Wednesday, April 30, 2008

இலங்கையில் யுத்தம்:அறுவடையாகும் இந்திய-உலக நலன்கள்.

"எலிக்கறி உண்பவன் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம்
கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!"

உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.யுத்தம் தவிர்கப்படவேண்டும்.ஆளும் சிங்கள அரசின் மிலேச்சத்தனமான கொலைகள் நம்மை நடுங்க வைப்பவை.அதுபோலவே இயக்க அரஜகங்களும்.நமது தாயகத்தில் சுதந்திரமான-யுத்தமேயற்ற சூழலில்-அடிமைவிலங்கொடித்த வாழ்வைத் துய்க்க மனம் அவாவுற்றபடியே வாழ்வு நகர்கிறது!எமது மக்களின் அவலமானது வெறும் அரைவேக்காட்டுத் தனமான குறுந் தேசிய வெறியாகவும் அதுவே அரஜகமாகவும் மாறமுடியாது!ஆனால்,இதுவரையான அனைத்து நகர்வுகளும் எமது மக்களுக்கெதிரானதாகவே நடந்து முடிகிறது.எங்கும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வடக்கென்ன கிழக்கென்ன-அனைத்து மக்களும் அராஜ-இயக்கப் பயங்கரவாதத்துக்குள் தமது அடிப்படை உரிமைகளை மெல்ல இழந்து வருகிறார்கள்-குடும்ப ஆட்சிகள் நாட்டின் ஜனநாயகச் சூழலையே இல்லாதாக்கி வருகின்றது!இன்றைய கிழக்கு மாகாண அரசியற் சூழலில் புதிய புதிய அணித்திரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கை ஜனாதிபதியின் ஈரான் ஜனதிபதிக்கான வரவேற்புரை கச்சிதமாகச் செயற்படுகிறது.புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியரை புத்தளத்தில் அம்போவென்ற கைவிட்ட இலங்கை அரசுகள் இப்போது அவர்களுக்காகக நீலிக் கண்ணீரோடு ஈரான் ஜனாதிபதிக்கு முறையிடுகின்றன. முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியாவோ ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக் காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.

முகமாலையில் நடந்த யுத்தம்வரை எமது குழந்தைகள் எம் விடிவிற்காய் தாம் மரிப்பதாக நம்பிக் கொண்டே "ஐயோ அம்மா"என்றபடி கத்திக்கொண்டு வெடித்துச் சிதறினார்கள்.அந்த நம்பிக்கை நிசமாகவேண்டுமானால் நாம் இலங்கை வாழ் சகல இனங்களுடனும் ஐக்கியப் பட்ட தோழமையைக் கட்டியொழுப்பி முழு இலங்கைக்குமான புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதே சரியானது.இதைவிட்ட அரசிலானது களத்திலுள்ள போராளிகளின் மனநிலையை அறிந்துகொள்ளப் பேட்டியெடுக்கிறது.இது முற்றிலுமானவொரு புரட்சிகரமான இராணுவத்துக்குப் பொருந்தாது.ஆனால்,இன்றைய புலிப் போராளிகளுக்கு இது பொருந்தவே செய்கிறது!புரட்சிகரமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலை தமிழ் பேசும் மக்களினமீது ஆதிக்கஞ் செய்யும் அமைப்பாண்மை இடங்கொடுக்காதபோதும் முற்போக்குச் சக்திகளின் சாத்தியமான சிலவெற்றிகளின் உலகச் சூழ்நிலையால் தாம் யுத்தம் எதிர்ப்புக்குள்ளாகிறது.இந்த யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டேயாகவேண்டும்.யுத்தத்தால் அழிவுறும் இளைய தலைமுறை தமிழ் பேசும் மக்களின் இருப்பையே அசைக்குமொரு வெற்றிடத்தைத் தந்துகொண்டேயிருக்கிறது.

புலியிலிருந்து பிரிந்த கருணா-பிள்ளையான் துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது கிழக்கிலங்கையில் தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் மக்களை இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்த நோக்கமானது,புலிகளின் இன்றைய இருப்புக்கான போராட்டச் சூழலில் புலிகளைப் பலவீனப்படுத்துவதும்,அவர்களிடம் முழு அதிகாரமும் போய்ச்சேருவதைத் தடுத்துத் தமது கைகளுக்குள்ளும் சிலவற்றைப் பங்குபோடவெடுக்கும் நோக்கமும்,கூடவே தமது இருத்தலை ஆபத்தாக்காத-உயிருக்கு உத்தரவாதம்கோரும் தந்திரத்தோடு கிழக்கு மக்களையணுகிறார்கள்.

