Saturday, March 24, 2007

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்-2

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்-2

(தொடர்)

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் பின்னைய காலங்களில்(1997-2001)அமெரிக்காவின் வெளித்துறை மந்திரியுமான மெடாலின் அல்பிறைட்;(Madeleine Albright)அம்மையாரை பலர் அறிந்திருப்பார்கள்.அமெரிக்கா என்பது முதலாளித்துவத்தின் மிகக் கொடு முடியென்பதும்,அதன் ஒவ்வொரு அசைவும் நிதி மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கும்,உலகை அடியோடு சுரண்டுவதற்கும் என்பது பொதுவான கருத்து.ஆனால் அமெரிக்காவானது உலகை மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர முனையும் அபாயகரமான விஞ்ஞானப் பலம் கொண்ட நாடு.இந்த அமெரிக்காவை நிலை நிறுத்தியது அவர்களின் கொடூரமான இராணுவமோ அல்லது அந்த நாட்டின் நிதி மூலதனமோ அல்ல.அந்த நாடு தன்னை மேல் நிலைப்படுத்தத் தொடங்கிய தாக்குதலை விஞ்ஞானப் பலத்தோடு கட்டியமைத்த ஆண்டு 6.ஓகஷ்ட்டு 1945 ஆகும்.அன்றுதாம் இவ்வுலகைக் கரியாக்கும் அணுக் குண்டை அமெரிக்கா மனிதப் பெரும் பரம்பலுக்குள் வெடிக்க வைத்துப் பரிசீலித்த அதி துயரமான நாளை உலகுக்கு அமெரிக்க முதலாளிகள் அறிமுகப்படுத்திய நாள்!கீரோசீமா(Hiroshima)குலைந்து எரி பிண்டங்களாகச் சிதறிக்கிடந்த இந்த நாளை நிஜப்படுத்திய கொடியவன் ஓப்பன் கைமர் என்பது என் கருத்து.

உலகின் இன்றைய நிலைக்கு இந்த விஞ்ஞான அறிவே முழு முதற்காரணமாகும்.முதலாளியமென்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடுதாம் இது நாள் வரைத் தன்னை நிலைப்படுத்த முடிந்திருக்கிறது.இந்த விஞ்ஞானத்தின் அதீதக் கைவைப்பு அணவாயுதத்தை மனிதப் பரம்பலுக்குள் வெடிக்க வைப்பது மட்டுமில்லை.இன்றைய நிலையில் மரபணு மாற்றங்களால் இயற்கையே மாற்றியமைக்க முனையும் இந்த மரபணு அறிவே உலகின் மிகப் பெரும் அழிவாக நாளை வருவது உண்மையாகப் போகிறது.இதை மிக வலுவாகச் சொல்வேன்.இன்றைய உலக நிலவரத்தின்படி உலகில் என்றுமில்லாதவாறு ஆயுதப் போட்டி ஒருபுறம் மறுபுறம் மரபணு மாற்றம் மூலம் இந்தவுலகத்தின் பூர்வீக இனங்களை அழித்து இயற்கையையே மாற்றி வரும் மிகப் பெரும் அழிவுக்காலத்தை அமெரிக்க ஆதிக்க வெள்ளையின வெறி விஞ்ஞானமாக விரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் நாம் அமெரிக்காவினதும் மேற்குலக முதலாளிகளினதும் போட்டிச் சந்தை மற்றும் மூல வளங்களுக்கான முரண்பாடுகளைப் பார்க்கப் போகிறோம்.முன்னாள் வெளித்துறை மந்திரி அல் பிறைட் அம்மணியிடம் 12 மே 1996(12. Mai 1996)அன்று தொலைக்காட்சி நிகழ்வுக்காகன சந்திப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லெஸ்லி ஸ்ரால்(Moderator Lesley Stahl)கேட்கிறார்:"ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடையினால் ஐந்து இலட்சம் குழந்தைகள் மரித்ததாகக் கேள்விப் படுகிறோம்,இத் தொகையானது கீரோசீமாவில் உயிரிழந்த குழந்தைகளைவிடப் பலமடங்கு அதிகமானதென்றே நான் கருதுகிறேன்.நீங்கள் இது குறித்து நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்,இது விலை மதிக்கத்தக்கதா?(Wir haben gehört, dass eine halbe Million Kinder wegen der Sanktionen gegen den Irak gestorben sind. Ich meine, das sind mehr Kinder, als in Hiroshima umkamen. Und - sagen Sie ; ist es den Preis wert ?) அல்பிறைட் அம்மயார்(Madeleine Albright )சொல்கிறார்:"நான் நினைக்கிறேன் இது மிகக் கடினமான முடிவு என்றே, எனினும் இந்த விலை,நாங்கள் கருதுவதின்படி மிகவும் விலை மதிகத் தக்க விலையே."(Ich glaube, das ist eine sehr schwierige Entscheidung, aber der Preis - wir glauben, es ist den Preis wert.)



ஆக அமெரிக்காவின் நியாயத்தின் படி ஈராக்க இந்த விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்.இது அமெரிக்காவுக்கு விலை மதிக்கத்தக்க அரசியல் ஆதாயம்.இதை இன்னொரு வடிவில் பாருங்கள் ஆர்த்தூர் ஒப்பன்கைமரின் அணுக்குண்டைக் காவிச் சென்று கீரோசீமாவில் வெடிக்க வைத்த மனித பயங்கரவாதி அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை விமானி பவுள் ரிபெட்ற்(Paul w.Tibbets)ஜேர்மனியத் தொழிற் சங்கம் மெற்றாலுக்கு(Metall) அளித்த பேட்டியொன்றில் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா?


