Saturday, July 24, 2010

பொங்குதமிழ் ஊடகமும்,மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...

பொங்குதமிழ் ஊடகமும்,
மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...


கட்டுரைத்தொடர்: (4)

"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"


மிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள் ஆழ்த்தும் கட்டுரைகளை நமது "ஆய்வு"க் கட்டுரையாளர்கள் தற்போது பரவலாக எழுதிவருகின்றனர்.அதுள் முக்கியமாகப் பலராலும் வாசிக்கப்பட்ட கட்டுரையாக(பொங்குதமிழ்இணையக் கட்டுரை) இக்கட்டுரை பல தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.

கட்டுரையாளர் மீளத் தகவமைக்கும் அயலுறுவுக்கொள்கை எனக்கு அன்றைய புளட்டின் அரசியல் வகுப்பெடுப்பை ஞாபகப்படுத்தத் தவறவில்லை.

"இந்தியா உலகத்தில் முற்போக்கான நாடாகத தன்னைக் காட்டி வருவதால்,அது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாக இயங்குகிறது.எனவே,தமிழீழத்தை ஏற்று அங்கீகரிக்கும்,தமிழ்பேசும் மக்களது நியாயமான போராட்டத்தை அது ஆதரிக்கும்" என அன்று புளட், இந்திய அயலுறவுக்கொள்கையை எடுத்தியம்பியது.பரவலாக இந்தியா குறித்து மக்கள் கேள்விகளைத் தொடுக்கும்போது புளட் இங்ஙனம் விடையளித்தது.இத்தகைய முட்டாள்த்தனமான கருத்தை அன்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.

இன்று,சுமார் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.இதற்குள் இந்தியாவின் பாத்திரம் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்துள்ளதும்,தமிழ்பேசும் மக்களது போராட்டத்தைத் திசைதிருப்பி ஒரு படுகொலைக் களத்தைத் திறந்துவிட்டதும் வரலாறாக இருக்கும்போது மீளவும், இந்தியாவுக்கும்-சீனாவுக்குமான அயலுறவுக்கொள்கை முரண்களால் யுத்தம் வெடிக்குமெனவும்,அதுள் இந்தியாவானது தனது அயலுறுவுக்கொள்கையினதும்,ஆதரவுச் சக்தியினதும் தேவையின் பொருட்டுத் தமிழர்களுக்கு நாடுபிடித்து-பிரித்துக்கொடுத்து, இலங்கைத் துறைமுகத்துள் தனது இருப்பைத் "தமிழ்த் தேசவுருவாக்கத்தில்" நிலைப்படுத்தும் எனக் கட்டுரையாளர் மகிரிஷி அரசியல்-பொருளாதார அறிவு புகட்டுகிறார்.

அயலுறுவுக்கொள்கையை வலுவாகப் புரிந்து காரியமாற்றும்போது நமக்கு விடிவுகிடைக்குமென வகுப்பெடுப்பதில் இதுவரை தேறாத புலிகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர் மிகத் தாரளமாகச் சொல்லும் இந்தக் கட்டுரையினது மையக் கருதுகோள் மீளத் தகவமைப்பது என்ன?

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை இவ்வகைக் கட்டுரையினது பேசு பொருளாக உலாவவிடுதில் தமிழ்பேசும் மக்களுக்குப் புதிய அயலுறுவுக்கொள்கை வகுப்பெடுகின்றதென்று நாம் சந்தேகப்படவேண்டும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-ஆயுதக்குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும் அந்நியவுறுக்கொள்கை-தமிழ்பேசும் மக்கள் சார்ந்திருக்கவேண்டிய அயல் நாடு-நட்பு நாடு என்பதெல்லாம் மீளவும் அதே தேசத்தால் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் ஏமாற்றி அழிக்கப்பட்ட தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.

இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்புதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.இன்று தமிழ்பேசும் இளைய சமூகமானது எந்தத் திசையிலும் புதிய புரிதல்களோடு தம்மைத் தகவமைக்க முனைகிறது.அதன் ஆழ்ந்த நகர்வானது தமக்கு நேர்ந்த நெருக்கடிகளைப் புதிய புரிதல்களோடு அறிவுரீதியாக விளங்க முற்படும் சூழலொன்று புலம் பெயர் தமிழ்க் குழுமத்துக்குள் உருவாகிறது.இந்தச் சூழலை எந்தத் தேசம் தமக்கேற்ற வகையில் பயன்படுத்த முனைகிறதோ அந்தத்தேசம் இலங்கையில் கணிசமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திச் சீன-இந்தியக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.இன்று,தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை தன்னைப் புதிப்பிக்கும் ஏதோவொரு உரிமைசார் போராட்டத்தில் முதன்மையுறும் அந்நியவுறாவானது பரந்துபட்ட புரிதலை மறுத்தே இயங்குகிறது.அதற்கு மேற்குலகத்தின் அரசியலை எங்ஙனம் கையாளுவதென்பது பெருஞ் சவாலாகவே இருக்கிறது.இந்தச் சவாலனின் நடுவே,"சீன-இந்திய"யுத்தஞ்சார்ந்து இந்தியாவைக் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென கருத்துக் கட்டுபவர்களைக் குறித்து நிறையப் பேசியாக வேண்டும்.

கடந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குகான புள்ளியை-அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்"(யு.என்.பி-காங்கிரஸ்,சீனக் கம்யூனிசக் கட்சி,மகிந்தாவின் மக்கள் கூட்டணி,தமிழர் கூட்டணி இன்னபிற)அன்று முன்வைக்கும் நிலைக்கு அரசியல் வியூகம் சென்றுகொண்டிருந்தது.புலிகளது தனிக்காட்டுத்தார்ப்பாரைச் சொல்லி மக்களின் உயிரோடும்-வாழ்வோடு விளையாடிய இந்தக்கட்சிகள்-அரசுகள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக இறுதிப் புலியழிப்பு யுத்தத்தை உருமாற்றம் செய்து கொண்டன.இங்ஙனஞ் செய்துகொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும்-தோல்வியாவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன.

இந்தத் தோல்வியான வியூகத்தைச் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்பேசும் மக்களை மீள வென்றெடுத்தாகவேண்டிய நிலையில் சீன-இந்தியக் கூட்டணிக்கு அவசியமான முன் நிபந்தனையாகவிருக்கிறது.இங்கே,இத்தகைய கட்டுரைகள்,குறித்துரைக்கும் சர்வதேச-அயலுறவுக்குகொள்கைசார் கருத்துக்கள் அத்தகைய இலக்குகளின்வழி மேற்குலகஞ் சார்ந்தோ அன்றி இந்தியா சார்ந்தோ முன் தள்ளப்படுகிறது என்பதே இன்றையவுண்மையாக இருக்கிறது.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு "தமிழ் மக்கள் உரிமைசார்" கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச இந்திய ஆளும் வர்க்கத்தை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு புலிகள்பாணி அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது.

அன்று,முள்ளி வாய்க்கால் நிகழ்வு நேரும்வரை தமிழ்ழீழம்பெறும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இப்போது, முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை இத்தகைய கட்டுரையாளர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களது அயலுறவுக்கொள்கையென வகுப்பெடுத்துத் தமது இலக்கை எட்ட முனைவதென்பது உண்மையானது.இதுள் பற்பல குழுக்கள் தமது விசுவாசத்துக்கேற்பக் கட்சிகளாகவோ அன்றி இலக்கிய வட்டங்களாகவே புலம்பெயர் சமூகத்திலும்,நிலத்திலும் இயங்கி வருகிறார்கள்.இத்தகைய இயக்கப்பாட்டின் அதீதமான கருத்தியற் காயடிப்பாகவே பொங்குதமிழ் இணையத்துக்காகக் கட்டுரை எழுதிய மகிரிஷி என்பவர் இயங்குகிறார்.இது,போராட்டக் குழுக்களது அன்றைய தொடர்கதையான அந்நியச் சேவையின் இன்னொரு அரூபமான வெளிப்பாடு.