இவர்களேயிப்போது நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை இலங்கைக்குள் ஏலவே உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய தலைமைத்துவத்தை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த ஆட்சியையும் இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆயுதம் வேண்டுவதற்கான குறைந்த வீத வட்டியுடனான கடனைக் கொடுக்க முனைகிறது.இது உண்மையில் இந்தியாவிடமிருந்துமட்டும் எழுந்த கருணையில்லை.மாறாக உலக ஆயுதக் கம்பனிகள் மற்றும் அவைகளின் அரசுகளின் அரசியலோடு எழுந்த திட்டமாகவே இனம் காணத்தக்கது.தொடர்ச்சியான இலங்கை யுத்தத்தால் ஆதாயமடைய முனையும் உலக நலன்களுக்காக நமது மக்கள்-சிறார்கள் செத்தேயாகவேண்டியுள்ளது.தொடர்ச்சியான ஆயுத வழங்கல்கள் தங்கு தடையற்ற சிறார் இராணுவச் சேர்க்கையைச் செய்தே தீரும்.இத்தகைய தருணத்தில் உலகம் சிறார்களுக்காகக் கண்ணீர் வடித்தென்ன காலில் விழுந்தென்ன? எல்லாம் பொது இலாப வேட்கையின் வெவ்வேறு நாடகங்கள்.


இந்தவகை அரசியலுள் அப்பாவி மக்கள் அழியும் யுத்தம் தொடர்கிறதே-இதைத் தடுத்து நிறுத்த முடியாதா?ஈழம் என்பதன் முடிந்த முடிவான தீர்வுக்கு பேச்சு வார்த்தையென்பது சாத்தியமில்லை.எனினும்,புலிகளின் நடேசன்களும் மற்றும்,கோபால்சாமிகளும் கருணாநிதிகளும் பேச்சு வார்தையை நோக்கி அரசியல் செய்வதும்,அதன் தொடர்ச்சியான கருத்தாடல்களும் எதற்கானது?


உண்மையில் நமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!

இதை எங்ஙனம் தடுப்பது?

தற்போதைக்காகவேனும் இருதருப்பும்(புலி-சிங்கள அரசு) ஆத்ம சுத்தியோடுகூடிய ஜனநாயக அரசியற்சூழலை ஏற்படுத்த வேண்டும்.அது மக்களின் நலனையே மையப்படுத்தி உருவாகவேண்டும்.ஒருபோதும் பெரும்பான்மையின ஆதிக்கத்தைத் திணிக்காத-சிறுபான்மையினங்களையொடுக்கவொண்ணாத-முற்போக்கு அரசியலாக இருக்கவேண்டும்!இதற்காக யுத்தத்துக்கு எதிரானவொரு போராட்டத்தை மக்களே முன்வந்து செய்தாகவேண்டும்.இது சாத்தியமாகாத சூழலைத்தாம் உலக வல்லரசுகள் இலங்கையிற்தோற்றுவிக்கின்றன.குறிப்பாக இந்தியப் பிராந்திய வல்லரசு.இலங்கைக்கான நிதி உதவிகள் இலங்கை மக்களின் யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்பாக இருக்கவேண்டுமேயொழிய ஆயுதத் தளவாடங்கள் வேண்டுவதற்பான நிதி உதவியாக இருக்க முடியாது.

இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது இன்றைய இலங்கையினதும் புலிகளினதும் மற்றும் குழுக்களினதும் யுத்தங்கள்-கோரிக்கைகள் அரசியல் சூதாட்டங்கள் யாவும் மக்களினது மீட்சிக்கானதோ அல்லது மக்களால் முன்வைக்கப்பட்ட விருப்புகளோ அல்ல. தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின்-அரசுகளின் நலனும் ஒன்றல்ல என்பதே.இயக்கங்களின்-குழுக்களின்-கட்சிகளின் நலன்கள் தவிர்க்க முடியாது மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன்கள் குறிப்பிட்ட அமைப்புக்களின் நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும், அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.இதனால் பாசிசச் சிங்கள அரசினது தமிழ் மக்கள்மீதான அழித்தொழிப்பு யுத்தத்தை நிலைப்படுத்துவதற்கானவொரு சரியான உந்துதலைப் புலிகளின் இருப்பே தீர்மானிக்கிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.இத்தகைய அரசியலை வைத்தே கோபால் சாமிபோன்றோர் இந்திய மத்திய அரசுக்குத் தூது விடுகிறார்கள்.கருணாநிதிகள் மத்திய அரசிடம் இலங்கைக்கான சமாதானத்தைக் கோருகிறார்கள்.இங்கேதான் சூத்திரதாரியின் உண்மை முகம் பளிச்செனத் தெரிகிறது.நோர்வேயில் நின்று நக்சலைட்டுக்களால் இந்தியாவுக்குப் பிரச்சனையெனக் கத்தும் கோபால்சாமிக்குப் புலிகளின் போராட்டம் விடுதலைக்கானதென்பதன் புரிதல் இருப்பது நியாயமானதுதான்!இனம் இனத்தோடு.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றதென்பது அவர்களது கால் நூற்றாண்டுப் போராட்டச் செல் நெறியிலிருந்து இனம் காணக்கூடியதே.இதனாற்றான் கோபால் சாமிகள் இந்திய மத்திய அரசிடம் நமது பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகிறார்கள்.புலிகளும் இந்தியாவோடு பேரம் பேசுவதற்கான நிபந்தனையற்ற "விட்டுக் கொடுப்புகளுக்கு"கோபால்சாமி வடிவில் தூது விடுகிறார்கள்.இதுவே புலிகளைப் பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது என்ற மிகக் கறாரான குற்றச் சாட்டுக்கு ஒப்புதல் மொழிவல்ல.எனினும்,புலிகளின் இன்றைய போராட்ட இலக்கு நமது மக்களுக்கு மீளவுமொரு பாரிய இழப்பைத் தந்துவிடப் போவதன் அறிகுறிகளைச் சொல்வதற்கானவொரு எடுகோள் மட்டுமே.


