Tuesday, December 30, 2008

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்:

"காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!"

கடந்த முப்பத்தியாறு மணி நேரத்துக்குள் சுமார் 360 பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலால் கொல்லப்பட்டும்,1000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.காயப்பட்ட அப்பாவி மக்களில் 80 வீதமானவர்கள் படுகாயமடைந்து இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் என்றும் ஜேர்மனிய ஊடகங்களும்,அல் ஜெசிரா தொலைக்காட்சியும் தெரிவிக்கிறது!


"நாம் நடத்தும் வான் தாக்குதல் மக்களைக் குறி வைத்தல்ல.மாறாக,காமாஸின் கட்டமைப்புகளை நோக்கியது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரானதேயொழிய மக்களுக்கு எதிரானது அல்ல"-இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர்.

ஒரே குரல்,ஒரே அர்த்தம்! உலகம் பூராகவும் ஒடுக்கு முறையாளர்கள் ஒரே இலக்குடன் செயலாற்றுகிறார்கள்.அது,மகிந்தாவானாலுஞ்சரி அல்லது இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரியானாலுஞ்சரி எல்லோரும் ஒரே தளத்தில் நிற்கின்றார்கள்.

"பொது மக்கள் இதற்கான விலையக் கொடுக்கவேண்டியதும் கவலையானது"-சிபி இலீவ்னி இஸ்ரேலிய வெளிவிவகார மந்திரி.அன்றைய அமெரிக்க வெளிவிவகார மந்திரி அல்பிறைட் அம்மையாரை விழிமுன் நிறுத்துகின்றார் சிபி இலீவ்னீ(Außenministerin Zipi Livni, "bezahlen leider auch Zivilisten den Preis").

குழந்தைகளும்,பெண்களும் இவ் வான்தாக்குதலால் மிகவும் பாதிப்புற்றுள்ளார்கள்.எங்கும் அப்பாவி மக்களின் குருதி தோய்ந்த முகங்கள் கண்ணீர் மல்கித் தெருவில் ஓலமிடுகிறது!உலகம் காமாஸ் இயத்தின் அழிவுக்கு இது அவசியமானதாக இனம் காணுவதன் அரசியல் முற்றுமுழுதான மேற்குலகப் பொருளாதார ஆர்வங்களோடு சம்பந்தமுடையது.இது,வரலாற்றில் கட்டவிழ்த்த யுத்தங்கள் யாவும் இந்த முதலாளியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கானதாகவே இருக்கிறது.

இங்கேயும்,பாலஸ்த்தீனக் காஸாப் பள்ளத்தாக்கிலும் அதே கதையோடு காமாஸ் முகமூடியாகிறது.இலங்கையில் புலிகள் போன்று!இரண்டுக்குமிடையில் நிலவும் பொருளாதார நோக்கம் ஒன்றே-அது,சந்தை வாய்ப்பையும்,உற்பத்தியையும் நோக்கியதே!இங்கே,தேசிய இனச் சிக்கல்கள் இந்த முறைமையிலான அரசியல்-பொருளாதார இலக்குகளால் மிகவும் நுணக்கமாகச் சிதைக்கப்பட்டுப் பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது.பயங்கர வாதத்தை அழிப்பதற்கெடுக்கும் நடவடிக்கையாக யுத்தம் இப்போது நியாயமான சட்ட அங்கீகாரத்தோடு அரச பயங்கரவாதமாக அப்பாவி மக்களை அண்மிக்கின்றன.வன்னியில் வதைபடும் மக்களின் துயர் உலகை எட்டவில்லை!எனினும்,மானுட அழிவில் ஆதாயம் அடைபவர்களை நாம் மிகவும் கவனமாக இனங்காண வேண்டும்.

என்றபோதும்,இவ்வகை யுத்தங்களால் மக்கள் அழியலாமா?அழியலாம்-அழியவேண்டும்!இது,மேற்குலக-அமெரிக்க ஜனநாயகம்.இதை எவராலும் மாற்ற முடியாதென்கிறது இன்றைய யுத்தச் சூழல்.அதாவது, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனப் புரியவேண்டுமென்கிறார்கள்!

இஸ்ரேலிய தரப்பு நியாயத்தின்படி, "யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை"(Kampf bis zum bitteren Ende)நடைபெறும்.இப்போது,வான் தாக்குதலில் முனைப்புடைய இஸ்ரேலிய இராணுவம், தரைப்படையையும் தயார் நிலைக்குள் வைத்துத் தரை தாக்குதலைச் செய்வதற்கான முனைப்பில் காரியமாற்றுகிறது.உத்தியோக பூர்வமற்ற தகவலின்படி காஸா நோக்கிய தாங்கிகள் அணிவகுப்பு ஆரம்பமாகிறது.

