டுமானங்களை முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகளுக்கிணையாக வளர்த்திருந்தும்,அதன் இனங்களுக்குள் வலுவான சமத்துவமின்மை வளராதிருந்தவேளை அதன் தகர்வு சாத்தியமாகும் நிலை தோன்றியது.இங்கேதாம் இந்தத் தலைவரின் செயற்பாடு கவனத்தை ஈர்த்தது.

எந்தவொரு முதலாளித்துவ நாட்டையும்விட இங்கே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மிகச் சாதாரணமாகக் கையாளப்பட்டது.தேசிய எழிச்சிகளும்,இனங்களின் சுயநிர்ணயப் போராட்டங்களும் கீரைபாத்தியான சின்னஞ்சிறு நாடான யுக்கோ ஸ்லோவியாவில் பெரும் இராணுவ அடக்குமுறையின்றி(ஆரம்பத்தில் சிலவொடுக்குமுறை நிகழ்ந்தது) அணுகப்பட்டது.அங்கே சுயநிர்ணயத்தைக் கோரிய இனங்கள் கொரோசிய-சேர்பிய-போஸ்னிய நாடுகள் உருவாகுவதற்கு இந்தத் தலைவரின் மனப்பாங்கு இடமளித்தது.இதுவே இந்திய(இந்தியாவோ அணுமூலம் மக்களின் வாழ்வை அழிக்க முனைகிறது இன்றும்.மேற்குலகம் அணுமின்னைத் தவிர்க்க முனையும்போது இந்தியா...)-இலங்கை அரசுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா,ஜேர்மனிய நாடுகளென்றால் ஒடுக்குமுறை இராணுவம் குருதியாற்றைத் திறந்து பல இலட்சம் மக்களைக் காவு கொண்டிருக்கும்!இன்றும் லத்தீன் அமெரிக்காவில் 1.3 மில்லியன்கள் மக்கள் அடிமைகளாக இருத்தி வைக்கப்பட்டுள்ளாகள்.இதற்கு அமெரிக்க வல்லாதிக்கமே காரணம்!

எனினும் இவர்மீது பல கிரிமனல் குற்றங்களை மேற்குலகஞ் சுமத்தியது.என்றபோதும் நியாயமான,காத்திராமானவொரு நீதிவிசாரணையை இந்த சர்வதேச நீதிபதிகள் இவர்மீது செய்யாதிருக்க, அமெரிக்காவும் அதன் நேட்டோ அணி நாடுகளும் பலதில்லுமுல்லுகளைச் செயற்படுத்தி வந்ததை எவரும் மறுக்க முடியாது.உலக மக்களுக்குத் தமது எதிரியான யுக்கோ ஸ்லோவிய நாட்டின் அதிபரைப் பயங்கர இனவாதியாகவும்,சர்வதிகாரியாகவும் படம் காட்டிய இந்த நேட்டோ நாடுகள் தமது சந்தையைக் குறித்த நலனின் காரணமாக யுக்கோஸ்லோவிய நாட்டைக் குண்டுகளால் சிதைத்தது வரலாறாகும்.

கொசோவோ யுத்தமென்பது(1998.1999) 900 மக்களைக் கொன்றும்,800.000.மக்களை யுத்தத்தால் வருத்தியதாகவும் மேற்குலகம் கூறுகிறது.இவ்வண்ணமே போஸ்னிய,(1992-1995)மற்றும் கொரோசிய(1991-1995) யுத்தங்களால் அவர் இந்தவின மக்களைக் கொன்றதாகவும் குற்றஞ் சுமத்திய இந்த நாடுகள,; தமது யுக்கோ ஸ்லோவிய நாட்டின் யுத்தத்தையும்,அங்கு நடந்த தாழ்நிலை அணுயுத்தத்தையும் வசதியாக மறைக்கிறது.

இதுதாம் மேற்குலக-அமெரிக்க நீதியென்பதை நாம் ஈராக்மீதான இந்த நாடுகளின் யுத்தத்தில் உணரமுடியும்.யுக்கோ ஸ்லோவிய முன் நாள் அதிபர்மீதான சட்ட நடவடிக்கை உலக நீதி பரிபாலனத்தின்மீது பல கேள்விகளைக் கொண்டிருக்கிறது.இந்த நீதி மன்றத்தைத் தனது சட்டவல்லமையால் கேள்விக்குள்ளாக்கிய இந்த ஸ்லோபோடான் மிலோசேவிக் மறைந்துவிட்டார்.என்றபோதும் இவர்மீதான அணுகுமுறையானது, ஒரு நாட்டின்மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் விருத்தியானதென்பதை நாம் மறக்கக்கூடாது.

தேசிய இனப்போராட்டங்கள் இன்னும் நிறைவுபெறாத நாடுகள் பல இப்புவிப்பரப்பில் போராடி வருகின்றன.இந்த நாடுகளிலுள்ள முதலாளிய அரசுகள் தத்தம் நாடுகளிலுள்ள சிறுபான்மை இனங்களை எங்ஙனம் ஒடுக்குகின்றனவென நாம் பார்த்து வருகிறோம்.இத்தகைய வன் கொடுமையான நாடுகளை மேற்குலகம் எந்த வகையில் அணுகுகின்றெனவென்பதும் குறைவிருத்திச் சோஷலிச நாடுகளை எங்ஙனம் அணுகியதென்பதற்கும் யுக்கோ ஸ்லோவியா நமக்கு நல்ல பாடமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

11.03.2006

Wednesday, March 08, 2006

சமூக மனிதர்கள்:2

சமூக மனிதர்கள்:2

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை ஒரு பொருளியல் மாணவர் வெகு இலகுவாகக் கண்டடைவார்.

இந்தவகைப்பட்ட இனக் குழுவிடம் உயரிய மனிதவுருவாக்கம் நிகழ்வது கிடையாது.அதன் கொள்ளளவு மிகக் குறுகியது.வரைபடத்தில் குறிப்பிட்டபடி பொருளாதார,நுட்ப,சமூக கலாச்சாரக் கட்டுமானமானம் தீர்மானிக்கின்ற சமூக இயக்கமானது அதன் முகிழ்ப்பு நிலையிலிருந்து விடுபடப்போகும் படிமுறை வளர்ச்சியை வெறும் "விசும்பு"நிலைக்குள்ளேயே மட்டுப்படுத்துகிறது.இதன் தாக்கமானது நமது சமுதாயத்தின் மனிதவுருவாக்கத்தில் பாரிய தாக்கம் செய்கிறது.இந்தவொரு இக்கட்டான மந்தப்போக்கானது ஈழத்து அரசியல் முன்னெடுப்பில் அறிவுப+ர்வமான விரிந்த சமூகப் பார்வையை கோரமுடியாது சிறுமைப்பட்டுக் கிடப்பதனால் பல வகைப்பட்ட அராஜக இயக்க சாகசங்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது.இந்தவொரு நிகழ்வ+க்கமானது நமது அன்றாட சமூக வாழ்வை மிக நெருக்கடிக்குள் தள்ளி சுமூகமானவொரு ஜனநாயகச்சூழலைச் சுவாசிக்காதவொரு இனமாக நம்மை புறத்தியாருக்குக் காட்டிக் கொள்கிறது.இந்தவொரு சமூக யதார்த்தமானது நமது பண்பாட்டுத் தளத்தில்,கல்வியில் பாரிய தாக்கஞ் செய்வதைத்தாம் நாம் வரை படுத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.

இது தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் ப+ர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!

பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.

நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.

புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிஅரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பௌதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.2006


ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...