தொழிற் சங்கம் மெற்றால்(Metall):"இன்று கீரோசீமா குறித்தும் அணுக் குண்டு வெடிப்புப் பற்றியும் என்ன எண்ணுகிறீர்கள்?,உங்களது அன்றைய பாத்திரம் குறித்து மனவருத்தம் அடைகிறீர்களா?"(?"(Metall:Wie denken Sie heute ueber die Bombardierung von Hiroshima und ueber Ihren Auftrag-bedauern Sie es?).Paul W.Tibbets:"நான் பூரணமாக இது குறித்து வருத்தப்படவே இல்லை.அந்தக் காலத்தில் போடப்பட்ட அணுக்குண்டும் அதன் அவசியத்தையும் நம்பிக்கையின்படியேதான் நான் செயற்படுத்தினேன்.அது குறித்து இன்றுவரை எந்த மாற்றமுமில்லை(Ich bedauere absolut nicht.Zum Zeitpunkt des Bombenabwurfs war ich von seiner Notwendigkeit ueberzeugt,und daran hat sich bis heute nicht geaendert.)- Krieg und Friden von Willi Dickhut.Seite:35.

மேலே பதில் கூறியவர்களில் ஒருவர் அரசியல்வாதி.மற்றவர் அமெரிக்காவின் விமானப்படை விமானி.இருவரின் கருத்துகளுக்கும் இடையில் ஏதாவது அடிப்படை வித்தியாசம் உண்டா?அதாவது மனிதர்களை அமெரிக்க அரசியல் கொல்வது பற்றி-தனக்குச் சம்பந்தமே இல்லாத நாடுகளைத் தாக்கி அந்தந்த நாடுகளின் குடிகளைப் பூண்டோடு அழிக்கும் அமெரிக்கப் பயங்கர வாதத்தைப் பற்றி இவர்களின் அரசியலில் அந்த(அமெரிக்காவினது) நாட்டின் குடிகளிடமுள்ள அகமன விருப்பு எப்படியுள்ளது? இது முன்னாள் ஜனாதிபதி வில்சனின் மன விருப்பை பிரதியெடுத்த ஆதிக்கத் திமிராக வெளிப்படவில்லையா?.வில்சனின் "அமெரிக்காவே முதன்மையானதென்பதன்" நீட்சியாகத் தெரியவில்லையா? இங்கேதாம் வருகிறது அமெரிக்காவின் ஜனநாயகம் என்னும் முக மூடி.இதை அளவு கோலாக வைத்துக் கொண்டு மேலே போவோம்.

அன்று ஈரக்கின்மீது தாள்கதிரியக்க்க அணுக் குண்டுகளை "Typ CBU-89 of Typ Gator,Splitterboms""மற்றும் யு 838 இரகத் தாள் அணுவினைக் குண்டுகளைக் கொண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவைக் கடிந்து கொண்டவுலகம்- இந்தக் காலத்தில் பல விவாதங்களைத் தொலைக்காட்சியில் நடாத்தியது.இப்படியொரு தொலைக்காட்சி நிகழ்வொன்றில்(ஏ.ஆர்.டி. ஜேர்மன் தொலைக்காட்சியென்றே நினைக்கிறேன்.கருத்துக்கள் ஞாபகம் இருக்கிறது.அதில் பங்குபற்றிய அமெரிக்கப் பத்திரிகையாளிரின் கருத்துக்கள் ஞாபகத்தில் இருக்கிறது.அவரது பெயர் மறந்தாச்சு.)அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி"கீரோசீமாவில் அணுக்குண்டைப் போட்டு மனிதரைக் கொன்றீர்கள்,இப்போது ஈராக்கில் இவையெல்லாம் பயங்கரவாதமில்லையா?"பத்திரிகையாளரின் பதில்:"இவையனைத்தும் பயங்கரவாதமல்ல!இவைகள் யுத்த அளவு கோலாகும்".

எப்படியுள்ளது நிலைமை?

ஈரக் குழந்தைகளின் சாவு ஈராக் கொடுக்க வேண்டிய அமெரிக்காவுக்கான பெறுமதிமிக்க விலை.

கீரோசீமாவின் இழப்பு அவசியமானது அமெரிக்கச் சிப்பாய்க்கு.

இத்தகைய மனிதக் கொலைகள்-அணுக் குண்டு வீச்சுக்கள் எல்லாம் அமெரிக்காவின் யுத்த அளவு கோல்கள் அமெரிக்க அறிவாளிகளுக்கு.

ஆக நான் வைப்பதே நியாயம்.நீ பயங்கர வாதியென நான் சொன்னால் அதை இல்லையென்று சொல்லும் உரிமை உனக்கில்லை.-இதுதாம் அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் இன்றைய பனிப்போர் உலகைக் கவ்வும் மிகப் பெரும் யுத்த அபாயம் மட்டுமல்ல.அது உலக நாடுகளின் இறைமைகளோடும்,அந்த மக்களின் உரிமைகளோடும் அமெரிக்கா தொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதாரப் போராகும்.இந்தப் பனிப் போரினால் அமெரிக்கா அடைய விரும்பும் நிலையென்ன?

மீளவும் பனிப்போர்:National Missile Defense வடிவத்தோடு:

அமெரிக்காவினது இன்றைய வெளித்துறை மந்திரி கொண்டி றைஸ்US-Außenministerin Condi Rice(பெயரில்கூட ஒரு கவர்ச்சி இருக்குது,மனதில் ஒரு எதிர்ப்பால் ஊக்கம் வேறு வந்து போகுது)தீடீர் திடீரென அண்மைக் கிழக்கு நாடுகளுக்குப் பிரயாணிக்கிறார்.தனது நீண்ட நெடுங் கால்களைப் பின்னிப் பின்னி நடை காட்டுகிறார்!எகிப்துக்குப் போகிறா அப்படியே சவுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு சிரியாவுக்கு டுபாய்க்கு இன்னும் எங்கெங்கோ போகின்றார்.இரண்டு மாதங்களுக்குள் இரு தடவைகள் நடையாய்ப் பவனி வருகிறார்.என்ன பிரச்சனை?

