Friday, September 17, 2010

சபா நாவலனின் கட்டுரையை முன்வைத்துச் சில குறிப்புகள்.

தமிழ்த் தேசியவாதத்தின் தோல்வி...


சபா நாவலனின் கட்டுரையை முன்வைத்துச் சில குறிப்புகள்.

ரு முறைமையின்(உதாரணத்துக்கு:முதலாளிய உற்பத்திப் பொறிமுறை) கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் பொருள் உற்பத்தி-வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது உற்பத்தி முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது- அழிக்கப்பட்ட புலிகளது போராட்டத்தை,அவர்களது பாத்திரத்தை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.


இது பல "ஈழ"புரட்சிகரக் குழுகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.


இதைப் புரிந்துகொள்ள முனையும்போது,ஒரு குறிப்பிட்ட வலயத்திலள்ள மக்கட்டொகையானதின் சமூக வளர்ச்சியானது, தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்னைக் கொண்டிருக்கும்போது(திடீர் ஏற்றுமதி முதலாளியம்.பாதி அரச முதலாளியம் மீதி,தரகு முதலாளியம்)மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக அந்தப் பிராந்தியத்து மக்களது அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.


அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள் மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழமென்றும் அதற்கு மாற்றான தீர்வு எனுங் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.


இந்தப் புள்ளியில் நடந்து முடிந்த புலிவழிப்போராட்டமும்,அதன் பாத்திரமும் பற்பல படிப்பினைகளைத் தரமுடியும்.எனினும்,அது குறித்துச் சரியான ஆய்வு அவசியமானது.நாவலன் இது குறித்து இனியொருவில் எழுதிய வர்க்கச் சார்பு-தளம் குறித்த பார்வையில் புலிகளது இயக்கத்தை ஒரு விடுதலை அமைப்பாக்கும் அபாயமுள்ளது.இது குறித்த அறிதலென்பது அவசியமானது.புலிகளது பாத்திரமென்பதைப் புரிவதற்கான புள்ளியைத் தேடியே நகர்வது போராட்டத்தின் பிழைகளைக் கண்டடைவதும்,மீளப் புரிவதற்குமாக இருக்கட்டும்.


நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்இலங்கையின் தரகு முதலாளிய வர்க்கம்,மத்தியதரவர்க்கம் குறித்த புரிதலைக் குறித்து உணர்வு ரீதியாக ஆய்வதையுந்தாண்டிப்புலிகள் அமைப்பின்மீதான புரிதல் அநுதாபம் எனும் கருத்தியலைப் பலமாக்கி வருகிறது.புலிகளது வரலாற்றுப் பாத்திரம்,அவர்களது போராட்டம் உண்மையில் தமிழ்மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைத் தாங்கி நகர்ந்ததா?


இற்றுவரை "ஈழத்தில்":


1): ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் சாதரண மக்கள் உயிர் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டும்,


2): சுமார் 2.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,


3): முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,


4):கிட்டத்தட்ட 20 ஆயிரம்சிறுவர்கள் முடமாக்கப்பட்டும்,


5): இறுதி வன்னி யுத்தத்தத்தில் ஆயுதப் பயிற்சியுடைய 20 ஆயிரம்போராளிகள் படுகொலை செய்யப்பட்டும்,


6): புலிகளெனும் போர்வையில் சில ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள்இலங்கை அரசினது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டும்,


இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குச் சிங்கள அதிகார வர்க்கத்தத்துத் திமிரும்(இனரீதியான ஒடுக்குமுறையுடன் வர்க்கவொடுக்குமுறை), பிரபாகரனது-புலிகளது அடியாட்பாத்திரமும் மற்றும் வெளியுலகப் புலித் தலைமையது வலதுசாரி விசுவாசமே காரணமாகிறது.இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினலாக இருக்கும் மேற்கூறிய கூறுகள்மக்களிடம் எந்தவழியிலும் உணர்வு ரீதியாக ப் புரியப்படவுமில்லை.இது, இடை நிலை வியூகமாக முன் தள்ளும் அரசியல் பெரும்பாலும் என்னவென்பது புரியப்பட வேண்டும்.


முட்டிமோதும் அரசியல் வியூகம்:


உலகத்தை இன்று பற்பல நலன்களே தமக்கு ஏற்ற தெரிவோடு இணைத்தும்,பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.இந்தச் சூழலிற்றாம் தமிழ்ச் சமூகத்தின்மீதான அனைத்து அரசியல் வாழ்வும் ஏதோவொரு நலனுக்கேற்ற வகைகளில் அணுகப்படுகிறது.அந்த நலன்கள் முட்டிமோதும் முற்றமாகத் தமிழ்த் தேசியவாத அரசியல்கட்சிகளும்,இடதுசாரிய அரசியலும் ஒருங்கே இணையுஞ் சந்தர்ப்பம் தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமை குறித்த போராட்டத் திசையில் என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும்,இரு தரப்புஞ் சொல்லும் சுயநிர்ணயவுரிமை என்பது இதுவரை சிங்கள அரசாலோ அல்லது அவர்களது எஜமான சிங்கள ஆளும் வர்க்கத்தாலோ கவனிக்கப்படவுமில்லை அதுகுறித்து அவர்கள் எதையுமே அலட்டவுமில்லை. இந்தத் திசையில் அள்ளி வைக்கப்படும் கட்சி நலன்களோ திடீரெனக் கட்சிதாவுவதும், அணிமாறுவதுமாக நிகழ்கிறது.அதையும் மக்களது நலனுக்கெனச் சொல்கின்றார்கள்.இலங்கையில் 18 வது அரசியல் யாப்பு மாற்றத்துக்கான வாக்கெடுப்பில் இதை நேரடியாகக் காண முடியும்.


இந்த நிலைமையைக் குறித்துக் கவனித்தோமானால் இதுவரையான இலங்கை இடதுசாரிய அரசியலது சந்தர்ப்பவாதம் கட்சிசார் நலன்களது அடிப்படையில் இருந்தே எழுகிறது.கட்சியின் நலன்களானது பாராளுமன்றச் சாக்கடையில் மக்கள் விரோதமாக மாறுவது கவலைக் குரியது.ஆளும் மகிந்தா அரசுக்கெதிரான அரசியலானது வெறுமனவே மேற்குலகுக்குச் சாதகமாகத் தமிழ் தேசியவாதத்தலைமைகளால் முன்னெடுக்கும்போது,இடதுசாரியக் கட்சிகளோ வாக்கெடுப்புக்கு ஆதரவின்றியும்,எதிர்ப்பின்றியும் நடுநிலை வகிக்கின்றன.


இன்றைய ஜேர்மனிய இடதுசாரிய அரசியலில் தி.லிங்க எனும் இடதுசாரியக் கட்சியானது பாராளுமன்ற அரசியலை மக்களது-பெரும்பான்மை மக்களது அரசியற் குரலாக ஒலிப்பதையுந்தாண்டி பெரும் நிதி மூலதனத்துக்கெதிரான வர்க்கப்போரைத் தகவமைக்கிறது.அதன் அனைத்து உறுப்பினர்களும் புலனாய்வுத்துறைகளால் கண்காணிப்புக் உள்ளானாலும் ஒரு அங்குலம்கூடத் தமது போராட்டத்திலிருந்து விலத்தவில்லை!



நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!இலங்கையில் இடதுசாரிய அரசியலென்பது பாராளுமன்றத்துள் ஓட்டுக்கட்சிகளைவிட மோசமாகச் சீரழிந்துகிடக்கின்றன.இன்றைய நிலையில், "வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறதென்று" இலகுவாகச் சொல்லிக்கொண்டு இந்த இடதுசாரிகள் அரசியற்பலமின்றி பாராளுமன்ற அரசியலில் அடியுண்டு போவது எதன் பண்பினது தொடர்ச்சியாகும்?


