Sunday, April 07, 2013

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

40 வது, இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்!

இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது!

பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர்.

எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்,மார்க்சிசம் என்ற வகைப்படுத்தலில் சிலரை முன்வைத்துக் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்பகால அரசியலை வகைப்படுத்துவதென்பதைவிட இந்த இலக்கியச் சந்திப்பானது அதன்வழியில் சிலரது இன்றைய அரசியல் தற்கொலையை எனக்கு உறுதிப்படுத்துகிறது.அந்த வகையில் சந்துஷ்சுக்கு நன்றி.



மாவோயிசம் பேசிய அறுவைச் சீனி லோகன் இலங்கை அரசியலில், அரசின் போக்குகளுக்குச் சார்பாக இயங்குவதும்,மார்க்சியம் பேசியவர்களில்பலர் குறிப்பாய்ந் சிந்தனை,பரா மாஸ்டரது இழப்போடு தலியத்தோடு சங்கமித்து இலங்கையின் பொது அரசியலோடு ஒன்றித்துப்போனதும்,ரொக்சியம் பேசிய புதுமை,வாணீ,ஜெயபாலன்,பாரதி தமிழ்த் தேசிய அரசியலில் தடுமாறுவதும்,தூண்டில் இது எதுவுமேயின்றித் தனது பாத்திரத்துள் சமூகக் கொடுமைகள்,சமத்துவத்துக்காகப் போராடியதில் அது தமிழ்த் தேசிய-மற்றும் தமிழீழ மக்கள் கட்சியால் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பாத்திரத்தின் கூறு சிலரை இன்னும் துடிப்போடு இந்தப் பெரு வெள்ளத்தை விட்டு மக்கள் பக்கம் நின்றியங்கவும்,விமர்சிக்கவும் தூண்டிக்கொண்டுதாம் இருக்கிறது.

அண்மை வரை, இலக்கியச் சந்திப்பானது புலிகளது அரசியல் மற்றும் பாசிசம் குறித்துக் கருத்தாடியதிலிருந்து சில நிசப்த காலத்துள்(அதுள் பங்கு பற்றிய பலரை இன்று வரலாறுரைக்கும்) அனைவரையும் கட்டிப்போட்ட அரசியல் தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடுத்த எல்லைக்கு(பாசிசத்துக்கு எதிரான போராட்டப் பாத்திரம்)த் தாவுவது வரலாற்றின் உண்மைகளைக் குறித்து நோக்குபவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது.



தலித்தியம் முதல் மாவோயிசம் பேசியவர்கள்,மார்க்சியம் முதல் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் வரை அரசியல் செய்தவர்கள் இலங்கையின் பொது அரசியல் நீரோட்டத்துள் கலந்துபோனதும் ,வாசு தேவ நாணயக்காராக்களையும் இலங்கியச் சந்திப்புள் இனங்கண்டபோதும் இவர்கள் முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட மக்கள் குறித்து என்ன பதிவை 2005 களுக்குப் பின் முன்வைத்திருக்கிறார்கள்?

பாசிச இராணு ஜந்திரங்களுக்குள் சிக்குப்பட்ட அப்பாவிகள் குறித்து, அவர்களது நலனின் அக்கறை கொள்ளாது, முள்ளி வாய்க்காலில் அவர்களைப் பாசிசச் சிங்கள இராணுவம் அழித்துக்கொண்டபின் -அந்த மக்களது குருதி உலர்வதற்குள் தலித்துவ வாதிகளும்,இராகவன் போன்றவர்களும் இலங்கையில் மகிந்தா ஜனநாயகத்தை மீளக் கொணர்ந்ததாகப் பேட்டிகள் செய்தும்,நன்றி தெரிவித்ததுமாக இந்த இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கம் மாறிப் போனது உண்மை!

இன்று,சாத்திரியை கேள்வி கேட்டுத் துளைப்பவர்கள்,தேவதாசன்,அசுரா,ஞானம்,இராகவன் போன்றோரைப்பார்த்து அரசியல் ரீதியான காட்டிக்கொடுப்புக்குகான எதிர்வினையை ஆற்றுகிறார்களா?அல்லது, பாசிச மகிந்தாவின் அரசியலை ஜனநாயகமென வகுப்பெடுத்து முழுத் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையின் சிறுபான்மை இனங்களையும் மகிந்தாவின் அரசியல் நிகழ்வுக்குள் தற்கொலை செய்ய வைக்கும் கயமைக்குப் பதில் தேடுகிறார்களா?

இங்கு,தனிப்பட்ட நட்பு,உறவாடலென்பது பரந்துபட்ட மக்களது அரசியல் வெளிக்குள் இல்லையென்பதைச் சந்துஷ் நிரம்பவே புரிந்தவர்.ஆனாலும்,யாரை விட்டது முகம் பார்த்து அரசியல் பேசுவது?




அடுத்து,அண்ணன் சுசீந்திரனிடம் வருவோம்.

