Sunday, September 17, 2023

திரிகோணமலை : ஆத்திரமூட்டும் அரசியல்

 திரிகோணமலை : கட்சிவாத அடையாள அரசியலும் , ஆத்திரமூட்டலும் (Provokation) ; அடிபாடுகளும் —சிறு, குறிப்பு ! 

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி பார்த்திபன் இராசையா செய்த சாகும்வரை உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்தது . அவரை , மரணிக்குவரை நடாத்தப்பட்ட அரசியற் சூதாட்டம் மிகவுந் தந்திரமானது ; ஆதிக்க சக்திகளது பலப்பரீட்சை ஆயுதத்தால் மட்டும் நிலை நாட்டப்படுவதில்லை . ஆதிக்கம் என்பது , எங்கும் , எப்போதும் பெரும் பகுதி மக்களது நம்பிக்கையினால் மட்டுமே நிலைப்பெறும் ; சாத்தியமாகும் . 

20’ஆம் நூற்றாண்டில் அகிம்சை மீதான இந்திய மக்களது நம்பிக்கையே காந்தியை மகாத்மா ஆக்கியது . அந்த நம்பிக்கையே ஆதிக்கமாகவும் எழுகிறது . 

1987’ஆம் ஆண்டு பார்த்திபனின் அகிம்சைமீதான நம்பிக்கை அவனை பட்டுணி கிடக்க வைத்தது . ஆனால் , ஈழமக்களிடம் ஆயுதத்தின் மீதான காதலே இருந்த காலத்துள் அகிம்சை என்பது பாரிய நம்பிக்கையாக நிலவவில்லை .இதனால் , அவன் தோல்வியொடு “தியாகி தி~லீ~பன்” என்றானான் ! 

சாகசம் நிறைந்த கொரில்லா தாக்குதற் குழுவொன்று , ஆயுதத்தை அணைத்தபடி பார்த்திபனை தி~லி~பனாக்கி அகிம்சை நாடகத்தை அரசியலாக்கியது . இந்த அமைப்போடு ஐக்கியமாகிய மக்களும் அகிம்சையை மிகவும் மலினப்படுத்தி இந்தியாவோடு சொறிந்தார்களேயொழிய அகிம்சை மீதான பற்றுதியோ , நம்பிக்கையோ கொண்டு இயங்கியவர்கள் அல்ல, ஈழத் தமிழர்கள். எல்லாம் , வெறும் நடிப்பு /நாடகம் !

எனவே , 1987’ஆம் ஆண்டு பார்த்திபனை ஈழ மக்கள் கொல்லும் நிலைக்குச் சென்று  , அகிம்சையை மலினப்படுத்தினார்கள் . 

இந்தக் கேலித்தனமான அடையாள அரசியலை  இன்று , மீளவும்.  ஞாபகப்படுத்தி திருகோணமலையில் பார்த்திபனின் படத்தை வைத்து ஊர்த்திகள் அணிவகுப்புச் செய்து , சிங்கள மக்களின் உணர்வுகளைத்தூண்டி , மக்களை சமூகத்தளத்திலும் , தன்னிலையிலும் ஆவேசப்படுத்தியபடி; ஆத்திரமூட்டுதல் சார்ந்து இயங்கிய கஜேந்திரகுமார் யாருடைய முகவர்(Agent provocateur)? இனப்பகையைத் தொடர்ந்து ஊதிப்பெருக்கி சமுதாயத்தை அச்சப்படுத்தி , நடுங்க (Angst und Panik) , ஒடுங்க வைத்து அரசியல் இலாபம் அடைதல் சமூகவிரோதமாகும் . 

இத்தகைய அடையாள அரசியலைத் திட்டமிட்டு நகர்த்தி ,தொடர்ந்து ஆத்திரமூட்டல்களின்வழி ( Provokation) சிங்களமக்களிடமிருந்துமிருந்து தமிழினத்தை தூர விலக்கிக் கொள்ளவும் அல்லது, இனப்பதட்டச் சூழ்நிலைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுத்தும் இந்த அபாயகரமான அரசியலின் பின்னே உள்ள சக்திகள் யார் -யார் ? 

