Friday, November 30, 2007

அன்னை!

அன்னை!

எனது குவளையுள்
நுரையெழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை

மெல்லத் தலை கோதி
அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவி


உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி

மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து...

பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!
சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்


அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு


முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல


கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்


அன்னை இனி வரமாட்டாள்.

அவளுக்கு வயசாகி விட்டது!

தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
ஆத்தையின்
தெம்பூட்டல்கள் இனியெதற்கும் வரப்போவதில்லை.

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
அப்பனும் இல்லை.

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த
மந்தை மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழந்தேன்!

ப.வி.ஸ்ரீரங்கன்




Thursday, November 29, 2007

ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும்...

அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்:


யாரும் பொதுப்படையான அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள்.இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய "புலியெதிர்ப்பு,புலி ஆதரவு-சிங்களப்பாசிச அரச எதிர்ப்பு,ஆதரவு" என்ற நிலையிலுள்ளது.


நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அது தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.
இங்கே நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.


இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.


இத்தகைய சமூகச் சூழலில்; புலம்பெயர் மக்களில் பலர் தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களில் "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள்.இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.


இந்த இழி நிலையில் மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,இயக்கங்களின் அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?இதற்குத் துணையாக மக்களை அணிதிரட்டி அவர்களின் நலனை முதன்மைப் படுத்தும் புதிய ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்புமில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம் எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.


மாற்றுக் கருத்தாளர்களும்,அவர்களின் குழி பறிப்பும்:


மேற்குலகுக்கு வரும் தமிழ் வானொலி,தொலைக்காட்சிகளானலும் சரி,அல்லது மாற்றுக் கருத்தாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பழைய பெரிச்சாளிகளும்சரி தமது அரசியல் இலாபங்களுக்காகப் பதவிகளுக்காக மக்களை ஏமாற்றும் புதிய புதிய கூட்டுகளுடன் அணிசேர்ந்து தமிழரின் சுயநிர்ணயவுரிமைப் போராட்டத்தை(இதைப் புலியிடமிருந்து புரிந்து கொண்ட மூளையால் பார்க்கவேண்டாம்!புலிகளுக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது)நசுக்கித் தமது வாழ்வை மேம்படுத்தத் திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.இதைக் கவனிக்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள அப்பாவித் தமிழர்கள் "இயக்க வாத மாயையுடன்"எதிர்த்துக் கருத்திட்டு, அறிவால் வெல்ல முடியாது- அறிவின்றித் தவிக்கிறார்கள்.இவர்களிடம் இறுதியில் உணர்ச்சி வசப்பட்ட தூஷண வார்த்தையே ஆயுதமாகிறது.அப்பாவி மக்களை வழிப்படுத்தி,அவர்களிடமிருக்கும் போராட்டவுணர்வை,இயக்கவாத மாயையிடமிருந்து காத்து இந்த மக்கள் விரோத அரசியலை வென்றாக வேண்டும்.


ஆனால், இங்கு நடப்பதோ வேறான நிலை.நம்மில் பலரிடமுள்ள"Tamil mind"செயற்படாமல் இருக்கிறது.இது உயிருக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கிப்போயுள்ளது.இவர்கள் "We are the Free"என்று தப்பித்துக்கொள்வதற்குப் புலிகளின் மக்கள் விரோத அரசியலே காரணமாகிறது.இதனால் பதவிக்காக இனத்தையே பலியிடும் மூன்றாம்தர அரசியலை ரீ.பீ.சி. வானொலிக் குழு முன்னெடுக்கிறது.இத்தகைய சூழலில் மக்கள் சார்ந்த நலன்களைத் தமது பதவிக்காகப் பொருள்தேடும் நோக்குக்காக இந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் பயன் படுத்தி வெற்றி பெறுவதை இனியும் பார்த்திருக்க முடியாது.


பண்பாட்டு மௌனமும்,பண்பாட்டு இடைவெளியும்:


ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(;Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைக்கின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிறது.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை.இன்றைய வர்க்க அரசியலில் வர்க்கத்தைத் தாண்டிய எந்த மக்கள் நலனும் கிடையாதென்ற அடிப்படை அரசியல் அரிவரிப் பாடம்கூடப் புரியாது தம்மை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர்களாகவும் மற்றவர்களைச் சாடவும் உரிமையை எடுத்துவிடுகிறார்கள்.".Microphysics is feeling its way into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of matter,just as complex psychology is pushing forward into the unknown side of the Psyche!"-G.G.Jung இதுதாம் யுங்கின் கூற்றிலிருந்து இவர்களைப் பற்றி நான் புரிவது. இந்தப் புள்ளியே மிக மோசமானது.இது புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறதென்பதை மறந்துவிட்டுப் புது பாக்களைத் தொகுத்துவிடுகிறது.இல்லாதுபோனால் மற்றவர்களுக்குப் புதுப் புதுத் தொப்பியைத் தைத்து அழகு பார்க்கிறது.


நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற உலக ஏகாதிபத்தியத்துக் ஆதரவான கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.


இதனால் சிங்கள அரசு இந்தியாவோடு சேர்ந்து காய் நகர்த்தும் அரசியல்-ஆதிக்கப் போரை எதிர் கொண்டு தோற்கடிக்க முடியாத வெறும் கையாலாகாத இனமாகத் தமிழ் மக்கள் சீரழிந்துள்ளார்கள்.இந்த நிலையில் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தின் பின் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பறிக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை கொலைகளும்,பாலியல் வல்லுறவும் எமது மக்களின் ஆன்ம பலத்தையே காவு கொண்டுவருகிறது.


இங்கே நேர்ந்தது என்னவென்றால்"ஆரு குத்தியும் அரிசியானால் சரி" என்ற தனிமனிதத் திருப்தியுறும் மனதின் பண்பாடே!இதுவேதாம் பண்பாட்டு மௌனத்தின் ஊற்றுமூலமாகும்.இதன் தொடர்ச்சியானது ஆயுதக் குழுக்களால் வன்முறை சார்ந்த சமூக ஒடுக்குமுறையாக விரிந்தபோது அதுவே பண்பாட்டு இடைவெளியை இன்னும் அதிகமாக்கியது.இதனால் நாம் உயிர் தப்பிவிடுவதே தனிமனித விருப்பாக நமது சமூகத்துள் முகிழ்த்தது.இந்த விருப்புறுதியின் தேர்வே இன்றைய படுகொலைகளின் நீட்சியாகும்.இதுதாம் நமது பண்பாட்டு மௌனம் தந்த அரசியலாகும்.


பண்பாட்டு இடைவெளியை, மௌனத்தை உடைக்கும் எழுத்து இயக்கம்:
இந்தச் சமூக அவலத்தின் காரணமாக எழுந்த எதிர்ப்பியக்கமாக நமது கல்வியாளர்களில் அற்பமான பகுதியினர் செயற்பட்டபோது அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.எங்கள் கவிஞர்கள் சிவரமணி தன்னையே அழித்தாள் இதைக் கண்ணுற்று,கவிஞர் செல்வியோ கடத்தப்பட்டுக் காணாதுபோனாள்.இருளின் தூதர்களான ஆயுதக் குழுக்கள் இந்த் தமிழினத்தின் ஆன்ம பலத்தையே உடைத்தெறிந்து அவர்களின் போராட்ட மனதைத் தகர்த்தபோது இதை எதிர்த்துக் கவிதை எழுதிய ஜெயபாலன்,சேரன் போன்றவர்கள் இறுதியல் ஆயுத தாரிகளின் அற்ப சலுகைகளுக்காகப் பண்பாட்டு மௌனத்தைக் கடைப்பிடித்து,அந்தவகை அரசியலுக்குள் அமிழ்ந்துபோயினர்.செழியனின் அற்புத மான கவிதை வரிகள் இந்த மௌனத்தை உடைக்கப் போரிட்டுக் கொண்டது.



"யேசுவே! நீர் தேடப்படுகிறீர். யேசுவே எங்கள் தேசத்தில் நீர் தேடப் படுகிறீர்.கிறிஸ்த்துவ தேவாலயமொன்றில்உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ,மாட்டுக் கொட்டிலொன்றில் வைத்தோ,மரித்துப் போன மனிதன் எவனாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப் படுவீர்..."என்றும்,



"விசாரணையின் முடிவில் சிலுவையிலல்ல தேசத் துரோகியாக மின் கம்பத்தில் அறையப் படுவீர்" என்றும் செழியனின் எழுத்துக்கள் இந்த மௌனத்தை உடைக்கப்பாடுபட்டது.


அந்தச் செழியன் கனடாவில் இன்று மௌனமானார்!


வனத்தின் அழைப்பை எழுதி என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரமணீஸ் என்ற இயற் பெயருடைய அஸ்வக் கோஸ்இன்று தினக்குரலில் பனுவல் பக்கத்தின் பொறுப்பைக் கவ்விக்கொண்டு மௌனமானார். எங்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பி,சிவசேகரம்,கணேசலிங்கம்...இத்தகைய சூரர்களுக்கும் மத்தியல் தொடர்ந்து குரல் எறிந்து இந்த மௌனத்தை உடைப்பதிலும் மக்கள் நலன் அரசியலுக்குமாக நாம் போரிட்டு வருகிறோம்.


