Sunday, February 18, 2007

ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!

கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!


(நிதர்சனம் விதைக்கும் வினை.)

"முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்."

தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி.

தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி.இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா?



அது ஈ.பீ.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாளோடு இணைத்துப் பேசுவது போட்டுத் தள்ளுவதற்கான ஒத்திகைகளில் ஒன்றாக இருக்குமென்றே நாம் கருதுகிறோம்.

புலிகளின் இத்தகைய ஈனத்தனமான கருத்தியல் மற்றும் வன் முறைசார்ந்த நடவடிக்கைகள்,இன்னும் அந்த அமைப்பு ஒரு மக்கள் அமைப்பாக முடியாது, வெறும் பாசிசக் கட்டமைப்பாகவே தன்னை நிறுவிக் கொண்டு,தனது அழிவின் விளிம்பில் ஆப்பிழுத்த குரங்காகச் செயற்பட்டு வருகிறது.இன்றிருக்கும் சூழலில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில், மாற்றுக் கருத்தாளர்களை-படைப்பாளிகளை-ஊடகவியலாளர்களைத் தமது அரசியலுக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகக் கருதி போட்டுத் தள்ளும் போர் உத்தியைத் தொடர்ந்து நடை முறைப் படுத்தும் புலிகள், ஈழப் போராட்டத்தை எந்தத் திசையில் எடுத்துச் செல்கிறார்களென்பதற்கு இத்தகைய இழி செயல்கள் அருமையான உதாரணம்.

நாய் வலைக்கூட நிமிர்த்தி விடலாம்.ஆனால் புலிகளின் அராஜகத்தையோ அவர்கள் கொண்டுள்ள மக்கள் விரோத அரசியலையோ மாற்றவே முடியாது.

அந்த அமைப்பும்,அதன் உத்தியோகபூர்வ இணையத் தளங்களும் தமது அரசியல் அழிவுக் காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்காகவே தமிழ் பேசும் மக்களை உளவியல் மற்றும் உயிர் பறிப்பு ஒடுக்குமுறைகளுடாய்ச் செய்து மக்கள் மத்தியில் தம்மைப் பாசிச வாதிகளாகக் கட்டமைத்து,பொது மக்களையும் கலைஞர்களையும்,புத்திஜீவிகளையும்,

ஜனநாயகவாதிகளையும் ஒடுக்கி வருகிறார்கள்.

சோபா சக்திக்கு இத்தகைய இழி நிலைகளைக் கற்பிக்கும் நிதர்சனமானது அடுத்து இன்னும் எவருக்குக் கைகாட்டிப் போட்டுத் தள்ளவதற்கான கருத்தியலை மக்கள் முன் திணிகப் போகிறதோ தெரியவில்லை.

இந்த அமைப்பும் இதன் வால்களும் எப்போதுமே மனித விரோதிகளாகவே இருக்கிறார்கள்.

இந்தப் புலிகள் அமைப்பு மக்கள் அமைப்பாக மலருமென்று நாம் கற்பனை செய்வது மடமை என்று இவர்களே எமது முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.


சோபா சக்தியையும் போடப் போறாங்கள் புலிகள்.


ஆழ்ந்த வெறுப்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
18.02.2007

--------------------------------------

Sunday, February 11, 2007

மொழியின் நிலை:வாழ்வும்,சாவும்!

மொழியின் நிலை:வாழ்வும்,சாவும்!


"என்னை அநுமதியுங்கள்.என்னுடைய சுயமும்,பாமரத்தனமும் மனித்துவத்தையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ள.விமர்சனத்தின் வீச்சு என் அறிவையும்,என் உலகத் தரிசனத்தையும் மாற்றியமைக்கட்டும்."


இன்றைய பொழுதில் தமிழ் வாழ்வு குறித்த மதிப்பீடு என்ன?

ஏன் வாழ்கிறோம்,எதற்காக உழைக்கிறோம்?


இத்தகைய கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை!

எனது புரிதலும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சிந்தனையைத் தகவமைத்த கருத்தியல்களால் நான் முடமாக்கப் பட்டுள்ளேன்.எனக்கான புரிதல் இதுவரை என்னைச் சுற்றிய வாழ்வோடு பின்னப்பட்டு அதன் நிசத் தன்மை எனக்குள் எந்த ரூபத்திலும் தெளிவுறாத நிலையில் எனக்குள் கொட்டப்படும் கருத்துக்களால் நான் தகவமைப்பட்டுள்ளேன்.

நான் புரியும் நான் உண்மையில் நானே இல்லை.என்னை வடிவமைத்தவர்கள் எனக்கு முன் தோன்றிப் புவிப் பரப்பைத் தமது வாரீசுகளின் சொத்தாக எழுதிவிட்டுச் சென்ற கோமான்களாக இருக்கிறார்கள்.நான் சேவகன் என்பது புரிகிறது.எனினும் என்னால் எனது வாழ்வைச் செப்பனிட முடியவில்லை.ஏனெனில் நான் என்னைமட்டுமே முன் நிறுத்துகிறேன்.என்னைப் போல் பல கோடி "நான்கள்"ஒன்றொன்றாய்ச் சிதிறிக் கிடக்கிறது.இது அவர்களின் தப்பாகச் சொல்வதற்கு ஒரு அரை வேக்காட்டுக் கருத்தை எனது எஜமானர்கள் எனக்குக் கற்பிக்கிறார்கள்.இதை நான் பேராடும் கல்விக் கழககங்களுக்குள் படித்தாக வேண்டும்.எனது முகம் என்னைக் கொல்லும் விசமருந்தாக மாறுகிறது.

என்னால் இவர்களின் தேவைக்காகவே சிந்திக்க முடிகிறது.இந்தச் சிந்தனை என் நலத்துக்கென்றே நான் தெருவெங்கும் எழுதிவைக்கிறேன்.இந்த நான் எனது சுய முன்னேற்றமென்றும் இதை நம்புகிறேன்.எனக்கு வாழ்வென்பது பெற்றோரைப் பாதுகாப்பது அதன் பின்பு ஒருத்தியை-ஒருவனை மணஞ் செய்து வசதி(?)வாய்ப்போடு குழந்தை பெற்று மீள அவர்களை என் எஜமானர்களின் மொழிக்குள் வளர வைத்து, அவர்களை எனது எஜமானுக்கேற்றபடி உருவாக்குவதே அர்த்தமாக விரிகிறது.இதுதாம் நான்!