ஆகா! ஒபெக்(OPEC-Länder;) என்ற எண்ணை வள நாடுகளின் கூட்டு அமெரிக்க டொலர்களுக்கு மாற்றைக் கோருகின்றன.ஈரானின் நீண்ட நாள் கனவான எண்ணைப் பங்குச் சந்தை மார்ச்சு 2006 இருந்து இயங்கத் தொடங்கியாச்சு(Oil Exchange Program).அமெரிக்காவுக்கு மீளவும் ஒரு தலையிடி, இப்படி உருவாகுமென்றே ஏலவே தெரிந்தபோது அது காய்களை அரசியலூடாக மட்டுமல்ல இராணுவ வியூகத்தோடுமே நகர்த்தத் தொடங்கியது.அமெரிக்க இராஜ தந்திரத்தை இராணுவ வியூகதைத் தவிர்த்துப் பார்ப்பது கடினம்.இதுதாம் "துப்பாக்கிக் குழலிலிருந்து அரசியல் பிறப்பதாக"அன்றைய சீனத்தின் சிற்பி சொன்னதாக ஞாபகம்.என்னவோ இன்றைய இந்தப் பனிப் போரை எவருமே முடிவுக்குள் கொண்டுவர முடியாதபடி இருஷ்யாவின் இராணுவ நகர்வுகளும்,ஜேர்மனியின் விஞ்ஞானப் பரிமாற்றங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

போலந்தில் நிறுத்தி வைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்புப் கணைகள்(என்.எம்.டி.)மற்றும் செக்காயில் நிலைப்படுத்தப்படும் ரேடர்கள் மூலமாக அமெரிக்கா அச்சுறுத்தும் அரசியல் இன்னொரு இரணுவத் தன்மையிலான ஐரோப்பாவையும் இவர்களுக்கு இரையாகும் தொழிலாள வர்க்கத்தையும் உருவாக்கி விடுவதும் இதன் வாயிலாக சுய வளர்ச்சிகள் சிதறடிக்கப்பட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வாழ்வு மதிப்பீடுகளையும் இராணுவ மயமாக்க முனையும் அமெரிக்கா தன்னை எப்போதும் அண்மைக் கிழக்கு நாடுகளின் தலைவனாகவும் அந்த நாடுகளின் எண்ணை வயல்களைத் தனது மேற்பார்வையோடுதாம் கொள்ளையிட்டுத் தான் போடும் பிச்சையை மற்றவர்கள் பெறும்படிதாம் கோரிக் கொள்கிறது.இதை மீறிய எல்லா வகை அரசியல் நகர்வையும் தான் எந்தக் கோலத்திலும் அழித்துவிடும் திறன்மிக்க நாடு என்பதை அமெரிக்கா மேற்குலகத்துக்குச் சொல்வதே இந்த National Missile Defense ஊடாகவேதாம் சாத்தியமாகிறது.

இன்றிருக்கும் உலக வர்த்தகப் பொறி முறையில் "மசகு எண்ணையின்றி ஒரு மசிரும் அசையாதென்பதே" உண்மையாகும்இந்த உண்மையானது எப்பவும் எண்ணைக்காக எதையும் இழகத் தயாராகும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியலில் இவர்கள் நடாத்தும் இராணுவச் சகசம் அப்பாவி மக்களையும் அவர்களது பண்பாட்டையும் சாம்பலாக்கும் அளவுக்கு யுத்தம் அவசியமாக முனைப்புறுகிறது.இது விரும்பத் தக்க விளைவில்லையெனினும் இதைவிட வேறு வழி இந்த நாடுகளுக்குத் தெரியவில்லை.இந்தத் தெரியவிலை;லைக்குப் பின்னால் மேற்குலக வெள்ளைத் திமிர் மறைந்திருக்கிறது.தாம் எவரும் குடியில்லையென்பதும்,தாமே மற்றவர்களுக்கு எஜமானர்களென்பதும் இந்தத் திமிருக்குள் இழையோடுகிறது.

ஈரானின் அணு ஆயுத முயற்சி,நெடுந்தூர ஏவுகணைகள் என்ற பூச் சுற்றலுக்குப் பின்னால் ஈரானின் உலர்ந்த எண்ணை வயல்களே அமெரிக்காவினதும் மற்றும் மேற்குல நாடுகளினதும் சீனாவினதும் அரசியல்-இராணுவ வாதத்துக்குக் காணமாகின்றென.

2005 ஆம் ஆண்டு Oil and Gas Journal' ன் கணிப்பின்படி ஈரானில் உள்ள எண்ணை இருப்பானது 125.8 பில்லியன்கள் பெறல்களாகும்.இது அமெரிக்காவின் எண்ணை வளத்தைவிட ஐந்து மடங்கு அதிகமானது உலகத்தில் இரண்டாவது பெரிய எண்ணை வளமுமாகும்.இன்றைய நிலையில் இருப்பிலுள்ள இந்த எண்ணையை உறிஞ்சிக் கொள்வது அவசியம்.இல்லையேல் ஈரானின் பாத்திரம் எண்ணைவள நாடுகளின் கூட்டில்;(OPEC -Organisation der erdölexportierenden Länder)இரண்டாவதாகவே தொடர்ந்திருக்கும்.இது அமெரிக்காவுக்கு என்றும் பாதகமானது.சோவியத்துக்குச் சாதகமானதாகவும் சீனவுக்கு நேசமாகவும் இருக்கும்.எனவே எக் காரணங்கொண்டும் ஈரானை யுத்தத்தால் வென்று அதன் முழு எண்ணை வயல்களையும் அமெரிக்கா கட்டுப் படுத்தியாகவே வேண்டும்.இதுதாம் இன்றைய அமெரிக்க எண்ணை முதலாளிகளின் கனவு.இது பலிக்குமா என்பதை பின்பு பார்ப்போம்.இதற்கு முன் வேறு சில வற்றையும் பார்ப்போம்.

