Saturday, January 01, 2011

தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?

ஏன், சிங்களத்தில்"மட்டும்" தேசிய கீதம் பாடப்படாது-பாடினால் என்ன ஓய்?


ன்று,நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக மகிந்தா செய்யும் மொழிவழித்தாக்குதல்களே ப+தாகரமாகத் தெரிகிறது.உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும்,ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?

பதில் மிக இலகுவானது.ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.


தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். கடந்த ஆண்டு 2009 இல்புலிகளின் பரிதாபகரமான அழிவு இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு,அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயக்கத்தின் அழிவு இன்று நம்முன் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை வறுமையுடன் சுட்டி நிற்கிறது!அவர்கள்,ஆதிக்க சக்திகளால் அடக்கப்படுவதென்பது தொடர்கதை.அவர்களை,அவர்களது இன அடையாள அரசியலே நிர்க்கதியாக்கி அடக்கி ஆதிக்க சக்திகளது காலில் விழ வைத்திருக்கிறது.

நம்மால் இதை உண்மையாக உள்வாங்க முடியுமா?

இந்த 2010ஆம்ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று புதிய வருடமாம்!எல்லோரும் மகிழ்ந்து குலாவி ஓய்ந்து...

எனினும்,நாம்,எம்மைப் பார்த்துக் கேள்விகளைக் குவிக்க மறுக்கிறோம்.நமது கடந்த கால அழிவு அரசியலை மிக இலகுவாக மறந்துவிட்டு மகிந்தாவின்"சிங்களத தேசிய கீதம்"பற்றிப் பண்டுதொட்ட புரிதலில் கருத்தாடுகிறோம்!எம்மிடம் பாராளுமன்றப் பாசிஸ்ட்டுகள் குறித்த பார்வை மிக அருகிய நிலையில் மகிந்தாவைச் சாடுவதில் இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிய மறுக்கிறோம்.இதுவே புலிகளது அரசியலது தொடர்ச்சி.

இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு, தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது.அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது.அது,பாலஸ்த்தீன-கொங்கோ மற்றும்,ஈராக்- கொசோவோ மக்களுக்கு,குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும்.என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து,இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு.

நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்- இப்போதும் எதற்காக முடக்குகிறோம்?

நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?இன்றுவரை டக்ளஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் யுத்தக் கிரிமனல் இராஜபக்ஸாவின் காலில் விழுவதென்பது என்ன? அது,உலக ஆதிக்கச் சக்திகளுடன் ஒட்டியுறவாடுதலென்பதையுந்தாண்டி,இலங்கை ஆதிக்கத்திடம் மண்டியிடுவதையெவர் புரிந்திருக்கின்றனர்?இங்கேதாம் வர்க்க நலனும்,அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைப் புரிக என்கிறோம்.மக்களது அரசியல் எழிச்சியை மொட்டையடிக்கும் தரகு இடதுசாரியப் பார்வையானது மகிந்தாவுக்கு விளக்கங் கொடுப்பதென்று கங்கணங் கட்டுவது திட்டமிடப்பட்ட அவர்களது எஜமானச் சேவையின் தொடர்ச்சியே.இன்றைய நிலையில் தமிழ் மக்களது பாரம்பரிய நில ஐதீகவுணர்வையே சிதைக்கும் இலங்கை ஆதிக்கமானது தமிழ் மக்களது முற்றத்தில் இலங்கைப் பாசிச இராணுவத்iதாக் குவித்து வைத்து நடாத்தும் ஜனநாயக விரோத வியூகமானது இனவழிப்பினது தொடர் சுற்றில் மிகவும் ஆழ்ந்து யோசிக்கத் தக்கது.

இது புதிய தரகு முதலாளிய நலன்களுக்கிசைவாக பரந்துபட்ட மக்களது நலனையும்-உரிமையையுங் குறுக்கும்போது அந்தக் கவனத்தை மகிந்தாவின் தேசிய கீத நாடகத்துள் திணிக்கும் இடதுசாரியப் போலிகள் மக்களது நலன்சார் அரசியலைத் தமது இருப்புக்குப் பயன் படுத்தி வருவதின் அப்பட்டமான கயமை அரசியலுக்குள் இன்று வீழ்ந்துள்ளனர்.

இன்றைய தமிழ் இடதுசாரிகள் போன்று,எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது?

இடப்பெயர்வு!-சாவு,பசி...

இதைவிடக் கொடிய பெரும்அழிவையெல்லாம் ஈழமக்கள் கண்டார்களா?

