Sunday, June 01, 2008

கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல...

மாற்றுக் கருத்துத் தேசத் துரோகம்:

>>சில கருத்துக்கள்<<


இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இன்றைய நிலையில் தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.



பாசிசத்தின் கருத்தியல் மனது:


எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.மாற்று என்பதைப் புரியாதவர்களாக மாற்றுக் கருத்தென்பது"தமிழீழத் தேசத்துக்கு"(புலிகளுக்கு) எதிரானதென்கிறோம்.உலகில் எதிர்க்கட்சிதாம் உண்டு மாற்றுக் கட்சி இல்லை என்றும் எழுதுகிறோம்! மாற்றைப் புரிந்துகொண்ட அழகைப் புலிகளினூடாகப் புரியும் ஆபத்தால் இத்தகைய அடாவடித்தனமான புத்தி பாசிசத்தின் மிகக் கொடுமையான பக்கங்களைத் "தமிழீழத் தேசம்"எனும் கருத்தாக்கத்துள்-புனைவுள் மறைத்துக்கொள்ளும் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறதுஇதன் தொடர்ச்சியாகப் புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள்.மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும்,தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள் என்பதைப் புலிகளின் நலனுக்காகக் கண்ணீர்வடிக்கும் புலிப் பினாமிகளின் எழுத்துக்களில் அப்பட்டமான புலியரசியல் வெளிப்படுகிறது.அதற்குக் குருவிகள் மறுபிரசுரஞ் செய்த யாழின் கட்டுரையே போதுமான உதாரணமாகக் கொள்ள முடியும்.



வர்க்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப்
பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இலங்கையில் பல்வேறு நாடுகளின்
விருப்புக்குட்பட்டுத் தமது விடுதலைக்கான வேட்கையுடன் போராடும் "தெரிவுகளில்"நம்மை
நாம் சாகடித்து வருகிறோம்.அல்லது அடிமைப்படுத்தி வருகிறோம்.


எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லாதாக்குவதற்கான முன் நிபந்தனையாக "உயிர்ப்பலியெடுக்கும் தமிழீழப் போராட்டத்தை"ப் புலிகள் செய்துவரும் இந்தத் தருணம்வரை நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.

"தமிழீழத் தாயகம்"நமது மக்களில் பலரை நரவேட்டைக்குத்
தயார்ப்படுத்தியபோது சகோதர இயக்கப் படுகொலைகளிலிருந்து உட்கட்சிப்படுகொலைகள்வரையும்
தொடர்ந்து இப்போது சாதாரணமான மக்களின் அதிருப்த்தியைத்"துரோகம்"எனும் நிலைக்குள்
உணரும் ஒரு பெரும் பாசிச மனம் கொலைகளை நியாயப்படுத்தியும், அத்தகைய
கொலைகளுக்கெதிரான கருத்துக்களைத் தேசத்துக்கு எதிரானதாகவும் கட்டியமைக்கும் இந்த
ஊனமிகு நடாத்தை நம்மைப் பயங்கரமான முறையில் அழித்துவிடத் துடிக்கிறது!


கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்திக் கொண்டு யாரும் போராட வெளிக்கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும், இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.இத்தகைய நிலையில்தாம்"தேசியத் தலைவர்"எனும் ஒளிவட்டம் புலிகளின் தலைவருக்கு ஏற்றப்பட்டு அவர் தமிழ்பேசும் மக்களின்"வெடி வெள்ளி"ஆகிறார்!அனைத்துப் பிரச்சனையும் தமிழ் தேசியத்துக்கூடானதாகப் பார்க்கப்பட்டு அதன் வழி"தேசத் துரோகம்-தியாகம்"எனும் மந்திரம் பாசிசப் பாச்சலாக மக்கள் சமுதாயத்தில் அராஜகத்தைக்கடப்பிடிக்கிறது.இத்தகைய நிலையில்தாம் புலிகளுக்கு-சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்கு இலங்கையில் சாவு மணி அடிக்கப்படுகிறது.இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அராஜகம் தலைவிரித்தாடும் இன்றையபொழுதில் புலிகளின் அப்பட்டமான அராஜக அரசியலைச் சிங்களக் கட்சிகளில் முதன் முதலாகச் சிங்களத் தலைவரான மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மக்கள் கூட்டணி அரசே தத்தெடுத்துச் சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் சிறபான்மை இனங்கள் மத்தியிலும் கட்டவிழ்த்துவிடும் பாசிச அரசியலானது இன்று எவரையும் நிம்மதியாக உறங்கவிடுவதில்லை.இத்தகைய அரசியலின் விருத்தியே இலங்கையில் இன்று பத்திரிகையாளர்கள்மீதான அதீதக் கண்காணிப்பும் அதன் அடுத்தகட்டமாகப் பத்திரிகையாளர்களை அழித்தொழிப்பதுமாக நடந்தேறுகிறது.