சீனா-இருஷ்யா-ஈரான்:

ஈரானின் அநேகமான எண்ணை இருப்பு நிலப்பரப்புக்குள் கீழேயேதாம் இருக்கிறது.இந்த நிலப்பரப்பில் முக்கியமானது Khuzestan பகுதியாகும்.இது ஈராக்கின் எல்லைக்குப் பக்கத்தில் அமைந்திருப்பதாலும் இங்கே ஈரானின் மிகப் பெரும் எண்ணை ஊற்றுக்களான இரண்டு வயல்கள் இருக்கிறது.ஒன்று:Yadavaran¦ மற்றது:¦Azadegan இப்போது சிந்திப்பவர்களுக்கு அமெரிக்க எண்ணைக் குஞ்சுகளின் இதயத்தின் "படீர் படீர்-யுத்தம்,யுத்தம்-அணுக்குண்டு,அணுக் குண்டு-ஆபத்து ஜனநாயகத்துக்கு" என்ற அடிப்புக்கு-அரிப்புக்கு என்ன காரணமெனப் புரிவது கடினமில்லை!

இப்போது ஐ.நா.வின் பாதுகாப்பு மாநாட்டின் தொடர் இருக்கைக்கு ஈரானிய ஜனதிபதிக்கு மிகவும் சுணக்கியடித்து விசா வழங்கிய அமெரிக்காவின் நரித் தனமானது வீட்டோ உரித்துடைய இருஷ்சிய மற்றும் சீனாவின் ஒத்திசைவான வீட்டோ பயன் படுத்தலைக் கண்டு தடுமாறியதன் விளைவாகவும் மேலும் குழப்பத்தோடு அம்பலத்துகு வந்துள்ளது.என்றபோதும் ஐ.நா.உறுப்பினர்கள் ஈரானுக்கான பொருளாதாரத்தடையைக் கோரிக் கொண்டிருப்பினும் இது ஈரானை மெல்லப் பாதிப்புக் குள்ளாக்கினும் அமெரிக்காவின் திட்டமானது ஈராக்கின் எல்லையிலுள்ள ஈரானின் எண்ணையைக் கையகப் படுத்தும் ஒரு அத்துமீறிய யுத்தமே.

இன்றைய ஈரானிய எண்ணை வயல்களில் முக்கியமானYadavaran எண்ணை வயலில் 50 வீதமான பங்கை சீனா கட்டுப்படுத்துகிறது.சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சீனப் பெற்றோலியம அன்ட் கெமிக்கல் கோப்பிரேஷனிடம்;;.(Das staatliche chinesische Erdölunternehmen China Petroleum & Chemical Corporation hält 50% der Aktien des großen Yadavaran-Ölfelds)இந்த ஐம்பது வீதப் பங்கு இருக்கிறது.இது இந்த எண்ணை வயல்மீதான சீனாவின் கழுகுக் கண்ணுக்கு நல்ல உதாரணமாகும்.

இருஷ்சியாவோ 2003 ஆம் ஆண்டளவில் தான் போட்டுக்கொண்ட திட்டத்தின்படி ஈரானின் எண்ணை வளமிக்க தொழிற்சாலைகளுள் மிகப் பெரும் நிதியிட்டுள்ளது.கூடவே தனது சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ஈரானின் மொத்த தேவைக்காக அனுப்பி வைக்கின்றபோது அதேயளவு மசகு எண்ணையை ஈரானிடமிருந்து மீளப் பெறுகிறது.இந்தக் கூட்டு முயற்சியானது வருங்காலத்தில் ஈரானின் மொத்த எண்ணையிருப்பையும் கணிசமானளவு சீனாவும் இருஷ்சியாவும் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் ஈரான் இதை முழுவிருப்போடு செயற்படுத்த விரும்புகிறது.அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த முயற்சியைத் தொடர விரும்பும் ஈரானுக்கு இந்த இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதில் வியப்பில்லை.

ஈரானின் எண்ணை டொலர்கள்:

ஈரான் இதுவரை மிகப் புத்திசாலித்தனமாக அமெரிக்க ஆசாமிகளை கலங்க வைத்தே வருகிறது.அது செய்த இரண்டு காரியம், ஒன்று:தனது பெருந்தொகையான அன்னியச் செலவாணியை குவித்து வைத்திருக்கும் மேற்குலக வங்கிகளிலிருந்து பெரும் பகுதியை மீளத் தனது நாட்டுக்குள் இழுத்துவிட்டது.இது அமெரிக்கப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தையே பாதிக்குமளவுக்குச் சென்றிருக்கிறது.மற்றது ஈரானின் நீண்ட நாட் கனவான எண்ணைப் பங்குச் சந்தையை ஐரோப்பிய எண்ணை நிறுவனங்களின் பங்குச் சந்தையோடு இணைத்து இயங்க வைப்பது.இந்தச் செய்கையால் இதுவரை எண்ணை டொலர்களாக இருந்த பணமாற்று இனிவருங்காலத்தில் ஐரோப்பிய யுரோவுக்கு மாற்றவேண்டிய நிலையை ஓபெக் நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது.இது அமெரிக்காவுக்கு மிகவும் கேடான செய்தி.எனினும் இத்தகைய நடவடிக்கைகளை முதன்மைப் படுத்துவதால் அமெரிக்காவை வீழ்த்தமுடியாது.இதை அமெரிக்கப் பேய்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளத் தக்க மொழிகளில் ஈரானுக்கும் அதன் வர்த்தகத் தொடர்பு நாடுகளுக்குஞ் சொல்வதில் இந்த என்.எம்.டி.ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டம் அதற்குக் கை கொடுக்கிறது.