இந்த நான் மிக வேகமாக எனது வாழ்வோடும் வளத்தோடும்,இருப்போடும் கருத்தாடி வரும் அறிஞர்களை மடக்கிறேன்.

"என்ன சார் பெரிய தமிழ்?,தமிழால் சோறு போட முடியுமா இன்றைய காலத்தில்?அதையேன் படிக்க வேணும்,என் பயல்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்?"

நல்ல கேள்விகள்தாம்!நான் இப்படியே நெடுகக் கேட்கிறேன்.என் வாழ் நாள் பூராகவும் கேட்டுக்கொண்டே எனது காலத்தை ஓட்டுக்கிறேன்.

ஒரு நாள் ஜேர்மனியக் கல்விக்: கூடத்துக்கு செல்கிறேன்.பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டமாம்.

ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்துகிறார்கள்.

நானும்,என்னை அறிமுகஞ் செய்கிறேன்.

"அது சரி நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?" ஆசிரியரின் கேள்வி.

இது என்னை உடைத்துப் போடுகிறது.


"நான் இப்போது ஜேர்மனியன்!"

"உங்களின் தாய் மொழி என்னவென்கிறேன்"அதே ஆசிரியர்.


"தமிழ்!"

"இதை எதற்காக் கேட்கிறீர்கள்? "ஆசிரியரிடம் வினாவினேன்.நான் டொச்சில் பேசுகிறேன்.அந்தச் சூழலுக்குள் வாழ்கிறேன்.தொழில் செய்கிறேன்.பிறகெதற்குச் சோறு போடாத தமிழ்?

"நீ"என்பது டொச்சில் இல்லை.அது உனது பாரம்பரியமென்றும் இல்லை.உனது அநுபவம் வேறாக இருக்கும்.நீ இங்கே விருந்தினன்.அவ்வளவே.உனது பிள்ளைகள் டொச்சைக் கதைக்கலாம்.அதைச் சிந்தனா மொழியாகவும் பெற்றுவிடலாம்.எனினும் அவர்களது பாரம்பரியத் தொடர்ச்சியால் அவர்கள் அந்நியர்கள்தாம் இந் நாட்டுக்கு."


என்ன கோதாரி, "இது இனவாதமில்லையா?"


ஆசிரியர் சிரிக்கிறார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"உனக்குப் புரியுமா மக்களினங்களின் சுமூகவுணர்வின் தோற்றுவாய்?"


"புரியாமலா இவ்வளவு நாளும் வாழ்கிறேன்?"

"வாழ்வுக்கும் புரிவுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மிருகங்களைப் பார்.அவை சமூகவுணர்வைப் புரிந்தா உயிர் வாழ்கின்றன.நீயும் அப்படியாக இருக்கலாம்.
அவைகளுக்குள்ளும் ஒரு தொடர்பாடல், உணர்வுத் தொடர்ச்சி இருக்குத்தாம்.அது இயற்கையின் தோற்றுவாயோடு சம்பந்தப்பட்டது.அது மனிதர்களுக்கும் பொதுவானது."

"சரி.அப்படியே இருக்கட்டும்!இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?"எரிச்சலுடன் கேட்டேன்.

"இதற்கு மேலும் அதைச் சொல்ல முடியும்.நீ லெவிஸ்ராஸ்,லக்கான் போன்றவர்களைப் படித்திருப்பாய்.எனவே உன் பிள்ளைகளுக்கு அவர்களின் தாய் மொழியையும் சொல்லிக் கொடு."

ஆசிரியர் மேலும் தொடரவில்லை.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

நான் என்பது எனது பெளதிக இருப்போடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல! எனக்கும்,எனது பெளதிக இருப்புக்கும் அப்பால் என்னை எதுவோ உருவாக்கிறது.அதுவே என்னை மற்றவர்களோடு சமப்படுத்த-கெளரவப்படுத்த முனைகிறது.நான் எவ்வளவுதாம் ஆங்கிலத்தையோ அன்றி டொச்சையோ சிந்தனா மொழியாக்கினாலும் "நான்"எனும் அடையாளும் என்னுடலை பலதரப்பட்ட சமூகப்படி நிலைகளோடு தகவமைத்திருக்கிறது.அதை இன்னொரு மொழிக்குள் என்னால் திணிக்க முடியாது.அவர்களுக்கு நான் அந்நியன்.அவர்கள் என்னை என் சுயத்தோடும்,மரபோடும் அங்கீகரிக்க முனைகிறார்கள்.எனக்கு இப்போது என் வேர் குறித்துச் சரியான ஏக்கம்.நான் யார்? ஏன் ஜிப்பிசிகளை உலகம் வெறுத்தொதுக்கிறது?அவர்களின் இன அடையாளம் எப்படியிழக்கப்பட்டது?அவர்களைப் போன்றா நான் மாறுவது?

எனது அடையாளமானது,என்னை உடல் ரீதியாகக் கூறுபோடுகிறது.என் மரபு என்னை எவரது தேவைக்கோ பயன் படுத்துகிறது.எனினும் அந்த வேர்,மரபு இன்றி என்னை உலகில் ஏற்பது கிடையாது.என்னை டொச்சுத் தேசிய இனத்துக்குள் ஏற்கிறார்களில்லை.நான் ஆங்கிலத்தைப் பேசினாலும் அவர்களும் என்னை ஆங்கிலேயனாக ஏற்கிறார்களில்லை.அப்போ அவர்களது மொழியைப் பேசி,அவர்களது வாழ்க்கைத் தேர்வுகளைச் செம்மையாக ஏற்று,அவர்களது பண்பாட்டோடு அண்மித்தும் அவர்கள் ஏற்பதில்லை.இது எதற்காக?