இது அப்பட்டமாகப் புலிகளோடு சம்பந்தப்பட்ட மிகக்கெடுதியான
அராஜகமாகும்.கடந்த காலத்தில் இத்தகைய அரசியலுக்குக் கிட்லரின் அரச நடவடிக்கையே
உதாரணமாகக்கொள்ளத் தக்கதாக இருந்தது.இன்று புலிகளே கிட்லரின் அனைத்துவகையான அரசியல்
நடாத்தைகளையும் ஒழுங்குறக் கடைப்பிடிக்கும்
குறுந்தேசியவாதிகளாகவும்,பாசிசவாதிகளாகவும் இருக்கிறார்கள்.இவர்களின் வழி முழு
இலங்கையும் இத்தகைய அரசியல்போக்குக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டது.




மக்களின் வாழ் நிலை என்ன?:



இலங்கையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).நாமோ நமது மக்களுக்கு எதிராகக் காரியமாற்றியபடி அந்தகைய நொண்டித் தனமான அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை"துரோகம்"என்று தீர்ப்பு எழுதி இன்னுமொரு நரவேட்டைக்குத் தயாராகிறோம்.மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கும்"தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த புலிகளின் பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,மேற்காணும் பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.இவர்களே இன்று மாற்றுக்கருத்தென்பதையும்,மாற்றுக் கட்சியென்பதையும் புலிகளின் ஏகப் பிரதிநித்துவ அரசியல் வியூகத்தின் அடிப்படையில்"தேசத் துரோகம்"எனும் பாசிசச் சிந்தனைவழி வசவாடி வருகிறார்கள்.

உண்மையில் புலிகளும்,அவர்கள் வழி குறுங்குழுக்களுமாகவுள்ள
தமிழ் ஆயுதக்குழுக்களும் செய்யும் இந்த யுத்தமும்,அதைச் செய்வதற்காக
வேட்டையாடப்படும் சிறார் பிடிப்புமேதாம் "தேசத் துரோகம்"ஆகிறது!இளைஞர்களை ஆயுதத்
தாரிகளாக்கி அவர்களின் வருங்கால வாழ்வையே யுத்தத்தில் கருக்கி,ஒரு தலைமுறையை
அழித்தவர்கள் அடுத்த தலைமுறையையும் அதே அரசியல் தெரிவோடு நடாத்த முனையும் இந்த
அடாவடித்தனமான யுத்தம் மிகக் கெடுதியான அராஜகமாகும்.

இதற்குத் "தியாகம்"எனும் முலாம் பூசும் புலிகளினது பினாமிகள் தமது குழுந்தைகளைப் பத்திராமாகப் படிக்க வைத்து க்கொண்டபடி மேலும் புலிகளினது அராஜகத்துக்குத் தத்துவ விளக்கம் அளிப்பதில் இலங்கையில் ஒரு தலைமுறை காணாது போகப்போகிறது.

இலங்கையில் சிங்கள அரச-கட்சியாதிக்கப் பயங்கரவாதத்தை நிலைப்படுத்திய "ஈழப்போராட்டம்"உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வாகவே ஆயுதக் குழுக்களால் முன்வைக்கப்பட்டதாகப் புலிப் பினாமிகளும் இன்றுஞ் சொல்லுகிறார்கள்.இங்கே,மாற்று என்பதைத் தெரிவு செய்தவர்கள் இந்த அடாவாடித்தனமான யுத்தத்துக்கு எதிரான கருத்துக்களை-அறைகூவல்களை "மாற்று"என்பதே கிடையாது-அது "தேசத் துரோகம்" என்றும் பாசிசத் தனமாக எழுதுகிறார்கள்.

