Monday, January 28, 2008

மனிதம் குறித்துப் பேசுவதற்கு...

மனிதர்கள்: மனிதம் குறித்து...


இன்று, ஆய்வுலகம் புதியதொரு கூட்டுக்குத் தயாராகிறது; திபெத்தின் விடுதலைகோரும் தலாய் லாமாவும் அவுஸ்திரியாவின் பௌதிக விஞ்ஞானி அன்ரன் சைலிங்கரும் புதியவகைச் சந்திப்பைச் செய்கிறார்கள். கூடவே, அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஞ்ஞானியான பௌதிகப் பேராசிரியர் ஆர்த்தூர் சாய்யோன்க் மற்றும் பலரும் "இன்ஸ்புறுக்" பல்கலைக் கழகத்தில் சந்திக்கிறார்கள்.


உலகத்தின் தோற்றுவாய் குறித்து மீண்டும் தேடுகிறார்கள்: "மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்" குறித்து வெகுவாக அங்கீகரிக்க மேற்குலகம் தயாராவது போல் பாசாங்கு செய்கிறது இன்னொரு புறம் 60% விஞ்ஞானிகள் உலகத்தினதும், அண்ட பிரபஞ்சத்தினதும் தோற்றம், வளர்ச்சி, அழிவு, மீட்சி யாவுக்கும் மூலமாக இறைவன் உள்ளதாக இந்த நிமிஷம்வரை ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.


இந்த இடருக்குள் மீண்டும் மனித இருத்தல் குறித்தவொரு தேடல் மிகவும் தேவையாகவும் - வலுவற்றதாகவும் பொருள் கொள்ளத்தக்கவகையில்... புதியவுலகக் கட்டமைவில் புதியவகைத் தேவைகள் பொலிந்துகொள்ளும்போது, ‘புதிய மாதிரிக்கான’ மனிதம் பிறப்பெய்யப்போகும் விசும்புநிலையில்... நாம் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இதே பூமியில் ஏதோவொரு மூலையில் கிடந்து மனித இருத்தலுக்காக சதா போராடியபடி என்றபோதும் எமக்குள்ளேயே ஒரு புதியவுலக ஒழுங்கு மிக மங்கலாக - சிறிய கண்ணியாக பிரதிபலிக்கின்றது, இதுவே சபாலிங்கத்தைப் போன்றவர்களைக் காவு கொள்ளும் ஒரு நிகழ்வுப் போக்காக தன்னை உறுதிப்படுத்திச் செல்கிறது. இந்தவகை மாதிரியான சமூக நடவடிக்கை புதியவகைப் புரிதலுக்கு நம்மை உந்தித் தள்ளியபடி.


இதுநாள்வரையான மனிதம் குறித்த கட்டமைவுகள் இனியொரு வேளை செல்லாக்காசாகும் நிலையை புதிய கூட்டுகள் உருவாக்கிவிட முடியும். அப்போது புரியும்படியுள்ள எந்த மனித விழுமியம் எமக்கான மனிதவரையறையைத் தக்கவைக்கப் போராடும்?

மனிதம் குறித்துப் பேசுவதற்கு மனித இருத்தலின் பொருளே தீர்மானிக்கும். ஆனால், புதிய விஞ்ஞான பௌதிக வடிவங்கள், கட்டமைவுகள், தரவுகள் யாவும் மனிதஇருத்தலுக்குப் பொருளேயில்லையென்பதும் - சூனியத்தில் பொருள் கொள்ள என்னவொரு தேவையுள்ளதென்று கேட்கிறது!

மனிதமூளையிலுள்ள 100பில்லியன் நரம்பு மண்டலத்தையும், அதன் செயற்பாட்டையும்: "நம் காலத்தின் "super-super Computer" என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய பௌதிக விஞ்ஞானம், புதியவொரு பொருத்தப்பாட்டுக்காக பௌத்தத்தை அரவணைக்கின்றது. இதற்கு தலாய் லாமாக்கள் ஒத்தூதுவார்கள். மனித இருத்தலே வெறும் பொருளற்றதென்று கூறிவிட முடிவு கட்டிவிடும் நிலைக்கு இன்று விஞ்ஞானவுலகு முன்னறிவுறுத்திக் கொள்கிறது.

‘மேட்ரோ பிசிக்சும்’, ‘குவான்ரம் பிசிக்சும்’ நம்மையெல்லாம் தோற்றங்களின் பிம்பம் என்ற நிலைக்கும், அதற்குக் கீழும் தள்ளிவிடும் சூரத்தனத்தில் மூலதனத்தின் கெட்டிப்பட்ட குவிப்பு நோக்குக்கு முக்காடிட்டபடி புதிய புதிய ஆயுதக்கண்டுபிடிப்புகளும், அதற்கப்பாலும் சென்றபடி...

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது ஈராக்கின் தலைநகர்மீது பல்லாயிரம் கொடுமையான குண்டுகள் விழுந்து வெடிக்கிறது. நாகரிகவுலகத்தின் மனிதாபிமானம், ஈராக்கை வேட்டையாடிக்கொள்ளும் போக்குக்கு : மனிதாபிமானம், மனிதஇருத்தலைக் காப்பதற்கு என்ற விளக்கம் வேறு...

இது தாம் நாம் வாழும் உலகம்.

இந்த உலகத்தின் தேவைக்கேற்ப மனிதஇருத்தல் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வடிவமாக விரிவுறும்போதும், நாம் என்ன பொருள் கொள்கிறோம்? மேற்குலகின் பம்மாத்துக்கு ஏற்றவாறு ஊதுகுழல்களாக நம்மில் பலர் செயற்படும்போது நமக்கான உண்மைக் குரலாக - நம் இருத்தலையும், அதன் விழுமியத்தையும் தக்கவைத்துக் கொள்ளத்தக்க வகையாக எந்தப் பெரிய நம்பிக்கையுமில்லை.

வளர்ச்சியுறும் மனித சமூகம், வளர்ச்சிக்குரிய உச்சவடிவமாக ஒரு பகுதியை தம் பொருட்டு ஏற்பதும், மறு பகுதியைச் சிதைப்பதும் அதிபிரசித்தி பெற்ற ஈனத்தனம். தேசியவாதம், கலாச்சாரக்காப்பு, மொழிக்காப்பு, தொன்மை புனிதங்கள் காப்பு என்று நாளாந்தம் வரும் ஓலங்களுக்கு என்ன அர்த்தம்? மதம், அரசியல், சமூக நிறுவனங்கள் இத்யாதி நாசகாரி வடிவங்கள் யாவும் மனிதத்தை எவ்வகையில் பிரதிபலிக்கின்றன?

இவைக்கும், இன்றைய எமக்கும் என்ன வகையுறவு? இதற்குள் விடை தேடியலையும் ஒருவர் எந்த வகைப் புரிதலோடு மனிதம் குறித்துப் பேசுகிறார்?

மேலுள்ள கேள்விகளுக்கு விடையுறுத்து மனிதம் குறித்துப் பேசுதல் சாத்தியமாகும்போது மனிதம் பற்றிய வேட்கையை ஒரு அற்ப விஷயமாகக் கருதமுடியாது. நாம் நமது பசிக்குத் தீனியிடுவது மாதிரியேதாம் நம் மனிதம் குறித்த நோக்கும் முக்கியம் பெறும்.

தேசிய எல்லைகள் உடைகின்றன. மனிதம் வேறுமாதிரியாக வடிவெடுக்கிறது.

மூலதனம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறது. கூடவே ஆட்லரிகள், ரொக்கட்டுகள் மனிதம் பேசுகின்றன. அதையும் நாம் நம்பிக் கொள்ளும்படி வீட்டுக்குள்ளேயே வந்து பிரசங்கங்கள் தொடர்ந்தபடி.

ஒருநேர கஞ்சிக்கு வழியின்றி குண்டுகளின் கோர நர்த்தனத்துக்குள் வாழுகின்ற நம் சனங்களின் (முழு மொத்தவுலக மக்களும்) நிலையில் மனிதம் எப்படி நோக்கப்படுகிறது?

அடக்கியொடுக்கின்றவனின் தொடர்ச்சி என்ன? அவன் பேசும் மனிதம் - மனித இருத்தல்;தாம் என்ன? அவன் ஓங்கி சத்தியம் செய்கிறான் போப் வடிவில் வத்திக்கானில் - சங்கராச்சாரி வடிவில் இந்தியாவில், தலாய் லாமாவாய் திபெத்தில்.

இந்த நாசமாய்ப்போன இடருக்குள் இருந்து ஒரு அச்சொட்டான புரிதலுக்காகவாவது சற்று முயற்சித்துப் பார்ப்போம் மனிதம் என்பதன் நோக்கம் என்னவென்று:

நான் யார்?

எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன ஒட்டு?

என் இருத்தலுக்கான காரணம் யாது?

மீண்டும் கேட்போம்.

நான் யார்?

இதென்ன கேள்வி!

அன்றைய யோகிகளிலிருந்து நேற்றைய சோக்கிரட்டீஸ் வரையும், இன்றைய அன்ரன் செலிங்கர் தொடர கேட்பதுதானே இந்தக் கேள்வி?

இவர்களை விடுவோம்.

இந்த மகாமேதைகள் உலகப் பெரும் உண்மைக்காக அப்படிக் கேட்கிறார்கள். நாம் ரொம்பக் கீழான ஜீவன்கள். நமக்கு பசிக்கு உண்பதற்கும், உடுக்கப் பிடவைக்கும், தூங்க ஒரு கொட்டிலுக்குமானதே என் கேள்வி!

நான் இந்தப் ப+மியில் ஒரு உயிர். என் பௌதிக இருத்தல் வெறும் சதையும் இரத்தமுமில்லை. எனக்கு உணர்வுண்டு. உறவாட மூளையுண்டு. இந்தவுலகத்தின் ஒரு மூலையில் கற்சுவரின் காகமிட்ட எச்சத்தில் வளர்ந்தவொரு கொடியாக இருக்கட்டுமே. அதன் இருத்தலை மறுக்க முடியுமா?

அது ஒரு செடி. அவ் வண்ணமே நானும் மனிதன். என் உயிர் வாழ்தலை மறுக்க எந்த எஜமானுக்கு உரிமையுண்டு? எஜமானாகிவிட்ட மனிதனின் இருப்புத்தாம் என்ன?
இந்த உலகத்தின் உற்பத்தியில் பங்கேற்கும் மகாப் பெரிய எதிர்கால பொறுப்பேற்பாளி அவனாம். இந்த அவனது பாத்திரமே என் இருப்பைத் தீர்மானிக்க முனைந்து கொள்வதால் நான் - அதுவாக மாறுகிற போக்கு நிலவுகிறது. இந்தப் போக்கு தன்னிலை இழப்புக்கு என்னை வலுவாக உந்தித் தள்ளும்படி அவன் பார்த்துக் கொள்கிறான். அவனிடமிருக்கும் யந்திரம் அதைச் செய்தபடி ஒவ்வொரு நாள் காலையும் என்னை உள்வாங்கி, மாலையில் கசக்கிக் கக்கிவிட்டபடி மெல்ல நகர்த்தும் பொழுதுகளை.

இப்போது நான் - அதுவாகியபடி!

இனி எனக்கும் இந்தவுலகிற்குமான தொடர்பு?

தொடர்பும் மண்ணாங்கட்டியும்! கோபம் வேண்டாம்.

இறைச்சியும் இரத்தமுமாய் இருப்பதால் எனக்கும் இந்த பௌதிக உலகுக்கும் ஒரு பண்பான இயங்குநிலைத் தொடர்புண்டு. கனவு வேண்டாம்.

காலையில் எழு. ஓடி விடு வேலைவேண்டும் யந்திரத்திடம். மாலையில் ஓடு கொட்டிலுக்கு வயிற்றை நிரப்பு. சோறு உண்டு - பியர் உண்டு, சிகரட் உண்டு ஸ்ரீ தஞ்சம். முடிந்தால் கண்விழி, மீண்டும் ஓடு...!

பின்பு உனக்கும், இந்த உலகுக்குமென்ன தொடர்பு?

"பேசாமல் வேலையைப் பார். உன்னை வேலையில் வைத்திருப்பதே, என் மனிதாபிமானத்தால் தாம்!" அவன் நெற்றியில் அடித்துக் கூறுவான்.

நாசமாய்ப்போன மனிதம்.

இதென்ன கடைச்சரக்கே கிலோக் கணக்கில் பேச?

நான் நானாகிவிடுவதும், அவ்வண்ணமே அவன் அவனாகி விடுவதும் மகாப்பெரிய மனிதம் பேசுகிறது!

இடையில் இருக்கு விசம்.

எனக்கும் அவனுக்கும் குறுக்கே இருக்கு விசம்.

யந்திரமாய் சொத்தாய் ஏதோவொன்றாய்... அது தீர்மானித்துக் கொள்கிறது என்னை, அவனை.