புலிகளால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.ஈழம் குறித்த கனவினது உடலுக்கு புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.இதுவே இன்றைய கிழக்கு மாகாண அரசியல் நகர்வுகளுக்குப் பாரிய ஒத்துழைப்பு நல்கிறது.இயல்புக்கு மாறான அணிச் சேர்க்கைகள் இங்கே நடைபெறவில்லை.அனைத்தும் இந்தப் போராட்ட முறைமைகளின் அறுவடையிலிருந்தே தோற்றம் பெறுகின்றன.புலிகள் அமைப்பு போட்ட குட்டிகளான கருணா-பிள்ளையான் தரப்புகளின் அணிச் சேர்க்கையானது புலிகளின் இயக்கத்துக்குள் உட்கட்சி ஜனநாயகமற்ற போக்குகளிலிருந்தே மையங்கொண்டது.இதையே இந்திய-உலக அரசியல் ஆர்வங்கள் தத்தமக்குச் சாதகமாக்கி வருகின்றன.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்சத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.


இலங்கை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வரும் உலக வல்லரசுகளின் அப்பட்டமான விருப்பை இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் உதவிகளுடாக அச்சொட்டாக இனம் காணமுடியும்.இத்தகைய இந்திய உதவிகளுக்கான மூலகாரணம் புலிகளின் புதிய வர்க்கத் தோற்றத்துடனேயே ஆரம்பமாகிறது.இன்றோ புலிகளின் மேல்மட்ட அமைப்பானது புதிய ஆளும் வர்க்கமாக மாறுகிறுது.அது தரகு முதலாளியமாகத் தன்னை உலகுக்கு இனம் காட்டுகிறது.உலகம் பூராகப் பரந்து வாழும் அகதித் தமிழ் மக்களிடம் வேண்டப்பட்ட யுத்தகால அவசர நிதிகள் மற்றும் மாதாந்த உதவிகள் பெரும் மூலதனமாகத் திரள்கிறது.இது ஏதோவொரு வடிவில் புதிய ஆதிகத்தைத் தமிழ் பேசும் மக்களிடம் ஆயுதப் போராட்டத்துக்கூடாகத் திணித்தே வந்துள்ளது-இதுவே,ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சேர்ப்புக்கான கட்டாய இராணுவப் பயற்சியை விடுதலையின் பெயரால் முன்நிறுத்தித் தமது படையணிகளுக்கான கட்டாய ஆட்பிடியைச் செய்து வருகிறது.அத்தகைய நிலையில் பெற்றோர்களின் விருப்பத்துக்குமாறான ஆட்சேர்ப்பு தத்தம் பிள்ளைகளைமீளத் தரும்படி வற்புறுத்துவதாக இருக்கும்போது,அத்தகைய சூழலில் பிள்ளைகளை மீளக் கையளிப்பதற்கான அபராதமாகப் பணம் முன்னிறுத்தப்படுகிறது.இதன் அடிப்படையில் கணிசமான தொகை திரட்டப்பட்ட பின்பே பிடிக்கப்பட்ட சிறுவர்கள் மீளப் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுகிறார்கள்.பணம் கட்ட முடியாதவர்களின் குழந்தைகள் இந்த யுத்தத்தில்"மாவீரர்கள்"என அழிந்து போகிறார்கள்.இது மிக ஆபத்தானவொரு மனித அவலத்தைத் தமிழ்பேசும் குடும்பங்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.தேசத்தின் விடுதலை என்ற பெயரினால் பட்ட துன்பங்கள் இப்போது மிகக் கொடுமையான மனித மனமுடக்கமாகி அவர்களது வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்தி வருவது மிக மோசமானதாகும்.இத்தகைய மக்களின் இருண்ட வாழ்வு இலங்கை அரசுக்கு மிகச் சாதகமான பக்கங்களை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தி வருகிறது.இன்றைய யுத்தம் இன்னும் ஆயிரக் கணக்காக உயிர்களைக் குடிக்கும்.எனினும்,புலிகள் சொல்லும் தமிழீழம் என்பது கானல் நீரே!


