Sunday, October 02, 2005

எனது தேசத்தை நோக்கி...

எனது தேசத்தை நோக்கி...


>>>>>ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தடை விதித்திருப்பதை உணர்வுப்பூர்வமாகவோ அல்லது அலட்சியப்படுத்தும் விதமாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்விழந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தபோது அடைக்கலம் கொடுத்தவர்கள் அவர்கள். அதனால் அதனை ஒரு வழிகாட்டும் அறிவுரையாக எடுத்துக்கொண்டு இலங்கை அரசோடு நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.<<<<< என்கிறார் திரு.அமல்சிங்.

இவரது பதிவுகளில் விவாதம் தொடர்வதற்கான எந்த வழியுமில்லை.

அவர் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொண்டே கருத்திட முனைகிறார்.இன்றைய வாழ்சூழலில் தமிழ் மக்களின் வாழ்வு-வளர்ச்சி-எதிர்காலம் குறித்து எதையும், எப்படியும் எழுதலாமென கருத்தாடுவது எனது நோக்கமல்ல.புலிகளைத் தடைசெய்வதற்கும்,அவர்களது தலைவர்கள் ஐரோப்பாவுக்குள் பிரயாணிப்பதைத் தடைசெய்வதற்கும் பாரிய வித்தியாசமுண்டு.இந்தத் தளத்தில் நின்றுகொண்டு விவாதிப்பதும் எனது நோக்கமில்லை. மாறாக வேறொரு தளத்தை நோக்கியது.

ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்தற்காக அவர்கள் போடும்,கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்புச் செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடமையாக இருக்கமுடியாது.எமது வாழ்வையும்,வளர்ச்சியையும்-எதிர்கால அரசியலை முன்னெடுப்பதையும் நாமே தீர்மானிப்பது நமது ஜீவாதாரவுரிமை.இதையெந்தக் கொம்புவைத்த இனங்களும் எம்மிடமிருந்து பறித்தெடுக்க முடியாது.


ஐரோப்பாவனது தனது கடந்தகாலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது.இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதாரவாதிக்கத்தோடு- பின்காலனித்துவப் பண்போடு, புதியதொரு பொருளாதார வியூத்தை எம்மீது திணிக்கிறது.இதன் நீட்சியானது ஈராக்,அவ்கானிஸ்தான் படையடுப்பாகவும்-அரசியல் வியூகமாகவும் பரிணாமிக்கின்றது.ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரமானது நாலுகால் பாச்சலினால் மீளவும் பெருமூலதனத்திரட்சியாகி,ஏகாதிபத்தியமாக விரிந்துள்ள இன்றைய நிலையில்,அவர்களது அரசியல் வியூகமானது புதியதொரு தொடர்ச்சியை வலியுறுத்துகிறது.இது மூன்றாமுலகில் சுழலும் அவர்களது நிதிமூலதனப் பாதுகாப்புக்கும்- மூன்றாமுலகைக் கொள்ளைபோடுவதிலும்,அவர்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு நசுக்குவதிலும் கூடவே தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி தமது மூலதனத்தைப் பெருக்குவதில் குறியாகவுள்ளது.


கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள்,தமது நாடுகளுக்குப் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, உயிர்த்திருக்க வந்த தமிழர்களுக்குச் 'சும்மா' மனிதநேயத்தோடு ஒரு மண்ணுஞ் செய்யவில்லை.இவர்களிட்ட பிச்சை நம்நாடுகளில் சுரண்டிய வளத்தில் ஒரு சிறு துளிக்குக்கூட நெருங்கமுடியாது.நம்மிடமிருந்து திருடியதை நமக்கிட்டே நமது வாழ்வைச் சூறையாடும் அரசியலை அமல் சிங் புரியாதிருக்கலாம்.ஆனால் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.இன்று தேக்கத்துள்ளாகும் ஐரோப்பியவொன்றியப் பொருளாதாரப் பொறிமுறையானது தனது உயிர்த்திருப்புக்காக உலகத்தை ஏப்பிமிடக்காத்திருப்பதும் கூடவே ஐரோப்பியத் தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கிடவும் தயாராகிறது.உலக வங்கியினதும்,உலக நாணய நிதியத்திடமுமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் தமது நாடுகளில் சமூகப்பாதுகாப்பைக் கருவறுக்கும் ஐரோப்பியவொன்றியமானது தனது நாடுகளில் தஞ்சம்கோரிய மக்களை நவீன அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டியும் வருகிறது.இந்த அரசியலை மனித நேயப் பூச்சாண்டியூடாகப் பார்த்தோமானால் அது நமது அறிவைக் கிண்டலடிப்பதில்தாம் முடியும்.


தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது.இது பொருளாதார,சமூகப்பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும்.இப்போராட்டமானது பற்பல வழிகளிலும்,தந்திரத்தாலும் ஏற்றங்களையும்,இறக்கங்களையும் சந்தித்துள்ளது.ஒரு ஒழுங்கமைந்த -நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ளமுடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும்.நமது அடிப்படை அரசியல் நிபுணத்துவம் மேற்குலக அறிவார்ந்த வியூகத்துக்கு முன்னால் பலவீனமானது.இது சமூகமட்டத்தின் வளர்ச்சியோடு பாரியவுறவுடையதென்பதால் அதில் எந்த வெட்கமுமில்லை.எனினும், நாம் நமது நண்பர்கள் வெளியுலகக் கனவான்களாக இருப்பதாக நம்புவதுதாம் நமது பின்னடைவாக வரமுடியும்.நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது.நமது மக்களே நமது பலம்.தமிழகத்துத் தமிழர்களே நமது பலத்தின் இருப்பாகவுமிருக்கும்.இந்த ஆறுகோடி மக்களின் எழிச்சியை மட்டுப்படுத்தும் அரசியலே ஈழப்போராட்டத்தில் இந்தி இந்தியாவைச் சிங்கள அரசியலுக்குப் பக்கப்பலமாகச் செயற்பட வைத்திருக்கிறது.இதுள் இந்தி இந்தியாவினது பொருளியல் நலமானது சிங்களச் சமுதாயத்தோடு கை கோர்ப்பதில் நோக்கமாகவிருக்கிறது.எனவேதாம் தமிழகத்து மக்களின் அரசியல் விழிப்புணர்சி பற்பல வழிகளிலும் அடக்கியொடுக்கப் பட்டுள்ளது.


இங்கிவை பற்பல ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.உதயன் ,விஜயன் முதல் சர்மா,மற்றும் அசீஸ் நந்தி போன்ற ஆய்வாளர்கள் நமக்கிதைச் சுட்டிக்காட்டி இரு பத்தாண்டுகள் கடந்துவிட்டது.இந்த நிலையில் நமது மக்களின் தலைவிதியானது மேற்குலக-இந்தி இந்திய நலன்களுக்காகத் தாரைவார்க்க அமல்சிங் போன்றோர் கருத்தாடுவது நியாயமாகா.நமக்கான அரசியல் அடிப்படைவுரிமையை நமக்கு யாரும் தரமுடியாது.அது நம்மால் நாமே எடுத்துக் கொள்வதாகும்.எந்த அதிகாரம் நம்மிடமிருந்த உரிமையைப் பறித்ததோ அதே அதிகாரத்தூடாகப் பறித்தெடுப்பதுதாம் நமது போராட்டமாகவிருக்கும்.இதில் மேற்குலகானுக்கோ அல்லது அமெரிக்க அடிவருடிகளுக்கோ நாம் மண்டியிடவேண்டுமென எவரும் கோரி நிற்க முடியாது.


நாடிழந்து,ஊரிழந்து-வாழ்விழந்து நோகும் வலியும்,வேதனையும் நமக்குத்தாம் தெரியும்!சும்மா மேற்குலகுக்கு விருந்தினர் தொழிலாளியாக வந்த கணினி விற்பனர்களுக்கு இது புரியாது.தமது தேசங்களாக இருக்கின்ற இன்றைய தேசங்கள் யாவும் நமது மூததையர்களிடமிருந்த பறிக்கப்பட்ட தேசங்கள் என்பதை அமெரிக்கர்களோ அல்லது அவுஸ்ரேலியர்களோ இன்னும் மறந்துவிடவில்லை.அவர்களுக்கே அவ்வளவு உரிமையுண்டென்றால் பல ஆயிரமாண்டாய் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் எப்படித் தமது தாயகதைச் சில பன்னாட்டு முகவர்களுக்காக விட்டுக்கொடுப்பது?

எனது தாயகமானது எனது வாழ்வவோடும்,வரலாற்றோடும் உறிதிப்பட்டது.இது மேற்குலகானுக்கோ அல்லது வட இந்திய குடியேற்ற மக்களுக்கோ முகமன் செய்வதற்காக விட்டுக் கொடுக்க முடியாது.

