Monday, May 29, 2006

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்!


அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்?
மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை.

புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை!

சாவு எப்போது?

இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன்.

எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம்.

விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே!

என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள்.

நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு?

வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி...

ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன்.


என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம்.

எதுவானாலும் நடப்பது நடக்கட்டும்.

"Schweigen ist Silber
Vergraben ist Gold."

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Wednesday, May 24, 2006

அறுபடும் சிரசுகளும்...

அறுபடும் சிரசுகளும்,
அல்லைப்பிட்டிகளும்!


வறுமைப்பட்ட குடிகள்
விடிய மறுக்கும் தேசம்
கொடிய சுனாமி காவுகொண்ட
மழலையுடல்கள் மக்காத மண்!
நெடிய போரில் குஞ்சுகளின் குரல்வளைகள் அறுபட
வலிய பொழுதில் வந்துபோகும் சூரியன்


இந்நிலையிலும்,
ஒப்புக்கு வாழ்ந்த வெற்றுடல்களையும்
ஒருநேரக் கஞ்சிக்கு உழைக்க வக்கற்ற
உப்பு மண்ணில்
உயிரோடு புதைக்கும் ஒரு கூட்டம்!


சின்னவிழியெறிந்து
சித்திரையில் மண்ணள்ளி வந்த
சோழகத்தைச்
சற்றே பயந்தொதுங்கிப் பார்த்து
மகிழ்ந்திட்ட பாலகரும் குருதி சிந்தப்
பாதகர்கள் பாடைகட்டி
போர்தொடுத்தார் அப்பாவிகள்மீது!



எத்தனையோ இரவுகளில்
நித்திரையை வெறுத்தொதுக்கி வழிமேல் விழிதுரத்தி
விறைத்த மனத்திரையில்
விடியலுக்காய் மூச்செறிந்த
முதுமையும் குதறப்பட்டது!


குற்றுயிரும்
குறையுடலுமாய்
அறுத்துப் போட்ட
வெற்றுத் தேச மனிதர்களுக்கு
உப்பு மண்ணும் உரித்தாகவில்லை.


"வாளையுருவு,
வாழும் மனிதர்கள்தம்
தலையைக் கொய்" என்பதல்ல
இறப்பவர் அரசியல்-கனவு!


ஒரு குவளை சோறும்
ஒரு சொட்டுத் தண்ணீரும்
ஓய்வுகுச் சிறு குடிசையும்
உழைப்பதற்குக் கடலும்,கைத் தொழிலும்
இதைமறுத்து
எவர் கேட்டார் எதை?


அல்லைப்பிட்டியென்ன
புளியங்கூடலென்ன
காத்தான்குடியென்ன இல்லை அநுராதபுரமென்ன
அறுத்துப் போடும் மனிதவுடல்கள்
பாக்தாத்வரையும் பரந்தபடி...

ஆனாலும்...


அதிகாரமோ
பின்பக்கச் சுவரேறிப் பொடி வைத்துப்
பேரங்கள் செய்ய
"போர்,போர்"என்று பொழுதெல்லாம் போட்டார்
கொலைகளுக்கு முக்காடு நம்மவர்.


எதிரியின் வாசலில்
சொந்த மக்கள்தம் சிரசுகளால் கோலி
விளையாட்டு!
"தூ...மறத் தமிழரின் குறைக் கொழுந்துகளே!"
விடியாதோ உங்கள் மனதுகளில்?


தமிழ்-சிங்களத்துக் கனவுகளுக்கு
சோத்துப்போடும்
வெள்ளாடுகளாய்
மனிதவுடல்கள்.


தேசமோ
துயரச் சுமை காவி
தின்னக் கையேந்தி
தெருவெங்கும் வாழ்வு தொலைத்து
போருக்குள் புதையும்!

சிலருக்கு...

கட்டில் சுகமும்
கை நிறையப் பொன்னும்
கண்ட இடத்தில் கண்ணி வெடியும்
கக்கத்தில் துப்பாக்கியும்
ஆட்சிக்கட்டின்
அடிப் பொடிகளோடு!


எல்லோருக்கும் எல்லாம்
வேண்டுமென்றெவனோ சூளுரைக்க
எம்மவருக்குக்
கொலைகளைப் பொதுமையாக்குவதில்
பொழுதெல்லாம் கண்.


பள்ளி வாசலிலும் படுகொலை
படுக்கைப்பாயிலும் படுகொலை
கந்தனைக் கத்தரை அல்லாவை
அநுதினம் புத்தரைப் புலம்பும்
பிணக்குவியல்கள்.


இதற்காக,
அநுராதபுரத்திலும்
காத்தான்குடியிலும்
அல்லைப்பிட்டிகளை ஏலவே செய்தவர்கள்
கொள்பிட்டியில் குண்டு வைக்கலாமேதவிர
கொடி பிடித்துக் கத்தவா முடியும்?


வல்ல சிங்களத்துக்கு
வாய்த்தது தரணம்
வக்கணையாக வாருகிறது தமிழர் தலையை!
இத்தனைக்கும்
எங்கள்
இரங்கற் பாக்களும்
எடுத்துவைக்கும்...
எல்லாம் மக்கள் தலையில் நெருப்பாக!


எனினும்...

வறுமைப்பட்ட குடிகள்
விடிய மறுக்கும் தேசம்
கொடிய சுனாமி காவுகொண்ட
மழலையுடல்கள் மக்காத மண்!
நெடிய போரில் குஞ்சுகளின் குரல்வளைகள் அறுபட
வலிய பொழுதில் வந்துபோகும் சூரியன்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
24.05.06

Sunday, May 21, 2006

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

மயுரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" பாடியவனின் வாரீசுகளுக்குச் சில
கருத்துக்கள்!


இன்று மய+ரனின் கட்டுரையை வாசித்தபோது,இஸ்லாமியர்கள் விவாதத்தில் ஒருகட்டத்துக்குமேல் "திருக் குறானை"த் தாண்டிச் செல்லப் பிரியமற்றவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.இது சகலநாட்டு இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதே!இன்றைய உலக நடப்பில் இஸ்லாத்தின் வழிக் கருத்தியல் மனதானது வெறும் நம்பிக்கைகளாலேயே கட்டித் தகவமைக்கப்பட்டது.கிறிஸ்த்துவத்தைப் போன்றதொரு யுத்தம்-காணிக்கை,அன்பு-அரவணைப்பு என்ற கோதாக்களிலிருந்தும் இஸ்லாம் முழுக்கமுழுக்கக் கருத்தியற்றளத்தில் பதியம் போட்ட கருத்துக்களாலும் அதன் தலைசிறந்த"மனோவியல் தாக்க"திருக் குறானாலும் இஸ்லாம் தனக்கான அரசியல் உடல்களை இறுகப் பற்றியுள்ளது!ஒருவகையில் நாம் நம்ப மறுக்கும் கசப்பானவுண்மை என்னவென்றால்"இஸ்லாமென்பது வாழ்கையைத் தயாரிப்பது"-வாழ்வை,மனித்தன்மைக்கொப்ப அதன் அடிப்படைப் பலவீனத்தைப் புரிந்த அந்த வாழ்வைத் தீர்மானிக்கும் பெரும் கருத்தியலை மிக நேர்த்தியாக மனித மனங்களில் பதியம் போட்டுள்ளது.


குறானிடமிருந்து பெறப்படும் எந்த வாக்குகளானாலும் அது மனித மனங்களில் நம்பிக்கையைப் பதியம் போட்டே வாழ்வின் மதிப்பீடுகளைச் செய்கிறது.


"உம்மை நாம் உறுதிப்படுத்தி வைத்திருக்காவிட்டால்,நீர் அவர்களின் பக்கம் கொஞ்சமேனும் திட்டமாகச் சாய்ந்திருக்கக் கூடும்.""-திருக்குறான் தர்ஜமா:ருகூஃ 8,வாக்கு:74.பக்கம்:290.


இந்த மேற்காணும் வாக்கியத்திலிருந்து நாம் காணும் உண்மையானது பல்வேறு பிரிவுகளுக்குள் முட்டிமோதிய அன்றைய மனித வர்கங்களுக்கிடையிலான ";இருப்புப் போரில்"ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் இஸ்லாம் பாரியபோராட்டத்தைச் செய்திருக்கிறது.இந்தப் போரில் அன்றைய குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த அறிஞர்கள் குறான் வழி மக்களின் மனோதிடத்தைக் காத்துப் போராடியுள்ளார்கள்.பின்னாளில் அவர்களது இடையுறாத கருத்தியல் போரில் ஒரு பகுதி மக்கள்தம் பண்பாட்டுத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


" (நபியே)சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள்(கவனிக்க: இரவின் இருள் என்கிறார்கள்.அப்படியாயின் இருள் எல்லாம் இரவு இல்லை!இரவு வேறானது,இருள் வேறானது.இரவின் இருள்...லொஜீக் மிக இலகுவாகக் குறானில் பற்பல இடங்கில் இழையோடுகிறது.)சூழும்வரை (யுள்ள,லுஹர்,அஸர்,மஃரிப்,இஷா, முதலிய) தொழுகையையும்,இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக!நிச்சியமாக பஜருடைய தொழுகை (மலக்குகளின்)வருகைக்குரியதாக இருக்கிறது.-தி.குறான் தர்ஜமா:ருகூஃ 9,வாக்கு:78


