Saturday, November 26, 2005

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமிய...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமியத் தகவமைப்பும்...


>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,

மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,

அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<

இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம்(இவர் 'யூரோ இஸ்லாத்தை' முன் மொழிபவருங்கூட) இங்ஙனம் உரைத்தார்,கடந்த இலண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னரான உரையாடல் ஒன்றில்.


அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி எங்ஙனம் நிகழ்தது என்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.

யோசித்துப் பார்க்கின்றபோது நமது இன்றைய 'தமிழ் அரசியலோடு' இது வெகுவாக ஒன்றிப்போகிறது.

இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' நியூயோர்க்,ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர்
திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும்
கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'
இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை இந்த மேற்குலக நாடுகள் சொல்வதும்.இத்தகைய செயல் "தற்கொலைத் தாக்குதல்" போன்ற பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிப்பது இனிமேல் அதி தீவிரவாதக்-குறுங்குழுவாதப் போராட்ட முறைமைக்குத் தோல்வியாகும்.



நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.

இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால்(கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.

1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்தத் தளத்தை

மேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.


கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!


இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார்.இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!


ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் போன்ற எமது 'சுயநிர்ணயப'; போராட்டம்கூட தமிழ்த் தேசியத்தின் அதீத பயங்கர வாதத் தாக்குதல்களால்,கொலைகளால் இந்த மக்களிடம் எமக்கு ஆதரவான மனநிலையைக் காண முடியாத சூழலையுருவாக்கி விட்டுள்ளது.ஏன் நாம் பல தூரம் போவான்?நமது போராட்டத்துக்கு,வெற்றிக்கு மிகவும் அவசியமான 'உந்துதல்'எங்கிருந்து வரவேண்டுமோ அதுவே நம்மைத் தடை செய்யுமளவுக்கு நமது பயங்கரவாதம் தமிழகத்தை அந்நிய மண்ணாக்கி விட்டுள்ளது.



இங்கே நாம் மேலே குறித்துச் சொன்ன தமிழ் அரசியலோடு நெருங்கி வருவதென்பது 'கருத்தியலால் உந்தும் மனிதர்களை'உருவாக்குதலும்,அவர்களைப் பின்னிருந்து தூண்டும் தத்துவார்த்தத்தையுமே பொதுமைப் படுத்துவத்தைச் சொல்கிறோம்.


இங்கே மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய 'குறுந்தேசியத்தின்'இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.அது ஆண்டுக்குப் பல முறை ஒவ்வொரு புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறது.உதாரணத்துக்கு'மாவீரர் தினம்'இந்தாண்டு'தேசிய மாவீரர் தினம்'என்றாகிறது.இது மக்களிடம் ஆயுத சாகசங்களையும்,தனிநபர் வழிபாடுகளைங் காட்டுவது மட்டுமல்ல கூடவே சிறார்களைப் பலி கொடுத்த பெற்றோர்களைக்கூட விட்டுவைக்காது-தமது சின்னஞ்சிறு குழந்தை பலியானது சரியானதாகவும்,அவர்கள் இறந்து போகவில்லையென்றும்,வீரத்தில்-தேசத்தில் உயிராகத் தம்மோடு வாழ்வதாகக் கருத்துக் கூறுமளவுக்கு அந்தப் பெற்றோர்களைத் தயார்ப்படுத்திக் கேவலமாக்கிறது.இந்தத் 'தேசியத்துக்குள்'சிக்குண்ட இந்தப் பெற்றோர்கள் தேசியத்தை முன்னெடுப்பவரின் ஊடககங்களில்,தொலைக்காட்சிகளில் மலர்ந்த முகத்தோடு தமது மழலகைள் 'வீரச்சாவடைந்தது'மகத்தானது என்றும்,அந்தச் சிறார்களை'அவர்,இவர்' என்று அழைத்துக்கொள்வதும்,தேசத்தின் விடுதலையில் பற்றுள்ளவராகவும்,இலங்கையரசின் அட்டூழியங்களைப் பற்றியும்,தமிழர்கள் விடுதலையடைய வேண்டுமென்ற நியாயப்பாடுகளையும் தினம் தமக்குக் கூறுபவராகவும் ,மாணவராகவும் இருந்தார் என்றும்,இதனால் தேசத்துக்காப் போராடித் தெய்வமாகினார் என்கிறார்கள்.பதின்ம வயதுச் சிறார்கள் வாழ்ந்து கெட்ட பெரிசுகளுக்கு,பெற்றோருக்கு'சிங்கள அரசின்'அட்டுழியங்களைச் சொன்னார்களாம்!-அப்போ இந்தத் தடிமாடுகள் எந்தவுலகத்தில் வாழ்ந்தார்கள்?தமக்கு அநுபவப்படாத இந்தக் கொடுமைகளை,இன்னல்களை,நியாயப் பாடுகளைச் சிறார்கள் சொல்லித்தாம் தெரிந்துகொள்ளும் நிலையிருந்தவர்கள் எப்படித்தாம்'பிள்ளைகளை' மட்டும் மண்ணை நேசிக்கும் மகத்தான மனிதர்களாக வளர்த்தார்களோ தெரியவில்லை!