உதிரிப் புலி எதிர்ப்பு:


இப்போது நடைபெறும் வானொலி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும் எதிரானவோர் அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ் உதிரிப் பதிப்புகள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகள் முடங்கியுள்ளார்கள்.


பிராமணர்கள்போலதாம் இன்றைய புலி எதிர்ப்புக் குழுக்களுக்குள் உள்ள இலங்கையரச சார்பாளர்கள் தமது நலனுக்காக மேற்கூறிய தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வுக் கூறுகளையே அந்நியர்களுக்கு விற்கிறார்கள். இந்த நிலையிலும் இலங்கைத் தமிழினம் தனது அரிசியல் அபிலாசைகளை இன்னும் நம்பிக்கையோடு கனவு காணுகிறது.


சங்க காலத்திற்குப் பின் தொடர்ந்து பல அந்நிய ஆட்சிகளின் கீழ் தனது அடிமை விலங்கைப் புதுபித்துவரும் தமிழினம் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விடுதலை,சமத்துவம்,சகோதரத்துவம்,ஜனநாயகம் என்று முழங்கிய ஆயுதக் குழுக்களாலும்,அரசுகளாலும் ஏமாற்றப்படுவது நிசமாகி வருகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

Friday, November 23, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:5

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:5



"...பாருங்கள்!
எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று.
நான் பொய்யுரைக்கின்றேனா?
நீங்களே காண்கின்றீர்கள்.
உழவனின் மகனும்,அந்தச்
செம்படவனின் மகனும்
எங்கோ கண்காணாத இடத்திற்கு
ஓடிப்போனார்கள்.
கிழவிகள்
அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்:
"அவர்கள் துப்பாக்கியால் சுடுவார்களாம்!"
துப்பாக்கிகள்...!
துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது."
-இரஞ்சகுமார்.(மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு,பக்கம்:138)



சிங்கள பெளத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,;நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.இல்லையேல், பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!இங்கே, இராஜபக்ஷ முதல் பிரபாகரன்வரை நம்மைக் கருவறுப்பதைப்பார்ப்போம்.


நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை"மாட்சிமைதாங்கிய" மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.


நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.எனினும்,இதுவரை இந்த முயற்சி கைகூடாதிருப்பதற்கான காரணிகள் என்ன?இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதபடி அனைத்துக் கட்சிகளும் முடங்கிக் கிடக்கும் அரசியல்தாம் என்ன?நிலவுகின்ற அமைப்பை மாற்றி,அதன் இடத்தில் புரட்சிகரமான அமைப்பை நிறுவும் போராட்ட இலக்கற்ற ஆளும் வர்க்கச் சார்புடைய கட்சிகளால்-இயக்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டது போதும்.இது குறித்துச் சற்றுக் குறுகிய வடிவில் பார்ப்போம்.ஏனெனில் இத்தகைய பார்வைகளை போராட்ட ஆரம்பக் காலத்திலேயே நாம் முன் வைத்தவர்கள்.இன்றைய இளைய தலைமுறைக்காவும், போராட்டத்தில் தமது உயிரையே தேசவிடுதலைக்கென்று நம்பித் தியாகஞ் செய்யும் தேச பக்த நமது சிறார்களுக்காவும் நாம் இதை மீளப் பார்ப்போம்.


இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடும் அதன் இன்றைய நிலையும்:

முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை.அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது.இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது.இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது.இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது.மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.


வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது.இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும்,ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது.இலங்கையின் முதலாளியச் சமுதாயமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை.இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது.நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது.காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது.இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது.மாறாகத் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது.இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது.இங்கேதாம், இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலாகப் பங்குச் சண்டைகள் வருகின்றன(இத்தகைய பங்குச் சண்டை வரும்போதுகூடத் தமிழ் மக்கள் பக்கத்தில் தமிழ் பேசும் மக்கள் கணிசமானர்வர்கள் சாதிரீதியகத் தாழ்த்தி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்).பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும்,அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசில் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும் போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டுகிறது.


இத்தகைய பொருளாதார முரண்பாடுகள் கூர்மையடைந்தபோது யாழ்வேளாள மேட்டுக்குடிகளின் மேலாதிக்கத் தளத்தில் பாரிய தாக்கம் முன்னிலைக்கு வருகிறது.இவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில்(இங்கே பொருள்சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குமே சேர்க்கப்படுகிறது.அந்தப் பங்கில்,நிதி,நிர்வாகம்,அரச பதவி,அமைச்சு,கல்வி,அதிகாரம் என்றபடி விரியும்) பெற்றிருந்த அசுரப்பலம் உடைபடுவதற்கான சிங்கள முதலாளிய வர்க்கத்தின் வியூகம் சிங்களப் பேரினவாதமாக விரிகிறது(இது பெரும் விருட்ஷமாக விரிந்து இன்று வளர்ந்து இலங்கைச் சமுதாயத்தையே படுகுழியில் தள்ளியிருக்கிறது).அது,இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் இலங்கையின் சிறுபான்மை இனங்களைத் தலைவெட்ட எடுத்த முயற்சியில் முதலாவது பலி இலங்கை முஸ்லீம்கள்.இந்தச் சிங்களப் பேரினவாதம் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தை,அதன் தேசிய அடையாளங்களை சிதைப்பதன் மூலமாகத் தமது முரண்பாடுகளை தீர்க்க முனைந்த இலங்கை இனமுரண்பாட்¡னது முற்றிலும் பொருளாதார நலன்களின் வழியே எட்டியவை.


இத்தகைய இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.அதாவது, இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள்.இது சிங்கள அரசை நிர்ப்பந்திக்கும்-அடிபணிய வைக்கும் வியூகமாகவே இருந்தது.மற்றும்படித் தமிழ் பேசும் மக்களினதோ அல்லது வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் பெருந்தொகையான சிங்கள-முஸ்லீம்,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் புரட்சிகர நடவடிக்கையையோ முன் தள்ளவில்லை.சாரம்சத்தில் தமது வர்க்க முரண்பாட்டைத் தீர்ப்பதற்கானவொரு நிர்ப்பந்தம் தமக்குப் பின்னால் கோசமிடும் பெரும் மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்து,இலங்கை அரசை ஏமாற்றத் தமக்குப் பின்னால் பெரும் பகுதி தமிழ்பேசும் மக்கள் நிற்பதாகக்காட்டி அரசைப் பணிய வைக்க முனைந்தார்கள்.இதற்காகப் பரந்து பட்ட மக்கள் சக்தியென்ற ஒரு கானால் நீரை உண்டு பண்ணவே"தமிழீழம்"தமிழருக்கான கோசமாக முன் தள்ளப்படகிறது.இத்தகைய தலைமையிடம் பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதைக் கருத்தளவில்கூட இனம்காணமுடியாதிருந்தபோது, அதன் பேத்தலான இடத்துக்கு ஆயுதக் குழுக்கள் வருகின்றன(இதை மிக நேர்த்தியாகச் செய்த முடிக்க இந்தியா அனைவரையும் உள்வாங்கிச் சாணாக்கிய தந்திரத்தை இயக்கங்களுக்கிடையில் நிலைப்படுத்தியது).

இப்போது பாரிய வலுவொன்று சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கு உந்து சக்தியாக வருகிறது.தமிழீழக் கோசமானது சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் கதையாகச் சிங்கள உழைக்கும் வர்க்கத்தை ஆளும் சிங்கள பெளத்த வெறியர்களிடம் தஞ்சம் கொள்ள வைக்கிறது.இங்கே,சிங்களப் பேரினவாத அரசின் இருப்புக்கு மிக ஒழுங்கானவொரு வீச்சைத் தமிழ்த் தலைமைகளும் அதன் பின் புலிகளும் ஒத்திசைவாக இருக்கின்ற தரணங்களை இந்தியா வலுவாக்கிச் செய்து முடித்தது.சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைச் செய்தது.தனது இருப்புக்காகப் பெளத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தைப் பேசியது.இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து இன்று தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய கருத்தியல் மனதைச் சிங்களத் தரப்பில் ஏற்படுத்தியிருக்கிறது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக இது உருப்பெற்றுபோது அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது-படுத்துகிறது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும் இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தத் தரணத்தில் இலங்கையில் நடைபெறும் எந்தத்தரப்பு யுத்தத்தையும் எதிர்த்துக் குரல் எழாதபடி அரசும் புலிகளும் மிக நேர்த்தியாகக் காய்களை நகர்த்த இப்போதும் இந்தியா வழி காட்டுகிறது.


இங்கே, இராஜபக்ஷ அன்ட் பிரபாகரன் கொம்பனிக்கு நல்ல வாய்ப்புகள் இந்திய-உலக நலன்களால் முன் தள்ளப்படுகிறது.ஆக,இலங்கைப் பெரும்பான்மை மக்கள் சமூகத்தில்,பெளத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு கிடக்கிறார்கள்.இங்கே,தமிழ்பேசும் மக்கள் யுத்தத்தால்படும் வேதனைகளை,இன்னல்களை,அவர்களது நியாயத்தன்மையின் வாயிலாக எழும் கண்ணோட்டத்தைக்கூட புரிந்துகொண்டு முற்போக்காய்ச் சிந்திக்கும் ஒரு சக்தியாக எழுவேண்டியச் சிங்களத் தொழிலாளவர்க்கம் பேரினவாதத்தால் முடமாக்கப்பட்டார்கள்.