அது என் வசமானால் அவனையும், அது அவன் வசமிருக்கும்போது என்னையும் ஊனப்படுத்தும்.

அது அவன் வசமிருக்கக் கூடிய மாதிரியே ஒழுங்குகள் உள்ளன. நான் தலையால் கிடங்கு கிண்டினாலும் அது என்னிடம் வராது.

அப்போது: ஒழுங்குகள் மீது என் கண் வருவது இயல்பாகிறது. அது என்ன பெரிய ஒழுங்கு?

காலையில் எழு. வேலைக்குப் போ. களவு கொள்ளாதே. தண்டனை பெறுவாய். குடும்பம் குலையும் போராடாதே. சட்டமும் நீதியும் உனக்கானது. ஏற்றதன்படி நட.

போதுமே!

மனிதம் புரிந்து போச்சுதே!!

என்ன புரிந்தது? மனிதம்?

நல்லது.

மனிதம் புரிந்துகொள்ளத் தக்கது தாம். அவரவர் நலனுக்கேற்றவாறு. துப்பாக்கி காவி நம் முன்னுக்கு நிற்பவனும் மனிதம் பேசுகிறான். தான் புரியும் கடமை எதிர்காலச் சந்ததி நிம்மதியாக வாழ. ‘பயங்கரவாதிகளிடமிருந்து’ நாட்டையும் மக்களையும் காப்பதற்காகவேதாம் தான் எதிரியைக் கொல்வதாகவும், தான் மரிப்பதாகவும் அவன்/ள் நம்புகிறான்/ள்.

"ஈராக்கில் குண்டு போடும் அமெரிக்கஃபிரித்தானிய யந்திர மனிதன் தன் உயிரைத் துச்சமாக மதித்து ‘நாசகார சர்வாதிகாரி’சதாமையும், அவரது ‘நாசகார ஆயுதத்தையும்’ இல்லாது ஒழிக்கப் போராடி என் எதிர்காலக் குழந்தைகளுக்காக தம் கடமையைச் செய்கிறார்கள்" என்று ஜெர்மனிய பில்ட் பேப்பர் (Bild Zeitung) வாசகி எழுதுகிறாள்.


இப்போது அவளுக்கும் புரிந்துவிட்டது மனிதம்!, இராணுவ மனிதர்களுக்கும் புரிந்துவிட்டது, நமக்கும் புரிந்துவிட்டது, முதலீட்டாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரிந்துவிட்டது மனிதம்.

ஆனால் எந்தத் தரப்பு மனிதம் நம் இருத்தலுக்கு உறுதியாகவுள்ளது? பொதுசன ஊடகங்களாக இருப்பதெல்லாம் ஆள்பவர்களது சொத்தாக இருக்கும்போது - பில்லியன் கணக்காய் சொத்து வைத்துள்ள யுஒநட ளுpசiபெநச குடும்பத்தின் Bild பேப்பர் வாசகிக்கு அவர்களின் மனிதம் ஏற்புடையதாக இருப்பதில் அது அவள் தவறில்லை. கூலிக்கு மாரடிக்கும் உழைப்பாளி இராணுவ சிப்பாய்களுக்கும் இது பொருந்தும். ஆனால் நாம் புரியும் மனிதம்: அது நம் இருத்தலோடு சம்பந்தப்பட்டதா? ஆம்!


இப்போது கேட்போம்: நாமென்றால் யார்?

உழைப்பில் பங்கேற்கும் தொழிலாளர்கள்?

ஆமென்றால் நம் கண்முன் விரியும் மனிதம் வர்க்கம் சார்ந்தது. அஃது ஒடுக்குபவனுக்கும்-ஒடுக்கப்படுபவனுக்கும் வித்தியாசம் காணும். அஃது ஒடுக்குமுறையாளனுக்குத் துணை போகும் அனைத்துத் தரப்புமீதும் மனிதத்தைக் காட்டப்போவதில்லை.

இத்தகைய மனிதம் குறித்த புரிதல் இதுநாள் வரை சரியாக இருந்தது!, இனியும் சரியானதா?

அடித்துக் கூறுவோம் இல்லையென்று!


அப்போ புதிய புரிதல் வேண்டும்.


மனிதம் குறித்த புரிதல் மிகமிகப் பெரிய ஆழ்ந்த பார்வையில் வைத்துக் கட்டுடைப்புச் செய்யவேண்டும். அப்போதுதாம் உண்மையான மனிதம் - மனித இருத்தலை உறுதி செய்யப்படும், அதைத் தீர்மானிக்கும் விஷயமாக பொருளியலே அடித்தளமாகவும் இருக்கும். பூமியில் கூட்டுழைப்பு உருவாக்கம் கொள்ளும்போது மனிதம் பூத்துக் குலுங்குமென்று பசப்ப முடியாது!, அப்படிப் பசப்பிய காலத்தை நாம் மறக்கவும் முடியவில்லை.

அப்படியெனில்? கிட்லரை, முசோலினியை, நவீன கிட்லர் கிளின்டனை மட்டுமல்ல... ஸ்டாலினையும் விமர்சிக்கக் கற்றுக் கொள்வேன். மாவோவை, லெனினை - கியூபாவின் காஸ்ரோவை. ஏன் சே குவாராவைக் கூட விமர்சித்து முன்னேறுவேன், கூடவே பிரபாகரனையும் கட்டுடைப்புச் செய்யலாம், நாளை உயிர்...

மனிதம் என்பதே வாழ்முறையென்று கற்றுக்கொள்ள மனிதாபிமானம் வேண்டும். அப்போதுதாம் தோழர்களுக்கும், தோழர்களுக்கும் சரியான தோழமை காணக் கிடைக்கும். நம்மிடம் நிறையத் துப்பாக்கிகள் மனசில் உண்டு. அவை இந்த அமைப்பிலிருந்து முளைத்து விருட்சமாகியவைதாம். நம் மனசிலிருக்கும் யந்திரம் காலப் போக்கில் கைக்கு மாறிவிடும்போது, அது நண்பனையும் - எதிரியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிற துர்ப்பாக்கிய நிலைக்கு நாமே காரணமாகியுமுள்ளோம்.


எமக்குள் செரித்துக் கொண்ட இதுநாள் வரையான புரிதல்கள் கெட்டிப்பட்ட தத்துவார்த்தப் போக்குடையதாகவுமிருக்கலாம். எனினும், சக மனிதனின் கருத்தை அங்கீகரிக்கமுடியாத வெறிக்கு எந்த வகையில் ஆரோக்கியமான வழி பிறக்கும்?

தனக்குப் பிடிக்காதபடி கருத்துக்கூறிவிட்டால் அவனைக் கழுமரத்தில் ஏற்றிவிடும் பாரிய பாரம்பரியம் நமது. மனிதம் என்பதற்கான வரையறை அளவுகோல் துப்பாக்கியை புகழ்ந்து கொள்ளவும், செத்து மடிபவர்களை எண்ணிக் கணக்குப் பார்ப்பதிலும் போய் முடிந்துள்ளது.

நியாயமாகக் கூறிவிடுவதற்கு நாம் நிற்கும் ஆற்றிலுள்ள ‘மண் குதிர்’ எவ்வளவு நேரத்திற்குத் தாக்குப் பிடிக்குமென்பதில்தான் தங்கியுள்ளது.

"We are the world
We are the child" - என்றபடி உலகை ஏப்பமிடும் உலகமயமாகும் மூலதனப் பாய்ச்சல் ஏதோவொரு மூலையில் குப்பை கொட்டுபவனிடம் கருணையா காட்டப்போகுது?

இந்த மனிதம் குறித்த பேச்சுக்கள் ஒடுக்குமுறைக்குள்ளான நமக்கு முக்கியம் பெறுகின்றது போன்று மேற்குலகில் வாழும் ஐரோப்பிய தொழிலாளி சிந்திக்கின்றானா?

"எளிய துருக்கிப் பண்டியே, உனக்கு இருநாட்டுப் பிரஜா உரிமையா வேணும், ஓடு உன்ர நாட்டுக்கு"

"ஊத்தை வெளிநாட்டவனால் எங்கள் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்"

சதா ஏசிக்கொள்ளும் தொழிலாளிகளாக மேற்குலகின் பாட்டாளிகள்.

"உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்"- ஒரு நூறாண்டாகப் போகும் மகாப்பெரிய மனிதம் குறித்த வார்த்தை.

இன்றைய நிலை? விஞ்ஞானம் சிலவற்றை சீரிய முறையில் சிதைத்துள்ளது. அதில் ஒன்று மனிதர்களாக இருத்தல். மனிதம்! நமது அரசியலும், விஞ்ஞான விளக்கங்களும் இன்னும் ஆழமாக மனிதம் குறித்து தேடுதலுக்குத் தயாராகும்போது: யாழ்குடா நாட்டிலிருந்து வெருட்டியடிக்கப்பட்ட இஸ்லாம் மக்களின் அவலம் குறித்து எப்படி யோசிக்கிறது?

எனக்குரிய இருத்தலை நான் இழக்கமுடியாது! அது போன்றதே மற்றவர்களதும். ஆனால், அப்படி என்னால் யோசிக்கமுடியாதபடி எனக்குள் வந்திருக்கும் தேசியம், கலாச்சாரப் புளுகு என்னைக் கட்டிப் போட நான் இடம் கொடுத்துள்ளேன்.

ஏன்?

இதற்கு நான் விடையிறுப்பதில் தாம் நம் மனிதம் குறித்த பொதுமையான இயல்பு புரியும், 21ம் நூற்றாண்டினது ஆரம்பத்தில் நம் ஸ்தானத்தை இதுவே குறித்துரைக்கும்!!! அதுவரையும் நாம் கூறும் மனிதம், கடைப்பிடிக்கும் பண்பு, யாவும் இரட்டைத் தலையுடைய விசப்பாம்பு.

இனி எங்கள் மனதிற்குள் சிலவற்றைக் கேட்டுக் கொள்வோம்:

முக்கால்,

தோட்டக்காட்டான்,

மோட்டுச் சிங்களவன்,

பறையன்-நளவன்...

பேச்சு வழக்கில் கோபத்தைக் காட்டக்கூட முறைக்கு முப்பது தடவை ‘பறையன்-நளவன்’ என்கிறேன்.

இப்போது, என் மனோ பாவம் குறித்து நான் கேள்வி கேட்க வேண்டும், புரியும்படி என்னை நான் புரிந்து கொண்டால், நான் பேசும் மனிதமும் நேர்த்தியாகவும், நேர்மையானதாகவும் இருக்கும். இல்லையேல், கிளின்டன்-போப், கோபி அனான் - சங்கராச்சாரிகள் பேசும் மனிதத்திற்கும், என் மனிதம் குறித்த நேசிப்புக்கும் வித்தியாசம் இருக்குமா?

காலவோட்டத்தில் எம் மனிதம் குறித்த பொதுமையான பார்வை ஒரு கட்டத்தில் புரட்சிக்கு எதிராகக்கூடக் கொடி பிடிக்கும். அஃது முழு மொத்த மனித நேசிப்பின் போக்கில் நிகழும். அப்போது உடமை வர்க்கத்திற்கு அதுவே காவலரண்களாயும் இருக்கும். இந்தச்சிக்கலை ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது மகாப்பெரிய மனிதநேயமும் எதிர்ப்புரட்சிக்குரிய குணாம்சமாகப் போகும்.

பின்பு மீளவும் உண்மை மனிதம் உதிப்பதற்கு வாய்ப்பே உருவாகிவிட முடியாது. எனவே, ‘காலம்-இடம்-சூழ்நிலை’ மனிதத்தின் போக்கில் பாரிய தாக்கஞ் செய்யும். அப்போது வர்க்கம் சார்வதும்- வர்க்கமற்ற சூழலை உருவாக்குதலும் அதனூடே மனிதத்தைக் கட்டியெழுப்புவதும் - எதிரியையும் அதே தளத்தில் நேசிப்பதும், வாழும் உரிமையை அங்கீகரிப்பதும் உண்மை மனிதாபிமானமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
04.1999.

தோற்றுத்தான் போவோமா...உயிர் நிழல் e-book லிருந்து...

Sunday, January 27, 2008

இந்தியாவின் இந்திராகாந்தியின் அவசரகாலச்...

ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்.


"Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund
seiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;
er wurde verhaftet."-
Konkret vom 10.2007.



அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.

அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.


இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது,இலங்கையில், ஓரளவேனும் மறுபக்கக் கட்டுரையாளரே தனது குரலை அராஜகத்துக்கு எதிராகச் செய்துவருபவர்.அவர் தனது பங்களிப்பை மக்களின் நலனுக்குக் குறைந்தபட்சமாவது இப்போது வழங்குவது வரவேற்கப்படவேண்டும்.அந்த வகையில் நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.இலங்கையில் குறைந்தபட்சமாவது மறுபக்கம் கட்டுரையாளர் உதாரணங்கொள்ளத் தக்கவர்.அவரது மறுபக்கம் பேசும் ஊடக நிலையும் மற்றும் இலங்கை அரசின் வன் கொடுமை ஒடுக்குமுறைகளையும் நாம் இங்ஙனம் புரிவோம்.