ப.வி.ஸ்ரீரங்கன்
30.04.2008

Tuesday, April 29, 2008

டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்

குத்தகைக்கு எடுக்கப்படும் யுத்தம்!


தேசத்தின் வடக்குத் தெற்கு இருமுனையிலும்
யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம்
ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம்
இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது
"யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில்
மறுபுறம்,
மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்!

எவருக்குத் தெரியும்
தாய்மையின் பிரசவ வலி?
சுருங்கக் கூறிவிடலாம்,
சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்
சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்
சிலகாலம் உயிர்த்திருக்கும்
மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக

பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் பூக்கொண்டோட
பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி
தேசங்கள் தேவ தூததர்களின் தயவில்
இரும்புகளைக் காவித் திரிவதில்
மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி
புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும்

எலிக் கறியுண்பவன் தேசம்
சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில்
அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி
இலங்கையின் இறைமையை ஏந்தி
பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்"நடாத்தும்

யுத்தக்களத்தில் போராளிகளின் மன நிலையையும்
விசாரித்து வைக்கும் சில ஊனத்துப் பிறவிகள்
"விடுதலைப் போராளிகளும்"ஜந்திரமான கூலிப்படையாய்
மெல்ல மாறியதான சாட்சியாய் விரியும் அந்த விசாரிப்பு!

அன்றுமின்றும் குண்டுகள்தான் ஓடுபிரித்து உயிர் கொல்லும்
இப்போது"தேசிய விடுதலையும்"ஓடு பிரிக்கும்,
ஒடுங்கிய சிறுசுகளை அள்ளிச் செல்லும்
சில ஆயிரம்
"டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்" என்ற
புதிய பதிவு தொடரும் பெட்டிகளாய்!

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?
தவித்துப் போவது தாய்மை மட்டுமல்லத் தேசமும்தான்!
தட்டிப் பறித்த சில்லறைகளுக்குப் பதிலாக
உலகம் உயிர்களை எண்ணிக்கொள்ள முனைகிறது
யுத்தின் பெயரிலும்
உணவுத் தேவையின் பெயரிலும்
இங்கு ஒழுங்குற இயங்கும் வியாபாரம்

என்றபோதும்,
எனது நெஞ்சில்
"இறுதிப் போராளி உள்ளவரை
விடுதலைப் போர் தொடரும்"ரீல் விடும் காலம்


மலந் துடைக்கும் காகிதங்களாய் தாய்மையின் வலிகள் ஒதுங்கும்
வறுமையில் அவளது உயிரோ ஊசலாடும்
நம்பிக்கை மட்டும்"பெட்டி"வரும்வரை
மகவுகளின் உடலில்
உயிர் நிலைத்திருக்கும் கனவை விதைத்தபடி...


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.08

Tuesday, April 22, 2008

தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்...

அத்தான்:சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு.

"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இதைச் சொன்ன என்ர ஆசான் இன்று மூச்சை நிறுத்தி விட்டதாக அவனது மகள் சொல்ல நான் உருகிறேன்.அத்தான்-ஆசான்,அறிவிட்டவன்,அடித்தவன்-அணைத்தவன்.அவனது சாக்குக் கட்டிலில் முழு இடத்தையும் நான் எடுத்துத் தூங்கியபோது எனதருகில் ஒண்டியவன்...



தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!


"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.


"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"


பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.


இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.


"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.


"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.


பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் 20 ரூபாய் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.

வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!


"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"


நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!


எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.


சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.


பத்தைக்குள் நின்று பீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,உருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!


இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள?;,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-இரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.


பத்து வயதில் எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.


இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.


கிட்லர்!


சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"


ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.


"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான் அத்தான் மகாதேவன்.


அத்தான்-ஆசான்!


இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.


ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.


ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.


இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது!

"தானுண்டது போயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.


எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!


"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இதைச் சொன்ன என்ர ஆசான் இன்று மூச்சை நிறுத்தி விட்டதாக அவனது மகள் சொல்ல நான் உருகிறேன்.அத்தான்-ஆசான்,அறிவிட்டவன்,அடித்தவன்-அணைத்தவன்.அவனது சாக்குக் கட்டிலில் முழு இடத்தையும் நான் எடுத்துத் தூங்கியபோது எனதருகில் ஒண்டியவன்...


