Sunday, February 17, 2008

ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள்...

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும்
கொசோவோ மற்றும்
அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்.


"Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić, Serbia’s Ambassador to France said.




இன்று கொசோவா தனி நாடாகப் பிரகடனஞ் செய்துள்ளது!

இது, அதன் பதினேழு ஆண்டுகளான யுத்தத்தால் நிகழ்ந்த பெறு பேறா?

அதன் மக்களால் நடாத்தப்பட்ட புரட்சிகரமான பணியினால் செர்பிய இனவாத அரசு முறியடிக்கப்பட்டு,வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பான பிரகடனமா?

தமது மக்களின் அனைத்துரிமைகளையும் உள்ளடக்கியவொரு விடுதலைகொண்ட கொசோவோவா இந்தப் புதிய தேசம்?

இவை நமக்குள் எழும் கேள்விகள்!

இன்றைய(17.02.2008) தினக்குரலில் திரு.கோகர்ணன் என்ற புனை பெயர்கொண்ட (அறியப்பட்ட )பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்றைய தமிழ்த்தலைமைகள் தொடக்கம் இன்றைய தமிழ்த்தலைமைகள் வரை விமர்சனத்துக்குள் அடக்கியுள்ளார்கள்.பேராசிரியரின் கருத்துக்கள் மிக யதார்த்தமாக நாம் இனங்கண்ட உண்மைகளாகவே இருக்கிறது.இந்த நிலையில்-

எமது மக்களின் தலைவிதியை எவரும் தீர்மானிக்க முடியாதென்பதற்கு இன்றைய கொசோவோ நல்ல உதாரணமாக இருக்கிறது!

ஆனால்,தமிழர் தலைமைகள் அன்னியத் தேசங்களையும் அவர்களின் ஆசியையும் காத்திருக்கும்போது,அவர்களே கடந்தகாலத்திலிருந்து இன்றைய நிகழ்காலம்வரை நம்மை ஏமாற்றிச் சிங்கள ஒடுக்குமுறையை மிகவும் தந்திரமாக நம்மீது கட்டவிழ்த்துவிட்டதற்கான கடந்தகால அரசியல் நிலைமைகளைச் சொல்கிறார் நமது பேராசிரியர்.

போராட்டம்,கொலை, அழிவு,குருதி,பசி,பட்டுணி-வாழ்விடங்களைவிட்டகலும் அவலம்!இவையெல்லாம் நமது அன்றாட வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும் நம்மை எவரும் கண்டு கொள்வதே இல்லை!நமது மக்களின் அழிவுக்கும் குருதிதோய்ந்த வாழ்வுக்கும் நாம் நம்பும் இத்தகைய அன்னிய தேசங்களே காரணமாக இருக்கின்றவை என்பதை நாம் நமது கடந்தகால அனுபவத்திலிருந்தும்,இந்த மறுபக்கக் கட்டுரையாளரின் எழுத்திலிருந்தும் அறிய முடியும்!



இன்றைக்கு கொசோவோ எனும் தேசத்தை அங்கீகரிப்பதாகச் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையும்,மேற்குலகத்தின் ஐரோப்பிய ஒன்றியுமும் நேற்று 16.02.2008 அன்றே தமது நீதிபதிகளையும்,சட்ட வல்லுனர்களையும்,சுங்க அதிகாரிகளையும் மற்றும் இராணுவவல்லுநகர்களையும் கொசோவோ நோக்கி அனுப்பிவைத்தன என்கின்றன!ஆனால்,நாமறிய இவர்கள் 90களிலிருந்து அங்கே நிழல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொசோவோவின் வளங்களைத் தமது தேசங்களுக்குக் கொணர்ந்துள்ளனர்.இதற்காகவே அவர்கள் அன்றிலிருந்து கொசோவோவை ஒரு நவகாலனிய அரசாங்கத்தின் கீழ் கொணரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.இதன் பொருட்டு இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்தூடாகச் சட்டபூர்வமானவொரு தமது ஏஜென்டைக் காத்துத் தமது மூலவளத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும்,அதன் வாயிலாகத் தமது தொழிற்சாலைகளின் அதீத உற்பத்தியையும் தொடர்ந்து நிலைப்படுத்தும் ஒரு உறுதியான பங்காளியைத் தயார்ப்படுத்தும் அவசியத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்!


அன்னிய தேசங்களின் கொடிகளைத் தமது தேசத்தோடான நட்புறவுக் கொள்கைகொண்ட தேசங்களாக கொசோவோ மக்கள் கொண்டாடும் நிலையை ஊடகங்கள் உருவாக்கின.

இதே ஊடகங்களும்,அமெரிக்க அரசும் கொசோவின் விடுதலைக்காக அன்று போராடிய யு.சி.கே. அமைப்பை 1998 ஆம் ஆண்டு வரைப் பயங்கர வாத அமைப்பாகவே பிரகடனப்படுத்தி ஒதுக்கி வந்தது.இத்தகைய நிலையில் திடீரென யு.சி.கே அமைப்பானது விடுதலைப்படையாக இப்போது முன்னிறுதப்பட்டு அத் தேசம் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, நமது தேசத்தையும்,புலிகள் அமைப்பையும் அமெரிக்கா அங்கீகரிக்குமா?

பலரிடம் இக் கேள்விகள் இருக்கின்றன.இக் கேள்விக்கு முதலில் நாம் தெரிய வேண்டியவை பலவுண்டு!

புதிதாக மலர்ந்துவிட்ட கொசோவோ "மக்களினால் விடுவிக்கப்பட்ட தேசமாகவா" இருக்கிறது? என்ற கேள்விக்கு நியாயமாக விடை காண்பவருக்கு அன்னிய நலன்களின் கொடுமை மிக இலகுவாகப் புரியும்.

அத்தேசமானது அன்னிய இராணுவங்களின் துணையோடு,இன்று முழுக்கமுழுக்க அமெரிக்காவினது இராணுவத் தேவைக்கும்,ஐரோப்பியாவின் மூலவளத் தேவைக்குமாக அவர்களால் சேர்பியாவிலிருந்து வலு கட்டாயமாகப் பிரித்துத் தமது சட்டபூர்வமான கொலனிய நாடாக்கப்பட்டுள்ளதென்பதே உண்மையானதாகும்.

இத்தேச மக்கள் செர்பிய அரசின் இரும்பு விலங்குக்குப் பதிலாகச் சொந்த நாடெனும் பொன் விலங்கால் மாட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்.அவர்களின் இந்தத் தேசமலர்வுக்கான மகிழ்வானது நிரந்தரமற்றது!

இதைப் புரிவதற்குக் காலமெடுக்கத் தேவையில்லை.

அதை அந்தந்த அன்னியநாடுகளின் அரசியல் மற்றும் வியூகத்தின் போக்குகளிலிருந்தே நாம் அறிய முடியும்.

எங்கள் தேசத்துள் நிகழும் போராட்டமானது சுமார் கால் நூற்றாண்டாக யுத்தக்களத்தைத் தொடர்ந்து நடாத்துகிறது.இருந்தும் நமது தேசத்தை விடுவிப்பதற்கான எந்ததச் சர்வதேச அழுத்தங்களும் இதுவரை எமக்குச் சார்பாக எழவில்லை.இது ஏன்?

எம்மைத் தொடுர்ந்து அரசியல்-யுத்த அழுத்தங்களுக்குள் இருத்திவைத்து ஒடுக்கும் முதற்தர ஒடுக்குமுறைத் தேசமாக இருப்பது இந்தியாவென்ற மிகப்பெரும் பாசிச அரசாகும்.இங்கே,நமது தலைவர்களோ அன்றி சாதாரணப் பொதுமக்களோ-ஊடகங்களோ அன்னியத் தேசங்களால் நாம் விடுவிக்கப்பட்டுவிடுவோமென முழங்குகின்றன.

சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டு,நமக்கான தேசத்தைச் சுதந்திரமாகப் பிரகடனப்படுத்தும் முறைமைக்கு உலகம் ஒருங்கே ஆதரவு தருமென எவராது சிந்தித்தால் அது மிகப் பெரும் தவறென்பதை கொசோவோவின் மீதான ஐரோப்பிய-அமெரிக்க ஆர்வங்களிலிருந்து நாம் அறிய முடியும்.

இதையே தினக்குரல் கட்டுரையாளரும் நிறைவாகச் சொல்கிறார்.

படித்துப் பாருங்கள்.

உலக நடப்புகளில் "நமது அரசியலும்" எங்கே,எப்படியான தளத்தில் நகர்வதென்பதை நாம் அறிந்து திருத்தி மீள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.02.2008



>>>தமிழ்த் தேசியவாதத் தலைமைகள்
எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ
அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள்!<<< -கோகர்ணன்,தினக்குரலில்...


