Wednesday, October 29, 2008

ஒரு தமிழர்,ஆனந்துவின் வெற்றி

சதுரங்கத்தில் ஆனந்து (Viswanathan Anand )மீண்டும் வல்லவன் ஆனார்.


இம்முறை சதுரங்கச் சாம்பியனுக்கான போட்டி 74 ஆண்டுகளுக்குப் பின்பு ஜேர்மனியப் பழைய தலைநகர் பொன்ணில்(Bonn )ஆரம்பமாகியது.பழமைவாய்ந்த கலைக் கோட்டத்தில் நடந்த இந்தப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்டது.ஆறு வயதிலிருந்து சதுரங்கத்தில் தேர்சியுற்ற சென்னை ஆனந்தை எதிர்த்தவர் இருஷ்சியச் சதுரங்க ஆட்டக்காரர் திரு.விலாடிமியர் கிராம்னிக்(Wladimir Kramnik).மிக இளைஞர்.உலகத்தில் தலைசிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்று நம்பப்பட்டவர்.

இவோராடான போட்டியில் ஆனந்து தோற்றுவிடுவார் என்றே மேற்குலகச் சதுரங்க ஆட்டக்காரர்கள்(Helmut Pfleger,Topalow)ஆரூடம் கூறினார்கள்.நேற்று வரையும் கிராம்னிக் ஆட்டத்தை மாற்றி 12வது ஆட்டத்தில் வெற்றியீட்டுவாரென்றே மதிப்பிட்டார்கள்.எனினும்,கடினமான ஆட்டங்களையெல்லாம் மிகச் சாதுரியமாகச் சரிசெய்து ஆனந்து வெற்றியீட்டியுள்ளார்(6,5:4,5).



ஒரு தமிழர்.ஆனந்துவின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதென்று சொல்வதைவிட இந்திய மக்கட்கூட்டங்கள் குறித்த மேற்குலகச் சகதி மனதுக்கு மீண்டுமொரு அடியைப் போட்டிருக்கிறார் ஆனந்து.

ஆனந்தின் ஆட்டமானது
மிக அமைதியாவும்,
தவறுகளற்றதுமாக
இருந்ததாகக்
கூறப்படுகிறது.

ஆனால்,ஆனந்து கூறுகிறார்:"நான் வெளிப்பார்வைக்கு அமைதியாகவும்,தவறுகளுமற்று ஆடியதுண்மை.ஆனால், உள்ளே பெரும் உளநெருக்கடியில் தவித்தேன்.இந்தப் போட்டிக்காக ஆறுமாதகாலமாகக் கடும் பயற்சியில் ஈடுபட்டேன்".என்கிறார்.

கடந்த 14.10.2008 இருந்து 29.10.2008 இன்றுவரையும் பதினொரு சுற்று ஆட்டங்களைச் செய்துள்ளார்.12 சுற்று ஆட்டத்தில் எவரொருவர் முதலில் 6,5 புள்ளிகளை முதலில் பெறுகிறாரோ அவர் போட்டியில் வென்றவராகிறார்.

ஆனந்து கிராம்னிக்கை மூன்று சுற்றுக்களில் வென்றும், ஒரு சுற்றில் தோற்றும் மீதமான ஏழு சுற்றுக்களில் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையிலும் இருக்கிறார்.இப்போட்டியில் முதன்முதலாகப் பெருந்தொகையான பணம் பரிசாக வழங்கப்படுகிறது.வென்றவருக்கும் தோற்றவருக்கும் தலா ஆறு இலட்சம்(600.000.)யூரோக்கள் வழங்கப்படுகிறது.மொத்த பரிசுத்தொகை 15 இலட்சம்.மீதி மூன்று இலட்சம் உலகச்சதுரங்கச்சங்கமான FIDE க்குப்போகிறது.

இந்தச் சாம்பியன் பட்டத்தை ஆனந்து இராண்டாவது தடவையாகக் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது!

உலகத்தில் கணினிக்கு நிகராகச் சதுரங்க ஆட்ட மூளையை ஒப்பிடுவது வழமை.இதுள் ஒரு தமிழரும் இணைகிறார்.

ஆனந்து ஜேர்மனின் லீகாச் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாடன் பாடன் கிளப்புக்கு விளையாடுகிறார்.அவரது ஆட்டத் திறமைக்குக் காரணம் என்னவென்ற கேள்விகுப் பதில்:அவர் மிகச் சாதரணமாக அமைதியாக விளையாடுகிறார்.அவசரக் குடுக்கைத்தனமும்,ஆத்திரம் முட்டிய அமைதியின்மையும் அவரிடம் இல்லை.இதனால் பெரும்பாலும் தவறுகளின்றி விளையாடுகிறார்.

சதுரங்க ஆட்டம் மிகவும் கடினமானதென்று நான் சொல்லத் தேவையில்லை!
அது,மூளை நிரம்பியவர்களினதும்-முயற்சியுடையவர்களினதும் விளையாட்டு.

இவ்விளையாட்டில் தொடர் வெற்றிகளைக் குவிப்பவர்கள் பலரைக் கவனித்திருக்கிறேன்,அவர்கள் அனைவரும் மிக அமைதியானவர்கள்.ஆணவம் என்பது துளியுமற்றவர்கள்.இவ்விளையாட்டில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்திய கஸ்பாறு(Garri Kasparow )இன்று இருஷ்சியாவான தனது தாயகத்துக்கு எதிராகக் கயிறு திரிப்பவர்.மேற்குலக அரசுகளின் வால்பிடியாக இருக்கிறார்.

ஆனந்து தமிழராக இருக்கவில்லை.இந்தியனாக இருப்பதாகவே படுகிறது.எதுவாக இருந்தாலென்ன?அவர் இந்திய வம்சாவழிகள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
29.10.2008

Sunday, October 26, 2008

புலிகள்,தமிழகக் கட்சிகள்

புலிகள்,தமிழகக் கட்சிகள்,
இந்திய அரசு மற்றும்,
இலங்கை அரசும் மக்களும்.


தமிழகத் திரையுலக மற்றும் ஓட்டுக் கட்சிகளினது "இனவுணர்வுப் போராட்டம்" தமிழக
மக்களை எழிச்சியுற வைத்து, ஈழ மக்கள் விடுதலைக்கு உந்து சக்தியாக்குமா?-சில புரிதல்கள்.

ஈழ மக்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.இதுவரை நாம் இலட்சம் மக்களையும்,90 வீதமான வாழ்விடங்களையும் இழந்துவிட்டோம்.ஊர்கள்,விளை நிலங்கள் யாவும் காடுகளாக மாறிவிட்டன.மரித்த மக்களின் எலும்புகளும்,சிதைவுற்ற கட்டிடங்களுமே நமது பண்பாட்டுச் சின்னமாக எஞ்சப் போகிறது!

புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.மாறாக,மக்களை இன்னுந்தாழ்த்தி அவர்களை மிகவும் கேவலமாகச் சிதைப்பதற்குரிய முறையில் அதி மானுடத் தேவைகளுக்காக ஏங்க வைத்தல் இலங்கை அரசுக்கு அவசியமானது.இதை,கிழக்கு மாகாணத்தில் செய்துவருகிறது.அதையும் தமிழ்பேசும் முகவர்களைக்கொண்டே செய்வதுதாம் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் மிகப் பெரிய வெற்றி!,இந்த வெற்றியின் பின்னணியில் பெரியண்ணன் இந்தியாவே இருக்கிறது.இது,நாம் அனைவரும் அறிந்ததே.

இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?;அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும்-என்பதே.கூடவே,இலட்சக்கணக்கான மக்களைச் சாகடித்த ஈழப்போர் இதுவரை எட்டாத தீர்வு,என்னவாக இருக்கும்?அது,நமது சுயநிர்ணயத்தை நிலைநாட்டத்தக்க தீர்வாக இருக்குமா என்பதும் கூட எழும் கேள்வி.

ஆனால்,இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கி இராணுவவாத ஆட்சியலகை நிலைப்படுத்துவதே.இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு.

புலிகளின் இன்றைய இழிநிலை-குறுகிவரும் படைப்பலம் மக்களின் உரிமைகளை வெல்லுமொரு புரட்சிகரச் சக்தியாக அவர்களைத் தோன்றாதிருக்கும்படி புலிகளின் கட்டமைப்புக்குள் தனிநபர் வாதத்தையும்,குடும்ப அரசியல் எண்ணவோட்டத்தையும் உருவாக்கியபடி அந்த அமைப்பின் இருப்பை அசைக்கும் புறநிலையை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தமிழ் மக்களின் எந்தவுரிமையையும் துடைத்தெறியும் என்பது சர்வப்பொதுவுண்மையாகும்.இந்த அடிப்படையில் புலிகளின் பலவீனமானவொரு அரசியலின் தொடர்ச்சி-அவர்களை முற்று முழுதாகத் துடைத்தெறியும் நிலையில்,அவர்களுக்குள் பற்பல குழுக்களை உருவாக்கி "மறுவுடைப்பு அல்லது துடைப்பு" எனும் வியூகத்தோடு இந்திய மத்திய அரசு இலங்கை இராணுவத்தைக் கிளிநொச்சிவரையும்கொணர்ந்து நிறுத்தியுள்ளது.


மக்களின் போராட்டவுணர்விழப்பு:

இந்தியா மற்றுஞ் சில தென்னாசியப் பிராந்தியக் குட்டி வல்லாதிக்க அரசுகளால் சிறப்பாக ஆயுதம் தரிக்கப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவமானது இன்று, கிளிநொச்சியை வென்று சிங்கக்கொடியை வரும் நவம்பர் 27 ஆம் தேதி பறக்கவிடக்கனவு காண்கிறது.இங்கே,ஆளும் வர்க்கங்களால் "சிங்கம்-புலி"க் கொடிகள் தவிர்க்க முடியாத இரண்டு இனங்களின் ஆதிக்கத்தின் குறியீடுகளாக்கப்பட்டிருக்கிறது.புலிக் கொடியின் இறக்கம் தமிழினத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தியதாகவும் சிங்கக் கொடியின் ஏற்றம் மீளவும் சிங்கள இனத்தின் ஆதிகத்தைத் தமிழர்களின் பிராந்தியத்தில் நிலை நாட்டியதாகவுமே கடந்தகாலத்தில் சிங்கள அரசுகள் செய்து முடித்தன.

தமிழ்பேசும் மக்களின் பண்பாட்டு உச்சக் குறியீடான யாழ்பாணத்தில் புலிகளின் வீழ்ச்சியும்,சிங்கள இராணுவத்தின் வெற்றியும் இத்தகைய மரபுவழிப்பட்ட இன ஆதிக்க முனைப்புடனேயே பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடப்பட்டுச் சிங்கள இராணுவம் கௌரவிக்கப்பட்டது.இன்றைய சூழலில் புலிகளின் இராணுவவாதம் தோற்கடிக்கப்படும் தருணங்கள் மிக யதார்த்தமாகவே புலனாகிறது.புலிகள் மக்களிடமிருந்து தாமாகவே அந்நியப்படத்தக்க அவர்களது அரசியல் போக்கிலிருந்து பற்பல வியூகத்தை அமைத்துக்கொண்ட சிங்கள அரசுசார் வியூக வகுப்பாளர்கள், முதலில் தமிழ் மக்களையும் புலிகளையும் பாரிய முரண்பாட்டுக்குள் சிக்க வைக்கும் முதல்காரியத்தை யாழ்பாணத்தில் மெல்ல ஆரம்பித்து வைத்தார்கள்.கடந்த சமாதான ஒப்பந்தக் காலத்துள் இத்தகைய பாரிய இடைவெளிகளை என்றும் கண்டிராத பிரதேசவாத முரண்பாட்டோடு மெல்ல வளர்த்தெடுத்த சிங்களத் தரப்பு, தமிழ் மக்களைப் புலிகளின் கருத்தியல் ஆதிக்கத்திலிருந்தும் மெல்ல விடுவித்துவிட்டார்கள்(இதற்குக் கருணா ஆற்றியபங்கோ- பெரிய பங்காகும்.அதற்காக,இலங்கைச் சிங்கள அரசு அவரை மட்டக்களப்பின் ஆளுனராக்கலாம்!).

இதைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாது புலிகள் கிளிநொச்சிக்குள் சர்வதேசத்தைக் கூட்டிக் கதைத்து மகிழ்திருக்க யாழ்பாணம்,திருகோணாமலை,மட்டக்களப்பு,மன்னார்,மடு என்று பெரு நகரங்கள் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுப் புலிகளின் கருத்தியல்-ஆதிக்க ஆளுமை சிதறடிக்கப்பட்டுப் புலிகளுக்கான தார்மீக ஆதரவற்ற மக்கள் மனங்களைத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலைப்படுத்திய சிங்களப் போர்த்தந்திர வியூகம் இப்போது, புலிகளின் அடுத்தகட்ட நகர்வை அவர்களது அழிவுவரைக்கொணர்ந்து வெற்றிகரமாகச் சிதைவை நோக்கித் தள்ளுகிறார்கள்.தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து அந்நியப்படுத்தி,அவர்களைச் சிதைவுற்ற குடும்ப-சமூகவுறவுடையவர்களாக்கி,மேலும் தனிநபர்வாதமாகவும்-சுயநலமுடையவர்களாகவும் மாற்றுவதற்கேற்றபடி அன்றாட வாழ்வில் மிகப்பெரும் சுமைகளை(பொருளாதார மற்றும் வாழ்வாதாரம்)சுமத்திப் போராட்ட உணர்வை அடியோடு உடைத்தெறிந்தார்கள்.இத்தகைய தருணத்தில் உயிர்வாழ்வதற்குரிய அதி மானுடத்தேவைகளைத் குறித்தே அவர்களை ஏங்கவைத்து,அத்தகைய தேவைகளைச் சிங்கள அரசு தமிழ்பேசும் மக்களுக்காகப் பூர்த்தி செய்து தமது தரப்புக்கு அவர்களை வெற்றெடுப்பது இன்றைய சூழலாக இருக்கிறது.இத்தகைய கருத்துக்கு வலுச்சேர்பதற்கேற்படி ராஜபக்ஷ சகோதாரர்கள் இந்தியாவோடான கலந்துரையாடலில் பிரதிபலிக்கும் கருத்துக்களை கவனிக்கவும்.

இன்றைய அனர்தங்கள் அனைத்துக்கும் ராஜபக்ஷ குடும்பம் காரணமல்ல.மாறாகப் புலிகளுக்குள் உருவாகிய புதிய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குமுள்ள அரசியல்-அதிகார-ஆதிக்க டீலில்(dealings) ஏற்பட்ட முரண்பாடுகளே ராஜபக்ஷ தலைமையில் பெரும் யுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இது தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைத் தமது நலன்களோடு பிணைத்துக்கொண்ட புலிகள் இயக்கத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட அரசியல் சாணாக்கியத்தில் ஏற்பட்ட பலவீனமான போக்கே இன்று, அழிவின் விளிம்பில் புலிகளைத் தள்ளியுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள்மீதான பாரிய உடல்-உள ஒடுக்குமுறையைப் புலிகளின் பாணியிலேயே சிங்களத் தரப்புஞ் செய்வதல்ல, ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன்றைய கனவு.

இதன் போக்கினால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து மக்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றியீட்டும்போதுமட்டுமேதாம் புலிகளின் முழுமையான தோல்வி நிச்சியக்கப்படுகிறது.இன்றைய நிலவரப்படி சிங்கள ஆளும் வர்க்கம் மிகச் சிந்தனைத் தெளிவோடும்,போராட்ட வியூகத்தோடும் அரசியல் செய்கிறது.புலிகளின் நிலையோ மேன்மேலும் அரசியல் வியூகமற்ற அரசியலாக விரிகிறது.


