Sunday, October 31, 2010

டான் ரீ.வீ: இரு பிரமுகர்களது பேட்டிகள்.

Dan Tv : இரு பிரமுகர்களது பேட்டிகள்.

சில கருத்துகள்.


ன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கிய-புத்தக வெளியீட்டுச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும் ,எழுத்தாளர் மாநாடு செய்பவர்களாகவும்,அவை-மேம்பாட்டு முன்னணி,சாதியச் சங்கம்,தலித்துவப் பேரவை,சங்கம்,கழகம்,கட்சி அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது "துரோகிகள்" தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவேண்டும்.


சமீபத்தில் இலங்கையிலிருந்து இராகவன் மற்றும் தேவதாசன் போன்றோர்களது பேட்டிகள்,அவர்களது வாயினால் கொட்டபட்ட நச்சு அரசியலானது தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் மகிந்தாவின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது.இவர்களது வெகுளித்தனமான அரசியலானது இன்றைய காலத்தின் திசை நகர்வில் தமிழ்பேசும் மக்களது மத்தியமான அரசியல் நகர்வின் தொடர்ச்சியாவும் அதுசார்ந்த குழுவாதமாகவும் சுருங்கிப் போகிறது.கூடவே,இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்,இவர்களிற் கணிசமானவர்கள் மகிந்தாவோடு கூட்டுப் பிராத்தனை செய்கிறார்கள்.இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை இவர்களது பணி தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்.


இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.



இலங்கை அரசானது திமிர்த்தனமாகக் காரியம் ஆற்றுகிறது.தமிழ் பேசும் மக்களைக் கூட்டாகப் புலிகளோடு கொன்றுகுவித்த அரசானது தனது யுத்த வன் கொடுமைகளை மறைக்கவும் அதுசார்ந்த யுத்தக் குற்றங்களை இல்லாதாக்கவும் பெரும் படையெடுப்போடு கருத்தியற்போரை தொடக்கி வைத்திருக்கிறது.இதன் பகுதியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் கணிசமானவர்களை அது பயன்படுத்த முனைவதன் தொடரில் இராகவன்(முன்னாள் புலித் தலைவர்களில் ஒருவர்),தேவதாசன்(தலித்து மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்) போன்றவர்களை பயன்படுத்துகிறது.அவர்களும், "வேளளர்கள் தாழ்தப்பட்ட மக்களது குடியிருப்பைக் குலைத்து வெளியேற்றுவது" குறித்துப் பேசுவதற்கான புள்ளியில் கருத்தாடும்போது இதைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடுமை செய்த இலங்கைப் பேரினவாதம் குறித்துக் கிஞ்சித்தும் வாய் திறப்பதில்லை.இங்கு கவனிக்க வேண்டியது பல பத்தாண்டுகளாக நமது மக்கள் தலையில் குண்டுகள்போட்டும்,குடியிருப்புகளைக் குலைத்தும் ,பாலியல் வன் கொடுமையூடாக நமது மகளிர்களை மானபங்கப்படுத்தியவர்களும்,நமது மக்களது பூர்வீக வாழ்விடங்களைப் பூரணமாக அழித்துப் பெரும் இனவழிப்பைச் செய்தவர்களும் மிக இலகுவாக இந்தத் தலித்து மேம்பாட்டு முன்னணி தேவதாசன்களிடம்,மற்றும் இராகவன்களிடம் மறந்து போய்விடுகிறது.ஆனால்,சாதிய ஒடுக்குமுறை"வடூ" நிலைத்து நினைவைத் துரத்துகிறது.


சாதியவொடுக்குமுறைக்கெதிராகச் சளைக்காது போராடியே தீரவேண்டும்.அதைப் போலவேதாம் நமது பேரின வாதப் பேயோடும் போராடியே தீரவேண்டும்.இதில் ஒன்றை அங்கீகரித்தபடி இன்னொன்றை எதிர்ப்பது நியாயமற்றது.விடுதலை என்பதைக் கொச்சைப்படுத்துவது-நாணயமற்றது.இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப் போவதாகவே இருக்கும்.


அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக் கொண்டுள்ள இந்தக்கூட்டம்,அன்று, தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதாம் திடீரெனப் பாசிச மகிந்தாவின் பின் அணிவகுக்க முடிந்திருக்கிறது.இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலிவழியான அழிவுகள் குறித்து டான் தொலைக்காட்சியல் பேசுகிறார்கள்-நீலி கண்ணீர் வடிக்கின்றார்கள்.பேரழிவு குறித்துத் தமது கவலைகளைத் தெரிவிக்கிறார்கள்.புலிகளால் இவை நேர்ந்துவிட்டதால் அது புலிகளது அழிவோடு போகட்டுமெனச் சமாதானஞ் சொல்லும் போது,இவற்றைச் செய்வதற்குக் காரணமான இலங்கை அரச பயங்கரவாதத்தைக் குறித்து மௌனிக்கிறது எதன் பொருட்டு?


எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!



இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.அதுவும், யாழ்ப்பாணத்திலிருந்தபடி...இதுவே இலங்கை அரசினது வெற்றியாக மாறுகிறது.அது உலகுக்கு இவர்களின்வழி தன்னை நியாயப்படுத்துகிறது.


இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது. இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியால்
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.


இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இங்கே,ஓராயிரம் சாதியச் சங்கங்கள்-அமைப்புகள் உருவாக்கப்படும்.


அதில் ஒரு முனையை ஏந்துபவர்கள் இந்த இராகவன்-தேவதாசன் போன்றோர் என்பது உண்மையாக இருக்கலாம்-யார் கண்டார்?

உண்மையில் மக்களுக்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்தால் நிச்சியம் இலங்கையைக் குற்றக் கூண்டில் நிறுத்துவார்கள். இனவழிப்புக்கு எதிராகத் தமது குரலைப்பதிவு செய்வார்கள்.அட,பெருந்தொகையாக மக்கள் அழிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள்ளேயே இவர்கள் இப்படிக் காவடியெடுத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களது வாயில் "இனப்பிரச்சனை என்பது" என்னவென்ற கேள்வியாக மாறலாம்.இதுதாம், இன்றைய முன்னாள்புலி-தலித்துவ அரசியலது ஸ்த்தானம்.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

01.11.2010

Saturday, October 23, 2010

இணைய மறுக்கும் தலித்து

தமிழ்த் தேசியத்துள் இணைய மறுக்கும் தலித்து

மிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில்திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களா,அன்றிப் புலிகள்வழித் தமிழ்த் தேசியத்துக்கான அணைவா,தமிழீழத்துக்கான தார்மீக ஆதரவா,எதுவானாலும் மொத்தமான"பொத்தாம் பொதுவான"தமிழ் அடையாளப்படுத்தல்களை நிராகரிக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் கணிசமான மக்கட்டொகையின் அரசியல் எதிர்ப்பார்ப்பும், அதுசார்ந்த அவர்களது முன்னெடுப்பும் மேலாதிக்கத் தமிழ்ச் சமூகவெண்ணவோட்டத்துக்கு எதிரான திசையில் பயணிப்பது தற்செயலானது இல்லை.அதுபோல்,இலங்கைச் சிங்களப் பேரினவாதத்தோடான சமரசப் போக்கும் பண்டுதொட்டுத் தொடர்வன அல்ல.வரலாற்றில் அரசியற் பலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைப்பவர்கள் இத்தகைய சமரசப் போக்கைத் தமது மொழிசார் அடையாள வெளிக்கு அப்பால் செய்வதற்கான வெளி அவர்களுக்கு இருக்கவும் இல்லை.

சிதறிப்போன தலைமகள்,ஏற்றத்தாழ்வுகளினாலும்,அகவொடுக்குமுறைகளாலும் பிளவுண்டு-பிரிந்து கிடக்கும் தமிழ் மக்களைக் கூட்டாகத் தேசிய கும்மிக்கழைத்த "ஏதோவொரு" தேவையையொட்டிய யாழ்பாணிய விருப்பு(எமது விருப்பு) இனி, மீண்டெழுவதற்கில்லை!

அதன் விருப்பத்தின் தெரிவு"தரகு-தொங்கு"மூலதனவூக்கமேயென உணரப்பட்டபின் தமது தங்கத் தலைவரையே முட்டுச் சந்திக்குள் வைத்துத் துவைத்தெடுத்தது இந்த இனம்.யார் யாரோடு கூட்டுச் சேர வேண்டாமெனப் பலரைப் போட்டுத் தள்ளியதோ அவர்களோடு சேர்ந்தே தமது தங்கத் தலைவரது தலையைப் பிளந்தது.இந்த "யாழ்ப்பாணிய விருப்பு"இப்போது எதையெதையோ கற்பனை பண்ணிக் கொண்டு, வேலியில் போனவோணானைப் பிடவைக்குள் மறைத்தபடி குடையுது,கடிக்குதெனச் சொல்வது சத்தியமாக உருப்படாத குணம்.