தொழுகைகளை இஸ்லாமிய அறிஞர்கள் எப்பவுமே உயர்த்திப்பிடிப்பவர்கள்!ஓடும் காரை ஓரம்கட்டிவிட்டுத் தொழுவதில் நாட்டமுடையவர்கள் இஸ்லாமியர்கள்,செய்யும் வேலையைச் சற்றுவிட்டுவிட்டு-ஒழித்தாவது தொழுதுவிட்டு வருபவர்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.தமது கருத்துக்கு அங்கீகாரம் தேடுவதில் அக்கறையற்று,மற்றவர்களின் எந்தக்கருத்தையும் வேடிக்கை பார்ப்பது அவர்களின் கருத்தியல் பலம்.இதனாற்றாம் இன்றுவரையும் கிறிஸ்த்துவம் அரேபிய மண்ணில் அடியெடுத்துவைக்க முடியாதிருப்பது.கூட்டுப் பிராத்தனையென்பதின் முக்கிய பலத்தை இவர்கள் வெகுவாக உணர்ந்திருப்பதை நாம் மறுக்க முடியாது.இந்த எளிய முறைமைகளைக் கொண்டே பாரிய மனோ வலிமையை உருவாக்கிய குறானிலிருந்து பாரிய நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் ஆங்காங்கே விரவிக்கிடப்பதை நாம் கற்றுணரமுடியும்.அந்தச் சிந்தனையானது மக்களைத் தமது நிர்வாக அலகுகளுக்கிசைவாக இணைப்பதில் "கூட்டுச் செயற்பாட்டை"யுருவாக்கியபோது, மக்கள் தமக்கு எதிராக ஐக்கியமுறும் எந்தவொரு நகர்வையும் எதிர்த்தே வந்திருக்கிறது.அன்றைய மக்கள் விரோத அரச பரிபாலனக் கட்டுமானங்களை மக்கள் தமது அதீத கூட்டுச் செயற்பாட்டால் தாக்கியழிக்கமுடியாது பெரும் கருத்தியற்றளத்தை உருவாக்கிய அன்றைய சமூக அறிஞர்கள் வெகுவாகவே மதத்தின் பெயரிலான மாற்றினத்தின் முற்றுகைகளை-வர்க்கப் போராட்டத்தை"புனிதப் போரினூடாக"த் தடுத்திருப்பதும் குறான் வாயிலாக நாம் உணரமுடியும்.

உலகத்தில் தோற்றமுற்ற மிகப் பின்னான இஸ்லாத்தின் சமூகப் பாத்திரமானது மற்றெல்லா மதங்களையும்விட மிக முன்னேறிய அரசியல் சட்ட ஒழுங்கு முறைமைகளையும், அதன் வாயிலாகத் தனியுடமையின் இருப்புக்கான முன் நிபந்தனைகளையும் மிக வலுவான வடிவத்தில் உருவாக்கி,மக்களிடம் கருத்தூன்றியுள்ளது.இதை மிக இலகுவாக உடைப்பதற்கான எந்தப் பண்பாட்டுத் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் "கூட்டுத் தொழுகை" மற்றும் இடையுறாத தொழுகைகளுடாய்ச் செயற்படுத்துகிறார்கள்.இத்தக் கருத்தியல் ஒருமைக்கு அவர்கள் முற்றுமுழுதாக மனித ஆற்றலையும்,மனோ ஒருமைப்பாட்டையுமே தங்கியிருக்கிறார்கள்.இதற்கு எந்த நவீனப் பரப்புரைகளும் அவர்களுக்கு அவசியமின்றியிருப்பதும்,மொழியின் அனைத்து ஆளுமையும் இஸ்லாம் வழியாகப் பொருத்தப்பட்டதும்,அதுவே ஒருகட்டத்தில் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட முறைமையில் அமைந்த மிக முன்னேறிய மனிதவலுவை அது தனதாக்கிக் கொண்டிருக்கிறது.இத்தகைய மனித மனமானதை எந்தவொரு வலுவான நவீனப் பரப்புரையும் வென்றெடுப்பது மிகக் கடினமான முயற்சியாகும்.


திருக் குறானை அவ்வளவு இலகுவாகக் கற்றுவிடுதலென்பது சாத்தியமில்லை.பகவத்கீதையையோ அல்லது பைபிளையோ எந்தத் தடுமாற்றமுமின்றி நாம் கற்றறிந்துவிட முடியும்.ஆனால் இக் குறானைத் தலையால கிடங்கு கிண்டினாலும் முற்றுமுணர்ந்து கற்றுவிடுவது சாத்தயமில்லை.இதுதாம் அன்றைய மத்திய ஆசியாவின் அறிவு நுட்பம்.இதைப் பகுத்துணர்வதும்,அதனூடாகக் கருத்துக்களை முன்வைப்பதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அன்றைய சமூகப் பொருளாதார்த்தின்மீது நிலவிய வரலாற்று இயக்க அழுத்தங்கள்-எதிர்வுகள் பற்றிய புரிதலும்.இத்தகைய புரிதலின்றிக் குரானைவிட்டு இஸ்லாமியச் சகோதரர்களை இன்னொரு தளத்துக்கு-விமர்சனக் கண்ணோட்டத்துக்கு நகர்த்தமுடியாது.


"ரப்பே!எதன் பக்கம் என்னை இவர்கள் அழைக்கிறார்களோ,அ(த்தீய)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமுடையதாகும்.இவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டும் நீ தடுக்கவில்லையானால்,அவர்களின்பால் நான் சாய்ந்துவிடுவேன்-அறிவீனர்களில் உள்ளவனாகவுமாகி விடுவேன்."-திருக் குறான்,ருகூஃ 6:வாக்கு33,பக்கம்:240.


எந்தவொரு கருத்தியல் மனதையும் வென்றெடுத்துப் புதிய உலகைத் தரிசிக்க வைப்பதற்கான காலவகாசமானது மிக நீண்ட செயற்பாட்டோடு உறவுடையது.திடீர் புரட்சியோ-பண்பாட்டு மாற்றமோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது கிடையாது.மார்க்சியத்தின் ஆதராமே கருத்தியல் போராட்டத்தின் வலுவை மிக நுணுக்கமாக விளங்கியதுதாம்.அதை பல நூறு வருடங்களுக்கு முன் இஸ்லாம் தெளிவாக உணர்ந்து தன்னை மிகக் காட்டமாக மனித மனங்களோடு தகவமைத்திருக்கிறது.
இத்தகைய இஸ்லாமிய உடலானது தனது உளவுருவாக்கத்தை வெறும் பொருள்சார்ந்தவுலகத்தோடு தொடர்புப்படுத்தாது மறுவுலகத்தின் இரட்சிப்பவரோடு பிணைத்திருப்பதும்,அந்த இரட்சிபவரையேதாம் தமது நம்பிக்கையின் அதி உச்சமான பாத்திரத்தில் வைத்து, உலகத்தை எதிர் கொள்வதாலும், புறுவுலகத்தின் எந்தச் செயற்பாடும் வெறும் பகட்டாகவும் அதனால் எந்த விமோசனமும் மனிதர்களுக்குக் கிடைப்பதும் சாத்தியமில்லையென்று நம்புகிறது.இத்தகைய தரணங்களில் மனிதவலுவானது மிகத் திரட்சியான பொதுவுணர்வைத் தனித் தன்மைக்குள் இணைப்பதாலும் அதுவே வேறொருகட்டத்தில் தனித்துவத்தை எதிர்ப்பதாலும் பற்பல எதிருணர்ச்சிகளைத் தகவமைப்பதற்குத் தவறிவிடுகிறது.


"அறிந்து கொள்ளுங்கள்!(முஃமின்களே!)நீங்கள்(வேதக்காரர்களில் முனாபிக்குகளாயிருக்கும்)அவர்களை நேசிக்கிறீர்கள்,(ஆனால்)உங்களை அவர்கள் நேசிப்பதில்லை,(அவர்களுடைய)வேதங்கள் அனைத்தையும் நீங்கள் நம்புகிறீர்கள்,(ஆனால் உங்களுடைய வேதத்தை அவர்கள் நம்புவதில்லை)உங்களை அவர்கள் சந்தித்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்"என்று(வாயளவில்)அவர்கள் கூறுகின்றனர்,(உங்களை விட்டும்)அவர்கள் தனித்துவிட்டாலோ,உங்கள் மீதுள்ள ஆத்திரத்தால் (தம்)விரல் நுனிகளைக் கடித்துக் கொள்கின்றனர்."உங்களுடைய ஆத்திரத்தாலேயே நீங்கள் இறந்து விடுங்கள்"என்று (நபியே!)நீர் கூறுவீராக!நிச்சியமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை முற்றும் அறிந்தவன்."-தி.குறான்,ருகூஃ 14,வாக்கு:119.பக்கம்:66


"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது,அவர்களின் நெஞ்சங்கள்(பகைமையை)மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்,உங்களுக்கு(அவர்களின்)அடையாளங்களைத் திட்டமாக நாம் தெளிவாக்கிவிட்டோம்,நீங்கள் உணர்வுடையோராக(முஸ்லீம்களாக)இருந்தால்(இதை விளங்கிக் கொள்வீர்கள்)."குறான்,பக்கம்66,ருகூஃ14,வாக்கு:118


இவ்வளவு பெரிய எடுகோள்களை நாம் தெரியப்படுத்தியேதாம் மனிதவுறவுகளுக்குள் நிலவும் சிக்கல்களைப் பற்றிய புரிதல்களை விவாதிக்கக் கடப்பாடுடையோம்.என்றுமில்லாதவாறு நாம் நட்பையும் தேடுதலையும் அதன் வாயிலான மனிதவுறவுகளையும் ஒருங்கே வளர்த்துக் கொள்வதிலும், அந்தவுறவின் வாயிலாக அடிமைத்தளைகளை அறுத்தெறியவும் முனைகிறோம்.இதற்கு
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்றவனின் பரம்பரைகள் முயற்சிக்கும்போது அவர்கள் தம்மைப்போல் உலக நடப்புகளையெண்ணுவது மிகக் கடினமானவொரு சூழலை உருவாக்கும்.அதற்கு முன் அனைத்தையுங் கற்றுத் தெளிந்து நகர்வுகளைச் செய்வதும்,எந்தெந்த இடத்தில் எந்தெந்தத் தளைகள் கண்ணிகளாக இருப்பதென்பதையும் புரிந்துணர வேண்டும்.