இது யாரால்?


நமக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கத்தால்-ஏகாதிபத்தியத் தரகர்களால்-இந்தியக் கைக்கூலிகளால் நிகழ்ந்த கொடுமை இது!



தனிநாடும்,தேசியத் தலைவரும்:



இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.இணையம் முதல் வானொலி, தொலைக்காட்சிவரை இவர்களின் ஆதிக்கம் விரிந்தபடி.இத்தகைய பிரச்சாரத்தின் உச்சபச்சக் குரலோ சொல்கிறது தமிழீழப்போராட்டத்தை-புலிகளைக் குறைந்தபட்சம் எதிர்காத நிலையில் கருத்தாடுவது அவசியமாம்.


"அனைத்தையும் தேசியத் தலைவர் வெல்வார்-அவர்காலத்தில் தமிழர்களுகுத் தனிநாடு கிடைத்துவிடும்,அவரது கையைப் பலப்படுத்தத் தமிழர்கள் எல்லோரும் முன் வரவேண்டும்" இத்தகைய வாதங்களின் பின்னே மறைந்துகிடக்கும் சமூ உளவியல் என்ன?ஒரு தனிமனிதனைச்சார்ந்து முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் மையப்படுத்தி, அந்தத் தலைவனைச் சுற்றி மண்டியிட வைக்கும் இந்தக் காரியமானது என்ன?இது ஒரு வகையில் மக்கள் விடுதலையைக் காவு கொள்ளும் கருத்தியல் மனதை எமக்குத் தரவில்லையா?இத்தகைய குழிபறிப்புகஇகு எந்த அந்நியச் சக்தி தூண்டுகோலாக இருக்கிறது?இதன் பின்னாலுள்ள தொடர்வினை தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது இல்லையா?. இதன் வெளிப்பாடு சமுதாயமட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காததாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.குறிப்பாகத் தமிழ்ச் செல்வனின் மரணத்தில் இத்தகைய கட்டங்களை நாம் கண்டோம்.இது திட்டமிட்ட பாசிசத்தின் வெளிப்பாடாகும்.


இன்று தமிழ் நிலத்துள் நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் கடைந்தெடுத்த துரோகக் கட்சி அரசியல் தலைவர்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.இப்படித்தாம் இந்தியாவால் நமக்குத் தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.


பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் "தமிழ்தேசியத்தை"விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மெளனிக்கத்தக்க செயலில்லை.இப்போதோ தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் நடாத்திமுடிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கமானது இந்திய உலகக் கைக்கூலியாகத் தானே முழு அளவிலாக உருவாக வேண்டுமென்பதற்காகவும்,தனது அழிவு நெருங்கினால் அதில் தோன்றும் வெற்றிடத்தில் புரட்சிக்கான விசும்பு நிலை உருவாகுமென்ற தமது எஜமான அறிவுக்கொப்ப மனிதவுரிமை வாதிகளை-முற்போக்குவாதிகளைத்"துரோகி",இந்திய-உலகக் கைக்கூலியாக மக்கள் முன் கருத்திட்டுத் தமது இந்திய-உலக எஜமானர்களைக் காத்துவருகிறது.இந்தப் பிற்போக்குச் சக்திகள்.நமது இன்றைய அரசியல் போக்கானது மிகவும் கெடுதியான-மக்கள் விரோதமானதாகவே இருக்கிறது.எவர் எந்தப் புற்றிலிருக்கின்றார்கள் என்பதே அறியமுடியாதளவுக்கு உலக நலன்களின் வேட்டைக்காடாக நமது தேசம் மாறியுள்ளது.பழைய-புதிய இயக்க வாதிகள் எல்லோரும் தத்தமது பழைய பகைமைகளைத் தத்தமக்கு வழங்கும் பங்கில்-பாகத்தில் கடைந்தேற்றக் காத்திருந்து அதை நாடிய அரசியலில் நமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வேட்டையாடுகிறார்கள்.இதுள் முதலிடத்தில் இருக்கவும்,பாரிய பாகத்தைத் தமதுதாக்கவும் புலிகள் செய்யும் போராட்டமோ மிகக் கெடுதியான அழிவை நமக்குத் தந்துள்ளது.இந்தக் கெடுதியான போருக்குப் பெயர்"தமிழீழ விடுதலை"ப் போர்!-பாருங்கள் இது எவ்வளவு மோசடியானது,சமூகக் குற்றமானது!!



இலங்கையின் அரசியல் போக்கு:


இலங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?


மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும்,தர்க்கமானதாகும்.எங்கள் தேசத்து(ஈழம்) உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும்.இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும்.எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைகூலிகளை இனம் காணும்போது இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.


தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு வருகிறது.எங்கள் குழந்தைகளால் நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும்,பொருளாதார ஆர்வங்களும் இருக்கின்றன.இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டினது விடுதலையின் பின்னடைவும் இருக்கிறது.


நமது விடுதலைக் கோசமானது(சுயநிர்ணயவுரிமை) சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது.இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகாலமாக தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இரட்டிப்பாக மாற்றிவரும் அந்நிய நலன்கள் இலங்கைச் சிங்கள அரசினூடாக ஒரு புறமும் மறுபுறம் புலிகளை முதற்கொண்டு அனைத்துச் சிறு குழுக்களையும் பயன்டுத்தித் தமிழ் பேசும் மக்களின் சுயவெளிச்சியை முடக்கிவருகிறது.எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது.இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.

நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.

இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.

இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது?

பதில் மிக இலகுவானதாகும்.தமிழ்த் தலைமைக்குள் இருந்த அந்நிய ஏகாதிபத்தியங்களின் சார்பு நிலையும் அதன் வாயிலாக எழுந்த ஆயுதப் போராட்டமும்,அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்த இந்திய மற்றும் அமெரிக்க ஆர்வங்களே நமது உரிமைகளுக்கு இன்று வேட்டு வைத்துள்ளது.இதுதாம் நாம் இலங்கை அரசியல் போகக்கிலிந்ருது கற்கும் பாடம்.இங்கே புரட்சிக்குரிய சூழலைத் தடுத்தபடி அராஜகத்தைக் காத்து நிலைப்படுத்த இருவேறு அரசஜந்திரங்கள் உண்டு.அதிலொன்று புலிகள் மற்றது இலங்கைப் பாசிச இராணுவம்.இவர்களிடத்தில் எந்தத் தரப்பு மக்களினதும் நலன் ஒருபோதும் இல்லை.மாறாகத் தத்தமது எஜமானர்களின் நலனைக் காப்பதற்கான சட்டவுரிமையுடைவொரு இராணுவமாக இலங்கை இராணுவமும்,இதேயிடத்தைத் தமிழ் மக்களின் மண்ணில் கேட்டுப் பேரஞ் செய்யப் புலிகளும் யுத்தத்தில் மூழ்க, ஆயுதங்களின் பெரு விற்பனையில் சில நிறுவனங்கள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன-நாமும்,நமது மக்களும் அழிவது தொடர்கிறது.



ஆளும் வர்க்க-அந்நிய யுத்தத்தை அம்பலப்படுத்தல்-எதிர்த்தல்:



இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள்.நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை.இது கொலனிய-நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்வியூட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்குப் புலிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்,குறிப்பாக கருணாநிதி மற்றும் வை.கோபாலசாமி போன்ற அரசியல் பெரிச்சாளிகள்கூடத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக் குரல் கொடுக்கும் மக்கள் நலன்சார்ந்தவர்களே!அட மரமண்டைகளே,இத்தகைய அரசியல்வாதிகள்-இயக்கங்களின் பின்னே மறைந்திருக்கும் இரத்தக் கறையை எந்த வர்ணாத்தால் அழித்துள்ளீர்கள்?நீங்கள் எல்லோரும் படித்தவர்கள்?காலம்தாம்!இந்த நிலையில் ,உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும்,மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால்,அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.இதுள் நமது கல்வியாளர்கள்கூட ஒத்தூதுகிறார்கள்.மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள்,இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது.இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது.முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது.இதை மனித மூலதனமாகவே பொருளாதாரத்தில் கற்பிக்கப்படுகிறது.


இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில்.அப்போ இங்கு உழைப்பவருக்கும்,உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு.அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம்.காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றைய போர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது.இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது.அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.