ஈரானின் இத்திட்டம் வெற்றி பெறுந் தறுவாயில் டொலர் மூலமாகப் பரிமாறப்பட்ட எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு முழுதாக மாறுந் தறுவாயில் அமெரிக்காவில் எண்ணைவிலையும் டொலரின் சரிவும் நிகழ்ந்துவிடும்.இத்தகைய நிகழ்வின் பின் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரிய அதிர்வுகள் ஏற்படும்.இதை முறியடிப்பதில் அமெரிக்காவுக்கு ஒரு யுத்தம் ஈரான்மீது தொடுத்தாக வேண்டும்.இதுதாம் அமெரிக்காவின் இது நாள் வரையான யுத்த அளவுகோல்.இதுவன்றி அமெரிக்க மூலதனம் பெருக முடியாது.அதன் முரண்பாடுகளை அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.எனவே அமெரிக்க மூலதனத்தின் இருப்பு அமெரிக்காவின் அத்து மீறிய யுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது!

எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு மாறுந் தறுவாயில் பயன் பெறும் முதலாளிகள் நிச்சியம் ஐரோப்பிய முதலாளிகளே!சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமே இது பாரிய பின்னடைவை வழங்கும் .இதுவரை டொலரில் பரிமாற்று நிகந்த வரை தமது மூலதனத்தின் மூலம் உபரிகளை தேடிக் கொண்ட இவர்கள் இனிமேல் யுரோவுக்கும் டொலருக்குமான சம நிலையற்ற போக்கால் பாரிய துண்டு விழும் நிலைக்குள் தமது மூலதனத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் சீனா மதில் மேல் பூனையாக இருந்து கொள்ள முனையும்போது ஜப்பான் அமெரிக்காவுக்கு வக்காலத்து வேண்டும்.அது அமெரிக்காவோடிணைந்து ஈரான்மீது தாக்குதல் தொடுக்கும்.இங்கே ஐரோப்பிய நாடுகளின் தலைமை நாடான ஜேர்மனி அமெரிக்கப் படுகொலை யுத்தத்தை எப்படியும் ஒரங்கட்டும் அரசியலை நகர்த்த முனையும்போது அதை உடைப்பதற்காகவே போலந்தோடு ஏவுகணைக் கூட்டை அமெரிக்கா செய்கிறது.

உலகில் பேற்றியர் லோஞ்சர் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.இது அமெரிக்காவின் அற்புதமான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்.அமெரிக்கா தன் நேச நாடுகள் இரண்டிற்கு மட்டுமே அந்த ஆயுதத்தை வழங்கியது.அந்த நேச நாடுகள் இஸ்ரேலும் ஜேர்மனியுமாகும்.இப்போது ஜேர்மனிக்கு எச்சரிக்கும்படி போலந்தை வளைத்துப் பிடிக்கும் அரசியலை அமெரிக்கா முன்னெடுப்பதால் ஜேர்மனி கையைப் பிசைந்தபடி "நேட்டோ,நேட்டோ"என்று அலம்புகிறது.இங்கே வெடித்திருக்கும் இந்தப் பனிப்போரானது எண்ணையை முதன்மைப் படுத்திய அதுவும் ஈரானிய எண்ணையிருப்பைக் கொள்ளையிடுவதோடு சம்பந்தப்பட்ட மாதிரித் தெரிந்தாலும் அதற்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.

இதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.தொடரும்.

இதுவரை பயன்படுத்திய பத்திரிகைகள்,நூல்கள்:

http://priceofoil.org/thepriceofoil/war-terror
http://harpers.org/sb-democrats-oil-1174575083.html
Attac-Mailingliste
http://www.saar-echo.de/de/prt.php?a=30566
die tageszeitung
19.03.2007
Konkret 2.2007
Krieg und Frieden von Willi Dickhut.


ப.வி.ஸ்ரீரங்கன்
24.03.2007

Wednesday, March 21, 2007

பனிப் போரொன்று:National Missile Defense...

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்!

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன்.

முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது.

இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்"மகாத்துமா"என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது.

இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இன்றைக்கு இலங்கை அரசியலில் நடந்தேறும் அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளை பயனாக மேன் மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் புரட்சியில் புடம்போட்டு ஈழத்தைக் கனவு காண வைத்தபடி.இறுதியான ஈழயுத்தம் இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக் கொள்ளும் குழந்தைகளுக்குள் புதிய பனிப் போர் குறித்தொரு பதிவும் அவசியமானதுதாம்.

"உண்மையான அமெரிக்கன் எப்படி இருப்பானென்றால்,அவன் ஜனாதிபதி வில்சனைப் போல் இருப்பான்".என்று சாதாரண அமெரிக்கச் சிப்பாய் சொல்லுமொரு காலம் அமெரிக்காவில் தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.கரிபியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் வலயத்திலும் தனது ஆதிகத்தை நிறுவிய அமெரிக்கா முதலாம் உலக யுத்தத்தில் மூழ்கிய-மூட்டிய ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பமானது அமெரிக்காவை வலுவான தேசமாக உருவாக்கிய நூற்றாண்டின் திறவுகோலாகும்.

இன்றிருக்கும் அமெரிக்காவானது இன்றைய அதன் ஜனாதிபதியால் இத்தகைய நிலையை அடைந்துவிட்டதாக யாராவது கணித்தால்-கருதினால் அது மிகப் பெரும் கொடுமை!அமெரிக்காவினது தொழிற்றுறையைக் கட்டுப்படுத்தித் தமது குடும்பச் சொத்தாக மாற்றிய அமெரிக்க வெள்ளையினக் குடும்பங்கள் சில அந்தத் தேசத்தை மனித விரோதிகளின் கூடாரமாக்கிய பின் தேசங்கடந்த வழிப்பறிப் பயங்கரவாதிகளாகத் தமது மக்களை உருவாக்கி விட்டுள்ளுது.இந்த அமெரிக்காவுக்கென்றவொரு "நீதி-நியாயம்",அடி-கொள்ளையிடு என்றபடியே அர்த்தமாகிறது.