இன்றிருக்கும் தமிழ்க் கருத்தியல் தளமானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு மிகவும் பொருத்தப்பாட்டோடு நகர்கிறது.இஸ்லாத்தின் அதீத கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.


பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் 'தமிழ்தேசியத்தை'விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மௌனிக்கத்தக்க செயலில்லை.நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழர்களில் பலர் உள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.நமது நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்'தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்'வானொலிகளில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்களை உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.இங்கே தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு!


தமிழர்களுக்கு மகத்தான நாளாகவும்,நன்றி கூறத்தக்க நாளாகவும் ஆக்கப்பட்ட'27.11.'(கார்திகை 27)இந்த வகைப்பட்டவொரு'மாதிரி'தமிழ் மனிதர்களை உருவகப்படுத்தும் தந்திரத்தை தன்னகத்துள் வைத்திருக்கிறது.இது மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்'உயிர் வாழ்வதாக'உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான'வீரமாகவும்'தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது தமிழ் ஆளும் வர்க்கம்.இது தகவமைத்து வைத்திருக்கும் இந்த 'மாதிரி மனிதர்கள்'இஸ்லாமியப் பழிக்குப்பழி போராட்டத்தைப் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான 'சுயநிர்ணயவுரிமை' அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது. சாதரண இஸ்லாமியர் ஒருவர் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் 'மாதிரி மனிதர்களும்'தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்,தலைவரின்'மாவீரர் தின'உரையில் வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும்-இஸ்லாமியனுக்கு 'புனிதக் குரான்'போன்று இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டு,அர்த்தமாகிறது.இவர்களே தமது தலைமையை-தலைவரைத் தெய்வமாக்கி வழிபடும் அளவுக்குக் கருத்துக்களால் வார்த்தெடுக்கப்பட்டபோது தலைவரின் "51வது" பிறந்த நாளுக்கு 51 பொங்கற் பானைகளில் பொங்கிப் படைத்து மகிழ்வதுவரைச் செல்கிறது.வாழ்க தமிழ்ப் பண்பாடு!

மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,

>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,

மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,

அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<

தமிழ் மக்களின் இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது

கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

********************************************************


ஒப்பாரி,
ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!


பானையிலே போட்டரிசி
பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை
பாதகர்கள் தந்திருந்தால்
பால்வார்த்துப் பார்திருப்பேன்!

பாவீ நானும் பட்டழ
பரதவித்துப் போனாயோ?
மாவீரர் மகனென்ற மமதையிலே மடி மறந்து போனதுவோ?

* மந்திகைக்குப் போன கதையாய்
மாசம் சுமந்த கதை போச்சு
மக்களில்லா வீட்டிற்கு மகத்துவமுண்டோ?

மடைச்சி நானும் மயங்கிப்போனேன்
மாவீரர் கதைகேட்டு
மகனே உனைமறந்த மரக்கட்டையை மன்னிப்பாயோ
என்ர குஞ்சரமே கொழுக்கட்டையே!
2
குஞ்சரமே குளத்தடியே
கொப்பனுக்குக் கற்கண்டே
கொட்டி வைத்த முத்தெல்லாம் மோதுண்டு சிதறியதோ?
மோடர் மலம் மிதித்திட்டால் மூன்றிடத்தில் நாசமென்று
சீலைக்குள்ள தவம் கிடந்து சிக்கனமாய் பெத்த குஞ்சே!