இலங்கையின் இடதுசாரிகள் மாறிவரும் உலக அரசியல் வியூகங்களைச் சரியாகப் புரிந்திருக்கின்றனரா?அவர்களது அரசியலானது சீன மூலதனத்தின் இலங்கை நோக்கிய வரவில் மேற்குலகத்துக்கான எதிர்ப்பு முகாமொன்றைத் தகவமைக்க முடியுமெனப் புரிந்துகொண்டிருக்குமோவென அஞ்சத்தக்க நடவடிக்கையாகவே இடதுசாரியக் கட்சி அரசியல் நடந்தேறுகிறது.ஒருபக்கம் தேசியவாதத் தமிழ்த் தலைமைகள் மேற்கைத் தாங்கும் யூ.என்.பி.போன்ற கட்சிகளுக்குப் பின்னாலும்,நேரடியாகவும் மேற்கைச் சார்ந்தியங்க முனையும்போது,இலங்கையின் இடதுசாரிய அரசியல் சீனவினது இன்றைய பிராந்திய மேலாதிக்க அரசியலை மெல்ல ஆதரித்து இயக்கும்போக்கில் நிலைதடுமாறுகிறது.இது,இலங்கையினது சுய வளர்ச்சியை மறுத்தொதுக்கும் நடுத்தரவர்க்கத்தின் அபிலாசைகளோடு சமரசஞ்செயு;யும் போக்கின் பிரதான காரணியாகவிருக்கிறது.


இதனால், இலங்கையினது ஓரவஞ்சகமான இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப் படுகிறது. என்பதை இடதுசாரிகள் மறுத்தொதுக்கிவருவதில் முடிவடைகிறது.


இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டனர். இலங்கையின் நடந்துமுடிந்த உள்நாட்டுப் போரில் அதன்பங்கு(தரகு முதலாளியத்தின் பங்கு) மெல்லத் தகர்ந்து விட்டது. என்றபோதும், இலங்கைச் சிங்களத் தரகு முதலாளியமானது இன அழிப்பு வியூகத்தை அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான இன-வர்க்கவொடுக்குமுறையாக செய்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்குப் புலிகளது அழிவுக்குப் பின்பான தமிழ்ப் பிரதேசங்களது நிலைமைகள் சாட்சியாகிவருகிறது.ஊர்களது பெயர் மாற்றந் தொட்டுப் புத்தவிகாரைகளது வருகையும் இந்தப் போக்கினது மிகக் கெடுதியான பக்கத்தைப் புரிந்து கொள்ளத் தக்கதாகவிருக்கிறது.


மேல் காணும் வியூகங்களது தெரிவில் ஒரு இனத்தைச் சிதைப்பதற்கான அல்லது கலந்து காணாமற் செய்வதற்கான தெரிவுகள் குறித்து இலங்கையின் இடதுசாரிகள்"கம்"என்று கிடக்கிறார்கள்.


புலிகளும்,முள்ளிவாய்க்காலும்:


இனியொரு தளத்தில் நாவலன் அவர்கள் எழுதுகிறார்:"தமிழ்த் தேசியத்தின் தோல்வி-மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி" என்று.
இக்கட்டுரை பேசும் இலங்கை வர்க்க முரண்பாடு,வர்க்கவுருவாக்கம் குறித்து முரண்படுவதற்கு ஒன்றுமில்லை.இலங்கையில் தேசிய முதலாளிய வர்க்கமென்பதைக் கடந்த காலத்துள் நாம் இலங்கையின் அரசவுடமையாக்கப் புரிதலிலிருந்து சுதந்திரக்கட்சி தேசிய முதலாளியத்தின் தலைமையாகப் பண்டார நாயக்காவைப் புரிந்தோம்.தரகு முதலாளியத்தைக் கடந்து அப்படியானவொரு வர்க்கத் தட்டுக்கான பொருளாதாரம் சுயசார்பாக வளரக்கூடாதென்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது.இதன்பொருட்டுச் சி.ஐ.ஏ. பண்டார நாயக்காவை முடித்து இலங்கையின் தேசிய முதலாளியத்துக்கான சுயசார்பை உடைத்தெறிந்திருக்கிறது. இந்தவுண்மையும் பேசப்பட வேண்டும்-அணுகப்படவேண்டும்.


இன்று தேசங்கடந்து நிதிமூலதனம் பாய்கிறது.கூடவே,ஐரோப்பியத் பெருந்தொழிற்கழகங்கள் மூன்றாம் உலகத்தில் தமது கிளைகளை நேரடியாகவே நிறுவி நிர்வாகிக்கின்றன.இதுவரையான தரகு முதலாளியம் குறித்த புரிதலிலும் இது தோற்றுவிக்கும் பண்புரீதியான அக-புற மாற்றங்கள் ஆய்வுக்குரியன.புலிகளது தோல்வி குறித்தும்,"தேசிய விடுதலைக்கானதும்-தேசங்களது விடுதலைகானதுமான போராட்டங்கள் மத்தியதர வர்க்கத்தையும் அதன் மேலணிகளையும் தளமாக வைத்து உருவாகமுடியாதென்றும்,அத்தகையதைத் தளமாக வைத்துப் போராடிய இயக்கத்துக்குப் புலிகளது முள்ளி வாய்க்கால் பாடமாக இருக்க முடியுமென்கிறார்", நாவலன்.இது சரியானதுதாம்.எனினும்,இதனூடாகப் புலிகளது உண்மையான பாத்திரம் மறைக்கப்படும் அபாயமொன்றுள்ளது. புலிகளைச் சரியாக மதிப்பிட நாவலன் முன்வைக்கும் கருத்துக் குறுக்கே நிற்கிறது.


தமிழ் மக்களுக்குத் தேசிவிடுதலைப் போராட்டமெனப் பகரப்பட்டுச் சரமாரியாக அவர்களைக் கொலை செய்த இந்தப் புலிவழிப்பட்ட அழிவு யுத்தமும் அதன் பாத்திரமும் சரியாகப் புரியப்படவேண்டும்.புலிகளது வரலாற்றுப் பாத்திரங்குறித்துச் சரியான ஆய்வை முன்வைக்கவேண்டியது காலத்தின் அவசியம்.புலிகள்தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமோ அல்லது மத்தியதரவர்க்கமோ அதன் மேலணிகளோ தலைமைதாங்கிய இயக்கமல்ல.அன்றி இவர்களைத் தளமாகவும் புலிகள் வைத்திருந்தவர்களில்லை.


புலிகள் முழுக்கமுழுக்க ஒரு அழிவுயுத்தத்தை இவர்களிடம் வலுகட்டாயமாகத் திணித்த அந்நியத் தேசத்து அடியாள் இயக்கம்.இந்த இயக்கமானது தமிழ்தேசியக் கட்சிகளது மேற்குலகச் சார்பிலிருந்து ஆயுதரீதியாக அந்நியச் சக்திகளால் கையகப்படுத்தி உருவாக்கப்பட்டவொரு மாப்பியாக்குழு.இந்த இயக்கத்திடம் இனவாத இலங்கை அரசுக்கெதிரான போராட்டத்தை மனவளவில் கற்பனை செய்த மத்தியதர வர்க்கமானது மிக வேகமாக உந்தப்பட்டு அநுதாபிகளாக மாறும்போது, இலங்கைத் தமிழ்பேசும் மக்களனைவரும் ஆயுதரீதியாக வலு கட்டாயாமாகப் புலிகளை ஆதரிக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதிலிருந்து புலிகளானது சாரம்சத்தில் பரந்தபட்ட மத்தியதரவர்க்கத்தினதும் அதன் மேலணிகளதும் தளத்தைக்கொண்ட இயக்கமாகக் காட்டப்பட்டிருப்பினும் அதன் எஜமானர்களும், தளமும் முற்றுமுழுதாக அந்நியச் சக்திகளது முகாமாகவே இருந்தது.எனவே,புலிகளது தோல்வியானது அதன் அடியாட்பாத்திரத்தின் தேவையும்-தேவையற்றதுமான புரிதலிலிருந்து ஆரம்பமாகிறது.இதைக் கணிப்பதில் மத்தியதர வர்க்கத்து ஊசலாட்டம் மற்றும் வர்க்கவுணர்வு தரகு முதலாளியத்தின் பின் நகர்தலெனும் கூற்றோடு அணுகும்போது புலிகளுக்கொரு அரசியலும்,மக்கள்சார் குறைந்தபட்ச நலனும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இது அபாயகரமானது.