இவற்றைப் பின் தள்ளிவிட்டு மனிதவுறவுகளைப் புரிவது சிக்கலானது.நான் உன்னை நண்பனென்று கூறினால் நீ,அதை ஏற்கும்போது மட்டுமே அதன் வலிவு சாத்தியம்.இதை மய+ரன்மட்டுமல்ல எவருமே புரிவது அவசியம்.மக்களைக் கூறுபோடும் பற்பல பிற்போக்குக் கருத்தியற்றளைகளைக் கண்ணாக மதிப்பவர்கள் பலர் தமிழ் மக்களின் புதிய தலைமுறைவீச்சைக் கொச்சைப் படுத்துவதற்குள் நாம் மற்றவர்களின் மகிமைகளையும்,அவர்தம் பண்பாட்டையும்,அறிவியலையும் புரிந்து மாபெரும் பாலத்தை அமைத்துக்கொள்ள முனையலாம்.இங்ஙனம் அமைக்கும் பாலமே வலிவானதாக இருக்கும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"-கணியன் ப+ங்குன்றனார்.

இதுதாம் தமிழரின்(யாழ்ப்பாணம்,முஸ்லீம்கள் வெளியேற்றமென்று இதற்குள் வந்து அறுக்க வேண்டாம்!) நோக்கமும்,மனித கீதமும்,மகத்துவமும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
21.05.2006

Saturday, May 20, 2006

"வள்ளுவன்"படும்பாடோ...

"வள்ளுவன்"படும்பாடோ பெரும்பாடாய்ப் போயிற்று!


சில நேரங்களில் நமது கல்வியாளர்கள் "உண்மையில் படிப்பாளிகள்தானா?(கவனியுங்கள்:படிப்பாளிகள்தானா என்கிறோம்)"என வினாவத் தோன்றும்.ஒரு மொழியில் இலக்கணப் பிழையை,எழுதுத்துப் பிழைகளை நாம் இலகுவாகச் செய்து விடுகிறோம்.அதற்கான காரணம் மொழிப் பயிற்சியின்மையும்,எழுதியதை மீள்நோக்கத்தக்க "ஆசிரியர்"(எடிட்டர்)இன்மையுமொரு காரணம்.தமிழில்தாம் அதிகமாகப் பெரும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கு நிலவுகிறது!மொழியில் வாக்கிய-இலக்கண-எழுத்துப் பிழைகள் விடுவதைப் பெரியோர்(தமிழறிஞர்கள்)மன்னிக்கின்றார்கள்.ஆனால் "பொருளில் குற்றமிட்டால்"நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம்,குற்றமே!"இதை நக்கீரர் சொல்வதாகவேறு நாம் அறிகிறோம்!தமிழர்கள் எவ்வளவு உன்னதமாகத் தமது மொழிக்கு முதன்மை கொடுத்தார்கள்!

இப்போது?...

"அந்த ஜங்ஷனில இருந்து,லெப்ஃடில திரும்பி அடுத்தவர்ற குறோசிங்கில ஸ்டிறைற்றா போனாக்கா சில்க்பாலஸ் வருமுங்க"

"வாங்க மேடம்-சார்,என்ன ஃபீல் பண்ணிகிட்டிருங்கீங்க?இன்னைக்கு என்ன சாங் பாடப் போறீங்க?"

"சின்னமணிக்குயிலே!"

" பியுட்டுபுள் சாங்!இளையராஜா சாரின்ர வொண்டர்புள் கம்போஷிங்கல பாலாசாரின் அற்புதமான வாய்ஸ்..."


அட அரிகண்ட இராகங்களே!


உங்கள் வாயில கொள்ளிக் கட்டையை வைக்கேனா?


உங்கள் அப்பன் அல்லது ஆத்தாளுக்கு ஆங்கில வெள்ளைக்காரி-வெள்ளைக்காரனா துணை? இதுவா கல்வி?,கேணைத்தனமான கூட்டமே!இப்படி ஏசிவிடவேண்டுமெனத் தோன்றுகிறது!என்றபோதும் இதை இத்துடன் நிறுத்தி விஷயத்துக்குப் போவோம்.


பேராசிரியர் முனைவர்.க.அரங்கராசு என்ற பெரியார்:


" இலக்கண வரையறை என்பது ஒரு மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றி வரும் பாதுகாப்புப் பெட்டகமாகும்,மொழியின் வரையறை என்பது ஒரு இனத்தின் வரையறையாகுமாம்.யாப்புக் கட்டுப்பாடென்பது ஒரு சமுதாயத்தின் கட்டுப்கோப்பாகும்."என்கிறார்.(ஆய்வுச் சிக்கல்களும்,தீர்வுகளும் பக்கம்:335)
ஆக ஒரு இனத்தின் "இருப்புக்கே"நிகராகக் கருதுகிறார்!

நாம் எவ்வளவோ போராடியும்"பிழையின்றி"எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை! முயற்சிக்கின்றோம் என்ற வரையிலாவது ஒரு தெம்பு மனதில் நிழலாடுகிறது.

ஜேர்மனியர்கள் தமது மொழியை இலக்கண சுத்தமாகக் கற்றவருக்கே "மெற்றிக் குலேஷன்"கல்வியில் அதிக புள்ளிகள் கொடுத்து,மருத்துவம்-பொருளாதாரப் பொறியியல் போன்ற அதியுயர்ந்த படிப்புகளைத் தொடர அனுமதிக்கின்றார்கள்.மொழியை இரண்டாவது வகுப்பிலிருந்து இறுக்கி வரும் இவர்களின் பாடசாலைகள் "தேர்ச்சியுற்ற" ஆசிரியர்களின்மூலம் இதை வெகுவாகச் சாதித்துவிடுகிறது.

எனக்கு ஆரம்பக் கல்வியை வழங்கிய திருமதி ரீட்டா கியோக்குமார் ஆசிரியையை நினைத்துப் பார்க்கிறேன்!எவ்வளவு சிறப்பான பெண்மணி!தமிழை அறிந்து அற்புதமாகப் படிப்புச் சொல்லித் தந்த என் அன்புக்குரிய பெரியார்.அவரது கையெழுத்தானது அச்செழுத்தைவிட அழகானது!

"இரண்டு சிறு கண்கள் தேவனைப் பார்க்க
இரண்டு சிறு கைகள் அவர் வேலை செய்ய
இரண்டு சிறு கால்கள் அவிரிடம் செல்ல
ஒரு சிறு இருதயம் அவருக்குக் கொடுக்க..."

மிக அழகாகப் பாடி,ஆடி எமக்குப் பாடம் நடாத்திய அற்புதமான அசிரியர் அவர்! இன்றுவரையும் இப்படியானவொரு ஆசிரிய அம்மையாரை நான் பார்த்தது கிடையாது.அந்த ஆசிரியருக்கும் எனக்குமான உறவு "எகலைவன்" நாடகம் வரை என்னைத் தயாரித்து மேடையேற்றிப் பாராட்டுக் குவியும் வரை தொடர்ந்தது.அவரே என் குரு.வாழ்க அம்மையே!!!

இன்றோ...

உயிர்மெய் எழுத்துக்கு உதாரணம் கூறும் நமது தமிழ் ஆசிரியர்கள்(புலம் பெயர் நாடுகளில்)"உயிரும் மெய்யும் பிணையுங்கால் உயிர்மெய்மை பிறக்கிறது"என்றுவேறு கொல்லுகிறார்கள்.தொல்காப்பியத்தை கண்ணாற் கண்டார்களோ நான் அறியேன்.நல்ல காலம் "அம்மையும் அப்பனும் பிணையுங்கால் அம்மையப்பன்" பிறக்கிறாறென்றபடி வகுப்பெடுக்கவில்லை!

இது அவல நிலை!

இன்று படித்துப் பட்டங்களை நாய்க்குச் சங்கிலி,கழுத்துப்பட்டி கட்டியமாதிரித் தமது பெயருடன் இணைத்துப் பந்தாகாட்டும்-குறியீட்டுப் பயம் காட்டும்"பண்டித வன்முறையாளர்கள்",மிக எளிதில் தமது "படிப்பு வெறும் மனனம் பண்ணிய படிப்புத்தாம்,தொழில் முறைப் படிப்புத்தாம்"என நிரூபித்தே வருகிறார்கள்!புத்திஜீவி என்போர்,தினமும்,பொழுதும் கற்பவர்கள்-படிப்பவர்கள்!நம்மிடம் புத்திஜீவிகள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.இதனால் தொழில் முறையாளர்கள் மருத்துவம்,பொறியியல் கற்றவுடன் "தாமே தலைமுறை காக்கும்"புத்திஜீவிகளாகப் புலம்புகிறார்கள்.

இவர்களிடம் "வள்ளுவன்"படும்பாடோ பெரும்பாடாய்ப் போயிற்று!

என்ன செய்ய?