தமிழக மக்களின் தார்மீக ஆதரவு:


இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் தார்மீக ஆதாரவை வைத்து இந்திய வல்லாதிக்கத்தின் இலங்கை அரசுக்கான அனைத்துவகை உதவிகளை-ஒத்துழைப்புகளை-போர் நெறிப்படுத்தல்களையும் தடுத்து நிறுத்தவும் கூடவே,தமிழக அரசின்மூலமாகப் போர் நிறுத்தத்தையுஞ் செய்துமுடிக்கப் புலிகள்போடும் ஒவ்வொரு கணக்கும் பிசகிவிடுகிறது.உண்மையில் நமது மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் வெற்றியளிப்பதற்கேற்ற போர்த் தந்தரோபாயம் மற்றும் வெளியலக உறவுகளைப் புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்தியதாலும்,தமிழகத் தார்மீக ஆதரவைக் கிஞ்சித்தும் கவலைப்படாத கடந்தகால அரசியல் குழிபறிப்புக்களாலும் ஒரு சில அரசியல்-சினிமாப் பேர்வழிகள் மூலமாக இன்று தமிழக மக்களின் எழிச்சியைப் பெறமுடியாது.தமிழகத்து மக்களை உணர்வுபூர்வமாக இயங்கவைத்து அவர்களின் தார்மீக ஆதரவை அல்லற்படும் ஈழத் தமிழ்பேசும் மக்களுக்காகத் திரட்ட வகையற்ற முன்மாதிரிகளைச் செய்த வரலாற்றுத் தவறிலிருந்து புலிகள் பாடங்களைக் கற்கவில்லை.இத்தகைய பாடத்தின் பிரகாரம் அவர்கள் வந்தடையவேண்டியவழி கடந்த சமாதானக்காலத்தில் திறந்தேயிருந்தது.இப்போது,காலம்கடந்த ஒரு வகைமாதிரியன தமிழக மக்களின் ஆதரவு மேலோட்டமானது;செயற்கைத்தனமானது.இது, முழுமையான சமுதாய ஆவேசமாக மேலெழுவதற்கான எந்தச் சாத்தியமுமில்லை.

இன்றைய சமூக யதார்த்தத்தில் இலங்கைப் போர்ச் சூழல் அவர்களை அரசியல் விழிப்புணர்வுடைய தார்மீக ஒத்துழைப்புக்கு உந்தித்தள்ள வாய்ப்பு இல்லை.எனவே,தமிழகத்து ஆதரவாகக் காட்டபட்ட தமிழ் திரையுலக"இனவுணர்வு"க்கூட்டம்,ஆர்பாட்டங்கள் மெல்ல அணைந்துவிடும்.அது,தமிழகத்து மக்களிடம் பாரிய எழிச்சியை ஏற்படுத்தி மக்களை வீதியில் இறங்கிப்போராடும் சூழ் நிலைக்கு ஆக்கிவிடாது.ஈழ மக்கள்மீதான சகோதரத்துவ சமூக விழிப்புணர்வு கடந்தகாலத்தில் இதே திரையுலகத்தால் மெல்லமெல்லக் காயடிக்கப்பட்டு,நமது போராட்டமே பிழையானதாகச் சித்தரிக்கப்பட்டவொரு சூழலில் திடீரெனத் திரையுலகம் கூடிக் கோசமிடும் இனவுணர்வு சில நாட்பொழுதில் தானாகவே மடிந்துவிடும்.தற்போது,தமிழகத்தில் அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.வரும் ஆண்டுக்கான தேர்தலை நோக்கித் தமிழக மக்களிடம் இலங்கைப் பிரச்சனையை எடுத்துச் சென்று தமது கட்சிக்கான ஓட்டு வங்கியைத் தக்கவைப்பதற்காகப் போலி ஆதரவு நாடகத்தை அவை முன்வைக்கின்றன."இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வை ஏற்படுத்து"என்று தமிழக மக்களின் குரலாக வெளிப்படும் இந்தவாதம், எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் மீளவும் உணரலாம்.

கடந்தகாலத்தில் ஒரு ஆனந்தசங்கரி முன்வைத்த அதே கருத்தை இன்று தமிழகத்தில் முழுத் தமிழகக்கட்சிகள் மற்றும் மக்களின் கருத்தாக இந்திய ஆளும் வர்க்கம் முன்வைத்திருப்பது அதற்குக்கிடைத்த மிகப்பெரியவெற்றி!எனவே,தமிழகக் கட்சிகளும்,கட்சி அநுதாபிகளுஞ் சொல்லும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு தலையிடுதல் என்பது"ஈழத்தைப் பிரித்துக்கொடு"என்பதல்ல.மாறாக, இந்திய ஆளும் வர்க்க நலனினது அப்பட்டமான பிராந்திய நலனே இது.தமிழகத்தில்-இந்தியாவில் ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.இங்கே, தமிழ் மக்களிடம் மிக நெருங்கிய உறவைத் தமது கனவுத் தொழிலூடாக வைத்திருக்கும் திரையுலகத்தவர்கள் கூறும்"இந்தியா தலையிட்டு-இராணுவத்தை அனுப்பி,அரசியல் தீர்வைச் செய்"என்பதைத்தாம் திருவாளர் ஆனந்தசங்கரியும் அன்றிலிருந்து கூறி வருகிறார்.இங்கே,இந்திய ஆளும் வர்க்கம் தமிழக மக்களின் தார்மீக ஆதரவைக்கூடத் தனது பிராந்திய நலனுக்கேற்றவாறு தகவமைத்த இராஜ தந்திரம் மிகவும் கவனிக்கத்தக்கது.ஏனெனில்,இத்தகைய அரசியல் சாணாக்கியம் என்பது இலங்கையில் நிலவும் சிங்கள அரசுக்கு மிகவுஞ் சாத்தியமான பல நன்மைகளைச் செய்வதில் இந்தியா மறைமுகச் செயற்பாட்டுக்கு நேரிடையான அங்கீகாரத்தைச் செய்து கொள்வதாகும்.இங்கே,தமிழகத்துக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து சட்டபூர்வமாகப் புலிகளைத் தமிழ் மக்களின் பிரச்சனையிலிருந்து அந்நியப்படுத்தித் தனிமைப்படுத்தியுள்ளார்கள்.இது,கடந்த கௌவ்கசுஸ் முரண்பாட்டில் ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்தத்தில் இருஷ்சியாவைத் தனிமைப்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அரசியல் வியூகத்துக்கு ஒப்பானது.

இலங்கைத் தமிழ்ச்சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமானவொரு முன்னெடுப்பாகத் தமிழகக் கட்சி அரசியலுக்குள் இந்திய ஆளும் வர்க்க நலன்கள் வேரூன்றியுள்ளது.ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தத்தமது மக்களை ஏமாற்றியபடி மத்திய அரசுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொண்டு, அப்பாவித் தமிழ் மக்களை முட்டாள்களாக்குவது.இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள் தமிழகத்தை ஆளும் கட்சிகளாகவும்,எதிர்கட்சிகளாகவும் இருக்கின்றன.இந் நோக்கின் அடிப்படையிலேயே ஈழத்தமிழ்பேசும் மக்களுக்கான-புலிகளுக்கான ஆதரவுத் தமிழ்த்திரையுலகச் சீமான்-அமிர் போன்றோர்களின் கைதும் நடந்தேறியது.

இங்கே, மிக இலாவகமாகக் காரியமாற்றும் இந்தக் கட்சிகள் தமது கட்சியின் ஆதிகத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து,மத்திய அரசு தலைமைதாங்கும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம்,அந்நியவர்த்தகப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை அவை மீள் உருவாக்கத்துள் மலினப்படுத்தும் செயலூக்கத்தோடு சம்பந்தப்படுத்தி, தமிழக மக்களுக்கு-ஈழ மக்களுக்குச்சார்பான அரசியலில் எந்தவிதமான முடிவெடுக்கும் நிலையை இழந்து வந்துள்ளன.இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலை இந்திய ஆளும்வர்க்கம் ஓட்டுக் கட்சிகளிடமிருந்து தட்டிப்பறித்துத் தமது ஆர்வங்கள்,நலன்கள் மற்றும்,பிராந்திய ஆதிக்கம்,பூகோள அரசியல் வியூகத்துக்கேற்ப இலங்கைப் போர்வாழ்வுக்குள் "மிக நெருங்கிய உறவில்" தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே.இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே கொண்டிருக்கவில்லை.இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வருவதில் நமது போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருக்கிறது.


இறுதியாக:


இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் அரசியல் வறுமையும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கான தந்திரோபாயத்தைச் செய்யும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திரமாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது.

இன்றைய இலங்கை அரசியல் வெளியுலகால் தீர்மானிக்கப்பட்டதாகும்.அவை(வெளிச் சக்திகள்) எமக்குள் இருக்கும் உள் முரண்பாட்டுக்குள் பாரிய அரசியல் சதுரங்கம் ஆடமுனைகின்றன. திட்டமிடப்பட்ட ஒரு "அரசியல் தீர்வுக்குள்" வழங்கப்படும் அதிகாரப் பரவலூடாக மேலும் உள் முரண்பாடுகள் வளர்த்தெடுக்கப்பட்டு,அந்த முரண்கள் பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளால் அழிவுற்றுப்போவதற்கான சூழல் நெருங்குகிறது.எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில்,தனி நாட்டுக்கான போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.

இது தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை.சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.

இந்த நிலையில் புலிகளின் போராட்டம் தோல்வியில் முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
26.10.2008

Wednesday, October 22, 2008

மார்க்சினது மீள் வருகை

மார்க்சினது மீள் வருகை:"ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்"




இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல பேராசிரியர்கள் கருத்தாடினார்கள்.அவர்களுள் முக்கியமானவர் பிராங்பேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஊவ வேர்த்((Uwe Wirth).இவர் பூவ்கா(Michel Foucault) மற்றும் தெரிதாவின்(Jacques Derrida) அடியொற்றிச் சிந்திக்கும் மாணவர்-பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர்.எனினும்,மார்க்சியமென்பதை வெறுமனவே சோவியத் யூனியனுக்குள் முடக்கும் அறிவுசார் விமர்சனங்களை கடந்த இரு தசாப்தாமக எதிர்த்துக்கருத்தாடியவர்களில் மிக முக்கியமானவர் பீட்டர் முல்லர்(Der Marxismus ist für mich kein nichthinterfragbares Dogma, sondern ein sehr wertvoller Beitrag zur Entwicklung der Wissenschaften und eine Anleitung zum selbständigen Weiterdenken.-Peter Möller)மற்றும், பேர்ளின் கும்போல்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் கேர்பிறீட் முன்கிலர்(Es ist aber nicht mehr der Marx des Marxismus und schon gar nicht der Marx der Sowjetideologie, der dieses Interesse findet, sondern der schwierige, sperrige deutsche Wissenschaftler und Intellektuelle, der mitunter zu rhetorisch brillanten, mitreißenden Formulierungen imstande war und dann wieder seine Leser durch staubtrockene, hochgradig komplizierte, nicht selten auch noch mit mathematischen Formeln durchsetzte Überlegungen quälen konnte. In diesem Sinne ist Marx für seine Leser seit jeher ein Chamäleon gewesen.-Prof.Herfried Münkler).முதலாம்மவர் பீட்டர்: மிகவும் அடிமட்டத்திலிருந்து,மிகச் சாதரணமான கூலித்தொழிலாளியாகவிருந்து பின்னாளில் அரசியல் விஞானம்படித்து டிப்ளோமப்பட்டபெற்றவர்.இவரது மார்க்சியம் குறித்தான பார்வை மிக விரிந்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவை.


பீட்டர் முல்லரது மார்க்சியைப்பார்வையானது எனது மார்க்சியப் புரிதலுக்கு மிக நெருக்கமான சாதகமான பக்கங்களைத் திறந்துவிட்டது.இவரது பார்வையுள் மார்க்சியம் என்பதைச் சோவியத்துக்குள் முடக்கி அந்தத் தேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விளைவுகளின்வழி புரிதலை அடியோடு மறுப்பது.இதுள் மிகச் சிறந்த முறையில் இவரது ஆய்வுகள் இன்றைய நடப்பாண்டில் நிதர்சனமாகிவருகிறது.கடந்காலத்தில் மார்க்சியம்,மார்க்ஸ் என்பது காலங்கடந்ததாகக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்கள் பல இன்று மார்க்சியத்தைப் புரிய முனையும் பல்கலைகழக மாணவர்களின் பெருக்கத்தால் தலையைச் சுவரோடு மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.இரண்டாமவர்:பேராசிரியர் கேர்பிறீட் முன்கிலர்.இவரது விமர்சனமானது இன்றைய நவலிபரால்களின் அரசியலைத் தோலுரிப்பது.கடந்த சோவியத் தகர்வில் உச்சி குளிர்ந்த ஜேர்மனிய அரசியல் வாதி-அமைச்சர் நோபேர்ட் புளும் (Norbert Blüms: "Marx ist tot, und Jesus lebt")"கிழக்கைரோப்பிய இடதுசாரிய முகாங்களின் தகர்வைக்கண்டு"மார்க்ஸ் இறந்துவிட்டார்,ஆனால்,ஜேசு நாதர் இன்னும் வாழ்கிறார்"என்றார்.இன்றோ வூப்பெற்றால் நாளிதழுக்கு-"வெஸ் டொச்ச சைற்றுங்குக்கு" முதலாளித்துவம் தோல்வியடைந்துவிட்டதென்று பேட்டியளிக்கின்றார்.இப்பத்திரிகை "West Deutsche Zeitung"போன கிழமைக்கானது எனது பொழுதுபோக்குத் தோட்டத்துக் குடிசையுள் கிடப்பதால் அதன் தேதியைத் தரமுடியாதுள்ளது.



நவலிபரல்களால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பெரும் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் தஸ் கப்பிட்டல் நூலை வாசகச் சுற்றுக்குவிட்டு சங்கிலித்தொடராக வாசிக்கின்றார்கள்.இத்தகைய பெரும் எண்ணிகையாகப் பெருகிவரும் இந்த ஆர்வத்துக்குக்காரணமாக அமைந்தது: இன்றையப் பங்குச் சந்தைச் சூதாட்ட நெருக்கடி.இத்தகைய பொருளாதாரச் சிக்கிலானது முதலாளித்துவத்தினது சந்தைப் பொருளாதாரப் பொறிமுறைவீழ்ச்சியைச் சொல்வதால் மாணவர்கள் மார்க்சிடம் பாடம் படிக்கிறார்கள் என்கிறது யுங்கே வேர்ல்ட் எனும் தினசரிப் பத்திரிகை.


ரொலான் பார்த்;(Roland Barthes) () மொழியில்கூறினால் "ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்" "La mort de l´auteur" vertretenen These, so ist der metaphorische Tod des Autors die Voraussetzung für die Geburt des Lesers: "la naissance du lecteur doit se payer de la mort de l´Auteur" (Barthes 1984: 67). என்பது,இன்றைய இந்தச் சூழலோடு பொருத்திப் புரியத்தக்கதாகவே இருக்கிறது."."(...)the birth of the reader must be at the cost of the death of the author" (Barthes 1977)பொருளாதாரத்தைச் சுற்றிய அனைத்துவகை மனிதவெளிகளும் தமது வெளிகளெல்லாம் சுருங்கும்போது அதன் காரணத்தை நோக்கிய கவனம் முதன்மையுறுவது தவிர்க்கமுடியாது நிகழ்கிறது.


