Sunday, August 17, 2008

ஜோர்ச்சிய,இருஷ்சிய யுத்தம்

உலகத்தைக் கவ்வும் மூலவளத்துக்கான யுத்தம்.

(3)


உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.


இருஷ்சியாவுக்கும் ஜோர்ச்சியாவுக்குமான தற்போதைய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற்கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது.இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய பனிப்போரை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதற்கேதுவானவொரு வெளியை போலந்தில் நிறுவும் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டத்துள் வகுத்துள்ளது.போலந்தில் வரும் 2011 க்குள் பத்து ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை அது நிறுவவுள்ளது(Ground−Based Midcourse Defense System" (GMD) இதைக்கடந்து செக் குடியரசுள் நிறுவப்படும் ராடர் கருவியூடாகப் புதிய பனிப்போரை மிக இலகுவாக இருஷ்சிய ஆதிக்கத்தின்மீது திணிக்கும்போது, இருஷ்சியாவின் மக்கள் நலக்கட்டுமானங்கள் பலவீனம் அடையும்.தொடர்ச்சியான இரணுவவாதப் பொருளாதாரமானது மக்களை-மக்கள நலக் காப்புறுதிகளைக் கேள்விக்குட்படுத்தும் இதன் வருகையோடு மிக இலகுவான கொந்தளிப்பு-குழறுபடி அரசியல் போக்கை இருஷ்சியாவுக்குள் தொடர்ந்து நிலவச் செய்யும்போது,இத்தகைய தேசத்தால் அமெரிக்க ஆதிக்த்தை எதிர்க்கும் வலுவில்லாதுபோகிறது.


இன்றைய பொருட்குவிப்பின் தொடர்ச்சியில் உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.இதுன் மறு விளைவானது ஐரோப்பியக் கண்டத்துள் புலம் பெயர்ந்த மக்கள்மீதான இனவாத அரசியலாகவும் விரிந்து தொடர் இனவாதத்தை உற்பத்தி செய்கிறது.


இருஷ்சியாவுக்கும்,ஜோர்ச்சியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் விருத்தியானது ஐரோப்பிய எரிபொருட்கட்டுப்பாட்டை இருஷ்சியாவின் அரசியல் ஆதிகத்துள் கொணர்ந்திருப்பினும் போலந்துடனான நட்புறுவு ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவானது இருஷ்சியாவின் அரசியல் வியூகத்தை உடைப்பதற்கானவொரு மிக நுட்பமான போர்த்தந்திரோபாயத்தை உலகத்தின்மீது திணித்திருக்கிறது.இங்கே,எண்ணைவள நாடுகளுக்கிடையிலான எல்லாவகைத் தார்மீக உறவுகளும் சிதலமடைய அமெரிக்க பூகோள அரசியல் வியூகம் தூபமிடுகிறது.இதன்வாயிலாக இருஷ்சிய அரசியல் வியூகமானது தனது தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தொடர்ந்து நகர்த்தமுடியாது அந்நிய நிதிநிறுவனங்களை அல்லது உலக நாணயச் சபையை,உலக வங்கியை நாடவேண்டியதும்,தங்கியிருக்கவேண்டியதுமானவொரு சூழல் ஏலவே இருஷ்சியாவுக்கு வந்துவிட்டது.இது இறுதியில் போர்முனைப்படையவும் அதன் தொடர்பான அரசியலால் இருஷ்சிய மேலாதிக்கம் தன்னளவில் தகர்வதற்குமானவொரு யுத்தமாக முனைப்பெறும் உள்நாட்டு யுத்தம் ஒன்று இருஷ்சிய மக்களால் முன்னெடுக்கப்படும்.அப்போது பூட்டின்-மெட்வேடெவ் கூட்டு அரசியல் ஆளுமையை இழக்கும் ஒரு கனவை அமெரிக்க-நேட்டோக் கூட்டுக்கள் திட்டமிட்டபடி தரிசித்துவருகின்றன.