இன்றைய சினிமா தயாப்படுத்தி வைத்திரும் மனிதவுருவம்,இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் தகவமைத்து வைத்திருக்கும் மனித முகங்கள்-அவர்களின் தமிங்கிலம் இரண்டுங்கெட்டான் முகங்களாகவா அலைகின்றன?

அல்ஜீரியனான காம்யூ தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.இங்கேதாம் மொழியின் மிகப்பெரும் வலு முகத்தில் ஓங்கியடிக்கிறது.

அதை என்னவென்று நாம் நினைக்கிறாம்?

ஒரு மொழியின் பாத்திரமென்ன?,அதைக் கற்ப்பது சோறு போடுமென்ற நோக்குக்காகவா?,அல்லது ஒருசில மண்டை வீங்கிகள் சொல்வது போன்று மொழி தொடர்பாடலுக்கான ஊடகம் மட்டுமா?


இன்று தீபம் தொலைக்காட்சியில் ஒரு உரையாடல்.மொழி ஆய்வாளர் என்றொருவர்.சிவகுருநாத பிள்ளை என்ற பெரியவரிடம் கேட்படுகிறது"தமிழ் மொழியைக் கற்றால் சோறு போடுமா?"

மொழி ஆய்வாளர் சிவகுருநாத பிள்ளை பதிலளிக்கிறார்:"தமிழ் மொழி இப்போது சோறு போடாவிட்டாலும் பின்பு போடும்.தமிழ்நாடு-இந்தியா தொழிலில் முன்னேற்றம் காணுகிறது.இதனால் தமிழால் சோறு போடும் வாய்பு உருவாகும்.அதைவிட இலண்டனில் 150.000.தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது."தமிழ் தெரிந்த வைத்தியாரா இவர்" எண்டு பார்த்தே மக்கள் அவரிடம் செல்வார்கள்.எனவே தமிழைப் படியுங்கள்."

என்னவொரு கேணைத்தனமான கருத்து!இவருக்கு மொழி ஆய்வாளரென்று வேறு குறிப்பிடுகிறார்கள்.


அரை வைத்தியன் கொலைகாரன்.என்றொரு முதுமொழியுண்டு.இங்கே இதுதாம் எனக்கு ஞாபகம் வருகிறது.

தமிழ் பேசும் இனத்தவர்கள் தமிழைக் கற்பதற்குமுன் அது சோறு போடுமா என்று பார்க்கும் இழி நிலையை என்னவென்பது?இத்தகைய கருத்து எவர்களால் உருவாக்கப்பட்டது?ஆங்கிலம் பேசத் தெரிந்த மனிதர்கள் ஒருவரும் தெருவோரத்தில் விளிம்பு மக்களாக வாழவில்லையா?ஆங்கிலேயப் பிரித்தானியாவில் மான்செஸ்ரர் என்றொரு பழைய தொழில் நகரம் இருக்கிறது.அங்கு வாழுகின்ற அறுபது வீதமான ஆங்கில இனத் தொழிலாளர்கள் பஞ்சப் பரதேசிகளாக வாழ்கிறார்கள்.இவர்களின் ஆங்கிலம் இவர்களுக்குச் சோறு போடுகிறதில்லை.எதற்காக?

ஆக இந்தப் பிரச்சனை வேறொரு கோணத்தில் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.

சயந்தனும் சோமியும்(வலைப் பதிவாளர்கள்) தமது வானொலியுரையாடலில் தமிழ் தொடர் பாடலுக்குரிய மொழியாக இருக்க வேண்டுமென்று சோமி சொல்கிறார்.தமிழ் ஏலவே தொடர்பாடலுக்குரிய மொழியாக இருப்பதனால்தாம் அது பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிலைக்கிறது.அப்படியில்லாதிருந்திருந்தால் இலத்தீன்,சமஸ்கிருதம் போன்று எப்போதோ செத்தே இருக்கும்.இதை இப்படியே விட்டு,மேலே தொடர்வோம்.

மொழி தொடர்பாடலுக்குரிய ஊடகம் மட்டுமா?

இல்லை!

மொழியின் நிலை:

மார்க்சியச் சிந்தனையூடாக நாம் மொழி குறித்துப் பலவகையாகப் புரிகிறோம்.

மொழி மேல்மட்ட அமைப்பைச் சார்ந்ததென முன்னர் கற்றோம்.தற்போதைய அறிஞர்கள் சொன்னமாதிரி, மொழியானது மேல்மட்ட மற்றும் அடிமட்ட அமைப்பைச் சாராதது என்றும் பார்த்தாகி விட்டது.எனினும் மொழி தொடர்பாக நாம் கருத்தாடும் போது"இன அரசியலெனும்போது நாம் இனவாதிகளாக மாறுகிறோம்"என்றொரு குற்றச் சாட்டு நம்மில் தொடுக்கப்படுவதால் நாம் இப் பிரச்சனைக்குள் மூக்கை விடாதிருப்பதில் பல காலம் அவதானமாக இருந்து வருகிறோம்.என்றபோதும் மொழியின் நிலை பற்றிய புரிதலில் அது எப்படி நமது சிந்தையுள்ளும்,வாழ்வோடும் தொடர்பாடுகிறதென்று அறியும்போது மொழியென்பது வெறும் ஊடகமல்ல.அது நமது இருப்போடு சம்பந்தப்பட்டதென்கிறோம்.இங்கே நாம் இலட்சம் மக்களை இந்த அடிப்படையில் இழந்தும் வருகிறோம்.

மொழியைப் பேசமுடியாத நிலையில் மிருங்கள்கள் மற்றும் மனிதக் குழந்தைகள் ஒழுங்கீனமாக வாழ்கின்றன.உலகைப் பற்றிய புரிதலை உணர்வு நிலையை ஏற்படுத்துவதும்,ஒழுங்குகளை நிலை நாட்டுவதும் மொழி.மொழியானது சிந்தனையின் ,மனிதவுணர்வு நிலையின்,பிரதிபலிப்பின் அங்கமாக(அங்கங்கள் பல,அதிலொன்று இது.)இருக்கிறது.மொழியின்றிச் சிந்திக்க முடியாது.உலக அறிவைப் பெற முடியாது.மனிதர்களுக்குள் தொடர்பாட முடியாது.சமூக வாழ்வு,பண்பாடு(இங்கும் இதை அவதானமாகச் சொல்கிறேன்.நேரடியாக எடுக்காதீர்கள்.பண்பாடு ஆளும் வர்கத்துக்கு ஒன்றும்,ஆளப்படும் வர்க்கத்துக்கு ஒன்றுமாக இருக்கிறது),சட்டதிட்டங்கள் என்பனவற்றின் வாகனமாக மொழியிருப்பதாக மொழியியலாளர்கள் சொல்கிறார்கள்.