"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."


இதுதான் என் நிலையும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.

Sunday, April 20, 2008

உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு...

தானியங்களைக் குறிவைக்கும் ஊக வணிகம்.


உலகம், வர்த்தகத்தில் மனித அத்தியாவசியத் தேவைகளையே ஏலமிட்டுக்கொள்கிறது.அது, குறித்து இலக்காக வைத்திருக்கும் அதிமானுடத்தேவையான உணவு "இன்று" புவிப்பரப்பெங்கும் மட்டுபடுத்தப்பட்ட நிலையில், அதன் உற்பத்திப் பொறிமுறை இயங்குகிறது.எங்கும் விலைவாசி-தானியப் பற்றாக்குறை, பண்டமாற்றுக்கான ஊடகத்தின் மிகமிக பற்றாக்குறையான சுற்றோட்டம் உலகத்தில் பலகோடி மானுடரைப் பதம்பார்த்துவருகிறது.எங்கு நோக்கினும் உணவுப் பொருட்களின் விலை வானைத் தொடும் நிலைக்குச் சென்றபடி.ஆப்பிரிக்காவில் மணிக்குப் பல்லாயிரம் உயிர்கள் பட்டுணிக்கு இரையாகிவருகிறார்கள்.90 கோடி ஆபிரிக்க இன மக்கள் வரும் பத்தாண்டுகளில் சரி அரைவாசியாகக் குறைவார்கள்!இதற்கு,எய்ட்சும் உணவுமே காரணமாக இருக்கும்.

இது உண்மையிலேயே ஒரு சோகமான நிலையா?,

உலகின் தானிய உற்பத்தியில் தேக்கமுள்ளதா?

அல்லது, போதாத விளைச்சல் மிகுதியாக உலகை வேட்டையாடுகிறதா?

உண்மையில் தானியத்தின் கையிருப்பும்-விளைச்சலும் திட்டமிட்டு அமுக்கப்படுகிறது!.

செயற்கையான தானிய அழிப்பால் சந்தையைத் தக்க வைக்க முனைந்த சந்தைப் பொருளாதாரமானது இன்று தானியத்தை உலகின் ஊக வணிகத்துக்குள் கொணர்ந்தபின் பங்குச் சந்தைச் சூதாட்டமானது தானியத்தின் செயற்கையான பற்றாக் குறையைவேண்டி நிற்கிறது.ஊக வணிகத்தைச் சூதாட்டமாக வைத்தியக்கும் உலக மூலதன மாபியாக்கள் இன்று தமது வர்த்தகத்தில் தானியங்களைக் குறித்த கவனக்குவிப்பை மேன் மேலும் வளர்த்து,அதைப் பணங் கொழிக்கும் ஊக வணிகமாக்கிப் பங்குகளைவிற்றுப் பணமாக்கி, மூலதனத்தைப் பெருக்கும் குறிக்கோளோடு மனித உணவுத் தேவையையும் சூறையாடிவருகிறது.

இதை முன்னிறுத்தியியங்கும் மேற்குலக ஊக வணிகத் துறையானது தத்தமது பங்குதாரர்களைக் கவரும் மூலோபாயமாகத் தானியத்தின் விலையை மிகமிக உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்காகவே இன்றைய தானிய விளைச்சலைத் திட்டமிட்டு செயற்கையாக அழிப்பதும் அதன் தொடர்ச்சியாகத் தானியத்திலிருந்து பயோ டீசல்;(Ethanol-E10)உற்பத்தியைத் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது. பெற்றோலோடு இவ்வெண்ணையை;(Ethanol-E10) 10 வீதம் கலந்து விற்பனையை ஊக்குவிக்கிறது.இத்தகைய உற்பத்திக்குப் பெயர் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலென்று மேற்குலக அரசுகள் கூறுகின்றன.ஆனால்,இது அப்பட்டமான பொய் என்பதை உலக உயிரியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

சாரம்சத்தில் தானியத்திலிருந்து பெறப்படும் எரிபொருளானதன் உற்பத்திச் செலவானது அதை விற்பதைவிடப் பலமடங்காகும்.அத்தோடு, அதன் இறுதி மூலமான CO2வின் வெடிப்பானது பெற்றோலியத்தைவிட மிகமோசமாகச் சூழலைப்பாதிக்மென்றும் கூறப்படுகிறது!

