Saturday, October 22, 2005

'ம்'-நாவல் விமர்சனம்!

சோபா சக்தி: 'ம்'


அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்!


'............', ம்.... ஆமா,ஓம்-ஓம்! ம்.....


இது? (1)


கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்!இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல்'ம்'சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி,அந்த உளவிலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகர்கள்- என்னிடத்தில் அந்தக் கற்பனை கிடையாது.ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன்.எனது வாழ்வும்,சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்துக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.


இந்நாவல் குறித்தான மிதிப்பீடு,விமர்சனம் என்பதற்கப்பால்-எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்துகொள்வதற்கான நகர்வாகவும்,இந்த நாவலை- 'ம்' என்ற,இந்த நாவலை,மிக உன்னத்தோடு உருவகப்படுத்திக்கொள்வதற்கு ஒருவர் முனைவரென்றால்,இந்த உருவகப்படுத்தலோடு'ம்' நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார்.அப்போ இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அநுபவங்களைச் சுட்டிகளாகக் குறியீடாக விரித்துக் கொள்கின்றனர்.மனித வாழ்வு,அநுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்ஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது.இந்தப்பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளையுடையது.இது மனிதப் படைப்பாளுமையை வேண்டி அதனூடாக நடந்து செல்கின்றபோது,மிக ஆரோக்கியமான மனித,சமுதாயத்தின் வளர்ச்சியையும்-பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது.இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகலானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து,அது ஏதோவொரு கோசத்துக்காக அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக-குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமைமிக்கவர்களுக்காக,ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக-அவர்களது இருப்புக்காக,எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொல்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிகவுண்மையாக,யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது.


இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக்கொடுமையை,துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை,சமூகச்சிதறலை-சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக,நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை,அதன் நிசத் தன்மையோடு ,குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை,தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை,அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல்'ம்'இனது மனிதக் கோசமாகவும் ,கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.


இந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது!'............'கலைத்துவம் என்பதன் பொருள்?... ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்தக்கொண்டால்,நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும்.இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும்.ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான 'விவாதமாக-கருத்தாடலாக-பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல்,அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு(சமூகமாற்றுக்கு)விவாதத்தை நகர்த்தும்.என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்துமுதல் வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல்,அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ-அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான'பண்பு' மாற்றத்தைக் கோரி நிற்கும்!நாமெதை, நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ-அது மற்றவர்களுக்கு மிக,மிக முக்கியமாக விரிவது,வெறும் அறிவு ,உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடையமாகக் கொள்ள முடியாது.இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும்.இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு கோணத்தில் இந்த நாவலை அணுகப் போகிறோம்.

இந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியலாள ஆய்வாளர்களால்,இயக்க-தேசிவாத மாயைக்குட்பட்ட வாசகர்களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ,இலக்கிய விஞ்ஞானத் தன்மையைப் புரியாத கையாலாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே.இங்ஙனம் நமது அரசியல் கையாலாகத்தனத்தை மூடி மறைக்க முனையும் நாம் இவ் வலுப்பெற்ற உணர்வு வெளியைத்தாண்ட முனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப் புரிதல் அவசியம்.

(2)

இதுவொரு வதையைத் தரும் காலம்.மனிதர்களின் வாழ்வானது புனைவுகளுக்குள் சிக்குண்டு,புனைவுகளையே வாழ்வாய் வாழ்ந்து துய்க்கும் நிலையாக இன்றைய 21ஆம் நூற்றாண்டை உலகம் தயாரித்தாகிவிட்டது.இந்தப் பொய்யுலகானது மனித உறவுகளைத் தனது பெரு வாத்தகப் பயன்பாட்டுக்கான சங்கதிகளாக்கியபின் எந்தவொரு படைப்புச் சூழலும் மனதர்களை நோக்கிய-மையப்படுத்திய முறைமைகளில் மையங் கொள்ளாது, பொருட் குவிப்பின் வியூகத்துக்கானதாகவே உருவாகிறது.இந்தப் புள்ளியல்தாம் மனிதம் அழிகிறது!இங்கே மானிடர்களின் தேவைகளானது அதிகார மையங்களுக்குக் கட்டுப்படும்-அவற்றைச் செயல் முறைமைகளின் உளப்பூர்வமாக உள்வாங்கப்படும் நெறியாக உருவகப்படுத்தப் படுகிறது.இது சர்வ வல்லமையுள்ள கருத்தியலாக நிறுவப்பட்டுள்ளது.இந்தவொரு மனித்துவ முடக்கமானது இதுவரை ஆரோக்கியமானதாக நம்ப வைக்கப்படுகிறது.இன்றைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனைகளும் சரி அல்லது மனித்துவத்துக்கான யஅநௌவல ஐவெநசயெவழையெட கூவிக்கொள்ளும்-எழுதிக்கொள்ளும் குறிப்புக்களும் சரி மனிதவிகாரங்களையின்னும் ஆழமாக்குகின்றன.இவற்றுக்கப்பால் எந்தக் கருத்தியலையும் இன்றைய ஆளும் வர்க்கங்கள் விட்டுவைக்கவில்லை.புனைவுக்கும் நிகழ்வுக்குமான தர்க்கவாத அறிவானது சமூகத்தைக் கருத்தியல் தளத்திலிருந்து தாக்குகிறது.அதன் உள்வயப்பட்ட அறிவுவாத ஐரோப்பிய எதிர்ப்பியக்கக் கூறுகள்கூட தமதுவரையில் சில ஆத்மீகத் தேவைகளைக் கோரிக்கையோடும்,கொடிபிடித்தலுடன் பெறத் துடிக்கின்ற இந்தச் சூழலின் ஒரு முனையில் 'ம்' நாவலோடு சோபா சக்தி இந்த உலகத்தை எதிர்கொள்ள முனைகிறார்.


ஈழத்தின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.இதன் முதுகினிலிருந்துகொண்டு மனிதவதைகள் குறித்து ஒரு சராசரி மனிதன் தன் அகம் திறந்து பேசுகிறான்.இவனிடம் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவையொருவர் தேடுவாரானால் தேடுபவரின் கோட்பாட்டறிவே சந்தேகமானது.இங்கு படைப்பென்பது அராஜகத்துக்கெதிரானவொரு போர்ப்பரணியைக் கட்டி நிற்க்கவில்லை.மாறாக அராஜகத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையைச் சொல்கிறது.தான் உயிர்வாழ்வதற்காகத் தன் நண்பனை,தன் எதிரியை,உறவுகளை அராஜகத்துக்குக் காட்டிக் கொடுக்கும் உயிர்த்திருக்க முனையும் ஒருவனும்,எந்தத் தலையுருண்டாலென்ன தனது நலத்துக்காக அனைத்தையும் வளைத்துப்போட முனையும் தந்தையும் ,தமிழ் மக்களின் வாழ்வில் தனிநாடொன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிட்டுமென்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடமைகளைமட்டுமல்ல சரீரப் பங்களிப்புக் கூடச்செய்யும் பேராற்றலை ஞானசீலியாக் காணுவதும்-அதற்காகச் சிறை வாழ்வு, பாலியல் வதை,சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூக சீவியத்தை மக்கள் எதிர்கொண்டேயாகவேண்டிய அரசியற் பொருளியற் சூழலையுருவாக்கிய கட்சி அரசியலையும் அதன் பின்னாலுள்ள வர்க்க அரசியலையும்,நலனையும் இதனூடாகத் தோன்றிய ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது பல்வேறுபட்ட அரச-ஆதிக்க ஜந்திரகளாகி மக்களைக் கொல்லும் இழி நிலையைச் சொல்லும் ஒரு பிரதியாகிறது 'ம்'.இது மக்களின் கையலாக மொழி,மக்களின் பெரு விருப்பான உயிர்த்திருத்தலே இல்லாது ஒழிக்கப்பட்டவொரு சூழலில் மக்கள் அதற்காக இரந்து நிற்கும் இன்றைய அவலத்தைச் சொல்வதற்கானவொரு முனைப்பில் நிகழ்வுகளைப் புனைவதானது தன்னளவில் சமூகத்தின் வழிப்புணர்வோடு மேலெழும் சமுதாய ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.


மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இது இஸ்லாமியர்களாவிருந்தால் தமிழருக்குத் தொப்பி பிரட்டிகளாகவும்-தமிழர்களாகவிருந்தால் சிங்களருக்கு பறத்தமிழன் என்பதுமாய் இனத்துவேசிப்பு கொலுவாச்சி இனங்களை முட்டிமோத வைக்கும் நிலவுடமைக் கருத்துருவாக்கமாக விரிந்துகிடக்கிறது.


மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.இதைச் சோபா சக்தி மிகத் தெளிவாகத் தனது நாவலில் பாத்திரங்களின் வெளிகளில் நிறுவ முனைகிறார்.பக்கிரிக்கும்,நேசகுமாருக்குமான ஒவ்வொரு உரையாடலும் இதைச் சுட்டிக்கொள்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதுவே பாரிய மனித வதைகளைக் கற்பனைக்கெட்டாத வன் கொடுமைகளுடாய்ச் செய்து முடிக்கிறது.இது இரண்டாவது மகாயுத்தத்தில் கிட்லரால் செய்யப்பட்டபோக்கோடு சம்பந்தப்பட்டது.இங்கு எல்லோருமே சிறையதிகாரி உடுகம் பொல போலவே வதைகளைச் செய்கிறார்கள் .இவர்களது பார்வையில் கட்சியமைப்பு-தாம் விரும்பும்,மதிக்கும் தலைவர்-தலைமைக்காக-விசுவாசத்துக்காக எந்தக் கொலைகளையும்,எதன்பொருட்டும் செய்யத் தாயர்படுத்தப் பட்டுள்ளார்கள்.இங்கு மனிதம் தரையில் குற்றுயுராய்க் கிடக்கிறது.'ம்' அதைப் பாரிய சோகத்தோடு சொல்ல முனைகிறது.இதுதாம் இன்றைய இடர்மிகு நமது மொழியாக சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கீழ் நிலவுகிறது.இதையெந்த விடுதலை,உரிமைக் கோசத்தாலும் மறைத்துவிடத் துடிக்கும் தமிழ்த் தரகு முதலாளியம் தன்னைக் கொலைக்காரப் படையாக விருத்திக்கிட்டுச் செல்கிறது.இது தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயகவுரிமைகளையும் தனது கையிலெடுத்து வைத்திருக்கிறது.மக்களின் அன்றாட சமூக இயக்கத்தையே அது கட்டுப்படுத்துகின்ற வல்லமையை ஆயுதத்துக்கூடாக நிறுவியுள்ளது.இங்கு பெயரளவிலான பூர்ச்சுவா ஜனநாயத் தன்மைகூட இல்லாதொழிக்கப் பட்டு அராஜகத்தை அவசியமான போராட்ட வியூகமாக் கருத்தியற்றளத்தில் பரப்புரையாக்கப்படுகிறது.இதைத் தகர்க்கும் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுப்பதே சோபா சக்தியின் படைப்பாளுமையாகவும் இருக்கலாம்!


வெலிக்கடைச்சிறையில் வருத்தப்பட்டுக் கொல்லப்பட்டவுயிர்;களும் அதன்பின்பு தாய்மண்ணிலேயே குதறப்படும் உயிர்களும் தமிழ்பேசுவதால் மட்டுமே கொல்லப்படுவதாக் கருதினால் அது தப்பானது.இங்கு ஒவ்வொரு குழுவினது நலன்களும் முட்டிமோதிக்கொள்கிறது.இந்த முரண்பாடுதாம் தரகு முதலாளியத்துக்கும்,நிலவுடமைச்சமுதாயத்துக்குமான முரண்பாடாக வெளிப்படுகிறது.சிங்களச் சமுதாயமானது நிலவுடமைச் சமுதாயக்கட்டுப்கோப்பைப் பேணமுனைவதும்,தமிழ்ச் சமுதாயமானது தரகு முதலாளியமாகத் தன்னைத் தகவமைத்துக் கப்பல் கட்டுவதும்,கடல்கடந்து வியாபாரஞ் செய்வதும் இலங்கை மக்களினங்களில் மிகப் பெரும் முரண்பாடாகத் தோற்றமுறுகிறது.இதுவே இனப்படுகொலைகளைச் செய்வதும் அதனுடாகத் தமிழ், மக்களை வருத்தும் ஆயுதக்குழுக்களாகத் தமிழ்ச் சமூகத்தில் வேறொரு வகையில் தோற்றமுறுகிறது!


மனிதர்களைத் தினமும் வருத்துவதையும்,அவர்களின் மனச் சிதைப்புகளையும்,தீராத சோகத்தையும்,வேதனைகளையும்,வடுக்களையும் சொல்வதற்காகச் சோபா சக்தி எடுத்துக்கொண்ட சொல்நெறி மொழியானது மிகவும் பின் தங்கப்பட்டவொரு இனத்தின் மொழி.அது நிகழ்வுக்கும் ,புனைவுக்குமான நிஷத்தன்மைகளைத் தர்கத்துக்குள் இழந்து போகும் ஒரு மொழியாக மாறாலாம்.எனினும் இந்த நெட்டூரங்கள் அடித்துச் செல்ல முடியாதுவுண்மைகள்.இவை குறித்தான சமூகப் பார்வையான இன்னொரு மொழியில் பேசப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இந்தச் சமூகத்துள் இதுவரை வெளிவராதிருக்கும் ஒரு சூழலில் இந்த நாவலது மொழி அவசித்தோடான அவதாரமாகவே உருப்பெறுகிறது.இதைமீறியவொரு எந்தக் கொம்பு முளைத்த மொழியும்,படைப்பும் தமிழ்ச் சூழலில் முகிழ்க முடியாது.இது அந்தச் சமூதாயத்தில் விருத்தியிலிருந்தே எழுகிறது.இங்கு பாத்திரங்கள் சுதந்திரமாக உலாவருவதற்காகப் பொய்யுருவாகவில்லை.நிலவுகின்ற மகாக் கொடுமையான வாழ்சூழலிருந்தே பாத்திரங்கள் நம்முன் விரிகிறர்hகள்.அவர்கள் நம்மோடு தமது வாழ்வின் கையாலாக சமூக இருப்பைத் தமது சொந்த முகங்களோடு சொல்கிறார்கள்.இங்கு ஜேர்மனியப் படைப்பாளி குன்ரர் கிராஸ் அவர்களின் சமீபத்து நாவலான ஐஅ முசநடிளபயபெ நல்லதொரு உதாரணமாகக் கொள்ளலாம்.உலகமாகயுத்தத்தால் அள்ளுண்டுபோன பாசிச்சூழலுக்கு முகங் கொடுக்க முடியாத மக்கள் உயிர்வாழப் போராடும் கப்பல் பயணமானது கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட வரலாறை அதன் மொழியில் சொல்லும் அந்தப் படைப்பானது 'ம்' நாவல் பேசும் மொழியுடன் நெருங்கிவருகிறது.
»Warum erst jetzt?« sagte jemand, der nicht ich bin. Weil Mutter mir immer wieder ... Weil ich wie damals, als der Schrei überm Wasser lag, schreien wollte, aber nicht konnte ... Weil die Wahrheit kaum mehr als drei Zeilen ... Weil jetzt erst ...Noch haben die Wörter Schwierigkeiten mit mir. -Gueter Grass.


(3)

கொடுமைகளைச் சுமக்கும் மனிதர்கள் தமது வலியை,வேதேனையைச் சொல்லத்தக்க நேரம் சில வேளைகளில் பின்தள்ளிப் போவதும் அந்த வலியைச் சிலவேளை அடுத்த தலைமுறைதாம் பேசும் நிலையும் வருவதைக் காணுவதற்கு திரு.குன்ரர் கிராசினது கூற்றுச் சரியாகவிருக்கிறது.ஒரு தலைமுறை மிக்கொடூரமாக யுத்தஞ்செய்து தனது இனத்தையே அழிக்கிறது.அதனால் அந்த இனத்து மக்கள் கடல் கடந்து உயிர் தப்ப முனைகையிலும் அழிவு அவர்கள் தலையில் குண்டுகளாக இறங்குகிறது!ஓ ஆண்டவனே!நம் தலைவதியைப் பார்த்தியா?இப்படிக் கத்திய அந்த வலி, மரணத்தையும் கொடூரமான மொழியில் சொல்ல வக்கற்றுக் கடலோடு அமிழ்ந்துபோகிறு.'இந்த வலி கிராசிடம் தோற்றுவித்த மர்மமானவுணர்வானது தாய்மையின் உணர்வுபோன்று மீளவும்,மீளவும்'நீரின் மீது எழுந்த கூக்குரலை-அன்றெழுந்த மரணவோலம்,அன்று ஓலமிடமுடியாத... உண்மையென்பதை மூன்று வரிகளுக்குள் அடக்க முடியாத சிரமத்ததை...வார்த்தைகளின் இயலாமையை உணரும் அவர் ,மனித அவலத்தை இன்று சொல்லும்போது-கிராசினால் வலியோடு அவ்வோலம் படைப்புக்குள் வந்து சேரும்போது- நமது நாளாந்த இந்த ஓலத்தை,மரணவோலத்தை 'ம்'க்குள் சோபா சக்தி பேசுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.இது அக்கறைக்காகவோ அல்லது சமூகத்தைக் காத்துவரும் மேய்ப்பனர்களாகவோ சொல்லப்படவில்லை.மக்களின் அதிகாரமற்ற,எந்த வலுவுமற்ற பலவீனத்தை அதன் மொழியிலேயே பேசுவதுதாம்'ம்'!


'ஆனையிறகிலும் பனாக்கொடையிலும் பெரியவன்தாம் அடிப்பான்,இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான்.இதைதாம் சுவாமி 'அதிகாரத்தைப் பரவலாக்குவது!'என்று சொல்வது.இப்படிப் பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடிவிட்டார்.'-பக்கம் 154-'ம்'


'மாதா(ராதா)தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப் போனான்.பக்கிரி'பக்கிங் வெப்பொன்ஸ்' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலைத் தன் கையால் பற்றி மெல்லப் புறத்தே தள்ளிவிட்டார்.எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்து அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்.'பக்கம்:158-'ம்'


என்னயிது? வெலிக்கடையில் நம்மைக் கொன்றொழித்தார்கள்.கண்களைத் தோண்டி ஊரவிட்டார்கள்,கைகளைத் தறித்து எறிந்தார்கள்.வயிற்றைக் கிழித்துக் குடலால் மாலை அணிவித்தார்கள்.இவர்கள் சிங்கள இனவெறியர்.ஆண்டாண்டு நம்மைக் கொல்வதால்தாம் நாம் உயிர்திருப்பதற்காகப் போராடப் போனோம்.ஆனால் சிங்கள இனவாதிகளைப் போலத்தானே தமிழனும் காரியமாற்றுகிறான்.பக்கிரியையும் மற்றவர்களையும் நாம் வெலிக்கடையில் பறி கொடுக்கவில்லை.மாறாகத் தாயகத்தின் மடியில்-தமிழிச்சியின் மடியில் பறிகொடுத்தோம்.