நினைவிலி மனம்:

குழந்தைப் பருவத்திலிருந்து மொழி ஒலி வடிவாக நினைவிலிமனதில் பதிகிறது."மனிதர்களின் நினைவைக் கட்டுப்படுத்துவது மொழி"என்போரும்,"மொழியே நினைவிலி மனதைக் கட்டுப்படுத்துகிறது"என்று சில அறிஞர்களும் ஒரேவுண்மை வெவ்வேறு வாக்கியங்களில் சொல்லி அந்தவுண்மைக்கு வலுச் சேர்த்திருப்பதை நாம் அறிகிறோம்.

இங்கே இந்த உண்மை நிராகரிக்க முடியாதென்பதற்கு திருவாளர்கள் லெவிஸ்ராஸ்,மற்றும் லக்கான் போன்றவர்களின் அமைப்பியல் ஆய்வுகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.ஆகவே ஒரே மொழியைப் பேசுபவர்கள்-கிரகித்தவர்கள் ஒரு சமூகமாக,கூட்டமைப்பாக வாழ முற்படுகிறார்கள்.காரணம் அவர்களின் நினைவிலி மனம்,சிந்தனை,பண்பாடு ஒன்றாக இருக்கிறகிறது-இணைகிறதென்பதே உண்மையாகிறது.இந்த அடிப்படையான காரணங்கள் பிற அந்நிய மொழியைக் கற்றுவிட்ட படிப்பாளிகளுக்கு அந்த மொழிச் சூழலுக்குள் இணைந்து வாழ நேரிடினும் அவர்களால் அந்த மொழியினது பண்பாட்டுருவாக்கத்தின் தொடர்பை முழுமையாகத் தமது வாழ்வுக்குள் இணைக்க முடியாது.அப்படி இணைத்துவிட்டதாக அவர்கள் தம்மை ஏமாற்றியபடி தமது குழந்தைகளைப் பார்த்து"செல்லா டோன் கோ டவுண்"என்று கண்ட இடத்தில் மூத்திரம் அடிப்பார்கள்.அதைப் பார்த்து நாம் நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எப்பவும் நாம் கவனிக்க மறுப்பது நமது வாழ்வு சார்ந்து சிந்திப்பதையே.இதுதாம் அனைத்துக்கும் காணமாகிறது. மொழியானது ஒலி மூலமாகவே நினைவிலி மனதில் பதிகிறது-கிரகிக்கப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட மொழியின் ஒலிகளைச் சிறு பிராயம் தொட்டுக் கிரகித்து வைப்பவர் அந்த மொழியின் பண்டுதொட்டுக் கடத்தப்படும் பண்பாட்டுக் கோலங்களையும் கிரகிப்பவராகவே மாற்றப்படுகிறர்ர்.இங்கே நாம் காண வேண்டிய உண்மையானது ஒரு மொழிக்குரிய ஒலியின் உட் கிடந்து நம்மைக் கட்டுப்படுத்தும் உணர்வுக்குள் ஒரு இயக்கம் நிகழ்கிறது.அந்த இயக்கம் மனித உணர்வின் அர்த்தப்பாடுகளைச் சுமந்து வருகிறது.இது என்னவென்றால் ஒவ்வொரு மொழிக்கும்,அதன் சொற்கட்டுகளுக்கும் பாரம்பரியம்,பண்பாட்டு அடிப்படைகள் உண்டு என்கிறோம்.இதை எந்தக் கொம்பரும் மறுத்தொதுக்க முடியாது.


உதாரணத்துக்கு:தாலி,குங்குமம்(இவற்றை உதாரணத்துக்குச் சொல்கிறேன்.பெண்ணுரிமை வாதிகள் அடக்குமுறைச் சின்னம் அப்பிடியென்று உதைக்க வராதீர்கள்.நான் தாலி கட்டாமல்,ஐயர் அறுகரிசி இல்லாமல் மணம் முடித்தவன்)போன்ற சொற்களின் பின்னே வாழ்வின் மதிப்பீடுகள் இருக்கின்றன.இவற்றை ஆங்கிலேயர்களால் புரிய முடியாது.அவ்வண்ணம் அவர்களின் மொழிகளுக்குள் இருக்கும் அர்த்தங்களை நம்மால் புரிய முடியாது.ஆகவே மொழிக்குரிய இடம் வெறும் தொடர்பாடலுக்குரியதன்று.


அது நமது வாழ்வோடும்,இருப்போடும் சம்பந்தப்பட்டது.இதைக் கற்பதற்குச் சோறு போடுவது பற்றிப் பார்த்துத்தாம் கற்போமானால் இறுதியில் சோறு கிடைக்கலாம் ஒரு தெரு நாய்க்குரிய மதிப்போடு அவ்வளவுதாம்.

இதனால்தாம் மொழியின் அடிப்படையாகத்தாம் ஒரு சமூகமாக,கூட்டமாக குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் இணைகிறார்கள்.இவர்களுக்குள் ஆக்கம் பெறும் பொருளாதார உறவுகள் வர்க்க அரசியலை உருவாக்கி விட்டன.இங்கே வர்க்க அரசியல் முன் தள்ளப்படுகிறது.குறிப்பிட்ட ஆளும் வர்க்கம் தனது பொருளாதார வலுவைக் காப்பதற்கும் இத்தகைய மொழியின் அடிப்படையிலும் கோடு கிழிப்பதை நாம் இன்றைய பல் தேசியப் பெருளாதார முன்னெடுப்புகளோடு நம்மை எதிர் கொள்ளும் வர்த்தக மொழியான ஆங்கில ஆத்திகத்திலிருந்தும் பல படிப்பினைகளைக் காணலாம்.