இலங்கை மக்கள் பலராலும் அறியப்பட்டவொரு பேராசிரியர் தினக்குரல் தினசரியில் தொடர்ந்து மறுபக்கம் எனும் தலைப்பில் அரசியல் மற்றும் சமூகவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார்.அவரது கட்டுரைகள் பெரும்பாலும் பிரச்சனைகளின் புள்ளிகளைச் சுட்டிக்காட்டுவதாக இருப்பவை.அவர் தொடும் புள்ளியை மேலும் வளர்த்துச் சொல்வதை இடைக்கிடை நாம் செய்து வருகிறோம்.மறுபக்கம் எழுதும் அந்த மனிதர் தனது அறியப்பட்ட முகத்தை எந்த மண்ணுக்காக மறைக்கிறார் என்று நமக்கு இதுவரை புரியவில்லை.தன்கட்டுரைகளுடாக இதுவரை இலங்கையில் நிகழும் காட்டுமிராண்டித் தனமான அரசியல் மற்றும் இயக்க-அரசு அராஜகங்களைக் காட்டமாக விமர்சிக்கவில்லை.என்றபோதும், முகத்தை மூடியெழுதுவதில் முனைப்புடையவராக இருக்கின்றவர் உண்மையில் மக்கள் நலன் சார்ந்து வழிகாட்டும் கட்டுரைகளாகவே தனது கட்டுரைகளை வடிக்கின்றார்.இன்றைக்கு அரச-இயக்க அராஜகங்களை எதிர்த்து எத்தனையோ பத்திரிகையாளர்கள் பலியாகிவிட்டார்கள்!அவர்கள் ஊடகவியலாளர்கள்.இவரோ பேராசிரியர்!எனினும்,நாம் பேராசிரியரின் எழுத்துக்களுடாகப் பொதுமைப்படும் புள்ளிகளை நோக்கி நகர்வோம்.


இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.


பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.அந்த வகையில் சிவசேகரம் குறைந்தபட்சமாவது மக்களைப் பிரதிபலிக்கிறார் அவருக்கு நன்றி.கீழ்வரும் கட்டுரையை நன்றியோடு தினக்குரலிலிருந்து மீள் பதிவிடுகிறோம்.

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2008






மறுபக்கம் :

>>>செய்தித் தணிக்கையும் ஊடக சுதந்திர மறுப்பும் தமது தகவல்களைப் பெற மாற்றுவழிகளைத் தேடுமாறு மக்களைத் தூண்டுகின்றன. <<<


வதந்திகளைப் பரப்புவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஒரு அரசாங்கம் இவ்வாறு அறிவிப்பது இதுதான் முதன்முறையல்ல என்று எல்லாரும் அறிவோம். இரண்டாம் உலகப்போரின் போது அன்றைய கொலனிய அரசாங்கம் அறிவித்ததுடன் கடும் நடவடிக்கையும் எடுத்தது. அதற்குப் பின்னரும் கூடப் பலவேறு காலகட்டங்களில் வதந்திகட்கு எதிரான கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வதந்திகளுக்கு எதிரான எச்சரிக்கைகட்கு நியாயமான காரணங்கள் உள்ளன. வீண் புரளிகளால் மக்கள் பீதியுற்றுச் செய்கிற காரியங்கள் சமூக ஒழுங்குக்கு கேடாக அமையலாம். உணவுத் தட்டுப்பாடு உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு பற்றிய வதந்திகள் பதுக்கலுக்கும் குறுகிய கால விலையேற்றத்துக்கும் விரயத்துக்கும் காரணமாகின்றன. எனினும் பதுக்கலும் தட்டுப்பாடு காரணமான விலையேற்றத்தாலும் நன்மை அடைகிறவர்கள் இல்லாமலா?


அரசாங்கம் வதந்திகட்கு அஞ்சுவதற்கான காரணம் மக்கள் அரசாங்கம் சொல்கிற செய்திகளை நம்பத் தயங்குகிறார்கள் என்பதுதான். இன்னொரு விதமாகச் சொல்லப்போனால் அரசாங்கம் பரப்புகிற வதந்திகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. மக்கள் அரசாங்கம் சொல்கிற பொய்களுடன் திருப்தி அடையாததால் வேறு பொய்களையும் கேட்க விரும்புகிறார்கள். தனிப்பட, ஒவ்வொருவரும் தான் நம்ப விரும்புகிற பொய்களை நம்புகிறார். எனவே, பலரும் நம்ப விரும்புகிற விதமான முறையில் தான் சொல்ல விரும்புகிற பொய்களைச் சொல்லுகிற உலகம் வெற்றி பெறுகிறது. இது தான் நமது ஊடகங்களின் இன்றைய நிலை. நம்முடைய ஊடகங்கள் கொஞ்சம் முரட்டுத்தனமான முறையில் நடந்து கொள்கின்றன. மேலை நாடுகளில் அதேஅளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுகிற ஊடகங்கள் உள்ளன. ஆனால், மிகவும் நாசூக்காகவும் நம்பகமானவை என்ற பேருடனும் நடந்து கொள்ளுகிற ஊடகங்களும் உள்ளன. அதுதான் நமக்கும் முன்னேறிய முதலாளிய நாடுகட்கும் உள்ள வேறுபாடு.


நம்மிடையேயும் ஊடகங்கள் கொஞ்சம் சீராக நடந்துகொண்ட ஒரு காலம் பற்றிப் பேசப்படுகிறது. இன்று அப்படி நடந்து கொள்ள இயலாமல் நமது சமுதாயமும் கொஞ்சம் மாறிவிட்டது என்பதை நாம் மறக்கக்கூடாது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. அவற்றிற் சில நல்லவை. சில கெட்டவை. இப்போது ஏற்பட்டுள்ள தகவல் பறிமாறல், வதந்திகள்,செய்திகள் அதிவேகமாகப் பரவ உதவுகின்றன. அதேவேளை, தகவல் பெருக்கம் தகவல்களைத் தெரிவுசெய்து வெளியிடவேண்டிய தேவையை அவசியமாக்குகிறது. தகவல்களின் தெரிவு அவற்றைப் பரிமாறுகிற அதிகாரமுடையவர்களது கைகளில் உள்ளது. இந்தத் தகவல் வலைப்பின்னல்களிடையிலான அதிகாரப் போட்டிகளைத்தான் நாங்கள் ஊடகச் சுதந்திரம் எனறும் சுயாதீனமான ஊடகத்துறை என்றும் கருதிக் கொள்கிறோம். அவற்றுக்குரிய சுதந்திரம் அவை சார்ந்த வர்க்க நலன்களாலும் இலாப நோக்கத்தாலும் வழிநடத்தப்படுகின்றது. அரசாங்க அதிகாரம் அந்த நலன்களை மிரட்டுகிறபோது அதிகாரத்தை அவை எதிர்த்து நிற்கலாம். அவ்வாறான நடத்தை பெயரளவிலேனும் சனநாயகம் நடைமுறையில் உள்ளபோது மட்டுமே இயலுமானது. அல்லாத போது அவை அரசாங்கத்தின் நெருக்குவாரங்கட்கு முன்பு பணிந்து போக நேருகிறது.


மேலை முதலாளிய நாடுகளில் ஊடகங்கள் மீதான இவ்வாறான கட்டுப்பாடு, கருத்துச் சுதந்திரம் பற்றி மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையைத் தகர்க்காத விதமாகத் திரைக்குப் பின்னால் நடைபெறுகிறது. அதேவேளை, சிறுபான்மைப் போக்காக மாற்றுக் கருத்துகளுக்கு சில இடைவெளியுள்ளது. அவை அரசுக்கும் சவாலாக வளராமற் கவனித்துக் கொள்ளுமளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிப்புக்கு உள்ளாகின்றன. மேலை நாடுகளில் கண்காணிப்பிற்கும் மேலாகத் தகவற்பெருக்கமும் மக்கள் உண்மைகளை அறியாமல் மூடிமறைக்க உதவுகிறது. அதையும் ஊடுருவியே அங்கு ஏகாதிபத்தியத்திற்கும் உலகமயமாதலுக்கும் எதிரான இயக்கங்கள் செயற்படுகின்றன. எனினும் அவற்றை முடக்கவும் அவை பற்றி உளவறியவும் அரசின் பல்வேறு கரங்கள் நடவடிக்கைகளை எடுத்தபடி உள்ளன. அதற்கு வசதியாகப் `பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்பது போன்ற பிரசாரங்கள் அமைகின்றன.


இந்தியாவின் இந்திராகாந்தியின் அவசரகாலச் சட்ட ஆட்சியும் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அது எல்லா மாநிலங்களிலும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயற்பட்டதும் பலர் அரசியல் நோக்கங்கட்காகக் கைதானதும் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த இருண்ட யுகத்திற்கான பழியை இந்திராகாந்தியின் காலஞ்சென்ற இளைய மகன் சஞ்சய்காந்தி மீது சுமத்திவிட்டு ஆறுதல் அடைகிறவர்களும் உள்ளனர். அப்போது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி இருந்தது. இந்திராகாந்தியின் அவசரகாலச் சட்டத்தின் கீழான அராஜகத்தை ஏற்க மறுத்து பலருக்குப் புகலிடமாகத் தமிழகம் இருந்தது என்பது கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் மெச்சத்தக்க ஒரு சில விடயங்களில் முக்கியமானது. அதற்காக அவர் கொடுத்த விலை பெரியது. இந்திர காந்தியால் தான் காங்கிரஸ் முதல் முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைக்கத் தவறியது. 1977 தேர்தலின் பாடத்தை இந்திராகாந்தி மறக்க வாய்ப்பில்லை. எனினும் இந்திய அரச நிறுவனம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களை இன்னமும் அப்படியே அல்லது மாற்றிய வடிவங்களிற் கடைப்பிடித்தே வருகிறது.


இந்தியாவின் மாநிலங்கள் பலவற்றில் மாஓவாதிகட்குத் தடையுள்ளது. எனினும், அவர்கட்கு அனுதாபமான ஏடுகள் தடையின்றி வெளிவருகின்றன. அவர்கட்கு அனுதாபமான இணையத்தளங்கள் இருந்து வந்துள்ளன. அவர்கட்கு அனுதாபமான பத்திரிகைகளும் வந்துள்ளன. இரண்டு ஆண்டுகள் முன்பு மாஓவாவாதக் கம்யூனிஸ்ட்களின் இணையத்தளம் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்பு அவர்கட்கு அனுதாபமானவர்கள் புதியவற்றைத் தோற்றுவித்து இயக்கி வந்துள்ளனர். சிலவற்றை மிரட்டல்கள் மூலம் நிறுத்த நேர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் பேரணி (பீப்பிள்ஸ் மாச்) எனும் ஏட்டின் ஆசியரும் இணையத்தளப் பொறுப்பாளராயும் இருந்து வந்த கோவிந்தன் குட்டி என்பவரைக் கேரள அரசு அவரது பத்திரிகை தொடர்பாகக் கைது செய்து அவரது அலுவலகத்தில் இருந்த கணினிகளையும் ஆவணங்களையும் பறித்துச் சென்றுள்ளது. கோவிந்தன் குட்டி தொடர்ந்தும் உண்ணாவிரதமிருக்கிறார். அவரைப் பார்க்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இப்போது கோவிந்தன் குட்டியின் உடல்நிலை மோசமாகி அவர் மருத்துவமனையில் மறித்து வைக்கப்பட்டுள்ளார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்.
இதை எழுதும் போது ஓரிரு வாரங்கள் முன்பு நமது வார ஏடொன்றில் இந்திய மாஓவாதிகள் பற்றி வெளியான ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதில் மாஓவாதிகள் இப்போது முற்றாக ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே முடங்கிக் கிடப்பதாயும் எழுதப்பட்டு முடிவில் `தகவல், இணையம்' என்று கூறப்பட்டிருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மிரட்டல் மாஓவாதிகள் தான் என்று மன்மோகன்சிங் அறிவித்துள்ள நிலையில் இந்தத் தகவல் எங்கிருந்து வந்தது? பத்து வருடம் பழைய ஒரு தகவலை எங்கிருந்து பெற்றார் என்றோ அது எப்போது வெளிவந்தது என்றோ விவரம் தராமல் மொட்டையாக `இணையம்' என்று எழுதுவதைத் தமிழில் நிறையவே காணுகிறோம். இது நமது ஊடகங்களின் அவலம்.


