Thursday, November 03, 2011

தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

யாழ் மையவாதக் குறுந்தேசியம்: வென்றிருந்தால்அஃது, தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

புலிகளது கால் நூற்றாண்டுப் பாசிசச் சேட்டைகளுக்குப் பின்பான இன்றைய இலங்கை அரசியலில், பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெற்றுக்கொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதாகக்கொள்ள முடியுமா?


புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது.இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கச் சரணாகதியும்,புலம் பெயர் புலிப் பாசிஸ்டுக்களது வெட்டுக்கொத்தும்-கொலையும்இதைப் பலமாக உறுதிப்படுத்துகிறது.


இன்றைய இளந் தலைமுறையினர்,பாசிசப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை-ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலித் தேசியவாதமும் தமிழரின் சுயநிர்ணய வுரிமையைக் களைந்தெறிவதற்கான வொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக் கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்கருத்தாளர்களை(புலி இசத்துக்கு மாற்றான கருத்து),தலித்துவ மக்களை-இஸ்லாமிய மக்களை "தமிழ்த் தேசியத்துக்கு" எதிரிகளாகச் சுட்ட முனைவது,சதியுடைய மொழிவாகும்.


இன்றிந்தச் சதியானது புலிகளது அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் "தமிழ் தேசியத்தின்-விடுதலையின்" பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது.

தமிழ்பேசும் தரப்பினருக்கு வெளிப்படையான அரசியலை பொதுவெளியில் வைத்து உரையாடுவதன் பண்புக்கு இலக்கணப்படுத்தல் புரிந்தபாடாக இல்லை!காலதாமதமானாலும்,உண்மைகளை வரலாற்று வெளிச்சத்தில் வைத்துக் கற்றுக்கொள்ளும் மனம் உருவாகாதவரை,தமிழ் பேசும் மக்களது பரந்த பொதுவயப்பட்ட கூட்டுணர்வை ஒரு தெரிவான இலக்கு நோக்கிச் செலுத்த முடியுமா? மக்களாண்மை என்பதை இன்றைய ஜனநாயகமெனச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.மேற்கு வழிப்பட்ட கிரேக்க "டெமோக்கரட்டி" [Demokratie ]ஒரு குழுவது திறன்சார் அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் ஒரு பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை அவர்களுக்காக்குவதில் இந்த "Demos"(மக்கள்) kratía (அதிகாரம்) வெளிப்படுத்தியது.அதுவே,இன்னொரு வாசிப்பில் Aristoteleskratie [...]ஆகவும் இப்போது புரிவதில் மேற்கைக் தள்ளி இருக்கிறது.நமக்குப் புலிவழியான தீவிர தமிழ்த் தேசியத்தின்பாலான அகவிருப்பு அதிகமாகிக்கொண்டிருக்கின்றதில் உலகக் கண்ணோட்டத்தைச் சில அதிகார முனைகளில் வைத்து ஒருவரைச் சார்ந்து"நலன்"களை அடைதல் என்ற "அதி புத்திசாலித்தனம்" பெருக்கெடுக்கிறது.


மக்கள் வலுவுற்றிருந்தபோது அனைத்து இயக்கங்களும் வலுப்பெற்றுத் தமது படைவலுவைத் தேடிக்கொள்ளும் மனித ஒத்துழைப்பு நிலவியது.அவ்வண்ணமே அவைகள் ஓரளவு உறுதியுடைய அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தன!இன்று, மக்கள் பற்பல அரச ஜந்திரங்களுக்குள்,அதன் ஆதிக்கத்துக்குள் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.இத்தகைய பிளவுகளும் சர்ச்சைகளும் பல்வகைக் கட்சிகளுக்குள்ளும்,அவைகளது அமைப்பாண்மைக்குள்ளும், அதன் அகப் புறச்சூழலிலும் இன்று வலுவுற்றிருக்கிறது.இது ஒருவகைப் புலி இயக்கக் கண்ணியம் பேசி,மக்களை முட்டாளாக்கியபின், தமிழ் மக்களின்(கவனிக்க: மக்களது இழப்புகள்) இது வரையான இழப்புகளைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறதும்,கூடவே தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கையரசின் நகர்வுகளைச் சட்டவாதத்துக்குள் காப்பதற்கும் முனைகிறது.நாடுகடந்த தமிழீழ அரசு என்ற மாய மான் இந்தப் புள்ளியின் தொடக்கக்கமென்பது பலருக்குப் புரிந்தும் இருக்கலாம்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்போதோ நிராகரித்த விட்ட கிழக்கு மாகாண மக்களது அரசியல் இலக்கு, தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.இந்தப் பிரிப்புக்குப் பின்பான தலித்து மக்களது வரலாற்று நியாய வாதமானது இன்னும் அதிகமாக யாழ் மையவாதத்துக்குச் சாவு மணியடிப்பதில் ஓரளவு வெற்றி பெறுமானால் புலிகளது கருத்தியலானது வரலாற்றில் அழிந்து காணாமற் போகும்.இத்தகையவொரு சூழலை எதிர்பார்த்திருப்பதல்ல மக்கள்-குடிசார் அமைப்புகளது இலக்கு.பரந்துபட்ட மக்களுக்கு எதிரான மையவாதச் சிந்தனைகளது நிறுவனத் தகர்வுக்குக் கட்டியம்கூறிய புலி அழிப்பானது,பெருமளவில் தமிழ்பேசும் தாழ்த்தப்பட்ட மக்களது வெற்றி என்பதிலும் பார்க்க,அவர்களது கழுத்துக்கு வரவேண்டிய தூக்குக் கயிறு, இற்றுப்போய் அறுந்தழிந்ததெனக் கருதிக்கொள்ளலாம்.

இதைப் புரிந்துகொள்வதாயின்,தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவான அரசியலுக்கு அப்பாற்பட்டுக்கிடக்கும் சங்கதிகளை மனமுவந்து பார்த்தாகவேண்டும்.

இறுதியாகச் சொல்வதானால்,தமிழ்ச் சமுதாயத்தினது பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,பெண்ணொடுக்குமுறை மற்றும் இனவாதமாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இலங்கையின் இராஜதந்திரமானது புலிகளின் படையணியைப் பலியெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வரலாற்றிலிருந்து தொடைத்தெறிந்திருப்பினும் இந்தச் செயலூக்கத்தின் பின்னே நிலவும் வரலாற்றுணர்வானது கடந்த சிங்களப் பொற்காலக் கனவுகளின்வழி இயக்கமுறும் இன்றைய அரசியல் இலக்குக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறதென்பதையும் சுட்டிக் காட்டலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.11.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...