ஜோர்ச்சியாவென்பது கௌவ்கசுஸ் பிரதேசத்தின் எண்ணைவள அரசியலில் மிகப்பிரதானமானவொரு பாத்திரத்தை வகிக்கின்றது.இது இருஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலானவொரு பாரிய கேந்திர முக்கியத்துவத்துக்கான சதுரங்க அரசியலை விரித்துள்ளது.இந்தக் கேந்திர முக்கியத்துவமே அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளின் இருஷ்சியாமீதான ஆட்சேபமாகவும்,யுத்த எதிர்ப்பாகவும் இன்னொரு கட்டத்தில் ஜோர்ச்சியாவின் இறைமையாகவும் இவர்களின் வாயிலிருந்து வருகிறது.இது எப்பவும் தமது வளத்தையும்,அதன் வாயிலாகத் தமது நிதி முதலீட்டையும் முன்வைத்த அரசியலாக இருக்கும் என்பதை இவர்கள் மறைத்தபடி உலகுக்கு ஜனநாயகம் பேசுகிறார்கள்-ஜோர்ச்சிய அப்பாவி மக்களை காப்பதாகவும் நாடகம் போடுகின்றனர்.இங்கே,நமது கண்முன்னால் நடந்தேறும் ஈராக் யுத்த அழிப்பு-அராஜக யுத்தம் நமக்குக் கற்பிப்பது ஈராக்கு ஜனநாயகம் என்பதையே.ஆனால்,அமெரிக் அட்டூழியம் ஈராக்கை தாக்கும் எந்த இறையாண்மைத் தனக்குள் கொண்டிருந்ததென்பதை இதுவரை இவர்கள் கேள்விக் குட்படுத்தவில்லை.


ஜோர்ச்சியாவுக்கூடாக கட்டப்படும் நபுக்கோ புரஜெட்(Nabucco Projekt und das Projekt Kaspisches Erdoel Pipeline Odessa-Brody und auch der BTC Pipeline)(எரிவாயு மற்றும் எண்ணைக் குழாய்கள்)இந்த இருஷ்சிய யுத்தத்தால் மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது.கஸ்பிஸ் எண்ணையூற்றைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்குக் காவிவரும் மேற்காணும் குழாய்கள் யாவும் ஜோர்ச்சியாவினூடாகவே அதன் நிலத்தைப் பிளந்தபடி துருக்கியின் செய்கான்;(Ceyhan) துறைமுகத்தை வந்தடைகின்றன.இதைக்கடந்து நபுக்கோ குழாய்கள் துருக்கியை ஊடறுத்து பல்கேரியா மற்றும் போலந்துவரை நீண்டுவரும் ஒரு திட்டம் இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தால் கேள்விக்குறியாக மாறியது மேற்குலக ஆளும் வர்க்கங்களின் மனதில் யுத்த வெறியாகவும் அதை இருஷ்சியாவோடு செய்வதிலுள்ள அழிவுச் சிக்கலாலும் ஆறு அம்ச ஒப்பந்தமாக இன்று வருகிறது.இதன்படி இருஷ்சியா தனது படைகளை ஜோர்ச்சியாவிலிருந்து விலக்குவாதாக வாக்களித்தாலும் இந்தப் பிரதேசம் இருஷ்சிய மற்றும் அமெரிக்க வல்லூறுகளின் வேட்டைக்காடாகவே இருக்கும்! இதுவே, அமெரிக்க அரசின் உலக ஆதிகத்துக்கானவொரு அரசியல் சூழலை மிகவும் அர்த்தபுஷ்டியாக ஆக்கித் தருகிறது.அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த அமெரிக்காவுக்கும் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.இது தற்காலிகமானதுதாம்.எனினும்,இன்றைய எண்ணைவளத் தேசங்களின் கையாலாகாத அரசியற்றலைமைகளால் யுத்தமென்பது தவிர்க்கமுடியாதபடி உலகத்தில் பலகோடி மக்களை அழித்துவருகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.08.2008

No comments:

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...