உலகத்துள் ஆறுகோடித் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தும் அவர்களுக்கானவொரு நாடு உருவாகாத கையாலாகாத அரசியல் வாழ்வு எப்படியுருவானது? இது குறித்துப் புதிய சந்ததி சிந்தித்தே ஆகவேண்டும்!

அரசியல் வாழ்வானது மொழிவாரி-இனவாரியான பின்பு,அதன் பொருளாதார வாழ்வுமட்டும் எப்படி இன்னொரு இனத்தோடு சாத்தியமாக இருக்கிறது? இப்படியொரு வாழ்வு கிட்டுவதற்கு நாம் சோஷலிசச் சுமுதாயத்துள் வாழவில்லை.எனவே இந்த முதலாளியவுலகத்தின் கூற்றுக்குள் நின்றே அவர்கள் வகுத்த சட்டதிட்டப்படி போராடும் போராட்டத்தை யாருக்காக நாம் தாரவார்ப்பது?


குர்தீஸ் மக்களும்,பாலஸ்தீனமும் மற்றும் ஐரிஸ் போராட்டங்களும் நமகுப்பல படிப்பனைகளைத் தந்துள்ளார்கள்- தந்துள்ளது.நாம் யாருக்கும் குடிகளில்லை.நமக்கென்றொரு தேசம் வரலாற்றிலருந்து இருந்தே வருகிறது.இதை மீளக்கையகப்படுத்துவதை ஐரோப்பியர்களுக்காக விட்டுவிட நாமென்ன அவர்களது அடிமைகளா?மக்களின் அழிவும்,வாழ்வின் சிதைவும் நாளந்தம் நிகழுமொரு நாடு தனது உரிமையை இதற்காக இழக்கும் பட்சத்தில் மீளவும் இதே அழிவை இன்னொரு வகையில் உறுதிப்படுத்தும்.


'நான் உலக மக்களுள் ஒருவன்,பூமியின் குழந்தை.எனினும், எனக்கென்றொரு வாழ்வும் வரலாறும் எனது தேசத்துள் இருக்கிறது.அதுவே எனது வேர்!இதிலிருந்துதாம் நான் பொது மனிதனாகிறேன்.இதைவிட்ட மற்றெல்லாம் பொய்மையின் வெவ்வேறு வடிவங்கள்; இன்றைய முதலாளியச் சமுதாயத்துள்.'- ப.வி.ஸ்ரீரங்கன்
02.10.2005

9 comments:

கொழுவி said...

சிறிரங்கன்,
நல்லதொரு பதிவு. சரியான நேரத்தில் வந்த பதிவு.
ஆனால் குறிப்பிட்ட வலைப்பதிவாளரைக் காட்டமாக விமர்சிக்க வேண்டிய தேவையில்லையென்றே சொல்வேன்.

பேச்சுவாரத்தைக்கான இடத்தெரிவு என்பதுகூட உரிமையின் கூறுதான். (அதற்காக எந்தச் சாட்டுக்களை வேண்டுமானாலும் சொல்லலாம்)
இப்போதுதான் இன்னும் இறுக்கமாக எமது தரப்பு நிற்கவேண்டிய தேவையுள்ளதென்று நான் நினைக்கிறேன்.
"நோர்வேயில்கூட பேச முடியாது. ஐரோப்பிய நாடொன்றில்தான் பேச வேண்டும்" என்று கேட்க வேண்டிய காலம்.

ஒரு பொதுக்கட்டமைப்பைக் கூட நிறுவ முடியாது அரசாங்கமும் அதன் பேச்சுக்களும் இருக்கும்லட்சணத்தில் இப்படியே ஒன்றுமில்லாத வருடங்களைக் கடத்துவதுதான் சமாதானத்துக்கும் தீர்வுக்குமான வழியென்று யாராவது நம்பினால் அவர்களை என்ன செய்ய?
அதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

இப்போது கதிர்காமர் கொலையின் காரணகாரியங்கள் இன்னும் வலுவாக வெளிச்சத்துக்கு வருகிறதென்றே தோன்றுகிறது. எல்லாம் நீண்டதொரு திட்டத்தின் அம்சங்களே.

இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், நிச்சயம் எமது உரிமைகளை/பூர்வீக நிலங்களை எம்மைச் சுரண்டியவர்களுக்கு விட்டுக்கொடுக்கவோ, அவர்கள் கூறுவது அனைத்துக்கும் வாலாட்டிக்கொண்டோ இருக்கமுடியாது. அண்மையில் ஒரு சிங்கள (எதிர்ப்பிசை) நண்பரோரு நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியிருந்தார், 'மேற்கத்தைய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை, ஒரு தேயிலைச் செடியைப் போல வைத்திருக்கின்ற விரும்புகின்றன. தேயிலைச் செடியை ஒரு போதும் முழுதாய் வளரவிடாது, அடிக்கடி கத்தரித்து தளிர்களைக் கொய்வதுபோல இந்த நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டியபடியே இருக்கின்றன. தேயிலையைக் கட்டற்று வளரவிட்டால் தமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதில் இந்த நாடுகள் மிகக்கவனமாக இருக்கின்றதென்று. அதுதான் உங்களின் இந்தப் பதிவை வாசிக்கும்போது எனக்கும் தோன்றியது.
....
'முந்நூறாண்டுகள்
உழுதோம்
எங்கள் நிலத்தை அவர்க்கு

இனியும்
உழுவோம்
அவர்கள் நிலத்தே அவர்க்கு'
என்ற திருமாவளவனின் கவிதைதான் நினைவுக்கு வருகின்றது.

Sri Rangan said...

கொழுவி நீங்கள் சொல்வதுமாதிரி அவ்வளவு இலகுவாக இவங்களிடம் கோரிக்கைகள் முன்வைத்து நமது அரசியல் அபிலாசைகளை வென்றுகொள்வதற்கான எந்த "முன் நிபந்தனைiயும்" வெற்றி கொள்ள முடியாது!நமக்கான அரசியலானது நமது மக்களுக்கான முழுச் சுயாதீனமான செயற்பாட்டோடு தங்கியுள்ளது.நமது மக்களின் சுயவெழிச்சியானது அரசியற்றளத்தில் வலுவாக்கப்படவேண்டும்.இதனூடாக மக்களின் ஸ்தாபன வலு புரட்சிகரமான கட்சி அரசியலால் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.நம்மையடிமைப் படுதும் சகல வடிவங்களையும் எதிர்பதற்கான சுய வலுவை மக்களுக்குள் வளர்திட நமது தரப்பு அரசியல் நிச்சியமாகப் புரட்சிகரமாக்கப்படவேண்டும்.இதில் நண்பர்கள் யார்,எதிரிகள் யாரென்று சரியான மதிப்பீடு உருவாகவேண்டும்.அதற்காக நமது மக்களின் ஸ்தாபன வலு அவசியமாகும்.இந்த வலுவானது சுய நம்பிக்கையை போராட்டச் சக்திக்கு வழங்கும்போது,அதுவே போராட்டச் செல் நெறியில் பாரிய மாற்றத்தைத் தரும்.அப்போது இந்தக் காட்டுமிராண்டி ஐரோப்பிய அமெரிக்கத் தந்திரோபாயம் நமது தரப்புக்குத் துச்சமாகும்.அங்கே தேசிய அலகுகளின் தேவையும்-காப்பும் அவசியமாகி,அந்நிய ஆதிக்கம் உடைக்கப்படும்.இப்படி அது உடைபடும்போது நம்மை எந்தக் கொம்பனும் அசைக்க முடியாது.இந்தச் சந்தர்பத்தில் சிங்கள அரச ஜந்திரத்தின்மீது கைவைத்து உடைத்தெறிவது மட்டுமே பாக்கியாகவிருக்கும்.