விஷமத்தனமான இணையத்தளங்கள் பல உள்ளன. இடதுசாரி எதிர்ப்புக்கானவை உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புக்கானவை உள்ளன. இந்திய -சீன உறவைச் சீர்குலைப்பதற்கானவை உள்ளன. இவை வழங்குகிற தகவல்களின் பெறுமதி என்ன? வதந்திகட்கும் இவை வழங்குகிற தகவல்கட்கும் உள்ள தர வேறுபாடு என்ன? ஆனால், இவ்வாறான இணையத்தளங்கள் தடையின்றி இயங்குகின்றன. தடை விதிக்கப்பட்டுள்ளவற்றில் ஆபாசமான விஷயங்களைப் பரப்புகிற இணையத்தளங்கள் போக, பெரும்பாலானவை பொறுப்புடன் கருத்தைக் கூறுகின்றவையும் பொதுமக்களின் கேள்விகட்கு மறுமொழி கூற ஆயத்தமானவையுமே.


செய்தித் தணிக்கையும் ஊடக சுதந்திர மறுப்பும் தமது தகவல்களைப் பெற மாற்றுவழிகளைத் தேடுமாறு மக்களைத் தூண்டுகின்றன. அப்போது வதந்திகள், செய்திகளை விடப் பயனும் உண்மையுமுடையனவாகி விடலாம்.

Saturday, January 26, 2008

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக...

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை: நமக்கான கொலைக் களம்!

"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"



அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

எமது தேசம் அந்நிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை ஏதேதோ காரணங்கூறி நசுக்கி வருகிறது.நாம் கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்கிறோம்.எங்கள்மீதான உலகத்தின் பார்வை குவிந்தபோது அதை நாசமாக்கிய மொனராகலத் தாக்குதலை எந்த நாய்கள் செய்தார்கள்?,சிங்கள அப்பாவி மக்களைப் பலிகொண்டு நமது உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிய சதி எம்மைப் பூண்டோடு அழிக்கும் அந்நிய நலன்களின் பிரதிபலிப்பாகவே இருக்கமுடியும்.அந்நியனுக்குக் கூஜாத் தூக்கும் தமிழ் இயக்கக் குழுக்களும் புலிகளும் நம்மைக் கேடான முறையில் அழித்த வரலாறு இன்னும் தொடரும்போது நாம் எங்கே நிற்கிறோம்?

பலம் பெறும் எதிரிகள்:

எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிகிறது.

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.இன்றைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது!இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு ஆயுதக் குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பி(ப)ணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசோந்து இலங்கையும்,இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட13வது சட்டத்திருத்தத்துக்குள் வரையறுக்க முனையும் நிர்வாகசபை அரசியலால் உறுதியாகிவருகிறது.

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க-சாதிய-பிரேதேச நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தனனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக சபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே பாசிசப் புலித் தலைமையைக் கற்பனை செய்யவேண்டாம்.மாறாக, அவர்களோடு இணைந்துள்ள நமது குழந்தைகளைக் கற்பனை செய்யவும்) நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும்.இங்கே புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத்தக்க சூழலுக்குத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்களைச் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம் நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் புலிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது அவசியமென்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.

இரண்டு அரசஜந்திரங்கள்,அவைகளின் அமுக்கம்:

இன்றோ இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படையணி மாறுவது காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலி ஆனந்தசங்கரி மறுபுறமாகவும் "13வது திருத்தச் சட்டமூலம் வடக்கு கிழக்கின்
மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாகசபையைத் தமது அரசியல் தந்திரத்தால் கிடைத்த வெற்றியாக" உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது தமிழ்மாகாணங்களுக்கான இடைகால நிர்வாகசபையில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் இந்தப் பாசிசக் குழுக்கள் மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்கள ஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது,நிர்வாகத்தில் தத்தம் பங்கை-பாகத்தைப் பற்றியானதான குரல்களைத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமையாக இனம்காட்ட முனைதல் எவ்வளவு நரித்தனமான தந்திரம்!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு (தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக) பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இப்போது,13வது அரைச் சனியன் நம்மை அண்டி வந்து,நமது மக்களைப் பூண்டோடு அழித்தே தீருவதெனக் கங்கணங்கட்டப் புலிகள் வாழ்விழந்து கிடக்க மக்கள் படும் துன்பமோ அரசியல் பகடையாக மாறுகிறது.என்ன மானங்கெட்ட தலையெழுத்து நமக்கு?

இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத் தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களின் பரிதாப நிலையும்,புலிகளின் மக்கள்சார-மறுப்பு வியூகமும்:

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் புலிகளால் செய்து முடிப்பதற்கு அவர்களுக்கும் மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட ஒடுக்குமுறையாக இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு-அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா? இன்றைய இந்தத் தரணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும் புலி இயக்கத்துள் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.இயக்கம் தனது கட்டமைப்பை "மக்களோடு மக்களாக நிற்கும்" பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும்.இல்லையேல் தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளை அழித்து நமது குழந்தைகளின் கைகளிலுள்ள ஆயுதத்தைமட்டுமல்ல அவர்களது பொன்னான உயிர்களையும் பறித்துவிடப் போகிறது.

அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.இதன் மறுவிளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது.

இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இலங்கை ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ இந்திய- அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி தமிழ்த் தலைமைகளை அடிமைக் கூட்டாமாகவும்,பிழைப்புவாதிகளாகவும் நிலைப்படுத்திய அரசியல் அவலமாக விரிகிறது.தமிழ் அரசியல் கிரிமனல்கள் 13வது சட்டத் திருத்தத்துக்குள் நமது சுயநிர்ணயவுரிமையை முடக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் நமது மக்களின் தலைகளை முற்றுமுழுதாக உருட்டும் முயற்சியே.அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள்,இந்திய ஆளும் வர்க்கங்கள்,அரசியல்வாதிகள் வடக்குக் கிழக்குக்கான இடைகால நிர்வாக சபையில் முதல்வர்களாக உட்காருவதற்கு யாரு பாத்திரமுடையவர்கள் என்று திமிர்பிடித்து அலைகிறது.இத் திமிரோடான அரசியல்,படுகொலைக் களத்தை ஈழமெங்கும் உருவாக்கும்.அங்கே, இன்னும் எத்தனை மண்டையன் குழுக்கள் தோன்றுமோ அவ்வளவு மக்களின் அழிவு தொடரும்.இது முழுமக்களையும் காயடித்து அவர்களின் சுயவெழிச்சியை முடக்கி மக்களை அடிமைகளாக்கும் அந்நிய சக்திகளுக்காக நம்மை நாம் அழிப்பதாக வரலாறு விரியும்.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தரணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2008

Tuesday, January 22, 2008

இன்றைய வலதுசாரி...

இன்றைய வலதுசாரித் தமிழ்த்
தலைமைகள் கூறுவதுபோன்று
தீர்வானது இந்தியா போன்ற
மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது!



தமிழருக்கான தீர்வு: அதிகாரப் பரவலாக்கம்?



இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் அரசியல் வறுமையும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கான தந்திரோபாயத்தைச் செய்யும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திரமாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன்படுத்தி வருகிறது.தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால், சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அந்நியமாகிப் போகிறார்கள்.


(திறந்தவெளிச் சிறைச்சாலைகளாகத் தமிழர் பிரதேசம்:அங்கே, மக்களை வருத்தும் சிங்கள் வன்கொடுமை இராணுவம்...)


இந்தத் தரணத்தில் இலங்கையைப் பிடித்தாட்டும் சனியன்களுக்கு எத்தனை கோடிகள் லீற்ரர் எள்ளெண்ணையூற்றியெரித்தாலும் அந்தத் தேசத்தை அவைகள் விட்டகலா!தேசத்தில் தினம் குருதி சிந்தப்பட்டுத் தேசத்தின் நிலவளமெங்கும் பிணங்கள் மிதக்க இந்த மண் இடுகாடாகிறது.எப்படித்தாம் கூறுபோட்டாலும் தேசம் நமக்குச் சொந்தமல்ல.இலங்கைக் குடிகள் யாவும் அத் தேசத்துக்குள்ளேயே எந்தவுரிமையுமற்று வெறும் கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள்.


>>>தீர்வு யோசனைப் பொதியை பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாளை புதன்கிழமை
ஜனாதிபதியிடம் கையளித்தவுடன் நாளை இரவே அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை
அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயவிருக்கின்றார்.
தீர்வு யோசனையை
பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை
பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்துப் பிழையானதாகும். இதனை பாராளுமன்றத்துக்கு
சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
தீர்வுத்திட்டத்தை இரண்டு
கட்டங்களில் நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டத்தில் இடைக்காலத்தீர்வை வழங்கி வடக்கிலும், கிழக்கிலும் கூடுதல் அதிகாரப்
பரவலாக்கலுடன் கூடிய மாகாண சபை அதிகாரத்தை அந்த மக்களிடம் வழங்கப்படவுள்ளது-தினக்குரல் <<<



இங்கே நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோவொரு நாட்டின் பொருள் வளத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான இயக்கத்திலிருக்கிறது.ஐரோப்பாவனது தனது கடந்தகாலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது.இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதாரவாதிக்கத்தோடு- பின்காலனித்துவப் பண்போடு, புதியதொரு பொருளாதார வியூத்தை எம்மீது திணிக்கிறது.ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரமானது நாலுகால் பாச்சலினால் மீளவும் பெருமூலதனத்திரட்சியாகி,ஏகாதிபத்தியமாக விரிந்துள்ள இன்றைய நிலையில்,அவர்களது அரசியல் வியூகமானது புதியதொரு தொடர்ச்சியை வலியுறுத்துகிறது.இது மூன்றாமுலகில் சுழலும் அவர்களது நிதிமூலதனப் பாதுகாப்புக்கும்- மூன்றாமுலகைக் கொள்ளைபோடுவதிலும்,அவர்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு நசுக்குவதிலும் கவனமாக இருக்கிறது.இதற்காகச் சிறு தேசிய இனங்களைப் பலி கொடுப்பதில் அது முனைப்பாக இருக்கிறது.



தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்துள் வலிந்து உருவாக்கப்படும் மிக அண்மைய "சர்வகட்சி அரசியல் கூட்டுக்கள்"(அதிகாரப் பரவலாக்கத்திற்கான திட்ட வரைவு ஒன்றை சர்வ கட்சி பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக்குழு எதிர்வரும் வாரங்களுக்குள் முன்வைக்குமென சர்வகட்சி ஆலோசனைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்)இந்தச் சமுதாயத்தின் அரசியல் அபிலாசைகளை-உரிமைகளைக் காலாவதியாக்கும் "தமிழ்ச் சமுதாயத்தின் எதிரிகளின்" நோக்கிலிருந்து,மக்களின் சமுதாயத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிராகரித்து எழுகிறது.இந்தக் கூட்டானது எமது மக்களுக்கு இன்னொரு அந்நிய சக்தியின் ஆர்வங்களைத் "தீர்வாக்க" முனைதல் மக்கள் விரோதமாகும்.எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமக்கு முன் வைத்தாக வேண்டும்.இதுவே எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளைக் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத் தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் "சர்வகட்சி அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள்" நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிசத்தில் முன்னெடுக்க முடியாது.
(பசி,யுத்தம்,பெற்றோரை இழப்பு:எதிர்காலம் கேள்வியோடு...)

இன்றைய இலங்கை அரசியல் வியூகமானது வெளியுலகால் தீர்மானிக்கப்பட்டதாகும்.அவை(வெளிச் சக்திகள்) எமக்குள் இருக்கும் உள் முரண்பாட்டுக்குள் பாரிய அரசியல் சதுரங்கம் ஆடமுனைகின்றன. திட்டமிடப்பட்ட ஒரு "அரசியல் தீர்வுக்குள்" வழங்கப்படும் அதிகாரப் பரவலூடாக மேலும் உள் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டு,அந்த முரண்கள் பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளால் அழிவுற்றுப்போவதற்கான சூழல் நெருங்குகிறது.எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு "அரசியல் தீர்வுக்கு" வருகின்றன.இந்தத் தீர்வு எமது மக்களுக்குள் தம்மைத் தாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவும்.இது தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாக இன்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.



இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினல்களாகவிருக்கும் நாடுகளை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப தண்டித்தாகவேண்டும.;இந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் காலக்கடமையானது அனைத்து மாற்றுச் சக்திகளிடமே காலத்தால் கையளிக்கப்பட்டுள்ளது!இந்த வரலாற்றுத் தேவையோடு மக்களின் சுய நிர்ணயவுரிமைப் போராட்டமானது இனிமேல் புலிகளின் நலனுக்குடந்தையாக இருக்கும் நிலையை உடைத்து,ஒன்றிணைந்து இலங்கையில் மக்களினங்கள் பரஸ்பர ஒற்றுமையுடன்கூடிய உரிமையாக மலரவேண்டும்.இதற்கானவொரு போராட்டமானது இனிமேல் புலி எதிர்ப்பு அரசியலோடு தேங்க முடியாது.அதைக்கடந்து முழு இலங்கைக்குள்ளும் போருக்கெதிரான வெகுஜன எழிச்சியாகவும் அது விரிந்து வியாபிக்கவேண்டும்.தொடரப்போகும் பாரிய யுத்தம் மக்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்துவிடக் காத்திருக்கிறது. காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்!இன்றைய இலங்கைச் சூழல் புலிகளின் வலுக்கரங்களை மிகவும் பலவீனமாக்கி மாற்றுச் சக்திகளின் கரங்களைப் பலமாக்கியுள்ளதை எவரும் நிராகரிக்கமுடியாது.இன்று புலிகள் உலகத்தின்முன் அம்பலப்பட்டது மட்டுமல்ல தமது இராஜதந்திர வியூகத்தையே உலக அரசுகளின்,மக்களின் ஆதிக்கத்துள் இழந்துள்ளார்கள்.அவர்களது ஒவ்வொரு நகர்வும் மிக நுணுக்கமாக உலக அரசுகளால் கவனிப்புக்குள்ளாகிவரும் இந்த நிலையில், இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை ஒட்டக் கருவறுக்கக் காத்திருக்கிறது.



இந்த நிலைமை இப்படியிருக்க,இனித் தொடரப்போகும் போருக்கான முன் தயாரிப்புக்காக வருங்காலக் கனவுகளை விதைத்துத் தமது எதிர்காலக் கனவுகளைக் கருக்க இனியும் மக்கள் தயாரின்றி இருக்கிறார்கள்.அவர்கள் இழந்தது சொல்லிமாளாதது!உயிரை,உடமையை,சொந்த பந்தங்களை,சுற்றத்தைச் சுகத்தையிழந்து மக்கள் பசியாலும் பட்டுணியாலும் அவலப்படும்போது,அவர்களின் பஞ்சத்துக்கு,பசிக்கு ஒருபிடி அரிசி போட வக்கற்ற புலியினது காட்டுமிராண்டித் தனமான அதிகாரம், அவர்களது(மக்களின்) குழந்தைகளைப் போருக்குப் பிடித்துச் செல்வதற்குமட்டும் உரித்துடையதாகிறது.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம் கூறினாலும,; தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.

(தமிழர் உரிமையை ஏலம்விடும் டக்ளஸ் தேவானந்தா இலண்டனில்,பாரீசில்,இலங்கையில்...)

இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது!மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.




தனி நாட்டுக்கான போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை.சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இலங்கை அரசினது இன்றைய அரசியல் வெற்றிகள் யாவும் இதிலிருந்துதான் அன்று திட்டமிடுப்பட்ட சரியான அத்திவாரமாக இருக்கவேண்டும்.இந்த நிலையில் தொடரப்போகும் புலிகளின் போராட்டம் தோல்வியில் முடியும் என்பது இலங்கையின் கணிப்பு.இது சரியானதே.




இன்று புலிகள் செய்யும் போராட்டமோ அடிப்படையில் தவறானது.அது மக்களின் உரிமைகளை மறுத்தபடி மக்கள் உரிமைக்கான போராட்டமென்கிறது!கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.இவை நமது வலுவைச் சுக்கு நூறாக்கியுள்ளன!நமது மக்களைப் பிரதேச ரீதியாகப் பிளந்துவிட்டன.நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிகளின் போராட்டம் தொடர்கிறது.அது ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண§;ட, மனித ஆளுமையைக் காவு கொள்கிறது தமிழீழப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.




இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை. அவர்களின் துயர துன்பங்கள் இன்னும் பலபடி உயர்ந்திருக்கும் இந்தப் போராட்டத்தில் எதை எப்படித்தாம் பெறுவது-யாரிடமிருந்து யார் பெறுவது?இரு தரப்புமே மக்களைக் கொன்றதில் பெரும் பங்கைச் செய்திருக்கிறார்கள்.இங்கே மக்களின் உரிமைமகளை எவர் மதிக்கிறார்கள்?வெறுமனவே உயிர்விடுவது ஈழத்தை விடுவிக்க முடியாது.அப்படியொரு தேசம் உருவாகித்தாம் மக்கள் உரிமைகளைப் பெறமுடியுமென்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இற்றைவரையான இயக்கங்களின் போக்கிலிருந்து நாம் பெறமுடியாது.



மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன.



இன்றைய வலதுசாரித் தமிழ்த் தலைமைகள் கூறுவதுபோன்று தீர்வானது இந்தியா போன்ற மாநில சுயாட்சி என்பதாக இருக்க முடியாது.இலங்கைச் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிர்வாகப் பிரிவுகளுடாகப் பெறுப்படுவதில்லை.அவை ஒழுங்கமைந்த தேசியப் பொருளாதாரக் கட்டமைவில் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமது வலுவுக்கேற்ற-தமது பிரதேசவுற்பத்தி வலுவுக்கேற்ற அரசியல் ஆளுமையைக் கொண்டிருப்பதும்,அந்த ஆளுமைக்கூடாகக் குறிப்பிட்ட தேசிய இனம் வாழும் வலையங்கள், அவர்களின் வரலாற்றுத் தாயகமாக அங்கீகரிக்கப்படுவதுதான் அந்த மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கெளரவமாக உறுதிப்படுத்தும். வரலாற்று ரீதியாக தேசிய இன ஐதீகமுடைய இந்த வடக்குக் கிழக்கு நிலப்பரப்புத் தமிழ்பேசும் மக்களுக்கானதென்பதை எவரும் இந்தியாவின் தயவில் வென்றெடுத்திட முடியாது.அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்,ஏகப்பிரதிநித்துவக் கொள்கையும் இவர்களின் கோசமாகவும்,போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அந்நியப்படுத்தி இலங்கையின் அரச வியூகத்துள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.



இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்

Saturday, January 12, 2008

ஈழம் கொசோவோ குர்தீஸ் போராட்டங்கள்: 3

ஈழம், கொசோவோ,குர்தீஸ் போராட்டங்கள்: 3



லகில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களைத் தாமே ஆளும் காலங்கள் மிக விரைவாக உருவாகிறது!உலகின் அதீத பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் பல்தேசியக் கம்பனிகளின் குவிப்புறுதியானது மேன்மேலும் கனிவளங்களை நோக்கிய தேடுதல்-கையகப்படுத்தல்-காத்தல் எனும் எதிர்பார்ப்புகளால் தமக்குச் சாதகமான நிலையில் ஒரு தேசத்துக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களைத் தொடர்ந்தும் ஒற்றைத் தேசப் பெரும்பான்மையின ஒடுக்குமுறைக்குள் இருத்திவைத்துச் சுரண்டமுடியாதவொரு சூழலில் அத்தகைய நோக்கில் தேசத்தைத் துண்டாடும் நிலைக்குப் பல் தேசியக் கம்பனிகளின் ஏவல் நாய்களான ஏகாதிபத்திய நாடுகள் ஒத்துழைப்பு நல்கின்றன.இதுவொரு நல்ல சந்தர்ப்பம்!-நமக்கும்தாம்.


வரும் மாதம் கொசோவோ தனது தனிநாட்டுப் பிரகடனத்தைச் செய்கிறது.இது எத்தகையவொரு பாதிப்பை ஐரோப்பாவுக்குள் உருவாக்குமென்று,ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்து வருகிறார்கள்.நாங்கள் இலங்கையில் நாயிலும் கேவலமாக அடக்கியொடுக்கப்படுகிறோம்.இதுவரை இலட்சம் தமிழ் பேசும் மக்களை இலங்கைப்பாசிச அரசு கொன்று குவித்துவிட்டது!இது உலகத்தில் மிகவுமொரு பாரிய இனவொடுக்கு முறையாகும்.இத்தகைய வொடுக்கு முறையை எந்தவொரு யுக்கோஸ்லோவியச் சிறுபான்மை இனங்களும் காணவில்லை!எனினும் அங்கே பற்பல நாடுகள் தம்மைத் துண்டித்துவிட்டன.இப்போது செர்பியாவிலிருந்து கொசோவோ பிறப்பெடுக்கிறது.அதைத் தொடர்ந்து இன்னும் பத்துக்கு மேற்பட்ட தேசங்கள் ஐரோப்பிய மண்ணில் பிறக்கும் நிலையைப் பெறுகின்றன.இதற்கான முன்னுதாரணமாகக் கொசோவோ இருக்கப் போகிறது.நமக்கும் கொசோவோ முன்னுதாரணமாக இருக்குமோ அல்லது இந்தியாவிடம் மடிப்பிச்சை எடுப்போமா?


மேற்கு ஐரோப்பாவின் கனிவளத் தேவையானது கொசோவோவின் இறைமையாக விரிகிறது.»Kunststaaten« wären nach diesem Maßstab übrigens die meisten Länder der Welt. Und so ist das herbeigeschriebene Schicksal Belgiens denn auch nur ein Menetekel für Kommendes. In der Ankündigung des FAZ-Artikels heißt es: »Ein Staat zerfällt. Dieses Szenario werden wir bald noch häufiger erleben, bei den Schotten, den Kosovaren, auch den Südtirolern.« கொசோவோவின் கனி வளங்களால் தமது உற்பத்தியின் வீச்சையும் அதன் தொடர்ந்த வலிமையையும் பேணும் தேசங்கள் கொசோவோவின் பிறப்பை ஆதரிக்கக் காத்திருக்கிறது. உற்பத்திக்குத் தோதான மூலப் பொருள்களுக்குக் கொசோவோவானது மிகவும் முக்கியம் பெறுகிறது.இங்கே, இந்த நிமிடம்வரை கொசோவோவின் சுயநிர்ணயம் அங்கீகரிப்பதற்கானதான அரசியல் வியூகமே மேற்கு ஐரோப்பாவிடம் இருக்கிறது.எனவே,இதைப் பயன்படுத்தி அகண்ட ஸ்ப்பானியச் சாம்பிராச்சியம் உடைவதற்கான முன் நிபந்தனைகளுடன் வியூகம் அமைக்கும் ஸ்ப்பானியச் சிறுபான்மை இனங்கள்-உதாரணமாக பஸ்கன் மக்கள் முனைப்போடு காய் நகர்த்துகிறார்கள்.


இன்றைய பெல்ஜியம் தன்னைப் பிரித்து இன்னுமொரு நாட்டைப் பிறப்பிக்கும் நிலைக்குள.; அங்கேயும் சிக்கல்கள் எழுகின்றன.(Belgien kann sich mit einiger Wahrscheinlichkeit in einen nördlichen, flämischen Teil, dessen Bewohner niederländisch sprechen und sich eher nach den Niederlanden hingezogen fühlen, und einen südlichen, französischsprachigen wallonischen Teil spalten.)பிரஞ்சு மொழி பேசும் மக்களின் வழிவந்த வலோனியன் மக்களுக்கும் ஒல்லாந்து மொழி பேசும் மக்களினத்தின் வழி வந்த பி§லேமியன் இனத்துக்கும் பாரிய முரண்பாடு உருவாகிறது.இது இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியின் முரண்பாடாகவும,; வளர்ச்சிகுன்றிய பிரஞ்சு மொழி பேசும் வலையத்துக்குத் தாம் தொடர்ந்தும் நிதி வழங்க முடியாதெனவும் முரண்பாடுகள் முற்றுகின்றன.அங்கே,இன்னொரு தேசத்தை உருவாக்குவதற்காக மேற்குலகப் பகாசூரக்கம்பனிகள் முயற்சிக்கின்றன.


ஆழ்ந்த மெளனத்திலிருக்கும் சுவிட்ஸர்லாந்தில்(Auch in der stillen Schweiz gibt es Separatisten. Die Befreiungsfront von Jura fordert seit mehr als 30 Jahren die Unabhängigkeit des Kantons Jura von der Eidgenossenschaft. Einst wurde das von französischsprachigen Katholiken bevölkerte Jura dem Kanton Bern angegliedert, der größtenteils von deutschsprachigen Protestanten bevölkert ist. Doch die Anführer der Front sehen ein, dass die Chancen auf einen Sieg äußerst gering sind.) யூரா கன்டோன் மாநிலத்துப் பிரஞ்சு மொழிபேசும் மக்கள் தமது கன்டோன் தனி நாடாக வேண்டுமென்று வாதிட்டு வருகிறார்கள்.அங்கே அமுக்கி வைக்கப்பட்ட பிரிவினைவாதம் இப்போது மேலெழுந்து வெடிக்கக் காத்திருக்கிறது.இலங்கைக்குச் சிவிஸ் அரசியல் முறைமைகளைப் பரிந்துரைத்தவர்கள் முகத்தில் கரி பூசுக!