மறுபக்கம் :


//ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு
உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல்
வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று
நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது
என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள்.
இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று
பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு
முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று
நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும். //



தமிழ் மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைவதைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பியதில்லை. எனினும், இலங்கைத் தேசியம் என்ற கண்ணோட்டத்தில் கொலனிய ஆட்சிக்கு எதிரான சிந்தனையின் முன்னோடியாக இருந்தவர் பொன்னம்பலம் அருணாசலம். அவர் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்திலும் ஊக்கமளித்து உதவிய ஒருவர். சிங்களத் தேசியவாதிகளால் ஏய்க்கப்பட்ட அவர் அன்றைய சிங்களத் தேசியவாதத்தின் வர்க்கத் தன்மையையும் இலங்கை என்ற அடிப்படையில் சிந்திக்க இயலாமையையும் சரியாக மதிப்பிடத் தவறியதாலேயே விரக்திக்குள்ளானார். எனினும், அவரால் தனது `சகோதரர் இராமநாதன் போன்றோரின் பழைமைவாதத் .தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்கு நகர இயலவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் வரவும் அதன் வேகமான வளர்ச்சியும் மட்டுமே தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான கொலனிய- ஏகாதிபத்தியம் சார்பான சிந்தனைக்கும் காரணங்களல்ல.


அந்தத் தேசியவாதத்தால் தமிழ் பேசுகிற மூன்று வேறுபட்ட சமூகங்களை காலப்போக்கில் தம்மைத் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்திக் கொண்டவற்றை இணைக்க இயலவில்லை. அதற்குப் பிரதேச வேறுபாடுகளை மீறித் தனது அரசியலை முன்னெடுக்க நீண்டகாலம் எடுத்தது. அதைக்கூட இன்னமும் சரிவர நிறைவேற்ற இயலவில்லை. தனக்குள் இருக்கிற சாதி , வர்க்கம் என்கிற ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகட்கு நேர்மையாக முகங் கொடுக்க இயலவில்லை.


இதற்கான பல காரணங்களைக் கூறலாம். பிரித்தானிய ஆட்சி போன பின்பே தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனாலும், 1957 ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்க தளங்களை பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதை நமது தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாகக் கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீட்டு வரை எதிலுமே பிரித்தானிய அரசு தமிழருக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை.


அமெரிக்கா- பிரித்தானிய - டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும் 1960 இல் தேசியமயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் சொன்னார் . அந்த நன்றிக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதாவது செய்ததா? இல்லை. ஆனாலும், அத்தனை தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகளும் இன்று வரை எந்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக வாய்திறந்ததில்லை.


1959 முதல் சீன- இந்திய எல்லைத் தகராறு மோதல்கட்கு வழி கோரியது. அவற்றைத் தவிர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனப் பிரதமர் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தை இந்தியா புறக்கணித்தது, பிரித்தானிய ஏகாதிபத்தியம் பறித்து எடுத்ததற்கெல்லாம் தானே வாரிசு என்றதும் போதாமல் சீன- இந்திய எல்லைப் படங்களை மாற்றி வரையும் இந்திய ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளிருந்தே உண்மைகள் வெளிவந்துள்ளன. சீன - இந்திய மோதலைத் தொடக்குவதில் இந்தியப் படையினரது சீண்டலுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது என்றும், சீனாவின் பதிலடி இந்தியா எதிர்பாராதளவு கடுமையாய் இருந்தது என்பதுமே இன்றைய தகவல்கள் கூறுகின்ற உண்மை. இவை 1959 முதல் 1961 வரை சீனத் தரப்புச் சொல்லி வந்தவற்றுடன், உடன்படுகின்றன. எனினும், எந்தப் பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் அக்கறையற்றதாகவும் எந்தவிதமான சர்வதேச அலுவல்களிலும் அக்கறையற்றதாகவும் காட்டிக் கொண்டு லுமும்பாவின் படுகொலை பற்றியோ கியூபா மீதான அமெரிக்கப் படையெடுப்புப் பற்றியோ அலட்டிக் கொள்ளாத தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யையும் மிஞ்சிச் சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்று கண்டித்து அறிக்கை விட்டது.


தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஏகாதிபத்திய விசுவாசமே சுதந்திர கொங்கோ, கியூபா, சீனா என்பன பற்றிய பகைமையான பார்வைக்கு உதவியது என்பது சரியல்ல. மேலதிகமான காரணங்களும் இருந்தன. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். எனவே தான், சாதி ஒடுக்குமுறையான, ஊதியங்கட்கான போராட்டம் என்று எது வந்தாலும் தமிழ்த் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கட்குக் கடைவீதியிலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி. தொழிற்பிணக்கு நீதிமன்றம் என்றாலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி.


1947 இல் மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பை ஒரு இடதுசாரியும் ஆதரிக்கவில்லை. மலையக தமிழர் நீங்கலாக பெரும்பாலான தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஆதரித்தனர். இந்தத் துரோக வரலாறு இன்னமும் தொடருகிறது. இவற்றைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால் இன்று வரை தமிழ்த் தேசியவாதத்தை வழிநடத்திய சக்திகள் பற்றிக் கொஞ்சம் விளங்கும்.


ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள் என்பது 1977 க்குப் பிறகு தெளிவாகியிருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும் பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாக அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் ஏற்கப்பட்டதும் மீண்டும் ஏகாதிபத்தியம் பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன. எனினும், கடந்த கால் நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும் இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு, ஐ.நா. அமைதிப் படைகள், ஐ.நா. கண்காணிப்பு என்ற நமது கனவுகள் அடிப்படையின்றி விரிகின்றன.


எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. அதற்கேற்றபடி ஊடகங்களிலும் `நிபுணர்கள்' எழுதி வருகிறார்கள். தமது பிரச்சினைக்கான தீர்விற்கான சாவி சென்னையில் இருக்கிறது என்று கூட அண்மையில் எழுதப்பட்டது. டில்லியில் தான் அது இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கண்ணாடியை அணிந்து கொண்டே எல்லா இடத்திலும் அதைத் தேடுகிற ஞாபகமறதிக்காரர் போல நம்மிடமே உள்ளதை எங்கெல்லாமோ தேடுகிறோம்.


ஒன்று மட்டும் விளங்க வேண்டும். இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய அனுதாப அலையுள்ளது. ஆயினும், தமிழக அரசோ பிரதான கட்சி எதுவுமோ தமிழருக்கு ஆதரவாக எதுவுமே செய்யாது. ஈழத் தமிழர் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டே விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுகிற ஜெயலலிதாவின் கூட்டணி வைக்கச் சிலருக்கு முடிகிறது. அதேபோல, டில்லியின் முடிவுகளை மீற மாட்டேன் என்கிற கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கவும் சிலருக்கு முடிகிறது. இது தமிழக தாயக மரபு.

ஈழத்தமிழருக்கு ஆதரவான மக்கள் அமைப்புகள் உள்ளன. அவை விடுதலைப்புலிகளை விமர்சனமின்றி ஏற்பவையல்ல. அதேவேளை, சென்னையும் டில்லியும் ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆடுகிற நாடகங்களை அவை அம்பலப்படுத்துகின்றன. மாறாக நாங்கள் கேட்க விரும்புகிற பொய்களைச் சொல்கிறவர்களின் மொழி இனியதாயிருக்கலாம். அவர்களது நட்பு சந்தேகத்துக்குரியது.


ஜே.வி.பி. இடையிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும். இலங்கையின் உள் அலுவல்களில் அயலார் தலையீட்டை எதிர்த்தும் பேசும். இந்தியாவைக் கண்டித்தும் பேசும். மறுநாள் தூதரகத்தில் அதன் தலைவர்கள் விருந்துபசாரங்களில் சிரித்துப் பேசி மகிழ்வதைக் காணலாம். இந்தியாவும் அமெரிக்காவும் போருக்கு உதவ வேண்டுமென்று அது கோரும். விடுதலைப்புலிகட்கு எதிரான நடவடிக்கைகளை மெச்சியும் பேசும்.

அப்போதெல்லாம் ஜே.வி.பி. ஒரு இடதுசாரிக் கட்சியா என்ற கேள்வி நமது தமிழ்த் தேசியவாதிகட்கு நினைவுக்கு வராது. ஜே.வி.பி. தனது இடதுசாரி வேடம் கலையாதபடி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிற போது மட்டும் ஜே.வி.பி.யின் பச்சையான இனத்துவேஷமும் அது ஒரு `மாக்சியக் கட்சி' என்கிற கருத்தும் ஒன்று சேர்த்துத்தரப்படும். ஜே.வி.பி.யை இடதுசாரிகள் என்று திரும்பத்திரும்பச் சொல்லி வருகிற சிலர் ஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்று சொல்லத் தகுதியற்றது என்று அறியாமற் சொல்லவில்லை. அவர்கள் மனமறிந்தே பொய்யுரைக்கின்றனர்.



ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள். இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.


கோகர்ணன்,தினக்குரலில்

தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும்?

சுகுணாத் திவாகர்:"தாலி என்னும் சனியனை"க் கட்டித்தானாக வேண்டும்!



"புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப்
போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி
நிகழ்ந்தது?
சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!
எழுத்துக்கும்
வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி
"ஊருக்குத்தான் உபதேசம்
நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!
வாழ்வில் உண்மையாய் வாழ முதலில்
போராடுங்கள்!
உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!
இவர்களே
சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!"



//மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்). //-சுகுணாத் திவாகர்.



ங்கேதாம் எல்லோரும்(போலிப் புரட்சிக் காரர்கள்,பெரியாரீஸ்டுக்கள்,முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்) மிகமிகத் தப்பான முறையில் சமூகப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.தத்தமது விருப்புக்கு ஏற்ற தரணங்களை உருவாக்கியபடி மக்களை மடையர்களாக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரக் கிரிமனல்கள்போலவே இவர்களும் தமக்கான அரசியலைக் கடைவிரிக்கிறார்கள்.சமூகத்தை இங்ஙனம் கேவலமாக்கி,சமூக மாற்றத்தையே கொச்சைப்படுத்தும் இத்தகைய போக்கை முன்வைத்தே"இருபது வயதில் கம்யூனிசம் பேசுபவன் அறிவாளி,நாற்பதிலும் அதைத் தொடர்பவன் முட்டாள்"என்றும் ஐரோப்பாவில் நகைச் சுவைக் கருத்துண்டு.நாம் நம்மையே ஏமாற்றியபடி போலிக்கு எழுதுவதில் என்னதான் முற்போக்கான அம்சங்கள் இருப்பினும் அதை அம்பலப்படுத்தி நிராகரித்தாகவேண்டும்.

இத்தகைய நிராகரிப்பே நம்மைச் சூழ்ந்த ஆத்திக்கப் பண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்க முனையும் முதற்படி.இதுவே,உலகத்தில் புதிய பாட்டாளிய வர்க்கப் பண்பாட்டின் முகிழ்ப்புக்கான விசும்பு நிலை!இதன் உருவாக்கத்தைப் பல தளங்களில் நகர்தாமால் புரட்சியென்பது சாத்தியப்படாத ஒன்று!இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக ஏற்று, நம்மை அதற்குள் திணிக்காத ஒவ்வொரு தரணமும் நம்மை இந்த நிலவுகின்ற அமைப்புக்குப் பலி கொடுத்தபடி அதுள் ஐக்கியமாகி அழிவதையே செய்து வருகிறோம்!சமபந்தி,சாதி மறுப்புப் போராட்டமெல்லாம் வெறும் ஒளிவட்டங்களைக் கட்டும் சுய முனைப்பு முன்னெடுப்பாக அமையுமெனில் இதுவே நாம் செய்யும் துரோகங்களில் முதற்றரமான துரோகம்!சொல்வதற்கும்,செயற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லாது ஊராரை ஏமாற்றிவரும் படைப்பாளிகளை முதலில் இனம் காணுவது அவசியம்.


சமுதாயத்தைக் கேவலமாகச் சுரண்டிக்கொண்டிருக்கும் இந்த ஆதிக்க அதிகார வர்க்கத்தின் உறுப்பாக இருபதில் என்னதாம் "தெரிவு"உண்டு?என்தாம் பின்-முன் நவீனத்துவம் உண்டு?எல்லாமே புனைவெனும் அறிவுக்குத் தாலியென்பது தவிர்க்க முடியாத "தெரிவாக-நிலைப்பாக-வாழ்வாக" மாறிவிடுகிறது!



ஆண்-பெண் இணைவில் தாலியென்பது அவசியமற்றது.

"சமூகத்துக்காகத் தாலி கட்டுவது-சூழலுக்காக,பாரம்பரியத்துக்குச் சம்பிரதாயத்துக்கு-பாதுகாப்புக்காக"என்பதெல்லாம் வெறும் வெற்றுக் கருத்துக்கள்!அதைவிடப் பெண் விரும்புகிறார்,பெற்றோர்களின் ஆசை அது,எனவே,தவிர்க்க முடியாது தாலி கட்டுகிறேன்.என்பவர்களெல்லாம் பொய்யர்கள்!

என்னைச் சொல்கிறேன் கேளுங்கள்!-இது,மார் தட்டுதலல்ல!!

நானும் மரபு,ஆச்சாரம்,அது-இது என்று பார்க்கும் மிக இறுக்கமான குடும்பத்தில்தாம் மணம் முடித்தவன்.எனினும்,தாலிப் பிரச்சனை பெரிதாக உருவெடுத்தபோது இக் கல்யாணம் தேவையில்லையெனப் பிடிவாதமாக மறுத்து அத்தகைய மணப் பெண்ணுறவைவிட்டு ஒதுங்க முடிவெடுத்தவனும் நான்.பின் அதில் வெற்றியோடு தாலி,ஐயர்,அறுகரிசி,முகூர்த்தம் மறுப்புக் கல்யாண நிகழ்வைச் செய்தவர்கள் நாம்(ஆண்-பெண்)!-ஊர்கூடியல்ல சில உறவினர்கள்,நண்பர்களோடு நமது இணைவுகுறித்த எமது பார்வைகளை அவர்கள் முன் வைத்துவிட்டு, மோதிரங்களை மாற்றிக் கொண்டோம்.இங்கே,மோதிரங்கள் இணைவினது வெறும் குறியீடுமட்டுமே.அது அன்பினது அடையாளமென நீட்டத் தேவையில்லை!இப்போது அந்த மோதிரங்கள் எந்த மூலைக்குள் கிடப்பதென்று எமக்கே தெரியாது!

நாம்(பெண்-ஆண்)இருவர் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தரணங்களில்தாம் மற்றவர்களின் தயவு-இணைவு தேவையாக இருக்கிறது.சமுதாயத்தில் மற்றவர்களுக்காக வாழ்வதென்பது இத்தகைய சுயத்தை இழந்தல்ல.நமக்குச் சரியானதாகப்பட்டது முழுமொத்த மக்கள் கூட்டத்தில் தவறாகவே இருக்கிறது.அது தவிர்க்க முடியாது ஒவ்வொரு குடும்பத்துள்ளும் பிரதிபலிக்கிறது.எனினும்,நாம் சமூக மாற்றத்துக்காப் போராடுகிறோமா?அதற்குள் நம்மை மாற்றியாகவேண்டும்.பெண்ணின் விருப்பமாக இருக்கலாம் தாலி!ஆனால்,உண்மையில் அந்தவிருப்பம் நிலவுகின்ற அமைப்பின் கருத்தியல் புனைவு.

அது,நமக்குள் திணிக்கப்பட்ட சமூக ஒடுக்குமுறை.இதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பு-புண்ணாக்கென்றால் உங்களுக்கெல்லாம் சமூக மாற்றமென்பதெல்லாம் ஒரு கேடா?பிறகெதற்கு இறை-மதம் மறுப்பு?,சடங்கு-சம்பிரதாய மறுப்பு?

புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப் போராடுவதைப் பாருங்கள்.
தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி நிகழ்ந்தது?

சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்!எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி"ஊருக்குத்தான் உபதேசம் நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு!

வாழ்வில் உண்மையாய் வாழ முதலில் போராடுங்கள்!உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்!இவர்களே சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!


எத்தனையோ தடைகளை உடைத்துப் போராடுவதே வாழ்வு!குடும்ப வாழ்வில் முற்றுமுழுதான புரிந்துணர்வென்பது எந்தத் தரப்பிடமும் இல்லை!அது சமூக ஒடுக்குமுறையாகவே-ஒரு பெரும் நிறுவனமாகவே குடும்பம் நமக்குள் வாழ்கிறது.எனவே,நம்மால் முடியக்கூடிய தாலி மறுப்பு,முகூர்த்தம் பார்த்தல்,ஐயர்வழி நடாத்தப்படும் மண நிகழ்வு,இவையெல்லாம் மறுத்து-ஒதுக்கியே நாம் இணைந்தவர்கள்!இது கடினமான பணி.திடமாகப் போராடி,விளக்கும்போது யாவும் கைகூடும்.

இத்தகையவற்றில் விட்டுக் கொடுப்பென்பதற்கும்,ஓட்டுக்கட்சி அரசியலுக்கும் எந்த வித்தியாசமுமில்லை!



இது,தனிபட்டவர்மீதான விமர்சனமில்லை.


பொதுவான சமூகத்தின்மீதான-பொதுப் புத்திமீதான விமர்சனம்.


சுகுணாத் திவாகர்களோ தாலியைச் "சனியன்"என்று கூறியபடி தப்பிக்க முனைகிறார்கள்!அதைக் கடக்கும் போராட்டத்தைச் செய்து,அதை (தாலிமறுப்பு)மறுத்து ஒத்துக்கி வைத்தல்-மனதாரப் புரிந்தபடி தவிர்த்தல் மிக அவசியமான முன் நிபந்தனை சமூகப்பண்பாட்டு மாற்றத்துக்கு.இதைத் தவிர்த்தபடி,தமக்குத் தமக்கென வரும்போது போலிச் சாட்டுக்களைக் காவிக் கொண்டு பூப்புனித நீராட்டு விழா,தாலிகட்டும் திருமண நிகழ்வு,சுபமுகூர்த்தம் பார்த்தல்-ஐயரை அழைத்து விவாகம் நடாத்தித் தாம்பாத்யம் பகிர்தல் நடை பெறுவதும் நமக்குள் கண்கூடு!