"கவியுள்ளங் கண்டும் கற் காரிவர்
பொருளறிந் துமுள் வாங்கார்
பொய்த்துப்போன பொருள் கூறிப்
புகுவார் அறிவு வாதத்துள்!"

தேனியிலொரு கட்டுரையைப் புலம் பெயர் தமிழரின் பெரும் புள்ளி-கல்வியாளர்,பணக்காரர் என்ற பெயரெடுத்த
திரு.ஜெயதேவனின் சகோதரர் "டாக்டர்". நரேந்திரன் ராஜசிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார்
(கற்றதனால் ஆய பயன் "என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின்".கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள். இதில் வாலறிவன் என்ற சொல் தமிழாகும். இச் சம்பவம் நடந்த சில நாட்களின் பின்னரே எனது சகோதரரும், அவரது நண்பரும் சிறை வைக்கப்பட்டார்கள். அபிவிருத்தி அலுவல்களில் புலிகளுக்கு எந்தவித அக்கறையுமில்லை என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களது கவனம் பணம் கறக்குவதிலேயே இருந்தது. நான் அங்கு கண்ட மனிதர்கள் எந்தவித உணர்ச்சிகளுமற்ற றொபொட் போன்ற உருவங்களாகவும், கண்களில் இரக்க சுபாவமற்ற இறந்த மனித கண்களாகவும் பய உணர்ச்சியைத் தோற்றுவிப்பர்களாகவும் இருந்தனர். இதனால் ஓர் ஏமாற்றமடைந்த மனிதனாகவும், ஆத்திரம் கொண்ட மனநிலையிலும், தமிழர்களுக்காக கவலையடைந்த நிலையிலும் திரும்பினேன்.).அவர் குறளுக்கு விளக்கிறார்:"கற்றறிந்த பெரியோரின் பாதங்களைத் தொழாதவன் கற்றதானால் எதுவித பயனுமில்லை என்கிறது குறள்." -அதாவது நரேந்திரரின் காலைத் தொழுதால் சரியாம்!:-)))))


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.- குறள்-பாயிரவியல்,கடவுள் வாழ்த்து:2

...ம்... குறளின் இரண்டாவது குறளே இக் கல்வியாளருக்குப் புரியவில்லைப் பின்னிவர் எதைக்கூறி,எவர் கேட்க?:-((((((

"வாலறிவன்"

எட வள்ளுவா இப்படி நம்ம கல்விப் பெருந் தகைகளையே மண்கவ்வ வைக்கிறாயே!

"தூய அறிவு வடிவம்:இறைவன்!"

இறைவன் இயக்கமாய்,நாதமாய்-ஒலியாய் இருப்பதென்று "அத்வைதம்"பகலும்.நாதப் பிரமம்.

அதையே "அன்பே சிவம்"என்று சைவர்கள் சொல்கிறார்கள்.அன்பு என்றாலென்ன? மனதிலெழும் ஒரு அலை-அதிர்வு!இரக்கம்,காதல்,மோகம்-பணிவு,இசைவு!இதன் பண்புநிலை மாற்றம் வேதியில் முறையில் புரிய முடியாது! அதிர்வலையால் "இயங்கு" ஒலியாகப் பரிணாமிக்கிறது.இஃது தியானிப்பின் உச்சம்.இறை வடிவம்."வாலறிவன்":இறைவன்.

"தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால்(ஒருவர்),அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?" இதுதாம் மேற்காணும் குறளின் பொருள்! யாரு சொல்கிறார்?

பரிமேலழகர்!

எனது முப்பாட்டர்களுக்கு இருந்த கல்வியாண்மை என் தந்தை-தாய்மாருக்கு இல்லாது போனதால் பிள்ளைகளாகிய எனக்கு-நமக்கு அவர்கள் வடித்து வைத்ததையே வாயாறப் பருக முடிவதில்லை!பொருளறிந்து,பொய்யகற்றிப் புகட்ட முடியவில்லை!


எங்கும் நுனிப் புல் மேய்தல்!!


இது நோய்க்கான அறிகுறி.எவரிடுவார் ஒளடதம்?


ப.வி.ஸ்ரீரங்கன்
வ+ப்பெற்றால்
20.05.2006

Thursday, May 18, 2006

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"


-குறள்423:அறிவுடமை.


எனக்குச் சில நேரத்தில் தோன்றுமுணர்வோ மிக அலாதியானது!

தமிழருக்குப் புத்தி சொல்ல வெளிக்கிட்ட வள்ளுவனைப்பிடித்து நாலுக்காறு போட்டாலென்னவென்று அடிக்கடி தோன்றுகிறது.இருந்திருந்து பிடரியிலுறைந்த கறுப்புப் பல பொழுதுகளில் என்னைக் கொல்வதும்,அதை நான் களைவதுமாகக் காலஞ் செல்வதுண்டு.என்றபோதும் எமது சமூகத்துக்கு-இளந் தலைமுறைக்கு படிப்பறிவின்மீதான கண்ணோட்டம் தற்காலக் கருத்துநிலையால் அறிவியல் மனத்துவாரத்துள் கடுகளவும் உரசிக்கொள்வதாவில்லை!-இது கவலையான கண்ணீருக்குச் சொந்தமாகிறது.

வள்ளுவன் சொன்னானென்று எதையோ புரியும்(அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள். "எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு குறைந்த மக்கள் , இவர்களின் மாயைக் கருத்துக்களின் மெய்ப்பொருளை அறியாமல் நம்பி குழப்பமடைந்து விடுவதும் உண்டு. இக் கும்பலுக்கு உண்மையில் எம் மக்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், இக்கருத்துக்களை புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லி ஏன் தலைமையுடன் விவாதிக்கக் கூடாது? நேரடியாக விவாதிக்க முடியாவிட்டால் இக் கருத்துக்களை தலைமைப் பீடத்திற்கு கடித மூலமாகவே அனுப்பி விளக்கம் கேட்கலாமே? இங்கே உங்களுக்கு ஓர் சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல தமிழ்ப் புத்திஜீவிகளும், பல தமிழ் அரசியல் அறிஞர்களும் பல விமர்சனங்களை , மாற்றுக்கருத்துக்களை, தமது கருத்துக்களை நாள் தோறும் புலிகளின் தலைமைப் பீடத்திற்குச் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவர்கள் சிங்கள அரசுகளினதும் துரோகக் கும்பல்களினதும் பரப்புரை ஊடகங்கள் மூலம் மக்களைத் திசை திருப்பி விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் சொல்வதில்லை. ஆகவே, இப்படியான துரோகக் கும்பல்களின் கபடத் தந்திரங்களுக்கு[dirty tricks] பலியாகி விட வேண்டாம் என என் உறவுகளைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-வெற்றி)ஒரு கற்றுக்குட்டிக்குக் கல்வியென்பதைப் பேராடும் பல்கலைக்கழகத்துச் சுவரில் தொங்கும் கரும்பலகையில் விளக்கமுறும் பண்டமாகக் காணுவதில் பெருமகிழ்வு.ஆனால் மடமையைக் கடைந்தேற்றவேறொரு வலைப்பதிவு(!).


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-குறள்423:அறிவுடமை.

(எப்பொருளை-கருத்தைச் சொல்லறிவைச் செயலை,பழியை-வதந்தியை,வாய்மையை,எண்ணத்தை-எழுத்தை...யார் யாரிடம் கேட்டாலும்(கேட்டவாறே கொள்ளாமல்)அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே சரியான-தெளிவான,கறாரான கல்வி-அறிவு) இப்படித்தாம் வள்ளுவன் வடித்தான்!

வாய் விரிந்த வம்புப் பேர்வழிக்கு வரம்புமீறிய கடுப்பு.இதன் வாயிலாக எந்தவொரு கருத்தும் புரியாமல் "தும்பி"பிடிக்கும் சின்னப் பயலின் சிந்தனையோடு ஈழம்-புலிகள் குறித்துவேறு கனவு காணுது.

அரைவேக்காட்டுத் தறுதலைகளுக்குத் தமிழும் புரியுதில்லை-தமிழரையும் புரியுதில்லை.


அதைவிடக் கொடுமை,புலிகளைப்பற்றிய புரிதல்! புலிகளை விமர்சிப்பவனுக்குப் பிடரியில் ஒன்றுமில்லையென்று, "யாரு சொல்லுகிறார்?" குறளுக்குக் குற்றுயிராக்கும் ஒரு கற்றுக்குட்டி!

"தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா மகனே!"என்பார்,என் தாயார்.இது எல்லோருக்கும் பொருந்தும்.


நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.


அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தப் புலி அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.


அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.மக்கள் என்ற மையப் புள்ளிக்கு எதுவும் தெரியாதாம்!எது சரி,எது தவறென்றறியாப் பச்சைப் பால் குடிகளைப் "புலிஎதிர்ப்பாளர்கள்" கெடுக்கிறார்களாம்!:-))))))

"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரியும்,தலைவர்...தலைவர்,தலைவர்..."விளைவு?அதோ கண்ணில் தெரியுது கருங் குருதி!

இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்".நமக்கு இப்பவே மண்டையில் ஆராச்சியைத் தொடுக்கும் இதுகளின் பிரண்டல் தாங்க முடியவில்லை.

இன்னொருவர் எழுதுகிறார்:"அடிக்கு அடி-வன்னியில் வெடித்தால்,கட்டுநாயக்காவில் வெடித்துச் சிதறுவது சிறப்பாம்!என்றபடி...