ஆசிரியனின் முதல்வாசகன் தொகுப்பாளனெனும் எடிட்டர் வாசகர்களைத் தனக்குள்ளே கருத்தரிக்கிறான்(ள்).இத்தகைய கருத்தரிப்பு காலத்தால் தீர்மானிக்கப்படுவதன் தொடர்ச்சியாக மார்க்சின் மீள்வருகை பெரும்பாலும் அசாத்தியமான அறிதல்பரப்பொற்றை ஊக்குவிக்கப் போகிறது.இதன் உள்ளார்ந்த பலமே வர்க்கங்களாகக்கிடக்கும் மனிதக்கூட்டைப் புதுமையாகத் தரிசிப்பதும்,அந்தத் தரிசிப்பூனூடாக மனித நேசிப்பு, மானுடவிடுதலையென்பதெல்லாம் வர்க்க விடுதலையென்பதோடு தொடர்புடையதென்பதும்,அதன் இருப்பில்(வர்க்கச் சமுதாயமாகப் பிளவுற்றுக்கு கிடப்பது) கட்டப்பட்ட பொருளாதாரக் கடைந்தேற்றம் இதுவரையான மனித சுதந்தரத்தை எங்ஙனம் முடிச்சிட்டு ஒருவகை மனிதசமுதாயத்தைத் தோற்றுவித்துள்ளதென்பதை மாணவர்கள் மேலும் புரிவதற்கும் அதன்மீதான பார்வையினோடு மனிதவிடுதலைக்கான பரிணாமங்கள் புதிய உத்வேகமெடுப்பதற்கும் உலக தழுவிய புரட்சிகரமானவொரு கட்சி-அரசியல் மையமுறுவதற்கும் இன்றைய காலம் மீளவும் மார்க்சோடு கைகோர்க்கிறது.மாhக்சியம் என்பது மேலதிகப்பிரதியாகவோ அல்லது இன்னொருமாதிரியாகப் புனைவாகவோ எடுத்தாளப்படும் புரிதலையுடைத்து அது செயலூகத்துக்கான நடைமுறைச் சுமுதாயத்தை நிலவுகின்ற பொருளாதார அடிப்படையக்கொண்டு விமர்சனரீதியாகப் புரியும் நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.இங்கே தொடர்கிற இந்த ஊக்கத்தில் ஜேர்மனியச் சுயாதீனப் பல்கலைக்கழகங்கள் முதன்முதலாக மார்க்சியத்தைக் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறிக்குள் கொணர்வதற்கான ஆயுத்தங்களில் மூழ்கியுள்ளார்கள்.


இது மாணவர்கள் வருங்காலத்தில் பொருளாதாரத்தை வெற்றியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே என்று கூறப்படுகிறது.இந்தக்கூற்று உண்மையாவதிலுள்ள சிக்கல் கென்றிபோர்ட் மார்க்சியம் கற்ற நோக்கத்துக்கிசைவாக இருக்குமென்றால் மீளவுமொரு பொருளாதாரச் சரிவும் யுத்தங்களும் மலியும் உலகைத்தாம் நாம் கனவுற முடியும்.


இந்தச் சுயாதீனமான பல்கலைக்கழகங்களின்வழி மாணவர்கள் மார்க்சியத்தை மிக நுணுக்கமாகக் கற்கும் சூழலில் மேலும் புதிய உத்வேகத்தோடு மார்க்சியத்தின்மீதான பன்முக வாசிப்பு நிச்சியம் நிகழும்.இன்று,ஒரு பீட்டர் முல்லரும்,இன்னொரு கேர்பிறீட் முன்கிலரும் நமுக்கு முன் மார்க்சியத்தைப் புதிய புரிதல்களோடு அண்மிப்பதுபோன்று,வரும் ஆண்டுகளில் பலர் உருவாகுவார்கள்.இந்தச் சூழலில் நவலிபரல்களின் பொருளாதாரச் சுற்றோட்டமும் அதுசார்ந்த சிந்தனாச் சிறைக்கூடமும்(...) தகர்ந்து,இயக்வியற் பொருள்முதல்வாதம் மேலும் இன்னொரு சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான அணிதிரட்சியை நிச்சியம்கொண்டியங்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
23.10.2208.

Monday, October 13, 2008

சுதந்திரச் சந்தை வர்த்தகம்

ஆளும் அரசுகள்:கொடியவர்தம் கூடாரம்!


பெருவங்கிக் கள்ளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட இன்றையபொழுதில் ஜேர்மனியப் பங்குச் சந்தை 11வீதம் தலைதெறிக்க உயர்ந்து, பங்குச் சந்தைச் சூதாடிகளையும் அவர்களது மனேச்சர்களையும் பெருமிதப்பில் ஆழ்த்தி மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு அரச அங்கீகாரத்தையே பெற்றுவிட்டனர்.


சமூக நலத்திட்டங்களுக்கு எந்தவொரு மானியமும் வழங்கமுடியாத ஜேர்மனிய அரசு,இன்று 50.000.கோடி யூரோவை(500 பில்லியன்கள் யுரோ) "வங்கிகளைக்காப்பாற்ற"வழங்குவதாக முடிவெடுத்து(The German government unveiled a €500 billion ($679 billion) rescue plan to shore up the banking system after Sunday's emergency summit of euro zones nations at which leaders agreed to guarantee new bank debt and inject capital to unfreeze money markets and restore confidence in the financial system.-Spiegelonline)
வெற்றுச் செக்குகளைக்கொடுத்த அடுத்த சில மணிநேரத்தில், பங்குச் சந்தைப் பெறுமதி வானைத்தொட்டு விட்டது. டக்ஸ் இன்டக்ஸ் வானை நோக்கி நகர்கிறது!ஆனாலும்,அது சில வாரங்களில் தகர்ந்து போகும்.புதிய பண உதவி பழைய விளையாட்டிற்கு!இது,சுவரை நோக்கி வாகனத்தைச் செலுத்துவதற்கு ஒப்பானது.ஆனால், முதலாளியத்துக்கு இதைவிட வேறு வழியில்லை-அதன் விதி இது!


"பாடாசாலைகளுக்கு மானியமில்லை-30 குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு,அதற்கு ஒரு ஆசிரியை".


"வேலையிழந்தவர்களுக்கான உதவிகளை நீண்ட நாட்களுக்கு வழங்க முடியாது.ஓடு, என்ன கல்வி கற்றாலும் தெருக்கூட்டவாவது!"


"வேலையிழந்தவர்கள் மணித்தியாலம் ஒரு யுரோவுக்கு வேலைக்குக் கண்டிப்பாகச் செல்லவேண்டும்." அரசு இத்தகைய அவலதுள் மக்களைத் தள்ளியபடி...


இன்று, உழைப்பவர்களுக்கு எதிரான கொடிய சட்டங்களை இயற்றிய இந்த நவ லிபரால்கள், கொள்ளை இலாபம் அடையும் பெருவங்கி மனேச்சர்களைக் காப்பதற்கு இப்போது எங்கிருந்தோ பல்லாயிரம் கோடிகளைக் கொடுக்கிறார்கள்?


அப்பாவி மக்களை அறா வரிக்குள் தள்ளி,அவர்களின் குருதியை உறிஞ்சும் வரிவிதிப்பின்மூலம் அவர்தம் சில்லறைகளைப் பறித்துப் பணக்காரர்களைக் காக்கும் இந்தப் பொருளாதாரப் பொறி முறை எவ்வளவுதூரந்தாம் மக்களைக் கருவறுக்கும்?


நாம் வாழும் உலகம் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலுக்குள் வீழ்ந்திருக்கிறது.


இந்தப் பொருளாதரத்தின் "சுதந்திரச் சந்தை வர்த்தகம்" இன்றைக்கு-இத்தகைய சூழலிலும், மக்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளால் காப்பாற்றப்பட்டுவரினும் இதன் ஆயுள் நீண்டதில்லை.உலகத்தின் பொருளாதாரச் சுழற்சியானது எந்தப் பெருவணிகத்திலும் செல்வத்தைக் குவிக்கவில்லை!மாறாக, உலகத்தின் கனிவளங்களையும்,உழைப்பவர்களையும் கொள்ளையடித்தே இன்றுவரை உயிர்வாழ்கிறது.இதன் உச்சக்கட்டமானது ஊக வணிகத்தில் சூதாடிகளால் ஊதிப்பெருபிக்கப்பட்டு, ஏழைகளின் தலையில் சுமைகளை ஏற்றியே பெருந்தொகையான செல்வத்தைச் சேர்த்துவருகிறார்கள்.இதன் தாக்கம் இன்னுஞ் சில மாதங்களில் அடுத்தகட்டப் பங்குச் சந்தைச் சிதைவில் தேசங்கள் பலதைத் திவாலாக்கி வரும்போது மக்களைப் பட்டுணிச் சாவுக்கும்-கடும் உழைப்புக்கும் தள்ளும்.


மக்களினது நலன்களை வேட்டையாடும் கொடிய அரசுகள் இன்றையப் பொருளாதாரச் சிக்கலை மக்களின் தலைகளில் கொட்டிவிட்டுத் தனது எஜமானர்களைக் காப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியை மக்களின் பெயரால்"வேலை வாய்பைக் காத்தல்"எனும் போர்வையில் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வத்தைப் பங்கீடு செய்வது உண்மையில் கொடிய நிகழ்வு.


அடிமுட்டாள் தனதுமான சந்தைப் பொருளாதாரத்தின் உற்பத்திப்பொறிமுறை மற்றும் நிதிமுதலீட்டுப் பங்குச் சந்தைச் சூதாட்டம், இன்று உலகப் பாட்டாளிகள் அனைவரையுமே புதிய பாணியில் மேய்ந்து வருவதற்குப் பெயர்"வேலை வாய்பைக் காத்தல்".நமது காலத்தில் இத்தகைய கொடிய பொருளாதாரச் சுரண்டலை இதற்கு முன் பார்த்தே இருக்கமுடியாது.


மக்களை மறைமுகமாகவும்,நேர்முகமாகவும் வரிவிதித்துக் கொள்ளையடிக்கும் இந்தக் கொடி அரசுகள் ஏலவே பலகோடி யூரோக்களை தொழிற்சாலைகளுக்கான மானியமாகவே கொட்டி வருவது வழக்கம்.இதைப் பயன்படுத்திப் புதிய முதலீட்டாளர்கள் குறுகிய காலத்துக்குக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து அரச மானியத்தைப் பெற்ற அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் "திவால்"எனும் முகமூடியினூடாக மீளவும் அரசைத் தமது கடன்களைப் பொறுப்பேற்கச் செய்து, கருப்புப் பணத்தை லிக்றன் ஸ்டையின்,மொனக்கோ,சுவிஸ் வங்கிகளில் பதுக்கியபடி இந்தப் பொருளாதாரம் நகர,இப்போது பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் பங்குகொண்ட பெருவங்கிகளும் அதன் நிர்வாகிகளும் இந்தக் கொள்ளையை மேலும் வளர்க்கின்றனர்!


எந்தக் காலத்துக்கும் இத்தகைய ஏமாற்றங்களைச் செய்துவரத்தக்கபடி மக்கள் மனங்களை இவர்கள் தொடர்ந்து தயார்ப்படுத்தி வருவதற்கான அனைத்து வளங்களையும் பல்வேறு அரசியலூடாகச் செய்வதில் இத்தகைய நவலிபரல் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.


சுதந்திரச் சந்தையின் கோர முகத்தைச் பங்குச் சந்தைச் சூதாட்டத்துள் நாம் தரிசிக்கின்றோம்.


இந்தச் சந்தை, மூலவளங்கள் கொட்டிக்கிடக்கும் தேசங்களை வேட்டையாடக் கொடிய யுத்தங்களை ஜனநாயகத்தின் போர்வையில் செய்து, அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும் மறுபுறும் தமது தேசத்தில் கொடிய வரிகளை விதித்துத் தம் சொந்த மக்களைச் சுரண்டுவதும் இருவேறு முகங்களாக விரிகிறது.இதன் உள்ளடக்கம் மேலும்,மேலும் ஒரு வடிவத்தையே எடுக்கிறது.அது: கீழிருந்து மேல் நோக்கிக் கூம்பு வடிவமாகச் செல்வதைத் தள்ளுவது.இது,எந்தப் பொழுதிலும் மனித சமுதாயத்தை மகத்தான முறையில் வளர்ச்சிப்பாதைக்கு நகர்தமுடியாது.தொடர்ந்து பல சிக்கல்களையும் ஒருமுகப்படுத்தி உலகை யுத்த அபாயத்துள் வைத்தபடி, மக்களையும்,இயற்கையையும் கொள்ளையிடுகிறது.


நமது மொழிகள் பலம் இழப்பதற்கான ஊடக யுத்தமானது,இந்தப் பொருளாதாரத்தின் கொடிய முகத்தை மக்களின் நல்வாழ்வுக்கான இறுதி வடிவமாகச் சொல்லி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசை நியாயப்படுத்துகிறது.கொள்ளையில் பங்குகள் நன்றாக பிரிகப்படுகின்றன.இவற்றைப் பெறுவதில் ஆர்வங்கொண்டவர்கள் துள்ளிக் குதிக்கும் பொதுவிடம் இன்றைய நிலையில் பாராளுமன்றச் சாக்கடையாகவே இருக்கிறது.


இத்தகைய தருணத்தில் இவர்களை இனியும் நம்பி,"இந்தக் கட்சிக்குப் பதில் அந்தக் கட்சி"என்று தொடர்ந்து தூங்கி ஏமாறும் கூட்டமாக உழைப்பவர்கள் இருப்பதற்கு என்னதாம் காரணம்?


இந்தக் கேள்விக்கு மிக இலகுவாகப் பதிலளிப்பதைவிடுத்து, நீண்ட ஆய்வு முறையில் சிந்திக்க வேண்டிய காலம் இது.


கொடியவர்கள்,கும்மாளம் அடித்துக் கொண்டாட்டங்கள் செய்து, தமது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.இதற்காக அப்பாவி மக்களின் குருதி பிழிந்தெடுக்கப்படுகிறது.இத்தகைய குருதியை உறிஞ்சும் அட்டைகளை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக முதலாளித்துவ ஊடகங்கள் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.இத்தகைய ஊடகங்களின்வழி அரசியல் புரியும் மனிதர்களைக்கொண்ட தேசங்கள் தொடர்ந்து உழைப்பவரை வேட்டையாட இன்றைய சமூக ஜனநாயக வாதிகள் மக்களின் மடியில் தவழ்ந்து, தமது அரசியலை முன்னெடுக்க இந்தக் கேடுகெட்ட கொடிய முதலாளியம் தொடர்ந்து குற்றுயிரோடு உலகத்தில் யுத்தத்தை முன்னெடுக்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2008

Sunday, October 12, 2008

ஆனந்தப்பா காதலிக்கும் இந்தியா அழகானதா?

டானியலின் உலகம்:அது இதயத்தின் மொழியாக...

"பூமி அதிர்ந்தது
இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது
இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து
எங்கள் கரைகள் அமிழ்ந்து போயிற்று
எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின"
.-டானியல்(ஆனந்தப்பா)



ஈர விழியோடு எம்மையெல்லாம் கூவி அழைத்து,சுனாமியின் வலியைத் தன் உணர்வோடும்-வலியோடும் சொன்ன டானியல்-எமது மண்ணின் துயருக்காக எந்தப் பொழுதிலும் சிலுவை சுமப்பதில் தன்னைப் பிணைத்துக்கொண்டவன்-போராளிக் கவிஞன்-கலைஞயன்!.மனிதத் துடிப்புடைய சிந்தனைமிகு இசைஞன்.இலக்கியச் சந்திப்பினது அரங்குகளில் மக்களின் வலிகளைப் பாட்டாகப் படித்துக் காட்டியவன்,தனக்குள் கவிந்திருக்கும் இசைக்கோலங்களை எமது மண்ணின் வலியோடு குழைத்துத் தந்து, எமது விழிகளை அன்றே ஈரவிழிகளாக்கியவன்.சுனாமி அனர்த்தம் கண்டு, உலகின் எந்தக் கவிஞனக்கும் அநுபவமாகாத மொழியைச் சாகா வலியின்மீது கட்டி ஈரவிழிகளாக எமது விழிகளை என்றும் வைத்திருப்பவன்.இன்றோ,அவன் மேலே சொன்னமாதிரி,எம்மிடம் எஞ்சியதெல்லாவற்றையும் நாம் மயானம் ஆக்கிவரும் இன்றைய சூழலில்,ஆனந்தப்பாவின் சிந்தனையின் இசைக்கோலஞ் சொல்லும் இந்தப் புதிய இசைக்கோர்வை பன்னிரெண்டு பாடல்களோடு இணையத்தில் நமக்காகக் காத்திருக்கிறது.



