Sunday, September 13, 2009

சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்...

சின்னமடு மாதா:
 
 
அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க...
 
 
 
"மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"
 
 
து ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.
 
 
எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்.
 
 
சிவா...
 
 
எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்...
 
 
பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம்.ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.
 
 
"சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்"
 
 
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.
 
 
நாங்கள் தவமிருக்கும் குருசுமரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை.கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும்,விளையாட்டுச்சாமான் விற்கும்"சோனக"க்கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும்.வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம் எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப "கம்பு"விளையாடுவோம்.காலையில் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும்.
 
 
இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தைiயும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் எமக்குள் ஒட்டும்போது,பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.
 
 
பின்னாளில்,ஊரும்,உறுவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ,அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம்.கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.
 
 
ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 
 
"எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!"
 
 
நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு"சாத்தான் வந்தவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்"என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறுத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.
 
 
அவனது "கத்தலில்" நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான்.இலண்டனில் கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.
 
 
அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.
 
 
இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது.கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக்கதைகளுண்டு.மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் வெள்ளத்தோடு மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன-புலிகளது அடிமட்டப் போராளிகள் போல!
 
 
வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என...)கொண்டு,விளக்கப்படுத்திக்கொள்வோம்.அப்போதெல்லாம்"தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ"என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.
 
 
மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.
 
 
வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி,அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்...
 
 
"பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!"
 
இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
 
 
நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
"கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது"
 
 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த"சேரிப் பொடியன்கள்"தயவு அதிகமாகவிருந்தது.
 
 
இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.
 
 
பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.
 
 
ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.
 
 
இளமையின் வலி?
 
 
சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்சிலகாலம் உயிர்த்திருக்கிறது!
ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுப்பர்.
 
 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.
 
 
 
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு."-
குறள்
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2009

Sunday, September 06, 2009

தமிழ் "மார்க்சிய" நண்பர்கள்...

இலங்கையின் இரண்டாவது சுனாமி.
 
கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது.அதிர்ச்சியான யுத்த அழிவுகள் திட்டமிடப்பட்ட பொருளாதாரஞ்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அவசியமாக இலங்கை அரசினது அந்நியப் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்டபின் வன்னி மண்ணில் நிகழும் அரசிலானது மிகவும் கெடுதியானது.இது,மாறிவரும் உலகப் பொருளாதார இலக்குகளால் பந்தாடப்பட்ட வரலாற்றை எமக்கு விட்டுச் சென்ற புலிகளது "தமிமீழ"ப் போராட்டமாக எம் முன் நிற்கிறது.ஆனால், இதற்குள் பல உள்நோக்கங்கள் நிலவுகிறது.குறிப்பாக அந்நியத் தேசங்களதும்,தென்னாசியப்பிராந்தியத்தின் அரசியல் எதிர்காலமும் அதுசார்ந்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் இவற்றுக்குள் புதைந்துபோய்க் கிடக்கிறது.
 
கடந்தகாலத்தில் இலங்கையில் ஜே.வி.பி.யை இரண்டு முறைகள் அழித்த இலங்கை அரசும் அதன் அந்நிய எஜமானர்களும் நிச்சியம் இன்னொரு படுகொலைக் களத்தை இந்தத்"தமிழீழ"போராட்டத்துக்குச் செய்யத் துணியுமென்பதை நாம் ஏலவேஅறிந்தேயிருந்தோம்.இது, குறித்துப் பல தடவைகள் உரையாடினோம்.எனினும்,தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளது இராணுவப்பல மாஜை,அத்தகைய அழிப்பு அரசியலைக் கவனத்தில் எடுக்கவில்லை!ஆனால்,அதை(படுகொலைக் களத்தை) வன்னியில் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்கள அரச பாசிசம்.
 
வன்னியைச் சுடுகாடாக்கிய யுத்தம்:
 
தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?
 
இத்தகைய யுத்தக்கொலைகளின் பின்னே இலங்கை ஆளும் வர்க்கம் அடையவிருக்கும் இலக்கென்ன?
 
இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கை அரசினது நோக்கு?
 
அல்லது, தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?
 
இவை மேலோட்டமான எளிய கேள்விகள்.பதில்களைப் பல முனைகளில் தேடலாம்.இன்றைய ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் பொருளாதார முன்னெடுப்பை இலங்கைத் தேசத்துக்குள் இனங்காணாது பதில்களைத் தேடமுடியாது.
 
தமிழ் "மார்க்சிய" நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:"இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்." என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.
 
1):புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே அரசுக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.
 
2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.
 
3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமா எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)
 
4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).
 
5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.
 
6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.
 