"போரென்றால் போர்தாம்" என்ற ஜே.ஆர்.,பிரேமதாசா வகையறாக்களின் தொடர்ச்சியோ?


ஆண்டுதோறும் அழிவைக் காணும் பாலஸ்தீனத்தின் பால்குடி அட்டூழியத்தின் பிறப்பிடத்தில் வெடித்துச் சிதறிவிட,அப்பாவிப் பாலஸ்த்தீனியர்கள் "குஞ்சும் குருமானாக"க் குண்டடிபட்டுச் சாகும் நிலை இஸ்ரேலாகத் தலைமீது!
நாலென்ன,நாலாயிரம் தற்கொலைக் குண்டு வெடிப்பினும் விடுதலை வரா.இதற்குப் போராட்ட வழி வேறானது.கருப்புச் செப்டம்பர் கதை தெரியாதோ?

மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்குக் குரல் போடுபவன் முட்டாள்களாம்.நல்லது!

மக்கள் நலன் என்று ப+சி,சிங்களவரின் சியோனிசத்தை மெழுகிவிடுவதாகவும் குற்றப் பத்திரிகை.

இன்னும் பலருக்கு நடு நிலைமை என்ற நாணயம்.

"நீ,ஓடுக்கப்படுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும் நடுவில் நின்று,இருவருக்கும் பொதுவாய்ச் செயற்படுவதையா நடு நிலைமையென்கிறாய்? அப்படியுன்னால் செயற்பட முடியுமோடா தம்பி? ச்சீ,போங்க தம்பி!எப்பவும் தாமாஷாகத்தான் கிடக்கு."இப்படி இலக்கியச் சந்திப்பில் தலையைப் பிய்த்த தொடர்ச்சி.

மனிதாபிமானம் பொத்தாம் பொதுவானதா? மேலே கேட்கப்பட்ட இருவருக்கும் பொதுவானதாகக் கடைப்பிடிக்க முடியுமா?
இல்லை-பக்கஞ்சார்ந்தது!
என்னயிது கோதாரி வள்ளுவர் இப்படியும் சொல்லுகிறாராம்:

"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை."-குறள் 328:கொல்லாமை.

ஐயா வள்ளுவரே,இப்போது யார் ஐயா சான்றோர்?அவர்களுக்குச் சாவு வழிச் சங்கடம் வருவதில்லை,மாவீரம் அல்லவோ வருகிறது.அல்லது மாமனிதன்!பின்னெப்படிக் கடை?"ஆக்கமொன்று இன்றியே சாவு வரும்,அதன் வழி எதுவெதுவோ வந்து"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி(புலி)கொப்பிழக்கப் பாயாது"என்று மனதைக் கடைந்தேற்றும் கல்வியோடு சான்றோர் சங்கதி.

"அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"-குறள்428:அறிவுடமை

இப்பவும் தவறிழைக்கிறாயே வள்ளுவா!

இது "அறிவுடையார்தம் தொழில் என்கிறாய்"சமூகம் முழுதுமாகக் காய்நசித்தபின் கடுகளவும் கல்வி நிலைக்காதிருக்கும்போது"அடிக்கு அடிதாம்!"அஞ்சுவ தஞ்சாமை பேதமை" முட்டாள் வள்ளுவா!அங்கே பார்!அரும்பெருஞ் சுடரறிவு"அஞ்சா நெஞ்சாய்"அடைகிடக்கிறது.
அப்போது:"அடி,அடிக்கு அடி-இடிக்கு அடி-வெடி"அறுபடுவது எதுவென்றாலும் ஆவது விடுதலையென்பதில் "வரவு" வைத்தயே இன்றைய நேர்மையை!-இதுவே தமிழுக்குத் துரோகமற்ற"தமிழினச் செம்மலின்"சிறப்பு!மற்றறிவெல்லாம் மடமை!

"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொள்ளல்" -
குறள் 795:நட்பாராய்தல் -இதுதாம் வள்ளுவரே என் கண்முன் நிழலாக விரிவது!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.06

Monday, May 15, 2006

கொலைகளின் பின்னே...

கொலைகளின் பின்னே...

இன்னொரு படுகொலைக் களத்தை இந்த இலங்கையரசு செய்யத் துணியுமென்பதை நாம் அறிந்தேயிருந்தோம்.அதைத் திரிகோணமலையிலும்,யாழ்ப்பாணத்திலும் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்களப் பாசிசம்.தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?இத்தகைய கொலைகளின் பின்னே அடையவிருக்கும் இலக்கென்ன?இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கையின் நோக்கு?அல்லது தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?


கடந்த-தற்கால இலங்கையரசுகளின் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை"barbarous"என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!இது காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் விய+கத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது.இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தரணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.

இலங்கையின் இந்த அரசியலானது இன்னொரு "இஸ்ரேல்-பாலஸ்தீனம்"மெல்ல உருவாவதைக் காட்டிவருகிறது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள்! சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய மனமானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!இலங்கையின் மரபுரீதியான ஐதீகங்கள் மாற்றினத்தை சக தோழமையோடு பார்க்க மறுக்கும் ஒவ்வொரு தரணமும் பெருந்தேசியத்தின் வெற்றிக்குக் கனவு காண்கிறது!இந்தக் கனவின் பலனாக இரணுவத்தின் தேச பக்தியானது அதைக் கூலிப்படை ஸ்த்தானத்திலிருந்து விடபட வைத்துத் தமிழிர்கள்மேல் தினமும் ஏவிவிடப்படுகிறது!


இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது.என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.


இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்துபல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் விய+கமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து,எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் விய+கத்தையுங் கொண்டிருக்கிறது.

இக்கொலைகளின் பின்னே நடந்தேறும் அரசியல்கள் சரிந்துவிழும் அமைப்பாண்மைகளை மேன்மேலும் விருத்திக்கிடவும்,அவற்றைக்கொண்டே இருப்புக்கான இனக் குரோதங்களைப் புதுப்பிப்பதற்கும் சகல பிரிவுகளுக்கும் உதவும் அபாயமுமுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.05.06

Saturday, May 13, 2006

கலைஞர் கருணாநிதி அவர்களின் கணக்கு!

கலைஞர் கருணாநிதி அவர்களின் கணக்கு!



"சொன்னதைச் செய்த செயலூக்கத் தமிழ் முதலமைச்சர்."


எனக்குச் சரியாக ஞாபகமிருக்கு,அதுவொரு மழைக்கால மார்கழி மாதம்.

தோட்டம் துரவெல்லாம் பயிரிடப்பட்டு,அவைகள் "அல்லி"குத்திக் குருத்தெறிந்திருந்தன.

வருடமோ1968.

எங்கள் வீட்டிலொரு கதைப் புத்தகத்தை அண்ணன் தலைமாட்டில் வைத்து அடிக்கடி படிப்பான்.பின் தலையணைக்கடியில் திணித்து வைத்தபடி "தானும்" கதை எழுதிப்பார்ப்பான். அந்த "குறிப்புப் புத்தகத்தில்"-முன் அட்டையில் "முத்தமிழ் வித்தகர்"அறிஞர் அண்ணா என்றும்,பின்னட்டையில் கலைஞர் மு.கருணாநிதி என்றும் எழுதி வைத்திருப்பான்.அன்றிந்தத் தலைவர்களே எமது சிந்தனைகளுக்குள் உலாவந்த பெருந் தலைவர்கள்.இளைஞர்களுக்குக் கதையெழுதுவதற்கு "அறிஞர்" அண்ணாவின், "கலைஞர்"கருணாநிதி அவர்களின் தமிழ் அசலாக ஊக்கங் கொடுத்திருக்கவேணும்.இல்லையேல் கதையெழுதும் முயற்சியை அண்ணை எடுத்திருக்க மாட்டான்.பின்னாளில் இவன் எந்தக் கதையையும் எழுதும்படி முயற்சிக்கவுமில்லை.இவனது வாசிப்புப் பின்பு "பேய்கள்"பற்றிய கதைகளாக இருந்திருக்கிறது.

அது,1974 ஆம் வருடம்.

ஓரிரவுப் பொழுது.அண்ணன் ஊர் சுற்றப் போயிருந்தபோது, அவனது கதைப் புத்தகங்களிலொன்றையெடுத்துப் படித்துப் பார்த்தேன்.சில பக்கங்கள் வாசிப்பதற்குள், நெஞ்சுக்குள் பயம் குடி கொண்டது!

"ஒரு தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தபோது கொங்கு நாட்டுப் பேயொன்று "றீம்றீமென்று" திடீரென முன்வந்து,"உனக்கென்ன வேண்டும்-உனக்கென்ன வேண்டுமென்றது"அந்தப் பேயிடம் என்ன கேட்டார்களோ எனக்குத் தெரியாது.நான் அதற்குமேல் அதைப்படிக்கவில்லை!


ஆனால் தமிழகத்து அரசியல் தலைவர்களோ அதே "கொங்கு நாட்டுப் பேயின்" நிலையெடுத்துத் தமிழர்களிடம்"உனக்கென்ன வேண்டும்,உனக்கென்ன வேண்டுமென்று"கேட்டுக் கேட்டு அள்ளி வழங்கும் போது,எனக்கு அந்தப் பேயை எண்ணாதிருக்க முடியவில்லை!

இத்தகையத் தலைவர்கள் யாவரும் மக்களுக்குச் சேவை செய்யப் பேயுருவோடு அலைவதைப் பார்க்கும்போது,அவர்தம் "பெருஞ் சேவை" மனதைக் காட்டிவிடுகிறதல்லவா?