சண்டாளி நானெருத்தி சகதிக்குள்ளே கிடந்தழ
சாய்த்துவிட்டார் உனையல்லோ!
சாய்த்து வைத்த சுளகுபோல சாய்ந்தாயோ நீயுமங்கு?
ஏழை பெத்த பிள்ளையெல்லாம் எதிரயிடம் செத்துப்போக
கட்டுடலாய் காத்துவிட்டார் தத்தமது உடலையெல்லாம்

காயடித்த கடுகுப்பிஞ்சுகள் கருகிவிழ
காலிப்பயல்கள் கதைபோட்டார் மாவீரர் திரைபோட்டு
கால்வலிக்க நடக்கின்றோம் மகவுகளின் உடல் புதைத்த குழி தேடி
காலமெல்லாம் கனவுகளாய் அவர் முகங்கள்
3

நாசமாய்ப்போனவங்கள் தேசத்தை ஆளயிங்கு
நாயிலும் கேவலமாக நான் கிடந்து அழுந்திடவோ?
நாதியில்லை நக்குவதற்கு
நமக்கிங்கு நல்வாழ்வாம் கடவுளிட்ட கற்கண்டே
கனியமுதே தேனமுதே

கக்கூசு கழுவவைக்கும் காலிப்பயல்கள்
சாதியப் பெருந்தடிப்பில் சதிராடி தமிழீழக் குரலெடுக்க
நாடுவொன்று வேண்டுமென்று நாங்களிங்கு செத்துப்போனோம்.

சின்னவயசுப் பயல்களெல்லாம் இப்போ
சீட்டியடிச்சுப் போகையிலே
சித்திரமே பத்திரமே
சிணுங்குகிறேன் உனை நினைத்து

கூட்டிவைத்துக் கதை சொன்னார்
கும்மியடி தமிழ் என்றார்
குரைத்து நின்ற எதிரொலியில் குறைகளெல்லாம் குறையுமென்று
குனிந்து நாங்கள் கும்பிட்டோம்

குனிந்த தலை நிமிர்வதற்குள் குடிகுலைந்துபோக
குளமாடி நின்ற கண்கள் குளிருடலில் புதைந்தனவே
குஞ்சரமே குண்டலமே நீ
வெஞ்சமரும் வேதனையாய் உணர்ந்தாயோ?
4

ஆருதாம் இருந்தென்ன
ஆனை கட்டி வாழ்தென்ன?
அமெரிக்கா சொன்னவுடன் அத்தனையும் பறந்துவிடும்
அப்பனுக்கு வைத்தநேத்தி அம்போவென்று போனதுவே!

பெட்டகமே புத்தகமே
பேதையிங்கு தவிக்கையிலே
போண்டியான கோசங்களும் போடும் வரி கொஞ்சமல்ல
வாழ்ந்து நீயும் பார்திருந்தால் நிம்மதிக்காய் வாய்திறப்பாய்
போட்டிருப்பார் உன் கழுத்தில் தமிழினத்தின் துரோகியென்று

அம்மாவின் அருமருந்தே அப்பனுக்குப் பொக்கிசமே நீ
கச்சைக்குள்ள வெடி சுமந்த காலமெல்லாம்
கற்பம் கரைந்த கதையாச்சு

கண்மணியே கடைக்குட்டியே நீ
கால்தெறிக்கப் போனயோ அன்றி
போகுமிடம் தெரியாது பொழுதெல்லாம் அலைந்தாயோ?

