Sunday, January 02, 2011

"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை" ஆதரிப்போம்!

ஷோசலிசத் தமிழீழத்துக்காகக் கூடியவர்கள் இப்போது இலங்கையில் நடைபெறப்போகும்"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காக"க் கூடுகின்றனர்-கையெழுத்துப் போட்டு இலங்கை ஜனநாயகத்தைத் தழைத்தோங்க வைக்கின்றனர்.இந்தப் புதிய ஆண்டில் இப்படியும் ஒரு போலிக் கூட்டம் மடியிற் கனத்துடன் விடிய மறுக்கும் மக்கள் முற்றத்தில் புரட்சிக் கோலமிட, மகிந்தாவோ தேசியக் கூத்தில்இலங்கையைத் தாண்டி சீனாவில் நிமிர்கிறார்!

இந்தச் சூழலில் எமது அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,"நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?" என்று கேள்விகள் தொடர்கின்றன!

நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்? "தமிழீழ" விடுதலை,சுதந்திரம்-சுயநிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் "இடதுசாரி"யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கு எதை வழங்க முடியும்?இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?இவைகள் குறித்தான குறைந்த பார்வையாவது இப் புதிய ஆண்டில் அவசியமானது.


இராயாகரன் பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்ன பல குள்ள நரி"இடது போலிகள்"ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு எது-எப்படி பலியாகிறதென்றவுண்மை"மக்கள்"நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.


உதாரணத்துக்கு இம்மாதம்மட்டில் இலங்கையின் தலைநகரில் நடைபெறவுள்ள"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு"பற்றிக் கவனத்தைக் குவிப்பவர்களுக்கு இந்தப் புலம்பெயர்"இடதுகள்-வலதுகள்"குறித்தவொரு முடிவுக்கு வரமுடியும்.இம்மா நாட்டை இலங்கையின் பாசிச அரசுக்குத் துணைபோகும் கருணா-பிள்ளையான் குழுவின் தலைமைச் சிந்தாந்தக் குரு ஸ்டாலின் முதல் இரயாகரன்வரை ஆதரிப்பதாக இருக்கின்றதென்றால் இதுள் மக்களது நலன் என்னவென்று மிக இலகுவாகப் புரிந்துணர முடியும்.இம்மாநாட்டை இந்திய-இலங்கை உளவமைகள் நெறிபடுத்தக்கூட முடியும்.இதுள்இரஜாகரன் போன்ற"போலிப் புரட்சிக்காரர்கள்"ஆதரிப்பதும் எதிர்ப்பதும் சகஜமாகவே நடந்தேறுகிறது.இது ஏமாற்று அரசியல்!


இத்தகைய ஏமாற்று அரசியலுக்குத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி "இடது-வலதுகளுக்கும்" எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?


இக் கேள்விகளுக்கு நான் பல்வேறு கட்டுரைகளுடாகப் பதில் கூறியிருக்கிறேன்.


ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி நமது போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.நம்மைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது சேவகர்கள்"இடது-புலம்பெயர் படைப்பாளிகள்"எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.இந்தப் போலிகளில் எவரும் மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமையையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.எல்லாமே மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக்கிரலிடுகின்றன.இதுள் முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!


காலம் பூராகவும் நம்மை ஒடுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்கள் ஏதோவொரு முறையில் ஒடுக்குதலையே தத்தம் தலைமைக்குள் ஆதிக்கமாக-அதிகாரமாக நிகழ்த்திய வரலாற்றுப் போக்கில் அதை மேலும் தமது எஜமானச் சேவைக்கேற்ற வகைகளில் இப்போது தகவமைக்கின்றன.ஒருபுறம் இடது வேடம்-மறுபுறம் ஜனநாய ஒன்றிய வேடம்.இந்தப் போலித்தன அரசியலுக்கு இனியெவர் பலியாவர்கள் என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன.


எங்கு நோக்கினும்,பணம் பண்ணும் ஒரே நோக்கு மலிந்து கிடக்கிறது!



அழிந்த "ஈழத்தை"ச் சொல்லி,போராட்டத்தைச் சொல்லி,அகதிகளைச் சொல்லிப் பிழைப்பு நடந்தேறுகிறது.அடிமை வாழ்வு,உணவுக்காக,உடைக்காகக் கையேந்தும் சிறுமை வாழ்வைத் தந்ததைவிட எதையுமே இந்தப்"ஈழவிடுதலைப் போராட்டம்" நமக்குத் தரவில்லை!இதையே மீளத் தொடரத் துடிக்கும் புலம் பெயர்ந்து வாழும் முன்னாள் போராட்டக் குழுக்கள், அவர்களது எஜமானர்களெல்லாம் இன்னும் அதிகமாக மக்களை மொட்டையடிக்கும் அரசியலைச் செய்வதில் தத்தமது இருப்பை உறுதிப்படுத்தும் கபட அரசியலில்மிகமோசமான "துரோகத்தை" நான் இனங்காண்கிறேன்.


காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,உண்மை செத்துப் போகிறது.பற்பல முகமூடிகளது முகாங்களுக்குள் நடக்கும் சதி வியூகங்கள் ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்களில் பலரை மிக மோசமான நடாத்தைக்கு உந்தித் தள்ளுகிறது.


எந்தத் திசையிலும் நம்பிக்கை கருகிச் சாகிறது.


பார்க்கும் இடமெங்கும் போலி"இடது சாரிகளது"கை மேலோங்கியிருக்கிறது.அவர்கள் புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே அரசியலோடு இன்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதை எவரும் இலகுவில் அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது!


இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.புலம் பெயர் மண்ணிலிருந்தபடி"புரட்சி"பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!


தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.


இந்தக் கூட்டத்தைத் தமிழக ம.க.இ.க. நல்லதொரு சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி,நிராகரித்தது வரலாற்றுத் தேவையே!அதுபோன்று புலம் பெயர் மக்களாகிய நாம் பரவலாக இவர்கள் குறித்துக் கவனத்தைக் குவித்து இவர்களது அரசியல் மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும்.இவர்தம் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்காமல் இவர்களைத் தொடர்ந்து இயக்கங்கட்டவும், அதைத் தமிழ் மக்கள் பெயரால் வளர்த்தெடுக்கவும் அநுமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்களது நலனை அந்நியர்களுக்கு அடகுவைப்பதாகவே இருக்கும்.


இதை, நாம்"சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை"ஆதரிக்கும் எத்தனையோ சிதைந்துபோன போலிக் கயவர்களது செயலில் உரைத்துப் பார்க்க முடியும்! இப்போது,இக் கயவர்கள் இலங்கை அரச பரிபாலனத்துக்கு ஆட்காட்டும் வேலையில் கையெழுத்துப்போட்டுத் தம்மை நியாயவான்களாகவும், இலங்கை அரசினது புதிய தெரிவுகளுக்கு உடந்தையானவர்களாகவும் நிறுவுவதில் தம்மை மாநாட்டை ஆதரிக்கும்"எழுத்தாளர்களாக-சமூகவியலாளராக"காட்டும் வித்தைதாம் இந்ந ஆண்டின் அதிக தந்திரமுடையது.இதன் வழி இலங்கை அரசைத் தமிழ் மக்களது "புத்திஜீவிகள் மட்டம்" தொடர்ந்து ஆதரிப்பதாகவும் இனம் காட்டி, இலங்கையைப் பாசிசத்துக்குத் தொடர்ந்து ஜனநாயக முகமூடியணிகின்றனர்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2011

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...