Thursday, August 26, 2010

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...

மாண்ட புலியும்,மீண்ட புலியும்...


-கே.பி.இன்பேட்டியும்,பேடிகளது போட்டியும் சிறு நோக்கு.



"இலங்கை அரசு காட்டும் சரணடைந்த புலிகள் எலிகளென்பதும்,உண்மைப் புலிகள் சரணடைந்த கையோடே படுகொலைப்பட்டதும் வரலாறாக இருக்கிறது."


மிழ்பேசும் மக்களும்,உலகமும் நன்றாகவே ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கையினது யுத்தக் குற்றங்கள் யாவும் மிகவும் நுணுக்கமாக மறைக்கப்பட்டு வருவதற்குப் புலிகளது "துரோகிகளே"உடந்தையாக இருக்கின்றனர். இன்று, புலிகளது தரப்பாக நின்று நமக்கு வகுப்பெடுக்கும் கே.பி. உலக உளவு அமைப்புகளதும், இலங்கை-இந்தியச் சீன அரசுகளது நேரடியான எடுபிடிதாமெனச் சொல்ல முடியும். உள்ளிருந்து கருவறுக்கும் தந்திரத்தில் நவீன எல்லாளப் பிரபாகரனது மண்டையைச்சிங்களது நவீனத் துட்டக்கைமுனு கோத்தபாய பிளந்தபோது, அந்தச் சரித்திரத்தோடு பிரபாகரனது அனைத்துச் சேனைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.


இன்று,புலிகளின் இராணுவப் பிரிவில் எவருமே இலங்கையில் மிச்சம் இல்லை என்பது வரலாறு.


இதன் உண்மையைத் திட்டமிட்டு மறைக்கும் கே.பி. தமிழ்பேசும் மக்களை நடுச் சந்தியில் வைத்து ஏமாற்றப் பேட்டிகளாக நீட்டி வருகிறார். அதையும் முக்கியமெனப் புரட்டும் தமிழ் அறிவோ வரலாற்றுக் கொடுமையை மறைத்து இலங்கை அரசினது போர்க் குற்றங்களை உலகறிச் செய்யாது மூடி வைத்து அழகு பார்க்கிறது.இது குறித்து மிக நீண்ட ஆய்வுகள் அவசியம்.


கே.பி.போன்ற சதிகாரர்களையும்,நெடியவன்,உருத்திரகுமார் போன்ற கயவர்களையுங் குறித்து சரியான புரிதலை முன்வைத்தாகவேண்டும்.



இவர்களது துணையின்றிப் புலிகள் முழுமையாக அழிந்து போயிருக்க முடியாது.பல்லாயிரம் போராளிகள் படுகொலைப்பட்டனர். "பிடிபட்டவர்கள் என்பதும்-சரணடைந்தவர்கள் என்பதும";,அவர்களுக்கு "மறு வாழ்வு-புனர்வாழ்வு" கொடுப்பதென்பதும் ஒரு ஒத்திகை நாடாகமாக அரங்கேறுகிறது.


இதை உண்மையாக்கும் கயவர்களை என்னவென்பது?

அரசுசார வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்:

அன்றும்-இன்றும்,உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கையோ புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா" அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது. இது, மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இதன் பாய்ச்சல் சாதரண மனிதர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அகலக் கால் பதித்து வருகிறது.பற்பல வடிவங்களில் அதன் வேர் பரவுகிறது.


இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, இலங்கையிலும்,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.கல்விக் கழகங்கள்-பாடசாலைகள்,அபிவிருத்தி அமைப்புகள்,கட்சிகள்-இயக்கங்கள்,குழுக்கள்,அமைச்சுகள்-நிறுவனங்கள்,சிரமதான மையங்கள்-சர்வோதயங்கள் என்று பற்பல வடிவங்கள்.அதுள் முன்னணி ஊடகங்கள்கூட இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுக்கமைய மக்களை ஏமாற்றுகிறது.