புலிகளால் முன் வைக்கப்படும்"தீர்வுகள்" மற்றும் யுத்த நிறுத்தங்கள்,இடைக்கால நிர்வாக ஆலோசனைகள் குறித்த அவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் இந்த யுத்த அரசியலுக்கான மாற்று என்கிறார்கள்.ஆனால்,"போரை-யுத்தத்தை நிறுத்து,அதன்வழி அரசியல் பேச்சினூடாகத் தீர்வை எட்டும் வியூகத்தைச் செய்",மக்களின் அடிப்படை வாழ்வை மேம் படுத்தும் முன் நிபந்தகைகளின்வழி யுத்தத்தை நிறுத்தும் கருத்துக்களைத் தேசத் துரோகமென மொழியும் மனதே இன்றைய புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது.


நமது மக்களின் வாழ் நிலை என்ன?இன்றுவரை இலட்சம் மக்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகிறது.உயிர்வாழ்வுக்கு ஆதாரமான அதிமானுடத்தேவைகள் அனைத்தும் யுத்த யந்திரத்துக்கான தீனீயாகப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள்மீது மிகக்கொடுமையான இயக்க-அரச ஆதிக்கம் நிலைப்படுத்தப்பட்டு யுத்தப் பிரபுகளின் குடும்பச் சுகத்துக்கான எடுபிடிகளாக மக்களின் வாழ்வு நிர்பந்தப்படுத்தப்படுகிறது.இதற்காக இல்லாத தேசங்களை இருப்பதாக உழைக்கும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.இதைச் சொல்வதற்கு ஆயுதமே முன்னணிக்கு வருகிறது.இந்த வருகையோடு அப்பாவி மக்களின் தலைகள்"தேசத் துரோகம்"என்ற போர்வையில் நாளாந்தம் உருண்டு வீழ்கிறது!அதையும் நியாப்படுத்த சிங்கள அரசின் அரசியல் வியூகம் மெல்லக் காரியமாற்றுகிறது.இலங்கை மக்களின் வாழ்வு இன்று இந்த அழகில் இருக்கும்போது,இதற்கு எதிரான அம்பலப்படுத்தல்களை"தேசத் துரோகம்"என்று பாசிசிஸ்டுக்கள் சொல்லி மாற்றுக் கருத்தாளர்களை அன்றிலிருந்து இன்றுவரையும் வேட்டையாடுகிறார்கள்.இது மிகப்பெரும் சமூக வியாதியாகித் தமிழ்பேசும் மக்கள் சமூகத்தையே காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றியுள்ளது.இத்தகைய சமுதாயமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை உலக விழுமியங்களோடு இணைக்கும் ஜனநாயகப் பண்பை ஏற்பதற்கு முரண்டு பிடித்தே வருகிறது.எளிதில் ஏமாற்றப்படும் ஒரு இனமாக இருக்கும் இந்த அடிமை மனதுக்குத் "தமிழீழத் தேசம்"என்பது கனவாக இருக்கிறது.அது எப்படிச் சாத்தியம்-ஏன் அவசியம் என்பதற்கு அதனிடமிருக்கும் விளக்கம் சிங்களப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது என்று சொல்கிறது.ஆனால்,அதே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துத் தமிழ் மக்களில் கணிசமானர்வளை வேட்டையாடி வரும் இயக்கப் பயங்கரவாத்தை"தேச நலன்"எனும் வரையறைக்குள் அது ஏற்கிறது.விசித்திரமாக இல்லையா?


இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப்
போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு ஆயுதக் குழுக்கள் குறித்தும்,பாசிசச்
செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு
படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச்
சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான
சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.