டி.ஜே.தங்களுக்குக் கூறிய அந்தச் சிகளக் கலைஞரின் கருத்துச் சரியானதுதாம்.நம்மைக் காவுகொள்ளும் மேற்குலக சக்திகளுக்குக் குடைபிடிக்கும் சிங்களத் தரகுமுதலாளியவரசானது சாரம்ஸ்த்திலொரு இனவொடுக்குமுறையரசு.அந்த அரசின் வியூகமானது தமிழ் மக்களைக் கொத்தடிமையாக்கும் மைய அரசியல் தந்திரோபாயத்தை மேற்குலகக் கனவான்களிடமிருந்து பெறுவதற்காக தன்னளவில் மேற்குலகோடு சார்ந்திருக்கிறது.இதனால் சிங்கள-தமிழ் மக்களின் நலன்கள் அழித்தொழிக்கப் படுகிறது.எனினும் சிங்களவரிடமிருக்கும் எதிர்ப்பானது மேற்குலகச் சுரண்டலோடுவுள்ள முரண்பாட்டின் வாயிலாகவெழுகிறது.நமது நிலையானது சிங்களப் பாசிச அரச பயங்கரவாதத்தூடாக நடைமுறைப்படுத்தப்படும் இனவொடுக்குமுறைக்கும்,மேற்குலகச் சுரண்டலோடும் சம்பந்தப்படுவது.எனவே அந்தக் கலைஞரின் உணர்வு வெளியானது தன்னளவில் வேறாகவும்,நமது வேறாகவுமிருக்கும்.அவரைப்போன்ற கலைஞர்கள் ஏகாதிபத்தியத்துக் கெதிராகக் குரல்கொடுக்கும் அதேவேளை தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கும் குரல் கொடுக்கணும்.அப்போதே நேர்மையான கலைஞராக அவர் சிறப்பார்.அவரது கருத்தும் நியாயமுறும்.கொழுவி,டி.ஜே.தங்களிருவருக்கும் எனது நன்றி!

நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

குழலி / Kuzhali said...

//ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்தற்காக அவர்கள் போடும்,கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்புச் செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடமையாக இருக்கமுடியாது.எமது வாழ்வையும்,வளர்ச்சியையும்-எதிர்கால அரசியலை முன்னெடுப்பதையும் நாமே தீர்மானிப்பது நமது ஜீவாதாரவுரிமை.இதையெந்தக் கொம்புவைத்த இனங்களும் எம்மிடமிருந்து பறித்தெடுக்க முடியாது.
//
சரியாக சொன்னீர் சிறீரங்கன்

நன்றி

Sri Rangan said...

நன்றி, குழலி!

தமிழரங்கம் said...

உலகின் கடன் எதை நோக்கி

1990 இல் வட்டி மற்றும் மிள கொடுத்தல் வருடம் 11400 கோடி டொலர் என்ற நிலையைத் தொட்டது. 1989 இல் மூன்றாம் உலக நாடுகளின் மொத்த கடன் 132000 கோடி டொலரகியது. இதில் பாதி வட்டி விகித உயர்வினால் எற்பட்டது. 1983-1989 ஆகிய 7 ஆண்டில் வருடம் 5000 கோடி டாலர் வருடாந்தம் லாபமாகவும் வட்டியுமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு சென்றது. இந்தக் கடன் பின் தங்கி நாட்டுக்குள், மிகவும் பின்தங்கிய புதிய நாடுகளை உற்பத்தியாகியது. 1983 இல் 30 யாக இருந்த மிகப் பின்தங்கிய நாடுகள், 1989 இல் 42 யாக உயர்ந்தது. திணிக்கப்பட்ட கடன் பல நாடுகளின் தலைவிதியையே காலில் போட்டு எறி மிதித்தது. எங்கும் வறுமை கோரப்பிடியாக, இதுவே சமூக போக்காகியது.

1991 இல் வளரும் (மூன்றாம் உலக) நாடுகளின் மொத்தக் கடன் 90000 கோடி டொலராகும்;. இந்தக் கடனை நிர்வாகிக்கவும்;, இதற்கான வட்டியாகவும் அந்த வருடம் வளரும் (மூன்றாம் உலக) நாடுகள் செலுத்திய தொகையோ 11400 கோடி டொலராகும்;. இத 2001 இல் 38000 கோடி டொலராகியுள்ளது. அதேநேரம் 1980 இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 58000 கோடி டொலராகவே இருந்தது. இது 2001 இல் 240000 கோடி (2.4 டிரில்லியன்) டொலராகியது. கடன் பெருகிச் செல்வதையும், கடனில் இருந்து மீள முடியாத வகையில் நாடுகளின் தொத்தடிமைத்தனத்தையுமே இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த கடன் மூலம் கொள்ளையடித்த தொகையோ மிகப்பிரமாண்டமானது. கடனக்கான வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் 1980 முதல் 2001 வரை கொடுத்த மொத்த தொகை 460000 கோடி (4.6 டிரில்லியன்) டொலராகும்;. உண்மையில் 2001 இல் இருந்த கடனைப் போல் அண்ணளவாக இரண்டு மடங்கு தொகையை வட்டியாகவும் மீன் கொடுப்பனவாகவும் 1980 முதல் மூன்றாம் உலக நாடுகள் செலுத்தியுள்ளனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை. மேற்கு மிகப்பெரிய ஒரு தொகையை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கடத்திச் சென்றுள்ளதை இது எடுத்துக் காட்டகின்றது. இந்த தொகையை எங்கிருந்து எப்படி அவர்கள் அறவிட்டனர். மூன்றாம் உலகமக்களிள் உழைப்புத் தான் இப்படி மேற்கு நோக்கிச் சென்றது. முழு இழப்பும் மூன்றாம் உலகமக்களின் வாழ்க்கையில் இன்று பிரதிபலிக்கின்றது. மூன்றாம் உலகநாடுகளின் வறுமைக்கு, மேற்கின் இந்த சூறையாடல் ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மேற்கின் செல்வத்துக்கு மூன்றாம் உலக நாட்டு எழை மக்கள் உழைக்கின்றனர். மூன்றாம் உலகம் மீதான மேற்கின் சூறையாடல் இவைகள் மட்டுமல்ல. இதை பல வழிபாதைகளில் நடக்கின்றன.