புலிகளது வருகையானது ஒரு திடீர் வருகையாகும்.இதன் வருகைக்கு எந்த வரலாற்றுப் பாத்திரமும் இல்லை.இலங்கை அரசினது இனவொடுக்குமுறைக்கெதிரான பரந்துபட்ட மத்தியதர மக்களது சமூக ஆவேசமோ அன்றி அவர்களது போராட்ட ஸ்தாபனவுருவாக்கமோ புலிகளைத் தோற்றுவிக்கவில்லை!புலிகளென்பது அழிவுயுத்தத்தைத் திணித்த அந்நிய நலனது அரசியல் வியூகத்தில் அவதரித்தவர்கள்.புலிகளைத் தூக்கி மக்கள் மத்தியில் நிறுத்திய தேசியவாதக் கட்சிகளே இறுதியில் இவர்களால் அழிக்கப்பட்டதும்,நிர்மூலமாக்கப்பட்டதும் ஒரு தற்செயல் நிகழ்வல்ல.புலியினது போராட்டமானது அரசியல் ரீதியான கோரிக்கைகளை முற்றுமுழுதாக மறுத்து ஒரு இராணுவவாத அமைப்பாக மாற்றுவதற்கான முன் பாதுகாப்பே தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அழிக்கப்பட்டதன் தொடர் கொலைகளாகும்.எதுவெப்படியோ புலிகளானர்வகளை தமிழ்ச் சமூகத்தின் எந்த வர்க்கமும் தளத்தைக்கொடுத்துத் தலைமைதாங்கியதல்ல.புலிகளுக்கு இவர்கள் அநுதாபிகளாகவும்-ஆயுதரீதியாகக் கட்டாயமாக இணைக்கப்பட்டவர்களுமே.எனவே,புலிகள் மத்தியதர வர்க்கத்தையோ அன்றி அதன் மேலணிகளையோ தளமாக வைத்துப் போராடியவர்கள் என்பது சரியானதாக.இத்தகைய மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் தமது நலன்களைப் புலிகளுடாக அறுவடைசெய்வதற்காக அதன் அடியாட்பாத்திரத்தை மறைத்துத் தேசியவிடுதலைக்கான இயக்கமாக நீட்டிக்கொண்டே சென்றனர்.புலிகளது போராட்டமானது இந்த இலட்சணத்தலேயே பரந்துபட்ட தமிழ்மக்களிடம் அநுதாபம் பெறும் ஒரு நிலையில் 2000 க்கு பின்பான காலங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


அடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாவலன் குறித்துச் சொன்ன சிந்தனையின் தொடர்ச்சியாக அறிமுகப்படுவதுவதென்பதும் சரியானதே.என்றபோதும்,அதன் தற்காலப்பாத்திரமானது புலிகளது இராணுவ அடியாட்பாத்திரம் அவசியமின்றிப்போனதன் தெரிவில் அரசியல்ரீதியானவொரு பாத்திரத்தை முன் நகர்த்தும்போது,அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தமிழரசுக் கட்சியினது அந்நியச் சார்பிலிருந்தே மேலெழுகிறது.இவர்களது கட்சிக்கு நிதியிடுபவர்களில் உலகத்து முன்னணி ஒடுக்குமுறையாளர்கள்கூட இருக்கமுடியும்.


புலி அழிப்புக்குப் பின்பான யதார்த்தம்:


தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்து அந்நிய நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட புலிகள்வழித்(அந்நியச் சக்திகளது அடியாட்பாத்திரம்) "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்த வெளிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.


இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற தமிழ்ச்சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.மக்கள் இதுகுறித்துத் தெரிந்துகொள்வதற்கான எந்த அரசியலும் வெறுமனவே சிங்கள அரசின் பக்கமே குற்றமுள்ளதாகச் சொல்லி உண்மைகளை மறைப்பதில் தமிழ்த் தேசிய வாதக் கட்சிகள் முனைப்பாக இருக்கின்றன.அதுபோன்று, புலம் பெயர் தளத்தில் மீளத் தகவமைக்கப்படும் விதேசியக் கருத்தியற்றளத்தை ஜீ.ரீ.வி.முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.இது,புலியினது எச்சமாகவிரிந்துகொண்டாலும் இவர்கள் முன் தள்ளும் வரலாற்று மோசடிகள் தமிழ்பேசும் மக்களை உண்மைகளைக் கண்டடiயும் அனைத்து வழிகளிலிருந்தும் ஓடோடத் துரத்துகிறது.அவர்கள்,மீளவும் குறைவிருத்திக் குட்பட்ட கருத்துக்களால் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.



இந்தப் புள்ளியை எவருமே கவனிப்பாரில்லை!இணையங்களைவிட,ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து விளையாடும் ஜீ.ரி.வி.ஆனாது மக்களிடம் உண்மைகளைச் சொல்லத் தவறுகிறது.அது,தொடர்ந்து புலிவழிப்பட்ட கருத்துக்களோடு இனவாதத்தைத் தொடர்ந்து தமது தேவைக்குட்பட்ட வகையில் தெரிவாக்கி விதைத்து வருகிறது.இடதுசாரிகள் என்பவர்கள் இந்தக் கருத்தியல் யுத்தங் குறித்து மௌனித்தே வருகின்றனர்.அவர்கள் தனிநபர்களது தவறுகளைத் தூக்கி விமர்சிக்கமுனையும் சந்தர்ப்பத்துக்குக்கொடுக்கும் கவனத்தை இந்த அழிவுகரமான கருத்தியலை எதிர்கொள்ளக்கொடுக்கவில்லை!



இலங்கையின் இடதுசாரியக் கட்சிகளில் லங்கா சமசமாயக் கட்சி மிகவும் பிற்போக்குக் கட்சியாக மாறிவிடுகிறது.வாசுதேவ நாணயக்காரவினது அரசியலானது இன்று இலங்கை அரசினது பாசிச அபாயத்தைக் குறித்து மௌனிக்கிறது.தமிழ்ச் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சியோ பெயர்ப்பலகைக் கட்சியாகச் சில "புத்திஜீவிகள்"பேருக்கு மார்க்சிசம் பேசும் கட்சியாகக் கிடந்து இன்றைய சூழலை எதிர்கொள்ள முடியாத அரசியல் வியூகத்தில் சுழல்கிறது. இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, அதையே அரசியல் தெரிவாகவும் வற்புறுத்தும் நபர்கள்,புலிகளது அநுதாபிகள், மக்களது இன்றைய நிலைக்கான அரசியலானது புலியினதும்,பிற்போகுத் தமிழ்த் தலைமையினதும் தாந்தோன்றித்தனமான அரசியலது விளைவென்பதைக் குறித்து உணர்வுரீதியாக புரிவதற்கு முன்வரவில்லை.