இதுள்"முன்னாள் புலிப் போராளிகளுக்கு" மறுவாழ்வுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கத்தற்கான பண்பைக் கொண்டியங்குகின்றன. சாகடிக்கப்பட்ட முன்னாள் புலித் தலைவர் அமரகதி பெற்ற கையோடு, அவரது வாய் மொழியூடாகப் புலித்தலைமைக்கான புதிய தலைமைத் தகுதி பெற்ற கே.பீ.என்ற இலங்கை இனவாத அரசின் ஆசி பெற்ற அரசியற் சாணாக்கியன் போடும் புள்ளிகள்,எமது மக்களது எதிர்காலத்தைக் குறித்துச் சிரிப்புக்கிடமான கருத்துக்களை விதைக்கிறது.


டி.பீ.எஸ்.ஜெயராஜ்க்கு வழங்கும் பேட்டியின் தெரிவாக அவரது மொழிவுகள் யாவும் இதுவரையான தேசிய இனப் பிரச்சனைக்கான நெம்பு கோலாக இருப்புக்குள்ளான இனவொடுக்குமுறை குறித்த சிங்கள அரசுகளது இனவொடுக்குமுறைசார் அரசியலைப் பேசுவதற்கான எந்தத் தார்மீகப் பண்பையும் புலித்துவ அரசியலது "உண்மை" பேசுதலிலிருந்து மறுப்பதில் முடிவுறுகிறது.இதன் உள்ளார்ந்த அர்த்தம்ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது ஆகுமா?


ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத்(யுத்தத்தில் பாதிப்படைந்த தமிழ்பேசும் மக்களது மறுவாழ்வு) தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.சிங்கள-பௌத்த மையவாதத்தின் தெரிவுகளிலொன்றான"இலங்கையர்கள்"எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் (புலிகளது பிரிவுகள்) இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.


ஆசிய மூலதனத்தின் வருகையின் பலத்தோடு புரளும் பணத்தை வைத்து இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து, இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.இதன் தெரிவிலிருந்தே கே.பீ.இன் "வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுப் புனரமைப்புக் கழகம்" புலிகளின் "முன்னாள் போராளிகளது" மறுவாழ்வு-மன்னிப்பு எனப் பேசுகிறது. இந்தத் தொடரில் மக்களது உரிமைகளை வேட்டையாடுவதில் நெடியவனும்சரி இல்லைக் கொடியவனும்சரி எந்த மக்களது தலையில் எதைப் போட்டாவது தமது எஜமானர்களுக்குத் தமிழ்பேசும் மக்களை இரையாக்குவதில் மிகக் கவனமாகக் காய்களை நகர்த்துகின்றனர்.


இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக ப் புலிகளை வளர்த்தவர்களே அப் புலியை அழித்துவிட்டு,இப்போது "எஞ்சிய-மிஞ்சிய புலிகளுக்கு" மறுவாழ்வு கொடுப்பதாக நடிப்பதைத் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.உழைப்பவர்களது போராட்டங்களை இனவாத அரசியலின் தெரிவோடு மட்டுப்படுத்தும் மக்கள் விரோதச் சட்டங்களோடு நகரப்போகும் ஆசிய மூலதன "அபிவிருத்தி-வேலைவாய்ப்பு"என்ற நச்சுப் பொருண்மிய அசைவாக்கம் இன்னொரு முறை இலங்கையில் அவசரகாலச் சட்டவரைவுக்குப் புதிய சாதகங்களைத் திறந்துவிடலாம்.


சிறையிலுள்ள "புலிகளுக்கு" மறுவாழ்வு:

இது குறித்து நிறைய ஐயங்களுள்ளன.வன்னிப் பேரழிவு யுத்தத்தில் அழிக்கப்பட்ட மக்களும்,போராளிகளும் ஏராளம்.உண்மையில் களத்தில் பயிற்சியுடன் நின்ற அனைத்துப் புலிகளும் அழிக்கப்பட்டே விட்டார்கள்.புலிகளது போராளிகளில் கிட்டத்தட்ட அனைவரும் பாதகச் சிங்களவரசால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்பது, சில ஆய்வுகளது தரவுகளிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.இந்தப் புள்ளியிலிருந்து செய்யப்பட்டும் ஆய்வும்,அதன் தெரிவும் இன்னொரு பொய்யை அம்பலத்துக்குக் கொணருகிறது.