இத்தகைய கெடுதியையும் பொருட்படுத்தாது தானியத்திலிருந்து எரிபொருள் எடுக்கும் உற்பத்தியையும் அதன் பாவனையையும் ஊக்குவிக்கும் அரசு அதன் பலாபலனாக வாகனங்கள் மிக விரைவாகப் பழுதடைவதையும் அதன் வாயிலாக மேலும் பல பக்க விளைவையும் திட்டமிட்டே ஊக்கப்படுத்துகிறது.இது, தேங்கிய கனரக உற்பத்தியை மேலும் விரிவாக்கவும் அதன் வாயிலாகத் தொடரும் சந்தைத் தேக்கத்தைத் தடுக்கவும் ஒரு விய+கமாக இதைக் கணிப்பிடுகிறது.இத்தகையவொரு உற்பத்திப் பொறிமுறையின் இன்னொரு வடிவாக உள்வாங்கப்பட்ட ஊக வர்த்தகத்தின் இரும்புப்பிடியில் சிக்கியுள்ள தானிய வர்த்தகம் தனது மிக உபரியைக் குறிவைத்தபடி தானிய உற்பத்தியை கட்டுப்படுத்தும்போது அங்கே செயற்கையான தட்டுப்பாட்டையும்,உலக உணப்வுப் பற்றாக் குறையையும் ஏற்படுத்தி ஊக வணிகத்தின் பொறிவைத் தடுத்துக்கொள்ள முனைகிறது.இதன் ஒரு பகுதி உண்மையைத் தினக்குரலில் கோகர்ணன் மறுபக்கம் வாயிலாகச் சொல்கிறார்.அவரது கட்டுரை முழுமையாக இதன் வர்த்தகப் பொறிமுறையை விளக்க முன்வரவில்லை.எனினும்,தானியங்களின் பற்றாக்குறை,விலையுயர்வு மற்றும் பயோ டீசலாக்க முனையும் தானியத்தின் அழிவால் பசி பட்டுணி உருவாகும் போக்குகளுக்குள் நிலவும் பொறி முறையானது சந்தைப் பொருளாதாரத்தின் தேக்கம்-பின்னடைவு,ஊகவணிகத்தின் பொறிவை தடுத்துக்கொள்ளும் விய+கத்தோடு நடந்தேறுகிறதென்பதை நாம் மறுத்தொதுக்க முடியாதபடி உலக வல்லுனர்களின் ஆய்வுகள் நம் முன் இருக்கிறது.

கடந்த காலங்களில் யுத்தத்தின் மூலமாக அழிவுகளை ஏற்படுத்திச் சந்தைத் தேக்கத்தை நிவர்த்தி செய்த சந்தைப் பொருளாதாரத் தாரளவாதிகள் இப்போது யுத்தத்தை மூலவளத் திருட்டுக்காகச் செய்தபடி, சந்தைத் தேக்கத்துக்கு யுத்தத்தைப்பின் தள்ளி உணவுத் தட்டுப்பாட்டை-தானியத்தை ஆயுதமாக்கி வைக்க முனைகிறது என்பதே உண்மையானது.

புதிய புதிய உத்திகளுடாய் நகரும் மூலதனத்தின் பாய்ச்சல் மனிதவளத்தைத் தடுத்து நிறுத்துவதற்கானவொரு ஆயுதமாக அதையும் நாடுவதற்கானவொரு பகுதி உண்மையையும் அதற்குள் மறைத்தே வைக்கிறது.2050 ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகை 900 கோடியாக உயரவுள்ளது.இதைத் தடுப்பதற்கான பல ரூப மதிப்பீடுகளில் ஒன்று உணவு.மற்றவை:யுத்தம், நோய்க்கிருமிகள் உற்பத்தி,மருந்துத் தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கல் என்று தொடருகிறது.இவை அனைத்தும் ஆபிரிக்கா மற்றும் ஆசியக் கண்ட மக்களைக் குறிவைத்தே இயங்குகிறது.இதை முறியடிப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கைகளோ இன்னும் மனித நலமேம்பாடு குறித்த பர்வையாளரிடம் மேம்போக்காகவே இருந்து வருகிறது.வர்த்தகச் சூதாடிகளின் பின்னே அணிவகுத்திருக்கும் உலக வர்த்தகக் கழகமானது மூன்றும் மண்டல உலகத்தை இங்ஙனம் வேட்டையாடுவதற்கான தொடர்ச்சியாகத் தானியங்களை ஆயுதமாக்கி வருகிறது.இதன் தொடர் தாக்குதலில் ஒன்று மூன்றாமுலக விவசாயிகளுக்கான அரச மானியத்தை அடியோடு குறைத்து இல்லாதாக்கி அவர்களை முடக்குவதால் மூன்றமுலகத்தின் மனித வளத்தைக் கட்டுப்படுத்திக் கணிசமாகக் குறைத்திட முடியுமென்று அதன் திட்டத்தின் ஒரு பகுதி இயங்கியே வருகிறது.