பாழாகும் மனித வாழ்வு பாலஸ்த்தீன மக்களின் அனைத்து வகைத் தார்மீக எதிர்பார்ப்புகளையுங் குலைத்து, அவர்களை மேலும் பழிவாங்கும் மன நிலைக்குள் தள்ளியபடி, அவ்வினத்தைத் தொடர்ந்து சிதைப்பதில் இஸ்ரேலிய அரசுக்கு என்ன வகை ஆதாயம் இருக்கிறது?

2006 இல் நடந்த தேர்தலில் காமாஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்க முடியாத உலகம், இப்போது நடைபெறும் யுத்தத்துக்கு அன்றே ஆரம்பப் புள்ளியைக் கீறியிருக்கிறது.எனினும்,யுத்தம் இவ்வளவு விரைவாக எழுவதற்கும்,அது பெரும்பாலும் பெருந்தொகையான மக்களின் உயிரைக்குடித்தபடி வான் தாக்குதலாகவும்,தரைத்தாக்குதலாகவும் பாலிஸ்தீனர்களின் அனைத்துக் குடியிருப்புகளையும் அழித்துவிடுமளவுக்கு நகரத்தக்க யுத்தமாக விரிவுறுவதன் பின்னால் நடந்தேறும் இலக்கு என்னவென்பது மிக அவசியமானதாக இருக்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இஸ்ரேலிய அரசுக்கான உதவிகளைச் செய்யத்தக்க வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் இல்லாதிருப்பினும், இவ் யுத்தம் சாரம்சத்தில் அண்மைக் கிழக்கு அரேபிய நாடுகளில் ஒன்றான பாரசீக-ஈரானிலேயேதாம் மையங்கொண்டது.எனினும், இந்த யுத்த இலக்கு காமாஸ் களையெடுப்பென்று இப்போது பாலிஸ்த்தீனக் காசாப் பள்ளத்தாக்கில் குருதியாற்றைத் திறந்திருப்பதற்கு அவசியமான புறக்காரணியாக எண்ணைச் சந்தை நிலவரமே காரணமாக இருக்கிறது.

இஸ்ரேலின் குண்டுகள் பாலஸ்த்தீனத்தைத் தாக்கி மனிதர்களைப் பலியெடுக்கும்போது, பங்குச் சந்தையில் மசகு எண்ணை பெறலுக்கு 6 டொலர்கள்கூடியுள்ளது.34 டொலர்கள் விற்ற மசகு எண்ணை திடீரென 40 டொலர்களாக உச்சம் அடைவதால் பங்குச் சந்தைச் சூதாடிகளின் முகத்தில் வெற்றிக்களிப்பு.

வரும் ஆண்டு ஏப்பிரலுக்குள் எண்ணை விலையை 70 டொலருக்கு ஏற்றுவதற்கேற்றபடி எண்ணை உற்பத்தியை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை வரவழைத்து இந்திய-சீனா போன்ற தேசங்களின் எண்ணைத் தேவையைப் பூர்த்தி செய்யாதளவு சந்தையில் தட்டுப்பாட்டைக் கொணர்வதற்கும்,அதனால் சந்தையில் எண்ணையின் விலையைப் பழையபடி 100 டொலர்கள்வரை ஏற்றிவிடவும் எண்ணை மாபியாக்கள் திட்டம் செய்திருக்கிறார்கள்.

இப்போதைய இஸ்ரேலிய அத்துமீறிய அழிவு யுத்தத்தால் பயனடைபவர்கள் இந்த எண்ணை முதலாளிகளாக இருக்கும்போது,இவ்யுத்தம் உண்மையில் காமாஸ் களையெடுப்பென்பதன் அர்த்தத்தை இழக்கின்றது.இது,சாரம்ஸத்தில் பற்பல முகங்களைக் கொண்டியங்குகிறது:

1) இவ் யுத்தத்தின்மூலம் தொடரப்போகும் ஈரான் யுத்தத்துக்கான ஒத்திகை.அரபு உலகத்தின் எதிர்வினைகளைக் காணுவதற்கும் அதை எதிர் கொள்வதற்குமான மிக தெளிவான திட்டமிடல்களுக்கும்,

2) பங்குச் சந்தைச் சூதாட்டத்தின் பாதளச்சரிவை குறைந்தளவாவது ஸ்த்திர நிலைக்கு மாற்றுவதற்கு,

3) சரிந்து வரும் எண்ணைச் சந்தைப் பெறுமதியைச் செயற்கையாக உயர்த்தி, இழந்த மூலதனத்தை மேலும் இழக்காது காத்துக் குறுகிய காலத்தில் மூலதனத்தைத் திரட்டுவதற்கான யுத்தச் சூழலை உண்டாக்குவது,

4) காமாஸ் இயக்கத்தின் பெயரில் பாலஸ்த்தீனியர்களின் அரசியல் ஸ்த்திரத்தன்மையையும் அவர்களது அரசியல் ரீதியான போராட்டவெற்றிகளை அழித்து,வெறும் இராணுவவாதத் தலைமைக்குள் அவர்களைத் தள்ளி விடுவதற்கும்,

இவ்யுத்தம் ஆரம்பமாகிறது.