வெஞ்சமரும் வேதனையும்
நீ சுமந்த காலமெல்லாம் நான் கலங்கி
நிம்மதிக்காய் அம்மனிடம் மோதிக்கொண்டு
நெஞ்சு நோக வீடுமீளும் காலமதை நீயறிவாய்

இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்

காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!
5

கட்டிவைத்து உதைத்தவர்களும்
கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்
சிரட்டையிலும் போத்தலிலும் நீரருந்த வைத்தவர்களும்
கட்டிவைத்த மனைகளுக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுத்தவர்களும்
தமீழக்கோட்டைக்குள் சோடிசேர அழைத்தார்கள்

சேர்ந்து தோள் கொடுத்த நம்மை
அடக்கிவிட துடிக்குமிவர் ஈழமெனும் கோசத்தால்
ஈட்டியெய்தார் எம் முதுகில்
சொந்த வாழ்வின் சுகத்துக்காய் இன்னுமெமை ஏய்த்தபடி

ஐயா குஞ்சரமே!
மாலைவேளை மதியை கருமேகம் காவுகொள்ள நீ
மிதமான கனவோடு மிதிவெடியும் தாட்டு வைத்து
காத்தருந்த காலமதை பெத்தமனம் பித்தாகி

பேசும் வாய்க்கு மொழியில்லை

கள்ளமனம் படைத்த காசுக்கார கூட்டமின்று
சிங்களத்துச் சந்தையிலே கடைவிரித்துச் சமாதானம் விற்க
கட்டுக் கட்டாய் பணம் சேரும் அவர் கணக்கில்
வறிய நாம் வாடுகிறோம் வாழ்விழந்த எங்கள் மழலைகளுக்காய்

தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள்கொடுக்கப் போனதாகச் சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய்மனது!

மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்துபோகும்
வார்த்தையின்றிச் சோர்ந்துவிடும் வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்றுவரை?.


*(மனநோய் வைத்திய சாலை

மந்திகையெனும் ஊரில் இருப்பதால் மந்திகை குறியீடாகிறது.)

ப.வி.ஸ்ரீரங்கன்
26.11.2005

Tuesday, November 22, 2005

எச்சம்!

எச்சம்!

பனியுதைக்கும் அதிர்வில்
விறைத்தொதுங்கிய உணர்வும்
இளமைக்கு விடைகொடுக்கும் உடலும்,
இழப்பினது கனவுகளுமாக
இந்தக் குளிர் காலம்.
சற்று முன்
நிலாவின் ஒளியை
நுகர்ந்த என் மனது மௌனித்துக் கிடக்கிறது!

மாலை நேரத்துப் பொலிவுகளை
சிறார்களின் துள்ளலிலும்,
சிரித்தொதுங்கும் 'அம்மாக்களின்'
விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை!

இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு
எந்தப் பொலிவுமில்லை!
இது
கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில்
மௌனித்த காலத்தின் அதிருப்தியாய்
மனதைக் கிளறிவிடும்

கார்த்திகையில் விளக்கிட்டு
தேவாரம் பாடிய மனதும்,
வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய
எனது தீபமும்
நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு.
அந்த மனதின்
நினைவுத் தோப்பில்
தீராத வடுவாய்
நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம்.

தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும்
பேசவெழுந்த நாவின் முனகலும்
குருதியின் அதிர்வில்
நிலைமறுத்திருக்கு
என் தேசத்து முற்றத்தில்.

இருண்டவெளியின்
நெடும்பாதையில்
தேசத்தை நோக்கிய
நெஞ்சு
வனப்பிழந்து கிடக்க,
பார்த்துப் பழகிய பூமியும்
பாய்விரித்துப் படுத்த முற்றமும்
பாட்டுச் சொன்ன குயிலும்,
பக்குவமாய் கட்டிய வீடும்
பால் குற்றிய ஆலமரமும் தொலைத்து
சிலநொடியில்
முளையெறிந்த'தேசக் கனா'
என்னைப்
பரதேசம் அனுப்பியது ஒரு காலம்.


இன்றோ
விழித்திருக்கையில் மரணமும்
தூக்கத்தில்
ஆத்தையும்,அடுப்படியும்
பிடரிக்குள் வருகின்றன.

உடல்வியர்க்கும்
சூடான வானத்தையும்
சுகமாய்த் திரியும் மெல்லிய தென்றலையும்,
மேனியெங்கும் பட்டுவிலகும் வண்டுகளையும்
கால்வலிக்கத் துணைவந்த
தோழமையையும்-
தோளில் தொங்கிய துணிப்பையையும்
எங்கோ தொலைத்துவிட்டேன்!