புலிகளாகிவுருவாகிறதாகச்சொன்ன"தமிழீழம்"முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது,மேற்சொன்ன போட்டா போட்டிகளைத் தயார் படுத்திய இந்த இனம் தன்னை ஒருங்கமைப்பதற்குள் வீதியில் கூடித் தேரிழுத்துப் பார்த்தபோது, தனக்குள் தொடர்ந்த பிரிவினையானது தொடர்ந்து அகலித்து வருவதை இனம் காண மறுத்தபோது அதை இனம் கண்டவர்கள் இந்தத்"தமிழ்த் தேசிய"இனத்தின் பகைவர்களே.

மூன்றாமுலகக் கன்றாவிக் கதைகளுக்குள் எப்பவும் போலிப் புனைவுகள் அதிகமாகத் தலையைக் கொய்யக்கொடுப்பதில் ஒரு பிரபாகரன் சமீபத்து உதாரணம்.கடந்தகாலம் ஒரு முன்னூறு பேரோடு கடலிறயங்கிய வஸ்கொடகாமாவுக்கு முழு இந்தியத் துணைக்கண்டமே அடிமையானது.இப்படியாக...

தமிழ்த் தேசியத்தை மறுப்பதென்பதும் ஏற்பதென்பதும் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் வாழும் வாழ்நிலை தந்த அநுபவத்தின் வழியே இயலுமாக இருக்க முடியும்.

மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் வாழமுனையும் இந்த மக்கள் பிரத்தியேகமாகத் தமக்குள் சாதிரீதியாகவும்,மதரீதியாகவும் பிளவுண்டே கிடக்கின்றனர்.இந்தவுண்மையில் எம்மால் சிதறிடிக்கப்பட்ட இந்த அகவொடுக்குமுறை ஜந்திரத்தை ஏற்பதில் எமது பாதிப்படையாத மனோ நிலையைப் பாதிப்படைபவர்களுக்கும் பொருத்துவதுதாம் இன்றைய முரண்நகை.
எம்மால் பாதிப்படைபவர்களை எமது நண்பர்கள்-எதிரிகள் யாவரும் தத்தமது நலனுக்கொப்பப் பயன் படுத்துவதையெண்ணி எமக்குக் கொதிப்பு மேலிடுகிறது.

அடடே, நமது தேசியச் சொத்துக்கள்-அலகுகள்,வாழிடங்கள்,வரலாற்று மண் பறிபோகிறதே,நமது இருப்புக்கு எதிராகக் குடியேற்றங்கள் நிகழ்கிறதே என்று அங்கலாய்ப்பதால் என்ன பலன் வந்தது?

யாழ்ப்பாணிய விருப்பானது தன்னை முன்நிலைப்படுத்தத் தனக்குள் இருக்கும் மெலியவரை ஒடுக்கியபடி மேற்சொன்னவற்றுக்காகப் பழிசுமத்தும் தரப்பைத் தம்மை இதுவரையான ஒடுக்குமுறைக் குள்ளாக்கிய ஆதிக்கத்தின் பக்கமே தள்ளிவிடும் இந்தச் சமூகவுளவியலானது இன்னொரு புறமான ஒடுக்குமுறையே. ஆகத் தாழ்த்தப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் யாழ்ப்பாணிய மேலாதிகச் சாதியக் கொடுமையையும், இன்னொரு புறம் தாம்சார் மொழிவழியான அடையாளத்துக்கான "தமிழர்கள்"என்பதாலும் இனவொடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

இது, அநேகமாக ஐரோப்பியக் காலனித்துவக் கொடுமையின் கீழ்ப்பட்ட அதே முறைத் தாக்குதல்களை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்-தாழ்த்தப்பட்ட சாதிய அடையாளமுடைய மக்கள் எதிர்கொள்கின்றனர்.இதைக்குறித்துச் சமூகரீதியான புரிதல் தமிழ்த் தேசிய கருத்தூக்கத்தின்வழி பாரா முகமாகத் தொடர்ந்து இருத்தி வைக்கமுனைகின்றபோது, அந்த மக்களைத் தமது தேவைக் கேற்றபடி பயன்படுத்தி, அவர்களுக்கு நமது சமுதாயம் வழங்க மறுக்கும் சில அடிப்படைத் தேவைகளையும்-மானுட அங்கீகரிப்புகளையும் எமது பகைவர்கள் அவர்களுக்குச் சலுகையாக வழங்கும்போது, தமிழ்த் தேசியக் குடைக்குள் அவர்கள் ஒதுங்க முடியாது திணறுவது எமது தவறுகளாலானவை என்றெப்போது உணர்கிறோமோ அன்றே ஒருபடி மேலெழ முடியும்.