மக்கள்-தமிழ்பேசும் மக்களது வாழ்வியல் யதார்த்தமானது இன்னொரு இனத்துக்குச் சேவகஞ் செய்வதற்கான தயாரிப்புகளால் பெருகி விரிகிறது.இந்த மக்கள்கூட்டத்தை ஏமாற்றும் திசைகளில் ஓட்டுக்கட்சிகள் நகர்கின்றன.இவர்களே இன்று"படிப்பினைகளும் மற்றும் நல்லிணுக்க ஆணைக்குழுவுக்கு"முன் வாக்குமூலம் கொடுத்து உரையாற்றுகின்றனர்.இதுவரை மக்களைக் கொன்றுகுவித்த இத் தலைவர்கள்-தலைமைகள் இதுவரைத் தமிழ் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமை குறித்தும் எந்தப் புரிதலையும் சிங்களத் தேசியவாதத்திடமோ அல்லது சிங்கள ஆளும் வர்கத்திடமோ கோரவில்லை.இது இன்றைய யதார்த்தம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.09.2010

Monday, September 13, 2010

நீரளவே ஆகுமாம் நீராம்பல் ...

பு(எ)லிகளது ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் வீடு கட்கிறார்.குகநாதன் கோடிக் கணக்கில் தொலைக்காட்சி வர்த்தகஞ் செய்கிறார். கே.பி.புனர்வாழ்வு அ(ழி)ளிக்கிறார்.எல்லாம் மக்களுக்கு. உருத்திர குமார் தேசங்கடந்து தமிழீழம் புரட்டி வைத்துக் கூத்தாடுகிறார்.நெடியவன் புலம்பெயர்ந்து பெரும் நிதிநிதியந் திறந்து நடாத்துகிறார்.புரட்சிக்கான குத்தகையை எனக்குத் தரமாட்டீர்களா-ஜெயபாலன்?அதையாவது மட்டும் என்னிடம்விட்டுவிடுங்களேன். வயதாகிறது.அதிலிருந்துகொண்டாவது நாலு பேரைச் சேர்த்துக் கொடுத்தாலாவது எனக்குப் படியளக்கக் காத்திருப்பவர்கள் கவனமாக என்னைக் கையாளுவினம்.எல்லாத்துக்கும் நீங்கள் ஆப்பு வைப்பதாகத் தேசம் வாசகர்கள் பூரிப்படைகின்றனர்.இது,ஆப்பா அல்லது எவருக்குமான காப்பா என்று காலம் பதிலுரைக்கும்.

அதுவரையும், மீண்டும்,மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை!

புலிகளும்,தமிழ்த் தேசியம் பேசியவர்களும், அனைவரையும்,அவர்களது இன்றைய நிதி மோசடிகள்-அரசியல் நகர்வைக் குறித்து யோசிக்க முடியவில்லை!இவ்வளவு கொடியவர்களா இவர்கள்?ஒரு மக்கள் கூட்டத்தைக் கொன்று குவித்த கையோடு தமது நல்வாழ்வுக்காக அவர்களது கண்ணீரில் காசு பார்க்கும் இவ்வளவு கேடுள்ளவர்களா நாம்?

ஒரு பக்கம் வானொலி,தொலைக்காட்சி, ஊடகமெனத் தமிழ்பேசும் மக்களை"உறவுகள்-சொந்தங்கள்"என்று மொட்டையடிக்கும் கூட்டம்,மறுபுறம் தமிழீழம்-உரிமை,தமிழ்-தேசியம் என்று மொட்டையடிக்கும் கூட்டம்.இடையினில் புரட்சி என்று நடுரோட்டில் அடிபடும் நாம்.இங்கே,மக்களுக்கு எதைத்தாம் ஒழுங்காகச் செய்தோம்?அல்லது, அந்த மக்களுந்தாம் தமக்கேற்பட்ட அழிவுகள் குறித்துச் சிந்திக்கிறார்களா?

நல்லூர் கந்தனுக்குத் தெருவெல்லாந் தோரணங்கட்டித் தேரிழுக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டுவதும்,காணி வேண்டுவதும் அவசியந்தாம்.குடியிருக்க அது அவசியம்தாம்.ஆனால்,முன்னாள் புலிகள் மில்லியன் கணக்கில் வீடுகள் வேண்டவும்,கட்டவும் முடியுமானால் அவர்களது போராட்டத்தால் அழிவுக்குள்ளான மக்களுக்கு எவர், எந்த நஷ்ட ஈடு வழங்கினர்?



"எல்லோரும் போராட வாங்கோ"என்று ஏ.கே.47 ஐ பிடரியில் வைத்து அழைத்தவர்கள் புலிகள், அவர்களே இப்போது தமது வாரீசுகளுக்காகத் தமிழீழத்தைக் குத்தகைக்குவிட்டுப் பிழைக்கின்றபோது, இந்தக் குகநாதன்(டான் தொலைக்காட்சி அதிபர்) அவர்களும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்தானே?

அவருக்கும் வாரீசுகள் இருக்கின்றது.வாழும்-வளரும் பிள்ளைகள் பிழைச்சுப் போகட்டுமே!என்னத்தைப் பெரிதாகச் செய்தார்கள்-ஒரு இரண்டு இலட்சம் மக்களைப் புலிகள் அழிக்கத் தோதாகக் கருத்தைக்கட்டியதைத் தவிர வேறென்ன செய்தார்கள்?இரண்டு இலட்சம் உயிர்கள்தானே-போனாற் போகட்டும்!அவர்களாவது தமது பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழட்டும்.அதுக்காகவாது படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களது அழிவு பயன்படட்டும்!

இப்போதெல்லாம்,தமிழ்பேசும் மக்களுக்கான நீதிக்கான குரல்கள் மெல்ல ஓய்ந்துபோக,பணப்பசையுடையவர்களது முரண்பாடுகள்,கடத்தல்,கப்பம்,என்று தொடரும்போது அதற்காகவே பேட்டியெடுத்து,அவர்களது நியாயத்துக்காக நாம் பேச வெளிக்கிடுவது புரட்சி,ஈழவிடுதலையின் அடுத்த பரிணாமமாகிறது.இது,நல்ல முன்னேற்றந்தாம்.எதுவெப்படியோ நாம் குகநாதனுக்கான நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.அப்படிக் கொடுப்பது அவசியம் ஆகும்!

ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்துக்கும் நீதிக்கான ஊடகவியலாளர் டான் தொலைக்காட்சி அதிபர் குகநாதன்.அன்னாருக்கு நிகழ்ந்த பாதகங்கள் குறித்து அவரது பேட்டியைச் சூட்டோடு சூடாகத் தேசம் வாசகர்களுக்கு வழங்கியதென்பது ஒரு பெரும் சமூகக் கடமையானதென நம்பலாம்.

டக்ளஸ் தேவனந்தா அமைச்சராக இருந்து சாதிப்பதுபோன்று இன்றைக்குத் தமிழ்பேசும் மக்களுக்காக இந்தவூடகவியலாளர்கள்,குறைந்தபட்சமாவது ஐ.பி.சீ. வானொலியில் 12 மணிக்கு ஓலமிடும் யசோதா மித்திரதாஸ்போன்று ஒப்பாரியாவது வைத்துத்"தமிழர்கள் வெட்டுண்டு துண்டுகளானார்கள்"என்று சொல்லிச் சொல்லியே தமிழர்களது ஈரற் குலையைப் பிடுங்குவதுபோன்று எல்லோருஞ் செய்தேயாக வேண்டும். இல்லையென்றால், நமது"கல் தோன்றி மான் தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய"வரலாறு என்னவாகும்? எல்லோரும் வாங்கோ-வந்து குகநாதனுக்கேற்பட்ட வரலாற்றுக் கொடுமைக்கெதிராக வழக்காடு மன்றைத் திறவுங்கள்!ஜெயபாலன் மிகச் சிறப்பாகப் பேட்டி கண்டதன் பயன் எத்தனையோ முறைகளில் பயன்படுவதையிட்டுப் புரட்சிக் கொடி வானுயரக் கோட்டையில் பறக்கிறதே,அதுவொன்று போதாதா-என்ன?