கடைசியாக, சமூக உணர்வு சமூ நிறுவனங்களுடன் கூட்டாகச் செயற்படுகிறது.அவற்றின் மூலம் மெய்யான சித்தாந்த உறவுகளின் வடிவத்தை அடைகிறதென்பது உண்மை.

இங்கே சமூக வாழ்நிலையே சமூக உணர்வைத் தீர்மானிப்பதென்பதை,கருத்துக்களானவை உற்பத்தியிலிருந்து,உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்து மட்டும்தாம் நேரடியாகத் தோன்றுகிறதென்ற வாதமும் இருக்கிறது.அது பற்றி நாம் இன்னொரு கட்டுரையில் விவாதிப்போம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
11.02.2007
வூப்பெற்றால்.
















Thursday, February 08, 2007

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்...

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்,சொல்கிறார்:
பிரபாகரனின் அத்தார் இராஜேந்திரன்!

//வன்னியில் கட்டாயப் பிள்ளை பிடிப்பும், வீட்டுக்கொருவர் போராடக் கட்டளையும்;காணுமிடமெல்லாம் அன்னையர் கதையும் இதுவாய்ப் போச்சு!//


மீளவும் பிள்ளைகள் பிடிப்பு,போராட்டம்.புண்ணாக்கு...முன்பெல்லாம் சிறியவர்களாக இருக்கும்போது நமக்குப் பெரிய அச்சம் இருப்பது இரண்டு விஷயத்துக்காக.இந்த இரு விஷயமும் கடை தெருவுக்குப் போகும்போதும்,தனிமையில் இருட்டுப்பட்ட பொழுதுகளில் தெருவினில் நடக்கும்போதும் மிகவும் கொடிய அச்சத்தை எமக்கு ஏற்படுத்துவது.இந்த முக்கியமான இரண்டும் எமக்கு வளர்ப்போடு ஊட்டப்பட்டது.நாங்கள் எல்லோருமே இதை உணர்ந்திருப்போம்.

"பேய் வருகிறதடா தம்பி கெதியாக நித்தா கொள்." என்று அன்னை சொல்வாள்.அத்தோடு சேர்த்து நமது மனத்தையும் உடைத்தே அச்சத்தைக் காலமெல்லாம் கட்டி வைத்தாள்.

"தம்பி பிள்ளை பிடிகாரன்கள் திரியிறாங்கள் கவனமாகக் கடைக்குப் போயிட்டு வா!" இதுவும் அவளே.இத்தோடு கண்டவிடமெல்லாம் பிள்ளை பிடிகாரனாகவே நம் கண்களுக்குள் கருப்பு வெள்ளையாக அச்சம் வளர்ந்தவர்கள் ரூபத்தில் வந்து தொலைந்தது போராட்டச் சூழல்.

முன்பெல்லாம் சிறார்களைப் பிடிக்கின்றவர்கள் தமது தொழில் பேட்டைகளுக்குள் அடிமைகளாக அந்தப் பிஞ்சுகளை வேலை வேண்டுவதாகக் கேள்விப் பட்டுள்ளேன்.கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் மீன்களைப் பதனமிடும் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு, இக் குழந்தைகளை அத்தகைய தொழிற்சாலைகளுக்குள் காகம்,குருவிக்குக் காவல் வைப்பதாகவும் சில பேச்சுகள் அடிபடுவது.இவர்கள் குழந்தைகளை மிக இலகுவாகக் கடத்திச் செல்வது குக் கிராமங்களில் அன்றாடம் நடை பெறுவது.

எனக்கு இத்தகைய பொழுதுகளில் எந்த வேனைக் கண்டாலும் பயம் உடம்பெல்லாம் பரந்து, நடுக்கத்தை ஏற்படுத்துவது.கடை தெருவுக்குச் சாமான் வேண்டச் செல்லும் பொழுதுகளில்"அண்ணேய் நானும் வாறன்"என்றபடி சைக்கிள் சாவாரி அண்ணன்மாரைக் கேட்டு அவர்களோடு தொத்துவது வழமையாக இருக்கும்.

இது ஒரு காலத்துப் பயம்.

எண்பதுகளுக்குப் பின் இந்தப் பயம் இயக்கங்களுக்குப் பெடி பெட்டையளைப் பிடிப்பதில் மிக உச்சத்தை எமது பெற்றோர்களுக்குத் தொட்டது.அவர்கள் அழுது வடிந்தார்கள்.பரந்துகளிடமிருந்து குஞ்சைக் காக்கும் கோழியாகப் பெற்றோர்கள் செயற்பட்டார்கள்.

ஈழம் எடுப்பதற்குச் சும்மா,சும்மா இருந்து சரிப்பட்டு வராது,வீட்டுக்கொருவர் போராட்டத்துக்கு இணைய வேண்டுமென்று பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தோம்.சேரிகளில் கிளிதட்டு,கிட்டி-போளை(கோலி) அடித்துத் திரிந்த சிறுசுகளை எப்படியெல்லாம் கதை சொல்லி அள்ளிச் சென்றிருக்கிறோம்.

(கடகத்துக்குள் அள்ளிய குஞ்சுகளையாவது பொத்தி வை.ஈழப் போர் இதுகளையாவது உண்ணாது இருக்கட்டும்.)


அன்றைய பொழுதுகளில் அப்பனை ஆத்தாளைப் "பேய்க் காட்டி"வரும்படியாக இவர்களை மிக இலகுவாக வளைத்துப் போட்டவன் நான்.எனக்கு ஒரு இயக்கத்தில் பிரச்சாரப் பிரிவில் மக்களோடு மக்களாகக் கருத்துப் பரப்பும் வேலை.எனக்குத் தெரிந்த வழிகளில் நான் பலரைப் படைக்குச் சேர்த்தவன்.

கண்சிவந்தால் மண் சிவக்கும்.