மகிந்த அரசின் வன்னியுத்தமும் அதன் பின்னான புலியழிப்புத்திட்டம் மற்றும் சரணடைந்தவர்களைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதம்,தடுப்பு முகாமுக்குள் முழுமொத்த வன்னி மக்களையும் தடுத்துவைத்துக் களையெடுக்கும் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை"barbarous"என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!மேற்கூறிய தேவையில் இலகுவில் இனவாதத்தையும் இனவொற்றுமையின்மையையும் இதன்மூலம் செய்துமுடிக்க உலக வல்லரசுகள் முனைகின்றன.இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கையை வளர்ப்பதற்கான மூலவூற்றாக வன்னித் தடுப்பு முகாமும்,அதுசார்ந்த இலங்கை அரசினது கெடுபிடிகளும் இத்தகைய வல்லாதிக்கங்களின் மிகக்கூரிய எதிர்பார்ப்பின் தொடர்ச்சியாகவே இருக்கிறது.இதனால் பல்லின மக்களுக்குள் உள்ள உழைப்பாள வர்க்கம் தனக்குள் ஒன்றுபடுதல் தொடுர்ந்து தடுக்கப்படுகிறது.இது,இலங்கையின்-தென்னாசியப் புரட்சிகரச் சூழலை மட்டுப்படுத்தவும் அதன்வாயிலாக வர்க்க உணர்வை மழுங்கடிப்பதற்கானதாகவே நாம் பார்த்தாக வேண்டும்.
 
இஃது, இன்றைய உலகமயமாதலின் காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.கடந்த சில தினங்களுக்கு முன் அவ்ஹான் மக்கள்மீது,2000 கிலோ எடையுள்ள குண்டைக் கொட்டிய ஜேர்மனிய இராணுவத்தின் திமிர்த்தனமான படுகொலைக்குச் சற்றும் குறையாத திமிர் இலங்கை-ஆசிய மூலதனக்கூட்டுக்கு இருக்கிறது.அது,இருஷ்சிய-சீன சங்காய் கூட்டுழைப்பு ஒப்பந்தத்தில் ஏலவே சொல்லப்பட்டபடி,பிரிவினைவாதப் போராட்டங்களை தென்கிழக்காசியாவிலிருந்து அகவற்றுவதில் இலங்கையைப் பரீட்ச்சார்த்தமாக்கி வெற்றி கண்டுள்ளது.
 
தமிழர்மீதான யுத்தம்-இன அழிப்பு?:
 
ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.
 
இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.
 
இதை மேலோட்டமாக விவரிக்க முனையும் "மார்க்சியர்கள்"இலங்கை தழுவிய தேசியத்துக்காக இலங்கை அரசு அரசபயங்கரவாதத்தைக் கைலெடுத்துள்ளதாகக் கருத்தாடுவது சமீபமாக-வன்னியுத்தத்தின்பின் கருத்தியற்றளத்தில் வலுவாகப் பேசப்படுகிறது.ஆனால்,இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்து வந்தது.என்றபோதும், இத்தகைய இன அழிப்பானது மாறிவரும் உலகப் பொருளாதார மற்றும் சந்தைப் பங்கீட்டுடனும் அதுசார்ந்து போக்குவரத்து,மூலப் பொருள் கையகப்படுத்தல் என்ற அந்நியக் கம்பனிகளின் அத்துமீறிய ஏகாதிபத்திய நலன்களின் தேவையோடு அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையை உருவாக்கி,அதன் இனஞ்சார்ந்த அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான யுத்தமாக(இலங்கையர்களைத் தவிர வேறொரு இனம் இல்லை என்பது) இலங்கையினது இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வெடிக்கிறது.
 
இது ஒருவகையில் வளவுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டுத் தமிழ்பேசும் மக்களதும் மற்றைய சிறுபான்மையினங்களதும் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் அதே வேளை, மிகவும் மலினப்படத்தப் பட்ட சிங்களத் தேசியவாதம் புதிய முகமூடியோடு நாம் எல்லோரும் இலங்கையர்களென்று தமக்குள் சிறுபான்மை இனங்கள் பணிவதைக் கோருகிறது.இது திட்டமிடப்பட்ட இனவழிப்பின் புதிய மாதிரி அரசியல்-யுத்தம்.
 
இனக் குரோதம்:
 
புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.
 
இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள அந்நிய ஆளும் வர்க்கமானது புலிகள்-தமிழினக் கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ் மக்களது போராட்ட உணர்விடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இதற்காகவே திட்டமிடப்பட்டு இனங்களுக்கிடையிலான இனக் குரோதம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.இது மேற்குலகினது சதி.இங்கே, ஆசிய மூலதனமும் இப்போதைக்குப் புலிகளை அழித்திருப்பினும் பின்னாளில் இனவொற்றுமைக்கு ஆப்பு வைத்தபடியேதாம் தமது பொருளாதார இலக்குகளுக்குத் தொழிலாளர் ஒற்றுமையைச் சீர் குலைக்கும்.
 
சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்திய மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.
 
இன்றை ஏகாதிபத்திய மூலதனமானது இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.
 
மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் அரச பயங்கரவாதக் கொடுமையானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்கு இசைவாகச் சரணடையும் அரசியலைப் பேசுவது மிகவும் கவலைக்கிடமானது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
06.09.2009

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...