1990 செப்டெம்பர் 11 இல் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய சீனியர் புஷ்:"...ஒரு புதிய யுகம்,பயங்கரவாதத்தைச் சுதந்திரமாக எதிர்துத் தாக்கத்தக்க மற்றும் சமத்துவத்தைப் பலமாக நிலை நாட்டத்தக்க, நிச்சியமான சமாதானத்தை உறுதிப்படுத்தத் தக்க புதிய யுகம்.ஒரு புதிய யுகம்,கிழகத்தைய மற்றும் மேற்கத்தைய கூடவே வடக்கத்தைய மற்றும் தென்னக இனங்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமாகவும் இசைந்தும்(...)வாழத் தக்கதான புதிய யுகம்.இன்றைக்கு அதற்காக உழைக்கின்றோம்.அது உதயமாவதற்காகப் போராடுகிறோம்.ஒரு புதிய யுகம்,அது அனைத்து வித்தியாசங்களுடனும்,ஒவ்வொருவருடையதுமான வித்தியாசங்களுடன் இருப்பதை நாங்கள் அறிவதற்கும்.சட்டத்தின் ஆளுமையை பலத்தோடு நிறுவுதற்கும்(...) ஒரு புதிய யுகம்,பலவீனர்களினது பலமான சட்டங்களைப் பலமானவர்கள் மதிக்கத் தக்க புதிய யுகம் உருவாக்க வேண்டும்."(Joshua Frank : 'Left Out! How Liberals Helped Reelect George W. Bush', ) 11 செப்ரெம்பர் 2001 உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்கு முன்பான அமெரிக்காவின் புதிய உலகுக்குக்கான அடித்தளம் இது.இந்த அரசியல் அபிலாசை உலகத்தின் வளங்கங்களைக் கட்டுப்படுத்தி விடுவதோடு இருக்க வில்லை.மாறாக அமெரிக்காவின் அனைத்து நலன்களையும் முதன்மைப் படுத்திய உலக மக்களை உருவாக்குவதில் அதன் போராட்டம் மேலும் சீனியர் புஷ்சின் உரையோடு அண்மித்திருந்தது.

ஏலவே இரண்டவது யுத்தத்தின் பின்பான அதனது அணுவாயுதத் திமிரானது உலகத்தைக் கம்யூனிசச் சக்திகளின் கைகளில் தவறியும் சேர்த்துவிடாதிருக்கப் பெரும் இராணுவத் திமிராக வெளிப்பட்டது.இதன் தொடர்ச்சியாக உலகு தழுவி 400 இராணுவப் பாதுகாப்பு முகாங்கள் நிறுவப்பட்டன.பல இலட்சம்(கிட்டத்தட்ட200.000.படைகள்)இராணவத்தினர் இதற்காக வெளி நாடுகளில் அமெரிக்க அரசியலை முன்னெடுத்தனர்.

இந்தத் தரணத்தில் உலகை ஏப்பமிட முனைந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்திய இரஷ்சியாவுக்கும் மூண்ட பனிப்போர் குருஷ்சேவைப் படாதபாடு படுத்தியது.வலிந்துருவாக்கிய அமெரிக்காவின் இராணுவப் பொறிக்குள் வீழ்ந்த இரஷ்யா அனைத்தையும் இழந்து,தனது பொருளாதாரக் கட்டுமானத்தையே சிதறடிக்கும் அளவுக்கு இது வலியதாக இருந்து.

இந்தவொரு நிலை மீளவும் உருவாகிறது.

இது ஏன்?

இப்போது கம்யூனிச இரஷ்சியா இல்லை!

அமெரிக்காவுக்கு எதிரான-பலமானவொரு வல்லரசு உலகில் எதுவுமில்லை.

என்றபோதும் அமெரிக்கா போலந்தில் பத்து ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் மற்றும் செக்காயில் ரேடர் கருவிகளையும் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவிக் கொள்ளும் முனைப்பில் இறங்கிப் பாரிய பனிப் போரைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பல எதிர்க்க, அவர்களின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் போராடப் போவதாக மிரட்ட-நேட்டோவின் தலைமையை இழக்காதிருக்க முனையும் ஐரோப்பிய ஒன்றியம் தடுமாற, இந்தப் பனிப் போர் வழி செய்கிறது.

இரஷ்ய அதிபர் பூட்டின் சொல்கிறார்: அமெரிக்கா அரசியல் எல்லையை மீறுகிறது!(Putin: "USA haben politische Grenzen überschritten" -Russlands Präsident Putin kam bei der Münchener Sicherheitskonferenz sofort zur Sache. Er warnte massiv vor einer amerikanischen Weltherrschaft und drohte: Russland verfüge über Waffen, gegen die die geplante US-Raketenabwehr für Osteuropa wirkungslos wäre.)


இது-இந்த முரண்பாடு ஏன்?

அமெரிக்கா சொல்கிறது:"ஈரானின் நெடுந்தூர ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைக் காப்பதற்கு இது(National Missile Defense)அவசியம்."

உண்மை வேறு வடிவமானது.

இருஷ்சியாவுக்கும் ஈரானுக்கும் மற்றும் ஜேர்மனிக்கும் ஈரானுக்குமான வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் காரணங்கள்,யுரோவுக்கு மாற முனையும் ஒபேக்கின்;(OPEC)மன விருப்பு-வற்புறுத்தல் போன்ற பல் வகைக் காரணிகள் இந்த விசயத்துள் அமெரிக்காவுக்கு ஏவுகணைத் திட்டமாக விரிகிறது.

இது குறித்து வரும் சில தினங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
21.03.2007



Monday, March 05, 2007

"எங்களது அழகான,புதியவுலகம்"

"எங்களது அழகான,புதியவுலகம்"


1991 இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரைக்குள் இந்த ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திடம் வட்டியாகச் சேர்ந்த பணம் 3332 பில்லியன்கள் டொலர்களாகும்(Quelle:Budesbank/BMA)


என்னடா இவ்வளவு தொகை வட்டியாக வந்திருக்கே இது யாரிடமிருந்து வந்திருக்கு?