ஊமை ஜனனங்கள் போன்ற

சினிமாவைக் காண்பித்தே பலரை வீட்டைவிட்டு கிளப்பியவன் நான்.இது போராட்ட அணுகுமுறைக்கே கேடானதென்று தோழர் சன்னதி குறைப்பட்டார்.எனது செயற்பாட்டை மிகவும் நாணயமாக வளர்த்தவர் அவர்.அற்புதமான தோழர்.இவருக்கும் எனக்குமான மிக நீண்ட விவாதங்கள் இயகத்தின் போக்கையே வெறுக்கும் அளவுக்குப் பின்னாளில் ஏற்பட்டது.தோழர் எமது அமைப்பைச் சரியான பாதையில் நடைபயில வைப்பதில் பெரும் பொழுதைச் செலவு செய்தார்.எங்கள் பகுதியில் இப்படிக் குழந்தைகளைக் காவு கொண்ட என் பரப்புரைகளை நான் பூண்டோடு விட்டொழிப்பதற்குச் சன்னதியே காரணமானவர்.

அத்தகைய அநுபவத்தின் வாயிலாக, இன்றும் குழந்தைகளைத் தொலைக்கும் பெற்றோர்கள்படும் வேதனையை உணரத்தக்க மனதை எனக்குத் தருகிறது.எமது செயற்பாடுகளால் எம் பகுதி மக்கள் எம்மைப் பின்னாளில் வெறுத்தொதுக்கும் நிலைக்கு அன்றைய எமது தவறான செயற்பாடே காரணமாக இருந்தது.போராட்டம்,புரட்சியென்பதை மிகக் கேவலமாக விளங்கிக் கொண்டு, நாம் அமைத்த வியூகங்கள் நம்மையே மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது.

இது கடந்த காலம்.

இதையே மையப்படுத்தி 1989 இல் "பேச முடியும் பேச முடியாது"என்றொரு சிறுகதையைத் தூண்டில் சஞ்சிகையில் எழுதினேன்.

இந்தக் கதை இன்னும் நீர்த்துப் போவதற்கான சூழல் இல்லை.அக்கதையில் வரும் மீனாட்சியும் அவள் பையன் வசந்தனையும் என்னால் மறக்க முடியாது.அது நான் படைத்த உண்மையான கதாப் பாத்திரம்.

இன்றோ மீனாட்சியின் வசந்தனை மட்டுமல்ல கவிதாஞ்சலியையும் அவள் பறி கொடுத்துவிட்டாள்.

ஆம்!

மீளவும் பிள்ளை பிடிப்பு.ஆட்சேர்ப்பாம்.போராடுவதற்கு வீட்டுக் கொருவர் போயாக வேண்டும்.

போவதென்ன பிடித்தே செல்லப்படும்!

பொய்யில்லை.உண்மை.

மக்கள் போராட்டம்.புரட்சி!புரட்சிப்படை,புரட்சிக் கட்சி...


".........................."


யோசித்துப் பார்க்கிறேன்.

நாம் இன்னும் எமது போராட்டச் செல் நெறியைத் தகவமைக்கவில்லை.அந்தச் செல்நெறி அன்றைய எண்பதுகளிலேயே பின் தங்கிய நிலையிலிருந்து ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. மக்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருத்திவைக்கப் பட்ட போராட்டத் தெரிவுகள் இங்ஙனம் பிள்ளை பிடிப்பதில்தாம் போய் முடியும்.மீளவும்,மீளவுந் தவறிழைக்கிறோம்.ஒரு தவறு பல தவறுகளுக்குக் காரணமான நமது பழைய வரலாற்றிலிருந்து நாம் கற்கவில்லை.நம்மீது எதிரி பலமாகத் தாக்கிறான்.எதிரியின் தெரிவுகள் நம்மைப் பூண்டோடு வீழ்த்தும் வியூகத்தோடு முன் தள்ளப்படுகிறது.நாம் இன்னும் மக்களைப் உடல் ரீதியாகவும்,பொருள் ரீதியாகவும் சுரண்டியபடி, சொல்கிறோம்: "வீட்டுக்கொருவர் போராட வரவேண்டும்"என்று.

இந்த இழி நிலை எப்படியுருவாகிறது?

மக்களால் முன் தள்ளப்படவேண்டிய போராட்டத் தலைமை எங்கே எந்த ரூபத்தில் முன் தள்ளப் படுகிறது?

எவருடைய குழந்தைகள் எந்த நலனுக்குப் பிடித்துப் போருக்குப் பலியாக்கப் படுவது.?

வன்னியின் வதைகளில் இதுவும் ஒன்று.

வன்னிக்குள் வதங்கிக் கிடக்கும் என் உறவுக்காரிக்கு இருந்த ஒரு மகளையும் அள்ளிச் சென்றவர்கள், அவளுக்குப் பாடை கட்டி உயிரோடு கருமாரி செய்து காடாத்துவது என்ன புரட்சி?-ஈழப்போராட்டம்?இவளைப் போல் எத்தனை உயிர்கள் அர்த்தமின்றி அழிந்து போகிறது!இதுவரை இலட்சத்தைத் தாண்டிவரும் தமிழரின் மரணங்கள் உண்மையில் தமிழர்களுக்கு விடிவளிக்கப் போவதில்லையென்று இதுவரை உறுதிப்படுத்தி வருகிறது.இனியும் அள்ளிச் செல்லப்படும் பிள்ளைகளின் அவலக் குரல்கள் அம்மாவென்று ஓங்கியொலித்து வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கணமும் மனித்துவத் தோல்வியாகவே விரிந்து செல்லும்.