இலங்கை இனப் பிரச்சனை குறித்தோ அன்றிப் புலிகளின் மக்கள் விரோத முகத்தை இனம் காட்டிக் கருத்திட்டாலோ அத்தகைய கருத்தை முன்வைப்பவர் இனத் துரோகியாகிக் கொல்லப்படுவார்.இல்லைச் சிறையில்-பாதளா உலகத்தில் சிறை வைக்கப்படுவார்.இத்தகையவொரு சூழலை மறைத்தபடி இன விடுதலைக்காக ஏலம் விடும் அரசியல்-போராட்டம்,யுத்தம் மிகத் தந்திரமானது.இதை மறுத்து, இது மக்களின் உரிமைக்காக நடக்கின்ற தேசிய விடுதலைப் போராட்டம்,தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கான போராட்டம்-யுத்தம் என்று எந்தப் பேமானியாவது ஒரு பல்கலைக் கழகத்துக்குள்ளிருந்து வாந்தியெடுத்தால் அது ஜனநாயக நோக்குடையதாக இந்த மனித விரோத அரசுகள்-இயக்கங்களிடம் கருத்து நிலைபெறுகிறது.அவர்களது ஒத்திசைவான உச்சிமோந்த வரவேற்கும் அரசியல் நிலையாகவும்,தொடர் நிகழ்வாகும் இடம் பெறுகிறது.இது இலங்கைக்கே மட்டுமான சூழல் இல்லையெனினும்,இலங்கையில் இத்தகைய கருத்து நிலையே மிகவும் ஆதிக்கஞ் செய்கிறது.


விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மண்ணுக்காக மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.வலாற்றில் வாழ்ந்த படுபிற்போக்கான மன்னர் ஆட்சிக் காலக்கட்டமாகட்டும்(எல்லாளன் வகையறாக்கள்) அல்லது வரலாற்றால் புறந்தள்ளப்பட்ட மத இழிவாடல் கருத்துக்களாகட்டும் அனைத்தும் புலிகளின் வம்புத்தனமான அரசியலுக்கு அவசியாமக இருக்கிறது.இது உலகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் உறவைவிட உலகப் பிற்போக்குச் சக்திகளோடு கூடிக் குலாவும்போது,நாம் இத்தகைய அமைப்பை விடுதலைக்கானவொரு அமைக்காக எண்ணிக்கொள்ளக் கருத்துக்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன.அதற்காக ஆங்காங்கே தேசிய வெறிக்கூச்சலின் தொடர்ச்சியாகப் புலிக் கைக்கூலிகள் இருக்கிறார்கள்.எப்படிச் சிங்கள அரசுக்கு-இந்திய அரசுக்கு கூஜாத் தூக்கிகள்-கைக்கூலிகள் இருக்கிறார்களோ அதே பாணியில் புலிகளும் தனது பராக்கிரமத்தை இப்படிச் செய்திருக்கிறது.மொத்தத்தில் அதிகாரமையம் தனது இருப்புக்காக மனித உயிரோடு விளையாடுகிறது.அந்த விளையாட்டுக்குப் பெயர் தேசிய விடுதலை சுயநிர்ணயம் தமிழர்கள் பக்கம்.சிங்களவர் பக்கம் தேச ஒருமைப்பாடு-ஜனநாயகத்துக்கான போராட்டம்!


அரசியலில் எந்தெந்த வர்க்கங்கள் தத்தமது இலாபத்துக்காக அணி சேர்கின்றன,அவை எங்ஙனம் பொதுமக்களின் நலன்களைச் சுமந்து தமது நலன்களை உறுதிப்படுத்துகின்றன என்ற மிக இலகுவான புரிதல்கூட அற்ற சில மந்தைகளின் கருத்துகளைக்கடந்து, இலங்கையின்-தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்-போராட்ட முன்னெடுப்பில் எந்த அந்நிய நலன்களை இவர்கள் பிரதிபலிக்கின்றார்கள் என்பதிலிருந்து நமது விடுதலையை நாம் சாத்தியப்படுத்தும் நேரிய வழிகள் கண்டடைய முடியும்!ஆனால்,தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.



மானுட நேசிப்பும்,மாற்றுக்கருத்தும்:



மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது,இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்; செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.


மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்"தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்,இணையத்தில் கருத்தாடிப் பல பகுதி மக்களுக்குப் புலிகளின்-சிங்கள அரசின் மக்கள் விராத அராஜகத்தை வெளிப்படுத்தும் இன்றைய இந்த நிலையை உடைப்பதற்காகப் படாதுபாடு படுகிறார்கள்.சிங்களத் தரப்பும்,புலிகளும் பழிவாங்கும் போராட்டத்தை முன்னெடுத்துத் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலில் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.இதை உறுதிப்படுத்தும் காரியங்களில் தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் முன்னெடுப்பாளர்களும் செயற்படுவது மிக,மிக வேதனையானது.


தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் இயக்கவாத-கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் அந்நிய நலன்களுக்கான யுத்தங்கள் தேசத்தினது இறைமையின் பெயராலும்,ஒரு இனத்தின் விடுதலையின் பேராலும் நடந்து,மக்களைப் பலியெடுக்கும் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனு}டே நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் சுயநிர்ணயத்தை மீட்டெடுப்பதும் நமது ஜீவாதாரவுரிமைகளிலொன்றுதாம்.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

23.11.2007

Saturday, November 17, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:4

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:4



"...சமயத்தில்
எதிரி கிடைக்காவிட்டால்
ஊரில்
மனிதர்களும்,
மின்சாரக்கம்பங்களும் உண்டு
அதுவும் கிடையாத போது
நெறி
பிறழாத ஒரு தோழனை...


துப்பாக்கி சூடாறக்கூடாது
பாரும்
நியாயப்படுத்தத் தலைமைப் பீடமும்
பிரசுரம் அடிக்க வெளியீட்டுப்
பிரிவும்
உள்ளன தோழரே
விடுதலைப் பாதையில்
வீறு நடை
போடும்."
-இளவாலை விஜயேந்திரன்.




நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.


"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.



மீளவும் ஈழத்துக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான போர்கள்:



இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!



கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது "தமிழர்களின் ஜனநாயக அரசியல் முன்னெடுப்பாளர்கள்" பலாராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.


இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி,அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.இங்கே மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது.எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு,போராடு"என்பதாகவும்,தற்கொலைக்காக மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயுதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.



இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது நமது காலத்து ஊழ்வினை!இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும் ,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது.அமெரிக்காவானது ஒவ்வொரு படிமுறையாகப் புலிகளை முடக்குவதற்காகச் செய்யும் காரியங்களுக்குள் அப்பாவித் தமிழர்களிடம் தட்டிப்பறித்த பல்லாயிரக்கணக்கான பணங்கள்வேறு முடங்கிக் கொள்கிறது.


இலங்கையரசு புலிகளுக்கெதிராக-தமிழ் பேசும் மக்களுக்கெதிராகச் செய்யும் இனவொடுக்குமுறைப் போரை"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.


புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும்.புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதியூகத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது.புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை.இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது.புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல.ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!


துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்!இவர்களே புலி எதிர்பார்களாகவும்,இலங்கை-இந்திய ஆதரவர்களாகவும்,இலங்கை-இந்தியாவே மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக் காட்டிவருகிறார்கள்.இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது, இன்று!இதற்கு நல்ல உதாரணம்: ரீ.பீ.சீ.வானொலியின் அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேசம் நெற்றில் இடம்பெறும் வெற்று விவாதங்கள்-தனிநபர் வாதம் மற்றும் சேறடிப்புகள்,கே.ரீ. இராஜசிங்கத்தினது கைக்கூலித்தனங்கள் மற்றும் கண்றாவிகள்.இது குறித்துப் பின் தனியான கட்டுரையில் விவாதிப்போம்.


பொருளாதார ஊக்கம் விரிக்கும் யுத்தம்:


இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.


இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது.என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்கு இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் சமீபத்தில் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பூர்,கிழக்கு மாகணம் போன்ற தமிழர் பிரதேசங்கள் நல்ல எடுத்துக்காட்டு!


இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள்(தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் படுகொலைகள்) நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து,எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் வியூகத்தையுங் கொண்டிருக்கிறது.



இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் வியூகங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.



உண்மைகளைப் பகுத்தறிதலும்,ஈழப் போரும் அது காணத்துடிக்கும் பொருளுலகமும்:



பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்ச்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.புலிகள் கூறும் அல்லது அவர்களது கருவூலத்தில் அர்த்தங்கொண்ட பொருளாதார முன்னெடுப்புகள்,கட்டுப்படுத்தித் தம்மால் இயக்கப்படும் இன்றைய பொருளாதார முன்னெடுப்பானது உள் மட்டத்தில் யுத்தத்துக்கு உந்துதலைக் கொடுக்கவும்,அத்தகைய தரணத்தில் மக்களை பட்டுணிச் சாவிலிருந்து காக்கும் பொருளாதார முன்னெடுப்பல்ல.அவர்கள் சாரம்சத்தில் புதிய தரகு முதலாளிகளாகி வருவதற்கும்,அதை நிலைப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் இனத்தில் ஆளும் வர்க்கமாக ஆதிக்கம் பெறுவதற்குமான ஒரு திட்டமிட்ட யுத்தத்தைச் செய்வதால் இனவாதச் சிங்கள அரசுக்கெதிரான மக்களின் உண்மையான எழிச்சி-மக்கள் திரள் போராட்டம் முடமாகியுள்ளது.


ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.இங்கே புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன.இதுவே யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது.இவையெல்லாம் ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுக்குச் சுதந்திரமான சமத்துவமான-ஒடுக்கு முறையற்ற,சாதிவேறுபாடுகளற்ற,பெண்ணடிமைத்தனமற்ற,சுரண்டலற்ற வாழ்வுண்டு என்ற நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட அதீத ஏமாற்று வித்தைகளாகவே இருக்கிறது!


இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி,இன்று விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.இங்கே புலிகள் சொல்லும் அல்லது செய்யும் அரசியலில் உள்ளார்ந்து இருப்பது இத்தகைய உலகப் பொது நிலையின் பிரதிபலிப்பாகும்.இவர்கள் நவீனவுலகத்தில் தமது வளங்களை மிக நன்றாக அறிந்து வைத்து அவற்றைக் கையகப்படுத்தி மக்களை அத்தோடிணைத்துச் சுரண்டுவதற்கானவொரு சட்டப்படியான அங்கீகாரத்துக்குக்காகச் செய்யும் இந்தப் பேர யுத்தத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதும் மட்டுமல்ல.இத்தகையவொரு போரினால் மக்களை ஏமாற்றிப் பலியிடுவது தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கானதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லியே ஆக வேண்டும்!


புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலி அரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.இதனூடாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டித் தத்தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள எடுக்கும் நடிவடிக்கைக்குப் பெயர் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போர் என்பதாக விரியப் போகிறது.இதுவே ஒவ்வொரு கட்டத்திலும் தமிழருக்கென்றொரு தாயகம் வேண்டுமென்றும்,ஆண்ட பரம்பரை ஆளத்துடிக்கிறதென்றும் கோசமிடுகிறது.எமக்கென்றொரு நாடு வேண்டும் என்றும் பெரும் வீராப்புக் கோசம் போடுகிறது.இதற்குள் இருக்கும் சூட்சுமம் பொருள் குவிப்புத்தாம்.



மாதிரித் தமிழன்,தமிழீழத்துப் போருக்கான ஊற்று:


இது மனித மனங்களின் தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!-இவனே ஈழத்துக்கான ஆதரவுச் சக்தி-உத்தமத் தமிழன்!



மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.



ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.


நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் புலிகள் அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது! ஆனால்,இணையங்களில் புலிகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் சில முகமூடி மனிதர்களுக்கு இது மட்டும் புரிவதேயில்லை.இவர்கள் நியூட்டன் விதியையும் தொட்டுச் செல்கிறார்களென்றால் பாருங்களேன்!


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இங்கே தேசியத் தலைவர் எல்லாவற்றையுமே செய்து முடிப்பாரென்னும் மனதைக் கண்முன்னே கொணர்ந்து சிந்தியுங்கள்!


தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை நாம் அறிந்து ஒத்துக் கொண்டேயாகவேண்டும்.இங்கே புலிகள் விடும் கயிற்றை நாம் கட்டிப் பிடித்திழுக்கும் ஈழத்தேர் இன்னும் இருப்பிடம் வந்த பாடில்லை.அது வருவதற்கான அறிகுறி கிடையவே கிடையாது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள்(புலிகள்,சிங்கள-இந்திய அரசுகள்) மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழத்துக் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.



தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.11.2007

Saturday, November 10, 2007

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:3

சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:3


"மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது.
ஒரு மனிதன் தன் அநுபவத்
திரட்சியை,
ஆற்றலை இந்தச் சமூகத்துக்குக் கையளிக்கிறானே
அதுதான் மனித
வாழ்விலேயே உயர்வானது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த
அறிவையும்,அநுபவத் திரட்சியையும்
ஒவ்வொருவரும் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம்
எமக்கு ஈடுபாடு
இல்லையென்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது.
நாம் நிச்சியம் எமது
சமூகத்திற்கு எம் ஆற்றலையும்,அறிவையும்
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்".
-புதியதோர் உலகத்தில் கோவிந்தன்.பக்கம்:61.


கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும், இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு பெரியவொரு நிகழ்வு இன்றைய போராட்ட வாழ்வில் நிகழ்கிறது.சர்வதேச நலன்களாலும்,தென்கிழக்காசியாவின் கேந்திர அரசியல் போக்குகளாலும் இலங்கையின் மக்கள் வேட்டைக்குட்பட்டு வருகின்ற இன்றையபொழுதில் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவர் படுகொலை செய்யப்படுகிறார்.இதுவொரு திட்டமிட்ட சதியாகவே புலப்படுகிறது.இலங்கைவாழ் மக்களின் இனவேறுபாடுகளைக் களைந்து ஒரு இன ஐக்கியம் உருவாவதற்கும் அதனூடாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைப் புரட்சிகரமான வகைகளில் தீர்ப்பதற்கான போராட்டப் பாதைக்கு இத்தகைய கொலைகள் பெரும் பின்னடைவைத் தருகிறது.இதனால் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளும்,இனக்குரோதமும் வளர்க்கப்பட்டு,இனவாதிகளின் அரசியலுக்கு மீளவும் எண்ணையூற்றப்படுகிறது.மக்கள் ஆதரவையிழந்துவந்த புலிகளின் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சும் உந்துதலைத் தமிழ்ச் செல்வனின் மரணமிட்டுச் செல்கிறது.இதை எதிர்பார்த்து அரசியல் செய்யும் வலதுசாரிக்கட்சிகளின் இன்றைய எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்ட இந்தக் கொலையில் எவரது பங்கு உண்டென்பதைவிட நாம் மேலே செல்வோம்.



இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இத்தகைய தரணத்தில் நாம் சந்த்திக்கும் இழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.


பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையையும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை கரும்புலிகள்-தமிழ்ச் செல்வன்கள் உயிரைப் பறித்தாலும் தமது அரசியல் மற்றும் ஆளும் தளத்தை இழக்காதிருப்பதற்காக இன்னும் ஆயிரம் கொலைகளை இனம் மொழி தாண்டிச் செய்து முடிக்கும்.


இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது.இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லப் புலிகளாக இருந்தாலென்ன புதுப்புது அர்த்தத்தோடு"தேசிய மற்றும் விதேசிய"பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது,இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.அது,தமிழர் பக்கம் தமிழீழம் என்றும்,சிங்களவர் பக்கம் பெளத்த இராச்சியச் ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது!இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது,அதற்காகத் தன்னைத் தியாகத்திலும்,வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று "ஒளிவட்டம்"கட்டிக் கொண்டிருக்கிறது.இதை வாழ்வுக்கான வியூகமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.

இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் "தேசிய" அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் "வடிவ மனிதர்களாகி"பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு "பொற்காலக் கற்பனைகளைத்"தயா¡ப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான "இருப்பானது"நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் "வியாபித்த"மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது "வர்க்க"அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.

இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம"; மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்"திருத்திய"நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால்,அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்"என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.


இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.


இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு"விரோதி,துரோகி"என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்."தியாகி துரோகி" என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழக் குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.அவ்வாறு நிகழும் தரணங்களில்தாம் தத்தமது தனிநபர் வாதத்துக்கும் அதீத காழ்ப்புணர்ச்சியை முன்தள்ளி,ஒழுக்கம்-நாணயம் குறித்தும் சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்குள் தள்ளி அதிகாரத்தோடு கைகுலுக்கிறது(இது மிக மோசமான சேறடிப்பைத் தனது தோழமைக்கு எதிராகவே செய்து முடிக்கிறது.இந்தப் போக்கை ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும் தற்போது நாம் பார்த்து வரலாம்).இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.


அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.


இன்றைய நிலையில் எவரெவர் "புரட்சிக் கட்சி"க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்"மனமுடக்கங்களும்,சிதைவுகளும்" தனிநபர்வாதமாக மாறுகிறது.இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றதக்கப் போராட்டச் செல் நெறியோடு போராடுகின்றன.இங்கே நண்பன் யார்,எதிரி யார்? என்ற மதிப்பீடுகளின்றி தம்மை எதிர்ப்பவர்கள்-விமர்சிப்பவர்கள் அனைவருமே எதிரிகளென்னும் இந்தப் பார்வைக்குத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியம்-இந்தியத் தரகு முதலாளியம் போன்றவைகள் எப்போதுமே நட்பு சக்திகளாகின்றன.இதனால் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலை அந்நியப் பேரங்களுக்கான வியூகத்துக்குள் வீழ்ந்து தமிழ்வீரப் புதல்வர்களின் தியாத்தைத் தனதாக்கிக்கொள்கிறது.


இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின் நலனும் ஒன்றல்ல என்பதே.
இயக்க நலன் தவிர்க்க முடியாது தமிழ்பேசும் மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன் இயக்க நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும் அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை.உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.

எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின் முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை,யுத்த தந்திரோபத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது.எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை.இனவொதுக்கல்,தரப்படுத்தல்,தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை நாயிலும் கேவலமாகப்"பறையன்,நளவன்,பள்ளன்,அம்பட்டன்,வண்ணான்"என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது.சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்து.இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன.அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல.இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவூலங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது.இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது.இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது.இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!

இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.



மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது.சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்"நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.ஈழ இயக்கங்களிள் எந்தப் பக்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.


யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும்,பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம்.இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின்பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.


எனவே வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் தவிர்க்க முடியாது அரங்கிற்கு வருகிறது. இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளை வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!

தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.புலிகளுக்கூடாக விரியும் அல்லது கட்டமைக்கும்"தேசியம்"சாரம்சத்தில் விதேசியம் என்பதைப் புரியம் தரணங்களைப் புரிவதற்குத் தேசியத்தைப் புரட்சிகரமாக நிறுவம் போக்குகளை நாம் உள்வாங்க வேண்டும்.அது,ஆளும் வர்க்கங்கள் அடியெடுத்துவரும் பிற்போக்குத் தேசிய வாதமில்லை.இதைத்தாம் லெனின் வார்த்தையில் சொன்னால்:"தேசிய வாதம் என்பது எப்பவும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்து வரும்."என்பதாகும்.இதை மிக நேர்த்தியாகப் புரிவதற்குத் தேசியம் குறித்து மேலும் புரிவதற்கான சந்தர்ப்பங்களை நாம் தருவோம்.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
10.11.2007

Saturday, November 03, 2007

விவாதத்தைத் தவிர்த்த...

விவாதத்தைத் தவிர்த்த ஒப்பாரியால்-துவேஷிப்பதால்,தூற்றுவதால் விளைவதென்ன?



எதிரியை நோக்கி எச்சரிக்கைவிடுவதோ அல்லது வீரதீரப் பேச்சுகளோ நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கல்ல.ஆயிரம் இளைஞர்கள் தோன்றுவார்கள் என்பதால் நமது போராட்டச் சமூக சீவியம் முன்னேற்ற மடையப் போவதில்லை.இவையெல்லாம் கட்சி அரசியலின் கயமைத்தனமானது.நாம் உயிர்களோடு விளையாடுகிறோம்.போர் செய்து மக்களைப் பலியிடுகிறோம்.நம்மிடம் விவாகமான அரசியல்-போராட்டப்பாதை,அதையொட்டிய ஆய்வுகள்-விவாதங்கள் நடந்தாக வேண்டும்.வெற்றுத் தனமான ஆயுதத் தாக்குதல்களால் விடுதலையென்பது சாத்தியமே இல்லை என்பதை நமது போராட்டத்தின் இன்றைய நிலையிலிருந்து எம்மால் இனம்காணமுடியும்!




இருந்தும்?



நாங்கள் தொடர்ந்தும் பெரும் பிழைகளைக் கண்ணீரால் கழுவப் பார்க்கிறோம்.அல்லது, உணர்ச்சி அரசியலால் துடைத்தெறிய முனைகிறோம்.தமிழ்ச் செல்வன் மீதான குண்டுத் தாக்குதலுக்காகக் கண்ணீர் சிந்துவது இருக்கட்டும்.இதுவே, அத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாது.


அப்போது நாம் என்ன செய்தாகவேண்டும்?


எமக்குள் எங்கோ தவறிருக்கிறது.


இத்தகைய தவறுகளைச் சுய விமர்சனத்தோடு-உட்கட்சி ஜனநாயகத்தோடு புலிகளின் தலைமைமட்டுமல்ல,மக்களும் இணைந்தே சீர்தூக்கிப் பார்த்துத் தவறுகள் திருத்தப்பட்டாகணும்.எமது போராட்டமானது பிணங்களின்மீது அரசியல் செய்யத் தெரிந்தளவுக்கு,அத்தகைய பிணங்கள் விழும் அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை!இது எல்லாவகைப் புரிதலையும் சிதறடிக்கும் உணர்ச்சி வழியிலான சிந்தனையைமட்டும் நமக்குள் விதைக்கிறது.


இன்றைய தாக்குதலானது வெறும் எதிர் நடவடிக்கையென்று கருத முடியாது.தமிழ்ச் செல்வனைக் குறிவைத்துத் தாக்குவது நிச்சியமாகத் தகல்வல்களின் அடிப்படையிலேயே நடந்தேறியிருக்கிறது.இத்தகைய தகவல்களை எவர் செய்தார்-எதற்காகச் செய்தார்?புலிகளின் அமைப்பாண்மைக்குள் ஊடுருவிய இலங்கைசார் உளவுத் தளம் ஏன்-எப்படி உருவாகியது,இதற்கும் புலிகளின் தலைமையின் அரசியல் வியூகத்துக்காமான தொடர்பு என்ன?இதையொட்டிச் சிந்திப்பதும் விவாதிப்பதற்கும் பதிலாக வேறுவகையான உணர்ச்சிவகைக் கண்ணீரால் இந்த மரணங்களைத் தடுத்துவிட முடியாது.அல்லது, கருணா பிளவை கொச்சைத் தனமாகத்"துரோகி"என்ற கருத்தால் விளங்கிக்கொண்டதன் தொடர்ச்சியாக மீளவும் புரட்டிப்போட முனைந்தால், இவ்வகை மரணங்கள் மலிவதைத் தவிர வேறொரு மண்ணும் நடப்பதற்கில்லை.


போராட்டத்தின்மீதான விமர்சனங்களை-புலிகள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் பாங்கு மிகவும் வருந்தத் தக்கது.நாம் சிறு தாக்குதல்களைப் பெரிதாக்குவதும்,அதையே வைத்துக் காலாகாலத்துக்கும் அரசியல் பிழைப்பைச் செய்யவும் பழக்கப்பட்டவர்கள்.அநுராதபுரத் தாக்குதலை விஷமத்தனமாக இந்தியப் புலனாய்வுத்துறைக்குள் இருக்கும் இராமன் ஓகோவென்று மிகைப்படுத்தும்போது அதைப் பெரிதாக எடுத்து இறுமாந்து போகிறோம்.அத்தகைய மிதப்பில் எமது அறிவின்மீது அதீத பெருமிதத்தைக் கொண்டாடுகிறோம்.ஆனால்,அது நம்மைத் தோற்கடிப்பதற்கான அரசியலை நமக்குள் விரிப்பதுகுறித்து நாம் கருத்தாடுவதற்கில்லை!எங்களிடம் காரணகாரிய பகுப்பாய்வு இதுவரை கைகூடவில்லை.புலிகளின் அணுகுமுறைகள்,முரண்பாடுகளைக் கையாளும் முறைமைகள் யாவும் பிழையாகவே இருக்கிறது.


உலக அரசியலின் உதவியோடு,பெரும் படையையும் அதுசார்ந்து புதுப்புது வியூகத்தையும் அமைக்கும் சிங்களக் கல்வியாளர்கள்,இராணுவ வல்லுனர்கள் நமது மக்களின் போராட்டத்தைத் தடுத்து அதைப் பயங்கரவாதமான முன்னெடுப்பாகக் நிறுவும்போதும்,அத்தகைய போராட்டத்திலிருந்து நம்மை விடுவித்து,நாம் மக்களை அணிதிரட்டிப் புரட்சிகரமான படையணியாக மலராது வெறும் குழுவுக்கேயுரிய போராட்டப்பாதையில் நின்றபடி, பிற நலன்களின் நோக்கிலிருந்து நமது மக்களின் முரண்பாடுகளை அணுகும்போது இத்தகைய தோல்விகள் வந்துவிடுகிறது.


இப்போதும்கூட இந்தத்தாக்குதலுக்குப் பின் இழக்கப்பட்ட போராளிகளை குறித்து உணர்ச்சிப்பாட்டுக்களைக் கட்டிப் பாடுவதும்,அவர்களுக்காக உணர்ச்சி ததும்பத் துக்கம் கூறுவதும்தாம் வானொலிகளில் இடம் பெறுகிறது.இதற்குமேல் இந்தத் தமிழர்களிடம் எந்த அரசியல் இருக்கென்றால்,அது "தானைத் தலைவனின் துணையோடு நாம் தமிழீழம் காணுவது உறுதி" என்பதாகக் கருத்துப் பரிமாறுவது.நல்லது,இது வெறும் மனவிருப்பே!நாம் இன்னும் மேலே எழுந்தாகவேண்டும்.


எம்மைத் தவிர வேறெந்த நாட்டுக்கு-போராட்ட இயக்கத்துக்கு இத்தகைய நிகழ்வுகள் வந்து விடுகிறபோது, அவர்கள் அது குறித்து உணர்ச்சி அரசியலைத் தாண்டி அறிவுக்கு வேலை கொடுக்க முனைகிறார்கள்.இத்தகைய தாக்குதல் எப்படி நிகழும்? எதனால் உயிர்கள் பறிக்கப்பட்டது?எப்படித் தமிழ்ச்செல்வனின் தங்குமிடம் இலங்கை அரசுக்குத் தெரிய வந்தது-எங்கே நமது தவறுகள் இருக்கின்றன?என்பதுபோன்ற விவாதங்களுடாக மக்கள் கருத்தை அறிந்து,மகத்தான அறிதற்பாட்டை வந்தடையும் கருத்து நிலைகளைக் காணமுனைதலே ஊடகங்களின் பொறுப்பாக இருக்கிறது உலக அரசியல் நிலவரத்தில்.ஆனால்,நம்மிடம் ஓலம்-ஒப்பாரிக்குமேல் இத்தகைய தவறுகளை விமர்சிப்பவர்களைத் துரோகியாக்கித் துவைப்பதில் காலம் போக்கப்படுகிறது.