எப்பவும்போல நகைச் சுவையாக மனிதவுணர்வுகளை தனக்குள் ஒன்றிக்க வைக்கும்"அன்பு" நிறைந்த உரையாடல் அவருக்கானதே!அதனாற்றான்,நான் அவரை "நேசம் நிறைந்த சுசீ அண்ணா" என்று எப்போதும் அழைப்பவன்.அவரது உரையாடலில் முரண்படும் கருத்துக்களை அவர் மிக விவேகமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றையுரைக்கிறார்.அதுள், தனக்குள் வசப்பட்ட நியாயங்கட்குவுட்பட்டு வரலாறு கட்டும்போது பீட்டர் ஜெயரெட்னத்தை மட்டும் சொல்லிச் செல்பவர் ஏனோ பார்த்திபனை,செல்வராஜாவை,சிவத்தை,ஜோசெப்பை மறந்தாரோ தெரியவில்லை!

இந்த இலக்கியச் சந்திப்புக்காக ஆரம்பம் முதல் அதன் பல சந்திப்புகளுக்கு அவித்துப் போட்டவர்களும் அதற்காகத் தமது வீடுகளைத் திறந்து விட்டவர்களும் இந்த மேற்சொன்ன பேர்வளிகளுக்குள் இருக்கின்றனர்.இதற்காகப் பாரிய பொருள் இழப்பையும் அவர்களே தாங்கினர்.

போகட்டும்.

கன்னை கட்டி அரசியல்,வரலாறுரைக்க முடியாது.

திரு.சுசீந்தரன் ஆரம்பகால இலக்கியச் சந்திப்புள் ஒருவருமாக,இப்போது ஒருவருமாகக் கருத்தாடுவதுள் அவரோடு முரண்படும் ஒரு விடையத்தை "மனம் புண்படும்" என்ற அகவிருப்போடு அவர் மறுத்துரைத்ததற்கு நாம் சில வற்றைச் சொல்லியாகவேண்டும்.

நா.கண்ணன் என்பவர் பார்ப்பனர் என்பதும்,அவரது படைப்புகள் நவீனப் பெண்ணியச் சம வாழ்வுக்கு,எதிரானதென்பதும்,அவர் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தாண்டி இலக்கியமோ, அரசியலோ செய்ய விரும்பாதவரென்பதும் நாம் அவரோடு விவாதித்துத் தெரிந்துகொண்டவை.

அவரது இலக்கியச் சந்திப்புப் பங்களிப்பில் அவர் பார்ப்பனியச் சனாதன தர்மத்தைக்கூடப் புதிய மொந்தையில் வார்த்தவர்.

அப்படியாகிய, அவருக்கெதிரான "ஆண்டாள் மார்க் அளவு நாடா" என்ற குறியீட்டு அரசியல் எதிர்ப்புப்பிரசுரம் மிகவும் தார்மீகத் தன்மையுடையது.

அது,பார்ப்பனியத்தாலும்,சனாதன தர்மத்தாலும் பாதிக்கப்பட்டவர்களது நியாயத்தின்-உணர்வின் வெளிப்பாடு!


இதுவொரு தனிப்பட்ட மனிதரைப் புண்படுத்துவதென்பது பார்ப்பனியத்தின் அதிகாரத் தன்மையை,தனிப்பட்டவர்களது தெரிவுக்குள் குறுக்குவதாகும்.பார்ப்பனியர்கள் ஒவ்வொருவரும் அதன் சேவர்களாக இருப்பது மட்டமல்ல அதற்கு வெளிநிலைப் படிச் சாதிகளும் அதையே வெளிப்படுத்துபவர்கள்.இந்த ஆண்டாள் மார்க் அளவு நாடா பொதுவாகப் பார்ப்பனியத்தின் மனித விரோதத்தை எதிர்ப்பதாகும்.இதைத் தனிப்பட்ட தாக்குதலாகக் குறுக்கி"மனித மனம் புண்படும்"என்பது மிகவும் பொறுப்பற்று வரலாற்றை மறுப்பதில் முடிச்சிடுகிறது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்,239 மில்லியன் மக்களைச் சனாதன தர்மம் தீண்டத் தகாதவர்களாக்கிச் சிதைக்கிறது.அந்தச் சீரழிவுப் பண்பாட்டின் கூறுகளைத்தாங்கி நமக்குள் கருத்துக்கட்டிய கண்ணனின் மனம் புண்படும் என்ற சீசீந்தரனுக்கு இவர்களால்  சிதைக்கப்பட்ட , 239 மில்லியன்கள்  மக்களது மனத்தின் காயங்கள் ஒரு பொருட்டாக இல்லை!இதை எதனோடு ஒப்படி முடியும்?

இலக்கியச் சந்திப்பில் இப்படியும் வரலாறு திரும்புகிறது.

பிற்குறிப்பு : "ஆண்டாள் மார்க் அளவு நாடா" விளிம்புக்குரல் துண்டுப் பிரசுரம் 1998 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் இலக்கியச் சந்திப்பில் சோபாசக்தி-ரஃபேல் போன்றோரால் வினியோகித்து எதிர்ப்புக் காட்டப்பது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2013

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...