இருந்தும்,படிப்படியாக மக்களுக்கு உண்மையை உரைப்பதற்காகவேதாம் நாம் பொதுச் சமூகச் சூழலுக்கு வெளியில் தனிநபர்களது அநுபவத்தைப் பிரித்துப் பார்பதில்லை!அது,தப்புத்தப்பாகப் புரியிறபோதுதாம் பிரிப்பது-பறிப்பது...

வாழ்நிலைதான் சமூக உணர்வைத் தீர்மானிப்பதாக வரலாற்று ஆசான்கள் சொல்வதால்,உங்களுக்கென்ற எந்தத் தனிப்பட்ட துரும்பும் இருக்கப்படாது.அனைத்தும் கட்சிக்கும்,புரட்சிகர நிலைவரத்துக்கும் உட்பட்டதே!இந்த விஷயத்தாற்றாம் குகநாதனது நீலிக் கண்ணீர் :

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் பெற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்."

என்று அவ்வயையுந்தாண்டித் தேசம் நெற் நெற்றியடி ஆப்பாக வைத்ததாகரெவரெவெரோ கூத்தாடிக்கொண்டிருக்க நாமும் தாந்தோன்றித்தனமாகக் கலையெடுத்துக் கருக்கலைப்பதென்று இதுவரை முக்கி,முக்கி தட்டித் தாலாட்டிக்கொள்கிறோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2010

Sunday, September 12, 2010

இரயாகரன்-நாவலன்,இடையில் நாம்...

நாவலன் , தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம்.நாம் இதைச் சொல்லித்தாம் உங்களுக்கு "நன் நடத்தை"முத்திரை தரவேண்டுமென்பதில்லை!ஜெயபாலன்,இராஜாகரன்,ஸ்ரீரங்கன் சுமத்தும் "பழி-அல்லது அவதூறு"நீங்கள் உண்மையாக இருக்கும்போது பலமற்ற பொய்களே!

உங்கள்மீது தவறாக நாம் அவதூறு செய்யுமிடத்து, அதற்கு மான நஷ்டவீடு செய்து வழக்குத் தொடங்க முடியுதானே?-அதைச் செய்யுங்கள்.

எனக்கு,இராஜகரனும்,ஜெயபாலனும், நீங்களும் என்னைப் போன்ற சக தோழர்களே-மக்களது பக்கஞ் சார்ந்திருக்கும்போது.இது,என்னைக் குறித்தும் உங்களுக்கும் அப்படியே!

உங்களது நேர்மையின்மீது அவசியமற்று இரஜாகரன்-ஸ்ரீரங்கன் அல்லது வேறொருவர் பழி சுமத்துவதாக நீங்கள் உணர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அது உங்கள் மானப் பிரச்சனை-மனிதவுரிமைக்குட்பட்ட உரிமை!

நான்,உங்களது கருத்துக்களை,நீங்கள் உங்கள்மீது சுமத்தப்பட்ட பழிகளை மறுக்கும்போது, அதை வரவேற்கிறேன்-நம்புகிறேன்.

இரஜாகரன்மீது மீள மீளக்கருத்துகள்கூறாது, அவர் கூறியதன் "உண்மை-பொய்மை"த் தனத்தை நிரூபியுங்கள்.அல்லது, அவரே அதை நிரூபிக்கட்டும்.தவறாக மற்றவர்கள்மீது இரயா கருத்துக்கட்டினால் அதை நானே எதிர்ப்பவன்.

இன்று, இரயாவைப் புலிப்பினாமி-இன்போமர் எனச் சொன்னவனும் நான்தான்.அதே இடத்தில் தோழனெக் கொண்டாடுபவனும் நானே!

கடந்த கால் நூற்றாண்டில் இரயாகரன் முன் வைத்த அரசியல்சார் கருத்துக்கள் அசைக்க முடியாதவை.அவை குறித்து நீண்ட ஆய்வுகளுக்கூடாக என்னால் "சரியானதென" நிறுவ முடியும்.இது நிற்க.

தற்போது, இராயாவினது "பழி"சுமத்தலிலிருந்து நீங்கள் கருத்துக்களை முன்வைப்பது நாணயமானது.அதைச் செய்யும்போது இடையில் சகுனி வேலை செய்யும்"கொட்டைகள்-மசாலா"வென்றவர்களையெண்ணிக் கவலையாக இருக்கிறது.

நாம்,இராயாவைச் சந்தேகிக்கலாம்.ஆனால்,அவர் கூறிய அல்லது ஆய்வுக்குட்பட்ட அவரது கருத்துக்களை நீர்த்துப்போக வைப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.அதுபோல நியாயமின்றி இரயாகரன் மற்றவர்கள்மீது "பழி"சுமத்தினால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அது,இரயாவாக இருந்தாலென்ன அல்லது ஸ்ரீரங்கன்,நாவலன் இதையுங்கடந்து கடவுளாகவிருந்தாலென்ன!

அடுத்து, குகநாதன் எனது ஊரவன்.எனக்குத் தெரியும் அவரது நாணயம்.இன்று, புலம் பெயர் வர்த்தகர்களில் நாணயமற்றவர் எவரென உதராணம் தேடினால்,அது முதலில் குகநாதனையே குறித்துரைக்கும்.எனவே,குகநாதன் தரும் சாட்சியம் எப்பவும்போலவே சதி நிரம்பியது.இரயாகரன் குகநாதனை நம்பிக் கருத்துக் கூறியிருக்க முடியாது!

குகநாதனது திருகுதாளங்களை இரயா அறிந்தவரே.எனினும்,எதிரிகளென எவரையும் கொள்வதற்கில்லை.குகநாதனது உளவியல்சார்ந்தவொழுக்கம் இந்த முதலாளியச் சமூகத்தின் அறுவடை.அதுபேலவே "நமது"அணுகு முறையும் இந்த ஈழப்போராட்ட இயக்கவாத அணுகுமுறையின் தொடர்ச்சியே!

உண்மையும்,நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது.அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன்.

உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்டு அலட்டத் தேவையில்லை!

அதேபோல்,இரயாகரன் தானே "பழி"சுமத்தும் கட்டுரையை உங்களை நோக்கி எழுதியதால், அதன், நியாயத் தன்மையை நிலை நாட்டவேண்டும்.அவர் அதைச் செய்யாதுபோனால் நாம் அவரது கருத்துக்களையும்"பழி"சுமத்தல்களையும் இன்னும் வலுவாக அம்பலப்படுத்துவோம்.

இரயாகரன் தமிழ்ச் சூழலில் அரசியலைத் துறக்கும்படியான முறைமையில் செயல்முனையை விரிவாக்குவோம்.அவ்வண்ணமே,இது எனக்கும்-உங்களுக்கும் பொருந்தும்!

நன்றி

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.09.2010

Friday, September 10, 2010

நாவலன் மீதான எனது அணுகுமுறை....