புரட்சி பேசியவர்கள்,போலித்தனமாகப் புத்தகங்கள்,பத்திரிகைகள் போட்டவர்கள்-வெளியிட்டவர்கள்,எத்தனையோ தடவைகள் இத்தகைய செயலுக்குள் தம்மை இணைத்தபடி"மகளின் பூப் புனித நீராட்டு விழா மனுசியின் விருப்பம்,ஐயரை வைத்துத் தாலி கட்டுவது பெண்ணின் பெற்றோருக்கு விருப்பம்-வயசானவர்கள்,அவர்களின் விருப்பத்தை மறுக்க முடில்ல"என்றபடி இந்த அமைப்பைக் காத்தே வருகிறார்கள்,தம்மைப் புரட்சியாளர்களாகக் காட்டியபடி-பெரியாரிஸ்டுக்களாக முன் நிறுத்தியபடி.

குடும்பம் என்ற அமைப்பே இதைக் காக்கும் ஒரு வடிவம்தாம்.எனினும்,இன்றைய நிலையில் அதைக்கூடப் புரட்சிகரமாக்கியபடி செல்ல முடியவில்லையானால் நாமெல்லோரும் போலிகளே!


ஒவ்வொரு அங்குலம், அங்குலமாகப் போராடியே இவற்றைக் கடந்தாகவேண்டும்.

இங்கே,சமரசம் செய்பவன்-செய்பவள் சமூகத்தை ஏமாற்றும் போலிகள்!உங்களையும் நேரடியாகவே சொல்வேன்:நீங்கள் போலித் தனமாகவே புனைகிறீர்கள்!சமூகத்தை ஏமாற்றிக்கொள்ள மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்,பெரியாரைத் துணைக்கழைக்கும் ஒரு செயலைச் செய்கிறீர்கள்!


என்றபோதும் நண்ப,
நீவீர் நீடூழீ நிலைத்து(ஆணும் பெண்ணும் மனம் ஒன்றிப் பிரிவகற்றி) வாழ
வாழ்த்துகிறேன் நெஞ்சார!

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
17.10.2008
வூப்பெற்றால்.

Saturday, February 09, 2008

அங்கேயும் கருப்பு நாசிகள்...

அங்கேயும் கருப்பு நாசிகள்,
இங்கேயும் வெள்ளை நாசிகள்,
நாம் போகும் இடம் இனி எங்கே?




இன்றைய ஜேர்மனி குறித்து நிறையச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இத் தேசத்தைப் பற்றிய பழைய புரிதலில் அதன் மக்கள் விரோத அரசியலானது ஜேர்மனிய ஆளும் வர்க்கமான பெரும் தொழிலகங்களுக்குச் சொந்தக்காரர்களான குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே இயங்கி வந்திருக்கிறதை நாம் இரண்டு பெரும் உலக மகா யுத்தத்தின் மூலமாகச் சிந்தித்தும்,வரலாற்று ஆய்வாளர்களின் அறிக்கைகளிலிருந்தும் அறியக்கூடியதாகவே இருக்கிறது.மூலதனத்தின் அதீத திரட்சியானது மனித சமுதாயத்தில் சிறுபகுதியை மிகவுஞ் செல்வத்தில் கொழிக்கவும், பெரும்பான்மை மக்களை வறுமையிலுமாக விட்டுவிடுகிறது.இதை கண்முன்னே காணவிரும்பின் நம் இந்தியாவைக் கண்முன்னே நிறுத்துவோமானால் அதன் கோரமுகம் நம்மை அண்மித்து வருவதை இனம்காணமுடியும்.


பசி,பட்டுணி-நோய்,நொடி,ஒட்டிய வயிறும் ஒளியிழந்த விழிகளும் வானத்தை விழிக்கத் தெருவோரம் படுத்துறங்கும் மனிதர்கள்.அத்தகைய மனிதர்களை மேட்டுக் குடிகளின் கார்களே மோதிக் கொன்றுவிடும் ஒரு நொடியுமாகவும்,பழைய பத்திரிகைகளை வீதியில் பொறுக்கி விற்று வயிறு நிறைக்கும் சின்னஞ்சிறு பாலகர்கள் மறுபுறமாகவும் இந்தியா இருபத்தியோராம் நூற்றாண்டில் "வல்லரசாக" மாறிவருகிறது!இது இந்தியாவினது மட்டுமல்ல உலகத்தின் பல முதலாளிய நாடுகளின் கோலமும் இதுவே.இது, முதலாளியப் பொருளாதாரத்தின் நிச வடிவிலான சமூகயதார்ததத்தின் மறு விளைவாக உலகத்தில் யுத்தத்தையும்,பஞ்சத்தையும் ஏற்படுத்தப்படுகிறது.மனிதர்களை இலட்சக் கணக்கில்-கோடிக் கணக்கில் கொன்று குவிக்கிறது,முதலாளியச் சுரண்டல் அமைப்புகளும் அதன் வல்ல இராணுவமும்!கண்ணால் காண முடியாத கோலங்கள் அல்ல இவை!இந்தியாவின் வறுமையையும் அந்தத்தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் நய வஞ்சகத்தனமான சுரண்டலையும் அம்பலப்படுத்திய மீரா நாயரின் சலாம் பம்பாய் உலகமெல்லாம் திரையிடப்பட்டது.இது இந்தியா பற்றிய பல பிரமைகளைச் சிதைத்தெறிந்து அதன் கொடூரமான முகத்தைச் சாதாரணப் பாமரர்களும் புரிய வைத்த திரைப்படம்.


உலகத்தில் எந்தப்பகுதியிலும் இல்லாதபடி இந்திய இந்து அதர்ம முறையானது இந்தியாவில் 240 மில்லியன்கள் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி வைத்து சமூகக் கிரிமினலாகத் தனது பக்கங்களை உலகத்தில் நிரப்பிவைத்திருக்கிறது.உலகத்தின் இன்றைய அரசியலானது இதே இந்தியாவை ஒத்த முன்னெடுப்பாகவே இன்றுவரையும் நிகழ்ந்து மனித சமூகத்தை அழித்து வருகிறது-ஒடுக்கி வருகிறது!இதன் தொடர்ச்சியில் நாம் தொழில்முறை-இன்டர்ஸ் ரீரீயல் இன அழிப்புக்களை பலகோடி மக்களின் அழிவில்பார்த்தோம்.நாசிய நரவேட்டை,நாகசாகி-கீரோசீமா அணு வன்தாக்குதல் இதற்கு நல்ல உதாரணம்!அதே நாசியத் தாக்குதலே இக்கட்டுரைக்கான கருப்பொருளும் இன்று.கடந்த ஞாயிற்றுக் கிழமை(03.02.2008) நாசியத் தீ மூட்டலில் உயிரிழந்த ஒன்பது துருக்கிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அநுதாபம்.ஏனெனில்,நானும் அகதியாக நாசியத் தேசத்தில் வேண்டாத குடியாய்க் காலத்தை ஓட்டும் தமிழர்களில் ஒரு உறுப்பினன்தானே?அதோ,தீ என்னையும் தொடருகிறது.நானே ஒரு கதையில் எனது பிள்ளையைப் பறி கொடுத்ததாகச் சொன்ன "ஆவீன மழை பொழிய..."இன்றைய அன்றாட வாழ்வாக நமக்கு ஐரோப்பாவில்-ஆசியாவில்-ஆபிரிக்காவில் ஆ...என்ன உலகம் பூராகவும் இதே கதைதாமே?பின்ன-இதுதானே முதலாளியமும் அவர்களது ஜனநாயகமும்!



நாசி ஜேர்மனியானது கிட்லர் ஊடாக விதைத்த இனவாத்மானது இந்திய இந்து அதர்மச் சாதியத்தின் மனிதவிரோதப் போக்கோடு ஒன்றித்திருப்பது.இது இன்று வரையும் உலகில் கொன்று குவித்த அப்பாவி மக்களின் தொகையானது 140 மில்லியன்கள் மக்கள் தொகையாக இருக்கிறது.இது தனியே ஜேர்மனிய இனவாதக் கழிசடை அரசியல்-உற்பத்தி ஆர்வங்களால் நிகழ்ந்தபோது, இதை வெறும் ஒரு பாசிசக் கோமாளி கிட்லரின் தவறாக நிறுவியது முதலாளிய உலகம்.இன்றோ கிட்லர் அழிந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கழிந்த பின்பும் இதே நாசிய இனவாதமானது பல் பத்து வேற்றினதைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது ஐரோப்பாவில்-ஜேர்மனியில்!