சின்னஞ் சிறார்.என்னத்தைப் பெரிதாகக் கண்டார்கள்!அவர்களது வாழ்வோடும் ,கனவோடும் விளையாடும் போராட்டம் அவர்களது கனவுகளைக் குலைத்தே கழுத்தில் சைனைட்டைத் தொங்கப் போடுகிறது.பெற்ற வயிறு எரிகிறதென்று புலம்பும் தாயின் ஓலத்தை எவர் புரிவார் இவ்வுலகில்?தேசம் விடிவதற்கு இதுவல்ல வழி.மக்களின் எந்த முன்னெடுப்பும் ஆத்மார்த்தமாகக் கைகூடாதுபோனால் அந்த நிகழ்வு தோல்வியிலேயே முடிகிறது.கட்டாயத்தின் பேரால் கழுத்தில் மாட்டப்பட்ட சைனட்கூட ஒரு நிலையில் உபயோகப் படுத்தப்படாமல் அந்நிய முகாமில் அவிழ்த் தெறியப்படுவதும் நிகழ்ந்துவிடும் சாத்தியம் அதிகமாகியே வந்துவிடம்.

இந்த இலட்சணத்தில் தேசியத் தலைவரின் அக்காள் புருஷன் இராஜேந்திரன் ரொறன்ரோவில் அவிழ்த்து விடுகிறார்"ஏப்பிரலுக்குத் தமிழீழம் கிடைத்துவிடும் கவலைப் படாதேங்கோ"இந்த மனிதர் தன்ர மண்டைக் கயிறின்மீது இவ்வளவு நம்பிக்கையோடு"அவன் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப் போறான்"என்கிறார்.

நீங்கள் எதையாவது பண்ணுங்கோ சாமி.ஆனால் செய்கிறதை உங்கள் பிள்ளை குட்டியின் வாழ்வோடு விளையாடாமல் செய்கிறீர்கள்.அதுதான் உங்கள் மிகப் பெரிய அரசியல்.இதை அவிழ்க்காதவரை தமிழ் மக்கள் பிள்ளை பிடியைத் தவிர்ப்பது மிகச் சிரமமானதுதான்.

தமிழீழம்!

ஏப்பிரல்.

எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

அதுவும் தேசியத் தலைவரின் குடும்பத்தவர்களே மேல் நாடுகளில் வாழ்ந்தபடி,ஆள்பிடி-பிள்ளைபிடி அரசியலுக்குச் சாயம் பூசுகிறதை என்னவென்பது?


கடந்தகாலத்தில் தானும் தன் குடும்பமும் வத்தளையில் வட்டமாக இருந்துபோது திருவாளர் வேலுப் பிள்ளை அவர்கள் நடந்த காலடிப் புல்லுச் சரியாது குடும்பம் நடாத்தியவர்.

இலங்கையில் பிராந்தியக் காணி அதிகாரியாக இருந்த எனது மாமன் குணரெட்னம் ஊரெல்லாம் காணிக்குச் சொந்தக் காரனாக இருந்த போது, ஸ்ரீமான் வேலுப்பிள்ளையவர்கள் அந்தப் பதவிக்கே இலக்கணமாக இருந்திருக்கிறார்.இத்தகைய குடும்பத்தின் வாரீசு பிரபாகரன்.


போராட்டம்,ஈழம்,படு கொலைகள்,கொள்ளைகள்,துரோகி சொல்லிப் போடப்படும் அரசியல்...தமிழ் ஆளும் வர்க்கக் கனவுகள் பின்னாளில் வேலுப்பிள்ளை அவர்களின் கண்ணியத்தையே காணமற் செய்து வருவதற்குப் பிரபாகரனே பாத்திரமானது துர்வதிஸ்டமானதுதான்.

இன்னும் எத்தனை தலை முறை சென்றாலும் இத்தகைய போராட்டம் ஈழத்தைக் கனவில்கூடப் பிரகடனப்படுத்தும் தகுதி படைத்ததாக இருக்க முடியாது.
கட்டாயத்துக்காக மக்களை மண் சுமக்க வைத்தால் ஒரு பொழுதில் களைப்புத் தாங்காது"அறுவடை எங்களுக்கு இல்லை"என்ற மனசோடு சிதறிவிடுவார்கள்.இத்தகைய சிதறல் யாழ்ப்பாணத்தில் நடந்ததும் வரலாறாகக் கண்ணெதிரே புலப்படவில்லையா?

கட்டாய ஆட் சேர்ப்பு-பிள்ளை பிடிப்பது,
கட்டாயச் சேவைக்குட்படுத்துவது,
கட்டாயப் பொருள் சேர்ப்பு
கட்டாய...


கட்டாயமாகப் போராட்டத்திலிருந்து மக்களை அந்நியப் படுத்திப் போட்டுது.

இலங்கைப் பாசிச அரசைக் கவிழ்க்கும் போராட்டம் இதுவல்ல என் தலைவரே!

இலங்கையில் பாசிசச் சிங்கள இராணுவத்தை தோற்கடிப்பது சிங்கள மக்களின் துணையோடுதாம் நிகழும்-அதுவும் ஐயக்கிய இலங்கைக்குள் அமையப் போகும் தொழிலாளர் ஆட்சியின் வருகையோடுதாம் நிகழ்ந்தாக வேண்டும்.இதுவல்லாத தனி நாட்டுக் கனவு "சும்மா,சும்மா" போராட்டந்தாம் தலைவரே.தொலைந்து போவது தலைமுறையல்லவா?
திக்குத் தெரிந்துதாம் தேரிழுக்கணுமே தவிர மனம் போன போக்குக்கல்ல.அப்படி மனம் போன போக்குக்கு இழுக்கும் தேர் இருப்பிடம் மீளப் போனதாக வரலாறில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
07.02.07











Thursday, February 01, 2007

அகலக் கால்வைக்கும் ராற்ரா...

அகலக் கால்வைக்கும் ராற்ரா( India's Tata Steel)அழியப் போகிறது.


இந்தியத் தரகு முதலாளிய இரும்புத் தொழில் நிறுவனமான ராற்ற்ரா நிறுவனம் பங்குச் சந்தையில் பணம் கொட்டிப் படுக்கப் போவதென்னவோ உறுதியாகி வருகிறது. உள்ளதையும் கொடுத்து உயிர் வாழும் தகுதியை அது தேடிச் செல்லும் இந்தத் தரணத்தில் அடுத்தவொரு வியூகத்தை அய்ரோப்பியப் பங்குச் சந்தை வல்லூறுகள் வகுத்து வரும்போது அற்புதமாகவொரு கூட்டு நிகழ்கிறது.நேற்று 31.01.2007 இந்தக் கல்யாணம் நடை பெற்றது.

