Saturday, January 16, 2016

தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும்...

விழிப்போடு இருப்போம்!
தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும் அரசியல் வியூகம்!-சிறு குறிப்பு.
இன்று,தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு மட்டுமல்ல உலகம் பூராகவும் வாழும் -விடுதலைபெறத் துடிக்கும் -இனங்களைப் பிளந்தொடுக்குவதில் நிலவுகின்ற அரசுரித்துடைய இனங்கள் பல்வேறு வியூகங்களினது "தெரிவை"க்கொண்டு, வழிகளைக் கண்டடைகின்றனர்.

முக்கியமாக,கொலனித்துவக் காலத்துள் இலங்கையில் சைவக் கோவில்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டாட்டங்களைத் தடைசெய்தனர் ,கொலனித்துவ வாதிகள்.இதற்குள், இயங்கும் அரசியல் மக்களது அடையாளங்களை அழித்து, அவர்களது பண்பாட்டை இல்லாதாக்குவது.இதுவொரு இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தித் தமது ஆளுமைக்குள் கொணரும் ஆதிக்கத்தின் இருப்புக்கான தெரிவு.

இதையுரைத்துப்பார்க்க பல்வேறு ஆய்வுகள் தேவையில்லை! வெள்ளையர்கள் குடியேறிய அமெரிக்க - அவுஸ்ரேலியக் கண்டங்களில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள்மீது நடாத்தப்பட்ட கொடுமைகள் போதுமானது.தற்போது , ஈராக் ;இலிபியா ;சிரியா ;அவ்கானிஸ்த்தான் போன்ற தேசங்களில் நடந்த அடையாள அழிப்புகள் ;அதையதை வைத்தே ஒரு பகுதி மக்கள்மீது இன்னொரு பகுதியை எதிரியாக்குவது, பின்பு, இந்த அடையாளமானது "உங்களை ஒடுக்கும் " கருவியாகியதெனப் பிரச்சாரஞ் செய்து ,கருத்தியல் மட்டத்தில் அதையொரு அரசியல் ஆயுதமாக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இதன் முன்னோடிகள்.



கடந்த இருபதாண்டுகளாகபப் புலம் பெயர் மாற்றுக் குழுக்களுக்குள் நுழைந்த இந்த வியூகமானது கணிசமாக இலங்கைத் தமிழினத்தின்மீது ஏவப்பட்டும் ;பரிசீலிக்கப்பட்டும் பல பிளவுகளை த் திட்டமிட்டுருவாக்கினர் ஆதிக்க இனங்கள்.

அந்த ஆதிக்கச் சக்திகள் தொடர்ந்து ஈழமக்களது அரசியல் வாழ்வுக்குள் அமுக்கக் குழுக்களைத் தகவமைத்தனர்.அத்தகைய அமுக்கக் குழுக்களது இருப்புக்கு ,இத்தகைய அடையாள எதிர்ப்புக் கூறுகள் அவசியமாவிருக்கிறது.
பொங்கல் என்ற அடையாளத்தை ஒரு ஆதிக்கச் சாதிக் குரியதாக்குவது பின்பு ,அதையொரு ஒடுக்குமுறைக் கருவியாக அரசியல் மயப்படுத்துவது.இதைக் கொண்டு ஒரு ஆதிக்கத் தகர்ப்புப் போராட்டமாக மக்களைப் பிளப்பது என்று , பல்வேறுபட்ட வியூகங்கள் இதற்குள் உண்டு.

தமிழர்கள் பொதுவாகக் கொண்டாடும் ஒரு நிகழ்வானது கூட்டு மனோ பாவத்தை உருவாக்கும்.கூட்டு மனநிலை மக்களை ஒரு கருத்தின்பால் அணிகொள்ளச் செய்யும்.எனவே ,அத்தகைய பொது நிகழ்வு இருக்கப்படாது. அதைவைத்து , ஒவ்வொரு பிரதேசத்தையும் ;சாதிகளையும் எதிர் நிலைக்குத் தள்ளும்போது அங்கு முரண்பாடுகள் பிளவைக் கோரும்.கலகத்தை உண்டு பண்ணும். இப்போது பாருங்கள்: வடக்கையும் ,கிழக்கையும் பிளப்பதற்கு "யாழ்ப்பாண மேலாதிக்கம் "என்ற அரசியற் கருத்தாக்கம் எப்படியொரு பகுதி மக்களைப் பிளந்ததென்று.

அன்று, சைவவேளாள ஆறுமுக நாவலரை வைத்துக் கொலனித்துவம் மக்களைப் பிளந்தபோது, அதன் எதிர்நிலை அதற்கெதிராகக் கத்தோலிக்கத்தின்வழி தகவமைக்கப்பட்டது.