இது என்ன?,இதன் நோக்கமென்ன??


சிங்கள அரசின் காட்டுமிராண்டிப் படுகொலைகளால் சிதைவுற்ற அதே தமிழ் உடல்கள்-தமிழ் அராஜகத்தால் அதற்குக் கொஞ்சமும் குiறாயாது அதே பாணியில் அழிந்தன,சிதைந்தன!அப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை.அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது.அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்!,எதன் பெயராலும்.


இங்கு,மனித இருப்புக்கும் இன்றைய நவீன பல்தேசியக் கம்பனிகளின் அரசியலுக்குமுள்ள பல்வேறு வகையான கண்ணிகளையிந்த 'ம்' நாவல் ஆராய்கிறது. 71 இல் ஜே.வி.பி. சிறையிலிருந்து மாவோவினைப் படித்துக் கொண்டிருக்க-மாவோவின் ஆயுதங்கள் வெளியில் சிறைக்காவலாளிகளின் கைகளில் இருக்கிறது.அதிகாரம் எந்தத் திசையிலிருந்தாலும் அது தனது வியாபகமான ஆற்றலை இந்தப் பூமிப்பந்தின் அனைத்துப் பாகத்திலும் படரவிட்டுள்ளது.அது உடுகம் பொலயாக,மாதா(ராதா) ,ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்(ஞானப்பிரகாசம்)போன்று உலகெல்லாம் விரிந்து கிடக்கிறது.இங்கே மக்களின் மொழி'ம்' ஆகிவிடுகிறது.இது ஒருவகையில் சர்வதேச மொழியும்கூட.


உடுகம் பொல:சிங்கள இனவாத சிறையதிகாரி!


மாதா:தமிழீழ விடுதலைப் போராளி!


ஜெயக்குமார்:சிங்கள அரசின் தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!



இவர்களுக்கிடையில் வித்தியாசம் மனிதவுணர்வுகளுள்கூட இல்லை!,இவர்கள் அதிகாரத்தைச் சுவைக்கும் ஆளும் வர்க்கத்திக் அடிவருடியள்.



தனி மனிதனை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்.இவர்களிடமிருந்து இந்த மனிதனை எங்ஙனம் காத்து விடுவிப்பது?இதுதாம் 'ம்' நாவலூடாக வியாபித்திருக்கும் பிரச்சனை.இதை நோக்கமாகவும்-கருவாகவும் எடுத்துக்கொண்டு இவ் நாவல் முன்வைக்கும்,நம் விழிகள் முன் விரியவிடும் கதை மாந்தர்கள் அனைவருமே நம்மிலொருவராக எழுகிறார்.இந்த எழுச்சி நம் உணர்வில் தெறித்து உதிர்ந்து விடாது நம் மன வெளியெங்கும் அலையலையாய் எண்ணங்களை உருவாக்கி நம்மில் கலக்கிறது.நாம் நமது இயலாமையைக் கண்டு அஞ்சுகிறோம்.அஞ்சுவதூடாக நமது கையறு நிலையை உணர்வு பூர்வமாக உள்வாங்கி ஆவேசமடைவதில் இந்த நிலை மிகப் பெரும் மனித எழிச்சியைத் தோற்றுவிக்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் எவ்வளவு நாணயத்தோடு நம்மோடு உறவாடுகிறதோ அதே உண்மையோடு 'ம்' நாவல் தன் மொழியை எங்களோடு பகிர்கிறது.இதை நமது -ஈழமக்களின் அநுப வெளிதாண்டிய அநுபவத்தால் ஒருபோதும் புரியமுடியாத சிக்கலை நாம் அறிகிறோம்.


நாவலின் இறுதிப் பக்கத்தில் ஒரு கிளவன் ஒரு பிரேதத்தைக்(தமிழீழக்கோசம்?;) கண்டெடுத்து,அதைக் குழந்தைகளுக்கு(இளைஞர்களுக்கு?) விளையாட்டுக் காட்டுகிறான்.பின்பு தான் வளர்க்கும் மிருகங்களுக்குப்(தம்பிமார்களுக்கு?) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான்.பிரேதம்(ஈழம்) இப்போது சிறுக்கிறது,தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான்(யாருதாம் இந்தக் கிழவன்? செல்வநாயகம்?).பின்பு கிழவன் மது கடையில் இருக்கிறான்... குதிரை வண்டி,நோஞ்சான் குதிரை, மிகப்பெரும் பொதி...(பொதியைப் புரிகிறோமோ?) குதிரைக்காகக்(இது எதன் குறியீடு?கூட்டணி??) கிழவன் அழுகிறான்.குதிரையின் எஜமானிடம்(இந்தியா, இலங்கை அரசுகள்) குதிரைக்காக அடிவாங்கி மனம் பிறழ்கிறது கிழவனுக்கு.



இந்த நாவல் முன்வைத்திருக்கும் 'மனித அவலம்' அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம்.இதுவே முழுமையாகிவிடாது.இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது.'
ம்' எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும்,படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது.
இதை விளங்கிக்கொள்வதும் அதனூடாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும்.இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை.மாறாகத் தன் ஆயுதமானது 'அவலத்தின்'; உட்சுற்றில் நிகழும்,உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது.இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான்.நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ-அதிகாரமோ இங்கு கோலாச்சாது,மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது! இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா?இதை வரலாறே தீர்மானிக்கும்!அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:



(நிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தேடுதல்...பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் அதன் பின் தன்னையே காரணமாக்கம் நேசகுமாரன்.இங்கு இந்த நாவல் , செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில் நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை-அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல முடியாதென்கிறது.)


ஆம்!ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல முடியும்?ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,
துரோகத்தையும் தமிழீழ மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும்?அவளின் மடியில் தவழ்ந்து அவளையே 'கற்பழித்துக்'கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக் காரணமாகிறோம்.
நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான்,அவனைக் கொண்டுபோய்ச் சாத்துகிற 'சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங்' எப்போது இந்தக் கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது?


ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி.
21.10.2005

Tuesday, October 18, 2005

சுதந்திரம்!

சுதந்திரம்!


மெல்லிய கூர்வாள்
கொடு நெஞ்சில் தைக்க
மெல்லவரும்பும் குருதி
கண்ணிமையெங்கும் தெறித்தொதுங்க
மெல்லச் சிரிக்கும் மனமும் உணர்வும் எனக்கில்லை!


எதிரியையும் வாழவிடு இந்த மண்ணில்!


அவன்(ள்)
தன் சுயத்தை மதிப்பீடு செய்வதற்கொரு வாய்ப்பை
இல்லாதொழிக்க நீ யார்?


கொஞ்சும் மழலையையும்
கோலாச்சும் உன் நெட்டூரம்
குடல் தெறிக்கச் சிதறடிக்கிறது.


எதற்காக?


எதிரியின் குழந்தையென்றா,
பிறப்பினுள் பெயர்த்து வைத்த
உயிரினிளுறைந்த இயக்கம் விரிந்து நின்றது?


அந்தவொரு புள்ளியில் மட்டும்
எவரும் தமது விறைத்த மூளையை உரசக் காணோம்


பின்னைய பொழுதொன்றில்
பேசிக் கொள்ளப்போகும்'பெரிசுகளின்'உலர்ந்த உதடுகள்
ஐயோ,ஆண்டவனே! என்பதாகமட்டுமிருக்கா!


குறிதவறிய கோணங்கள்
குதறிய புணத்தின் விறைத்த நெற்றியில்
விடுதலைப் பிரசுரம் ஒட்டிக்கொள்ளும்
நெஞ்சாங்கட்டைக்கு
நொடுந் தொலைவில் கிடக்கும் ஒரு கழித்தெறிந்த காகிதத்தை
தேடிச்செல்லும் சில கூட்டம்!


எடுப்பதற்கு யாருமற்ற பொழுதில்
அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும்,மாவும்
தின்னக் கொடுத்து வைக்காத மக்களைக் கனவு காண்கிறது தீவுக்குள்ளே.


உயர்ந்த பாதுகாப்பு
வலையங்களாகவும்,முட்கம்பிச் சிறைகளாகவும்
துப்பாக்கி மனிதர்களின் 'சித்திரங்களாக' உலகெங்கும்
மனிதவுடல்களில் கீறிப்பார்க்கிறது விடுதலை,
தேசப்பாதுகாப்பு-பயங்கரவாதத்துக்கெதிரான போர்,இன்னபிற!


ஒரு சிரட்டைத் தண்ணிக்கு அலையும்
தரித்திரத்துடன் 'விடுதலை'
மண்ணையுதைத்துத் தரையில் வீழ்கிறது
சுதந்திரமென்பது
நேற்றுப் பெய்த கொடு மழையில் அள்ளுப்பட்டது.



ப.வி.ஸ்ரீரங்கன்
18.10.2005








புரியுமா உனக்கு?

புரியுமா உனக்கு?