சிறீ ரங்கன்,
பூச்சி என்ற முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒரு சிறிய தொலைபேசி நிறுவனம் ஆரம்பித்த போது அதில் வேலையற்றிருந்த நானும் இணைந்திருந்தேன். அது நட்டமடைந்த போது அதற்குரிய நட்டத்தை நாம் இருவருமே ஏற்றுக்கொண்டோம். ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள். பின்னர் நமது “கொமிசார் நண்பர்” ரயாகரன் அதே வகையான அவதூறை எழுதினார். இது குறித்து ரமணன் பூச்சியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது அப்படியானஎந்த ஏமாற்றுச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும் எனக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
நான் சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது இந்த அவதூறையும் இணைப்பதற்கு எனது சட்ட ஆலோசகரிடம் பேசியுள்ளேன். சிறீரங்கன், நாங்கள் எமக்கிடையில் எதிரிகளல்ல. முதலில் அவதூறுகள் முன்வைக்கப்படும் போது நேரிடையாகத் தெளிவுபடுத்திவிட்டு பொதுத் தளத்தில் முன்வைக்கலாமே?
ஒரு கட்சியின் உள்ளமைப்பில் முன்வைக்க வேண்டிய தனிநபர் சார்ந்த விமர்சனங்களை பொது மேடையில் முன்வைக்கப்படும் போது குறைந்த பட்ச நாகரீகமாவது அவதூறுக் காரரர்களிடம் இருப்பதில்லை. ஒரு விடயத்திற்குப் பதில் சொன்னால் இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்.

ஒரு மூன்றாம்தர தமிழ் சினிமாவை வீடியோ ஒன்றில் 15 நிமிடத்தில் பார்த்து முடித்ததில் என்னைப் பொறுமையற்ற குட்டிபூர்சுவா என்று விமர்சித்தவர்கள் இவர்கள்.

-நாவலன்
Posted on 09/10/2010 at 5:18 pm
http://inioru.com/?p=16707&cpage=1#comment-13504



நாவலன், இந்த விஷயங்களிலிருந்து நான் கடந்துபோக விரும்புகிறேன்.நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.கம்யூனிஸ்டு என்பவர்கள் வானத்திலிருந்து பிறப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.நமக்குள் தனிப்பட்ட வாழ்வில்தப்புகள்-தவறுகள் நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. அவ்வண்ணம்,பொது அரசியல் வாழ்வில் நடந்த சதிகள்-அரசியல்பிறழ்வுகள் பொதுத் தளத்தில் விமர்சிக்கப்படவேண்டியதே. உங்களது விடையம் ஒரு பொது அரசியலாக்கப்பட்ட சூழலிற்றாம் நான் அதுள் விவாதத்தை முன்வைத்தேன்.

ஈழவிடுதலைப் போராட்ட அரசியல்வாழ்வில் நிறையக் கோபத்தோடு வாழ்கிறேன்.அக் கோபமானது நியாயமானதா இல்லைத் தப்பானதாவென காலம் பதிலளிக்கும்.

உங்கள்மீதான இன்றைய எனது அணுகுமுறையில் தவறுகள்உள்ளது. அதை,நீங்களே குறிப்பிட்டபடி தனிப்பட்டரீதியாகக் கேட்டுவிட்டுத் தொடர்ந்திருக்கலாம்.எனினும்,பொதுத் தளத்தில் விமர்சனத்தை வைத்த இரயாவின் விமர்சனத்துள் கடத்தலெனவும்,காசு-கப்பமெனவும் நீண்டவொரு குறிப்புச் சொல்லப்பட்டபோது அதை மறுத்தலெனும் போக்கிலேயே எனது கட்டுரை எழுதப்பட்டு உங்கள் கருத்துக்காக-உங்களைப் பேச வைப்பதற்காகப் பொதுத் தளத்தில் விடப்பட்டது.இரயாவினது கருத்துக்களில் உடன்பாடும் மறுப்பும் இயல்பாகவே எவருக்கும் இருக்கமுடியும்.எனக்கும் அப்படியே.சமகாலத்தில் தோழமையாக நாம் பயணித்தவர்கள்.அதன் தொடர்பில் இன்னும் பிரமிப்பும்,தோழமையும் உண்டு.அதுதற்காக அனைத்தையும் ஏற்றுத் தலையாட்டும் நிலையிலும் நான் இல் லை!அது,ஈழவிடுதலைப் போராட்டத்துள் ஒரு பிரபாகரனை-உமா மகேஸ்வரனைத் தந்தது.அதேயொரு முனையில் இன்னொரு வணங்கா முடியை தகவமைப்பதற்கு நான் தயாரில்லை.இதையே எனக்கும்,அனைவருக்குமாக பொருத்துகிறேன்.

இத்தகைய சூழலில் தனிப்பட்ட வசை பாடலைக்கடந்து செல்லவே இப்போது விரும்புகிறேன்.எனது அணுகு முறையில் நானே உடன்பாடின்றி இப்போது தனித்தே இயங்குகிறேன்.பலதரப்பட்ட உள் நோக்கங்கொண்ட செயற்பாடுகள் தோழமையென்பதைச் சிதைக்கின்ற சூழலில் வெளியேறுவது இயல்பாகிறது.எனக்கு,எவர்மீதும் பழி சுமத்தி என்னைப் புனிதனாக்கும் எண்ணம்-நோக்கம் இல்லை! நான் கடையனுக்கும் கடையனாகவே இருக்கிறேன்-துரோகிக்கும் துரோகியாகவே இருக்கிறேன்,நாணயமற்றவனுக்கும் நாணயமற்றவனாகவே இருக்கிறேன்.

நீங்கள்,குறிப்பிடும் கருத்துக்கள்-உங்கள்மீது கூறப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட பழிகளை நீங்கள் இப்போது மறுப்பதை நான் பெரிதாக மதிக்கிறேன்.அது நாணயமான அரசியல் வழியில் நம்மைச் சந்திக்க வைக்கும்.இதேதாம் இரயாவின் அரசியல் அணுகுமுறைக்கும் எனது பதில்.இதில்,நானோ இரயாகரனோ அல்லது நீங்களோ தனித்து நின்று எதையுமே செய்வதற்கில்லை.எல்லோருமே ஒரு தளத்தில் மக்கள் சார்ந்து இயங்குபவர்கள்.எமது அரசியல் நாணயமாக மக்களது பக்கம்சார்ந்திருக்கும்போது இத்தகைய சேறடிப்புகள்-பழி சுமத்தலையுந்தாண்டி நாம் ஒரு அமைப்பாண்மை சார்ந்த தோழமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என் கருத்து.இதுதாம் இன்றைக்கு நான்கொண்ட முடிவு.ஏனெனில், நாம் ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தோர்.இதைவிட வேறொரு தெரிவு நான் கோடிக்கணக்கான சொத்தைப் புரட்டி வைத்திருந்தால் ஏற்படலாம்.எனினும்,உண்மையான கம்யூனிஸ்டு அதைக் கட்சி நிதியாக்கி வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்பணிப்பார்கள்.இதை வரலாற்றில் நாம் பார்த்தோம்.உங்கள் கருத்துக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.09.2010

Friday, September 03, 2010

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

-சிறு குறிப்பு.

னிப்பட்ட நபர்கள்சார் அரசியல்-குழுக்கட்டல்கள் யாவும் இன்று ஏதோவொரு வகையில் அவரவர் தனிப்பட்ட "விருப்பு-வெறுப்பு"களுக்குட்பட்ட அரசியற் சதிகளையும்,சகுனி வேலைகளையுஞ் செய்து எமக்குக் கருத்துத் தரும் இவ்வேனையில், தமிழ்ச் சமுதாயம் இவர்களது அரசியல் நடாத்தைகளால் பழிவாங்கப்பட்டு நடாற்றுள் விடப்பட்டுள்ளது.அந்த மக்களது வாழ்வைப் புரட்சி-உரிமையெனச் சொல்லி வேட்டையாடிய கூட்டமானது ஒவ்வொரு திசையிலும் மறைமுகமான ஆதிக்கச் சக்திகளோடு கைகோர்த்தபடி மர்ம அரசியலைச் செய்கிறது.இந்த மர்ம அரசியலை ஓரளவு புரிய வைக்கும் இவர்களது தெருச் சண்டையானது முற்றிலும் அதிகாரச் சக்திகளதும்,ஆதிக்கக் குழுவாதத்தினதும் அப்பட்டமான வெளிப்பாடுடைய அராஜகமாக வெளிப்படுகிறது.இலட்சக் கணக்கான-கோடிக் கணக்கான பணச் சுற்றோடத்துக்கும் அதுசார்ந்த நலன்கள்,பிணைவுகள்-உறவுகளெனப் பாதாளவுலக அரசியலை எடுத்துவரும் இக் குழுக்களை நம்பிப் பின் தெடர முடியுமா?