இந்த இனவாத முன்னெடுப்பை முதலாளியத் தேசங்கள் எங்கும் மிக இலகுவாக அறியமுடியும்.அதாவது, ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கின்ற எந்தத் தேசத்தை எடுத்தாலும் இந்த இனவாத மனதும் அது சார்ந்த அழிப்புவிருப்பும் நிறைந்தே இருக்கும்.இதையும் இந்தியாவில் உதாரணமாக எடுத்தால் அநுதினமும் இறைவனைப் பிராத்திப்பதாகவும் மனிதர்களுக்கு-உலகுக்குச் சேமம் உண்டாவதற்காவும் பிராத்தனை செய்வதாகச் சொல்லும் பிராமணனின் வீட்டில் சாதிகள் பார்க்கப்பட்டுத் தம்மைப் போன்ற மனிதர்களைச் சமூகவதைக்குள் தள்ளிக் கழித்துவைப்பதை மனதிரைக்குள் கொணரும்போது, இத்தகைய முதலாளியக் கருத்தியலை மிக நுணுக்கமாக அறியமுடியும்.இவற்றைப் பூண்டோடு அழிக்க முனையாத பிராமண அம்பிகள்கூட ஐரோப்பாவில் நாசிகளிடம் வேண்டும் உதையைத் தம்மோடு பொருத்துவதாகத் தெரியவில்லை!மடிக் கணினி எங்கோ ஓரிடத்திலும்,ஐயர் உடல் இன்னொரு புறமுமாகக் கிடந்ததைக் கண்டவர்களும் நாமே.


இந்த உலகத்தில் யுத்தங்களைச் செய்து மக்களைக் கொன்ற ஐரோப்பாவானது இன்று ஜனநாயகம் வேடம் பூண்டபடி மெல்ல வேற்றின மக்களை அழித்துவருகிறது.இன்றைய ஜேர்மனியில் திடீர் திடீரென ஜேர்மனியர்கள் அல்லாத குடும்பங்களின் வீடுகள் தீப்பற்றி எரிகிறது.ஒவ்வொரு தீ மூட்டல்களிலும் 5-10 என வேற்றின மக்கள் அழிந்து மாண்டு போகிறார்கள்.தீயில் கருகும் மனிதர்களின் அழிவில் ஜேர்மனிய மண்ணைச் சுத்தஞ் செய்துவிட முடியுமென ஜேர்மனிய நாசிகள் கருதுகிறார்கள்.இத்தகைய நாசிய கட்சிகளையும் அவர்களது படையணிகளையும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திலொரு பகுதி ஒத்துழைப்பு நல்கி அதன் பின்னாலிருந்து இயக்கி வருகிறது.சட்டப்படி நாசியக் கட்சிகளுக்கான நிதியை ஜேர்மனிய அரசு வரிப்பணத்திலிருந்து கொடுக்கிறது.உலகம் பூராகவும் இனவாதம் தலைகால் தெரியாது மக்களைக் கொல்லுகிறது!இது ஐரோப்பாவில் நாசியாக நமது நாடுகளில் வர்ணாச்சிரம சாதியத் தாக்குதலாக...


கடந்த ஞாயிறன்று 03.02.2008 லூட்விக்ஸ்காபன் எனும் நகரில் துருக்கிய மக்கள் வாழ்ந்த தொடர்மாடி வீடொன்று எரிகிறது.அங்கே,ஒன்பது மக்கள் தீயில் கருகி மரித்துப் போகிறார்கள்.இவ்வீட்டை கடந்த இரண்டு வருடத்துக்குள் மும் முறை நாசிகள் தாக்கித் தீயிட்டபோதும் மூன்றாம் முறையே இது வெற்றியளித்து முழுமையாக எரிந்து, அங்கு உறக்கத்திலிருந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளார்கள்!இதே பாணியிலான துருக்கிய வீட்டின் மீதான தாக்குதல் கடந்த பத்தாண்டுகளுக்குமுன் சோலிங்கன் எனும் நகரப் பகுதியில் ஐந்து மக்களைக் கொன்று குவித்தது.அப்போது பொங்கியெழுந்த துருக்கிய எதிர்புணர்வானது ஜேர்மனிய அன்றாட இயக்கத்தையே ஸ்த்தம்பிக்க வைத்தது.அந்தத் தாக்குதலை நாசிகளே நடாத்தினார்களென உடனடியாக வெளிப்படுத்தப்பட்ட ஊடகங்களின் உண்மைச் செய்திகள், இத்தகைய எதிர்ப்புணர்வைத் தீயாகப் பரப்பியதாக ஜேர்மனி இப்போது உணருகிறபடியால் இந்தப் பெருந்தொகையான மக்களின் உயிரழப்பைத் திட்டமிட்டு மறைப்பதற்கும்,அந்த வீட்டில் நிகழ்ந்தது விபத்தாக இருக்குமோ என செய்திகளை அடக்கி வாசிகிறது ஜேர்மனிய ஊடகங்கள்!


இங்கே,பற்பல இடங்களில் இத்தகைய நாசியத் தாக்குதல்கள் தினமும் நடந்தேறுகிறது.நாசிய இனவாதத் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் மனிதர்கள் யாவருமே ஏதோவொரு முறையில் உடல்-உளப் பாதிப்புள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.கடந்த மூன்று மாதங்களுக்குமுன் கிழக்கு ஜேர்மனியப்பகுதியான மூகெல்ன் எனும் நகரப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட இந்தியச் சீக்கிய இனத்தவர்கள் நாசிகளால் தாக்கப்பட்டு, மண்டைகள் பிளந்து வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.இனவாதத் தாக்குதல்களின் தொடர் நிகழ்வில்,கடந்த ஞாயிற்றுக் கிழமைத் தாக்குதல் முற்றிலும் திட்டமிடப்பட்டுத் தீ வைக்கப்பட்டதாகவே இனம் காணத்தக்கதாக இருக்கும்போது, ஜேர்மனியப் புலாய்வுத்துறையோ அதை இதுவரை திரையிட்டு மறைப்பதற்கான முறையில் உண்மையை மறைப்பதற்காகவே தமது ஆய்வுகளைப் பின்போடுகிறது.இங்கே,உண்மையை வெளிப்படுத்திய துருக்கிய ஊடகங்களை "பொறுப்பற்ற ஊடகங்கள்"என ஜேர்மனிய ஊடகங்களும்,அரசும் குற்றஞ் சொல்லும் அவசரத்தைக் கொல்லப்பட்ட மக்களின் குடியிருப்பில் ஏற்பட்ட-மூட்டப்பட்ட தீயின் முலம்பற்றிய ஆய்வில்காட்டவில்லை!தீயிட்டுக் கொளுத்தியதைப் பச்சைப் பாலகர்கள் கண்டதாகச் சாட்சியம் சொல்லப்பட்டும்,அதைக் கணக்கெடுக்காத ஜேர்மனிய அரசு!


ஜேர்மனிலிருந்து வெளி நாட்டவர்களைப் பூண்டோடு அழித்தும், வெருட்டியடித்தும் ஓட்டிவிட முனையும் புதிய-இளைய கிழக்கு-மேற்கு இணைவுக்குப் பின்பான கூட்டு ஜேர்மனிய மனமானது கனவுகாண வைக்கப்படுகிறது.எனினும், அந்நியத் தேசங்களின் மூலவளம்-கனிவளம் இன்றி ஐரோப்பாவானது ஒரு நிமிடம்கூட உயிர்வாழ முடியாதென்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள்-அரசியல்வாதிகள் அறிந்தேயுள்ளார்கள்.என்றபோதும், இனவாதத் தீயை அணைப்பதற்கான எந்த முன்னெடுப்புமின்றி அதை ஊட்டிவளர்க்கும் ஓட்டுக்கட்சிகள் தமது தேர்தல் வெற்றிகளை நிர்ணியிக்கும் ஒரு ஊடகமாக இந்த"ஜேர்மன் ஜேர்மனியர்களுக்கே"எனும்படியான இனவாதத்தைக் இனம்கண்டு அப்பப்பத் தமது தேவைக் கேற்றபடி வளர்த்தெடுக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டமானது இப்போது ஜேர்மனியக் கெசன் மாநில முதல்வர் றோலான்ட் கொக் வாயிலாக "சிறுவர்கிரிமினல்"களுக்கான சட்டமாக வருகிறது.14 வயதுக்குமேற்பட்ட வெளிநாட்டுச் சிறார்கள் செய்யும் குளப்படிகள் இந்தச் சமூகத்துக்கு எதிரானதாகவும்,இது வெளிநாட்டுச்சிறார்களின் கிரிமினல்களாக இனம் கண்டு அதை ஒடுக்குவதற்காகச் சிறார்களை உள்ளே தள்ளும் சட்டம் வேண்டுமென்று தேர்தலில் பிரச்சாரம் செய்து, தனது படுதோல்வியைத் தடுத்து நிறுத்தி மீளவும் ஆட்சியைக் கூட்டுக்கட்சிகளோடு பேரமிட்டுத் தொடரும் சூழலை ஏற்படுத்துகிறார்,திரு.ரோலான்ட் கோக்.இதேவகை அரசியல் இனிமேல் ஜேர்மனியெங்கும் படையெடுத்து அந்நிய மக்களைத் தொடர்ந்து உளவில் ஒடுக்கு முறைக்குள் தள்ளும் ஓட்டுக்கட்சிகளோ தாமே நாசிகள்தாமென்று தொடர்ந்து நிலை நிறுத்திவரும்போது, துருக்கியப் பிரதமரோடு நட்புறவு பாராட்டி அறிக்கைகள்விடுகிறது§ர்மனிய ஆளுங்கட்சிக் கூட்டணிகள்.அதுவும்,தீயினுள் கருகி மாண்டவருக்காக வருத்தம் தெரிவித்து!இதன் பின்னே இருக்கும் அரசியலை துருக்கிய இனத்தவர்கள் அறியாதவர்களா?