இப்படி இற்றாலி,ருமேனியா,பிரித்தானியாவின் ஸ்கோட்லாந்து(In Großbritannien hat sich der Mittelpunkt der separatistischen Stimmungen aus Ulster nach Schottland verschoben. Bei der letzten Parlamentswahl ging in Schottland die Nationale Partei als Sieger hervor, die einen neuen unabhängigen Staat fordert.) என்று தொடர்கதையாக இன்னும் பல பத்துத் தனிநாடுகளை உருவாக்கித் தத்தமது கைகளுக்குள் போட்டுவிடத் துடிக்கும் பல்தேசியக் கம்பனிகளும் தேசங்களும் இத்தகையவொரு தனிநாட்டுப் பிரகடனங்களுக்கு இப்போது தலை சாய்க்கும்(மட்டுப்படுத்தப்பட்டு) வியூகத்தோடு காய்களை நகர்த்த முனைகிறார்கள்.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தைத் தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று செர்பியா பராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளை,அதாவது ஐரோப்பியக் கூட்டமைபை எச்சரிக்கிறது.»Serbien wird niemals ein unabhängiges Kosovo akzeptieren«, sagte Tadic im Parlament. Kostunica bezeichnete ein unabhängiges Kosovo als »Marionettenstaat«. Die USA würden ihn nur aus eigenen militärischen und Sicherheitsinteressen anerkennen. Er rief zu weiteren Verhandlungen auf und forderte einen »Kompromiss«.தமக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும் கைச்சாத்தாகிய அனைத்து ஒப்பந்தங்களையும் தாம் முறித்துவிடுவதாகவும் எச்சரிக்கிறது.எனினும்,கொசோவோ தனிநாடாவதை செர்பியாவால் தடுத்திட முடியாது.இதை உணர்ந்த செர்பியா அமெரிக்காவை நேரடியாகத் திட்டுகிறது.கொசோவோவில் தனது இராணுவப் பொருளியல் ஆர்வங்களுக்காகத் தனிநாடாவதை அமெரிக்கா ஆதரிப்பதாகச் சொல்கிறது செர்பிய அரசு. கூடவே, கொசோவோ அமெரிக்காவால் ஆட்டிவிக்கப்படும் "பொம்மை"அரசாகவே இருக்கும் என்றுரைக்கிறது.

நவ லிபரல்களான இன்றைய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் நிதி மூலதனமும்(Der Kapitalismus neoliberalen Zuschnitts macht sich auf, die Landkarte Europas neu zu zeichnen. Die nationalen Bourgeoisien sind an großen und einheitlichen Territorien immer weniger interessiert, spielen doch Grenzen dank der EU-Binnenmarktfreiheiten für den ungehinderten Kapital- und Warenfluß keine Rolle mehr. Doch Nationalstaaten sind nach dem Ende des Zweiten Weltkrieges in harten Klassenauseinandersetzungen und unter dem Eindruck des Vorbilds des Ostens auch Sozialstaaten geworden. In ihnen wird Solidarität durch den Transfer erheblicher Mittel zugunsten notleidender Regionen geübt. Dafür ist die EU kein Ersatz. Der Kampf für den Erhalt des Nationalstaats ist daher in erster Linie eine soziale Auseinandersetzung. Traditionelle und liebgewordene antietaistische Sichtweisen trüben in diesem Kampf nur den Blick auf die wirklichen Gefahren. )தத்தமக்குத் தோதாகத் தேசங்களை உருவாக்கி அத் தேசங்களில் தமது மூல வளங்களையும் மற்றும் இராணுவக் கேந்திர நிலைகளையும் காக்க முனைகின்றது.எனவே,கொசோவோ என்பது இத்தகைய நகர்வுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காககவே அதைப் பல்தேசியக் கம்பனிகள் ஆதரிக்கின்றன.இதை மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது அந்தப் பல்தேசியக்கம்பனிகளின் தேச அரசுகள் ஏற்கும் நிலையொன்று உருவாகிறது.

செயற்கையான ஒருமையான தேசங்களை உடைப்பதில் நோக்கமாக இருக்கும் பல் தேசிய மூலதனம் செயற்கையான இந்தியாவையும் உடைக்கும் அதற்காக இலங்கையை உடைக்கும் முன்னதாகவென்று இந்தியாவுக்கும் பயம்.எனவே,இலங்கையின் ஒருமைப்பாடு அதற்கு அவசியம்.

நமக்கு?

எமக்கென்றொரு தேசம் உருவாவது அவசியமாக இருக்கிறது சிங்களக் கொடுமைக்கு எதிராக- நமது நாடோடி வாழ் நிலைக்கு மாற்றாக!

இதில் நமது அரசியல் வியூகம் இந்தியாவுக்குக் கால் கழுவாமல் நமது காலில் நின்றபடி உலகின் மாறிவரும் சூழலைக் காண்க!

அங்கே,கொசோவோ என்றால் இங்கே ஈழமும் சாத்தியம்.

இதை நமது விடுதலை இயக்கத்தின் இளைய தலைமுறை புரியுந் தரணங்கள் மெல்லத் தெரிகிறது.புதிய தலைமுறை இந்த நிலைமைகளைத் தரசித்து வரும்போது உருவாகப்படும் புதிய தேசங்களில் ஒன்றாக ஈழம் இருக்கவேண்டும்.அது உழைப்பவரின் தேசமாக இருப்பதே எமது அவா!அதற்கு முன் தேசிய முதலாளியத்தை ஊக்கப்படுத்துக!இதை ஒருபோதும் ஏகாதிபத்தியம் விரும்பாது.தேசிய பூர்ச்சுவாக்களை ஏகாதிபத்தியம் ஒழிப்பதற்காகவே சிறு தேசங்களை உருவாக்கித் தமது முகவர்களாக்கி வரத் திட்டங்கள் அரங்கேறுகிறது.

இது ஒன்றும் பித்தலாட்டம் அல்ல!

உலகத்தின்-பொருளாதார ஆர்வங்களின் புதிய வியூகம் இப்படியே நகரும் இனி.

ஒருசில ரொஸ்கிய வாதிகள் சொல்வதுபோன்று ஏசியா,ஐரோப்பாவென்ற கண்ட அரசியல் தேசங்களை இன்னும் ஒன்றாக்கும் என்பது இனி நடவாது.எங்கே,செயற்கையான தேசங்கள் தேசிய இனங்களை அடிமைப்படுத்திச் செயற்கையாக இணைத்திருக்கிறதோ அங்கே,உடைவுகளோடு பல தேசம் உருவாகும்-உருவாக்கப்படும்.அது எந்த ஏகாதிபத்தியக் கம்பனியின் பக்கம் இருக்கும் என்பதே இனிவரும் பிரச்சனையாக இருக்கும்.

இந்தியா இருபதுக்கு மேற்பட்ட குட்டிகனை ஈன்றெடுக்கும்.இலங்கை ஈழத்தை ஈன்று வருகிறது!

இங்கே,எமது தரப்பின் சாய்வு எங்கே-எப்படியென்பதே நமது கேள்விகள்.அதற்கு முன் புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா விரும்புகிறது.இதற்காக இலங்கைத் தேசிய குட்டிப் பூர்ச்சுவாக்களை உசுப்பிவிட்டுப் போருக்கான தளபாடங்களை இலங்கை இராணுவத்துக்கு வழங்கும்-வழங்கிவருகிறது.தனது உளவுப்படையூடாகப் புலிகளைப் பிளந்து பலவீனமாக்கிப் பின்னடைவைச் செய்தது.இன்னும் அதிகமாக இந்தியா செய்யும்.இங்கே,நமது போராளித் தேசபக்த இளைஞர்கள் புதிய வியூகங்களைச் செய்தாகவேண்டும்.இளைஞர்கள் உலகத்தின் மாற்றங்களை மிக அவதானமாகக் கணிக்கத் தவறுவது நமக்கு அழிவாக அமையும்.

ஈழத்தைப் பிரகடனப்படுத்தி,அதை எவரும் அங்கீகரிக்காது போனாலும் அது கேலிக்கூத்தல்ல!அதற்குப் பின்பான அரசியலை நேர்த்தியாக்க நமக்கு அது பாடமாக இருக்கும்.எனினும்,ஈழம் என்பது மெய்யாகும் என்பதற்கான உலகச் சூழல்-பொருளாதார வியூகம் இப்போது உலக அரங்குக்கு வருகிறது.இது நமக்குச் சாதகமானவொரு பக்கத்தையும்,பாதகமானவொரு பக்கத்தையும் கொண்டிருக்கிறது.இதில் காய்களை நகர்த்த நமது அரசியல் விவேகமாக இருக்க வேண்டும்.

திரு.பிரபாகரனின் 2007 க்கான மாவீரர் உரைக்கு இலண்டனிலுள்ள தமிழ் வக்கீல்கள் தீபம் தொலைக்காட்சியில் விளக்கம்-பொழிப்புரைத்தபோது"சிங்கள ஏகாதிபத்தியம்"என்று பல முறைகள் கூறிக்கொண்டார்கள்.இத்தகைய"அறிவு"தமிழருக்கு இருந்தால் நாம் அழிவதைத் தடுக்கமுடியாது!வக்கீல்கள் எல்லாம் அரசியல் விஞ்ஞான நிபுணர்களில்லை.இளைஞர்களே உங்கள் விவேகங்களை இனிவரும் காலத்தில் காட்டுங்களேன்!-அது நமக்கென்றொரு தேசத்தை உருவாக்கட்டும்-அது தொழிலாளருக்கு எற்ற பொருளாதாரத்தைக் கனவாகக் கொண்டெழட்டும்!


இக்கட்டுரையை மேலும் விருத்தியாக்கித் தத்துவார்த்த நெறியோடு பின்பு எழுதுகிறேன்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

11.01.2008

Thursday, January 10, 2008

சலாம் பம்பாய்


சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.



>என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது<



"........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும் இனித்தோன்றும் என் அடுத்த பிறப்புக்காகவும் நான் வதைப்பட்டதும்,படுவதும்-படப்போவதும் குறித்துப் பேசுவது அவசியமில்லையா?


பேசவேண்டும்!


தர்மம் செய்கிறோமெனும் பேர்வழிகளில் நானும் ஒருவனல்ல.கையேந்தும் ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களில் ஒன்று நான்.எனது மனவலியும்,வடுவும் என்னைப் பல முறைகள் மீரா நாயரைப் பார்க்க வைத்தது.அவர் திறந்து காட்டிய என் வாழ்வை, நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.எனது சின்னக் கனவின் வண்ணங்களைச் சொன்னதால் மீரா நாயரை மனதுக்குள் அதிகம் நேசித்த காலம் அதிகம்.இளைமைக் காலத்தின் அற்புதமான கனவுகள் எல்லோருக்கும் ஒன்றல்ல.


கிருஷ்ணாவுக்கு வீட்டுக்குப்போகவேணும்!அம்மாவைப் பார்க்கவேணும்.


கடைகளில் தேனீர்க் குவளை தாங்குகிறான்.பணம் சேர்க்கிறான்.ஏதோவொரு முடுக்கு வீதியில் அநாதவராக எழுந்திருக்கும் சுவருக்குள் ஒரு பொந்து!நண்பன் அதைப் பெட்டகமாகவும்-வங்கியாகவும் அறிமுகப் படுத்துகிறான்.கிருஷ்ணாவின் சின்னவிரல்கள் சேர்த்த பணம் அம்மாவுக்கு,அப்படியே வீட்டைபோவதற்கு.பொந்துக்குள் பணம் பத்திரமாக வைக்கப் படுகிறது.


தொடர்ந்து இயங்கிய சின்னக்கால்கள் ஒரு முறை பொந்தைப் பார்த்தபோது பணம் மாயமாக மறைந்துவிடுகிறது.


உலகம் இருண்டு விடுகிறது!மனம் வலியெடுக்கிறது எனக்கு.எங்கேயடா எனது பணம்?


கேட்டேன்.


உதைத்துத் தள்ளுகிறான் நண்பன்.


"நான் வீட்ட போகணும்,வீட்டை போகப் போறேன்."பணம் போனது போனதுதாம்.


எனக்கு எழுத வராது.


வீதியில் அமர்ந்து "அதை" மக்களுக்கு நிறைவேற்றும் ஒரு அண்ணரிடம் கடிதம் எழுதுவிக்கிறேன்.


"அன்புள்ள அம்மா,..." கடிதத்தில் என்னைக் கொட்டி கவருக்குள் திணித்து மூடிய பின், முகவரி எழுதுவதற்கு அந்த அண்ணர் "என்னடா உன்ர வீட்டு அட்றஸ்?"...ம்...


தெரியாது!


தெரியாது.அம்மாவை,அப்பாவை,அன்புடைய சகோதரத்தைத் தெரியாத முகவரியால் நான் தொலைத்தேன்.


என்னோடு உலாவும்-வாழும் எல்லோரும்தாம்.


மஞ்சுவுக்கு ஒரு அம்மாவும்,பல அப்பாக்களும் இருப்பது தெரிந்திருக்கு.அவள் அம்மாவோடு இருப்பாள்.பொழுதுகளில் என்னோடு உலா வருவாள்.


நாங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.