ஆம்!இருக்காதா பின்ன? கலைஞர் ஆச்சே,எங்கள் மகமாயி அம்மாவாச்சே!

தேர்தலில் அள்ளியிறைத்த போலிக் கோசமெல்லாம் பொய்யின்றிச் செயலுருப் பெறுவது நிசமாகவே ஏழை மக்களின்பால்-மழலைகளின் ஆரோக்கியத்தின்பால்,விவசாயிகளின்பால் ஓட்டுக்கட்சிகளுக்கு ஏற்பட்ட கரிசனையான மனிதாபிமானமா?

மக்களின் குரல்வளைகளை உலக வங்கியின் உத்தரவின் பேரில் சுருக்கிட்டு முறித்தெறிந்த ஜெயலலிதா,கருணாநிதிகளா இங்ஙனம் பாச மழை பொழிவது!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பற்பல விவசாயிகள்"எலிக் கறி"உண்டதற்கு யாருதாம் காரணம்?

எங்கள் கவிஞனொருவன்:

"......................மாலையிலே கூழ் குடித்துக்
குறட்டைவிட்டு மேனி தூங்கி,
காலையிலே கண் விழித்துத்
தாரமுடன் குழந்தைகளும்
தனியாகப் பின் தொடர,
நடக்கின்றான் விவசாயி.
விவசாயி வாழ்கின்ற சிற்றூரே வாழிய நீ"

என்று ஆரம்பப் பள்ளிப் புத்தகத்தில் எழுதியிருந்தான்.பாடல் சரியாகப் பாடமில்லை இப்போது!

அவ்வளவுக்கு விவசாயிகள் படும்பாடு வேதனையானது!

தலைவர் கருணாநிதி
6400.கோடி இந்திய ரூபாய்களுக்கான அவர்களது
(விவசாயிகள்) பழையகடன்களைத் தள்ளுபடி செய்து,
2 ரூபாய்க்குப் படியரிசி போட்டு,
ஒன்றுக்கு இரு தடவைகள் ஊட்டச் சத்து முட்டைகளை
மழலைகளின் தட்டுக்குச்"சொன்ன மாதிரிச்"செய்தே காட்டிவிட்டார்!


அப்பாடா பெரிய மனிதாபிமானமும்,
உத்தமருமான உலகத் தமிழ்த் தலைவர் நாணயவானாகிறார்!


எதற்குத்தாம் பதவி ஏற்றவுடனே ஒப்பமிட்டு,உத்தரவிட்டார்?

மக்களின் துன்பத்துக்காகவா?

வெறும் 95 இடங்களோடு கூட்டணியுடன் ஆளமுடியுமா?

இது கடினமானது!

கலைஞர் வல்லவர்.

நாடகங்கள் போட்டவர்,
நல்ல தமிழில் படங்களுக்கு வசனமெழுதியவர்.
கூட்டங்களுக்குள் சொல்லி வைத்தவர்களின் கேள்விகளுக்குச்
சுவையாக முன்கூட்டித் தயாரித்த பதில்களைக்
கணப்பொழுதில் கக்கி"அறிஞர்"எனப் புகழ் பெற்றவர்!

விடுவாரா தவறு?

இந்த அரசுக்குக் குற்றுயிர்தாம் என்பதை அவர் அறிந்தபோது,

"சொன்னதையுடனே செய்யுங்கால்"இடையில் வரப்போகும் தேர்தலில் தனித்த பெரும்பாண்மை தி.மு.க.வுக்குத் தயாரிக்கக் கலைஞர் கண்ணியவானாகிறார்!
"நெல்லுக்கிறைத்த நீர்
புல்லுக்கும் அங்கே பொசியும்"என்றமாதிரி

அப்பாவி மக்கள் நன்மையடையவாவது கூட்டணி ஆட்சிகளே தொடர்வது "தொந்தரவு" மக்களுக்கில்லை,அது கட்சிகளுக்கே!

பிச்சைதாம்!
எனினும்,
"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் ப+ சக்கரை"என்பதுபோல்
கலைஞரின் தேர்தல் வாக்குறுதி நிசமாவதும் இப்படியேதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.05.06

Sunday, May 07, 2006

"மாவீரர்"தயாரித்தல்!

ஈழப்போருக்கு
"மாவீரர்"தயாரித்தல்!



காதற் தியானிப்புத் தேவையில்லை
கள்ள விழிப்பார்வையும்
கடிதவரைவும்
கண்விழித்திருப்புந் தேவையில்லை.


மனதுக்குள் கும்மியடிக்கும்
விமானமொன்று குடற் சுவரில் முட்டிமோதிப் பறக்கும்
அம்மாவை வெறுத்தொதுக்கும்
அப்பனை வெட்டிப் புதைக்கும்
"எந்தவுணர்வுக்கும்" அவசியமில்லை!


அவனுக்காய்-அவளுக்காய் "காயும்"காலங்கள்
வெட்டெனச் சாய்ந்து மேலெழும்
தலைக் கோலமும் தேவையில்லை!



மேனிமுகரும் ஆசையோ இல்லைப் பட்டகர்த்தி
பாய்விரிக்கும் அவசரமும்
பள்ளமும் புட்டியுமாகப் படாதபாடாய்ப் படுத்திய
முத்தக் கனவுக்கும் முயற்சி தேவையில்லை


பக்குவமாய்க் களிப்பதற்கு
பால் பழம் புசிப்பதற்கு
மாலை வரத் தேவையில்லை.


மாசம் சுமப்பதற்கு
மசக்கையுணர்வதற்கு
மாங்காய் கடித்திடுவதற்கு
சாம்பல் உருசித்திடுவதற்கு
சிரமப்படத் தோன்றாது!


யோனி கிழிந்திடவோ
குருதி கொட்டிடவோ முக்கி மலமிருந்து
"ஈன்று சாகும்" பிரசவப் பொழுதை
"சுகப் பிரசவம்"என
அஞ்சல் செய்யும் கணவனுந் தேவையில்லை.


தொட்டிலிடவோ
தோளில் சுமந்திடவோ
தாலாட்டுப் பாடிடவோ
தாயாகித் தந்தையாகி மோந்திடவோ


கால்பிடித்து
மூக்கிழுத்து
முழு நிலாவாய் தலைவருவதற்கு
உருட்டிப் பிசைவதற்கோ
எண்ணை தேய்த்து"கற்கண்டு-கருப்பட்டி"க் கதைகளெல்லாம்
கடுகளவும் தேவையில்லை!


நாத்திட்டிக்குக்"கரும் பொட்டும்"காய்ச்சியிறக்கப்
பாட்டிக்கோ,
"உஞ்சு கடிக்கும்-மீயா எலி பிடிக்கும்"
கதைவிடப் பாட்டனுக்கோ தொடருறவாய் நீள்வதற்கும்
உறவெதுவும் தேவையில்லை.


சொத்துச் சேர்த்திடவோ
சோறூட்டச் "செவ்விதிழ்"தாய்மைக்கும்
சுகமில்லை என்றவுடன் காற்றில் இறக்கைவிரித்துக்
காத தூரம் "கட்டிப்" பறக்கும்
அப்பாவி அப்பனுந் தேவையில்லை!


................... குண்டெறி
குடிமத்துள் உலாவரும் சிங்கள இராணுவத்துக்கு
கோதாரி தானாய் வரும்
வெட்டியும்,வேல்பாய்ச்சிப் பெண்மையைப் பிய்த்தெறிதலும்
பிஞ்சுகளின் விழிகள் முன்னே
சிங்களத்துக் காடைக்கூட்டத்துக்கு வியர்த்துவிடும்!


பிறகென்ன?

"மாவீரர்கள்" மனத்தளவில் தயார்!
தரணம் பார்த்துச் சொல்:
..........................சிங்களவன் கொலைக்காரன்
...........................எங்கள் பெற்றோரை,உற்றோரைப்
பேசுமெங்கள்"தமிழை"அழித்திட்ட மிருகம்!
................."போரைத் தவிர வேறொரு வழி?



........................கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க-

சிங்களத்துக்கு:
தேச ஒருமைப்பாடு,"ஒரே தேசம்-ஒரே இனம்!"நாம் ஸ்ரீலங்கர்கள்.
பயங்கரவாதம்.


தமிழுக்கு:
தமிழீழம்,சுயநிர்ணயம்-தாயகம்!
தேசியம்,
தமிழ்-சமூகவிரோதி.
மாவீரர்
துரோகி,
ஒட்டுக்குழு-இனத் துரோகி,தேசத்துரோகி!
எடுத்துவிடு
இன்னும் ஓராயிரம்"புரியா மொழியில்"எந்த நிகழ்வுக்கும்
எங்கேயுமொரு காரணம் இருப்பது புரியும்.


வேறு,

நம்பிக்கையறுந்த நடுச்சாமப் பொழுதில்
தூக்கத்தின் தற்கொலையில்
புரண்டும்,நிமிர்ந்தும் விழிமறுத்த
தூக்கத் தற்கொலையைத் தடுக்கமுடியாத தவிப்பு


அகதிச் சங்கிலியில் பிணைத்துப் போட
ஒரு வாழ்வும்,ஏதோவொரு எதிர்பார்ப்பும்
ஊரிழந்தும் உணர்வு வெளிக்குள் நங்கூரமிட்டபடி
திசையறியத் தெருவுக்கு வழித் துணை தேடுவதைப்போல்

தீப்பட்டு வெந்தவிந்த
விறகுக்கு"முன்னம்"விறகென்று எவரிடுவார் நாமம்?
கரிக்கட்டை"விறகாகா"வினைப் பயனே
அகதியப்"புலப் பெயர்வு"பெருவாழ்வுக்கும்.