தமிழ் விதேசியக் கட்சிவாத அரசியலின் தொடர்ச்சி , இங்ஙனம் ஆதிக்கத்துக்காக , அதிகாரத்துக்காக முன்னெடுக்கும் இந்த அபாயகரமான அரசியற் சதி , தமிழ்பேசும் மக்களின் நலத்தின்பாற்பட்டதல்ல.அதிகாரம்-ஆதிக்கம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு "தனிமனிதரை குழுவை-தேசத்தை"யென பணிவுக்குட்படுத்திச் செல்வதில் அதன் கொள்கையளவிலான பண்புகள்"அதிகாரத்தைச் செலுத்துபவரும்,அதிகாரத்துக்குட்படுபவரும் இருவேறு தளத்திலான நம்பிக்கைக்குட்படுகின்றனர்.

வர்க்கச் சமுதாயத்துள் ஒருவர் உடமை வர்க்கத்தவராகவும் மற்றவர், உழைப்பாளராகவும் தேர்ந்து போயினர். இதுள்,ஒருவர் ஆதிக்கத்தைச் சட்ட பூர்வமாக்கவும்,நிறுவனப்படுத்தவும் , அதிகாரத்தை நம்ப வைக்கவும்,அது அதிகாரத்துக்குட்படுபவரின் விமோசனத்துக்கானதெனச் சொல்லியே ஆதிக்கத்தை வியாபிக்க முனைகிறார்.இதுவே , இன்று , மீளவும் , இராசையா பார்த்திபனின் ( இ.தி~லீபன்) படத்தை வைத்து ஊர்வலஞ் சென்று ஆதிக்கத்தைப் பெற மக்களிடம் வருகிறது . மக்கள் இதை நம்ப வேண்டுமென வியூகம் அமைத்து இந்தக் கயமைவாதக் கட்சிகள் இயங்குகின்றன . 

ஆதிக்கமானது இத்தகைய தருணத்தில் நம்பகாமாக ஏற்கப்படும்போது மட்டுமே சட்டரீதியான வெளித் தோற்றத்தைச் சமூகத்துள் நிறுவனப்படுத்துகிறது. இதற்காக , கலகங்களும் ; சண்டைகளும் உருவாக்க முனைதல் கூட சட்டரீதியான அங்கீகாரத்தை இலக்கு வைத்தே நகருகிறது .

இங்கு , நாம் புரிய மறுப்பது ; நம் கட்சிகள் புரிய மறுப்பது , அதிகாரமும்-ஆதிக்கமும் வெவ்வேறாகிறது என்பதையே . 

மக்ஸ் வேப்பரது[ Maxs Weber ]நீண்டவுரையாடலைச் [ Wirtschaft und Gesellschaft-Tübingen 1972 ]செழுமைப்படுத்திய  கைன்றிக் போபிற்சு[ Heinrich Popitz] இதைத் தெளிவாகவே நமக்கு[ Das Konzept Macht] உரைத்திருக்கிறார்.உயர் குடிகளுக்கான வாய்ப்பு மிக இலகுவாகவுள்ளதை அவர் புட்டுவைத்தார்.

முள்ளிவாய்க்கால்வரை தமிழ்த் தேசியமானது தனது சக்திகுட்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நம்பிக்கைகளை மிக இலாவகமக தமிழ்பேசும் மக்களுக்குள் உருவாக்கியது.அஃது, தொடர்ந்து இன்னொரு மக்கட்டொகுதியை ஆத்திரப்படுத்தலுக்கான வழிமுறைகளைக்கொண்டே[Differentiation of Society-Luhmann,M. In Canadian Journal of Sociology 2.] ஒரு இனத்தின்மீதான இன்னொரு இனத்தின் அத்துமீறிய ஆதிக்கத்தை நிலைப்படுத்த விரும்பியது.

இதன்சாரத்துள் மறைக்கப்பட்ட நலனானது தமிழ் மேட்டுக்குடியின் நலன்களைச்சார்ந்தே இயங்கிக்கொண்டது.இதன் உச்சபட்சம் மரபார்ந்த அனைத்து அறங்களையும் நாசமாக்கியது.