வடக்குமறியாய்
கிழக்கும் அறியாய்
இருந்தும்
நீயோ
எனைப்பார்த்து
'தமிழர்களின் குருதியைக் குடிக்கப் போ!'என்கிறாய்.

நான் எதற்காம்?

அதுதாம்,நீயும்
உனைச் சேர்ந்தவர்களும் போதுமே!...

அன்று
அல்பிரேட் துரையப்பா,ஆனந்தராஜா
இன்று
இராசதுரை,சிவகடாட்சம் என்று
சன்னங்களால் சதிராடும்...

கவனித்திருக்கிறாயா?

நீ,
நுகத்தில் பூட்டிய எருதாகவே
செக்கைச் சுற்றுகிறாய்,
உன் நுகத்தடி ஒடிப்புக்காய்
நாம் சிலுவை சுமப்பதறியாய்

புரியுமா உனக்கு?
உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக் கொண்டிருக்கிறது!

கல்வியாளர்களைக் கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று,
இன்றோ
கொன்று குவித்த கல்வியாளர்களின் உடல்களின் மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.

அவசரப்படாதே!

'நாம் தமிழரின் குருதியைக் குடிப்பதும்,
இந்தியக் கைக்கூலியாய் மாறுவதும் இருக்கட்டும்.'

நீ,
எப்போது
கொலைஞர்களின் கைக்கூலியானாய்?

சொல்,
உன் மனம் திறந்து!

அறிவைக் கொன்று குவிக்கும் உன் செயல்
தீராத வடுவைச் சுமக்கும் உன் மன வெளியில்
தேசத்தின் நலனைத் தின்றுகொண்டிருக்கிறாய் என்றறிவாயா?

இரணங்களின் மத்தியில் நின்று
புணங்களைக் கருவாடாக்கிக்கொள்
நாளையுந்தன் கொடூரப் பசிக்குக் கூழ் காச்சவுதவும்.

ஓ கொடூரமானவனே!


நீ,
மௌனித்திருக்கும் எங்கள் உணர்வுகளோடு
கோலி விளையாடுகிறாய்

குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!

'மேற்குலகில் நாம் படாடோபமாக வாழ்கின்றோமென்கிறாய்'

அது,
மக்களிடமிருந்து பறித்தெடுத்த பணத்தாலல்ல!
குருதியைக் கொட்டி
முதுகு வளைத்துப் பெற்றவை.

இப்போது சொல்!

தரையில் தெறித்து விழும் தலைகளின்
மெல்லிய கனவுகளைப் பற்றிச் சொல்
அல்லது,அவற்றில் வழியும் குருதியை தேசத்தின் பெயரால்
உன் சிரசில் தடவிக் கொள்ள முனையும்
உன் மனவிருப்பைச் சொல்!

நீ சொல்லாய்!

ஏனெனில்,
அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்னபிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்.

அடுத்தவரி ஆனாவில் எழுதவராவுனக்கு
ஆங்கிலமொரு கேடா?,தமிழ் ஈழமொரு கனவா?
கொடியவனே,கோணல் புத்திகட்டையே!

வக்கற்றவனே,வம்புக்கு அம்பு விடாதே!

சமஷ்டியென்கிறாய்,
கூட்டாட்சியென்கிறாய்,மாநிலம் என்கிறாய் பின்பு ஈழமென்கிறாய்
எல்லாவற்றையும் தொலைத்த பொழுதில்
ஊரெல்லாம் செம்புடன் அலைகிறாய் கறப்பதற்கு.
பின்னெதற்கு
அடுத்தவன் தலையில் ஆப்பு வைக்கிறாய்?

இப்போது
எந்தத் திசையில் நிற்கிறாய்?
மீன்பாடும் தேன் நாடும் போய்
மீதமிருந்த யாழ்மண்ணும் இழந்து
ஈழமொன்று
உருவாக்குதல் உனக்கே சாத்தியம்!

கேட்டால்,
'எல்லாம் இராஜதந்திரமென்பாய்!'

ஓ துயரத்தின் புதல்வனே!

இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இயந்திரத்தில் இரை மீட்கிறாய்.

எச்சங்களில்
'எந்த எலும்பு' உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!

'இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப்' பிதற்றுவாய்.


அன்று உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ இல்லாதிருக்கக் காண்பாய்!


இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?


-ப.வி.ஸ்ரீரங்கன்
18.10.2005

Thursday, October 13, 2005

காலாற நடத்தலென்பது ...

காலாற நடத்தலென்பது ...


கனவுகளோடு காலாற நடத்தலென்பது எனக்கென்றும் விருப்புடையது,அல்லது இன்பமயமானது.

இயற்கை அள்ளித் தந்த சுகங்களைச் சுவைப்பதில் எனக்கு அலாதிபிரியம்.அவசரமாக எதையும் செய்வதும்-செய்தபின் கோணலானால் அது குறித்துக் கவலையுறுவது எனக்குக் கிடையாது.

எப்படியும் இந்தக் கானல் நீராகவிருக்கும் இந்தத் தேசத்தோடு(ஜேர்மனியோடு) ஒன்றித்தல் கைகூடுவதில்லை.எனினும், என்வரைக்கும்- இந்த அற்புதமான வளர்ச்சியால் நிறைந்த வளங்களைப் பெற்றுவிட்ட தேசத்தை வெறுமனவே வெறுத்தொதுக்குவது மிகவும் கோணல்த்தனமானது.எனவே அப்பப்ப ஆசைகொள்வதும்-வேலைசெய்யும்போது வரும் பிணக்கினால் வெறுப்பதும்,இத்தேசத்தின் பூர்வீகக் குடிகளின் குறிதவறிய கூற்றுக்களால் அடியோடு இவ்மண்ணை மறக்க முனைவதுமாக ,நான் என் தேசத்தில் ஒரு காலும்,இம்மண்ணில் இன்னொரு காலுமாகக் கனவுகளோடு வாழ்கிறேன்.

இன்று அற்புதமாக நிலா வானத்தில் ஊஞ்சலாடுகிறது.

ஒளித்தெறிப்பு அற்புதமாய் மனதில் மிளிர்ச்சியை மிகுதியாக்கியபடி.

வூப்பெற்றால் மலைகளின் ஒரு பகுதி எனது இருப்பிடத்தில் கரையொதுங்கி கவனிப்பாரற்று விரிகிறது.நிலவினது ஒளித்தரிசனம் அற்புதமாக உரசப்படும் மலைகளின் சரிவுகள் மங்கையின் உச்சிப் பொட்டின் அற்புதத் தரிசனத்தை மனமெங்கும் விரிக்க, எனது உணர்வின் உச்சமோ எம்.3'இன் தடையை அழுத்தி இசையை உறிஞ்சத் தயாராகிறது.
இசை.அற்புதமான மருந்து!
அழககென்பது ஒரு வகைக்காட்சி,இசையோ ஒரு வகை அழகை உணர்வாக்கிறதே!

என்னதாம் சொல்கிறது?

நிறைந்த கனவுகளைத் தரிசிப்பதற்கு அச்சொட்டாக இசை அழைத்துச் செல்கிறதே!கரடுமுரடான ஜேர்மன் மொழிக்கு வார்த்தைசேர்த்த இசையென்பது அவ்வளவாக வெற்றி தரவில்லை-சிம்பொனியின் சிகரங்கள் மலர்ந்த நாட்டினது மொழியின் இயலாமையை நினைத்தபோது,இந் நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கைப்பற்றிய ஆங்கிலப் பாடகர்கள் ஞாபகம் வந்தார்கள்.

நிலவு இப்போது கவிஞர் அறிவுமதியூடாக எனது மொழியில் இன்னும் அழகாய்த் தெறித்தது.

சிறைச்சாலையென்ற படப்பாடலானது கவித்துவமானது.

அறிவுமதிக்குள் கிடக்கும் தமிழ் இலக்கண-இலக்கிய அறிவு உச்சமானது.

'தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டுமிட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு...'

மனது கர்வமடைகிறது.

என்னவென்பேன்!

தமிழன் பாட்டுக்கட்டுவதில் மிக உச்சத்திலிருக்கிறான்.அதைத் திருடிய இசை மெட்டுகளில்கூட அற்புதமாகப் பாடுகிறான்(ள்).

எனக்குள் ஒருவிதத் திருப்தியும் அதைத்தொட்டுப் பாரிய உற்சாகமும் நிலவின் பொட்டில் பார்வையைக் குவித்தது.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

பூங்குன்றன் என் பாட்டன்.

பெருமிதம் இன்னுமதிகமாகியது.

நிலவோடு நினைந்துருகிய உணர்வை நிலாவருகோடு பறந்தவொரு பாரிய விமானம் உடைத்தெறிய முற்பட்டது.கம்பரே கம்பரே புஷ்ப விமானமா?அது எங்கே?இப்போ நிஷ விமானத்துக்கு மேற்கெல்லோ சொந்தம்.நான் தரையில் விழுந்து நொருங்கினேன்.

வீடுமீளும் எண்ணமரும்பிப் பிள்ளைகள் மனதில் விரிந்தார்கள்.இருக்கையின் சுகத்திலொரு உன்னதம் மீளவும் பெருக்கெடுத்தது.எண்ணச் சுகம் கண்வருத்திக் கனவைத் தந்தது.காலத்தில் வாழு பின் கதைகளென்ன ,கற்பனைகளென்ன இதைத் தாண்டி தரணியெங்கும் தமிழ்,விஞ்ஞானப் பறவையாகச் சிறகடிக்குமென்றது.