ஸ்ரீரங்கள் எத்தனை தளங்களில் எழுதுகிறார் என்று புலனாய்வு செய்யும் அறிவுக்குத் தமிழ்ச் செல்வன் எங்ஙனம் குறிவைத்துத் தாக்கப்பட்டார்,அவரது பாதுகாப்பில் எங்கே தவறுகள் இருந்தன-அவரைக் காட்டிக் கொடுத்த அரசியல் என்ன?என்ற புலானாயும் மனது கிடையாது.ஏனெனில்,அவற்றைத் தலைவர் மட்டுமே செய்து முடிப்பார்.அதைவிடத் துரோகி ஸ்ரீரங்கனே! எனவே, அவன் எத்தனை தளத்தில் எழுதுகிறான்-அவன் தனிப்பட்ட வாழ்வில் என்ன பண்ணுகிறான் என்பதை ஆய்வு செய்து, போட்டுத் தள்ளும்போது இலங்கை அரசின் தாக்குதலிலிருந்து தமிழ் பேசும் மக்கள் தப்பி விடுவார்கள்.


அல்லது,கரும்புலிகளின் தாக்குதலில் புலிகள் மகிழ்ந்தார்களா அல்லது நடுமாறனின் பச்சோந்தித் தனம் என்ன என்ற கேள்வியோடு வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.நெடுமாறன் உலகறிந்த அரசியல் விபச்சாரி-பிழைப்புவாதியென்பது அவரது அரசியல் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளத் தக்கது.புலிகள் கரும்புலித் தாக்குதலில் மகிழ்ந்தார்கள் என்பதுற்கு அவர்களது தேசியத் தொலைக்காட்சியில் கருத்தாடிய யோகி,இளந்திரையன் போன்றோரின் கருத்துக்களே சாட்சியாக இருப்பவை.இன்றைக்குப் புலிகளின் ஊதுகுழல்கள் செய்யும் ஓப்பாரியை ஏன் இருபத்தியொரு கரும்புலிகளுக்குச் செய்யவில்லை?மாறாக,அநுராதபுரத்தாக்குதல் வெற்றியும்,அழிந்த விமானங்களையுமே பட்டியலிட்டார்கள்.இவையெல்லாம் மிகவும் நுணுக்கமாகச் சொல்பவை என்ன?


தமிழ்ச் செல்வனை முன்வைத்துச் சில பாடல்களால் நமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாது.அல்லது, இத்தகைய பாரிய வான் தாக்குதல்கள் நிறுத்தப்படமாட்டாது.இதற்குப் பதிலாக நாம்,மக்களைப் பேச விடவேண்டும்.அவர்களிடமிருந்து நமது போராட்ட முறைமைகள் குறித்த விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.புலிகள் தம்மைச் சுய விமர்சனத்துக்குட்படுத்தித் தவறுகளைக் களையும் அறிவின் பாதையை நாடியாக வேண்டும்.இதைவிட்டுத் "தேசியத் தலைவரை விட்டு எங்கே போனாய் அண்ணா,தேசத்தின் குரலோடு சேர்ந்து..."என்று அழுவதால் நமது விடுதலை சாத்தியமில்லை.எமது எதிரிகள் மிகவும் வலுவான வியூகத்தோடு நம்மை அணுகுகிறார்கள்.அங்கே,உலக விற்பனர்களும்,ஆயுதங்களும் அவர்களைப் பலப்படுத்தும்போது,நமக்குள் கல்லறைப்பாடல்களே கருத்தாக வருகிறது. அல்லது, "விழ விழ எழுவோம"; என்ற வாக்கியத்தால் ஒரு மண்ணும் நிகழா.மாறாக,விழுவதே சாத்தியமாகிறது.



இத்தகைய அரசியலின் முடிவு என்ன?,நம்மிடம் இதே அரசியலின் தொடர்ச்சி கடந்த கால் நூற்றாண்டாய்த் தொடர்கிறது.அன்று "விடியலுக்கு முந்திய மரணமென்று" தொகுப்பிட்டோம்.இன்று, "தேசத்தின் குரலென்று" தொகுப்பிட்டோம்.ஆனால், எமது போராட்டம் குறித்த ஆய்வுகள் எதையும் செய்யோம்!

"நல்ல அரசியல்-போராட்டம்,விடுதலை விரைவாய் விளையும் பொறுத்திருங்கள்!"


ப.வி.ஸ்ரீரங்கன்
03.11.2007

Friday, November 02, 2007

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்!



"மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத்தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா?
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் விலையை
இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..."
-அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.)




"கரும்புலிகள்-
தமிழ்ச் செல்வன்கள்
மரணத்திலும்
மகிழ்வும்,
துக்கமும்
புலிகளுக்குள்."


ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்படுத்தியாக வேண்டிய மரமண்டைகளாகத் தமிழர்கள் உருவாகியது தற்செயலானதா?

இப்படி ஒரே நிகழ்வில் மகிழ்வையும்,துக்கத்தையும் கொண்டாடக்கூடியவர்கள் புலிகளும்,அவர்களது அநுதாபிகளும்தாம்.

எவன்ரா சொன்னான் கரும்புலிகள் செத்தே ஆகவேண்டுமென்று?

புலிக்கு வால் பிடிப்பவர்களிடம் இருபத்தியொரு கரும்புலிகளின் சாவைக் கண்டு மனம் வருந்திக் கருத்தாடிய அன்றைய தினத்தில்,"என்ன அண்ணே நீங்கள் இப்படி முட்டாளாக இருக்கிறீங்கள்?, அவர்கள் யாரு?கரும் புலிகள்!"என்றார்கள் சில புலி வால்கள்.அதாவது, கரும் புலிகள் என்பது... எப்போதோ செத்துவிட்டவர்கள்.அவர்கள் புதிதாகக் களத்தில் சாகவில்லை!செத்தே செயற்படுபவர்கள் என்றான், நான்கு பிள்ளைகளை ஜேர்மனியில் பெத்து வளர்த்து வரும் ஒரு கபோதி.இன்று, சு.ப.தமிழ்ச்செல்வனோடு இன்னும் நான்கு போராளிகள் கொல்லுப்பட்டுள்ளார்கள்.இது, எதனால்?

எதனால்?

எதனால்?

எதனால்?

பாழாய்ப் போனவர்களே சிந்தியுங்கள்!

இந்தப் புலிகள் செய்யும் போராட்டமென்பது அடிப்படையில் தவறானது.

இலங்கையின் ஆதிக்கத்தை உடைத்தெறியாது அதன் அரச ஜந்திரத்தின்மீது கைவைத்துக் கைவைத்து, அவர்களை வலுப்படுத்தி வந்தவர்கள் புலிகள்.இந்தப் போராட்டச் செல் நெறி தவறானதென்பதைப் பல பத்து ஆயிரம் தடவைகள் எவரெவரா உரைத்தாச்சு.இனியும,; நாமும் உரைப்பதற்கில்லை.போராட்டமென்றால் சும்மா,சும்மா சில இராணுவ முகாங்களைத் தகர்த்துவிட்டும்,சில விமானங்களை அழித்துவிட்டால் விடுதலை வந்துவிடுமெனக் கருதிய பித்தாலாட்டக்காராகளின் முகத்தில் ஓங்கியடித்துவரும் இலங்கை அரசஜந்திரம்,தனது முழுப்பலத்தையும் காட்டாது இருக்கும் சந்தர்ப்பங்களை இனியும் ஒதுக்கி வைப்பதற்கில்லையெனச் சொல்லும் குண்டுதாக்குதலைச் செய்யும்போது,அதிலிருந்து தம்மையே பாதுகாக்க முடியாதவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்களாம்.

பாவிகள்,
கொடும்பாவிகள்,
யாரூ?
மக்கள்தாம்!


அவர்களே தமது வாழ்வாதாரத்தையும்,தங்கள் உயிர்களையும் அர்ப்பணித்து இந்தப் போராளிகளையும்,அவர்களின் போராட்டத்தையும் காத்து வந்தார்கள்.விரும்பியோ,விரும்பாமலோ இதை அவர்கள் சாத்தியப்படுத்தவேண்டிய கடப்பாட்டில் இருந்தார்கள்.இன்றோ, அந்த மக்களையே வேட்டையாடிய புலிகளின் போராட்ட முறைமை, தொடர் தோல்வியில் தமது பெரும் தலைவர்களையே இரை கொடுக்கிறதென்றால் எங்கே தவறிருக்கிறது?-நாம் நிற்கும் தளம் எது?

சிந்தியுங்கள்!

அது உங்களுக்குப் பழக்கமில்லையென்றாலும்-இனியாவது சிந்தனை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்!!-ஓ,ஒப்பாரும் மிக்காருமற்றத் தானை தலைவன் அனைத்தையும் வெல்வாரா?அப்படியா?,நல்லது!நாளை அவர் எந்த நடாற்றில்...ச்சீசீசீசீ வேண்டாம்!!

தமிழ்ச் செல்வனைக் கொன்றது அநுராதபுரத் தாக்குதலின் மறுவினை.மீள்வினை விளைவுதாம்.இங்கு, எல்லாளனும் துட்டக்கைமுனுவும் விரும்பி வேட்டைக்குச் செல்லும்போது இடையில் சில சலசலப்பு?இதையும்"வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர்"திடீர் வரவு யோகிதாம் உரைக்கணும்!-இராணுவத்துறைப் பேச்சாளர்தாம் வகுத்து வைக்கணும்!வடிகட்டிய முட்டாள்கள்!ஏன்ரா இன்னும் நம்மைத் தொலைக்கிறீர்கள்?அந்நியத் தயவில் ஆட்சி புரியும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைகளென்ன புடலங்காயா ஆய்கிறது?பேயர்களே,இதுவல்லப் புரட்சி!!-இதுவல்ல விடுதலைக்கான போராட்டம்!நீங்கள் செய்த,செய்யும் போராட்டத்தின் விளைவுகளுக்கு வயது கால் நூற்றாண்டு.இதிலிருந்து கற்றதென்ன?