எங்கள் கதைகளில் நாங்களே நாயகர்கள்.எனினும் எங்களுக்கும் ஸ்ரீதேவியைக் காதலிக்கவும் தெரியும்.தெருவில் அமிதாப் பச்சனாக வாய்விட்டுப்பாடவும் தெரியும்.



ஒருநாள்,ஒருநாள் என்னப் பல நாள் பொலிசினால் நகரத் தூய்மை-அழகு கருதி நகருக்கு அப்புறமாகத் துரத்தப்படுவதும் உண்டு.நாங்கள் மீளவும் நகரத்துக்குள் கால் வைப்போம்.


எங்கே போவோம்?


இந்தியாவின் கதாநாயன் கிருஷ்ணன்!


ஆனால் இந்தக் கிருஷ்ணாவுக்கு தாயுமில்லை,தந்தைத் தேசமுமில்லை.வீதியின் விளிம்பில் படுத்துறங்கும் நாம்,சமூகத்தின் உள்ளேயும் வாழ முடியாது விளிம்பில்தாம்.


ஆம்! நாங்கள் விளிம்பு மனிதர்கள்.


"சலாம் பம்பாய்"-மீரா நாயர்.


"என்ன பிரச்சனை?,ஒரு பிரச்சனையுமில்லை!" -மீரா நாயர்.


வெண்திரை மூடி விடுகிறது.


மீளவும்,மீளவும்... ஒரு அறுபது தடவைகளுக்கு மேலே இந்தச்"சலாம் பம்பாய்"க்குள் வாழ்ந்திருக்கிறேன்.அதனால் எனது பையனுக்கு"கிருஷ்ணா" என நாமமும் இட்டேன். அந்தக் கிருஷ்ணா அநாதையில்லை என்பதற்காக நான் கிருஷ்ணாவுக்குப் பெற்றவனாய்... இது நிஷம்!வாழ்வு இப்படித்தாம் மனதுள் விரிகிறது.வசந்தத்தை நாம் வடிவமைப்பதிலும்,வாழ்வதிலும் இணைத்துவிடுகிறோம்.

.............................................................................................................................



சுய உணர்வும்,சுய நம்பிக்கையும் சமூகத்தின் அனைத்து ஆளுமைக்கும் அடிப்படைக் காரணியாகும்.மனித சமுதாயத்தில் அநேகமாகப் பல குழந்தைகள் அச்சத்தைத் தரிசிப்பவர்கள்.சமூகப் பாதுகாப்பற்ற ஒரு மொன்னைத்தனமான ஆட்சி,நிர்வாகக் கட்டமைப்பு உலகத்துள் நிலவுகிறது.இங்கே மனிதவுணர்வுகள் இயந்திரத்தனமான மனதுகளுக்குள் பின்னப்பட்டிருக்கிறது.இது சமூகத்தின் மொத்த மறுவுற்பத்தியையும் பாழடித்தபடி, பொருள் உற்பத்தியின் திறனைத் தினம் உயர்த்துவது எப்படியெனச் சிந்திகிறது.இந்தவுலகத்தில் துண்டாடப்படும் மனித ஆற்றலானது எந்தக் காரணத்துக்காகவும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.இது தாரளமயமான ஜந்திர வடிவத்துக்குள் உலகைத் தரிசனம் செய்யுந் தரணங்களில் தகவமைக்கும் மானுட மாதிரியானது மேலே வரும் வாழ்வைத் தினம்,தனம் மெருக்கேற்றி வளர்த்தெடுக்கிறது.



இன்றைக்கு மானுடத்திடம் சுய பெறுமானாவுணர்வு குறைந்துவிட்டது.சுயமதிப்பென்பது மானுடத்தின் ஆளுமையை விருத்திக்கிட்டுச் செல்வது.அது மனித ஆற்றலைத் தீர்மானிப்பதும் அறிவை மேம்படுத்திப் பல நல்ல சமூக மனிதர்களை உலகத்துள் வாழத் தருவதுமாக மறு உற்பத்தி இயங்குவதன் ஆதார சுருதியாகும்.இந்தச் சுயமதிப்பு சமுதாயத்தின் மொத்த உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையில் ஒருசில மேட்டுக் குடிகளுக்கான வரையறையாக மாற்றப்பட்டுள்ளது.இவர்கள் தவிர்ந்த சமூகத்தின் மற்ற மனிதர்கள் யாபேரும் இந்தச் சமுதாயத்தின் ஏதோவொரு விளிம்பில் தொங்குகிற ஒட்டுண்ணிகளாகச் சமூக யதார்தத்தம் உருப்பெற்றுள்ளது.இது சமுதாயத்தின் கடமையைச் சரிவர இயக்க முடியாது ஆட்சியையும்,அதிகாரத்தையும் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆளும் வர்கத்தின் அரசியலானது இந்தவுலகத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன்கள் குழந்தைகளை வீதிக்கு உதைத்துத் தள்ளியுள்ளது.இந்த ஈனத்தனமான பொருளாதார இலக்கானது மனிதர்களில் இப்படி மனிதக் குப்பையாக சமூகத்தின் ஒருபகுதித் தலைமுறையைத் தனது கழிவாக்கி வைத்திருக்கிறதென்றால் இந்த ஆட்சி,அமைப்புகள் எவ்வளவு மனிதக்கொடுமைகளைச் செய்கிறது!இதைக் கடைந்தெடுத்த துரோகத்தனமென்பதா இல்லை பயங்கரவாதம் என்பதா?


இது பயங்கரவாதமே!


மனிதக் கூளங்களாக நூறு மில்லியன்கள் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில்கிடந்து உழல இந்த மனித சமுதாயமும்,அதன் பெருந்தலைவர்களும் அமைதியாகக் "கனவு காணுங்கள் இளைஞர்களே"என்கிறார்கள்!


எதைப்பற்றிக் கனவு?


கோடிக்கணக்கான குழந்தைகளை எங்ஙனம் வீதிக்கனுப்புவதென்றா?


வீதிகள்தோறும் மனிதக் கழிவாகக் குழந்தைகளைக் கொட்டிவைத்திருக்கும் தேசங்கள் வீராப்போடு போர்கள் செய்கின்றன!


இன்றைய அரசுகள்-நிறுவனங்கள் விண்ணுலகத்துக்கு ரொக்கட்டுகளைச் செய்மதிகளை பல கோடிக்கணக்கான நிதியிட்டு அனுப்பிவைக்கின்றன.ஆனால் அப்பாவி மனித ஜீவன்களுக்கு ஒருபடி உணவளிக்கமுடியாது,தேசத்துக் குழந்தைகளைச் சமுதாயத்தின் விளிம்பில் உந்தி தள்ளி அவர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டித்தனமாகப் பறிக்கின்றன.இது கொடுமையில்லையா?,கோபம் வரவேண்டாமா?எத்தனை காலத்துக்குத்தாம் மற்றவர்களைக் காறித் துப்பிப் பழகப்போகிறோம்!இந்தக் குழந்தைகள் நம்மில் ஒரு அங்கமில்லையா?


நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!


உலகப் பொருளாதாரப்போக்குகள்,அதன் காடைத்தனமான சுரண்டல்,மற்றும் நிதிமூலதனத்தின் கண்ணைப் பொத்தியடிக்கும் வட்டி,அந்த வட்டிக்கு வட்டி இப்படி நிதியை வைத்திருப்பவர்கள் செல்வத்தில் புரண்டொழும்ப,உலகத்துச் செல்வமெல்லாம் இவர்கட்கே சொந்தமெனும் மோசடி அரசுகள்-சட்டங்கள்.இவற்றைப் பொறுத்தே பழகுவெனக் கல்வி,நிர்வாக ஒழுங்கு,சட்டம்,நீதிமன்றம்,பொலிசு,இராணுவமென்று பற்பல ஒடுக்குமுறைகள் விலங்கிட அப்பாவிக் குழந்தைகள் அநாதையாகிக் கண்முன்னே செத்து மடிகிறார்கள்.


கடைந்தெடுத்த யுத்தங்கள்,கண்மண் தெரியாத போர்களின் காட்டுமிராண்டிக் குண்டுகள் எத்தனை வகையான துன்பத்தைச் சிறார்க்கு வழங்கி விடுகிறது!


1830 இல் உலக வல்லரசு பிரித்தானியாவிலேயே 30.000. அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி வீதிக்கு வந்தார்கள் என்கிறது ஒரு அமைப்பின் பிரசுரம்(terre des hommes)..ஆனால் அது இந்தக் காரணத்தாலல்ல.சமுதாயத்தில் எங்ஙனம் வறுமை தோன்றுகிறதென்பதும்,குழந்தைகளின் பெற்றோர்கள் எங்ஙனம் இணைந்து வாழ முடியாதுபோனது அல்லது குழந்தைகளைச் சமுதாயத்தின் பொது உயிரியென்ற வகையில் அவர்களைக் காக்க அரச முயலவில்லையென்பதையும் வெறுமனவே பெற்றோர்கள் இன்மை என்பதற்குள் அடக்கி, உண்மைகளை உருத்தெரியாமல் அழிப்பது இந்தச் சமூக அரசியலுக்குப் பழக்கமாகிறது!இதுதாம் முதலாளியத்தின் தப்பித்தல்.முதலாளியத்தில் இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாது தொடர்ந்தே இருக்கும்.வேலையில்லாத் திண்டாட்டத்தைப்போன்று!


ஆண்டுதோறும் கடலில் கொட்டும் கோதுமையும்,பழங்களும்,மற்றும் பல்வகைத் தானியங்களும் இந்தவுலகத்திலுள்ள அனைத்து மானுடர்களும் ஒரு மாதத்துக்கு உணவருந்தப்போதுமானது.பல இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள விளை பொருட்களைச்"செயற்கைத்தனமான அழிப்பு"எனும் சந்தை விதி வார்த்தையில் நாம் அழைத்துக்கொள்கிறோம்.இவையாவும் எதன்பொருட்டு?முதலாளியத்தின் "சந்தைப்படுத்தல்-மதிப்பிறக்கத்தைத் தணித்தல"; எனும் தந்திரத்தின்-உத்தியின் விளைவல்லவா?


இன்றைய நிலவரப்படி 100 மில்லியன் வீதிக்குழந்தைகள் இந்த உலகத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!(தரவு:Weltgesundheitorganisation WHO.)இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் முப்பது மில்லியன் வீதிக் குழந்தைகள் வாழ்கிறார்கள்.பிரேசில்போன்ற உலகின் மிக ஏழ்மையான நாட்டில் ஏழு மில்லியன்கள் குழந்தைகள் வீதியில் கையேந்தும்-கண்ணயரும் நிலை.



வளர்ச்சியடைந்த ஜேர்மனியானது உலகத்தின் எந்த நாட்டையும்விட மிக முன்னேறிய சமூகப் பாதுகாப்புடையது.அதன் மண்ணிலே அண்ணளவாக 40.000. வீதிக் குழந்தைகள்,தெருவினில் சீவித்துச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவென்ன ஜப்பானென்ன முதலாளியத்தின் மூச்சு எங்கே நிலவுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்வைத் தொலைத்துத் தெருவுக்குத் துரத்தப்படுகிறார்கள்.



"இராஜசிறீ பன்சிவார் கூறுகிறார்:":"Viele Leute meinen die beste Hilfe fuer diese Kinder waere,sie zuruek zu den Eltern zu schicken oder bei wohlhabenden Leuten unterzubringen.Das ist eine Illusion aus den Filmfabriken"-Voluntary Organisation in Community Enterprise-VOICE."இக் குழந்தைகளை பெற்றோர்களுடன் அல்லது வளம்மிக்க மனிதர்களிடம் மீள அனுப்பிவைப்பதே சாலச் சிறந்ததெனப் பல பேர்கள் எண்ணுகிறார்கள்.ஆனால் இது ஒரு மாயை சினிமாவால்."


இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன்கள் குழந்தைகள்-பெரியவர்கள்,பெற்றோர்கள்-குடும்பங்கள்; முற்றுமுழுதான அநாதைகளாகத் தெருக்களில் அலைகிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைதாம் இவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக இருக்கிறது.இந்த தொழிற்சாலை இச் சிறார்களை- இளைஞர்களை இரண்டும் கெட்டான் நிலைகிட்டுச் சென்று எவருடனும் இணைய முடியாத அகப் புறநிலைக்குள் தள்ளி விடுகிறது.மில்லியன் கணக்காகக் குழந்தைகளையும்,பெற்றோர்களையும் தெருவுக்கு விரட்டியடித்த இந்தியப் பொருளாதாரமானது இப்போதுதெல்லாம் வல்லரசுக்கனவு காண்கிறது.