இந்தக்காரணங்கள் நான்கும் மிக அவசியமானவொரு வான்தாக்குதலையும் அதன்வழித் தரைத்தாக்குதலையும் பாலஸ்த்தீனத்தின்மீது கட்டவிழ்த்துவிடுவது அவசியமாக இருக்கிறது இந்த அமெரிக்க-மேற்குலக மூலதனத்துக்கு.

எனினும்,நவ உலகக் குடியரசுகள் ஒரு புறம் யுத்தத்தைத்தாலாட்டி வளர்த்தபடி மறுபுறத்தில் தமது வாலாட்டியை வைத்து யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்றும் பேசுகிறார்கள்.யு.என்.செயலாளர் திரு.பான் கீ மூன் இன்றைய தினத்தில் தனது குரலை ஓங்கி ஒலிக்க விடுகிறார்!அவரது கூற்றுப்படி இஸ்ரேவேல் உடனடியாக வான் தாக்குதலை நிறுத்திப் பேச்சு வார்த்தைக்குச் செல்வது ஒரு புறமிருக்கட்டும்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் Ehud Barak கூறும்"யுத்தம் கசப்பான முடிவை நெருங்கும்வரை தொடரும்"என்பதன் அர்த்தம் என்ன?

இதன் உண்மையான முகம் பாலஸ்த்தீன மக்களிடம் உண்மையான அரசியல் விழிப்புணர்வுடைய போராட்டச் செல்நெறியமைவது தடுக்கப்பட வேண்டும் என்பதே.இதற்கேற்ற அரசியலலைக் காமாஸ் இயக்கத்தின் இஸ்ரேல்மீதான-அதன் இருப்பை அங்கீகரிக்காத அரசியல் வங்குரோத்தும் காரணமாகிறது.இன்றைய உலகப் புறச் சூழலில் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை எவரும் அழித்து அந்த மக்களையும் அரசியல் அகதிகளாக்குவதென்பது படு முட்டாள்தனமான அரசியலாகும்.இங்கே,காமாஸ் இந்தக் கோரிக்கையூடாகப் பாலஸ்த்தீன ஆளும் வர்க்கத்தை குளிர்ச்சிப்படுத்தித் தனது இருப்புக்கான நிதி ஆதாரத்தைத் தேடினாலும் அதன் மறுவிளைவு அவ்வியகத்தைப் பூண்டோடு அழிப்பதில் இஸ்ரேலுக்கு நியாய வாதத்தைக் கொடுக்கிறது.இதன்பலன் மக்களின் விடுதலையைக் காட்டிக் கொடுப்பதே!

இது நாள்வரை காமாஸ் இயக்கம் பெற்ற அரசியல் வெற்றிகள் யாவும்,இஸ்ரேலின் இருப்பை மறுக்கும்போது காமாஸ் இயகத்தின் இருப்பை அசைப்பதாக மாறவில்லை.மாறாகப் பாலஸ்த்தீனியர்களின் தெளிவான அரசியல் செல் நெறியை உடைத்துக் குறுந்தேசிய-மதவாதத் தலைமைகளின் கீழ் இராணுவவாதக் கோரிக்கைகளுக்கு அடிமையாக்குவதில் முடிகிறது.இதையே உலகமும் விரும்புவதால் இந்த இஸ்ரேலிய அத்துமீறிய யுத்தம் பல வழிகளில் பாலஸ்தீன விடுதலைக்குச் சாவு மணியடிப்பதன் தொடராகவே முன்னெடுக்கப்பட்டாலும்,இதன் இன்றைய தேவை,மேற்குலகுக்குச் சாதகமானதும்,அவைகளின் பொருளாதார இலக்குகளுக்கான புதிய சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது என்பதற்காகவுமே.இதன் பொருட்டே ஒரு பரிட்சார்த்தமாக யுத்தம் நடைபெறுவதற்கான உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ஆனால்,அழிவு அப்பாவி மக்களுக்கே.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.2008

1 comment:

Anonymous said...

where you come from!

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...