போராட்டமென்றால் செத்துத்தாம் விடுதலை அடைய முடியுமென்பதா?,அரைவேக்காட்டுக்கள் அள்ளிவைத்துக் கொண்டாடிய அநுராதபுரம் தந்தது இன்னுஞ் சில மரணம்.இனியும் தரும் பல மரணம்.அடிக்கு அடி புரட்சியல்லப் புலிகளே!அது காலத்தால் கனிவது.கண்ணீரைக் குறைப்பது.இங்கே, கண்ணீரையல்லவா விடுதலையென்கிறீர்கள்!

இருக்காதா பின்ன!

ரெலோ இயக்கப் போராளிகளை நர வேட்டையாடிக் குதறியவர்களல்லவா நீங்கள்?உங்கள் இயக்கத்துக்குள்ளேயே களையெடுப்பதாகச் சொல்லி, எத்தனை தமிழ்ப்பாலகர்களைப் போட்டுத் தள்ளினீர்கள்!!இதற்காகவும்,இனியும் எத்தனையோ களையாக...நடக்கட்டும்-நடக்கட்டும்!!சிங்களமும்,இந்தியாவும் நினைப்பதைச் செய்பவர்கள் நீங்கள்.

"ஆனையிறவு,
கட்டுநாயக்கா,
அநுராதபுரம்..."

இத்தகைய கீரோயிசத் தாக்குதல்கள் இயக்கக்கட்டமைப்பையே காலியாக்குமென்பது வரலாறு.இதை அன்றே-கால் நூற்றாண்டின் முன் நாம் கூறினோம்.புலிகளின் இத்தகைய போராட்டத்தைப் புரட்சிகரமான முறையில் திருத்தியமைக்கவும்,பல்லாயிரக்கணக்கான போராளிகளை மக்களோடு இணைத்துப் புரட்சிகரக் கட்சியின் கீழ் போராட்டத்தை நடாத்தவும்,எதிர்காலத்தைத் தகவமைக்கவும் நாம் நாயாக் குரைத்திருக்கிறோம்.இதையெல்லாம் பொருட்படுத்தாத புலிப் பாசிஸ்டுக்கள் தமக்கேயுரிய பாணியில் நம்மை அச்சுறுத்தியும்,கேலி கிண்டல் புரிந்தும்-கொலைதாக்குதல் செய்தும் மறுதலித்தார்கள்.நாம் அப்போதெல்லாம் எமக்குள் நொந்துகொண்டோம்.அப்பாவி மக்களின் தலைவிதியை எண்ணி மனம் வருந்தினோம்.நமக்குள் இத்தகையவொரு அராஜக இயக்கத்தை-புரட்சிக்கு எதிரான இயக்கத்தை வளர்தெடுத்த அந்நிய அரசுகளை அம்பலப்படுத்தினோம்.அவர்களின் தயவில் நம்மையும்,நமது விடுதலையையும் வேட்டையாடிவரும் புலிகளையும் மாற்றுக் குழுக்களையும் அம்பலப்படுத்தினோம்.


இருந்தும் நிகழ்ந்தது என்ன?

போலிப் பிரச்சாரம்,துரோகி சொல்லி எளிமையாக நம்மை முடக்கும்-மக்களிடமிருந்தும் போராட்டத்திலிருந்தும் அந்நியப்படுத்தும் அராஜகம்.இந்த அராஜகத்தினூடாகத் தமிழ் பேசும் மக்களை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக்கொண்ட புலிகள், இன்று தமது வங்குரோத்து அரசியலால் நம்மையும்,நமது வாழ்வையும் படுபாதாளத்துக்குள் தள்ளி இலங்கை அரசுக்கும்,சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்து வருகிறது.இதில் முரண்படுபவர்களையும், விவாதிப்பவர்களையும் புலிகளே போட்டுத்தள்ளியபோது,அதை நியாயப்படுத்திய தமிழ்ச் செல்வனே இன்று அந்தவகை அரசியலுக்கும்,நட்புக்கும் பலியாகியுள்ளார்.இதைப் புரிந்துகொள்ளும் பக்குவமின்றி நீ கண்ணீர் வடித்து ஆவதென்ன?


உனது கண்ணீர் போலியானது!இருபத்தியொரு கரும்புலியின் மரணத்தில் மகிழ்ந்தவர்கள் நீங்கள்,இன்று, ஐவரின் மரணத்துக்காக ஒப்பாரி வைத்து என்னடா நாடகமாடா செய்கிறீர்கள்?


"தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றுவதாக"ப் பச்சோந்தி-அரசியல் விபச்சாரி நெடுமாறன் கூறலாம்.ஏனெனில், அவன் நக்கிப் பிழைப்பவன்.அன்று தொட்டு இன்றுவரை நிலையற்ற அரசியல் செய்வன்.ஓட்டுக்கட்சிகளோடு கள்ளக்கூட்டு வைத்துப் பிழைப்பு நடாத்தும் பிழைப்பு வாதிகள் பொய் சொல்லலாம்.ஆனால்,நாம் சொல்கிறோம்: "தமிழ்ச் செல்வன் சிந்திய இருத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் அல்ல ஈக்களே எழும்!"இதுதாம் நிச்சியம் நிகழும்.

இந்தத் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த கயவர்கள் புலிகள்.இந்திய அரசின் அரசியல் சாணாக்கியத்தைப் புரியாது நமது மக்களின் புரட்சிகரமான போராட்ட இலக்கையும்,மாற்றுக் குழுக்களையும் வஞ்சனை செய்து அழித்தவர்கள்.யாழ்மாவட்டமெங்கும் அப்பாவிப் போராளி இளைஞர்களைக் கொன்று குவித்து, நரவேட்டையாடிய புலிகள் இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியவர்கள்.இவர்களா தமது தளபதிகளின் அழிவுக்காய் முதலைக்கண்ணீர் வடிப்பது?-பட்டங்கள்,பதவிகள்,கௌரவப்படுத்தல்கள்...

"பிரபா-கேடியர்!"

தமிழ்ச் செல்வனைக் காட்டிக் கொடுத்த அரசியலே புலித்தலைமையின் இருப்போடு சம்பந்தப்பட்டது.அதை மூடி மறைத்தொதுக்கிவிட்டுப் புலம் பெயர்ந்த வானொலிகள் என்னதாம் சாவீடு நடாத்தினாலும் மக்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.நமது விடுதலையை வேட்டையாடிய புலிகள் இப்போது தத்தமது இருப்புக்காகத் தமது தளபதிகளையே அந்நியனுக்குக் காட்டிக்கொடுத்துத் தமது இருப்பை நிலைப்படுத்தும் சுய நலமிகளாக இருக்கிறார்கள்.


போராட்டமென்பது சிற்சில முகாங்களின் அழிப்பில் சிதைவுறுமே தவிர அது மக்கள் போராட்டமாவதற்கில்லையென்பதை மீளவும் நிலை நாட்டும் இந்த மரணங்களோடு நாம் மௌனிக்க விரும்பவில்லை.புரட்சிகரமானவொரு கட்சியையும்,அதன் பின்னால் எழிச்சியுற்ற மக்களையும் அணி திரட்டிப் பொது எதிரியை வென்றாக வேண்டும்.அங்கே, சிங்களப் பாசிச அரசுமட்டுமல்ல புலிப் பாசிசத் தலைமையுமே நமது பொது எதிரியாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணராதவரை இத்தகைய தளபதிகள்-போராளிகள் அழிந்தபடி, நமது விடுதலையை வேட்டையாடும் அந்நிய சக்திகள்.அதற்கு ஆதரவாகப் புலித் தலைமையும் ,அத்தலைமையின் கீழ் அணிதிரண்ட போராளிகளும் அந்நியர்களுக்கு உடந்தையாக இருந்து, நம்மை வேரோடு கருவறுப்பார்கள்.


மீளவும் நினைவுப்படுத்துவோம்: இருபத்தியொரு கரும்புலிகள் செத்து மடிந்தபோது விமானங்களின் அழிவே புலிகளுக்குள் பிரமாதமாக இருந்தது.அது பெருமிதமான ஆய்வுகளையும் அடுத்த கட்ட நகர்வையும் பேசியது.இப்போது, ஐந்து மரணங்கள் அழுகையையும் அதுசார்ந்த ஒப்பாரியையும் தருகிறது, இவர்களுக்கு!!

ஒரே நிகழ்வில் இருவகை-இருவேறு உணர்வுகள்!-போராளிகளுக்கும்,தலைவர்களுக்குமுள்ள இடைவெளிகள் நீண்டபடியே இருக்க,அப்பாவி இளைஞர்கள் இவர்களை நம்பிக் குண்டைக் கட்டி வெடித்துச் சாவதால் கிடைப்பது தமிழ் பேசும் மக்களின் விடுதலையல்ல.இது புரிந்தால்...

"............................."


ப.வி.ஸ்ரீரங்கன்.

02.11.2007

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...