கடந்த வன்னி அழிவு யுத்தத்தை ஆரம்பித்த அரசு.அதைச் செய்யும்போது தம்மால் முழுமையாக அழிக்கப்படப்போகும் புலிகளது உடல்களுக்கு பல்லாயிரம் உறைகளை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க முனைந்து அம்பலப்பட்டது ஞாபகம் இருக்கட்டும்.


உலகச் சட்ட நியாயங்கள்-யுத்த தார்மீகக் கடப்பாடுகளையெல்லாம் அமெரிக்கப் பாணியில் கடாசிவிட்டுப் புலியழிப்பை முழுமையாகச் செய்துவிட்ட இலங்கை அரசானது உலகை ஏமாற்றுமொரு பெரிய நாடகத்தைச் செய்திருக்கிறதென்பது இப்போது மெல்லக் கசிகிறது.


யுத்தத்தில் புலிகள் சரணடைந்தபோது அவர்களைக் கௌரவமாக நடாத்தியதாகவும்,அவர்கள் இப்போது பத்தாயிரத்துக்குமேல் புனர் வாழ்வுச் சிறையில் இருப்பதாகவும் உலகுக்குக் காட்டுவது தனது கொலைக்கரத்தை மறைப்பதற்கானவொரு சதுரங்க விளையாட்டே.


இதை கே.பீ போன்ற கொடிய மனிதர்களது தயவோடு அரங்கேற்றும் கோத்தபாயக் கூட்டம் மிக நேர்த்தியாகப் புலிகள் அனைவரையும் பூண்டோடு அழித்துள்ளது.சரணடைந்த எவரையுமே அது விட்டு வைக்கவில்லை!


இப்போது"மறுவாழ்வு-புனர் வாழ்வு "கொடுக்கப்பட்ட"புலிகள்" என்பவர்களும்,இன்னும் புனர்வாழ்வுக்காகச் சிறையில் அடைத்து வைத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களும் வெறும் அப்பாவி இளைஞர்களே.வன்னியில் அப்பாவி இளைஞர்களை முகாங்களிலிருந்து தூக்கி வந்து உலகை ஏமாற்றும் இலங்கைப் பாசிச அரசோ தனது கொலைப் பாதக யுத்தத்தை மிக அழகாகவே மறைக்கிறது.


கோத்தபாயவின் அகராதியில் புலிகளது உண்மையான எந்தப் போராளியும் உயிருடன் இருக்கப்படாது.இதை மிகக் கறாராகக் கடப்பிடித்து புலிகள் எவரையும் உயிர் தப்பவிடாது கொலைசெய்து புதைத்த இக் கூட்டம் இப்போது, மறுவாழ்வு கொடுக்கும் "புலிகள்" என்பவர்கள் வெறும் எலிகள் என்பது அம்பலத்துக்கு வருகிறது.


யுத்த மரபுகளை மீறித்தாம் இலங்கை மண்ணிலிருந்து புலிகளை அழித்துத் துடைத்தெறிந்தது இலங்கைப் பாசிச அரசு.அது,கடைப்பிடித்த இராஜ தந்திரம் முழுமையாக ஈராக்கில் நடந்த தந்திரத்துக்கு ஒப்பானது.இந்திய-சீன உளவுப்படைகளது நேரடியான வழிகாட்டலது தயவோடுதாம் புலிப் போராளிகள் அனைவரையும் ஒன்றும் விடாது கொன்றழித்தவர்கள். சரணடைந்த அனைவரையும் மண்டையில்போட்டுக் கொன்ற ஒருசில வீடியோக்கள்தான் அதன் உண்மையான கோரமுகத்தின் சிறுவொழுக்கு!


இத்தகைய பாரிய மோசடியை அரங்கேற்றத் துணை நின்ற கேடியான கே.பி. இப்போது வித்தைகாட்டும் "மறுவாழ்வு-புனர்வாழ்வு" என்பது அப்பாவி இளைஞர்களை வைத்து நடாத்தப்படும் நாடகமே.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.08.2010

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...