இந்தப் பாடல்களை நாம் எல்லோருமே மிகவும் உள்வாங்கி,அதற்குள் நமது மனக் கோலத்தைத் தரிசிக்க முடியும்!இது புதுமையல்ல.தமிழ்ச் சினிமாவின் பாடல்களைத் தாண்டி நாம் எமது இரசனையை வரிவுப்படத்த அந்தச் சினிமாவிட்டுவைக்கவில்லை.இன்று, இந்தப் பாணியைத் தாண்டித் தரும் எந்தத் தமிழ் இசைக்கோலமும் நம்மிடம் எடுபடுவதில்லை.இதை மிக நேர்த்தியாக உணர்ந்த டானியல் தனது புதிய பாடற்றொகுப்புக்குள் இதைத் தாண்டிக் கடக்கவிரும்பவில்லை!



ஆனந்தப்பா தனது கவியாற்றலை மிகத் துள்ளல் இசையோடிணைத்து உருவாக்கிய பன்னிரு பாடல்களும் நம்மோடு,நமது காதல் மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது.


இப்போதெனக்கு 46 வயது கடந்துவருகிறது.எனினும்,எனது காமத்தினது காதல் விருப்புக்குக் கன்னிக்கோலம் 16 உம்,17உம் படுத்தும்பாடு பெரும்பாடு.இறக்கைகட்டிப் பறக்கும் எனது ஆசைக்கு என்றும் பதினாறு. இந்தவொரு விஷயத்தில் எல்லையென்பதை என்னால் இட்டுக்கொள்ள முடியாதுள்ளது.நான் பார்க்காத உலகத்திலெல்லாம் என் மனம் பாய்ந்து,என்னை அந்தப் பதினாறு வயதுப் பருவத்துப் பொலிவுகளுக்குள் மீளவும்,மீளவும் தள்ளும் இந்த உலகம் மிகவும் உண்மையானது.இதுதாம் உயிரின் இருத்தல்.நித்தியத்தோடு பிணைவதில் எனது உள்ளொளி உருவங்கொள்கிறது!



இன்றையப் பௌதிகப் புரிதலில், ஜேர்மனிய இளம் பௌதிக விஞ்ஞானி மார்க்கோவ் நீம்;(Physiker und Bestsellerautor Prof. Dr. Markolf NIEMZ)கைடில்பேர்க் யூனிவெர்சிட்டியில் பௌதிகம் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பேராசிரியராக இருக்கிறார்.ஒரு பௌதிகவாதி அனைத்தையுமே தரவுகளோடு எடுத்து வைக்கும்போது,இந்த இளம் பேராசிரியர் ஜேர்மனியப் பௌதிக ஆய்வுவட்டத்துக்குள் தனது ஆய்வுகளால் ஒரு பெரும் தாக்கஞ் செய்பவர்.இவர் சொல்கிறார்"ஆன்மாவானது மரணத்தின்பின் ஒளியின் வேகத்தை எடுத்து நித்தியத்தோடு கலந்து விடுகிறது"(Lucy mit c-Mit Lichtgeschwindigkeit ins Jenseits.ISBN 978-3-8334-3739-7).



"ஆன்மா-மரணம்..."


மரணம் குறித்து ஆய்வுகளைச் செய்பவர் மார்க்கோவ் நீம்.ஆன்மா என்பது உயிர்தாங்கிய உடலினது கருப்புப் பெட்டி-Black Box என்கிறார்.அதாவது, விமானத்திலுள்ள பிளக் பொக்ஸ்!


இது குறித்து நான்:


"................."

மரணம்.


இதற்கும் ஆனந்தப்பா பட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் உண்டு!


"ஏய் ஏய் பெண்மணி, வாழ்வு ரொம்பப் பொய்யடி"பாடலில் இந்தக் கோலத்தை நாம் மிக உயர்ந்த கவிதை நயத்தோடு தரிசிக்கலாம்.இங்கே உயிர்வாழ்வின் அற்ப ஆயுளை நாம் அழகுற்ற "அவளிடம்"எடுத்துச் சொல்லி அவளை ஏமாற்றி அநுபவித்தலின் உண்மையில் உலகத்தின் தொடர் படைப்பு நிகழ்ந்து இந்தவுலகத்தை இயக்குவதில் நமது அர்த்தங்கள் மேலும் அழகுடையதாகிறது-ஆன்மா கொலுவுறுகிறது.பொழிவுகள் இங்கே புதுமையுறும் உயிரின் நீட்சியே தவிரக் குறைபடலல்ல-ஊனமும் அல்ல.


மார்கோ நீம் சொல்வதுபோல்"ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அது எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைதொடுகிறது.இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.அது என்னையும் மற்றைய மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைக்கிறது.இது எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில் புதியதைத் தோற்றுவிக்கிறது.இது எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு.


இந்த ஆனந்தப்பாவோ உண்மையின் தளத்தில் நின்று, மரணம் என்பது நிச்சியமானது,இத்தகைய குறுகிய காலத்துள் காழ்ப்புணர்வினது இருண்ட பக்கங்களுக்குள் மனித ஆசைகளைத் தொலைத்து, உயிரின் பெருவிருப்புக்கு எல்லையிடுவதைத் தனது பாடலில் சொல்லாமல் விடவில்லை.மிக இனிமையாகவும்,அழகாவும் பாடல்களைக் கட்டிவைத்து எனது மனதின் இரகசியங்களைச் சுகத்தோடு பாடுகிறார்.இசையின் மிக இயல்பான ஏற்ற இறக்க நிலைகள் மனிதவுணர்வின் மூலைமுடுக்கெல்லாம் இதயத்தின் அழகைப்பாடவைக்கிறது."மனமதானோ மாயவனோ மாலைத் தேச மன்மதனோ"பாடல் வரிகள் இந்த அர்த்தத்தில் பாடப்படுகிறது.


"மெரினா பீச்சிலே குயிலாப் போகுது,மைனா யாரது,லைலா பெயரெது?"எனும் பாடலின் சுகம் தாலாட்டும் எனது விருப்பை-எனக்குள் இழையோடும் பெரு விருப்பை.சின்ன இடை சொல்லும் அர்த்தம் கோடி.சுகத்தின் அழகு அங்கே அடுக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை உதிர்க்கும்போது இதயத்தின் உன்னதமான இருப்பு மேலெழும் இரத்த ஓட்டத்தின் கட்டுக்கடங்காத பாய்தலில் புரிந்துபோகிறதா? அதுதாம் உண்மை நெஞ்சே!


இதுவொரு தியான நிலை.


என்னையும் எனதும் இருப்பையும் சதா உணர்த்துவது எனது எதிர்பால்வினையே!இதைக்கடந்தவொரு பெரும் அழகு உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன்!இதை மறுத்துவிட்டு பிரமத்தோடு கதைவிடுவதில் பெரும் தவத்தடிகள் நம்மை முடக்கியுள்ளார்கள்.இங்கே, ஊசியில் நூலாய் என்னைக் கோர்த்துவிடும் டானியலின் இந்தப்பாடல்கள் எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இளநங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.



"ஊர்வசியின் பெண்ணா,மேனகியின் கண்ணா,பூர்வீகம் என்ன?" டானியல் இப்படிக் கேட்டுவைக்கிறான்!


கவிஞர்கள் பெண்களை ஊர்வசிக்கு மேனகைக்கு ஒப்பிட்ட தலைமுறைபோய்,இப்போது இந்தக் கவிஞனோ தலைமுறை இடைவெளியைத் தனக்குள் உணர்ந்து ஊர்வசியின் பெண்ணா என்று அடுத்தகட்டத்துக்கே போய்விட்டான்!என்னவொரு கற்பனை?இவன் காலத்தில் வாழும் கவிஞனல்லோ!இது புகழ்தல் அல்ல-வியப்பு.எனக்குள் வசமாகும் அவன் மொழியினது அனுபவப் பிரதி, என்னில் உலகத்தின் பொதுத் தன்மையைக் காணத் தவறவில்லை.


"சோனா,சோனா சொல்லாமற் போனா"எனும் பாடலில் பிரிவின் துயரைப் "புதுப்பொலிவோடு"சிதறடித்து, வலியைக்கூட வாழ்வின் அடுத்த தரிசனமென அறிந்து அந்த வாழ்வின் அழகோடு இனம் காண்கிறது கற்பனையாற்றல்.பின்பு,வாழ்வின் குறை ஆயுளோடு தனது வலியைச் சரிவு நிலைக்கிட்டுச் செல்வதில் மனித இருப்பை மேலும் உறுதிப்படுத்த அடுத்த கட்டத்தைச் தரிசிக்கச் செய்வதில் ஆனந்தப்பாவின் பாடல் வெற்றிகொள்கிறது.இந்தத் தெரிவு மனிதத் தொடுநிலையை உண்மையாக உருவமாக்கிவிடுகிறது!

இஃது, அர்தங்கள் சொல்லிப் புரிவதில்லை.ஒரு அனுபவமாக நமக்குள் விரியும் இசைத் தொகுப்பு.


என்றும் வலிகளைச் சொல்லி மனித விருத்தியைத் துண்டித்துப் படைப்பாற்றலைச் சிதைக்கும் குறைகளோடு வலம்வராது,தான் காணும் குறைப்பாடுடைய உலக நிதர்சனத்தில் "அழகு அவலட்சணம்" எனும் எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துப்போடும் நிலைதாண்டிப் பாடல்களைக் கட்டுகிறார்.நெஞ்சின் வலிகளை நிசவுலகத்தில் வைத்து உடைத்துப்பாக்கிற டானியல் "விருத்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.


தமிழ்க் கதையுலகத்தின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனது எந்தக் கதைகளை எடுத்தாலும் அது மனித அழகைச் சொல்வது.அங்கே,எதிர்மறையான பல தன்னிலைகளின் வாழ்வும்,இருத்தலும் அங்கீகரிக்கப்பட்டு அங்கேயும் ஒரு உன்னத மனம் இருப்பதைப் புரிய வைப்பது.


இத்தகையவொரு நிலையை ஆனந்தப்பாவின் ஒரு பாடலில் இனம் காணமுடியம்.அந்தப் பாடல்தாம்"ஐ ஆம் இந்தியன்,ஐ லவ் இந்தியா"எனும் பாடல்.



இங்கே,இந்தியாவின் இன்றைய கோலத்தை நாம் தரிசித்து வருபவர்கள்.அந்த இந்தியா கொடுமைமிகு இந்தியா.சாதி சொல்லி மனிதரை அடக்கும்,உழைப்பவர்களை நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும்.உரிமை கேட்டுப் போரிடுபவரை குண்டாந்தடிப் பொலிசைக்கொண்டு மண்டையைப் பிளக்கும்.மிகக் கொடுமையான இந்த இந்தியாவை அவன் தனது விருப்பத்தின்படி அழகாக்க விரும்புகிறான்.தான் காணும் இந்தியா இப்படி வருவதில் அவன் ஆசைப்படுகிறான்.இந்த அவனது பெருவிருப்பு இந்தியாவின் அழகாக,உச்சமாக விரிகிறது.


இத்தகைய விருப்பு எமது மனத்தின் தவிப்புதம்தாம்.



இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டானவொரு உலகாகத் திகழ்வது எமது விருப்பு.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு மாறானது.எனினும்,இந்தியா ஒரு நாள் இதை உடைத்து முன்னேறும்.அந்தளவுக்கு அதன் உழைக்கும் மக்கள் அழகுடையவர்கள்.அந்த மனித அழகு நிச்சியம் இந்தியாவை விடுவிக்கும்.இதை ஆனந்தப்பா மிக நேரத்துக்கே இனம் காண்கிறார்.போற்றிப் பாடுகிறார் தான் காணும் தரிசனத்தோடு.இவனல்லோ உன்னதமான கவிஞன்!


இதயத்தின் தரிசனம் இது!


கேட்கத்தக்க இசையோடு பிணைக்கப்பட்ட ஆனந்தப்பாவின் கவிதைகள் மிகச் சாதாரணமான மனிதத் தொடு கணங்கள் என ஒதுக்கப்பட முடியாதவை.அவை,மனித உந்து சக்தி.இத்தகைய தரிசனங்களேதாம் இதுவரை இந்த உலகத்தை மாற்றித் தகவமைக்கிறது.அது அடக்கு முறைகளை உடைக்கக் களத்திலும் நிற்கும் அதுபோல காதலிலும் நிற்கும்.இந்த இரு நிலைகளும் அந்தப் பெரும் ஊற்றான எதிர்ப்பால் வினையின் இரண்டு பக்கமே.வாழ்க, சிக்மன் பொரைட்!


இப்போது,பாடல்களை அமைதியாக இங்கே சென்று கேளுங்கள்.


http://www.a4anandappa.com/


கேட்கும்போதே காலத்துக்கேற்ற இதயத்தின் மொழியை உணர்வீர்கள்!



அந்த மொழி நம் எல்லோரதும் மொழியே!.அதைப் பாடலாக்கிய என் அருமை டானியலை-கவிஞனை-அழகுடைய அந்த இசை மனதை நான் மதிக்கிறேன்.வியந்து பெருமிதம் கொள்வதில் என் இதயத்தோடு நெருங்குகிறேன்.


(பிற்குறிப்பு: இப்பாடல்களை நிச்சியம் டி.ஜே.தமிழன் கேட்டுக் குறிப்பு எழுதணும்.இது எனது பெரும் அவா!)


நட்போடு,


ப.வி.ஸ்ரீரங்கன்.
12.10.2008

Tuesday, October 07, 2008

கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின...

சந்தைப் பொருளாதாரத்தை மரணப் படுக்கைக்கு
அனுப்பும் பங்குச் சந்தை.


பாதாளத்தை நோக்கிப் பங்குச் சந்தை வீழ்ந்து போகிறது.அரசுகள்
மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளை-நிதிமுதலீட்டாளர்களைக் காப்பதற்கெடுக்கும்
முயற்சி சமூகவிரோதமானது!பங்குச் சந்தைகுறித்துக் கட்டுரை புனைந்தவர்கள் கள்ள
மௌனத்துள்.


வர்களின் கடவுளான அமெரிக்காவோ அடுத்த அடியெடுக்க அச்சப்படும் காலம் இது.யாருடைய கழுத்தை நெரித்தாவது தமது முகங்களைத் தியாக தீபங்களாகக் காட்டவெடுத்துவரும் முயற்சிக்கு உழைப்பவர்கள் பலியாக முடியுமா?


ஆமா,முடியும் என்கிறார்கள் அரசியல் வாதிகள்!அவர்களுக்கென்ன?இந்த ஊக வணிகத்துறையின் துணிகரமான கொன்சேர்ன்கள் கொட்டிய பெருந்தொகைப் பணத்துக்கு அவர்கள் கத்துகிறார்கள்;நாம் கொதிப்படைகிறோம்!

உலகைக் காட்டமாகக் காவுகொள்ளப்போகும் பங்குச் சந்தைச் சூதாட்டமானது பொறிந்துவரும் இன்றைய சூழலை, கடந்த ஆண்டுமட்டில் நொருங்கி விழும் என்றே சொன்னேன்.எத்தனையோ நண்பர்கள்-குறிப்பாகப் பத்திரி- எள்ளி நகையாடினார்கள்.இன்று, அமெரிக்கதாசர்கள் எவ்வளவு முயன்றும் பொறிந்துவரும் ஊக வணிகம், உலக அரசுகளையே பொறியவைக்கப் போகிறது!

முதற்கட்டமாகப் பொறிந்துபோகும் வங்கிகளைத் தூக்கி நிறுத்த முனையும் அரசுகள், பொதுசனத்தின் வரிப்பணத்தைக்கொட்டித் திவாலாகும் வங்கிகளைக் காவுகிறார்கள்.இதுவும், புஷ்வாணமாகும்.அடுத்தடுத்துச் சரியும் பங்குச் சந்தையை எண்ணிக்கொள்ளமுடியாதளவுக்குக் கதைவிடும் பொருளாதார மேதைகள் தொலைந்துபோக.