எமது நிலத்து மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்பேசும் மக்களுக்கும் காலங்கடந்து ஞானம் வந்தது, புலிகளது தமிழீழப் போராட்டுத்துள்-இல்லையா? அங்ஙனமே,காலங்கடந்து வரும் எந்த ஞானமும் புரியப்படும்போது எமது கோவணமும் உருவப்பட்டுவிடுமென்பதற்கு மகிந்தா குடும்பத்துக் கட்சியாதிக்க அராஜகம் நல்ல எடுத்துக்காட்டு.



புலிகள் அழிந்துபோனாலும்,அவர்களது அரசியல்-அராஜக இயக்க வாதம் தொடர்ந்தபடியே இருக்கிறது.இந்தத் தொடர்சியைத் துண்டிக்க முடியாதவளவுக்குத் தமிழ்ச் சமுதாயமெங்கும் புரையோடிப் போயுள்ள அரசியல்சார் அராஜகமானது மிக ஒழுக்கமற்ற நெறியாண்மைகளால் மக்களுக்கான அரசியலென-புரட்சியென மக்களை வேட்டையாடுகிறது.இந்த நெருக்கடியான உளவியலானது குவிப்புமனவுறுதியால் சமூகத்துக்குப் புறம்பானவொரு தனிநபர் நடாத்தையை ஆதிக்கக் குழுவாதத்தின் அதீத அராஜக வெளிப்பாட்டுக்குள் வெளிப்படுத்தும் அதேவேளை, ஆளும் அதிகாரத்துக் கட்டமைவுகளுடன் இணைந்து மக்களைத் தெருவுக்கு அழைக்கிறது.அது,தனது நலனுக்காக மக்களை மீளப் பயன்படுத்திப் பணத்தை பெருக்குவதில்"புரட்சி-உரிமை,எதிர்ப்புப் போராட்டமென" ஓராயிரம் காரணந் தேடுகிறது.இது குறித்து அவசியமாக உரையாடுவதும்,இத்தகைய பாதாளவுலகத்தைப் புரிந்து புறந்தள்ளுவதும் அதீதமானதெனினும்-அவசியமானது.

இது குறித்து யோசிக்கும்போது,பழைய இயக்கவாதத் தொடர்ச்சியின் இருப்பு, எமது மக்களது எதிர்காலத்தை வேட்டையாடுவதை நாவலன்-இரயாகரன்போன்றோரது அரசியல் தொடர்ச்சியில் இனங்காணக் கூடியதாக இருக்கிறது.இது,சாதரணமாக மக்களைச் சுற்றித் தகவமைக்க முனையுங் கண்ணிகளானது முற்றுமுழுதான தமது இருப்புக்கும்-பாதாளவுலகத் தொடர்புக்குமான இரண்டு தளத்தில் மையைமுற்றுத் தமிழ்பேசும் மக்களது அரசியலைக் கையிலெடுக்கிறது.இதன் வழியான அவரவரது அரசியல் தொடர்புகள், அதுசார்ந்த இணக்கப் பாடுகள் யாவும் "குறித்த நபர்களது" பின்னணியில் இயங்கும் ஆதிக்கச் சக்திகளது தயவின் தெரிவை வெளிப்படையான தமது நடாத்தையுள் வெளிப்படுத்துமளவுக்கு இவர்கள் அரசியல் நாறிக்கிடக்கிறது.

நாவலனால் பேசப்பட்ட முப்பது இலட்ச இந்திய ரூபாய்ப் பேரத்துக்கும்,தமிழ் நாட்டுப் பொலிசுக்குமான இணைவு-பிணைவு என்ன?இவர்களது தனிப்பட்ட தொடர்புகள் யாவும் ஏதோவொரு வகையில் இவர்கள் சொல்லும்"ஆதிக்க-அதிகார"வர்க்கத்தோடுதாம் பிணைவுற்றுக் கிடக்கும்போது புரட்சிக்கும்,இவர்களுக்குமான இயங்கியற்றொடர்புகுறித்து விளங்குவது கடினமில்லை.



இந்த வகையில் குகநாதன் கடத்தல்-கப்பம் குறித்துச் சிலவற்றை யோசிக்கலாம்.தனிப்பட்ட கொடுக்கல்,வேண்டலுக்கெல்லாம் "எப்.ஐ.ஆர்"சட்டப்படி தண்டிக்க முடியுமென்றால் இந்தியன் பொலிசானது எவரது முகாமுக்குள் இருக்கிறது? இதுள்,பொலிசில் குகநாதனை அடைக்கும் அளவுக்கு டி.அருள் எழிலின் பலமாக இருக்கிறாரென்றால் அவரது அதிகாரம் என்னவென்பதும் புரிந்துகொள்ள வேண்டியது.இந்தச் சூழலில் ஆதிக்கக் கும்பல் அடிபடுபவதை அரசியலாக்குவதில்"தேர்ந்து வியூகம்"இருக்க முடியும்.

சராசரிச் சதாரண மனிதர்களை எத்தனையோ வகைகளில் எவரெவரோ ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கு இந்தப் பொலிசு எப்போதும் பக்கப்பலமாகவிருந்து , எதையும் பெற்றுக் கொடுத்ததாகத் தமிழ்நாட்டிலோ, அன்றி இலங்கையிலோ சரித்திரம் இல்லை!

இந்த அருள் எழிலன் கொடுத்து வைத்தவர்.

இந்தக் கோணத்துள், பழைய ஆயுதக் குழுக்கள் தமிழ்நாட்டில் நடமாடவுஞ் செய்கிறார்கள்.ரெலோ,புளட்,புலி ,ஈ:பீ.ஆர்,எல்.எப்,ஈ.என்.டி.எல்.எவ் என எத்தனையோ மாப்பியாக்களும் ஆயுதங்களோடு தமிழ் நாட்டில் வேட்டையில் இருப்பவர்கள்.குகநாதனை அவர்களது முகாமும் கடத்திப் பின் பொலிசென...

எல்லாம் நாவலன்,இரயாகரன் போன்ற பெரும்"போராளி"களுக்குத்தாம் வெளிச்சம்!

மக்களைச் சொல்லி , இயக்கங்கட்டி வேட்டையாடியது ஒரு பொழுது.இப்போது, அதே பாணியில் கொடுக்கல்-வாங்கல்!

நல்ல முன்னேற்றம்!

வங்கிக் கொள்ளை,நகைக்கடைக் கொள்ளை,வீடுகளில் கொள்ளையெனக்கொண்ட முன்னாள் இயக்கப் போராளிகளோ அதே வழியில் சமரசமின்றிப் போராடுகின்றனர்.

"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்"எனச் சும்மாவா முன்னோர் சொன்னார்கள்?

இப்படிக் கொள்ளையால் வரும் பணங்களை வைத்துப் புதுப் பணக்காரர்களாவதற்குப் பெயர் "புரட்சி-கட்சி"கட்டுதல்...இதெல்லாம் ஒரு பிழைப்பு.
தூ...

இந்த நாவலன்தான் எத்தனையோ முறைமைகளில் பண மோசடியில் இருப்பதாகத் தமிழ் அரங்கம் எழுதுகிறது.புரட்சியெனப் புரட்டி எழுதும் நாவலன் முதலில் இவை குறித்துத் தகுந்த பதிலளித்துவிட்டுப் புரட்சி பேசினால் அனைவரும் காது கொடுத்துக் கேட்பினம்.இரயாகரன் வங்கிக் கொள்ளைப் பணத்துக்கெல்லாம் கணக்கு வைத்திருப்பதுபோல நாவலனும் இவை குறித்துக் கணக்கு வைத்திருக்கிறீர்களோ?