இப்போது, தைப்பொங்கலை மேல்சாதியின் கொண்டாட்டமாக்குவது;சைவத்தின் கொண்டாட்டமாக்கிக் குறுக்குவது.பின்பு, மக்களைப் பிளப்பது.ஒரு பகுதி மக்களுக்கு அதை எதிராக ஆயுதமாக்குவது ;பொங்கல் மேலாதிகத்தினரது பண்பாட்டு ஒடுக்குமுறையென வகுப்பெடுத்து, மக்களை அணிதிரள விடாது குழப்பும்போது மட்டும்தாம் இந்த அமுக்கக் குழுக்கள் உயிர் வாழ முடியும்.அதுவொரு பெரும் அரசியல் வியூகம்.

இதைத் தகவமைப்பவர்கள் தமிழ்பேசும் மக்களது ஒருமைப்பாட்டைக் குலைத்து ஒடுக்க முனையும் ஆதிகச் சக்திகளே.அவர்களுக்குடந்தையாகப் புலத்தில் பல குழுக்கள் இருப்பதை நாம் அறிய வேண்டும்.தலித்துவக் கோரிக்கை முதல் யாழ்ப்பாண மேலாதிக்கவரை நகர்த்தப்பட்ட அரசியலது நகர்வு தற்போது பண்பாட்டு அடையாளங்கள்மீது தாவுகிறது.

இது ஆப்பத்தான தருணங்களை நமக்குள் கொட்டப் போகிறது.மதரீதியான பிளவைக் கூர்மைப்படுத்திப் பிளக்கும் வியூகம் இதுள் உண்டு.இதைக் கூர்மைப்படுத்துபவர்கள் மிக ஆபத்தான பேர்வழிகள் ; அந்நியச் சக்திகளது அடியாட் கூட்டம்!

ப.வி.ஶ்ரீரங்கன்

==========================================
 
P/S : 
தைப் பொங்கல் 'தமிழர்களின் விழா' என்பது சரிதானா என யோசிக்கிறேன். இந்தப் பண்டிகையை, இந்து மதத்தினர் தவிர தமிழ் பேசும் ஏனைய மதத்தவர்களாகிய கிறித்துவர்களோ இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லையே.

நிலம், தெருவில் நடப்பதற்கான உரிமை, கோயில்களில் நுழைவுரிமை, மேலாடை அணியும் உரிமை இல்லாதிருந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வரலாற்றுரீதியாகவே இந்தப் பண்டிகைக்கு வெளியேதானே இருந்திருக்க முடியும் எனில் அது வெறும் சாதி இந்துக்களின் பண்டிகையாக மட்டும்தானே இருந்திருக்கிறது.

இதைத் தமிழர்களின் மாதமான தை முதல் நாளில் கொண்டாடுகிறோம் என்பதே சுத்த ஏமாற்றல்லவா. இந்த மாதக் கணிப்பு இந்துக் காலக் கணிப்பேயொழிய தமிழர்களின் தனித்துவமான காலக் கணிப்பில்லையே. சூரியன் பன்னிரு இராசிகளிற்குள் பிரவேசிக்கும் நாட்களை வைத்துத்தான் இந்தக் காலக் கணிப்பு நிகழ்கிறது. சூரியன் மகர இராசிக்குள் நுழையும் முதல் நாளே தை மாதத்தின் முதல் நாள் எனப்படுகிறது. மலையாள மாதங்களில் இந்த மாதத்திற்கு 'மகரம்' என்றே பெயர். இந்த நாளில்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது இந்து காலக்கணிப்பு வழக்கமாகிறதேயொழிய தமிழர் வாழ்வியலிற்கும் இந்த நாளிற்கும் என்ன தொடர்பிருக்கிறது?

தைப் பொங்கல் என்றொரு விழா பண்டைய தமிழர்களின் மரபில் இருந்ததாகவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விவசாயத்திற்கு மழை அருளும் இந்திரனைச் சிறப்பிக்க 'இந்திர விழா' நடத்தப்பட்டதாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்கின்றன.
அவ்வாறெனில் இந்திர விழாவின் எச்சம்தானா பொங்கல் விழா? நிலமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனக் கடவுளை முன்னிறுத்திய விழாவை இன்றைக்கும் செல்லுபடியாகக்கூடிய தமிழர்களின் விழாவாகப் பிரகடனப்படுத்துவது வரலாற்றுரீதியாகச் சரியா?

மதப் பண்டிகைகள் இப்போது சிறப்பு வணிக நுகர்வுக்கானவையாகவும் குடும்பத்துடனும் சுற்றத்துடனுமான கேளிக்கையாகவும் மாறியிருப்பதையிட்டு எனக்கொன்றும் புகாரில்லை. ஆனால் ஓர் இந்துப் பண்டிகையை ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையாகத் திணிக்க முற்படும் செயலை தகுந்த விளக்கம் கிடைக்கும்வரை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

 https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10208294233254986?pnref=story

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...