"இதை வேறு நேரத்தில் தீர்க்க முடியும்,இப்போது தேசியப் பிரச்சனையே முதன்மையான பிரச்சனை" என்று புலிகள் பாணியிலுரைத்துக்கொண்டே மேற் சென்றால் நமது நிலைமை எப்படியாக இருக்கும்?

சுருங்கக் கூறினால் மூன்றாமுலக மக்கள் சமுதாயம் உருப்படாது. சிதறுண்டுபோன நமது தலைமைகள்,போட்டா போட்டி,பழமைவாத ஏற்ற தாழ்வுகள் என்றெல்லாப் பிரச்சகைளோடும் முட்டி மோதும் நாம், நமக்குள்ளேயொரு தீர்மானகரமான முடிவுக்குள் வராதவரையும் இந்த நம் அபிலாசை(தமிழ்த் தேசிய இனம் விடுதலை அடைவது) கானல் நீராகவே இருக்கும்.

சாதிரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,மதரீதியாகவும்,உயிரின ரீதியாகவும் நமக்குள் பொருந்திவர முடியாத பல தடைகள் இருக்கின்றன.அவை ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வகையான மீள் படைப்பாக மாற்றமடைகிறதேயொழிய அதை இல்லாதாக்கி, அணி வகுக்கும் எந்தச் சந்தர்ப்பமும் கட்டியொழுப்ப முடியவில்லை.பழமை பேணிகளான மேட்டுக்குடி யாழ்ப்பாணிய வேளாள மனமானது தான் சிங்கள அரசின் காலடியில் வீழ்ந்தாலும் சாதிய ஏற்றதாழ்வையகற்றத் தயாரில்லாது கிடக்கிறது.இந்த இரட்டை நிலையையே தலித்துக்கள் என்று தம்மை அழைக்கக் கோரும் அமைப்புகளது அரசியலாகவும் விரிகிறது.இவர்கள் தமிழ்த் தேசியம் சிதைந்து சின்னா பின்னமானாலுஞ்சரி தம்மை அடிமையாக்கும் வேளாள மேலாண்மைக்கு நிகராகத் தம்மை உருவாக்க எவரது காலிலும் வீழ்ந்து, அந்த மேன்மையை-அபிவிருத்தியை அடைய முனைகின்றனர். இங்கே,அதிகார வர்க்கங்களே அனைத்துக் குழுக்களையும் அரவணைத்துத் தமது நலன்களை எட்ட முனையும்போது ,அவர்களால் எந்த மேன்மையும் எவருக்கும் முழுமையாக வரமுடியாது-ஒரு சில தனி நபர்கள்,குடும்பங்கள் சிலவேளை தமது நிலைமைகளைச் சீர் செய்ய முடியும்.முழுமையான சாதியக்கட்டுமானச் சிதைப்பு-அகல்வு நடைபெறும் சந்தர்ப்பம் குறைவாகவும்,அந்த மக்களில் பலர் மீளவும் ஆதிக்கச் சக்திகளது காலடியில் மடிந்துபோகும் அபாயமும் நீடிக்கிறது.

"தமிழ்த் தேசிய விடுதலை" என்பது பற்பல சிக்கல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது.தமிழ்பேசும் மக்கள் தமக்குள் நிலவும் அகரீதியான முரண்பாடுகளைச் சீர் செய்வதிலிருந்தே ஒரு பொருண்மைசார் "தேசிய இன"அடையாளத்தோடான நட்புறவும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான செயலூக்கமும் கருக்கொள்ள முடியும்.