அந்நிய மூலவளங்களான எரிவாயு,மசகு எண்ணை,காரீயம்,யுரொனியம் முதல் சாதரண மரத்தளபாடங்களேயே ஜேர்மனி அந்நியத் தேசங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்குபோதும், அது இவற்றைத் தனது ஒடுக்குமுறை வியூகத்தோடே மிக வலுவாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து நிலைநிறுத்தத் துருக்கி என்ற ஐரோப்பாவின் கதவு அவசியமானது!துருக்கிய மக்கள் மூன்று மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வாழ்கிறார்கள்.அவர்கள் ஜேர்மனியர்களின் வேலையிடங்களை திருடுவதென்பது எப்பவும் ஏற்க முடியாதது.இரண்டாவது உலகமகாயுத்தத்தில் சிதைந்த ஜேர்மனியைக் கட்டியெழுப்பியவர்கள் துருக்கிய மூதோர்கள்.அவர்கள் இன்று நடைபிணமாக நோய் நொடியோடு வாழும்போது அவர்களின் குழந்தைகளை இன்னும் இத்தேச மக்களின் ஒரு பகுதியகக் கணிக்காத ஜேர்மனியின் மனது மிக மோசமானதே!எண்பது மில்லியன்கள் ஜேர்மனியர்களின் குடும்பத்தில் ஆணும் பெண்ணுமென்று அனைவரும் வேலை செய்ய முற்படும் தேவைக்கு ஏற்ற தகமையை ஜேர்மனிய உற்பத்தி வீச்சு ஏலவே கொண்டிருந்தது.எனினும்,கிழக்கு ஜேர்மனியின் இணைவுக்கும் அதன் பின்பான கால உலகப் பொருளாதாரத்தில் பல் தேசியக் கம்பனிகள் சீன-இந்தியக் குறை கூலிகளைத் தேடிய வேட்டையிலும் இன்றைய ஜேர்மனிக்கு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பத்தில் வேலை செய்யும் அவசியத்துக்குத் தீனீபோடும் ஆற்றலில்லை!இது முதலாளியத்தின் தவிர்க்க முடியாத இருண்ட நிலை.எனினும்,இம் முரண்பாட்டை ஜேர்மனில் வாழும் அந்நியக் குடும்பங்கள்மீதான தாக்குதலாக மாற்றுஞ் சதி மிகக் கெடுதியானது.கடந்த சோலிங்கன் தீ மூட்டல் மற்றும் இன்றைய லூட்விக்ஸ்காபன் தீ மூட்டல்கள் இத்தகைய அரசியலின் கோர முகத்தை அம்பலப்படுத்திவிடுகிறது!



எரீயூட்டப்பட்ட லூட்விக்ஸ்காபன் துருக்கிய இல்லத்துக்கு வருகை தரும் துருக்கியப் பிரதமர் ஏர்டோகன் துருக்கிய மக்களுக்கு அமைதியையும்,நேசிப்பையும் புகட்டுகிறார்,கூடவே துருக்கிய மொழியில் கற்கும் பட்டப்படிப்பு-உயர்கல்லூரிகளை ஜேர்மனிய அரசு திறந்து அவர்களுக்கு உதவும்போது,அவர்கள் தாய் மொழியில் சிறப்பாகத் தேறும்அதே தரணம் ஜேர்மனிய மொழியிலும் மிகத் திறமையாகத் தேற்சியுறும் காலம் வருமென்கிறார்.இதையும் ஜேர்மனியக் கட்சிகள் எதிர்த்து"இது இனக் கலப்புக்கு-கலந்து இணைந்து வாழும் சமூகவியத்தைத் தடுக்கும்"என்று தமது இனவாத்தைப் புதிய பாணியில் ஒப்புவிக்க, அவரது பயணத்தின் உண்மை முகம் அம்பலப்படுகிறது.ஒப்பந்தம்-எண்ணைக் குழாய் உரையாடலானது இங்கே அழிவுற்ற மக்களின் அரசியல் வருகையாக ஒப்பேறுகிறது!அவரது வருகையில் அமைதிகொண்ட துருக்கிய இளைஞர்களின் மனது ஜேர்மனியச் சதி வலைக்குள் வீழ்ந்து அமுங்கிவிடுமாவென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.ஆனால்,துருக்கியயென்பது தவிர்க்க முடியாதவொரு அயற் தேசமாகவே இருக்கிறது ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு-குறிப்பாக ஜேர்மனிக்கு.எனவே,துருக்கிய முதலாளிகளுக்குத் தமது தேசம் ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் வருவது தவிர்க்க முடியாதென்பது தெரிந்தே இருக்கிறது!அவர்கள் தமது ஆர்வத்துக்காக இங்கே வாழும் துருக்கிய மக்களின் கழுத்தையும் அறுக்க முனைவர்.இதுதாமே முதலாளியம்?


அடுத்த ஆண்டு தொடரப்போகும் 3300 கிலோமீட்டர் நீள எண்ணைக் குழாய் அமைப்புத் திட்டம் துருக்கியை ஊடறுத்தே தாக்கப்படுகிறது-நிர்மாணிக்கப்படுகிறது.துருக்கியைத் தாஜா பண்ணாது விடும் ஒவ்வொரு பொழுதும் இந்த 500 கோடி யூரோ திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் நீடிக்கிறது!இதன் தொடர்ச்சியாக ஐரோப்பில் எருபொருள்-சக்தி-எரிவாயுவில் தனி ஆதிக்கஞ் செய்யும் இருஷ்சியாவில் தாம் தொடர்ந்து தங்கிவருவதைத் துருக்கியின் பகமை ஏற்படுத்திவிடுமோ என ஒவ்வொரு பொழுதும் அச்சம் கொள்ளும் ஐரோப்பிய-ஜேர்மனிய ஆளும் வர்க்கம் சில கண் துடைப்புச் சட்டங்களை நாசிகள்மீது ஏவும் வாய்புண்டு.இத்தகைய கண்துடைப்போடு அமைக்கப்படும் 3300 கிலோமீட்டர் நீளமுடைய குழாயில் தொடர்ந்து அவ்கானிஸ்த்தான்-ஈரான் எரிவாயும்,எண்ணையும் வந்தாக வேண்டும்.இல்லையேல் அக் குழாய்க்கு எந்தப் பெறுமதியுமில்லை.இதைத் தடுக்க இருஷ்சியாவின் முட்டுக்கட்டை கொசோவோ அங்கீகரிப்பை மறுப்பதாகவும் தொடரும்போது, அமெரிக்காவின் நிலையோ பரிதாபகரமாக நேட்டோவுக்குள் இயங்கும் நாடுகளை மேலும் துருப்புகளைத் தரும்படியும் அவ்கானிஸ்தானின் பயங்கரப்பகுதிக்குள்-மரணப் பொறிக்குள் அனுப்பும்படியும் ஜேர்மனியை மிரட்டுவதாக இருக்கிறது.கூடவே,இக் குழாயில் ஈரானின் எண்ணை ஐரோப்பாவுக்குள் வருவது கூடாதென்றும் மிரட்டுகிறது.இந்த இலட்சணத்தில் துருக்கியின் முக்கியம் இருக்க, துருக்கிய மக்களை மிகக் கேவலமாக அடக்க முனையும் ஜேர்மனிய நாசிகளை நினைக்கும்போது இதன் அடுத்த நகர்வு இன்னும் மோசமாக விரியும்.மாற்றாகளின் தயவில் தாங்கள் வாழ்ந்தாலும் தமது தேசம் தமக்கு மட்டுமேதாம் என்பது ஐரோப்பிய இனங்களுக்கு வழிவழி வந்த மனதின் விருப்பத் தொடர்சியாகும்.


மூலதனச் சுற்றோட்டம் உலகைத் தொடர்ந்து இனவாத-மதவாதச் சீரழிவுக்குள் தொடர்ந்து இருத்திவைக்கும்போது நமது தேசங்களிலோ நடைபெறும் நியாயமான தேசிய விடுதலைப்போராட்டங்களைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து இதே நாடுகள் ஒடுக்கி வருகின்றன.அதிலொரு பங்கைக்கூட நாசிய அமைப்புகளிடம் இவர்கள் காட்டுவதுகிடையாது.நாசிகள் ஜனநாயகத்துக்குட்பட்டே கட்சிகட்டுகிறார்கள் என்பது ஐரோப்பியச் சட்டவாதத்தின் கதை.


இனியென்ன செய்ய முடியும்?


ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு குடியேற்ற வாசிகளும் கொடுங்கரங்கள் நாசிய வடிவில் தம்மைப் பின் தொடர்வதை உணரும்போது தத்தமது தேசத்தில் ஒரு விடிவுக்காக ஏங்குவது தவிர்க்க முடியாது!ஆனால்,இந்த மனிதர்களின் தேசங்கள் நாளும் பொழுதும் தமது சொந்த மக்களையே குண்டுகள்போட்டும்,வெடிக்க வைத்தும் நரவேட்டையாடும்போது,அத்தகைய தேசங்களின் விடிவு இந்த நூற்றாண்டில் இல்லை என்பதே நம் முன் நிற்கும் உண்மையாகும்.



அங்கேயும் கருப்பு நாசிகள்,இங்கேயும் வெள்ளை நாசிகள்.நாம் போகும் இடம் இனி எங்கே?பயப்பட வேண்டாம்,அதோ இடுகாடு.ஆ... அங்கேயும் ஒரு குழியை வேண்ட வேண்டும்-பராமரிக்க வேண்டும்!ஆக,இழப்பதற்கு எதுவுமே இல்லை.அப்ப பிறகென்ன போராடு, இவற்றைப் பெறுவதற்கு.அதாவது,கெளரவத்தோடு உழைத்து உயிர்வாழ ஒரு தேசம்!இதைவிட மாற்று வழி எவருக்கும் இல்லை என்பதே உண்மை!



ப.வி.ஸ்ரீரங்கன்
10.02.2008
வூப்பெற்றால்.





Sunday, February 03, 2008

அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே?

எமக்குள்ளேதாம் எமது எதிரிகள்:சமஷ்டி,ஜனநாயக-தேசிய விடுதலை வாதங்களுடன்!


// எருதின் முதுகில் உட்கார்ந்து கொண்டுள்ள ஈ, எருது போக வேண்டிய
திசையைச் சொல்லுகிற மாதிரி, நமது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சிலர் இந்தியா தனது
பிராந்திய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் பாகிஸ்தானுக்கும்
சீனாவுக்கும் நண்பனாக உள்ள இலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ள வேண்டும்
என்று பரிந்துரைக்கிறார்கள்//


அன்பு வாசகர்களே,வழமைபோலவே இது மறுபக்கக் கட்டுரை குறித்த பார்வைதான்.எனினும், இக்கட்டுரையில் சில முக்கியமான கருத்துக்களை அக்கட்டுரையாளர் முன்வைக்கிறார்.நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.

ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?


இது புரட்சிகரமானதா?


எங்கள் எதிரிகள் யார்?

அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?

இதற்கு இன்றைய தினக்குரலின் மறுபக்கம் ஓரளவு பதிலளிக்கிறது வாருங்கள் படித்து விளங்கி-விவாதித்து,நம்மைத் தகவமைப்போம்.இதற்கு முன் எமது கருத்துக்கள் சில:


>>>அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே!"
என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. நாம் நாடுகிற "அக்காமார்"நமது கழுத்தை
நெரித்துக் கொல்லக் காத்திருக்கிற அக்காமார் என்பதையுமல்லவா சேர்த்துச் சொல்ல
வேண்டியுள்ளது. <<<



இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!

இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை!இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!

இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.



அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!

>>>இஸ்ரேல், பங்களாதேஷ் போன்றவை மூலம் உருவான
நெட்டைக்கனாக்களிலிருந்து நம்மை நமது அனுபவம் விடுவித்திருக்க வேண்டும். ஆனாலும்
ஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் பெற்றுத் தருகிற "சுதந்திரங்கள்" மூலமும்
நமது கனவுகள், அதாவது அந்நியர் வந்து வாங்கித் தருகிற சுதந்திரங்கள் பற்றிய கனவுகள்
கவனமாகவே பேணப்படுகின்றன. உண்மைகளைக் கேட்கத் தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
<<<


1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.

வட ஈராக்க குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.

இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.

>>>என்றாலுஞ் சில பேருக்கு அமாவாசையில் தான் நிலவு
தெரிகிறது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தன் முயற்சியில் தளராதவராக
இந்திய வேதாளத்தை அதன் முருக்க மரத்திலிருந்து இறக்குவதற்கு மீண்டும்
களமிறங்கியுள்ளார். 13 ஆவது சட்டத்திருத்தத்திலிருந்து தமிழரைக் காப்பாற்ற இந்தியா
முன்வர வேண்டும் என்று டெய்லி மிரர் 26.01.2008 இதழில் அவரது நேர்காணலிற்
கூறப்பட்டுள்ளது. எங்களில் எவருக்கும் தெரியாத ஏதோ இரகசியத்தை இந்திய ஆட்சியாளர்கள்
அவரது காதில் ஓதியுள்ளார்களா, தெரியவில்லை.
என்றாலும் உலக நிகழ்வுகளிலிருந்து
நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்களைக் கற்கிறதாகத் தெரியவில்லை. என்றாலும் வீண்
கற்பனைகட்கும் பகற்கனவுகட்கும் இட்டுச் செல்லுகிற விதமாக வரலாற்று உதாரணங்களை
வடிகட்டி உருவகப்படுத்த அவர்கட்கு இயலுகிறது. தெரிந்துகொண்டே தமிழ் மக்களை
எல்லாருமாக ஏய்த்து வருவது ஏன்? <<<


இங்கே,நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே,சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே!இதைக் கடந்த குண்டுவைப்புகள்,இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன.இத்தகைய அரசியலின் விளைவுகள் குறித்து தினக்குரல் மறுபக்கக் கட்டுரையாளர் திருவாளர் பெயரறிந்த பேராசிரியர் தனது கட்டுரையில் பேசுகிறார்.காலத்தின் அவசியங்களில் இத்தகைய உரையாடல்கள் அவசியமானவை!நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!இதையே அவர் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்.இது அவசியமானது.

இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!

இந்த நோக்கத்தோடு மறுபக்கக் கட்டுரையாளரின் கட்டுரைக்குள் உள் நுழைவோம்.அது பேசும் நியாயப்பாடுகளை நாம் விவாதிப்போம்-விளங்கிக்கொள்வோம் நமக்குள்!விளங்கும் ஒவ்வொரு தரணமும் நமது விடுதலைக்கான புரட்சிப்பாதையைச் செம்மையுற வைத்து முன்னேறுவோம்.வாருங்கள் தோழர்களே,இதைவிட்ட வேறுவழி நமக்கு இருப்பதற்கில்லை!இலங்கையை இருப்பத்தியோராம் நூற்றாண்டில் உலகத்தின் வலைகளிலிருந்து மீட்டு, அனைத்து இனங்களுக்கும் உரிய தேசமாக்குவோம்.இது நமது மக்களால் முடியும்.இனங்களின் ஒற்றுமையில் உருப்படாது போவது எதுவுமில்லை."ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"என்று நமது முன்னோர்கள் அறியாதா கூறீனார்கள்?

தினக்குரலிலிருந்து இந்த மறுபக்கம் மீள் பதிவாகிறது.அதற்கு வழமைபோலவே நன்றி, கூடவே வாசகர்களுக்கும்தான்.


தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
03.02.2008



மறுபக்கம்:


சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் தீவின் வடக்கில் துருக்கிய சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் நீண்டகாலமாகவே இருந்து வந்தது. எனினும், கிரேக்கத்தில் இராணுவ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் சைப்ரஸ் சனாதிபதியாக இருந்த மக்காரியொஸ் பாதிரியார் சைப்ரஸை கிரேக்க நாட்டுடன் இணைக்கப்போவதாக அறிவித்தபோது துருக்கிய சிறுபான்மையினரிடையே அது அச்சத்தை ஏற்படுத்தியது. 1974 ஆம் ஆண்டு இச்சூழ்நிலையை பயன்படுத்தி துருக்கிய படைகள் சைப்ரஸ் தீவினுள் நுழைந்தன. துருக்கியர் பெரும்பான்மையாக வாழுகிற வட சைப்பிரஸ் துருக்கிய படைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாயிற்று. இந்த ஆக்கிரமிப்புக்கான வசதியான சைப்பிரஸ் நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு 1960 இல் செய்யப்பட்ட உடன்படிக்கைகட்கு துருக்கியும் ஒரு பங்காளியாக இருந்தமை பயன்பட்டது. கிரேக்க இராணுவ சர்வாதிகாரத்தின் நோக்கம் மக்காரியொஸின் நோக்கத்திற்கு உடன்பாடாக இருந்ததால் சைப்பிரஸின் சுதந்திரத்தை காப்பது என்ற வாதம் நியாயமாக தெரிய வாய்ப்பு இருந்தது.


துருக்கியின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்தும் சைப்பிரஸில் தன் இருப்பை தக்கவைக்கிற நோக்கத்துடனேயே இருந்தது. கிரேக்க இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து சைப்பிரஸை இணைப்பது பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்பும் துருக்கியப் படைகள் தொடர்ந்தும் அங்கு இருந்ததிலிருந்து இது தெளிவாகியது. 1983 ஆம் ஆண்டு " வட சைப்ரஸ் துருக்கிய குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டது. இது துருக்கிய ஆக்கிரமிப்புக்கு வசதியாகவே நிகழ்ந்தது. ஏனெனின், இதன் மூலம் ஒரு சுதந்திர நாட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாட்டின் அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பேரிலேயே துருக்கிய படைகள் அங்கு இருப்பதாக கூறமுடிந்தது. எனினும், இன்றுவரை இக்குடியரசை அங்கீகரித்த உலக நாடு துருக்கி மட்டுமே.


அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ இவ்விடயத்தில் எதுவும் செய்ய இயலாத விதமாக துருக்கியும் கிரேக்கமும் "நேற்றோ" இராணுவ கூட்டமைப்பில் உள்ளன. அதைவிடவும் துருக்கி அமெரிக்காவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்து வந்தது. சனநாயக கிரேக்கம், பலஸ்தீன பிரச்சினை உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுக்கு முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்துவந்தது. சமயம், பண்பாடுஎன்கிற வகைகளிலும் அன்றைய யூகோஸ்லாவியாவின் சேர்பிய தேசிய இனத்துடனும் சோவியத் ரஷ்யாவுடனும் ஒற்றுமைகளையுடையது.


துருக்கி சீர்திருத்தப்பட்ட இஸ்லாமிய நாடாக, அதாவது ஐரோப்பிய நாடுகளின் விழுமியங்கள் பலவற்றை உள்வாங்கிய நாடாக, மாற்றப்பட்டு ஐரோப்பாவின் ஒரு பகுதி போலவே அதன் சர்வதேச அரசியற் செயற்பாடுகள் அமைந்தாலும், அந்த நாட்டின் முஸ்லிம் பெரும்பான்மை பற்றியும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி பெறுகிற வாய்ப்புப் பற்றியுமான அச்சங்கள் ஐரோப்பிய ஆட்சியாளர் மத்தியில் உள்ளன. அதை விடவும் 19 ஆம் நூற்றாண்டில் துருக்கி மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவின் தென் கிழக்கிலும் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தின் நினைவுகளும் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இணைப்பதற்குத் தடையாக உள்ளன. எனினும், குர்தியர்கட்கு எதிரான மனித உரிமை மீறல்களும் நாட்டின் இராணுவ அடக்குமுறை ஆட்சியின் பிற மனித உரிமை மீறல்களும் பற்றிய குற்றச்சாட்டுகளே. துருக்கியை இணைப்பதற்குத் தடையான காரணங்களென முன்வைக்கப்படுகின்றன. எனவே, துருக்கி ஒரு அவசியமான இராணுவக் கூட்டாளியாகவும் தவிர்க்க வேண்டிய ஒரு சமூக பொருளாதாரப் பங்காளியாகவும் இருந்து வருகிறது. துருக்கியின் பின்தங்கிய பொருளாதார நிலை காரணமாக மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியில், `விருந்தாளி உழைப்பாளராக' உள்ள அயல்நாட்டோரில் துருக்கியரே பெரும்பான்மையினராகவும் இருந்து வருகின்றனர். அங்கும், ஒருபுறம் அவர்களது மலிவான உழைப்பு அவசியம். அவர்களை தங்களுட் பகுதியினராக நடத்துவது இயலாது என்ற இரண்டக நிலையே உள்ளது.


துருக்கியின் இன்றைய நிலைமையைக் கவனித்தால், இந்தியாவும் பல வழிகளில் அதுபோன்ற ஒரு நிலையை நோக்கி நகருவதைக் காணலாம். ஒரு நூற்றாண்டு முன்பு வரை ஒரு முன்வரிசை வல்லரசாக இருந்து வந்த துருக்கியின் ஒட்டோமன் சாம்ராச்சியம் சரிந்து ஐரோப்பாவின் புதிய வல்லரசுகட்குக் கீழ்ப்பட்டுக் கிடந்த துருக்கி இன்று மேற்காசியா மீதான அமெரிக்க ஆதிக்க நோக்கங்கட்கான எடுபிடியாகவே உள்ளது. எனினும், அமெரிக்கா துருக்கியின் பிராந்திய நோக்கங்கட்கும் குறிப்பாக அதன் தேசிய இன ஒடுக்கற் கொள்கைக்கு உடன்பாடாகவே நடந்துகொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது. இதன் விளைவாகவே ஈராக்கின் வட பகுதியில் உள்ள குர்திய சுயாட்சிப் பிரதேசத்தைத் தனக்கு விசுவாசமான குர்திய தனி நாடாக்குகிற நோக்கத்தை நிறைவேற்ற இயலாமல் அமெரிக்கா தடுமாறுகிறது.

காஷ்மீர் பற்றிய அமெரிக்க நிலைப்பாடு கடந்த இருபது ஆண்டுகளில் மாறியுள்ளது. இது காஷ்மீர மக்களின் சுயநிர்ணயம் பற்றிய அக்கறையுடன் தொடர்புடைய மாற்றமல்ல. இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்க நோக்கங்கள் பற்றி அமெரிக்கா கவலை கொண்ட காலம் ஒன்று இருந்தது. எனினும், கடந்த பத்தாண்டுகளில் நிலைமைகள் முற்றாக மாறிவிட்டன. இந்தியாவுக்கு விட்டுக் கொடுத்துத் தன் தென்னாசிய மேலாதிக்கத்தை வலுப்படுத்துவது என்பது இன்றைய அமெரிக்க அணுகுமுறை. அது மாறலாம். அந்த மாற்றம் இப்போதைக்கு இயலுமானதல்ல. அமெரிக்கா சீனாவையும் ரஷ்யாவையும் இலக்கு வைக்கிறது. அந்த நோக்கத்திற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்புத் தேவை. அதே அளவுக்குப் பாகிஸ்தானின் ஒத்துழைப்பும் தேவை. இரண்டையுமே ஒரே நேரத்தில் சமாளிக்கக்கூடிய விதமாக பாகிஸ்தானில் ஒரு அமெரிக்கச் சார்பான ஆட்சி தேவைப்படுகிறது. முஷாரப் - பெனாஸிர் கூட்டணிக் கணக்குப் பிழையாகிவிட்டாலும் இந்தியாவுடைய மேலாதிக்கத்திற்குப் பாகிஸ்தான் பெரிய சவாலாக இராது. இது தான் தென்னாசியாவின் இன்றைய நிலைமை.


இதற்கிடையில் எருதின் முதுகில் உட்கார்ந்து கொண்டுள்ள ஈ, எருது போக வேண்டிய திசையைச் சொல்லுகிற மாதிரி, நமது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சிலர் இந்தியா தனது பிராந்திய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நண்பனாக உள்ள இலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். முழு இலங்கை மீதும் ஆதிக்கம் செலுத்த முனைகிற அமெரிக்கா இந்தியாவுக்கும் நீண்டகாலத்தில் ஒரு மிரட்டலாக அமையும் என்பது இவர்களுக்கு விளங்காது என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் இவர்கள் யாரை ஏய்க்கப் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சந் தெளிவீனமாகவே உள்ளது. இந்தியா மட்டும் இவர்களை நம்பி எதையுமே செய்யப்போவதில்லை.

என்றாலுஞ் சில பேருக்கு அமாவாசையில் தான் நிலவு தெரிகிறது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தன் முயற்சியில் தளராதவராக இந்திய வேதாளத்தை அதன் முருக்க மரத்திலிருந்து இறக்குவதற்கு மீண்டும் களமிறங்கியுள்ளார். 13 ஆவது சட்டத்திருத்தத்திலிருந்து தமிழரைக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று டெய்லி மிரர் 26.01.2008 இதழில் அவரது நேர்காணலிற் கூறப்பட்டுள்ளது. எங்களில் எவருக்கும் தெரியாத ஏதோ இரகசியத்தை இந்திய ஆட்சியாளர்கள் அவரது காதில் ஓதியுள்ளார்களா, தெரியவில்லை.


என்றாலும் உலக நிகழ்வுகளிலிருந்து நமது தலைவர்கள் கற்க வேண்டிய பாடங்களைக் கற்கிறதாகத் தெரியவில்லை. என்றாலும் வீண் கற்பனைகட்கும் பகற்கனவுகட்கும் இட்டுச் செல்லுகிற விதமாக வரலாற்று உதாரணங்களை வடிகட்டி உருவகப்படுத்த அவர்கட்கு இயலுகிறது. தெரிந்துகொண்டே தமிழ் மக்களை எல்லாருமாக ஏய்த்து வருவது ஏன்?


இஸ்ரேல், பங்களாதேஷ் போன்றவை மூலம் உருவான நெட்டைக்கனாக்களிலிருந்து நம்மை நமது அனுபவம் விடுவித்திருக்க வேண்டும். ஆனாலும் ஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் பெற்றுத் தருகிற "சுதந்திரங்கள்" மூலமும் நமது கனவுகள், அதாவது அந்நியர் வந்து வாங்கித் தருகிற சுதந்திரங்கள் பற்றிய கனவுகள் கவனமாகவே பேணப்படுகின்றன. உண்மைகளைக் கேட்கத் தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?


"அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே!" என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. நாம் நாடுகிற "அக்காமார்"நமது கழுத்தை நெரித்துக் கொல்லக் காத்திருக்கிற அக்காமார் என்பதையுமல்லவா சேர்த்துச் சொல்ல வேண்டியுள்ளது.

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...