உண்மையில் இந்த கடன் என்ன செய்கின்றது. 1980இல் ஒரு டொரரை கடனாக பெற்றவர்கள், அதற்கான வட்டியாக கொடுத்தது 8 டொலர். அதே நேரம் கொடுக்க வேண்டிய முதல் 4 டொலராக மாறியது. இதைத் தான் எல்லோரும் மேற்கின் கருணை சார்ந்த உதவி என்கிறார்கள். முன்றாம் உலக நாடுகளும், அந்த நாட்டு மக்களும் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உழைத்துக் கொடுக்கின்றார்கள் என்பதை இது தெளிவாக எமக்கு எடுத்துரைக்கின்றது. இது முடிவல்ல, உலகமயமாதலில் முடிவற்ற தொடர் கதையும் இதுதான். இது முன்பைவிட கொடூராமாகவே களமிறங்கி நிற்கின்றது.

Thangamani said...

நல்ல பதிவு. நன்றி. அமல சிங் அயர்லாந்தை உதாரணமாக காட்டிருந்தது வியப்பாக இருந்தது.

Sri Rangan said...

உண்மைதாம் தங்கமணி.அமல்சிங்கின் பதிவில் அயர்லாந் உதாரணமானது எடுத்தாளப்பட்டு-ஒப்பீட்டு பொதுமையாகிறது.என்ன செய்ய?அவரது நிலையில் அது சாத்தியமாகிறது!நன்றி தங்கமணி!

Anonymous said...

விபச்சாரத்துக்கு பிரபானிசம் வழங்கிய மரணதண்டனை

பி.இரயாகரன்

29.08.2005


37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இக் கொலை நியாயப்படுத்தப்பட்டது.
இங்கு அடிப்படையான கேள்வியே, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை தான் தீர்வா! இதைத் தான் புலித் தேசிய பிரபானிசம் வழிகாட்டுகின்றதா? ஓரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படையான சமூக காரணங்களை கேள்விக்கு உட்படுத்த மறுக்கும் மரணதண்டனைகளே வக்கிரமானவை.


விபச்சாரம் என்பது பிரபானிசம் கருதுவது போல் பெண்ணின் தெரிவல்ல. மாறாக பிரபானிசம் பாதுகாக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பினால் திணிக்கப்பட்டவை தான். இந்த சமூக அமைப்பில் ஒரு பெண் சுயாதீனமாக வாழமுடியாத வறுமையும், சமூக நெருக்கடியும் ஒரு பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்திக்கும் சமூக காரணங்களில் முக்கியமானவை. இதைத் தீர்க்க வக்கற்ற மாமனிதர்கள், மரணதண்டனையை வழங்குவதன் மூலம் இதை ஒழித்துக்கட்டலாம் என்று பிரபானிசம் பீற்றுகின்றனர். தாயை கொன்றவர்கள், அந்த தாயின் நாலு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்வதற்கு என்ன வழியை பிரபானிசியம் வைத்துள்ளது. அவர்கள் குழந்தை பாலியல் தொழிலுக்கு போவதைத் தவிர வேறு மார்க்கம் எதையும் தேசியம் வழிகாட்டவில்லை.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...