இருப்பவர்களின் கைகளுக்கு மேலும் கீழ்மட்டமக்களின் சில்லறைகளையே தட்டிப்பறித்துக் கொடுக்கும் இந்த அரசுகள், கீழிருந்து மேலே சமூகப்பங்கீடைச் செய்கிறார்கள்.இது, நவீன உலகம்.இங்கே,முதலாளித்துவம் என்பது "தோன்றும் போது சவக்குழியைத் தோண்டியபடியேதான் பிறந்ததாக"க் கார்ல் மார்க்ஸ் அன்றே குறிப்பட்டார்.சமூகத்துக்குத் தீங்கு செய்யும் சந்தைப் பொருளாதாரமானது ஐரோப்பிய நவலிபிரல்களால் நவீன அடிமைத்தனமாக மாற்றப்பட்டபின் உலகை யுத்தங்களால் பங்கீடு செய்ய எத்தனித்தார்கள்.இத்தகைய யுத்தங்களால் கோடி மனிதர் அழிந்தும் செல்வம் குவிந்தது இத்தகைய வல்லாதிக்க அரசுகளுக்கு.எனினும்,உலகை வேட்டையாடும் அதிபகாசூர மனேச்சர்கள் இந்தச் செல்வத்தையெல்லாம் தமது கரங்களுக்கு மாற்றியபடி, ஊக வணிகத்தில் கட்டப்பட்ட கணக்குப் புள்ளிகள் காலத்தால் நிலைக்க முடியவில்லை.

இது, தொடர்கதையாக மாறம்போது ஐரோப்பியப் பொது நாணயமான யூரோ நொருங்கிச் சின்னாபின்னமாகும்.கூடவே,ஐரோப்பியக்கூட்டமைப்பு ஏழை நாடுகளை அம்போவென நடாற்றில்தள்ளியபடி மேலும் இராணுவவாதத்தைத் தொடரும்.இத்தகைய தருணத்தில் பழைய ஐரோப்பா மீளவுருவாகிக் குருதியாற்றைத் திறக்கும்.

இன்றைய மதிப்பீட்டின்படி ஐரோப்பிய உற்பத்தி தன்னைக் கட்டுப்படுத்த முனைகிறது.ஜேர்மனிய முன்னணிக் கார்க் கம்பனிகள் எடுத்து வைக்கும் உற்பத்திக் குறைப்பு, அடுத்து நொருங்கும் நடுத்தர வர்க்க உற்பத்திச் சாலைகளைத் தெருவுக்குக் கொணர்ந்துவிடப் போகிறது.இத்தகைய நிலையில், இன்று உலகத்தின் முன் எந்தத் தீர்வும் கிடையாது.

மனிதர்களின் பொதுவான செல்வமெல்லாம் சிலமணி நேரத்தில் சாம்பலாகும் சந்தைப்பொருளாதார வர்த்தக முறைமையானது எப்போது பங்குச் சந்தைச் சூதாட்டமாக ஊக வணிகத்துக்கு மாற்றமாச்சோ, அன்றே வட்டிக்கு வட்டி என்ற மனிதமுகமற்ற மலட்டுப் பொருளாதாரப் பணச் சுற்றோட்டம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது!

நடுத்தர உற்பத்திச் சக்திகளோடு உறவாடிய உற்பத்தியுறவுகள் தெருவுக்குத் துரத்தப்பட்டது எதனால்?

எத்தனையோ நடுத்தரத் தொழிற்ச்சாலைகள் வங்கிகளிடம் வேண்டிய கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின.இதனால்,தொழிலாளர்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டுள்ளது.உழைப்பாளர்கள் உதிரிகளாகவும்,நாடோடிகளாகவும் மாற்றப்பட்டுவரும் இந்தச் சோதனையான காலம் திடீரெனத்தொடங்கியதல்ல.இது, சந்தைப்பொருளாதாரத்தின் படுதோல்வி.

இனிவரும் காலத்தில் இதை மாற்றியச் சமூகத்தன்மை மிக்கப் பொருளாதார உற்பத்தி பொறிமுறையைக் கைக்கொள்ளும் புதிய அணுகுமுறைகள் உலகத்துக்கும் உழைப்பவர்களுக்கும் அவசியமாகிறது.இது, தவிர்க்கமுடியாது மக்களைத் தெருவுக்கு இறங்கிப் போராடும் நிலைக்கு மாற்றும் என்பதை உணர்ந்த ஜேர்மனிய அரசு, இதுவரை தனது இராணுவத்தை உள்ளநாட்டுப் பிரச்சனைகளுக்கு உட்புகுத்தாத மறைமுக அரசியலைச் செய்து வந்ததைமாற்றி, இராணுவத்தைச் சட்டபூர்வமாகக் களமிறக்கக் காத்திருக்கிறது.இது, உழைப்பவர்களை வேட்டையாட எத்தனிக்கும் அரசியல்.

இனிவரும் காலங்கள் கலகத்துக்குரிய காலங்களாகவே இருக்கும்.கற்பனாவாதக் கதைக்காலங்கள் காற்றோடு பறக்கும்.தேசங்கள்பல திவாலாகிப்போகும்.அங்கே, உணவுக்கலகம் ஆரம்பமாகும்.இது, தற்காலிகமாக உயிர்ப்பலிகளோடு அடக்கியொடுக்கப்படும்.எனினும், மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் அவர்களது உழைப்பு மக்களையின்னும் தெருவுக்குக் கூட்டிவரும்.இழப்பதற்கரிய வேலையைப் பறிக்கும் வங்குறோத்துப் பொருளாதாரச் சூழல், மக்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத சூழலை உருவாக்கும்.அங்கே,வெடிக்கும் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் வெறும் தொழிற்சங்க வாதத்துக்குள் உள்வாங்கப்பட முடியாது திண்டாடும்.இத்தகைய தருணத்தில் மீண்டும் மார்க்ஸ் மிக எளிதாக உலகை வலம் வருவார்.இது, தொடரப்போகும் அடுத்த நூற்றாண்டின் கட்டியம்.

இன்றிருக்கும் இத்தகையவொரு சூழலை முன்வைத்துத் தமது மூளைகளைக் கசக்கும் பெரும் பொருளாதாரப் புலிகள், ஊக வணிகத்தைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்ட மேடையில் நிற்கவே அஞ்சுகிறார்கள்.அவர்கள் தனியார் வங்கிகளை அரசமயமாக்கும் மாய்மாலம் காட்டுகிறார்கள்.இன்று, மீள முடியாத கடனிலுள்ள வங்கிகளைத் தேசிய-அரசமயமாக்கல் என்பதன் உண்மை முகம் மக்களின் வரிப்பணத்தைத் தட்டிப்பறித்துத் தமது கையாலாக-மனித விரோத முகத்தை மறைப்பதே.

"உலகத்தின் மூலவளங்களை பொதுச் சொத்தாக்கு,
நிலத்துக்கான தனியுடமையை இல்லாதாக்கு,
அனைவருக்கும் அடிப்படை வருமானத்தைச் சட்டமாக்கு,
உழைப்பவர்களின் ஊதியத்தை வரியாக்கி வங்கிகளுக்குப் பங்கீடு செய்வதை நிறுத்து" எனும்,பொருளாதார வாதங்கள், மேலும் மக்களை முடமாக்கும்.

உண்மையில் புரட்சிக்குரிய காலத்தில் அதை நீற்றுப்போக வைக்கும் இந்த மாய்மாலங்களை உழைப்பவர்கள் நம்ப முடியாது.


இனிவரும் காலத்தில் சந்தைப் பொருளாதாரம் தவிடுபொடியாகும் என்பதே பொருளாதாரச் சூழல் சொல்லுகிறது.

உபரிச் செல்வத்தைப் பெருக்க முனையும் இந்தச் சூதாட்டம் இதுவரை மக்களைப் பலியெடுத்து யுத்தங்களை ஊக்குவித்தது.இது, வளர்ந்துவரும் உலகத்தின் விஞ்ஞானப் பொறிமுறைகளால் இதுவரை உயிர்வாழ்ந்துவந்தது.இனி,இத்தகைய விஞ்ஞான வேடிக்கையெல்லாம் இவர்களைக் காக்க முடியாது.

உலகம் மிக விரைவாக இன்னொரு தளத்துக்கு மாறித்தான் போகும்:அது,புரட்சி அல்லது சர்வதிகாரச் சரணாகதியாவென்பதை தீர்மானிப்பது அரசுகள் அல்ல.உழைப்பவரே.

இதற்கான தளம் ஒன்று புரட்சிகரமாக உருவாகிவருவதை இத்தகைய அரசுகள் அனுமதிப்பது திவிர்க்க முடியாது நிகழும்.மக்களின் எழிச்சிகள் எப்பவும் வெடிக்கலாம்.அதுவரை மக்களை வேட்டையாடுதல் பல முறைமைகளில் தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
07.10.2008

Sunday, October 05, 2008

முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ்...

அன்பு வாசகர்களே,வணக்கம்!


"...Und eines dürfen wir auch nicht vergessen: Etwa 1,8 Millionen Georgier leben zur Zeit in Rußland. Sie arbeiten dort und überweisen viel Geld zur Unterstützung ihrer Familien. Das ist ein wichtiger wirtschaftlicher Faktor für uns. "-
Lasha Shavdia




இன்று, தமிழீழக் கோசத்தின் போலித்தனமான அரசியல் சூதாட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிங்களத் தரப்பாலும்,தமிழ்த்தரப்பாலும் வேட்டையாடி வரும்வேளையில்,நாம் மொழியிழந்துகிடக்கிறோம்.


ஒரு புறம் புலிகளின் அழிவு தமிழர்களின் அழிவெனும் வாதம்,மறுபுறம் சிங்கள அரசின் வெற்றி சிங்கள மேலாதிகத்தின் வெற்றியுமாகப் பார்க்கப்படுகிறது.


இவையிரண்டையும் இன்றைய சூழலில் மறுப்பதற்கில்லை.


ஏனெனில், சிங்கள அரசு இன்று தேசியப் போராளிகளாக இராணுவத்தை மாற்றிச் சிங்களத் தேசத்தின் இறைமைக்காகப் போராடுவதாகக் காட்டி வருகிறது.உலகப் பொருளாதாரப் போக்குகள் ஆளும் சிங்கள வர்க்கத்தை ஆட்டங்காண வைக்கும்போதெல்லாம் இந்த யுத்தமே அவர்களைத் காத்துவருகிறது.இதுவே, புலிகளின் இருப்போடும் சம்பந்தப்படுகிறது.இன்றைய நிலையில் இவற்றை மறுத்தொதிக்கிவிட்டு நமது மக்களிடம் அரசியல் செய்யப்பலர் ஆயுத்தமாகும் நிலை.சிங்கள அரசின்பின்னே சிதைக்கப்பட்ட தமிழரின் நலன்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.இதுவரை இதைச் செய்த புலிகள் தமது வரலாற்றுத் தவறைப் பதிப்பித்து வருகிறார்கள்.இது வன்னியில் அச்சாகிறது.



நமது மக்களின் சுயநிர்ணய உரிமை அழிக்கப்பட்டாச்சு.புலிகளும்,ஏனையவர்களும் இதை எப்போதோ செய்துவிட்டார்கள்.இனிச் சிங்கள ஆளும் வர்க்கம் இதை நிறுவனப்படுத்தி நமது மக்களை அடிமைகளாக்கும் பணியைச் செய்து முடிக்கப் புலிகளே உடந்தையானார்கள்.


இது, தவிர்ந்தவொரு அரசியல் இனியும் உண்டு.



அது சிங்கள முற்போக்கு சக்திகளோடு இணைந்து சிங்கள மக்களோடு மீளவும் தமிழர்கள் நட்புறவை வளர்த்தாகவேண்டும்.அதன் அடிப்படையில் எழும் ஒருமைப்பாட்டோடு ஆளும் சிங்கள அரசை வீழ்த்துவதே தலையாகக் கடமை.இது சிரமமான பணி.இதன்வழி இலங்கையில் ஒரு சமஷ்ட்டி முறையிலான தீர்வாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தற்காலிகமாகத் தீர்க்கப்படலாம்.




டொச் மொழியில் வந்த கீழ்வரும் பேட்டியை ஜேர்ச்சியாவில் சமாதானத்துக்காகச் செயற்படும் அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளர் வழங்கியுள்ளார்.இப்பேட்டியில் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த உறவே இன முரண்பாட்டையும்,தீர்வையும் சாத்தியப்படுத்துமென அடித்துக் கூறுகிறார்.இதுதாம் உண்மை.இலங்கையைவிடப் பல மடங்கு வளங்கள் நிறைந்த ஜோர்ச்சியாவே இருஷ்சியாவோடு நட்புறவை வளர்த்தால்தாம் அதன் பொருளாதார வாழ்வு நிலைக்குமெனச் சொல்லும்போது,ஒரு சைக்கிள் கட்டையையே செய்யமுடியாத ஈழத்தின் நிலை புரியத் தக்கது.இதன் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுவது நன்று.



இப்பேட்டியானது ஜேர்மனிய முன்னணி இடதுசாரியச் சஞ்சிகையான யுங்க வெல்ற்றில் http://www.jungewelt.de/2008/09-27/002.php

வெளியாகியது.அதை நான் தமிழுக்குக் கொணர்கிறேன்.அவ்வளவுதாம்.



நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.






"முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ் ஜோர்ச்சியாவில் நாம் வாழ்கிறோம்."



லாச்ஷா சௌடியாவோடான உரையாடல்.மொஸ்கோவினது மிகப் பதுமையான சதுரங்க
விளையாட்டுக்கும்,அரச(ஜோர்ஜ்சிய)உளவுத்துறையின்
வேவுக்குள்ளானதுமான
சாகசங்கள்.அத்தோடு,இரஷ்சியாவோடான நட்புறவை மீண்டும்
ஏற்படுத்தவேண்டியது மிக அவசியம்.



லாஷா சௌடியா ஜோர்ச்சியாவின் சமாதானத்துக்கான முன்னணியின் ஒரு முன்னணி உறுப்பினர்.அவர் ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.ஜோர்ச்சியப் புலனாய்வுத்துறையினரால் தான் இனங்காணப்பட்டு உயிராபத்தைப் பேட்டியின் பின்பான சூழல் உருவாக்குமென்பதால் அவர் தனது பெயரைப் புனைபெயராகவே தேர்ந்தெடுத்துள்ளார்.எனவே,அவரது புகைப்படம் இங்கு பிரசுரிக்கப்படாது.



கௌகசுஸ் யுத்தத்திற்குப் பின்பான காலத்தில் மேற்குலக ஊடகங்கங்கள் அநேகமாக ஜோர்ச்சியாவின் பக்கமே உணர்வுகளைத் தகவமைத்துக் கொடுத்தன.இத்தகைய ஊடகங்கங்கள் ஜோர்ச்சியத் தேசம் இருஷ்சிய வல்லாத்திக்க அரசியலுக்குப் பலியானதாகப் படங்காட்டினார்கள்.நீங்களோ அந்தத் தேசத்தின் சமாதானத்துக்கான முன்னணிச் செயற்பாட்டாளரென்றவகையில் இந்த அரசியல் சதுரங்கத்தைப் பற்றி என்ன நிலைப்பாட்டிலுள்ளீர்கள்?



முற்றுமுழுதும் அது சரியானது!இருஷ்சிய விஸ்த்தரிப்பு யுத்தத்துக்கு ஜோர்ஜ்சியா பலியானதென்பது சரியானது.எனினும்,நாமிதை சம்பிரதாயபூர்வமாக இங்ஙனமும் புரிந்துகொள்ளலாம்:ஜோர்ஜ்சியாவானது உலக ஏகாதிபத்தியக்கூட்டணிகளின் வல்லாதிக்க அரசியலுக்குப் பலியாகிவிட்டது.ஒரு புறத்தில் அமெரிக்காவும்,நேட்டோவும் நின்றபடி,அவர்களுக்குத்தெரியும் மறுபுறத்தில் இருஷ்சிய வல்லாதிக்கம் நிற்கிறதென்று.



ஜோர்ச்சிய மக்கள் எல்லோருமே ஜோச்சிய அதிபர் மிக்கேல் சாகாஸ்வில்லியின் பின்னே நிற்பதாக ஜேர்மனிய அரசு அழுத்தமான உணர்வை வெளிப்படுத்திக்கொண்டது.உண்மையில் எதிர் தரப்ப்புப்பற்றி(மாற்றுக் கருத்து) மிக அபூர்வமாகவே நாம் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.உங்களது தேசத்தில் உண்மையில் மாற்றுக்கருத்து நிலைகள் ஏதாவது பலமாக இருக்கின்றனவா?