அச்சப்பட்ட மனதின்
பேரிரைச்சலுக்கு
எதையுந் தயாரித்திட
திக்குந் தெரியும்-திசையுந் தெரியும்
துப்புவதற்குத் துணைபோகாதிருக்கும் வரை!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2006

Wednesday, May 03, 2006

ஈழத்தாய்

ஈழத்தாய்
அம்மணம்!


புறத்தே வீசியடிக்கும் சோழகம்
பெயரளவிலான கூதல்
மதியம் மடிந்து
மௌனிக்கும் சூரியனுக்குக் கீழே
நெருப்பெறிந்து இதயத்தைப் பற்றவைக்கும்
ஈழச் சவாரி!


கர்ப்பத்தில் கனவுதரித்திருக்க
இச்சைப் பாலைத் தர மறுத்தவள்
கெந்தகப் பொதிக்கு இரையாக்கி
விடுதலை கொடுத்தாள்


மறுப்பதற்கும்,தடுப்பதற்கும்
மனிதராய் இருந்தபோது முடிந்தது
சுமையைக் காவும்
ஒட்டகமாய் மாறிய மண்டையுள்
இதற்கெல்லாம் பதிவறை ஒதுக்கப்படவில்லை!


இருப்பது,நடப்பது
உண்பது,உறங்குவது
உயிர் நாற்றமடிக்கும்
உடற்கந்தைக்கல்ல


மறவன் மன்னன்தம்
மனக்கதவின் ஒற்றைத் துவாரத்துள்
மெல்லப் புகுந்திடுவதற்குள்
கட்டிய குண்டின் அதிர்வொலி
ஒப்பாரும் மிக்காருமற்ற மறவனுக்கு
மனதாகும்போதே
"மாவீரத் தாலாட்டு"மடைதிறக்கும்
பங்கர் வழியால்


நெடிய அழுகுரலில்
அமிழ்ந்துபோன வாழ்வின் சுருதி
அநாதையாய்த் தெறித்த குருதித் துளியில்
விகாரமாய் கிளர்ந்தெழ


கிடப்பில் கிடக்கும்
மூக்கறுந்த மூக்கு (முன்னைய)ப் பேணிக்கு
ஈயம் உற்றும்
ஒரு செயலாய்
"இது" மெல்ல நடக்கிறது!


மூக்கிருந்தாலாவது
நொடிந்துபோன ஆசையோடு
நெஞ்சு வலிக்க
நெருடிக் கொண்டிருக்கும்
பழையகுருதிக் குடத்துக்கு
நீர் நிரப்ப நினைத்தாகலாம்


சேலையை
மறைப்புக்குக்கூட கட்ட மறந்த
ஈழத் தாய்க்கு(ஈழக் கோசம்)
இரட்டைப் பிள்ளை
ஒன்றுக்கு:
"மாவீரர்"
மற்றத்துக்குத்
"துரோகி" என்ற நாமம் வேற.


மீளவும்,
கள்ளக் கலவியில்
கருத்தரிக்க
"ஒட்டுக் குழுவென"நாமமிட்டு
உலகஞ் சுற்றும்
தேச பிதாக்கள்
மற்றவர்
கருவைக் கலக்கி ஒத்திகை செய்ய
ஒழுக்கம் மட்டும்
தமிழன் பெயரால்!



எனினும்,


சோழகம் போய்
வாடைக் காற்றாகிப் பின் கொண்டலாய்ச்
சூறாவளி வெடித்து வீசும்!
ஒருவிடியல்
சேலைக்காய்(ஜனநாயகம்)
மெல்லப் பிறக்கும்!


ஏவாளுக்கேற்பட்ட வெட்கம்
ஈழத்தாய்க்கு மலர்ந்தால்
மெல்லவேறும்
இடுப்பில்,
இல்லைத் தொடர்ந்து அம்மணமாய்
அதை
மெல்லக் கொடுக்கும்
தேசியக் கொடிக்கு!


ப.வி.ஸ்ரீரங்கன்
04.05.2006

Monday, May 01, 2006

மே தின ஊர்வலமும்,புலிகளும்...

மே தின ஊர்வலமும்,புலிகளும்
சில (சுவாரஸ்ய)-துயரமான நிகழ்வுகளும்!


இன்றைய மே தின(01.05.2006)நிகழ்வுகளில் நான் பெற்றுக்கொண்ட சில அநுபவங்களைப் பகிர்வதென்பது ஊருக்கு உபதேசம் செய்வதற்கல்ல.உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதும்,நமது நிலைமைகளை(புலிப்பாசிசத்தை) உலகத்தமிழ் வாசகர்கள் புரிவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வலைப்பதிவில் சாத்தியமாக்குவதற்குமே!

எனக்குப் பிடித்த நிகழ்வுகளில் "மே தின ஊர்வலமும்"ஒன்று.

இந்த ஊர்வலத்தில் எப்பவும் பங்குகொள்வது எனது மனதிற்கினியவொரு துடிப்புடைய செயலாக இருப்பதும் ஒரு காரணமாக அமைவதால், ஒவ்வொராண்டும் இதில் ஆர்வத்தோடு இணைந்து கொள்வேன்.

இம்முறை வீட்டிலிருந்து வெளிக்கிடும்போதே மல்லுக்கட்டித்தாம் புறப்படவேண்டிய நிலை.குழந்தைகளையும் கூட்டிச் செல்லும்படி என் பொண்டாட்டியின் அழுங்குபிடியில்,அவர்களையும் அழைத்துச் செல்லும்படியாகி,அவர்களும் வெளிக்கிட்டு வருவதற்கு ஆயத்தப்படுத்தியபோது, நேரம் ஒன்பதைத் தாண்டியது.அத்தோடு அவர்களும் வருவதானால் நிச்சியம் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டும்.வீடுமீள மதியம் மூன்றைத்தாண்டுமென்பதால், காசு கேட்டு மனைவியுடன் மல்லுக்கட்டிப் பணம் கிடைக்காதபோது,மூத்த பயலின் "கைச்செலவு" காசு ஐந்து யுரோவுடன் வெளிகிட்டேன்.இந்தக்காசில் ஒருவனின் பசிக்கே எதுவும் வேண்டமுடியாது.எனினும் புறப்பட்டுப் பேருந்து நிலையம் செல்லும்போது,மனையாள் மீளவும் குழந்தைகளை வீட்டுக்கழைத்தாள் செல்லிடப்பேசியில்.அவர்களை ஒருவாறு வீட்டுக்கனுப்பியபோது என்னிடம் ஐந்து யுரோ எனக்காக இருந்தது.இது எனக்கு எதையாது கடிக்கப் போதுமானது.

புறப்பட்டேன்.

கூட்டம் நகர்ந்து, மறைந்துவிட்டது!

நான் டுசில் டோர்வ்;(Duesseldorf)நகரத்துக்குச் சென்றபோது மணி 10.30,எனினும் குறுக்கு வழியால் சென்று, ஊர்வலத்தில் இணைந்தேன்.ஜேர்மன் மார்க்சிய-லெனினியக் கட்சியின் ஊர்வலத்தோடு ஒன்றிச் சென்று,பின்பு புலிகளின் கூச்சலோடு இணைந்தேன்.இம் முறை தமிழச்; சிறார்கள்-பள்ளி மாணவர்களே புலியின் ஊர்வலத்தின் கதாநாயகர்கள்;."Wir wollen echte Frieden!Unsere haende fuer unsere land."(உண்மையான சமாதானமே எமக்கு வேண்டும்,எங்கள் கரங்கள் எங்கள் தேசத்துக்கே!)என்று வலுவான கோசங்களைச் சத்தமாகக் கத்தினார்கள் சிறார்கள்.நானும் சிலரோடு உரையாடி,"இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக "மேள தாளமின்றி" ஊர்வலஞ் செய்கிறீர்கள்,இது எடுபடக்கூடியது!யாரிதை ஒழுங்கு செய்தது?,நீங்களோ?"என்று,ஊர்வலத்தின் முன் மிதந்தவொரு "மேழியர்" கனவானைக் கேட்டேன்.அவரும் "நானும் உம்மைப் போல இதில தலைகாட்டிற ஆள்தான்"என்றார் கடுப்பாக.இவருடைய கடுப்புக்குக் காரணம் புலிகளின் ஊர்வலத்தை நான் எனது ஒளிபடக்கருவிக்குள் அடக்கியது அவருக்குப் பிடிக்கவில்லை.என்னுடன் வாக்குவாதப்பட்டவர்,மெல்ல எந்தப் பத்திரிகையென்றபோது-நான் எந்தப் பத்திரிகையுமில்லை,சாதரணத் தமிழுணர்வுடைய உங்களைப்போன்ற ஒருவரென்றேன்.இதுதாம் அவரது கடுப்புக் காரணமென நான் புரிந்ததும்,அது பின்பு தப்பென்று புரிந்தது.

ஊர்வலம் இறுதியிடத்துக்குச்;(Duesseldorf-Hochgarten) சென்றபோது நான் ஜேர்மனியத் தொழிற்சங்கக் கூட்டத்துள் கலந்து,நம் மாநில முதல்வரின் உரையைச் செவிமடுத்தேன். அவ்வுரையைத் தொழிலாளர்கள் விசில் ஒலியெழுப்பிக் கேட்காமல் செய்தார்கள்.முதல்வர் தனது அரசு இன்றைக்குப் "பொருளாதார வளர்ச்சிக்காக(?!)" முதலாளிகளுக்குச் சார்பாகச் சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றார்.அவர் தொழிலாளர்களுக்குப் பாடை கட்டுபவர்களில் முதலிடத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதி.