இங்கே, புலிகள் செய்வது(மாற்றுக் கட்சி,கருத்து தேசத் துரோகம் என்பது) தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவூன்றுவதற்கே.இதனூடாகத் தமது இயக்க நலனைப் பேணுவதற்கும் தம் இயக்கத்தின் பின்னாலுள்ள எஜமானர்களுக்கு விசுவாசமான அடியாளாக இருப்பதற்கும் அது தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைத் துரோகிகளாக்கிக் கொன்று குவிக்கிறது.இதை வேறொரு வடிவில்(பயங்கரவாதிகள்)இலங்கை அரசு செய்கிறது.சாரம்சத்தில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!


உண்மைகளை உரக்கச் சொல்லல்:


விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டு எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் உலக எஜமானர்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சகோதர இயக்கப் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த ஏகப்பட்ட மாற்றியக்கப் போராளிகளின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த அந்நியச் சக்திகள் இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன.இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.

புலிகளினது அனைத்துக்கொலைகளையும்,அடக்கு முறைகளையும் மக்களின்
விடிவுக்கானதாகவும் தேசத்தின் உரிமைக்கானதாகவும் கதைவிடும் இன்றைய இயக்கவாத மாயை
மக்களைப் பூண்டோடு அழிக்கும் உலக அந்நிய ஆர்வங்களுக்கு இசைவான கருத்தியலை நமக்குள்
விதைத்து எஜமான விசுவாசத்தைக் கடப்பாட்டுணர்வோடு செய்யும்போது அழிவது இன்னுமொரு
தலைமுறையே!



கடந்த இரண்டாவது உலகமகாயுத்தத்தில் கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல உலகத்தில் பலகோடி மானுடரை அழித்த வரலாறை நாம் மறத்தலாகாது.கிட்லரின் அரசியலுக்குப் பின்னால் நின்ற மூலதனம் இப்போது மிகப்பெரும் வலுவோடு புதிய தெரிவுகளோடு உலகை வேட்டையாடும் இன்றைய அரச வியூகத்துக்குப் புலிகளும் ஒரு அடியாட்படையே.பிள்ளையானோ அல்லது கருணாவோ தம்மை நேரடியாகவே அந்நிய ஏவல்படைகள்தாமென உறுதிப்படுத்தும்போது புலிகளோ தம்மைத் தியாகிகளாகச் சொல்லியபடியே உள்ளே இருந்து நம்மைக் கருவறுக்கிறார்கள்.இங்கே, இலங்கையில் அந்நியச் சேவை செய்யும் குறுங்குழுக்காளக இருக்கும் ஆயுதக் குழுக்களைவிட ஆபத்தானவர்கள் புலிகள் என்பது நிரூபணமானது.

ஏனெனில்,அவர்கள்"துரோகி"சொல்லியே அழித்துவரும் உயிர்களுக்குத்
தேச நலனே காரணமெனக் கருத்தாடித் தத்துவ நியாயம் கற்பித்துக் கொலைகளை இன்டஸ்றீயல்
முறையில் நடாத்தி வருகிறார்கள்!இவர்களே, மாற்று என்பது தேசத் துரோகமென்று சொல்லித்
தமது இயக்கச் சர்வதிகாரத்தைத் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாகச் செய்து
வருகிறார்கள்.இதனால் முழுமொத்த மக்கள் சமுதாயமே அராஜகத்தின் முன்
மண்டியிட்டு,"புலிகளின் தாகம் தமிழீத்தாயம்"என்று கொலைக்கு உடந்தையாகிக்
கிடக்கிறது.




எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?


மாற்றமென்பது நமது மக்களால்தாம் உருவாகவேண்டும்.என்றபோதும், அங்கே நடந்தேறும் மக்கள் விரோத"தமிழீழப் போராட்டம்"அராஜகத்தை மக்கள்மீது திணிப்பதற்கான நியாயமாக முன்வைக்கப்படும் "தேசத் துரோகம்"எனும் பாசிசச் சர்வதிகார முன்னெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு உந்துதலை வெளியுலக மக்களின் தோழமையோடு அடைய முடியுமெனும் உண்மையின் உறுதி வழியே நாம் இவற்றை அம்பலப்படுத்தியாக வேண்டும்.இதற்காகவேனும் உண்மைகளை உரக்கச் சொல்லல் வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்.
01.06.2008

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...