--<-<--@ எவருமறியா இந்தப் பொழுதுகளின் 'எச்சில் இரவுகள்' எதற்கெடுத்தாலும் வெருட்டிக் கொண்டிருக்கு. குளிர் ஒரு புறமும், புறத்தியான் என்பதாய்ப் புகல் தேசமும் பால்யப் பருவத்து மார்கழித்'திருவெம்பாவை'யையும் திருநீற்று நெற்றியையும் சங்கின் ஒலியையும் உணர்வின் ஒரு மூலையுள் துரத்துகிறது. ஆத்தைபிடித்த "புதிய" அடுப்பும் அப்பன் சூடடித்த சிவப்பரிசியும் தையில் பொங்க, அண்ணன் சுட்ட வெடிகளும், பூந்திரிகளில் பூத்த எங்கள் "மனமும்"(பன்மையொழிந்த ஒருமை ;-( .) அன்றைக்குத் 'தம்பி',தங்கை, அக்கா,அண்ணன் உறவிருந்த தடயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கு! ===~ கனவு வாழ்வு குருதியுறையும் குளிர் பொழுதில் தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்கும் போசனத்து எச்சமாக... ப@ :-0 ப.வி.ஸ்ரீரங்கன் 22.11.2005

Sunday, November 13, 2005

தமிழுணர்வு:அரசியல்.

போராட்டம்,வாழ்வு,தமிழுணர்வு:அரசியல்.


இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக்
கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு 'வாழ்வியல் மதிப்பீட்டைக்'கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம், நிலவுகின்ற அமைப்பாண்மை
வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட'ஜனநாயகம்'
எனும் கருத்தாக்கத்தால் உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல்
'ஒப்பாரி' எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் 'பிரதிநித்துவப்படுத்தும்' ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.

இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய'அரசியல்-பொருளியல்'வலுவும்
அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர்
தயாரிப்பான இந்த 'அலகுகள்' அந்ததந்த நாடுகளில் இன்னும்
ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய'அலகுகளை'உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் 'பொருளாதாரச் சிக்கல்கள்' அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.இதுவே நமது நாட்டில் இன்றைய கடைக்கோடி அரசியலாக நாற்றமெடுக்கிறது.இங்கு புலியென்ன ,ஈ.பி.டி.பீ என்ன எல்லாம் அராஜகக் கம்பனிகள்தாம்!



இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற 'ஊனங்களும்'அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் 'துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது'ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான'உளவியற் கருத்தாங்களால் 'கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட 'மனிதவுடலானது'அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக'மக்கள் விரோதமாக'இருந்தும்
அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் 'நாம'
மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும்
கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு'விரோதி,துரோகி'என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்.தியாகிதுரோகி' என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழ்க் குறுந்தேசியமானது தனது இருப்பை
இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.இங்கே புதுவை இரத்தினதுரைகளும்,காசி ஆனந்தன்களும் சமூகத்தின் அறங்காவலர்களாகப் பாடிக்கொண்டே தமது அடிவருடித் தனத்தைச் செவ்வனே செய்து பிழைப்பதில் காலத்தைத் தள்ளுவார்கள்.இவர்களைச் சுற்றிய ஊடகங்கள் இத்தகைய கருத்துக்களைத் தேசத்தின்-இனத்தின் நலனாக வாந்தியெடுத்து மக்களின் ஒரு பகுதியை இந்த இருண்ட
பகுதிக்குள் கட்டிப் போடுகிறது.இதை வளர்த்தெடுக்கும் இயக்க நலனானது இவற்றைத் தேசிய எழிச்சியாகவேறு பிரகடனப்படுத்தி மக்களை இனவாதிகளாகச் சீரழிக்கிறது.இங்கே கொலைகளும்,மனங்களைச் சிதைப்பதும்,கொடூரமான வசவுகளும் மலிந்து'கொலைக்காரக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக'தமிழ்ச் சமூகம் சீரழிந்து போகிறது.