சமகாலமாக உங்கள் இருவருக்கும்(இரயா-சபா நாவலன்)இடையில் நிகழும் தெருச் சண்டை எல்லாவகை நியாயங்களையும் படு குழியில் தள்ளிவிட்டு,எதையிட்டும் சந்தேகங்கொள் எனப் பகருகிறது.என்ன செய்ய?உங்களது தெருச் சண்டையானது தமிழ்ச் சமூதாயத்தில் உண்மையான போராளிகளையோ,சிறு குழுக்களையோ நியாயமான மக்கள் நலன் சார் குழுக்களாகக் கணிக்க விடுவதாகவில்லை! எவரையும் குறித்து நம்பவே முடியவில்லை. இதுள்,இரயாகரனையும்சேர்த்தே நான் பார்க்கிறேன்.



முழுமொத்தச் சமுதாயத்தையும் மொட்டையடிக்கும் எதேச்சதிகாரமான இவர்களது உறவுகள்-தொடர்புகள் ஆளும் அதிகார வர்க்கங்களோடான இவர்களது நடாத்தையின் வழி புரட்சி குறித்துரைப்பதில் முன்னெடுக்கப்படும் எதிர்ப் புரட்சிகர நகர்வானது மறு முனையில் அனைத்துவகையான நம்பிக்கை அளிக்கும் முற்போக்குச் சக்திகளையும் நம்பும்படி விட்டுவிடவில்லை!

சதித்தனமாக முன்னகர்த்தப்படும் ஏதோவொரு சதி வியூகத்தைத் தொடரும் இந்த நபர்கள் , தமது கடந்தகால இயக்கவுறகளது தயவில் இன்னும் நகர்த்த முனையும் இயக்கவாத அதிகாரமானது புரட்சிகரத் தோழமையைக் குழிதோண்டிப் புதைவிட்டு நியாயவாதஞ் செய்கிறது.

அப்பட்டமான மாபியாக்களாக வலம்வரும் இவர்கள் ,மக்களது புரட்சி குறித்து வகுப்பெடுப்பதில் ஒருவரையொருவர் போட்டுத் தாக்குவதில் தமது கடந்தகாலச் சீரழிவுத் தொடர்புகளை மறைக்கிறார்கள்.எல்லாவற்றையும் புலிக்குள் புதைத்துவிட்டுப் புரட்சி-தோழமையான நட்புச் சக்திகளாக நாடகமிடும் இக் கூட்டத்தின் முன் நியாயம் கேட்பது எமக்கு அவசியமானது. ஏனெனில்,இவர்கள் தமது தனிநபர் நடாத்தையையுந்தாண்டிப் பொதுப் பிரச்சனை குறித்தும்-புரட்சி குறித்தும் மக்களிடம் அரசியலை ஆரம்பிக்கும்போது இவர்களிடம் நாம்"நியாயம்"கேட்பது மக்களது நலன்சார்ந்த அரசியலுக்கு அவசியமானது.

கடந்தகால இயக்க அராஜகமானது"கொள்ளையடித்தல்"மூலமே ஆரம்பமானது.பொதுச் சொத்தை,மக்களது வாழ்வாதாரத்தைத் தனிப்பட்ட மக்களது செல்வத்தைத் திருடியவர்களும்-தாலி அறுத்தவர்களும் இவற்றுக்கெல்லாம் கணக்கு வைத்திருக்கும்போது,இதன் வழி வந்த புதல்வர்களுக்குப் பழைய நடாத்தையின் வழி சிந்திப்பதைத் தவிர்ப்பது கஷ்டம்தாம். புரிந்துகொள்ளத் தக்க உளவியற் பிரச்சனைதாம் இது.எனினும்,இந்த வகை அராஜகத்தால் அழியும் சிவில் உரிமைகள் அதிகாரத்திடமும்,அராஜவாதிகளிடமும் மக்களை அடிமைப்படுத்திவிடுமானால் இவர்கள் சொல்லும் அரசியலும்-புரட்சியும் பணம் உழைப்பதற்கானவொரு சூழலை நோக்கிய நகர்வுதாமே?

இந்தச் சூழலில் நாவலன் வேறு"ஐரோப்பாவில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் இனங்கள்,அவர்களது அமுக்கக் குழுக்களிடம் ஒற்றுமையை,தோழமை உறவைப் பேணி நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தைத் தகவமைக்க வேண்டும்"என்கிறார்.

சமீபத்திலும்,இப்போதும் பிராஞ்சிய அரசு ரோமா-சிந்தி மக்ளை வேட்டையாடித் துரத்துகிறது, பல் கேரியாவுக்கு. பல பத்தாண்டுகளாகப் பிரான்சில் வாழும் அவர்களை, நகருக்குள் விடாது ,ஊருக்குப் பொறத்தே தள்ளிவைத்து இப்போது அடித்துவெருட்டும் சார்கோசி அரசைக் கண்டித்து ரோமா மக்கள் செய்துவரும் போராட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து வந்தவர்களும்-அவர்களோடு தோழமையாக இணைந்தவர்களும் இவர்கள் என்பது உண்மையாக இருக்காதாவென நாம் கனவு கண்டதும் உண்மை!இதுவெல்லாம் புரட்சியின் படிகள்.

அவர்களது வலியைப் போராட்டவுணர்வை இவர்களெல்லாம் புரிந்து தோளோடு தோள் இணைந்து போராடிய அழகு பாரிஸ் மாநகரத்தில் நாம் பார்த்ததுதாம்!

என்றபோதும்,ஏதோ நம்பிக்கை வைத்துத் தொடரும் இந்த அரசியல் உரையாடல்களில் "இந்த வகை அரசியலை" இவர்கள் முன் தள்ளும்போதும் , இவர்களது ஏதோவொரு தேவையும், தனிப்பட்ட அரசியலாக முன்னெடுக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக இந்தக் குகநாதன் என்ற மனிதரின் கடத்தலுடன் நெருங்கி இணைகிறது.

குகநாதன் சந்தர்ப்பவாதியும்,சதிகாரனும்,பணத்துக்காக மானத்தையே விற்றுப் பிழைப்பவனும் என்பது அவரது கரொம்பன் வதிவிட்டத்தில் புலிக்கு மொட்டாக்குப் போட்டுப் புலம்பெயர்ந்த அன்று நான் இனங்கண்டதுதாம். காவலூர் ஜெகநாதனும் இந்த வைகப் புரட்சியைத்தாம் தனது தம்பிக்குச் சொல்லிக் கொடுத்ததென்பது அவரது சீதனத்தோடு புரட்சி பறந்த கதையுள் நாம் கண்டு வந்திருப்பினும், இந்தக் குகநாதனைது பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக-அரசியலாக முடியுமென நாவலன்-இரயாகரன் போன்றோரது கட்டமைப்புகளது கதைகளிலிருந்து புரிந்துகொள்ளதக்கது.

இதுவெல்லாம்"புரட்சியோ-புரட்சி"என மக்களது பிரச்சனைகள்-உரிமைகள் குறித்து நன்றாகவே எதிர்ப்பு அரசியற்போராட்டத்தைத் தகவமைக்கிறது இந்தத் தளங்கள்!

இந்த இலட்சணத்தோடு,மேற்கு நாடுகளில் இருக்கும் ஓடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களது அமுக்கக் குழுக்களோடு வேறு தோழமை வைத்துப்"புரட்சி"செய்தாகவேணும் என்று ஒரு போடுபோடுகிறார் நாவலன்!

வாழ்க,புரட்சி,வளர்க இவர்கள் தோழமை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.09.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...