ஜோச்சிய மக்கள் ஒருபோதும் சாகஸவில்லிக்குப் பெரும்பான்மை அதாரவாக இருந்ததில்லை.எனினும்,நானிதை இப்படி உரைக்கிறேன்,அதாவது,சாகஸ்வில்லியின் ஆட்சியின் ஆரம்பத்தால் மக்கள் ஆறுதலடைந்தார்கள்.அரசமட்டத்தில் நிலவிய பெரும் ஊழலை எதிர்த்து நல்லாட்சி தருவதாகச் சாகஸ்வில்லி பொறுப்பேற்றார்.ஆனால்,இந்த நிலை எப்பவோ கடந்துவிட்டது.இப்போது நாம் காணும் கொடிய நிலை என்னவெனில் ஊழலென்பது அவரது ஆட்சியின்கீழ் மிகவும் நிரம்பி வழிகின்றது என்பதும்,ஜோர்ச்சியப் பெரும் நிறுவனங்கள் இவரது அமைச்சரவையால் கண்காணித்து அரசில் செல்வாக்குச் செலுத்துவது என்பதும் இன்றைய ஜோர்ச்சியத் தேசத்தின் நிலை.



ஆக, அமைச்சர்கள் தமது இலாகாவைத் தம் வருமானத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்கிறீர்கள்?


அதுதான்.அனால்,இஃதொன்றும் புதிதில்லை எனது தேசத்தில்.எட்வார்ட் சேவார்ட்நாட்ஷே ஆட்சியின்கீழும் இந்த நிறுவனங்களை அவரது அமைச்சர்களே கண்காணித்தார்கள்.சாகஸ்வில்லியின் காலத்தில் இது அவரது மந்திரிகள் கண்காணித்துப் பலனடைய ஆள் மாற்றம் நிகழ்ந்தது.



இவைகுறித்துப் பொதுமட்டத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதா?



ஒவ்வொருவரும் இது குறித்து அறிவார்கள்.ஜோர்ச்சிய ஊடகங்கள் நிகழ்கால ஊழல்கள் குறித்து மௌனித்துக்கிடந்தன.என்றபோதும்,அது குறித்து எங்கும் விவாதிக்கப்பட்டது.



சுயாதீனமான ஊடகங்கள் ஏதாவது ஜோர்ஜ்சியாவில் இருக்கின்றதா?



மொத்தமாக ஓரிரு நாளிதழ்-சஞ்சிகை இருக்கிறது,இவை அடிக்கடி சாகஸ்வில்லியை விமர்சித்துவந்தன.ஆனால்,வானொலிகள் தொலைக்காட்சிகள் அனைத்துமே அரசினது பாதையின்வழியே தொடர்ந்தன,கவ்காயா எனும் தொலைக்காட்சிச் சேவைவரை இதுவே கதை.இந்தக் கவ்காயாத் தொலைக்காட்சியானது குறுகியதூர ஒளிப்பரப்பையே செய்யக்கூடியது.தலைநகரமான Tbilissi நகரத்துக்குட்பட்ட வலயத்துக்குள் இது ஒளிபரப்பாகியது.யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இது இருஷ்சியாவரைக்குமான நீண்ட தூரத்துக்கான சேவையை வழங்கியது.இது இருஷ்சிய மொழியில் தனது சேவையை வழங்கிக்கொண்டது.இதுவொன்றே மாற்று ஊடகமாக வழங்கியது.இதுவும் நிறுத்தப்பட்டது.யுத்தம் ஆரம்பித்தபின் இருஷ்சிய மொழிகளில் வெளிவந்த அனைத்து இணையச் சஞ்சிகைகளும் ஜோர்ச்சிய அரசால் நிறுத்தப்பட்டது.


இருஷ்சியத் தரப்பின் பார்வையின்படி யுத்தமானது ஜோர்ச்சியத் துருப்புக்கள் தென் ஒசாத்தியாமீதான தாக்குதலின் விளைவாக எழுந்ததாகக்கூறப்பட்டாலும்,சாகஸ்வில்லி இதை மறுத்துச் சொல்கிறார், இருஷ்சியாவினது ஆத்தரமூட்டும் இராணுவத் தந்திரத்தின் எதிர்வினையாகவே இது நிகழ்ந்ததாக.யாரது பார்வைகள் இங்கே யுத்தத்தை முதலில் ஆரம்பித்து வைத்தன?


இரண்டு பக்கமுமே உணர்ந்துகொண்டாதான ஏதேவொரு கூட்டுக்குள் நிலைமை உருவாகி வருகிறதென்பதான சூழலில் இரு பக்கமுமே யுத்தத்துக்கான ஆயுத்தங்களைச் செய்தன.எனவே,இருஷ்சியாவும் இந்தத் துன்பகரமான யுத்தத்தின் பாத்தியத்தைப் பொறுப்பேற்கவேண்டும்.என்றபோதும், பெரும்பகுதி பொறுப்பு சாகஸ்வில்லியும் அவரது அரசையுமே போய்ச் சேரும்-தென் ஒசாத்தியாமீதான ஜோர்ச்சிய இராணுவத்தின் படையெடுப்பே யுத்தத்தை ஆரம்பிக்கும் சூழலை ஏற்படுத்தியது.



ஜோர்ஜ்சியவானது யுத்தில் தோல்வியைத் தழுவியது-இருஷ்சியாமீதான ஜோர்ச்சிய மக்களின் குரல்கள் இப்போது எப்படியிருக்கிறது.புவிகோள அரசியல் வியூகங்குறித்த மொஸ்கோ தலைமைத்துவத்தின் கவலைகுறித்தும்,அதைத்(புவிகோள வியூகம்) தடுப்பதற்கான கடப்பாடின்மீதான புரிதற்பாடு ஜோர்ச்சிய மக்களிடம் உண்டா,அதாவது,நோட்டோவானது நேரடியாக அவர்களின்(ஜோர்ச்சிய-இருஷ்சிய)வீட்டின் வாசலில் தனது இராணுவத் தளத்தை அமைக்கும்போது?


மக்கள் எண்ணங்களில் வேறுபாடுண்டு.ஜோர்ச்சிய மக்களுக்கு ஒன்றுமட்டும் நன்றாகவே புரியும்,அதாவது, இருஷ்சியா இல்லாமல்-இருஷ்சியாவின் தொழிற்சாலைகளின் பொருளாதார ஒத்துழைப்பு இன்றி ஜோர்ச்சியத் தேசத்தில் பொருளாதாரச் சுபீட்சம் ஏற்படமுடியாதென்று.90 களிலேயே இனமுரண்பாடானது கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்ததென்பதை மக்களும் அறிந்தே இருக்கிறார்கள்.கூடவே,இப்பிரச்சனையானது இருஷ்சியாவுடனான நட்பை மீண்டும் ஏற்படுத்தும்போது மட்டுமேதான் தீர்கப்படும் என்பதும் அவர்கள் அறிந்ததே.ஜோர்ச்சிய மக்களை உறுதியாக நம்பிக்கைகொள்ளவைத்தலென்பது விளங்கிக்கொண்டவரை மிகக்கடினமான பணி, தென் ஒசாத்தியாவிலும் மற்றும்அப்சாசியனிலிமிருந்து துரத்தப்பட்ட நிலையில்.இருஷ்சியா நீண்டகாலமாகவே இந்த இரு பிராந்தியங்களையும் ஜோர்சியாவிலிருந்து பிரிப்பதற்கான முயற்சியில் இத்தகைய முரண்பாடுக்கு ஊக்கமளித்ததென்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள்.இதன் இறுதி விளைவானது இந்தப் பிராந்தியங்களிலிருந்து 160.000.மக்கள் இடம்பெயரும் அவல நிலை உருவாகியது.இதுள் ஒருசிலர் மீளவும் இப்பிராந்தியங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் இன்று.


இனங்களுக்கிடையிலான நட்புறவென்பது அரசியல் தீர்வைவிட மிகப் பெரியது,ஒவ்வொருவரும் இணக்கமுறுவதைக் கடைப்பிடிக்கவேண்டும்.இது, இருண்டுபக்கத்துக்குமே பொருந்தும்.இந்த நட்பார்ந்த இணக்கம் முற்றுமுழுதாகக் கோரிக்கொள்ளமுடியாது,ஜோர்ச்சியாவானது நேட்டோவில் உறுப்பிராவதையும்,தனது பிராந்தியத்தில் இந்தக் கூட்டணியின் இராணுவத்தளத்தை அமைத்துக்கொள்வதற்குமான விருப்பத்தை.ஆனால்,இருஷ்சியா கூறுவதுபோல அதனிடம் இந்த இராணுவத் தாக்குதலைத்தவிர்த்து வேறொரு தீர்வு இதற்குச் சாத்தியமில்லையென்பதை நமது மக்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.



இதற்கு எந்தவகையான மாற்றுத் திட்டம் செயற்படுத்தியிருக்கமுடியும்?


இதற்கேற்ற சரியான காலம் தவறவிடப்பட்டுப் போய்விட்டது.சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பான காலத்தில், அதவாது,90 களின் ஆரம்பத்தில் ஜோர்ச்சியாவுக்கென்றொரு தேசிய அரசு வந்தது.இவ்வரசு உடனடியாக நேட்டோவின் நோக்கு நிலைக்கேற்றபடி நடக்க விரும்பியது.கௌகசுஸ் பிரச்சனைக்கான எந்த அரசியல் அணுகுமுறையைக் கையாள்வதுதென்பதில் ஜெல்சின் ஆட்சியின்கீழ் இருஷ்சியாவிடம் எந்தத் திட்டமும் இருக்கவில்லை,உதாரணத்துக்கு:1999 இல் "ஐரோப்பாவில் ஆயுதக்களைவுக் கூட்டு" எனும் ஒப்பந்தம் ஒன்றை ஜெல்சின் ஈஸ்ரன்பூலில் செய்து கையெழுத்திட்டார்.இதன் விளைவாக,ஜோர்சியாவில் நிலைகொண்டிருந்த பெரும்பகுதி இருஷ்சியத் துருப்புக்கள் தமது நிலைகளிலிருந்து விலகிக்கொண்டார்கள்.இறுதிப் பகுதி இருஷ்சிய இராணுவம் கடந்த ஆண்டு எமது நாட்டைவிட்டு வெளியேறின.இவ்வாண்டோ மீண்டும் இருஷ்சியப் படை நமது நாட்டை நோக்கிப்படையெடுத்தன.


அப்சாசியனுக்கும்,தென் ஒசத்தியாவுக்குமாக ஒரு சமாதான ஒப்பந்தம் இருக்கிறதே,அதை ஜோர்ச்சியாவும் உடன்பட்டுக்கொண்டது.இதன் பின்புதானே இருஷ்சியச் சமாதானப்படை அங்கே நிலைகொண்டன.



அதுசரிதான்,எனினும்,அங்கே இருஷ்சியாவினது வழமையான ஒழுங்கமைந்த இராணுவ அணி நிலைகொண்டே இருக்கிறது.இவை சமாதான ஒப்பந்தத்தின்கீழ் அடங்கவில்லை.இங்கே,அதாவது அப்சாசியனிலும்,தென் ஒசாத்தியாவிலும் இத்தகைய பிரதேசங்களின் இராணுவத்திற்கு இருஷ்சிய இராணுவக்கட்டமைப்புப் பயிற்சியளித்து வந்தது.இவ் வண்ணமே ஜோர்ச்சியாவிலும் அதனது இராணுவத்துக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வந்தார்கள்,கூடவே இது நேட்டோ அமைப்பினது அடிப்படைத் திட்டத்துக்கு அமைய"சமாதானத்துக்கான கூட்டு ஒத்துழைப்பு."



இது வெளிப்படையான நேட்டோவின் வியூகம்,நெடுக,நெடுக மிக அண்மையாக இருஷ்சிய எல்லையை நெருங்கிக்கொள்வது.இவைகளை நாம் பால்டிக்கில் மற்றும் போலந்தில்,பல்கேரியாவில் இப்போது ஜோர்ச்சியாவில் பார்க்கிறோம்.இவைகளின்வழி ஜோர்ச்சிய மக்கள் எங்ஙனம் தமது பதில்வினையை ஆற்றுகிறார்கள்,அங்கே மக்களிடம் நேட்டோவுக்கான அநுதாபம் மிகுந்திருக்கிறதா?


மக்கள் அநேகமாக நேரத்துக்கே இதற்கு எதிராகவே தமது பதில்வினைகளைக்கொண்டார்கள்.அதாவது,நமது பிரதேசத்தில் நேட்டோவானதன் வரவு மிக அபாயகரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகவே புரிந்துகொண்டார்கள்.அநேகமாக அச்சப்படுவது,நடந்துமுடிந்த யுத்தமும் அவலமும் இறுதியானது அல்ல என்பதே.ஜோர்ச்சியவானது தொடர்ந்து இராணுவ முரண்பாட்டுக்கான திடலாக உருவாகிறது.இதனூடாகப் பலரும் உணருவது என்னவெனில்,இருஷ்சியாவோடான மீள் நட்பார்ந்த நிலைமைகளை உருவாக்கி உறவாடுதலுக்கு மிக நீண்டகாலமெடுக்கும் என்பது.மிக விரைவாக நேட்டோ எங்களை அடைகாத்துக்கொள்ளும்(நம்மைப் பலிகொடுக்க).ஆனால்,ஒன்றைமட்டும் நாம் எப்போதுமே மறக்கப்படாது:இன்றைய நிலையில் 18 இலட்சம் ஜோர்ச்சிய மக்கள் இருஷ்சியாவில் வாழ்கிறார்கள் என்பதும்,அங்கே அவர்கள் வேலைசெய்துவரும் வருமானத்தில் பெரும்பகுதி பணத்தை ஜோர்ச்சியாவுக்கு அனுப்பி வைத்ததுத் தமது உறவினரைக் காத்து வருகிறார்கள் என்பதையும் எப்போதும் மறந்துவிட முடியாது.இதுவொரு முக்கியமான பொருளாதார நெறிமுறைக் காரணி எமக்கு.


நேட்டோவானது தனது கரத்தை உக்கிரையின்மீதும் பதித்துவருவதை அறிவோம்.அங்கே,கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன 60 வீதமான மக்கள் நேட்டோக் கூட்டணி அமைவதை எதிர்த்துவருவதாக,இத்தகையவொரு நிலைமை ஜோர்ச்சியாவிலும் நிலவுகிறதா?


வருகிற ஜனவரி 5 ஜனாதிபதிக்கான தேர்தல் எங்கள் தேசத்தில் வருவதால்,பரவலாகச் சமாந்திரமான கேள்விகளை மக்களிடம் கொண்டு சென்று கேட்கப்பட்டது.அப்படிக் கேட்கப்பட்டபோது,நோட்டோ கூட்டணியில் இணைவது குறித்தும் கருத்துக்கேட்கப்பட்டது.79 வீதமான மக்கள் இதற்கு இசைவாகக் கருத்துக்கூறியள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவிக்கிறது.எமக்கும் தெரியும் இந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்தக் கருத்துக்கணிப்பினது முடிவுகள் யாவும் மிகப் பிழையானதென்பது.உண்மையிலேயே இந்த வீதம் என்பது மிகவும் கூட்டப்பட்டுள்ளது.எனது கணிப்பின்படி ஒவ்வொரு இரண்டாவது ஜோர்ச்சியக் குடிகளும் நேட்டோவில் இணைவதை எதிர்த்து வருகிறார்கள்.அரசினது முற்றுமுழுதான பொய்ப்பிரச்சாரமானது எங்கள் தேசத்தினது ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் தொட்டுச் செல்கிறது.