என்னமாதிரியொரு மென்னுணர்வு!

இது மேனியெங்கும் பரவ எனது பிள்ளைப் பருவம் எனது மகன்களின் உருவங்களில் பட்டுத் தெறித்தது.

சித்திரை நிலவு,கொட்டும் பனி,கொஞ்சம் பயம் கலந்த இரவு.தோட்டத்துப் பயிர்கள்,நீர் இறைக்கும் ஜந்திரம்,தம்பி மார்கள்...

சொல்லிக் கொள்ளவொரு வாழ்வு அன்றிருந்தது.

சுகம் என்றும் அநாதியாகவே இருப்புக் கொண்டதாகக் கனவு சொல்கிறது.இராணுவங்களின் வெடிச் சத்தங்கள்கூட இரண்டாம் பட்சமான அதிர்வையே விதைத்தது.அற்புதமென்பது,அன்னையும்-அன்னை மண்ணுமென்பதாய் எனது அறிவு சொன்னது.

இப்போது அறிவு மதியைக் கடந்து கண்ணதாசனின் இறுதி மூச்சு:'கண்ணே கலைமானே'என்று தமிழை எம்3 ஊடாகத் தாலாட்டியது.நான் வீடுமீண்டேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2005

Tuesday, October 11, 2005

கொரில்லா: நாவல்

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும்,
கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும்.


(கொரில்லா: நாவல்எழுதியவர்: ஷோபா சக்தி)



'தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள் கொடுக்கப் போனதாக
சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு
மயங்கிவிடும் தாய் மனது
மடி கடித்த நினைவுகளும்
மங்கலாக வந்து போகும்
வார்த்தையின்றிச் சோர்ந்து விடும்
வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்று வரை?'



இன்று வரை கேட்கப்படும் கேள்வியிது.


ஈராயிரம் ஆண்டுகளாய் தாழ்தப்பட்டு 'தாழ்ந்தவர்கள்'என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வுமீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை-சேறடிப்புகளை,கள்ளப்பட்டங்களை-தீண்டாமையை சுமத்திய 'மேல் சாதிய சைவ வேளாள அரசியலை' இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞானபூர்வமாகக் கைகூடிவரவில்லை.அத்தகையவொரு நிலமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும்,அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதையெமக்குத் திட்டமிட்டே சுமத்தியது!


இந்த நிலமைக்குக் காவோலை கட்டிக் கொழுத்தப் புறப்பட்ட இயக்கமே தலித்திலக்கியம்!!(இந்தியாவில் தலித்துவச் செயற்பாட்டாளர்கள் உலக ஆதிக்கச் சக்திகளின் பினாமி அமைப்புகளுடன்(வேர்ல்ட் விசன்,இன்னபிற...)சேர்ந்தியங்குவது பற்றி எம்மிடம் பாரிய விமர்சனமுண்டு).


கொரில்லா'வின் மொழியூடான சித்தரிப்பும்,அதன் பகுப்பாய்வு மீதான நாளாந்த சமூக சீவியம் -இதன் நம்பகத்தன்மை யாவும் அதன் அநுபவ வழிபட்ட வாழ்வை வாழ்ந்து,சுமந்தவர்களாலேயே புரியக்கூடிய நிர்ப்பந்தம் இயல்பானதே. இந்த நிர்ப்பந்தத்துக்குள் நிலவுகின்ற நமது வாழ்வும்-சாவும் எங்கோவொரு மூலையில் நிகழ்ந்து,ஆரவாரமற்ற மனிதர்களால் உணரப்படாமலேயே அமிழ்ந்துவிடும் நிலையைத் தடுத்து-இதுதாம் எமது வாழ்வினது சமூக இருப்பு,இதுவே எமது கால அரசியல் சமூக-பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள்,கண்ணிகள் என்பதைப் பறையடித்துச் சொல்லும் ஒரு ஊடகமாக- இயக்கமாக சோபா சக்தி என்ற எழுத்தியக்கம் கொரில்லாவை முன் வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வே,தேவையே!


இந்த 'வாழ்வு விவரணம்'தொழில்படும் தளம் இலங்கையின் தீவுப்பகுதியிலுள்ள குஞ்சன் வயலெனினும்,இஃது முழுமொத்தப் பூமிப்பந்தில் வாழ்வு மறுக்கப்பட்டு-உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களனைவருக்கும் பொருந்தும்.நாம் வாழும் வாழ்வானது 'ஏதோ எமது 'அறிவற்ற வாழ்வோட்டத்தால் நிகழுமொரு போக்காகக் காட்ட முனையும் கபட ஆதிக்க சாதியவூடகங்களால் இத்தகைய எழுத்துக்கள் எப்பவும் கண்டு கொள்ளப்படா(கொரில்லா பற்றிய இத்தகைய விமர்சனங்களுட்பட).என்றபோதும் வரலாற்று இயங்கியலைப் புரிந்தவர்களுக்கு இஃதொரு தடையாகா!


மானுடநேயம், மகத்துவம்,ஜனநாயம் என்பதெல்லாம் சாதிய இந்துக்களுக்கான சமூக விழுமியமாகப் புரிந்து வைத்திருக்கும் புலம் பெயர் 'வானொலி-ஒளி,பத்திரிகைகள் இந்த எழுத்துப் படையலை தெருவோர வேப்பமரத்து முனியப்பருக்கோ அன்றி அந்தோனியாருக்கோ வைத்ததாகப் பொருட் படுத்துகிறது!!!


எமக்குள் முகிழ்த்திருக்கும் சமூகக்கோபம் இன்று நேற்றைய கதையல்ல,பல்நூறு வருடங்களாக நமது மூதாதையர்கள் கொண்டிருந்த -அநுபவித்த பகை முரணே இப்போது சமுதாய ஆவேசமாக-விஞ்ஞானத்தன்மை பெற்று யுத்த தந்திரோபாயத்திற்காக கிரமமாக வாசிப்புக்குள்ளாகிறது.நாம் நுகர்ந்த-நுகரும் ,நமது முன்னோர்கள் புழுவிலும் கேவலமாக வாழ்ந்த -சமூக வாழ்வை இப்போது நாம் கட்டுடைத்துப் பார்க்கிறோம்! அதுவே தலித்திலக்கிய முயற்சிகள் கோரியும் நிற்கின்றன,இதுவே கொரில்லாவினது இலக்கிய கோட்பாட்டு வடிவமும்.வருவது எதுவானாலும் நாம் நமது கடந்தகால வாழ்வுமீதான தார்மீகக் கோபம் குறித்து மிகக்கவனமாக இருக்கவேண்டும்!எக்காரணங்கொண்டும் இதன் வீச்சுக் குன்றக்கூடாது-தணியக்கூடாது.இதுவே நம்மை வழிநடாத்திச் செல்லும் ஊட்டச்சத்து,நமது வாழ்வை நாயிலும் கேவலமாக்கி,இழி நிலைக்கிட்ட வர்க்க-சாதிய நலன்களை,கண்ணிகளைத் தனியே மார்க்சிய வர்க்கக்கோட்பாட்டுப் புரிதலுக்குள் அடக்கிப்பார்க்க முடியாது.இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் பல் வகை சாதிகளாகப் பிளவுபட்டு மிகக் கீழான நிலைமைகளுக்குள் வாழ்வு நகர்கிறது.இப்பிளவு மென்மேலும் மேற்சாதிய ஒடுக்குமுறைக்கு ஒத்திசைவாகிவிடும் நிலைவேறு.


மனிதர்களை மனிதர்கள் ஒடுக்குதல் என்பது இந்த நூற்றாண்டோடு ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும்,இதற்கொரு முற்று வைப்பதற்கான முன்னெடுப்பாக நாம் தலித்திய கருத்தமைவுகளை நோக்கியாக வேண்டும். கூடவே தலித்தியத்தை நாம் எவ்வாறு புரிகின்றோம்? ஒருசில மேட்டுக்குடி 'படிப்பாளிகள்'-மார்க்சியர்கள் அஃது பூதம்,மார்க்சியத்திற்கு விரோதமான பிற்போக்கு பிளவு வாத-முதலாளிய நலனுடன் பின்னப்பட்ட சந்தர்ப்பவாதமாகக் கருதவது தத்துவார்த்த அநுபவின்மையின் போக்கு மட்டுமல்ல கூடவே மேல் சாதிய'மேல் குல' கருதுகோளுமேயிதை இயக்கி வருகிறது.



தலித்துவ அடையாளமென்பது 'பாட்டாளி வர்க்க முன்னணிப் படை,பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம்'என்பவற்றின் பிரதியீடாகவும்,இந்திய-இலங்கை போன்ற சாதிய ஒடுக்குமுறை நிகழும் நாடுகளுக்கு உழைக்கும் மக்களை இனம் காணும் பொதுமைப் பண்புடைய சுட்டலாகவுமிருக்கும்.உழைக்கும் மக்கள் பல் வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு'தலித்திய வர்க்கம்,தலித்திய மொத்த அதிகாரம்,தலித்திய முன்னணிப் படை'என்பதே சாலப் பொருந்தும்! இவற்றின் புரிதலோடுதாம் நாம் சமூகமாற்றை நோக்கிப் பயணிக்கமுடியும்.தலித்துவ பண்பாடுதாம் சாதியவேர்களை அறுக்க முடியும், இஃது நடைமுறையிலுள்ள எல்லா விண்ணாணங்களையும் கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிவதில் நோக்கமாகவிருக்கும்.