முள்ளி வாய்க்கால் யுத்தத்துள் பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள்.நாளாந்தச் சிங்கள அராஜகமாகத் தமிழ்பேசும் பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள்.எனினும்,உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது.அது,சிங்கள அரச ஆதிக்கத்துக்குச் சமாதிகட்டுவதாகச் சொல்லித் தமது சவக் குழியைத் தினமும்தோண்டிய நிலையில், எல்லாம் சரியாக நடந்தேறிப் புலிகள் பூண்டோடு அழித்துப் புதைக்கப்பட்டனர்!


இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான தேசநலப் பாதுகாப்புவென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும்,கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது.என்றபோதும்,தமிழ்த்"தேசியவாதிகளது"தவறான அரசியற் செல் நெறியால்நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.இந்திய-சீன வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் செத்த புலிகளைப் பயன்படுத்துகிறது.


"நாடுகடந்த அரசு-கே.பியின் புனர்வாழ்வுப் பெரும் தேட்டம்" எல்லாம் இந்த ஆதிக்கங்களது ஏதோவொரு வியூகத்தின் தெரிவுகளாக நமது மக்களை அண்மிக்கிறது!-இதுவொரு உதாரணம்தாம்.


சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதென்பது இலங்கையின் சிங்கள அரச வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பவருக்கு ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.பண்டார நாயக்கா சிங்களத் தேசிய முதலாளியத்தைத் தலைமைதாங்க வெளிக்கிட்டபோது தனிச் சிங்கமொழிச்சட்டவாக்கம் மேலெழுகிறது.இது சிங்கள வோட்டாளர்களை நோக்கி மாறுபட்ட நலனது தெரிவாகிறது.ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலக மூன்றாவது அணியின் தலைவர்களில் ஒருவர் பண்டாரநாயக்கவென்பதும் குறிபிடத் தக்கது.இன்றைய அரசியலும் அதே கதையின் இன்னொரு பாகமாக மாறுகிறது.ஏகாதிபத்திய முகாங்கள் பிளவுபட்டுக் கண்ட நலன்களோடு சந்தைகளை உருவாக்குகின்றன.இங்கே மகிந்தாவும் இலங்கைத் தரகு முதலாளியப் பிளவுபட்ட முகாமொன்றின் ஆசியக் கூட்டுக்குத் தலைமைதாங்குவது நிதர்சனமாகத் தெரிகிறது.அன்று,தமிழ்த்தலைமை "பண்டா-செல்வா ஒப்பந்தம்" போட்டபோது அவர்களது மேற்க்கு விசுவாசம் அதைத் தோல்வியடைய வைத்துப் பண்டாவையே கொன்று போடுமளவுக்குச் சி.ஐ.ஏ யின் அரசியலிருந்தது.இன்றும் தமிழ்த் தலைமைகள் இருவேறு முகாங்களாகப் பிளவுபட்டு மகிந்தாவையும்,மேற்குலக எஜமானர்களையும் ஜெபிக்கும் கூட்டமாக மாறியிருக்கிறது.


இதுள் தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?தமிழ் மக்களது மண்ணை அபகரித்து வைத்துள்ள சிங்கள அரச ஆதிக்கமும்,அவர்களது அடக்குமுறை வன்ஜந்திரமும்தமிழ் மண்ணைவிட்டு மாயமாக மறைந்திடுமா?ஆகவேண்டியது என்னவென்பதையே தட்டிக்கழிக்கும் அரசியலானது இப்படி முட்டுச் சந்தியில் தட்டிகட்டும் அரசிலது வெளிப்பாடுததாம் மகிந்தாவின் தனிச்சிங்களத் தேசியக் கூத்தைத் தூக்கிப்பிடிப்பதாகும்.


மொழிவாரியாகவும்,பிராந்திய ரீதியாகவும்வாழும் அநேகமான ஆசிய நாடுகளின் சிறுபான்மையினர் ஐரோப்பியக் காலனிய ஆட்சியின் கீழ் அநுபவித்த அடக்கு முறைகளைப்போலவே-அடிக்கடி அதிகமாகவும் அநீதிகளுக்கும்,அராஜகங்களுக்கும் உள்ளாகின்றனர்.இந்த அநீதிகளும்,அராஜகங்களும் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதல்ல!மாறாக,சிறுபான்மையினர் மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கேற்பத்தட்டிக் கேட்பார் யாருமற்றுச் சந்திக்கும் அரசியல் ஆதிக்கமும் அதன் வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்கப்படுதலுமே இன்றைய அவசியமான முரண்பாடாக இருக்கிறது.இதுவே பிரதான முரண்பாடாக இருப்பதைப் புரிய மறுக்கும் "தமிழ் இடதுகள்" மொழிக் குச்சியை வைத்துப் பற்குத்துகிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.01.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...