கோகர்ணனின் மறுபக்கக் கட்டுரையில் குறித்துரைக்கும் உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு இவற்றையும் பொருத்தும்போது இதன் யுத்த முனை மிக வலுவாக இயங்குவதை இனம் காண முடிமென்று கருதுகிறோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
20.04.2008





மறுபக்கம்



இன்றைய உலக உணவு விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், மனிதருடைய உணவுத் தேவையைக் கணிப்பில் எடுக்காமல் லாப நோக்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனாலேயே உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்ற அடிப்படை உண்மையை யாராலும் மூடிமறைக்க இயலாது.


உலக மயமாதலுடன் சேர்ந்து விருத்தி பெற்று வருகிற நுகர்வுப் பண்பாடு பல முக்கியமான வழிகளில் உலகின் தானியத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில் உருவாகி வளர்ந்து வந்துள்ள புதிய நடுத்தர வர்க்கமும் புதிய பணக்காரப் பரம்பரையும் கைக்கொள்ளுகிற உணவுப் பழக்கங்களில் ஆடம்பரமான உணவுகளும் உணவின் விரயமும் முக்கியமானவை. பெருமளவிலான மாமிச உணவு நுகர்வு காரணமாக மனிதரது உணவுக்குத் தேவையான தானியம் கோழி, மாடு, பன்றி போன்ற விலங்குகளுக்கு தீனியாக்கப்படுகிறது. நான்கு முதல் எட்டுக் கிலோகிராம் வரையிலான தானிய உணவின் மூலமே ஒரு கிலோகிராம் மாமிசம் கிடைக்கிறது. இவ்வாறு பெறப்படுகிற பண்ணை மாமிசம் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது ஒரு புறமிருக்க, அதன் விளைவான தானியத் தட்டுப்பாடு மிகவுஞ் சமூகக்கேடானது.


நுகர்வுப் பண்பாட்டின் இன்னுமொரு விளைவு ஏதெனில், உணவு பயிரிடப்படுகிற விளைநிலங்கள் வணிகப் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படத் தொடங்குகின்றன. ஏற்றுமதி வணிகத்தின் கவர்ச்சியால் ஒரு புறமும் பொருளாதார விருத்தி பற்றிய கோணற் பார்வையின் விளைவாகவும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நெருக்குவாரங்களின் விளைவாகவும் விவசாயிகள் தானிய உற்பத்தியையும் அத்தியாவசிய உணவுப் பயிர் உற்பத்தியையும் கைவிட்டு ஏற்றுமதி வணிகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு பல மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போக்கு இன்னமும் தொடர்ந்து வருகிறது.


இவற்றைவிடப் பயிர்ச்செய்கைக்கான விதை விநியோகத்தின் மீது சில பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கி வருகிற ஏகபோகம் பல மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வீரிய விதைகள் என்ற பேரில், பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வந்த விதைகளின் இடத்தில், அதிக விளைச்சல் தருகிற புதிய, மரபணு மாற்றப்பட்ட அல்லது கலப்பின விதைகள் பயன்படுகிறபோது அவற்றுக்குத் தேவையான இயந்திரப் பசளை, பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் செலவுகள் சராசரி விவசாயிகட்கும் கட்டுப்படியாவதில்லை. மேலதிகச் செலவுக்கு மேலதிகக் கடனும் கடனுக்குக் கடும் வட்டியுமாக விவசாயிகள் கடனாளிகளாகி மேலும் வறுமைக்குட் தள்ளப்படுகின்றனர். சிலர் போதிய பசளையும் மருந்துகளும் பாவிக்க இயலாமல் குறைவான விளைச்சலால் நட்டப்படுகிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பத்தால் செழிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற இந்திய பொருளாதாரத்தின் கீழ் விவசாயிகளின் தற்கொலை விகிதம் உயர்ந்து வருகிறது.



கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களை காப்பது நகரப் பொருளாதாரத்தின் செழிப்பல்ல. கிராமங்களின் பொருளாதாரத்தின் சிதைவு தான் அதற்கான முக்கிய காரணம். இத்தகைய ஒரு பின்னணியில் உலக உணவுத் தட்டுப்பாடு என்கிற அபாயம் பற்றி சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் அக்கறையுடையோர் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர்.


இப்படிப்பட்ட ஒரு பின்னணியிலேயே அண்மைக் காலமாகச் சோளத்திலிருந்து சாராயம் உற்பத்தி செய்து அதைப் பெற்றோலுடன் கலந்து எரிபொருளாக்குகிற தொழில்நுட்பம் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. உலக எண்ணெய் விலையின் அதிகரிப்பின் பயனாக அது லாபகரமானதாகவும் அமையலாம். ஆனால், மனித உணவுக்கான தானியமோ தாவர எண்ணெய்ப் பொருளோ எரிபொருளாக்கப்படுவது ஒரு சிலர் சொகுசாக வாழ்வதற்குப் பல கோடிப்பேரைப் பட்டினியிற் தள்ளுகிற காரியமாகும்.