இது கவலையளிப்பது.ஆனால், இதுதான் நிலைமை.ஜோர்ச்சியாமீதான இருஷ்சியாவினது படையெடுப்போடு நோட்டோவின் பரப்புரைகள் ஜோர்ச்சியாவை ஒரு கை பார்த்தன.அமெரிக்காவே தன்னை எங்களது தேசத்தின் பாதுகாவலனாகவும்,எமது பிராந்தியங்களின் ஐக்கியத்துக்கு உத்தரவாதமளிப்பவனுமாகக் காட்டிக்கொள்கிறது.பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதையே வாந்தியெடுப்பதும்,அரசை விமர்சிப்பதைவிட நேட்டோவுக்குத் தலையாட்டுவது பெறுமதிமிக்கதாக இருக்கிறது.


நோட்டோவனது மிகவும் அடிப்படையானவொரு பிரச்சாரக் கட்டமைப்பை ஜோர்ச்சியாவில் கட்டிக்கொண்டுள்ளது,அது சுயமான பரப்புரைகளைத் தனக்குச் சார்பாகக் கட்டியமைக்கத்தக்கபடி இதைச் செய்துள்ளது.தலைநகர் Tbilissi யில் மத்திய தகவல் திணைக்கழகமொன்றை அது உருவாக்கி நடாத்துகிறது.அதுபோலவே தெற்கு மற்றும் மேற்கு ஜோர்ச்சியாவில் நேட்டோவினது இரு கிளைகளை அது அமைத்துள்ளது.இத்தகைய விளம்பர நிறுவனங்களிடம் பணம் மிகவும் கொட்டிக்கிடக்கிறது,இவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,சிறார்களுக்குமாக ஏராளமான சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள்,நகைச்சுவைத் துணுக்குள் எனப் பெரு எண்ணிக்கையில் பதிப்பித்துத்தள்ளிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதுமல்லாது பெரும் கூட்டங்களையும் கூட்டி அவர்களே கலந்துரையாடல்களைச் செய்கிறார்கள்.இவை அனைத்தினதும் சுலோகம்:"நேட்டோவானது ஜோர்ச்சிய மக்களுக்குச் சமதானத்தையும்,மகிழச்சியையும் கூட்டிவரும்"என்பதே!



நேட்டாவானது மீளவும் ஜோர்ச்சியாவை ஆயுதமயப்படுத்துகிறது.இதன்பொருட்டு அரசினால் நல்வாழ்வுக்காகப் பணங்களைச் சேமிக்கமுடியாது.மேலும் இத்தகைய நடாத்தையின்படி மீளவும் இருஷ்சியாவுக்குத் தொந்தரவு கொடுப்பதைப்பற்றி மக்கள் உணர்ந்துள்ளார்களா?மொஸ்கோ இத்தகைய சூழ்ச்சியில் வீழ்ந்துவிடுமென எண்ணுவது மிகக் கடினமானது.


இருஷ்சியப்படையெடுப்பால் சிதறடிக்கப்பட்டுளுள்ள ஜோர்ச்சியப்படையணியை அமெரிக்காவானது முதற்கட்டமாகப் புனரமைத்துவருகிறது,இது நெருப்போடு விளையாடும் ஒரு நடவடிக்கை.சாகஸ்வில்லியும் அவரது நண்பர்களும் அமெரிக்காவோடிணைந்து விளையாடுகிறார்கள்.இருஷ்சியாவோ குறிகிய யுத்தக்காலத்திலிருந்து மிகத் தெளிவாகச் சொல்லிவருகிறது,ஜோர்ச்சியாவுக்கான இராணுவ உதவிகளையும்,யுத்த ஊக்குவிப்பையும் அமெரிக்காவே செய்துவருவதாக.எனவே, ஜோர்ச்சிய மக்கள் முற்றுமுழுதாக எந்த அபாயத்துள் நாம் இருப்பதென்பதை உணர்வார்கள்.



நீங்கள் ஜோர்ச்சியாவின் சமாதானத்துகான இயகத்தின் அங்கத்தவர்.இதன் பொருத்தப்பாடு உண்மையில் என்னவானது?மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உங்களால் முடியுமா?


சமாதானத்துக்கான எமதிந்த அமைப்பானது இன்னும் பழமையானது அல்ல.இரண்டோ அல்லது மூன்றோ ஆண்டுகளே நாம் மிகவும் துடிப்போடு செயற்பட்டோம்.நாங்கள் அனைத்துக்கும் முன்பாக ஒரு செயற்பாட்டை முன்னிலைப்படுத்தினோம்.அதாவது,இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியன் மக்களோடு மீளவும் நட்பினைக்கட்டி வளர்ப்பது அவசியமெனச் சுட்டிச் செயற்பட்டோம்.ஜோர்ச்சியாவின் பிராந்தியங்களின் ஐக்கியத்தை இராணுவத் தீர்வின்மூலம் ஏற்படுத்துவதை நாம் தொடர்ந்து பிழையானதெனச் சொல்லியே வருகிறோம்.எங்கள் விவாதத்துத்தகான பிரதிவினைகள் இன்றுவரை முற்று முழுதாகத் தைரியமூட்டுபவை.


இதனூடாகத் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியவோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் விருத்திக்கிட்டுச் செல்வதை மிகவும் முயற்சிசெய்கிறோம்.நாங்கள் புலம் பெயர்ந்த அகதிகளுக்கும் அவர்களது முன்னைய தெரிந்தவர்கள்,அயலவர்களுக்குமிடையிலான நட்பார்ந்த தொடர்பை-புரிந்துணர்வை மேலும் வளர்ப்பதற்காக அவர்கள் மத்தியில் உதவிகளைச் செய்து, இவைகளை மேலும் விருத்திக்கிட்டு வருகிறோம்.இத்தோடு,எமக்கு இன்னுமொரு முக்கியமான வேலைப்பணி மிக அவசியமானது.அதாவது,கௌகசுஸ்சின் அரசியல் சூழலை ஆராய்தல்.இங்கே,கவலையளிக்கத்தக்க விடயம் என்னவெனில்,நமக்கக் கிடைக்கக்கூடிய தகவல் அனைத்தும் ஒருபக்கச்சார்பானவை.ஒன்று அமெரிக்காவினது பக்கச்சார்பானது அல்லது இருஷ்சியாவினது பக்கஞ்சார்ந்தது.எமக்குத் தேவை இந்தச் சூழலின் புறநிலையானவொரு உண்மைப் படமே.



ஜோர்ச்சியாவின் அரசு உங்கள் நடவடிக்கைகள் குறித்து எங்ஙனம் பதில்வினையாற்றுகிறது?


இது அளவுக்கதிமாகவே நடந்தேறுகிறது.நான் இவை குறித்துச் சொல்வதென்றால்,எங்களது இந்த அரசியல் சூழலானது ஜனநாயத்தோடு சம்பந்தப்பட்டது.இருஷ்சியாவோடான மற்றும் அப்சாசியன்,தென் ஒசாத்தியாவுடனான மீள் நட்புறுவு வளர்பதன்ற குரல்கள் யாவும் உடனடியாகவே நசுக்கப்படுக்கின்றன.இவ்வண்ணமே நேட்டோவோடான கூட்டணி அமைப்பதற்கு எதிரான மக்களின் குரல்களுக்கும் அடக்குமுறைகள் நடந்தேறுகின்றன.



அங்கு எப்படியான உறுதிப்பாடுள்ளது? ஏதாவது பழிக்குப்பழி நடவடிக்கையுண்டா?



முதலாவதாகச் சொன்னால் நோட்டோவின் மிகக் காட்டாமான பிரச்சாரத்தைச் சொல்வேன்.இரண்டாவதாச் சமாதானத்துக்கான அமைப்பின் செயற்பாட்டாளர்களின் வெளிப்படையான கஷ்டம்.கைதுகள்,ஜோர்ச்சிய அரசின் புலாய்வுத்துறையினதும் அவர்களது முகவர்களதும் அச்சுறுத்தும் தொலைபேசியழைப்புகள்,வீதியோரத்தில் நின்று தரும் அபாயகரமான சூழல்களால் செயற்பாட்டை முடக்க முனைதல்.உள்நாட்டமைச்சகத்தின்கீழ் இயங்கும் உளவுப்படையினால் நமது உறுப்பினர் கைது செய்யப்பட்டு ஆறு மணி நேரம் தடுத்துவைத்து அவமானப்படுத்தப்பட்டும்,ஏசியும் பின்பு,நான்கு உளவுப்படை உறுப்பினர்களினால் நகைப்புடைக்கப்பட்டுள்ளார். இன்றுவரை இதுவொரு ஈனத்தனமான செயல்.இத்தகையதோடு மேலும் சொன்னால், அனைத்துச் செய்திகளையும் தடுத்துவிடுவது,இவை அரசின் உத்தியோபூர்வமான பரப்புரைகளைக் கேள்விக்குட்படுத்தினால் அல்லது நேட்டோவோடு இணைவது பற்றிய விவாதங்களை வெளிப்படுத்தினால்.அத்தோடு நேட்டோவை எதிர்த்துக் கருத்தாடுபவர்களின் எத்தக்கருத்தும் வார்த்தையில் வரவாய்ப்பேயில்லை.பத்திரிகை ஆசிரியர்களின் முடிவின்பின்னேதாம் இவை வரமுடியும்.அப்படி வந்தாலும் பத்திரிகைக் கடைகளிலோ அல்லது பெட்டிக்கடைகளிலோ இவற்றை வைத்து விற்பதற்குத் தயங்குவார்கள்.இவைகள் அரச காரியாலங்களைக் குறித்துக் கருத்து வெளிப்படுத்துவதால் அவர்களால் விற்க முடிவதில்லை.



குறைந்தபட்சமாவது இணையத்தின்வாயிலாகவாவது இச் செய்திகளை உங்களால் வெளிப்படுத்த முடியாதா?


அடைப்படை ரீதியாக ஆம் எனலாம்.எனினும்,அது மிகக் குழப்பகரமாகிக்கிடக்கிறது.நாங்கள் அந்த நோக்கில் முனைகிறோம்,ஒரு சில இணையத் தளங்களை உருவாக்கிக்கொள்ள.ஆனாலும்,இத்தகையதைக் கடைப்பிடிப்பதென்றால் அரசியல் சூழலில் மாற்றங்கண்டாகவேண்டும்.சாகஸ்வில்லியின் அரசு மக்களைத் தொடர்ந்து அடக்கியாள்வதென்பது தொடர்ந்து நடக்கக்கூடிய காரியமில்லையென்றே நாம் கருதுகிறோம்.



சாகஸ்வில்லியை எத்தகைய குணவியில்புக்குள் அடக்குகிறீர்கள்?,தீர்க்கதரிசனமிக்க அரச தலைவர்?அல்லது சூதாட்டக்காரன்?


பொறுப்புணர்வற்ற ஒரு சாகசக்காரன்.அவர் ஒரு வெற்று வேட்டு.மற்றவர் முன் தன்னைச்சுற்றிய அழுத்தத்தைச் செய்யத் தாவித்திரியும் மனிதர்.நான் நினைக்கிறேன் இவரது செயற்பாடுகள் குறித்து இவர் அடிப்படையில் சிந்தித்துக்கொள்வதில்லை என்று.நிச்சியமாக அவர் செய்யவேண்டிய கடமைகள்குறித்து அவருக்குத் தெரியும்.முற்றுமுழுதாக நியாயமான முடிவெடுக்கும் தளம்-சூழல் அவருக்கு நிறையவே உண்டு.ஆனால்,அவரிடமிருந்து வருவதோ அநீதியான முடிவுகளே, இது கவலைக்குரியது.இத்தோடு அமெரிக்க வெளிநாட்டமைச்சர் கொண்டிலீசா றைஸ் கூட இந்த மனிதரை எச்சரிகை செய்துள்ளார்-தென் ஒசாத்தியாமீதான இராணுவப்படையெடுப்புக்குறித்து-ஆனால், இவை எல்லாம் அவரைப் பாதிக்காது.



சாகஸ்வில்லி தனது தொலைக்காட்சி உரையை ஆங்கிலத்திலேயே செய்வதாகக் கதை உலாவுகிறது...


அது உண்மையில் ஒரு சிரிப்புக்கதை,அவரிடம் இதுகுறித்தொரு அடிப்படைக் கருத்திருக்கிறது.எனவே,அப்படிப் பேசுவதில்லை.அவர் இத்தகைய உரைகளை ஜோர்ச்சிய மொழிமூலமே ஆற்றுவதுண்டு.


அதுசரி.அவரும் நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழ்ந்தவர்.அத்தோடு அமெரிக்கக் குடியுரிமைபெற்று,அமெரிகக்கடவுச்சீட்டோடு அமெரிக்கக் குடிமகனாகவுள்ளார்.அவரது அமைச்சரவையிலுள்ள மொத்தம் ஏழு மந்திரிகளும் வெளிநாட்டுக்கடவுச் சீட்டுவைத்திருக்கிறார்கள்.


இது குறித்து எனக்குத் தெரியாது.ஆனால் எங்கள் மந்திரிகள் எல்லோரும் பெருந்தொகையான செல்வத்தை வெளி நாடுகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்.இதுகூட உண்மை, எங்கள் மந்திரிகள் எல்லோரும் இந்த ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்தம் நடைபெற்றபொழுதுகளில் வெளிநாடுகள் நோக்சிச் சென்றார்கள் அல்லது ஜோர்ச்சிய எல்லைப் புறங்களில் நேரடியாகத் தங்கி இருந்தார்கள்.இது நிச்சியமாகத் தற் செயல்தான்!




விளாடிமேர் பூட்டினையும்,இட்மிற்றி மெட்வேடையையும் எந்தக் குணவியல்புக்குள் அடக்குகிறீர்கள்,இருஷ்சியாவின் பிரதமராகவும்,ஜனாதிபதியாகவும்?



இருவருமே பொறுமையான(ஐஸ்ப் போன்ற குளிர்மையுடைய) சதுரங்க ஆட்டக்காரர்கள்.இவர்கள் ஜெல்சின் படையணியின் வாரீசுகள்.இருஷ்சியாவில் ஒல்காரிய பூர்ச்சுவாக்களின் பிரதிநிதிகள்.இவர்களின் சர்வதேச உறவுகள்,தொடர்புகள் யாவும் கோடிஸ்வரர்களின் கண்கொண்டு பார்ப்பதே.ஒல்காரியக் கோடிஸ்வரர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இவர்களது முதற்கடமை.இரண்டாவதுதான் சாதரண இருஷ்சிய மக்களது நலன்கள் பற்றிய கவனமெல்லாம்.இந்த வகைப்பார்வை இவர்களால் செய்யப்பட்ட ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்த முரண்பாட்டுக்கும் பொருந்தும்.



ஜேர்மனிய ஊடகமொன்றிற்கு ஜோர்ச்சிய அரசை விமர்சித்துப் பேட்டியளித்ததற்காக, நீங்கள் உங்களது தேசத்துக்கு மீளச் செல்லும்போது அந்த அரசின் புலனாய்வுத்துறையினால் உங்குளுக்குப் பிரச்சனைகள்-எதிர்வினைகள் வருவதைக் குறித்துக் கணிப்பிடவில்லையா?




இது முற்றுமுழுதாக நடக்கலாம்.இதன் காரணத்திலேயேதான் நான் அநாமதேயமாக இந்தப் பேட்டியைத் தர விரும்பினேன்.


Peter Wolter :http://www.jungewelt.de/2008/09-27/002.php



தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்
05.10.2008




P/S: டொச் மூலம்:





»Wir leben in Georgien unter einer totalen Propaganda«


Gespräch mit Lasha Shavdia. Über einen Abenteurer an der Spitze des Staates und über eiskalte Schachspieler in Moskau. Und über die Notwendigkeit, zu Rußland wieder freundschaftliche Beziehungen herzustellen
Peter Wolter



Lasha Shavdia ist ein führender Aktivist der georgischen Friedensbewegung. Er hat ein Pseudonym gewählt, da er nach seiner Rückkehr Repressalien fürchtet, falls der georgische Geheimdienst seine Identität herausfindet. Aus diesem Grunde veröffentlichen wir von unserem Gesprächspartner kein Foto.



Nach dem Kaukasus-Krieg haben die Medien im Westen meist für Georgien Partei ergriffen, sie präsentieren das Land als Opfer russischer Großmachtspolitik. Wie stellt sich die Sachlage für Sie als führender Aktivist der georgischen Friedensbewegung dar?