இந்த வகைப் புரிதலோடு கொரில்லாவை முன் நிறுத்தி தலித்துவ இலக்கியக் கோட்பாடு நோக்கிய சிறு பயணம்:


இன்றைய உழைக்கும் விளிம்பு மனிதர்கள்(புலம் பெயர்ந்து மேற்குலகில் உடலுழைப்பை நல்கும் தமிழர்கள் தம்மைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இந்த விளிம்பு மனிதர்கள் யாரெனப் புரிந்து விடும்)தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான எந்த வடிவமுமில்லை.உலகியல் வாழ்வு இதுவரையிலிருந்த நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப புதியமொந்தையில் தந்தபடி.இவைகளால் சரிந்துவிடுகின்ற பொருளியல் வாழ்வைச் செப்பனிட்டு தனது முரண்நிலைகளில் மழுப்பல்களைக் காட்ட முனைகிறது.என்றபோதும் 'உழைக்கும் வலு'வளைந்து கொடுக்கும் அடிமைப்படுத்தலுக்குள் திணிக்கப் பட்டபடி,இந்தச் சமூக சீவியம் எந்தவொரு உழைக்கம் பிரிவையும் சுதந்திரமான தனித்தன்மையுடைய உற்பத்தியுறுவுகளாகப் பார்க்க விடுவதில்லை. இந்த பொது இறுக்கமே இப்போது பல மட்டங்களிலும் (மூளை உழைப்பாளிகளிடமும்,நிர்வாகயந்திரத்திடமும்) 'முட்டாள்த் தனத்தின்வியூகம்' Strategien der dumkeit என்று விவாதிக்கப் படுகிறது, இவ்வுளவியல் ஒடுக்குமுறையென்பது ஒரு காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்திப் படுத்தும் மூலதனத்தின் திட்டமிட்ட வியூகமே.இதையே முன் வைத்து புத்திஜீவ மட்டம் கருப்பொருளாக விரிந்துரைக்கிறது.


செப்டம்பர் 11'க்கு பின்பு வியூகங்கள் பல வடிவங்களில் உலா வருகிறது.இவை கணக்கிலெடுக்கப்பட்ட எல்லா அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலைமையில் நம் அக நிலை, படைப்பாற்றல் இழந்துவிட்ட நிலையில் தோல்விப் பயத்துடன் புற நிலையை அணுகிறது.தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு எந்தச் செயல் வடிவமும் அதனிடமில்லை,இஃதுதாம் இன்றைக்கு நம்மில் பலரிடம் மலிந்து காணக்கிடக்கிறது. வர்க்க உணர்வென்பது வெறும் பொருள் சார்ந்த விசயமாக சமூக உளவியல் நிறுவப்பட்டுள்ளது,இதன் உச்சபட்ச பிரச்சாரவூடகங்களாக தொலைக்காட்சியும்,கொலிவூட் சினிமாவும்,கல்வியமைப்பும் செயற்பட சமூக நிலை சற்று சரிப்பட்டுவிட பலர் தாங்கள் இதுவரை உணர்ந்து வந்த வர்க்கவுணர்வை சமரச நிலைக்குள் அம்போவாக்கியபடி,இது குறித்து ஜேர்மனிய பேராசியர் பீட்டர் வி.சிமா தனது பிரபல்யமிக்க கட்டுரையான'பின் நவீனத்துள் மானிடர்களினது பயிற்றுவிப்பு'என்ற கட்டுரையில் இப்படியெழுதுகிறார்:'பல்வகைப்பட்ட கருத்து நிலைகளை,பிரச்சனைகளை அன்றி சாதாரண தவறான புரிதல்களை விவாதிப்பதற்கு யாரால் முடியவில்லையோ அதுவே சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடு'.".Peter V.zima: wer meinungsverschiedenheiten,Konflikte,oder einfache mißverstaendnisse nicht ausdiskutieren kann,der schlaegt zu wie ein unmuendiges Kind.-strategien der dumheit,seite:25.இஃதுதாம் நாம் செய்து வரும் இன்றைய செயல். இதை உடைத்தெறிவதில்தாம் தலித்தியமும்,அதன் உணர்வுத்தளமும் வெற்றிகொள்கிறது.மனிதனை மனிதன் ஒடுக்குதல் பொருளாதார ரீதியாக மட்டும் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் இந்த 'வர்க்க இழப்பு' நிகழ்ந்துவிட்டது.ஆனால் இந்தியாஇலங்கை மாதிரியான சாதிய-சமூகவொடுக்குமுறை நிகழும் நாடுகளில் இந்த வர்க்கவுணர்வென்பது தலித்தியமாக-தலித்தாக முன்னிறுத்திப் போராடுவதில் வெற்றிகொண்டது வரலாற்று விந்தையல்ல.


எனவே தாம் ஒரு சோபா சக்தி விஷ்வரூபமாக தன் உயிரை நிழலாகக் கொடுத்து ஈழப்போராட்ட வரலாற்றை மக்கள் சார்ந்து வெளிப்படுத்தியது!


தலித்துவ இலக்கியத்தின் கோட்பாடு என்பதுதாம் என்ன?


படைப்பிலக்கியத்தின் ஊடாக வரலாற்றுநிகழ்வைகொடுமையை வெளிப்படுத்துவதும் அதனூடாகக் கற்றுக் கொள்வதும்,கற்பித்தலுமே.
இந் நோக்குத்தாம் படைப்பிலக்கியத்தின் கோட்பாட்டு அழகியற் கட்டுமானத்தை நிர்மாணிக்கும்.இதுதாம் நாம் எழுதுவதை கேள்விக்குட்படுத்தும்.நாம் எழுதுவது முதல்தர இலக்கியமா?,நாம் உண்மையிலேயே இலக்கிய சிருஷ்டிகளா? என்றெம்மைக் கேட்க வைக்கும்.இவ் வகைப் புரிதலற்றவர் -தான் படைப்தெல்லாம் வானத்தின் உச்சியிலுள்ளதென்றறெண்ணி விமர்சனங்களை வெறுக்க முனைவார்!தலித்துவ எழுத்துக்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும் ஆற்றலோடு அமைகிறது.


இதற்கு கொரில்லா'வே சாட்சி! சோபா சக்திக்குள் நிகழ்ந்தது என்ன? இலக்கியத்திற்காகத் தன்னை வழங்கியதா? தனது ஆன்மாவை,உயிர்ப்பை வழங்கி வரலாற்றைப் படைப்பாக்கி முன் வைத்துள்ளார்.சிந்தனையில்,படைப்பாற்றலில்,வேதனையில்,அநுபவங்களில் தன்னைத் தொலைத்து தேடுகிறார்.இந்தத் தேடுதலே தன்னைத் தான் இனங்காண வைத்ததும்,புரிதுணர்வை வளர்த்ததும்,சமுதாயத்துள் தாழ்தி வைத்திருக்கும் மானுடர்களினது -மனித விடுதலைக்காக வாழ்வைத் தேடுகிறார்,படைக்கிறார்,தலித்தவத்திற்காக-தலித்துவ விடுதலைக்காக தலித்தைத் தேடுகிறார்.தன்னைத் தானே திட்டுகிறார்,கேலி செய்கிறார், தன்னைத் தானே சாகடிக்கிறார். தனக்குத்தானே புத்துயிர் கொடுத்து தலித்துவ விடுதலையை கொண்டுவர முனைகிறார், உலகத்தோடு தோள் சேர்கிறார்!


இந்த உலகத்தோடு எப்படித் தோள் சேர்கிறார்? இவ்வுலகை நாம் எப்படி நெருங்குகிறோமோ அப்படித்தாம்.
துன்பத்தின்மூலம்,நெருக்கடிகளின் மூலம்,சாதிய-இந்துவத்தின் மூலம்,ஆதிகத்தின் மூலம்,மனிதர்களை மனிதர்கள் கொல்லும் அச்சத்தின் மூலம்,எமது அறிவின் மூலம்,உழைப்பின் மூலம்,யுத்தத்தின்மூலம், படைப்பின் மூலம் இந்த உலகு எமக்கே சொந்தம்.நமக்குத்தெரிந்த இவ்வுலகை நமக்குள் கொண்டுவர இதுவரை நமக்குள் அறிவாற்றல் கைகூடிவரவில்லை,தலித்துவ மக்ளாகிய எமக்கு ,எம் வாழ்வை -அற்பணிப்பை கண் முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தும் படைப்பு நிலை இப்போது எம்மிடமுள்ளது.நாம் நம்மைத் தெரிவு செய்கிறோம்,தெரிவு செய்வதினூடே நமது இருப்பு,நமது விடுதலையோடு சம்பந்தப்படுவதை உணர்கிறோம்.நமக்கான உலகை நாம் சிருஷ்டித்து அதனோடு கலத்தல் நிகழ்ந்து விடுகிறது! இதைக் 'கொரில்லா' மிகவும் துல்லியமாகச் செய்து விடுகிறது.