மேற்கூறிய விதமான தாவர எரிபொருட் பாவனை என்றும் சூழலுக்குக் குறைவான தீங்கையோ விளைவிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது பொய்யானது. இத்தாவர எரிபொருளிலிருந்து வெளியேறுகிற மாசின் அளவு சொற்ப அளவு குறைவாயிருந்தாலும், அதன் உற்பத்தியின்போது சுற்றுச் சூழலைச் சென்றடைகிற மாசின் அளவு பெரிது. எனவே மனிதருக்கு உணவாக வேண்டிய பொருட்களும் அவற்றை விளைவிக்கிற மண்ணும் ஒரு சிலரது லாப நோக்குக்காகப் பறிக்கப்படுகின்றன என்பதே உண்மை. இப்போக்குத் தொடருமேயானால் அது உலகின் பல நாடுகளை நிரந்தர உணவுப் பற்றாக்குறைக்கும் பொருளாதாரச்சிதைவுக்கும் ஆட்படுத்தி விடும்.


இன்று பல நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கலவரங்கள் நடக்கின்றன. இந்தக் கலவரங்கள் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளாகவும் சிலவேளை புரட்சிகர எழுச்சிகளாகவும் மாறலாம். ஏகாதிபத்தியத்துக்கு நண்பர்களாகவுள்ள எகிப்திய, பங்களாதேஷிய ஆட்சியாளர்களால் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதையே முக்கியமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை முன்னெடுக்க இயலாது. எனவே ஒருபுறம் பற்றாக்குறையும் கிளர்ச்சியும் இன்னொருபுறம் இராணுவ அடக்கு முறையுமாகவே இந்த நாடுகளின் உடனடியான எதிர்காலம் அமையும்.


இவ்விடயத்தில் மாஓ சேதுங் சீனப்புரட்சியின் வெற்றிக்கு முன்பும் பின்பும் தானிய உற்பத்திக்கு வழங்கி வந்த முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுவது பொருந்தும். போதிய உணவு உற்பத்தி இல்லாமல் புரட்சிகர இயக்கத்தால் நின்று நிலைக்க இயலாது. எனவே போராட்டம் என்பது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உற்பத்தியை மேம்படுத்துகிற போராட்டமாக நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்து வந்தது.
மக்களைச் சார்ந்து இயங்குகிற எந்த விடுதலை இயக்கமும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி மிகுந்த கவனஞ் செலுத்துவது அவசியமானது. அவ்வாறு செய்யத் தவறுகிறபோது, அது மக்களிடமிருந்து அந்நியப்படுகிறது. பின்பு அது மக்களுடன் முரண்பட்டு விடுதலை இலக்கையே இழந்து விடுகிறது.



இன்று ஏகாதிபத்திய கல உலகமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் நுகர்வுக் கலாசாரமும் சேர்ந்து உருவாக்கியுள்ள உணவுப் பற்றாக்குறை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் உணவு உற்பத்தியையும் ஒரு முக்கியமான ஆயுதமாக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கிற ஒவ்வொருநாடும் உணவில் தன்நிறைவு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.



ஏகாதிபத்தியமும் அடக்குமுறை ஆட்சியாளர்களும் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். மக்களின் அரசியல் விடுதலைக்கு அவர்களது அடிப்படையான தேவைகளிலிருந்தும் மக்கள் விடுதலைபெற வேண்டும். அது அவர்களது குறைந்த பட்சத் தேவைகள். முற்று முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறுகிற போராட்டத்தால் மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த இயலாது.
உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க இயலாமல் இன்று ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கும் உலக மயமாக்கலுக்கும் எதிரான ஒரு போராட்டமாகிவிட்டது.


உணவு மறுப்பு ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகிறபோது, உணவு உற்பத்தியும் உணவின் முறையான விநியோகமும் அதற்கு எதிரான விடுதலைக்கான போராட்டக் கருவிகளாகின்றன.


மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்துகிற எந்த ஆட்சியும் எந்த விடுதலை இயக்கமும் உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்குகிறபோது அது தவிர்க்க இயலாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிர்மாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு உந்தப்படுகிறது. ஏகாதிபத்தியத்துடனான சமரசங்கள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளின் மறுப்பாகவே அமைய முடியும். இது வரலாறு மீண்டும் மீண்டும் மேலும் வலுவாகக் கூறிவருகிற பாடமாகும்.



http://www.thinakkural.com/news/2008/4/20/sunday/marupakkam.htm

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...