இவர் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் "நோர்த்தன் வெஸ்ர்பாளின்" மாநிலத்துக்கான முதல்வர் யுர்கன் றுட்கார்Juergen Ruetger)! இவருக்குப் பின்பு உரையாற்றியவர் உலகத்தின் கடைசிப் புத்திஜீவியாக ஜேர்மனில் வாழ்ந்துவரும் யுர்கன் ஆபர்மார்சின்;(Juergen Abermas) மாணவரான பேராசிரியர் ஓஸ்கார் கென(Oskar Kehne).ரொம்பக் காட்டமாக முதலாளியத்தை விமர்சித்து,முதலாளியத்தின் முறைமைகளில்தான் பிழையிருப்பதாகவும்.அது மக்களுக்கு எல்லைகளைப் போடுவது நியாயமில்லையென்றும்,அவற்றை அரசு தவிர்க்காதுபோனால் போராடுவது தவிர்க்க முடியாததென்றார்.கூடவே பிரான்சின் மாணவாகளுக்கெதிரான சட்டம் மூளைப் பழுதானவர்களின் சட்டமென்றும்,பிரான்ஸ் மாணவர்கள் முப்பது இலட்சம் பேர்கள் வீதிக்கு இறங்கியதுபோன்று ஜேர்மனியிலும் மாணவர்கள் இறங்கும் நிலை தொடரும்,அரசியல் வாதிகள் தவறான சட்டமியற்றினால் என்றார்.

இந்தப் பேச்சுத் தொடர்ந்தபோது "எனக்குப் பின்னால் வந்த தமிழர்களெங்கே" என்று திரும்பியபோது,அவர்கள் தனிமையாக வேறொரு வயற்பரப்பில் குழுமினார்கள்.இதுவென்ன கோதாரியென்று நான் புலிகளை அண்மித்தபோது கடுப்பான மனிதரின் குரல் ஓங்கியொலித்தது.

"எங்கயடா அவன்,செவிட்டைப் பொத்திக் குடுத்தனென்றால்..."

கத்திக்கொண்டே ஊர்வலத்தில் திரண்டு நின்ற தமிழர்களை"எல்லாரும் அங்க போங்கோ"என்று ஆடுமாடுகள் போன்று துரத்தினார்.மக்களும்"ஏன் எதற்கு"என்ற விசாரணையின்றித் தொழிற்சங்கக் கூட்டத்தோடு இணைந்தர்கள்.

கடுப்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தவர் பெயர் சிவா.

இவர் புலியினது பொறுப்பாளர்.

அதே திமிர்,அதே மேய்க்கிற குணம்.

மனதுக்குள் பொருமியபடி நான் பேச்சாளர்களின் மேடைக்கு மிக அண்மித்து, முன் தளத்துக்குச் சென்றேன்.அப்போதுதாம் அங்கே ஒரு ஜேர்மனியர் "நம்ம" தேசியத் தலைவரின் படத்தை ஒரு பக்கமும் மறுபக்கம் புலிச் சின்னமும் பொறிக்கப் பட்ட பதாகையை கைகளில் வைத்திருந்தார்.அவரைப் பார்க்கும்போது,எனக்குப் புலிகளுக்கு ஜேர்மனிய மொழியிலொரு நூல்;(Das verlangen der Tamilen nach einen Gerechten frieden-ISBN:3-9805369-3-9) எழுதிக் கொடுத்த Mike Rademacher என்ற டோட்முண்ட் நகரில் வாழும் ஜேர்மனியரோவென்ற கற்பனை விரிய "அவரிடமே கேட்போமே" என்று வாய்திறந்து சில நொடிகளில், எங்கிருந்தோ புலி பாய்ந்து என்னருகில் வந்து- நான் கதைப்பதை ஒட்டுக் கேட்க முனைந்தபோது, நான் மிகவும் ஆத்திரத்தோடு"உமக்கு என்ன வேண்டுமென"டொச்சில் வினாவிய கணத்தில்,"தமிழில் பேசும்" என்றார்.எனக்கு அந்த அவசியமில்லையென்றும்,நான் ஜேர்மனியரோடுதாம் இப்போது உரையாடுகிறேன்,நீர் சம்பந்தம் இல்லாது இங்கு ஆஜராகியுள்ளீர் என்றபோது புலியின் வாயிலிருந்து இப்படி உதிர்ந்தது:

"நீ வ+ப்பெற்றாலில் இருக்கும் "ரீ.பீ.சி.வானொலியின"; செய்தியாளன்.உன்னை நாங்க கணக்குப் பண்ணியே வைத்திருக்கிறோம்.எங்கள் தலைவர் கணக்குப் போட்டால் தப்பாது.உனது கணக்கை முடிப்பதுதான் இனிப்பாக்கி."என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

எங்கே நாம் வாழ்கிறோம்!

அதுவும் ஜேர்மனியிலும் வாய்ப+ட்டா?

நாம் மற்றவர்களுடன் பேசுவதற்கே முடியாமல்-ஒட்டுக்கேட்கும் புலியை நினைத்தபோது ஊரிலுள்ள மக்களின் நிலை எப்படியிருக்குமெனப் பதறினேன்.

"பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலையே கண்டு அஞ்சுபவர்கள்" என்பது உண்மைதாமென இந்தச் சம்பவத்;தில் நான் நம்பிக்கொண்டு, அந்தப் புலிக்கு மூக்குடைக்க விவாதித்தேன்.புலிக்குப் புலிகள் துணையாகத் திரண்டு என்னோடு வாக்குவாதப்பட்டத்தைத் திரண்டிருந்த பொலிஸ்காரர்கள் நோட்டமிட்ட அதே கணம், நான் புலிகளையின்னும் உரத்த குரலில் ஏசினேன்.அவர்கள் இறுதியில்"புலிகளை எதிர்பவர்கள் எல்லோருக்கும் மரணத் தண்டனை"என்று விலத்தினார்கள்.

மீளவும் ஜேர்மனியர் "என்ன பிரச்சனையெனும்போது"நான் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.

ஜேர்மனியர் மிக அமைதியாகப் "பயப்படாதே"என்று கூறியவாறு தனது "ஜெக்கட்"டுக்குள்ளிருந்து அடையாள அட்டையைக்காட்டித் "தான்" குற்றப் புலனாய்வு அதிகாரியென்று சொல்லி,மீளவும் தொடர்ந்தார்"இங்கே பார்,இது ஜனநாயக நாடு.எல்லோருக்கும் கருத்துச் சொல்லவுரிமையுண்டு.அதைப் புலிகள் இங்கே மட்டுப்படுத்தமுடியாது.நாங்கள் புலிகளையின்னும் தடை செய்யவில்லை.இதிலிருந்தே பார்த்துக்கொள் எமது ஜனநாயகத்தை"என்றார்.

இதை நான் சாதகமாய்ப் பயன்படுத்திச் சொன்னேன்"உண்மைதாம்.ஆனால் புலிகள் தமது கட்டுப்பாடுடிலுள்ள பகுதிகளில் தனியொரு கட்சி,தனியொரு ஆட்சி.தமக்கு எதிரான மாற்றுக்கருத்தையே அநுமதிக்காத சர்வதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பதால்தாம்,இங்கேயும் அந்தப் புலி உறுப்பினர்கள் உயிர்கொல்லத் திரிகிறர்கள்!நீயோ அவர்களின் தலைவர் படத்தைக் காவுகிறாய்"என்றேன்.அதற்கு சிவிலில் இருக்கும் அந்தப் பொலிசோ"இது நான் அவர்களிடம் கேட்டு வேண்டியது.எனக்கு இவர்கள் பற்றிய தகவல்களுக்கு இது உதவும்"என்றார்.

நான் மௌனித்தேன்.

தொழிற் சங்க ஊர்வலமும், உரையும் முடிந்தபோது எனக்குப் பசியாய் இருந்தது.நல்ல உணவுகளைச் சமைத்து காசுக்கு விற்ற ஒவ்வொரு அமைப்புகளிடமும் கூட்டம் அதிகமாக இருந்தது.பியர் புக்கிகளில் சனம் நிரம்பி வழிந்தது!

எனக்குப் புலிகளின் வக்கிரமான எண்ணத்தைப் பற்றியே மனம் அரித்தபடி.

"புலியை எதிர்ப்பவர்கள் எல்லாருக்கும் மரணத் தண்டனை"


இப்பிடி வெகு லேசாகச் சொல்லும் காட்டுமிராண்டிகளா நமக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள்?


இது "Sinhala-only-Act மாதிரி LTTE-ONLY-ACT" இல்லையா?

நமது சிறார்கள் கதி என்ன?

நமது மேற்குலக வாழ்வில்கூட புலிப்பாசிச அச்சமின்றி வாழ முடியாதா?

பிரான்சில் சபாலிங்கத்தைச் சுட்டவர்கள்,கஜனை,நாதனை இன்னும் எத்தனையோபேர்களை ஐரோப்பாவில் போட்டவர்கள்தாம் இந்தப் பாசிசப் புலிகள்.

நினைக்க அச்சமும் கவலையும் மேவ, பசியுடன் வீடு மீண்டேன்.
பிள்ளையிடம் பறித்த ஐந்து யுரோவையும் மீள அவனிடமே கொடுத்துவிட்டு இக்கட்டுரையை எழுத முனைந்தேன்.

எப்போது பிணமாவேன் என்பது தலைவருக்கு மட்டுமே தெரியும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2006

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...