எவரால் இது சாத்தியமாச்சு-யாரிதைத் தாங்குகிறார்கள்?


எவரிடம் இப்பணம் குவிந்துள்ளது??



இவ்வளவு பணம் இந்த நாட்டின் ஆளும் வர்கத்தின் கைகளில் தேங்கியுள்ளது!



அப்பாவி உழைப்பாளர்கள் மற்றும் வளர்முக நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களிலிருந்து பெறப்பட்ட வட்டிக்கு வட்டிகள் இதைச் சாத்தியமாக்கிறது.


ஜேர்மனிக்கே இவ்வளவு தொகை வருமானம் வட்டியாக வந்தால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இன்ன பிற வல்ல பேய்களுக்கு எத்தனை ஆயிரம் பில்லியன்கள் டொலர்கள் வட்டியாக வந்திருக்கும்? இத்தகைய நாடுகள் வட்டியை வழங்கிய நாடுகளுக்குக் கூட்டாக வழங்கிய சமூக நல(?)க் கொடுப்பனவுகளைக் கீழே பாருங்கள்.அதில் மீளவும் ஆயுத ஏற்றுமதியால் எவ்வளவைத் திருடுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.


இத்தொகையில் இவர்கள் சுரண்டுவதைச் செவ்வனவே செய்து முடிப்பதற்கும்,தமது சுரண்டலை நியாயப்படுத்துவதற்காகவும் உதவித் தொகைகளாகக் கண்துடைப்புச் செய்து,வட்டி கட்டிய நாடுகளுக்கு குடி தண்ணீர் வழங்குவதற்கும் அந்தத் தேசத்து மக்களுக்கு ஆரோக்கியம் வழங்குவதற்காகவும் அவர்களிடம் தட்டிப் பறித்த பல்லாயிரம் பில்லியன்கள் டொலரில் வெறும் 40 பில்லியன் டொலர்களை இந்த உலகம் வழங்கியுள்ளது(www.welthungerhilfe.de)



ஆனால் இந்தத் தேசங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களுக்காக(மூன்றாம் உலகத்தின் மொத்தக் கடனாது 2456 பில்லியன்கள் டொலர்களாகும்)அந்தந்த நாடுகள் வருடமொன்றுக்கு மேற்குலக நாடுகளுக்குத் திருப்பிச் செலுத்தும் நிலுவையில் ஒரு பகுதி மட்டும்166 பில்லியன்களாகும்.இந்தப்பணம் சில பத்துக் குடும்பங்களின் கைகளுக்குப் போய்விடுகிறது(Weltbank:Global Developement Finance 99)



இவர்கள் மீளவும் இந்த வறிய நாடுகளில் தமது வருவாய்க்கு-வயித்துக்கு,ஐந்து நட்சத்திரக் கோட்டல்களுக்கான உணவுப் பொருள்களுக்காகத் திட்டமிடப்பட்ட விவசாய உற்பத்திக்கு 350 பில்லியன்கள் டொலரை நிதியிட்டுத் தமது விருப்புக் கேற்ற விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்வதில் முனைப்படைந்து நிதியிடுகிறார்கள்.;.(www.welthungerhilfe.de,weltbank 2004)




மூன்றாமுலக நாடுகள் தாம் பெற்ற கடன்களின் நிலுவைக்காக(2456 பில்லியன்கள் டொலர்கள்) வருடமொன்றுக்கு வட்டியாக்கட்டும் வட்டி-வட்டிக்கு வட்டி 256 பில்லியன்கள் டொலர்களாகும்.இப்பணமும் சில பத்து மேற்குலகப் பணக்காரக் குடும்பங்களிடம் போய்ச் சேர்ந்தே விடுகிறது.(Weltbank:Global Developement Finance 99)



இப்படி வட்டிக்கு வட்டியாக அறவிடப்பட்ட பணத்தில் வெறும் 12 பில்லியன்கள் பணத்தை மீளவும் இந்தக் கடன் கார நாடுகளுக்குச் சுகாதார வசதி-தாய்மை அடைந்த பெண்களுக்கான சுகாதாரப் போசாக்கு வசதிக்காகவென்று அவர்களிடம் அறவிட்டதையே உதவுவதுமாதிரிப் பிச்சையிட்டு மேன் மேலும் வட்டியை அறவிடப் பால் தொட்டு பால் கறப்பதற்கு முனைந்துகொண்டன இந்த மேற்குலகப் பயங்கரவாதிகள(Entwicklungsprogramm der UN,1999)



இந்தப் பரதேசிகள் தமது உயிர் கொல்லி உற்பத்தியால் அதாவது ஆயுதத் தளபாடங்களால் மூன்றாம் உலகிடமிருந்து பெற்ற வருமானம் 956 பில்லியன்கள் டொலராகும்.(UNICEF Jahresbericht"Zur Situation der Kinder in der welt")



என்னவொரு கரிசனையான நாடுகள்!நம்மை ஒரு பக்கம் ஆயுதத்தால் கொன்று குவித்தபடி வாய்ககு அரிசியிடும் இந்தத் தேசங்கள் நம்மிடமிருந்து தட்டிப் பறித்தெடுத்து நமக்கே பிச்சையிடுவதைத்தாம் நாம் நவகாலனித்துவம் என்கிறோம்.இதுவே புதிய கொலனித்துவத்தின் பல் தேசியமயப்படுத்தல்-நிதி மூலதனத்தின் நவீனச் சுரண்டலாகும்.
மேலும் பார்ப்போம்:


மூன்றாம் உலகத்தின் மொத்தக் கடனாது 2456 பில்லியன்களாகும்;(Weltbank:Global Developement Finance 99)


ஆனால் ஜேர்மனிக்கு வந்த வட்டி எவ்வளவு இங்கே?