இவ் வகைக் கலத்தலின் மூலம் கொரில்லா நம்மோடு உண்மை பேசுகிறது,பேருண்மையைக் இக் கலத்தலின்மூலம் அது தந்து விடுகிறது.கொரில்லா நம்மைப் பற்றிய குறைகளைத் தயவு-தாட்சன்யமின்றி நமக்குப் பகிரங்கப் படுத்துகிறது,இதில் நமக்கு வெட்கமேதுமில்லை.இதற்காக நாம் தீக்குளிக்க வேண்டியதில்லை.நமது குறை இன்னொருவரின் குறையின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாவோ தொடர்கிறது,இவ் வண்ணமே மூதாதையர்களின் தொடர்ச்சி நமது தொடராகவும் இணைகிறது.எம் குறைகளைப் பிரகடனப் படுத்துவதன் மூலம் நாம் எத்தனையோ நபர்களைப் பிரகடனப்படுத்துகிறோம்,எம்மை நாமே திருத்த சிலுவை சுமக்கிறார் இந்த சோபா சக்தி!எமது விடுதலையை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் செத்தாக வேண்டும்.சாதியின் பெயரால்,இயகத்தின் பெயரால்,கள்வனெனும் பெயரால்,துரோகியின் பெயரால் இந்தச் சாவு நம்மை நெருங்கிய படியே!! இந்தச் 'சாவு'தாம் கொரில்லாவைப் படைப்பிலக்கிய நிலைக்குள் உயர்த்தி,உந்தித் தள்ளுகிறது.


எமது வாழ்வை விபரிக்க 'நாம் எப்படியெல்லாம் செத்தோம்,நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு-அவமானப்படுத்தப்பட்டார்கள்,எங்கள் வாழ்வை எப்படியெல்லாம் இழந்தோம்'விளக்க-பொருள்தேட கொரில்லா முனைகிறது.இதுவேதாம் இன்றைய தலித்துவக்கோட்பாடு-தலித்திலக்கியக்கோட்பாடு-இதுவே படைப்பிலக்கிய அழகியலும் கூட! இலங்கையின் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களில் கணிசமான பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தான் சிலுவை சுமந்து,செத்து-உயிர்த்து,மீளவும் தன் உயிரையே நிழலாக விரித்து,ஈழத்து ச் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் முகத்தில் காறீ உமிழ்கிறார்,உதைக்கிறார்.இதுவே மனித நேயமும்கூட.


கொரில்லா மகத்தான நாவலாகவிருப்பதற்கான காரணம் :அஃது வரலாற்றின் ஒருபகுதி,ஈழப்போரின் வரலாறை அது தனக்குள் பகுதியாகவும்-முழுமையாகவும் பிரதிபலிக்கிறது.மனிதர்களாகிய நாம் வரலாற்றின் ஓட்டத்தில் மிதக்கின்றோம்,வரலாற்றோட்டத்தை இயக்கிய படி.எமது செயல்களை,சிந்தனைகள் வரலாற்றோடு பிணைத்துப் பார்ப்பது சாத்தியமே!இதைச் செய் நேர்த்தியோடு கொரில்லா செய்து முடிக்கிறது.


கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்ந்தும்-தொடராமலும் ,பின்னிப்பிணைந்தும்,ஆழ்ந்தும் -ஒடுங்கியும் வரலாற்றில் முன்னும் பின்னும் செயற்படுகிறது.இங்கு சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்.அதாவது பாத்திரங்களை கால இடச்சு10ழலில் வைத்துப்பார்ப்பதும்,நிகழ்வை விபரிப்பதுமே அஃது! காலங்கடந்த (காலத்தை விட்டு-வெளியில்,காலத்துக்குள் நிலவாத) கருத்துரீதியான மனிதர்களைக் காட்டும் கபட இலக்கியச்சு10ழலுக்குள் கடப்பாரை கொண்டு வரலாற்றுச்சு10ழலுக்கேற்ற மனிதர்களை அவர்தம் நிஜ முகங்களோடு படைக்கின்ற இலக்கிய நாணயம் இந்தச் சோபா சக்தியிடமே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.மனிதர்களை-அவர்தம் வாழ்வை விரிந்த பின்னணியில் வைத்துப்பார்ப்பதும்,பொதுவயப் படுத்துவதும்,பின்பு அதையே பிரித்துப்பார்த்து சாதிய ஒடுக்குமுறைக்குள் நிலவும் சங்கதிகளை விபரிப்பதும்தாம் தலித்தவ இலக்கியக் கொள்கைஅழகியற் கோட்பாடாகும்,இதைச் சேபா சக்தி கைநேர்த்தியுடன் கச்சிதமாக் கையாளுகிறார்.


தற்காலத்துக்குள் வாழும் நாம், வரலாற்றின் இறந்த காலத்தை தற்காலத்திற்கூடாகப் பிரதிபலிக்கும் ஆபத்தையறிவோம்.இந்த ஆபத்தை எப்படியிந்தக் கொரில்லா நாவல் வென்றது? இஃது ஆச்சரியமானது! ஆனால் படைப்பாளியின் பின்னணி கடந்த காலத்தை தானே அநுபவப்பட்டு-தானே பிரதிமை செய்ததால் இஃது வெற்றியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.எனவேதாம் கொரில்லாவின் எந்தப்பாத்திரமானாலும் வரலாற்றில் விரிகிறார்கள்,சம்பவங்கள்-பிரச்சனைகள் யாவுமே அந்தந்த வரலாற்றுச் சு10ழலை நமக்கு விபரிக்கிறது.எந்தப் பகுதியை வாசித்தாலும் அஃது வரலாற்றில் ஒரு பகுதியாக-துண்டம்மாக ,பிரதியாகப் பிரதிபலிக்கிறது.


பாத்திர வளர்ச்சியென்பது மிகவும் அசாதாரண விஷயமாகவுள்ள தமிழ் இலக்கியச் சு10ழலில், கொரில்லா மிகவும் சாதாரணமாகவே அவ் வளர்ச்சியை எட்டிவிடுகிறது.


கீர்கேகோர்ட் Kirrkegaard கூறுகிறார்:'Man muss die irdische Hoffnung abtoeten,dann erst rettet man sich in die wahre Hoffnung"-Die Reinheit des Herzens.தமிழில்: மனிதர்கள் உலகத்தின் மீதான நம்பிக்கைகளை கட்டாயம் கொன்று விட வேண்டும்.பின்பு உண்மையான நம்பிக்கைகளை காப்பாற்றி விட முடியும்.


சோபா சக்தி கற்பனையான நம்பிக்கைகளைக் கொன்று விட்டார்.மணலில் கயிறு திரித்து வானத்தில் ஊஞ்சல் கட்டும் நோக்கம் அவருக்கில்லை.எனவே கொரில்லா வரலாற்று விவரண நாவலாகவும்,படைப்பிலக்கியத்துள் தலித்துவ அழகியலாகவும்-கோட்பாடாகவும் முகிழ்க்;கிறது!
ஈழ மக்களின் வாழ்வும் சாவும் போலிப் பிரச்சார ஊடகங்களால் உருமாற்றப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரில்லாவின் பாத்திரங்கள் நம்மோடு அந்த உண்மைகளைப் பேசுகின்றன.


வில்லியம் சேக்ஸ்பியரின் William Shakespeare கோம்லேட் நாடகத்தில்:'.Gott hat euch ein Gesicht gegeben, und ihr macht euch ein andres."-Romeo und Julia;Othelo;Hamlet seite:244.'இறைவன் உங்களுக்கு ஒரு முகத்தை வழங்கினார்,நீங்களோ உங்களுக்கு வேறொன்றைச் செய்தீர்கள்'.என்று கோம் லேட் பாத்திரம் வழியாக சேக்ஸ்பியர் கூறுகிறார்.


நமக்கு நாம் எத்தனை முகங்களைப் படைத்துள்ளோம்? இந்த முகங்களை சோபா சக்தி கொரில்லாவினூடே நமக்கு விபரிக்கிறார்.இறுதியாகக் கொரில்லா பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் 'முழுமையானது என்பது பொய்யானது.'


வூப்பெற்றால், ஜேர்மனி . -ப.வி.ஸ்ரீரங்கன்

Sunday, October 02, 2005

எனது தேசத்தை நோக்கி...

எனது தேசத்தை நோக்கி...


>>>>>ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தடை விதித்திருப்பதை உணர்வுப்பூர்வமாகவோ அல்லது அலட்சியப்படுத்தும் விதமாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்விழந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தபோது அடைக்கலம் கொடுத்தவர்கள் அவர்கள். அதனால் அதனை ஒரு வழிகாட்டும் அறிவுரையாக எடுத்துக்கொண்டு இலங்கை அரசோடு நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.<<<<< என்கிறார் திரு.அமல்சிங்.

இவரது பதிவுகளில் விவாதம் தொடர்வதற்கான எந்த வழியுமில்லை.

அவர் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொண்டே கருத்திட முனைகிறார்.இன்றைய வாழ்சூழலில் தமிழ் மக்களின் வாழ்வு-வளர்ச்சி-எதிர்காலம் குறித்து எதையும், எப்படியும் எழுதலாமென கருத்தாடுவது எனது நோக்கமல்ல.புலிகளைத் தடைசெய்வதற்கும்,அவர்களது தலைவர்கள் ஐரோப்பாவுக்குள் பிரயாணிப்பதைத் தடைசெய்வதற்கும் பாரிய வித்தியாசமுண்டு.இந்தத் தளத்தில் நின்றுகொண்டு விவாதிப்பதும் எனது நோக்கமில்லை. மாறாக வேறொரு தளத்தை நோக்கியது.

ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்தற்காக அவர்கள் போடும்,கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்புச் செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடமையாக இருக்கமுடியாது.எமது வாழ்வையும்,வளர்ச்சியையும்-எதிர்கால அரசியலை முன்னெடுப்பதையும் நாமே தீர்மானிப்பது நமது ஜீவாதாரவுரிமை.இதையெந்தக் கொம்புவைத்த இனங்களும் எம்மிடமிருந்து பறித்தெடுக்க முடியாது.