இவையனைத்தும் இந்த முதலாளித்துவப் பெரும் சுரண்டலினால் தொடரப்படும் பயங்கரவாதமாக இனம் காணப்பட வேண்டும்.
இத்தகைய அரசியல் பொருளாதாரப் பயங்கரமானது இன்னும் சில தரணங்களில் பல மாவட்டங்களில் மனிதர்களைக் கிருமிகளிடமிருந்து காக்காது கொன்றுவிடும் திட்டம் வைத்திருக்கின்றது.சனத்தொகை இங்ஙனம் குறைப்பதற்கானவொரு பொருளாதாரப் புள்ளி இனத்துவ அடையாளப்படுத்தலுடன் நகர்ந்துகொண்டிருப்பதும் இங்கே கவனிகத் தக்கது.


எனவேதாம் கூறுகிறோம் இவ்வுலகம் மாற்றப்படவேண்டுமென.




ப.வி.ஸ்ரீரங்கன்

Thursday, January 03, 2008

ஞானி நிலவினைச் சுட்ட மூடதை சுட்டுவிரல் நோக்கினால்?...

ஞானி நிலவினைச் சுட்ட
மூடதை சுட்டுவிரல் நோக்கினால்?...


கிராமத்தில் அடிக்கடி பாட்டியின் வாயிலிருந்து வரும் இந்த மொழிக்கு ஒத்ததாக "தலித்தியம்-பெரியாரியம்,இலக்கியஞ் செய்யும் எந்த ஈழத்து மனிதரையும் நம்ப வேண்டாமென"ச் சொன்னார் வலைப்பதிவர் தமிழச்சி அவர்கள். இப்போது, இன்னொரு அவசரமான குறிப்பில் தனது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்!மிக அற்புதமான புரிதல் அது.சிந்தனை என்பது எங்ஙனம் தோன்றுகிறதென்பதை அவர் புரிந்த தளத்திலிருந்தே இவை உருவாகிறது.அதாவது அவரது மதிப்பீடுகள்!


நாம் சார்ந்திருக்கும் கருத்தானது சிந்தனை என்பது"புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறது"என்ற பொருள் முதல்வாதத்தோடு ஒத்தி வருவது.இதைக்கடந்து சிந்தனையானது தனித்துவமானது-சுதந்திரமானது,அது எப்போதும் சுதந்திரமாக எதிலும் கட்டுப்படாமல் இருப்பதான கருத்தியல் கட்டுமானத்துள் இறங்க முனையும் கருத்துக்களுக்கிசைவாக தமிழச்சி குறிப்பிடுவதைப் பார்க்கும் போது, அவரது அறிவினது வியாபித்த புரிதலின் கருதுகோள் மிகை வாதத்துக்கு ஏற்றதல்ல!


என்றபோதும்,மனிதரின் வாழ் நிலையே மனிதவுணர்வைத் தீர்மானகரமாகத் தகவமைக்கும் போது, நாம் எமது நிலையைச் சுட்டுவது தகும்.


தனிநபர்சார்ந்த மிகையான மதிப்பீடுகள் என்பது என்ன?


ஒரு நபரை,அவரது பலம் பலவீனங்களை அறியாது தலையில் தூக்கிவைத்து,அந்த நபரால் எல்லாம் முடியும்.அவர் சமூகப் புரட்சிக்கு வித்திடுவார்.அவரால் ஒரு தேசம் விடிவுறும்.அவரால் வறுமை ஒழியும்.அவர் மிக அற்புதமான "நல்ல"மனிதர்,அவர் பார்போற்றும் ஆற்றலுடையவர்...இத்யாதி மேட்டர்களைப் பற்றிய மதிப்பீடுகள் தகர்கின்றன என்று சொல்லும்போது,தமிழச்சி அவர்கள் கலிலியோ கலிலாய் பற்றியும், பொருள்சார்ந்த அவரது குறிப்பிட்ட புலனாகும் அறிதல் பற்றியும் கூறுகிறார்.



இதுக்கும் தனிநபர்சார்ந்த மிகையான மதிப்பீட்டுக்கும், பொதுமைப்படுத்தும் தளம் எதுவாக இருக்கிறது?


சமுதாயப் புரட்சி,விடுதலை என்பதெல்லாம் தனிநபர்களின் விருப்புகளால்-ஆர்வக் கோளாறுகளால் நிகழ்வதல்ல.அவை சாரம்சத்தில் நிலவுகின்ற அமைப்பை மாற்றும் பொருளாதார மாற்றம் மற்றும் சமுதாயத்தில் பெரும் பகுதி மக்கள் இணைந்தாற்றும் வேலைத் திட்டத்தோடு நடை பெறுவது.இங்கே,சிந்தனையின் தோற்றம்,புறநிலையின் தன்மை அது தரும் அகநிலையின் மாற்றம்,சிந்தனையூடாக உணரப்படும் கற்பித மொழி,அந்த மொழியைச் சிந்திப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உடைந்த ஊடக நிலை.இதன் வாயிலாக மனிதர்களின் இயலாமை என்றெல்லாம் சிந்தனை பற்றிய புரிதலில் பற்பல கூறுகள் இருக்கிறது.எது எவ்வகையாகினும் புற நிலையின் தன்மையே சிந்தயைத் தூண்டுகிறது!


அறிவியல் தரவுகள் புறப்பொருள்களின்சார்தலிலிருந்து மீள் உருவாக்கங் காண்பவை.


இல்லாதவொன்றிலிருந்து எந்தவொரு உலகமும் இல்லை.இங்கே, பருப்பொருளாக இருக்கும் மூலத்திலிருக்கும் எத்தனையோ நிலைகள் அறிவியற்றரவுகளாக நம் முன் விரிகிறது.அவைகூடக் கால அவகாசத்தில் உண்மையாகவும் இன்னொரு காலத்தில் தவறான புரிதலாகவும் இருக்கச் சாத்தியமாகிறது.


பொருள்சாரா அகநிலையிலிருந்து எந்தக் கண்டறிதலும் நிகழ்வதல்ல.


பாம்பைக் கண்டவுடன் தடியெடுத்து அடிக்க முனையும் அறிவானது எங்ஙனம் செயற்படுகிறது?


ஒன்று பொருள்சார்ந்து.மற்றதும் பொருள்சார் அநுபவத்தைக் கற்பிதமாக அறிந்த உணர்வு நிலை.இவை இரண்டும் புறநிலையின் தன்மையிலிருந்தே அகநிலைப் பண்புகளை ஒழுங்கிட்டவை.


மற்றவரின் கருத்துக்குச் செவிசாய்த்தல்- சுதந்திரம் அளிப்பதென்ற கருத்துச் சுதந்திரத்துக்கும் நான் சொன்ன சிந்தனையில் நிலவுகின்ற அமைப்பின் மேற்கட்டுமான கருத்தியல் செயற்பாட்டுத் தொங்கு நிலை-உணர்வு-கற்பிதம் போன்றவற்றுக்கும் சம்பந்தம் என்ன?


இன்றைய கல்வியானதே இந்த அமைப்பின் மிகப் பெரும் கருத்தியல் நிறுவனமாகும்.இங்கே,மானுட நடத்தைகள் யாவும் அந்த வாழ் நிலையிலிருந்தே எழுகிறது.இதை மறுப்பவர்கள் மதவாதிகள்!



அவர்களேதாம் கூறுவார்கள் அனைத்தும் பிறவிக் குணம்,பாரம்பரியத் தொடர்ச்சி.தேவ குணம்,அசுர குணம் என்றபடி.இதன் தொடர்ச்சியாக "ஆத்துமா"எனும் கருத்தியல் மனது தெவிட்டாது பல கதைகளைச் சொல்லி அது இறையின் இன்னொரு பகுதி என்பர்.அங்கே,மூப்புப் பிணி,பாவ புண்ணியம் நீங்கிய,கண்களால் காணமுடியாத,எதுவுமே தீண்டமுடியாத-எவ்வுணர்வுமற்ற பெருவாழ்நிலை அதற்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.அதாவது ஐம் புலன்கள் உடலைச் சேர்ந்தவை,புலன்களின் உணர்வாக "ஆத்மா"இருக்கிறதென்கிறது உபநிஷதம்!


நீங்கள் எந்தவகை தமிழச்சி?


தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்

ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ...

தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!



ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ சாரம்சத்தில் மானுட நடத்தையை நம்புவதே!அங்கே,நிலவும் சமுதாய ஒழுங்குகளே மறைமுகமாக நடத்தையாகின்றன.முதலாளியச் சமுதயத்தில் இன்றைய வாழ்வு முறைகள்-அநுபவங்கள் யாவும் மிக வேகமாகப் பொதுமையாகிறது.


தனிமனித நடத்தைகளின் மீதான ஆழ்ந்த புரிதல்கள் அவசியமானவை!


எந்தத் தனிநபரும் முற்றுமுழுதான ஞானப் பழமோ அன்றி சமூகத்துக்கு விரோதமான மனிதராகவோ இருப்பதற்கில்லை.

மனிதர்களை அவர்களது வர்க்கச் சார்பிலிருந்து புரிந்து கொள்வதற்கும் அப்பால் நிலவுகின்ற அதிகார-ஆதிக்கச் சிந்தனைகளின் அடிக்கட்டுமானமான பொருளாதார உறவுகளுக்குள் பொருத்தி அறிவது-தீர்ப்பிடுவதே சரியானது.ஏனெனில், புறநிலைகளின் தன்மையே நமது சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.இந்தச் சிந்தனையின் புறநிலை ப+ர்வமான பொருள்சார் அறிவானது சாரம்சத்தில் மாற்றித்திலிருக்கிறது.மாறும் பொருளின்றி மாற்றம் மட்டுமே நிரந்தரமாகிறது.எனினும்,பொருளுக்கும் மனிதவுணர்க்குள் நிலவும் உடலுக்கும் நேரிடையான பகைமுரண்பாடுண்டு.

இங்கே,மனம்-சிந்தனை-ஆத்மீகத் தேடல்-நிலை என்பது இருப்பதால் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு மனிதரிடத்திலிருந்து வேறுபாடான அநுபங்களைக் கொண்டிருப்பதால்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என்பது மனிதரிடத்தே அகவயக் குறைபாடாகவே பொருந்துகிறதெனினும், இந்த மாற்றத்தை இன்றைய சமுதாயமானது தொடர்ந்து தமது இருப்புக்கும்-நிலைத்த வியாபகத்துமாகப் பயன்படுத்திவரும் ஒவ்வொரு கணத்திலும் தனிமனித நடத்தைகள் மிகவும் தொங்கு நிலையான தளத்தில் தன்னை இனம் காட்டுகிறது.இங்கே,ஈழம் என்றோ அன்றி இந்தியாவென்றோ எந்தவொரு சிறப்பும் எந்தத் தனிமனித நடத்தைக்கும் கிடையாது.நிலவுகின்ற அமைப்பின் அனைத்துச் சீரழிவும் அந்தச் சமுதாயத்துள் வாழும் ஒவ்வொருவரிடமும் பிரதிபலிக்கும்.

இத்தகைய சமூக உறவுகளில் எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறிதிப்படுத்திய இந்தவுலகத்தில்,தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?





இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!

மனித இருப்பின்மீதான எதிர் தாக்குதலாகவிரியும் மனிதர்களின் மூளை,அந்த மூளையைத் தாங்கும் உடலை விவேகமற்ற வெறும் மாமிசப் பண்டமாகக் காண்கிறது.இது தன்னிருப்பின்மீதான உச்சமான எந்தக் கனவுகளையும் சிதைத்து,ஆத்மீக உறவுகளனைத்தையும் வெறும் சடங்குத்தனமான நகர்வுகளாக்கி விடுவதில் முனைப்பாக இருக்கிறது.அர்த்தமற்ற தனிநபர் வாதங்களால் சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது.


நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.ஒவ்வொரு தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது வெற்றிக்கான பாதையாகாது.



நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.

கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர்ர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!


சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது, நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.இத்தகைய தவறுகள் பலரைப் போடுவதற்கும் உடந்தையாக இருக்கிறது.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.



இப்படி உலக வளர்ச்சி நகரும்போது, ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி ஒடுக்கப்படும் மக்களைக் காவு கொள்கிறது.


இங்கே யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?


உண்மையான புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டலற்ற தனித்தவொரு எந்த மனிதரும் தனது செயலுக்குத் தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு மக்களைக் காவுகொள்கிறது.



சதா போராட்டத்துக்குள் வாழும் மனிதர்கள் எதிரியைப் புரிந்திருப்பினும்-அவர்களது போராட்டம் எதிரியிடம் சலுகைகளைப் பெற்றுத் தமது வாழ்வைச் செப்பனிடுவதாகப் போராட்டம் முடங்கிக் கிடக்கிறது.இங்கே>ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ சாரம்சத்தில் மானுட நடத்தையை நம்புவதே!நிலவும் சமுதாய ஒழுங்குகளே மறைமுகமாக நடத்தையாகின்றன.


"அரசியல்நோக்கத்திற்காக பொது வாழ்க்கையிலும்,இலக்கியத்துறையில் இருக்கும் தேசத்துரோகிகளைப்பற்றி குறிப்பிடுகின்றேன்.":-(((((


ப.வி.ஸ்ரீரங்கன்

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...