பிரத்தானிய-நெதர்லாந்துக் கூட்டுக் கொம்பனியான கோருஸ்(Corus.)உலகத்தின் இரண்டாவது பெரும் இரும்புத் தொழிற்சாலை நிறுவனம்(18.2 மில்லியன் தொன்கள் இரும்பை வருடமொன்றுக்குத் தயாரிக்கிறது கோருஸ்,ஆண்டின் நிகர வருமானம் 451 மில்லியன்கள் பவுண்கள் ஆகும்.).இதைச் சுண்டங்காய் ராற்ரா(5.3 மில்லியன் தொன்கள் இரும்பைத்தாம் ராற்ரா வருடமொன்றுக்குத் தயாரிக்கிறது,வருட நிகர இலாபம் 186 மில்லியன்கள் யூரோவாகும்) கையக்கப் படுத்தியுள்ளது.

தொழிற் கழகங்களின்"கூட்டு-இணைவு"என்பது இன்றைய பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் ஒன்றையொன்று விழுங்கி ஏப்பம் விடுவதாகும்.எனினும் இந்தச் சூதாட்டத்தில் ராற்ரா இப்போது குறுகிய கால வெற்றியாக உலகத்தின் இராண்டாவது பெரும் இரும்புத் தொழிற்சாலையைக் கவ்வியுள்ளது.

ராற்ராவின் பங்கு நிலைவரம் மிகவும் பின்னடைவாகச் சாதகமின்றியிருக்கும் போது(8,7 வீதம்) 9,3 பில்லியன் யூரோவுக்கு இந்த கோருஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறது.இந்தப் பாச்சலானது ராற்ராவின் நிதி மூலதன வலுவைக் குறுகிய காலத்துக்குள் கடுமையாகப் பாதிக்கும்.இந்தப் பாதிப்பில் அதன் மிகப் பெரும் சரிவு பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் நிகழும் தரணம் நெருங்கும். எட்டாங்கட்டைக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலையை தோற்றுவிக்கும் ஒரு வியூகத்தை அய்ரோப்பியப் பிசாசுகள் மிகவும் கவனமாகக் காலடியெடுத்து வைத்து ஆரம்பிக்கின்றார்கள்.

ராற்ராவின் கடந்த காலாண்டுக் கணக்கெடுப்பில் ஆண்டின் நிகர வருமானம் வெறும் 186 மில்லியன் யூரோ,வல்லுனர்கள் போட்ட எதிர்பார்ப்புக் கணிப்பைவிட இது மிகவும் குறைந்த நிகர வருமானமாகும்.இந்த நிறுவனம் கச்சா பொருள்களுக்கு மிகவும் கூடுதலான விலையைக் கொடுத்துப் பின்னடைவுக்குள் இருக்கும் போது,தன்னைப் பாதுகாப்பதற்காக சி.எஸ்.என் நிறுவனத்தோடிணைந்து கோருஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தி உயிர் வாழ முனைவதாகச் சொன்னாலும் அதன் சரிவைத் தடுத்து நிறுத்த முடியாதளவுக்குச் சீனாவின் இரும்புத் தேவை நகர்ந்தபடியுள்ளது.சீனாவின் இரும்புக்கான பசி உலகத்தின் இரும்புக் கையிருப்பை இந்தா விழுங்கி விடுகிறேன் என்று நகரும்போது, இரும்பின் விலையும்,அதன் கச்சாப் பொருளின் விலையும் கடுகதிதாம்.

எனவே மூலப் பொருளுக்கான விலை இரட்டிப் பாகும் இந்தச் சூழலில்"விட்டுப் பிடித்தல்"நாடகத்தில் ராற்ரா அகலக் கால் வைத்து இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு அதிர்வைத் தரக் காத்திருக்கிறது.


இந்தியத் தொழிலாளர்களின் வயிற்றில் இன்னுமொரு பலத்த அடி வரும்.அது பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிலையைத் தோற்றுவிக்கப் போகிறது!

இந்தியாவில் இன்னும் பலபடி பணவீக்கத்தைச் செய்யப் போகும் நாளைய தரணத்தில் இந்திய பொருளாதாரம் வாங்கும் அடி மரண அடியாக இருக்கும்.இது நிகழ்ந்தே தீரும்!

இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பங்குச் சந்தையானது சாரம்சத்தில் மிகைப்படுத்திவரும் வளர்ச்சி வீதம் ஒரு மண் குதிர் நம்பிக்கையாகும்.வளாச்சியடைந்துவரும் நாட்டில் 9-10 வீதமாகப் பொருள் வளர்ச்சி நிகழ்வதும்,வளாந்த ஜேர்மனி போன்ற நாடுகளில் அந்த வளர்ச்சி 1-2 வீதமாக இருப்பதும் மிக இயல்பானது.ஆனால் பொருளாதாரத்தின் உண்மையான வலு வளர்ச்சியடையும் நாட்டில் மிகப் பலவீனமாக இருக்கும்.ஏனெனில் அங்கு தேசிய முதலாளியத்தின் வலுவாக அது இருப்பதில்லை.அந்த வலு அந்நிய மூலதனத்தின் பாய்ச்சலில் உருவாகுவதாகும்.

அரசை நம்பிப் புருஷாளை விட்ட கதையாகப் போனாலும் போகும் ராற்ராவின் கணிப்பு.


ஆனால் ராற்ரா எதையும் இழக்கப் போவதில்லை(ஏனெனில், அந்தச் சொத்து இந்திய மக்களின் மூலதனத்தைத் திருடிய சொத்தாகும்).

மாறாக இந்தியத் தொழிலாளிகளே இழப்பாளிகளாகும்.அவர்களின் வாழ்வோடு சூதாடும் பங்குச் சந்தை நாளை பட்டுணிச் சாவைத் தொழிலாளக் குடும்பத்து வழங்குமானால் இந்தப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தை அநுமதிக்கும் இந்திய அரசை என்னவென்பது?

ப.வி.ஸ்ரீரங்கன்

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...