3332 பில்லியன்கள் டொலர்களாகும்.இவை பத்தாண்டுகளில் இந்த மூன்றாம் உலகமும் உழைக்கும் மக்களும் ஜேர்மனிக்கு மட்டும் செலுத்திய வட்டியாகும்.


இதில் ஒரு 55 பில்லின்கள் டொலர்கள் போதுமானது இந்தவுலகத்துக் குழந்தைகள் பாடசாலை சென்று பள்ளிக் கூடத்துள் படித்து ஒரு பட்டம் பெறுவதற்காகவும் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரச்சாத்துக்குச் செலவு செய்வதற்கும்;(UNICEF Jahresbericht"Zur Situation der Kinder in der welt").



இந்தவுலகத்தின் 52 வீதமான உலக மொத்த உற்பத்தியைக் கட்டுப் படுத்துபவர்கள் உலக நாணய நிதியமும்,உலக வங்கியுமென்பது குறிப்பிடத் தக்கதாகும்.இவர்களே நமது அனைத்து அசைவுகளையும் கட்டுப்படுத்தி,எங்கள் செல்வங்களை அள்ளி-கொள்ளையடித்து(வட்டிக்கு வட்டி) உலகின் 500 மல்ரி நசனல் கொன்சேர்ன்களிடம் தார வார்க்கிறார்கள்;.(www.faz.net,Umfrage der Bank of England,Handelstage laut Klander der Frankfurter Wertpapierboerse)



நாம் ஏன் இன்னும் வறுமையில் வாடுகிறோம்?



நமது நாட்டு அரசியல் வாதி சொல்கிறான(ள்):நீங்கள் சோம்பேறிகள் என்று!


நமது நாட்டு மதவாதி சொல்கிறான்(ள்):முற்பிறப்பில் செய்த வினை!



இது உண்மைதானோ?



மேலே காட்டிய புள்ளி விபரம் சொல்கிறது:இல்லை!ஐரோப்பியன் செய்த வினையால் நாம் பட்டுணி கிடக்கிறோம் என்பதாக!



என்ன செய்லாம்? நாம் தனி நாடு பெற்றுவிட்டால்மட்டும் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுமா அல்லது சமுதாயத்தில் புரட்சியின் மூலமாக இந்தப் பொருளாதார முன்னெடுப்பை மாற்றித் தனியுடமையை ஒழித்தாகவேண்டுமா?


"ச்சீ இதெல்லாம் நடக்கிற காரியமா?சும்மா போங்க சார்!நாம நம்ம தொழிலைப் பார்த்துப்போட்டு,மாசத்தில் வரும் நம்மட தொகையைக் காத்தால் போதும்."என்பீர்களானால் நாளைய தலைமுறை இன்னும் ஒரு பிடி சோற்றுக்கே நாதியின்றியிருக்கும் உலகின் பல கோடிச் சிறார்களோடு சேர்ந்து கொள்ளுமே தவிர வாழ்வு அதற்கு என்றுமே இல்லை.நாளைய தலை முறையில் உங்களதும்,எனதுமான குழந்தைகள் அங்கம் பெறுகிறர்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
06.05.2007














Friday, March 02, 2007

அம்மாளாச்சி.

அம்மாளாச்சி.


கொட்டாத பனி கொட்ட
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!

அன்னை.

எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!


நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
எந்தத் தெருவில் பேப்பர் பொறுக்கிறாளோ...

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.


முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல


மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர


"குடும்பத் தகராறில் உன் தம்பிக்கு
மண்டையை உடைத்தாள் அவன் மனைவி
திருகுவேலைக் கட்டையால
மண்டையில் பலத்த அடி-ஆபத்து,
உடனே போன் செய்!"

முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்கிறாளா இப்போது?


அம்மா,
தலை வெடிக்குதண!


அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்


வேடிக்கை மனிதர்கள் நாம்.


இன்றையப் பொழுதின்
யாழ்ப்பாணக் கதையும்
கட்டுண்ட மனிதரின் கண்போன வாழ்வும்
என்னத்தைச் சொல்ல
எதுபற்றித் தொலை பேச!


ஆத்தையைத் தேடிச் சிறையொன்றில் வீழ்ந்து
மெல்லத் தொலைத்த இளமையையும் தேடி
ஆடும் தசையும்
ஆட்டம் காட்ட அவதியுறும் மனமும்
தோளில் தொங்கிய ஏதோ வொன்றுக்கு ஏங்க
இந்தத் தம்பியையும் இழப்பேனோ நான்?



முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில்
அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும்
அரண்டு போய் மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப் போன தரணத்தில்


பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்



என்ன சொல்வேன்!


அன்னை இனி வரமாட்டாள்.
அவளுக்கு வயசாகி விட்டது.
வந்தவிடத்தில் வருசம் இருபது
கட்டை
போகப் போவது இன்னும் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத கனவுகள்?



தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
ஆத்தையின்
தெம்பூட்டல்கள் இனியெதற்கும் வரப்போவதில்லை.

அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு


அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்தும்!


பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!


அன்னை!


எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!


இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
அப்பன் அறுமுகனும் இல்லை.


எல்லாம் இழந்த
இந்த இருட்டில்
அக்காள் சொல்லும் சேதி வேறு
மூச்சையடக்கும்
ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
மெளனத்தின் இழப்பில்
அழுகி நாறும்
எனது உடலும் இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில்...

அன்னை.

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை
மெல்லத் தலை கோதி
அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவி
கிட்டவிருந்தால்
அகதிக் கோலத்தில் அடியும் போட்டிருப்பேன்


அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த
மந்தை மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழந்தேன்!


அன்னை,அம்மாளாச்சியாய்...

ப.வி.ஸ்ரீரங்கன்
03.03.2007


மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...