அந்நிய நலன்களாலும்,புலிகளாலும் ஏமாற்றப்பட்ட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை, இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின்இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் "புரட்சி"க்காகக் கட்சிகட்டுவதாகவும் இன்னொரு பக்கம் ஐ.நா.வரை நடைபயணமெனப் பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிறதென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். அந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.கே.பி.குழுவானது வெளிப்படையாகவே இலங்கை அரசோடிணைந்து ஆசிய மூலதனத்துக்குச் சேவை செய்கிறதென்பது கடந்த சில மாதங்களாக நாம் காணும் உண்மை.

இந்த நிலைமையில் பொங்குதமிழுக்குக் கட்டுரைவரையும் மகிரிஷியின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் படுகொலை அரசியலுக்கு, இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-சீன,மேற்குலக ஏகாதிபத்தியங்களே முழுமுதற் காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து
"இந்தியாவின் தயவில் இலங்கையில் இரு தேசங்கள் உருவாக்கப்படும் தீர்வு சாத்தியமெனும் மகிரிஷியின் தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.

இது, கைவிலகிப் போகும் புலம் பெயர் இளைய குழுமத்தின் அரசியல் இருப்புக் குறித்தும்,அவர்களது மேற்குலகச் சார்பு குறித்தும் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.எனவே,இத்தகைய கருத்து நிலைகளுக்குள் கட்டிவைக்கப்படும் பொறியானது மக்களைக் காயடித்து அதிகாரங்களுக்குள் கட்டுண்டுகிடக்க வைப்பதே.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.07.2010

Saturday, July 17, 2010

எதிர்நிலைகளை முன்வைத்து...

கட்டுரைத்தொடர்: (3)

எதிர்நிலைகளை முன்வைத்து...
"புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,
அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"

மிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது! நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலைச் செய்து முடித்த ஆயுதக்குழுக்களது எச்சங்கள் இன்று போடும் அரசியல் கணக்கானது அவர்களது இருப்பைக் குறித்தான தெரிவென்பது நாம் இனங்காணத்தக்கது.இது,ஒருபோதும் நமது மக்களது அரசியல் நெருக்கடிக்கு எந்தவிதத்திலும்ஆரோக்கியமாகச் செயற்படாதென்பதைக் குறித்தே நாம் இப்போது பேச முற்படுகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான புலியற்ற சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.இயக்க நலனுக்கான தெரிவும்,தலைமைத்துவத்தின் இருப்புக்கான அரசியற்றொடர்ச்சியுங்கொண்டியங்கிய புலியினது அழிவுக்குப் பின்பான இலங்கையின் சிறுபான்மையினங்களது அரசியல் நகர்வில், இன்றுவரை தொடரும் நயவஞ்சகமான அரசியலானது புலத்திலும்,நிலத்திலும்(இலங்கையில்)தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்துள்ளது.கூடவே,இந்த வகைக்குட்பட்ட அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.

இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல்ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இதன் தொடரில் நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிவழி இயக்கவாதம் மீளக் கோலாச்சுகிறது.

அந்நியச் சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும்"போராட்டம்" தொடர்கிறது.

அஃது, ஈழத்தை-சுயநிர்ணயவுரிமையைப் பெற்றுத் தருமெனப் பல"தோழர்கள்" நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே, அன்றைக்குப் புலிகள் சொல்லிய பாசிசக் கருத்து நிலை(மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக "உயிர்ப்பலிகொள்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்வது) மக்களுக்காகப் போராடுவதற்கு,அவர்களுக்கான அரசியலைத் தொடர்வர்தற்கு அணிச் சேர்க்கை அவசியமென்கிறது.அதைக் குறித்து எந்தக் கேள்வியுமின்றித் "தாம் உரைக்கும்போது "கட்சி"கட்டுவதும்,போராடுவதும்" சரியெனப் பரப்புரை செய்கிறது.இதன் வன்மமான கருத்துநிலையானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழலுக்கேற்ற எதிர்-நியாயவாதத்தை மக்களுக்கான நலனின் தெரிவனச் சொல்லியே தமது "நியாயவாத்தை"த் தொடர்கிறது.

இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.

அதே புலிப்பாணி "அணிதிரள்வு-ஒத்து வடம் பிடித்தலெனும் வகைமாதிரிப் புனைவுகள்" ஏதோ எழுந்தமானமாக வாசிக்கப்படுகின்றன.இது,எந்த நிலையிலும் மகள் அரசியலறஞ்சார்ந்து சிந்திப்பதில்லை. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத்தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த"புரட்சிக் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த "தார்ப்பார்களை" உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.

புலிகளது ஈழப்போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வதற்கானதும்,சமூகமாக ஒருகிணைவதற்கானதானதுமான பெருவிருப்பம் முதற்றெரிவாக முன்னெடுக்கும் இருத்தலுக்கான ஆதாரத்தை உரிமையெனக்கொள்வதற்கில்லை.அது,தனது இழந்துபோன அடிப்படைத் தேவைகளையொட்டிச் சிங்கள அரசுடன் செய்யும் சமரசம் முற்றுமுழுதாக வாழ்வதற்கான தெரிவே அன்றிப் போரிட்டுத் தமது உரிமைகளைவென்றெடுப்பதென்றில்லை!

இதுசார்ந்த அவர்களது சிந்தனா முறை ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இனிவரும் அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும். இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியலானது மக்களது சுயதெரிவான அரசியலூக்கத்திலிருந்த அவர்களது சுயாதீனச் செயற்பாட்டின்வாயிலாக எழவேண்டுமெயொழிய எந்தக் கொம்பரும் அதைப் புலத்திலிருந்து ஏற்றுமதி செய்யமுடியாது!அப்படிச் செய்வதென்பது மீளவும்,அந்நியச் சக்திகளது அரசியலை முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே பார்த்தாகவேண்டும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்"கூட்டங்களாக-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டங்களாக-விழா எடுப்புகளாக"புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து-புரட்சிகரக் கட்சிகட்டல்"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணக் கருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் புலத்தில் இருக்கப்போவதில்லை.

நிலத்தில்(இலங்கை)அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு, அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இதைத் திட்டமிட்டே கணித்துச் செயற்படும் அந்நிய நலன்கள் தமிழ் மக்களுக்குள் மீளவும் சதி அரசியலைத் தொடர்கிறது.அதற்குத் தோதான கூட்டத்தை முன்னாளத் தமிழ் இயக்களது மாபியாக் குழுக்களுக்குள் இருந்து தெரிந்தெடுக்க முனைகிறது.அதன் தொடரில் சிக்கியுள்ள பலர் மக்களுக்காகப் போராட அணி திரள்வதாகப் புலம்புவது மக்களைக் கருவறுக்கவே என்பது மிகக் கறாராக விளங்க வேண்டிய உண்மை.

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய "மாற்றுக் கருத்துக்களை"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.அந்நியச் சேவையின் பொருட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி அன்று பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றிய உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மைத் தொடர்ந்து ஏமாற்றிவரப் புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள். இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலத்துப்புலிகளும்"புரட்சி"க் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புதிய திரட்சியை வலியுறுத்துவதில் தமது பழைய பெறுமானங்களைப் புதிப்பிக்கின்றனர்.இந்தப் பெறுமானத்தின் அறுவடை தமிழ்ச் சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டுள்ளதைக் கிஞ்சித்தும் சிந்திக்கமறுத்துப் புதிய பாணியில் அதே தொடர்ச்சியை வற்புறுத்துவது எதனால்?

இது குறித்துப் பேசுவது அவசியம்.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.07.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...