ஐரோப்பாவனது தனது கடந்தகாலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது.இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதாரவாதிக்கத்தோடு- பின்காலனித்துவப் பண்போடு, புதியதொரு பொருளாதார வியூத்தை எம்மீது திணிக்கிறது.இதன் நீட்சியானது ஈராக்,அவ்கானிஸ்தான் படையடுப்பாகவும்-அரசியல் வியூகமாகவும் பரிணாமிக்கின்றது.ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரமானது நாலுகால் பாச்சலினால் மீளவும் பெருமூலதனத்திரட்சியாகி,ஏகாதிபத்தியமாக விரிந்துள்ள இன்றைய நிலையில்,அவர்களது அரசியல் வியூகமானது புதியதொரு தொடர்ச்சியை வலியுறுத்துகிறது.இது மூன்றாமுலகில் சுழலும் அவர்களது நிதிமூலதனப் பாதுகாப்புக்கும்- மூன்றாமுலகைக் கொள்ளைபோடுவதிலும்,அவர்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு நசுக்குவதிலும் கூடவே தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி தமது மூலதனத்தைப் பெருக்குவதில் குறியாகவுள்ளது.


கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள்,தமது நாடுகளுக்குப் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, உயிர்த்திருக்க வந்த தமிழர்களுக்குச் 'சும்மா' மனிதநேயத்தோடு ஒரு மண்ணுஞ் செய்யவில்லை.இவர்களிட்ட பிச்சை நம்நாடுகளில் சுரண்டிய வளத்தில் ஒரு சிறு துளிக்குக்கூட நெருங்கமுடியாது.நம்மிடமிருந்து திருடியதை நமக்கிட்டே நமது வாழ்வைச் சூறையாடும் அரசியலை அமல் சிங் புரியாதிருக்கலாம்.ஆனால் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.இன்று தேக்கத்துள்ளாகும் ஐரோப்பியவொன்றியப் பொருளாதாரப் பொறிமுறையானது தனது உயிர்த்திருப்புக்காக உலகத்தை ஏப்பிமிடக்காத்திருப்பதும் கூடவே ஐரோப்பியத் தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கிடவும் தயாராகிறது.உலக வங்கியினதும்,உலக நாணய நிதியத்திடமுமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் தமது நாடுகளில் சமூகப்பாதுகாப்பைக் கருவறுக்கும் ஐரோப்பியவொன்றியமானது தனது நாடுகளில் தஞ்சம்கோரிய மக்களை நவீன அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டியும் வருகிறது.இந்த அரசியலை மனித நேயப் பூச்சாண்டியூடாகப் பார்த்தோமானால் அது நமது அறிவைக் கிண்டலடிப்பதில்தாம் முடியும்.


தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது.இது பொருளாதார,சமூகப்பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும்.இப்போராட்டமானது பற்பல வழிகளிலும்,தந்திரத்தாலும் ஏற்றங்களையும்,இறக்கங்களையும் சந்தித்துள்ளது.ஒரு ஒழுங்கமைந்த -நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ளமுடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும்.நமது அடிப்படை அரசியல் நிபுணத்துவம் மேற்குலக அறிவார்ந்த வியூகத்துக்கு முன்னால் பலவீனமானது.இது சமூகமட்டத்தின் வளர்ச்சியோடு பாரியவுறவுடையதென்பதால் அதில் எந்த வெட்கமுமில்லை.எனினும், நாம் நமது நண்பர்கள் வெளியுலகக் கனவான்களாக இருப்பதாக நம்புவதுதாம் நமது பின்னடைவாக வரமுடியும்.நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது.நமது மக்களே நமது பலம்.தமிழகத்துத் தமிழர்களே நமது பலத்தின் இருப்பாகவுமிருக்கும்.இந்த ஆறுகோடி மக்களின் எழிச்சியை மட்டுப்படுத்தும் அரசியலே ஈழப்போராட்டத்தில் இந்தி இந்தியாவைச் சிங்கள அரசியலுக்குப் பக்கப்பலமாகச் செயற்பட வைத்திருக்கிறது.இதுள் இந்தி இந்தியாவினது பொருளியல் நலமானது சிங்களச் சமுதாயத்தோடு கை கோர்ப்பதில் நோக்கமாகவிருக்கிறது.எனவேதாம் தமிழகத்து மக்களின் அரசியல் விழிப்புணர்சி பற்பல வழிகளிலும் அடக்கியொடுக்கப் பட்டுள்ளது.


இங்கிவை பற்பல ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.உதயன் ,விஜயன் முதல் சர்மா,மற்றும் அசீஸ் நந்தி போன்ற ஆய்வாளர்கள் நமக்கிதைச் சுட்டிக்காட்டி இரு பத்தாண்டுகள் கடந்துவிட்டது.இந்த நிலையில் நமது மக்களின் தலைவிதியானது மேற்குலக-இந்தி இந்திய நலன்களுக்காகத் தாரைவார்க்க அமல்சிங் போன்றோர் கருத்தாடுவது நியாயமாகா.நமக்கான அரசியல் அடிப்படைவுரிமையை நமக்கு யாரும் தரமுடியாது.அது நம்மால் நாமே எடுத்துக் கொள்வதாகும்.எந்த அதிகாரம் நம்மிடமிருந்த உரிமையைப் பறித்ததோ அதே அதிகாரத்தூடாகப் பறித்தெடுப்பதுதாம் நமது போராட்டமாகவிருக்கும்.இதில் மேற்குலகானுக்கோ அல்லது அமெரிக்க அடிவருடிகளுக்கோ நாம் மண்டியிடவேண்டுமென எவரும் கோரி நிற்க முடியாது.


நாடிழந்து,ஊரிழந்து-வாழ்விழந்து நோகும் வலியும்,வேதனையும் நமக்குத்தாம் தெரியும்!சும்மா மேற்குலகுக்கு விருந்தினர் தொழிலாளியாக வந்த கணினி விற்பனர்களுக்கு இது புரியாது.தமது தேசங்களாக இருக்கின்ற இன்றைய தேசங்கள் யாவும் நமது மூததையர்களிடமிருந்த பறிக்கப்பட்ட தேசங்கள் என்பதை அமெரிக்கர்களோ அல்லது அவுஸ்ரேலியர்களோ இன்னும் மறந்துவிடவில்லை.அவர்களுக்கே அவ்வளவு உரிமையுண்டென்றால் பல ஆயிரமாண்டாய் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் எப்படித் தமது தாயகதைச் சில பன்னாட்டு முகவர்களுக்காக விட்டுக்கொடுப்பது?

எனது தாயகமானது எனது வாழ்வவோடும்,வரலாற்றோடும் உறிதிப்பட்டது.இது மேற்குலகானுக்கோ அல்லது வட இந்திய குடியேற்ற மக்களுக்கோ முகமன் செய்வதற்காக விட்டுக் கொடுக்க முடியாது.

உலகத்துள் ஆறுகோடித் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தும் அவர்களுக்கானவொரு நாடு உருவாகாத கையாலாகாத அரசியல் வாழ்வு எப்படியுருவானது? இது குறித்துப் புதிய சந்ததி சிந்தித்தே ஆகவேண்டும்!

அரசியல் வாழ்வானது மொழிவாரி-இனவாரியான பின்பு,அதன் பொருளாதார வாழ்வுமட்டும் எப்படி இன்னொரு இனத்தோடு சாத்தியமாக இருக்கிறது? இப்படியொரு வாழ்வு கிட்டுவதற்கு நாம் சோஷலிசச் சுமுதாயத்துள் வாழவில்லை.எனவே இந்த முதலாளியவுலகத்தின் கூற்றுக்குள் நின்றே அவர்கள் வகுத்த சட்டதிட்டப்படி போராடும் போராட்டத்தை யாருக்காக நாம் தாரவார்ப்பது?


குர்தீஸ் மக்களும்,பாலஸ்தீனமும் மற்றும் ஐரிஸ் போராட்டங்களும் நமகுப்பல படிப்பனைகளைத் தந்துள்ளார்கள்- தந்துள்ளது.நாம் யாருக்கும் குடிகளில்லை.நமக்கென்றொரு தேசம் வரலாற்றிலருந்து இருந்தே வருகிறது.இதை மீளக்கையகப்படுத்துவதை ஐரோப்பியர்களுக்காக விட்டுவிட நாமென்ன அவர்களது அடிமைகளா?மக்களின் அழிவும்,வாழ்வின் சிதைவும் நாளந்தம் நிகழுமொரு நாடு தனது உரிமையை இதற்காக இழக்கும் பட்சத்தில் மீளவும் இதே அழிவை இன்னொரு வகையில் உறுதிப்படுத்தும்.


'நான் உலக மக்களுள் ஒருவன்,பூமியின் குழந்தை.எனினும், எனக்கென்றொரு வாழ்வும் வரலாறும் எனது தேசத்துள் இருக்கிறது.அதுவே எனது வேர்!இதிலிருந்துதாம் நான் பொது மனிதனாகிறேன்.இதைவிட்ட மற்றெல்லாம் பொய்மையின் வெவ்வேறு வடிவங்கள்; இன்றைய முதலாளியச் சமுதாயத்துள்.'- ப.வி.ஸ்ரீரங்கன்
02.10.2005

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...