சாதியவொடுக்குமுறை,
பிரதேசவொடுக்குமுறை,
மதஞ்சார் காழ்ப் புணர்வு,
மலையக "இழிமை"-ஈழ "மேன்மை"சார் பாகுபாடுகள்,
பெண்சார் கற்பிதங்கள்,
கல்விசார் ஏற்றதாழ்வு,

என்ற விசக் கிருமிகளே தமிழ்த் தேசியவினத்தின் கருவையே சிதைக்கும் புற்று நோயக இருக்கிறது.இதை எங்ஙனம் புரிந்து,அந்தந்த நோய்க்கான ஒளடதங்களைப் பயன்படுத்த முனைகிறோமோ,அதையொட்டியப் புரிதலே இன்றுவரை நோய்வாய்ப்பட்டுக்கிடக்கிறது.

என்ன செய்ய?

தமிழீழம் அல்லது தமிழர்களுக்கான பிரிந்துபோகும் உரிமை என்ற வரையறையுள் உள்ளோட்டமாக நிகழும் சமூக ஆண்மையானது தமிழ்ச் சமுதாயத்தின் வசதிபடைத்த மேல்தட்டினது விருப்புகள்-தேவைகள்,சமூக ஆதிக்கம் தொடர்பாக உருவாக்கி வைத்திருந்த இது நாள்வரையான புலிவழித் தமிழ் தேசிய அடையாளமானது சாரம்சத்தில் சாதியப் பிளவுகளை மேலும் அகலிக்க வைத்ததேயொழிய அதைச் சுருங்க அனுமதிக்கவில்லை! அத்தகையவொரு தேவையில் கவனத்தைக் குவிக்காதிருந்தபோதும் பழமை பேணிகளான வேளாளச் சாதியத் திமிர், இந்தக் கோலத்தில் சிங்களப் பேரின வாதத்தோடு சமரசஞ் செய்கிற போக்கில் பிரபாகரனப் புதைத்துக்கொண்டது (பிரபாகரனோடு பாடையிற் போனவர்களில் அதிகமானோர் கீழ்த் தட்டு இளைஞர்களே என்பதும் கவனிக்கத் தக்கதே).அதன் அக விருப்பில் பிரபாகரனையே அவர்கள் சகிக்க முடியாதவொரு உள நெருக்கடிக்குள் இருந்தார்கள் என்றவுண்மையை நாம் எப்போது புரிவோம்?

இந்தப் புள்ளியிற்றாம் சோபாசக்தி,தேவதாசன் போன்றோர்கள் தலித் அமைப்பு-கட்சியென வடிவமெடுக்கும் ஒரு புற நிலையான யதார்த்தம் உருவாகிறது.தேவதாசனது தலித்துவ அமைப்புக்கு ரோ பின்புலமாக இருக்கோ இல்லையோ ,அவரது கோரிக்கை,அதுசார்ந்து நகரும் அரசியல் வியூகத்துக்குக் கடந்த காலத் தமிழ்ச் சமுதாயத்தின்(இந்தியத் துணைக்கண்டத்தினது-சிறப்பாகச் சொன்னால் இந்துமத வர்ண தர்மம்) நான்காம் உலகக் காலனித்துவக் கொடுமைகளே ஆசானாக இருக்கிறது.எனவே,எவ்வளவு சரிவுகள்-வசைவுகள் நேரிடும்போதும் அவரது கோரிக்கைகள் பரவலான ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களது அவசரமான மானுடவுரிமையாக நம்முன் திரண்டெழுகிறது.இதைச் சாதகமாக்கவே இப்போது சிங்களப் பேரினவாதம் சலுகைகள் தரச் சம்மதிப்பதும்,உறுதியளிப்பதுமாகக் காலத்தைக் கொண்டோடுகிறது.

இங்கேதாம் புலிவழித் தமிழ் தேசியத்தை மறுத்தும்,திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றம் பற்றி எதுவும் அலட்டாமல் அவர்கள் தமது முன் நகர்வை முன்னெடுக்கின்றனர்.இங்கே, தமிழ்க் கட்சிகளாலும்,நம்மாலும் சொல்லப்படும-உணரப்படும் பெரும் அபாயமான திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சனத் தொகையில் சரி அரைவாசியாக இருக்கும் தாழ்தப்பட்ட மக்களால் உணர்வு ரீதியாகவே உணர முற்படாத அல்லது அதை உதாசீனப்படுத்தும் எதிர் கருதியலாக அவர்களால் அணுகப்படுகிறது.

"வேளாளன் தனது ஊருக்குள்ளேயே ஒரு முழத் துண்டுக் காணி தராதவன்,நம்மைக் குடியிருக்கப் புறம்போக்கு நிலத்தைத் தரச் சம்மதிக்காதவன்... " என்ற வடூ தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருக்கிறது-நிலைக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...