இனங்களுக்கிடையிலான மூலதனவிருத்தி,போட்டிகளை மலினப்படுத்தியபோது அவை முரண்பாடுகளாகவும்-இனம், மொழி,மதம்,பண்பாட்டுக்கெதிரான தாக்குதற் கருவூலமாகப் புரிய வைக்கப்பட்ட நம்பிக்கைகளே [Symbolic Power.Critique of Anthropology-Bourdiee,Pierre.1979 ]இறுதியில் சட்டபூர்வமான ஆதிக்கத்துக்கான அரசின் உறுப்பாக மாற்றப்படுகிறது.

சில கட்சிகள் , ஆளும் வர்க்க மனிதர்களின் நலன்களது தெரிவு எங்ஙனம் ஒரு இனத்தையே மொட்டையடிக்கும் விதேசிய வாதமாக மாறுகிறதென்பதைக் கடந்த முள்ளிவாய்க்கால்வரையான சாவுவாதப் போராட்டம்  குறித்துரைக்கிறது.

இது,அதிகாரம்-ஆதிக்கம் குறித்த கைன்றிக் போபிற்சினது(Heinrich Popitz]"சட்டபூர்வமான-தன்மையிலான அங்கீகாரமின்றி ஆதிக்கம் இல்லை"[Ohne Legitimität keine Herrschaft] என்பதோடு நெருக்கமானது .

இந் நிலையில் இலங்கையின் சமூக-அரசியலை மக்கள்-மண்-இயற்கை-சூழலென அனைத்தையும் பிணைத்து உள்வாங்கியவொரு உரையாடலாக நகர்த்தும்போது மட்டுமேதாம் இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு இலங்கையை நாம் யோசிக்க முடியும் . அதுவரை , இனங்களை ஆத்திரமூட்டி , ஒருவரையொருவர் வேட்டையாட வைக்கும் அரசியல் தொடர் கதையாகும் ! 

உலகம் பூராக நாம் , உழைப்பின் உறவால் ஒன்றுபட்ட மனிதர்கள்.

நமக்கு"இனம்-மதம்-மொழிவழித் தேசம் "என்பவைகள் இரண்டாம் பட்சமானவை. 

இவைக்கும்,உழைப்பவர்களது,ஒடுக்கப்படுபவர்களது,தாழ்த்தப்படுபவர்களது,இந்த அமைப்பால் விளிம்புக்குத் தள்ளப்பட்ட வலுவற்றவர்களது "சுகவாழ்வுக்கும்-விடுதலைக்கும்" எந்தத் தொடர்புமில்லை!

தமிழ்பேசியவர்கள், தமிழர்களை ஒடுக்கவில்லையா?

தாழ்த்தவில்லையா?

கொன்று இரயர் போட்டெரிக்கவில்லையா?

துரோகி சொல்லிப் பொட்டு வைக்கவில்லையா?

இவைக்காகத்"தமிழீழம்"என்ற ஒரு புனைவை முன்தள்ளித்தாமே நியாயம் கூறினர்?

அந்தத் "தமிழீழம்" இன்றெவரது கைக்குச் செல்வத்தைக் குவித்து வழங்கியிருக்கிறது-எந்தெந்தக் குடும்பங்களது தலைமையில் அதிகாரத்துக்கான திசையமைவுகளை இன்றுவரை பார்த்திபன் படத்தைக் காவிக்கொண்டியக்கி வருகிறது? 

எவரெவரோடு கூட்டுவைத்து இலங்கையிலும்,மேலைத் தேசங்களிலும் இயங்கிக்கொள்கிறது?

இத்தகைய ஏமாற்றை-வரலாறு விட்டுச் சென்ற பக்கங்களை நாம் இயல்பான அறிவாய்வுப்பண்பாடு தமிழ்த் தேசிய மாயையை விலத்திச்சொல்லும்போது உண்மைகளை நாம் தரிசிக்கவிடாத தேசிய வாதத்தைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரமுடியும்.

இதுள்,"இனம்-மொழி-மதம்-தேசம்"கடந்து வர்க்க ஒன்றிப்பில் நிகழும் இயக்கப்பாட்டை நோக்குங்கள் இளையோரே!

எனவே , நமக்கான உண்மையைக் கண்டடையக் கல்-முள் கொட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுவுண்மைசார்ந்த ஆய்வுப் பாதைக்குள் நடந்தே தீரவேண்டும்.


நமக்கு இதைவிட வேறு குறுக்குப் பாதையில்லை!


—ப.வி. ஶ்ரீரங்கன்           17.09.2023

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...