Es ist durchaus richtig, daß Georgien Opfer russischer Expansionspolitik ist. Es ist aber noch richtiger, wenn wir es so formulieren: Georgien ist zum Opfer der Konfrontation der großen imperialistischen Mächte geworden. Auf der einen Seite stehen die USA, die die NATO an ihrer Seite weiß, auf der anderen steht Rußland.


In Deutschland wird der Eindruck erweckt, fast alle Georgier scharten sich jetzt hinter Präsident Michail Saakaschwili, von einer Opposition liest man nur selten etwas. Gibt es in Ihrem Land eine ernst zu nehmende Gegenkraft?


Saakaschwili hat keineswegs die Mehrheit der Bevölkerung hinter sich. Ich gebe zu, daß er zu Beginn seiner Amtszeit durchaus breiten Zuspruch hatte, weil er den Kampf gegen die Korruption aufnahm. Das ist aber längst Vergangenheit – die schlimmste Häufung von Korruption findet sich heute ausgerechnet in seiner eigenen Regierung. Seine Minister kontrollieren über Strohmänner so gut wie alle großen Unternehmen, die Einfluß in Georgien haben.



Die Minister nutzen also ihr Amt, um in die eigene Tasche zu wirtschaften?


So ist es. Das ist aber auch nicht neu in meinem Land. Unter der Regierung von Eduard Schewardnadse wurden diese Firmen auch schon von dessen Ministern kontrolliert – seitdem Saakaschwili an der Macht ist, sind zur Abwechslung mal seine Leute am Zuge.


Wird darüber in der Öffentlichkeit diskutiert?


Jeder weiß davon. Auch wenn die georgischen Medien über die allgegenwärtige Korruption schweigen – es wird überall darüber diskutiert.


Gibt es in Georgien eigentlich unabhängige Medien?


Es gibt durchaus einige Zeitungen und Zeitschriften, die Saakaschwili recht offen kritisieren. Aber alle Radio- und TV-Stationen sind auf Regierungslinie, bis auf den Fernsehsender Kafkasya. Der hat allerdings nur eine sehr geringe Reichweite, man kann ihn eigentlich nur in der Hauptstadt Tbilissi empfangen. Vor dem Krieg gab es noch Fernsender, die in russischer Sprache ausstrahlten – bis auf einen, der in Rußland als Oppositionssender gilt, wurden alle abgeschaltet. Seit dem Krieg werden auch alle russischsprachigen Internetseiten blockiert.


Aus russischer Sicht wurde der Krieg durch einen Angriff Georgiens auf Südossetien ausgelöst. Saakaschwili hingegen sagt, seine Truppen hätten lediglich auf russische Provokationen reagiert. Wer hat denn aus Ihrer Sicht den Anfang gemacht?


Beide Seiten wußten, daß es irgendwann zu einer Konfrontation kommen wurde, beide waren auch darauf vorbereitet. Deshalb hat auch Rußland zu dieser Tragödie beigetragen. Den größten Teil der Verantwortung tragen aber Saakaschwili und seine Regierung – der Einmarsch der georgischen Truppen war schließlich der Auslöser des Krieges.


Georgien hat den Krieg verloren – wie ist jetzt die Stimmung in der Bevölkerung gegenüber Rußland? Gibt es Verständnis für die strategischen Sorgen der Führung in Moskau, die offenbar verhindern will, daß die NATO unmittelbar vor ihrer Haustür neue Stützpunkte einrichtet?


Die Stimmung ist differenziert. Zum einen wissen die meisten Georgier sehr genau, daß es bei uns ohne Rußland und ohne die wirtschaftlichen Beziehungen zur russischen Industrie keinen wirtschaftlichen Aufschwung geben wird. Die Bevölkerung weiß auch, daß die ethnischen Konflikte, die seit den 90er Jahren so heftig aufgeflammt sind, nur dadurch gelöst werden können, daß die Freundschaft zu Rußland wiederhergestellt wird. Es ist verständlicherweise jedoch sehr schwer, diejenigen Georgier davon zu überzeugen, die aus Südossetien und Abchasien vertrieben wurden. Jeder weiß auch, daß Rußland schon seit langem in diesen beiden Territorien diejenigen unterstützt, die eine Abtrennung von Georgien wollen. Das Ergebnis ist, daß aus diesen Territorien 160000 Menschen geflüchtet sind, von denen allerdings einige schon wieder zurückgekehrt sind.
Freundschaft ist eben mehr als nur eine politische Losung, man muß sich auch entsprechend verhalten. Das gilt natürlich für beide Seiten. Und die Freundschaft wird nicht gerade dadurch gefördert, daß Georgien Mitglied der NATO werden und Stützpunkte des Bündnisses auf seinem Territorium einrichten will. Aber unsere Bevölkerung versteht es nicht, daß Rußland offensichtlich keine andere Möglichkeit gesehen hat, als diese Konflikte militärisch zu lösen.


Welche Alternativen hätte es denn gegeben?


Der richtige Zeitpunkt dafür wurde leider verpaßt. Nach dem Zerfall der UdSSR, Anfang der 90er Jahre also, bekam Georgien eine nationalistische Regierung, die das Land sofort in Richtung NATO lenken wollte. Und die russische Regierung unter Präsident Boris Jelzin hatte überhaupt kein Konzept, welche Politik sie im Kaukasus betreiben sollte. 1999 hat Jelzin z. B. in Istanbul ein Abkommen zur konventionellen Abrüstung in Europa unterzeichnet. Eine Folge war, daß anschließend der größte Teil der noch in Georgien stationierten russischen Streitkräfte abgezogen wurde. Die letzten Einheiten verließen unser Land erst im vergangenen Jahr. Und dieses Jahr sind die Russen wieder einmarschiert.



Für Abchasien und Südossetien gab es ein Friedensabkommen, dem auch Georgien zugestimmt hat. Demnach durfte Rußland dort Friedenstruppen stationieren.


Das ist richtig, es gab dort aber auch reguläre Einheiten der russischen Armee, die nicht unter das Friedensabkommen fielen. Dort wurden auch abchasische und südossetische Truppen durch russische Instrukteure ausgebildet. Ähnlich wie in Georgien selbst, wo viele Militärausbilder aus den USA eingesetzt wurden, und zwar auf Basis des NATO-Programms »Partnership for Peace«.


Es ist offenkundig Strategie der NATO, immer dichter an die Grenzen Rußlands heranzurücken – das hat man im Baltikum gesehen, in Polen, in Bulgarien und jetzt auch in Georgien. Wie reagiert die Bevölkerung darauf? Gibt es Sympathie für die NATO?


Die Bevölkerung reagiert eher negativ darauf, sie weiß genau, daß die Präsenz der NATO auf unserem Territorium brandgefährlich wäre. Die meisten fürchten, daß der soeben verlorene Krieg möglicherweise nicht die letzte Tragödie war. Georgien könnte zu einer Arena für weitere militärische Konflikte werden. Den meisten ist es auch durchaus bewußt, daß die Wiederherstellung der freundschaftlichen Beziehungen zu Rußland in weite Ferne rückt, sobald die NATO sich bei uns eingenistet hat. Und eines dürfen wir auch nicht vergessen: Etwa 1,8 Millionen Georgier leben zur Zeit in Rußland. Sie arbeiten dort und überweisen viel Geld zur Unterstützung ihrer Familien. Das ist ein wichtiger wirtschaftlicher Faktor für uns.


Die NATO hat auch ihre Hand nach der Ukraine ausgestreckt – dort sprechen sich jedoch laut Umfragen über 60 Prozent der Bevölkerung gegen einen Beitritt zum Bündnis aus. Gibt es solche Erhebungen auch für Georgien?


Am 5. Januar hatten wir Präsidentschaftswahlen, parallel dazu wurde den Wählern auch die Frage gestellt, ob sie für einen Beitritt zur NATO sind. Die zentrale Wahlkommission gab anschließend bekannt, 79 Prozent hätten diese Frage mit Ja beantwortet. Wir wissen aber genau, daß sowohl das Ergebnis der Präsidentschaftswahl als auch das dieses Referendums gefälscht war. Die Zahl ist mit Sicherheit zu hoch. Ich schätze mal, daß jeder zweite gegen einen Beitritt ist – und das unter den Bedingungen einer totalen Propaganda, die jeden Winkel unseres Landes erfaßt.
Leider ist es jetzt so, daß der Einmarsch russischer Truppen genau dieser NATO-Propaganda in die Hände spielt. Die USA stellen sich nun als Beschützer und großen Freund Georgiens dar, als Garant für die territoriale Integrität meines Landes. Das führt dazu, daß sogar die Zeitungen und Zeitschriften, die als regierungskritisch gelten, den NATO-Beitritt befürworten.

Hinzu kommt eine massive Propaganda der NATO selbst, die hierfür sogar eigene Strukturen geschaffen hat. Da gibt es zum einen das Informationszentrum der NATO in der Hauptstadt Tiblissi. Dann gibt es zwei NATO-Niederlassungen im Osten und im Westen Georgiens. Diese Propagandabüros verfügen über Geld ohne Ende, sie produzieren Zeitschriften, Informationsbroschüren, Comic-Hefte für Kinder, Material für Schulen, sie organisieren Veranstaltungen. Alles nach dem Motto: »Die NATO bringt Frieden und Glück für das gesamte georgische Volk«.


Die NATO will Georgien wieder aufrüsten – an Geld soll wohl nicht gespart werden. Ist der Bevölkerung bewußt, daß damit Rußland erneut gereizt wird? Es ist schwer vorstellbar, daß sich Moskau das gefallen lassen wird.


Die USA haben schon erste Schritte unternommen, um die militärische Infrastruktur zu ersetzen, die die Russen zerstört haben. Es ist in der Tat ein Spiel mit dem Feuer, das Saakaschwili und seine Freunde in den USA betreiben. Rußland hat seit dem kürzlichen Krieg immer wieder deutlich gemacht, daß die militärische Unterstützung Georgiens durch die USA unterbunden werden muß. Den meisten Georgiern ist durchaus bewußt, in welcher Gefahr wir sind.


Sie gehören zur Friedensbewegung Ihres Landes. Wie relevant ist die eigentlich? Können Sie sich in der Bevölkerung Gehör verschaffen?


Unsere Friedensbewegung ist noch nicht sehr alt, wir sind eigentlich erst seit zwei, drei Jahren richtig aktiv. Wir haben vor allen Dingen versucht, unter den Flüchtlingen dafür zu werben, daß sie wieder Freundschaft mit der südossetischen und abchasischen Bevölkerung schließen. Wir betonen auch immer wieder, daß der Versuch, die territoriale Integrität Georgiens auf militärischem Wege herzustellen, ein großer Fehler war. Die Reaktionen auf unsere Argumente waren bisher durchaus ermutigend.
Darüber hinaus bemühen wir uns, gute Kontakte zu den Südosseten und Abchasiern zu entwickeln. Wir helfen auch dabei, wieder friedliche und auch freundschaftliche Beziehungen zwischen den Flüchtlingen und ihren früheren Nachbarn und Bekannten zu entwickeln. Ein weiteres wichtiges Arbeitsfeld ist für uns, die politische Situation im Kaukasus zu analysieren. Bedauerlicherweise sind die meisten Informationen, die uns zur Verfügung stehen, sehr einseitig: Entweder proamerikanisch oder prorussisch. Wir wollen aber ein objektives Bild der Lage.


Wie reagiert die georgische Regierung auf Sie?


Es wäre maßlos übertrieben, wenn ich sagen würde, daß die politische Atmosphäre bei uns etwas mit Demokratie zu tun hätte. Jede Stimme wird sofort unterdrückt, die für die Wiederherstellung freundschaftlicher Beziehungen zu Rußland, zu Abchasien oder Südossetien wirbt. Das gleiche gilt für alle Äußerungen gegen den Beitritt Georgiens zur NATO.

Wie sieht das konkret aus? Gibt es Repressalien?


An erster Stelle würde ich die massive NATO-Propaganda nennen. Zweitens werden Aktivisten der Friedensbewegung offen drangsaliert. Es gibt Festnahmen, unsere Leute bekommen Drohanrufe vom georgischen Geheimdienst oder werden von dessen Agenten auf der Straße angemacht, eingeschüchtert und bedroht. Einer unserer Mitarbeiter wurde vor wenigen Tagen verhaftet, und zwar von der Spionageabwehr, die dem Innenministerium untersteht. Er wurde sechs Stunden lang festgehalten, beschimpft und angepöbelt. Und schließlich wurde er von vier Geheimdienstleuten verprügelt. Das war bisher der krasseste Fall.
Darüber hinaus wird versucht, alle Informationen zu blockieren, die der offiziellen Propaganda widersprechen oder dazu aufrufen, wieder freundschaftliche Beziehungen zu Rußland aufzunehmen, oder Argumente gegen den NATO-Beitritt bringen. NATO-Gegner kommen weder in Zeitungen und Zeitschriften noch in den elektronischen Medien zu Wort, offenbar gibt es unter den Redaktionen feste Absprachen. Hin und wieder drucken wir auch Informationsmaterial. Damit kommen wir aber auch nicht sehr weit, denn Zeitungskioske weigern sich meistens, sie auszulegen. Wenn sie es doch tun, wird das Material von den Behörden konfisziert.


Können Sie sich wenigstens über Internet artikulieren?


Im Prinzip ja, es ist aber viel komplizierter geworden. Wir sind zwar dabei, eine eigene Homepage einzurichten, die wird sich aber wohl nur halten lassen, wenn sich die politische Situation geändert hat. Wir hoffen, daß das nicht mehr lange dauert, denn die Regierung von Saakaschwili kann die Bevölkerung nicht ewig diesem Druck aussetzen.


Wie würden Sie Saakaschwili charakterisieren? Charismatischer Staatsmann? Vabanquespieler?


Ein verantwortungsloser Abenteurer. Er ist eitel, will Eindruck schinden, er ist sprunghaft. Ich glaube nicht, daß er seine Entscheidungen gründlich bedenkt. Natürlich gibt es auch für ihn gewisse Sachzwänge – er hätte aber durchaus genügend Spielraum für vernünftige Entscheidungen. Leider kommt aber meist Unvernünftiges dabei heraus. Sogar US-Außenministerin Condoleezza Rice soll ihn gewarnt haben, militärisch gegen Südossetien vorzugehen – aber nicht einmal das hat ihn beeindruckt.


Es wird erzählt, er halte seine Fernsehansprachen auf englisch ...


Das ist natürlich ein Witz, der sicher eine gewisse Grundlage hat. Nein, er spricht bei solchen Gelegenheiten georgisch.


Er hat ja lange in den USA gelebt. Es wird berichtet, er sei auch amerikanischer Staatsbürger. Insgesamt sieben Minister seiner Regierung sollen ausländische Pässe haben.


Davon weiß ich nichts. Allerdings haben unsere Minister ein nicht unbeträchtliches Vermögen im Ausland. Tatsache ist auch, daß während des georgisch-russischen Krieges eben diese Minister entweder auf dem Weg ins Ausland waren oder sich in unmittelbarer Nähe von Grenzübergängen aufhielten. Rein zufällig natürlich!



Wie würden Sie Wladimir Putin und Dmitri Medwedjew charakterisieren, den Regierungschef und den Präsidenten Rußlands?


Beide sind eiskalte Schachspieler. Sie sind die Erben des Jelzin-Regimes, Repräsentanten der oligarchischen Bourgeoisie Rußlands. Sie sehen ihr Land und die internationalen Beziehungen mit den Augen von Milliardären, verteidigen also in erster Linie die Interessen der Oligarchie. Erst an zweiter Stelle kommt für sie das Interesse des einfachen Volkes – diese Einschätzung gilt auch für ihre Kriegsführung im georgisch-russischen Konflikt.



Müssen Sie nicht mit Repressalien rechnen, wenn Sie zurückkommen und der georgische Geheimdienst findet heraus, daß Sie in der deutschen Presse die Politik Ihrer Regierung kritisiert haben?



Das ist durchaus möglich, deswegen möchte ich auch lieber anonym bleiben.

http://www.jungewelt.de/2008/09-27/002.php

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...