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும்
பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் 'கருத்தியல் வலுவை' எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவ்வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

இதிலிருந்து எங்ஙனம் மீள்வது?
இங்கேதாம் நமது எல்லை பிடரியில் மோதுகிறது.இவ்வளவு ஒழுங்கமைந்த கட்டமைப்பை-அரசியல் அதிகாரத்துவ நிறுவனங்களை எப்படி வீழ்த்துவது?இதைச் சில உதிரிச் சிந்தனையாளர்களால் வீழ்த்த முடியுமா?உதிரிகளாக அங்கொன்றுமிங்கொன்றுமாகக் கருத்திடும் நம்மால் முடியுமா?பதில் இல்லையென்பதே!பூர்ச்சுவா வர்க்கம்- கட்டமைப்பு தன்னை வலுவாகத் தகவமைத்துப் பாரிய நிறுவனங்களாகச் சமுதாயத்தில் அதிகாரத்தைக் குவித்து ஒழுங்கமைந்த கட்சியோடு வன்முறை ஜந்திரத்தைக்
கட்டிவைத்துத் தன்னை மக்கள் பிரதிநிதியாகக் காட்டிக் கொலைகளைச் செய்யும்போது'சில உதிரிகள்'இவற்றுக் கெதிராகக் கலகஞ் செய்வது வரையறைக்குட்பட்டது,
இது ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.இங்கே ஒழுங்கமைந்தவொரு 'புரட்சிகரக் கட்சி'யின்றி எதுவும் சாத்தியமில்லை.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த 'தீவுகளாக' வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் 'பொதுவான' வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.

அதிகார வர்க்கமானது 'புரட்சிகரக் கட்சியின் 'தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு'பின் நவீனத்துவ'தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.

இன்றைய நிலையில் எவரெவர் 'புரட்சிக் கட்சி'க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்'மனமுடக்கங்களும்,சிதைவுகளும்'
தனிநபர்வாதமாக மாறுகிறது.இது தவிர்க்க முடியாதவொரு இயங்கில்போக்காகும்.

இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருக்கேற்வாறு'அதிகாரவர்க்கம்'செயற்படுகிறது.
இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை 'ஜனநாயக வாதிகளாக'க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்(ஈ.பி.டி.பீ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளட் இப்படிப் பலர்...).இவர்களுக்குப் பாசிச உள்நாட்டு-உலக அதிகாரவர்க்கத்தோடு பாரிய கூட்டுண்டு.இவர்கள் நிலவுகின்ற கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்பது போல்(டக்ளசின் தினமொருமடலை அவரது வானொலியான இதயவீணை
காவி வருவதைக் கவனிக்கவும்) தம்மைக் காட்டி மக்களைக் கருவறுக்கும் அரசுகளுக்கு-அதிகாரங்களுக்குத் துணைபோகின்றனர்.

இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்'கொடூர அராஜக' அரசியலுக்கும் வித்தியாசம்'அடியாட்'படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.எனவே நமக்கு நாமே துணையென மக்கள் தமது 'ஸ்தாபனமடையும் வலுவைப்' பேணி 'புரட்சிகர'அரசியலை முன்னெடுக்க உதிரிகளான நாம் முதலில் ஒன்றிணையும் நிலைக்கு வந்தாகவேண்டும்.
இது இல்லையானால் எமது எல்லைக்குட்பட்ட நகர்வு இறுதியில் நம்மைத் தோல்வியில் தள்ளிவிட்டு, நகர்ந்து வெகு தூரம் சென்றுவிடும்.இந்த நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு'மாகாண சுயாட்சி'சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை எவராலும் தடுக்க முடியாது. இங்கே ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப்
பலிபோவது உலகம் பூராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.


ஐக்கியப்பட்ட இலங்கைப் புரட்சியானது நேபாளத்தின் 'நிலைக்கு'
மாறுவதை உலகம் விரும்பவில்லை,குறிப்பாக இந்திய
ஆளும் வர்க்கத்துக்கு
இது பாரிய தலையிடி.இங்கே இந்த நிகழ்வை முளையிலேயே
புலிகள் கிள்ளி எறிந்தும் இவர்கள் திருப்தியின்றி மேன்மேலும் புரட்சிகர அரசியலைச் சிதைக்கப் பலரூபம் எடுக்கிறார்கள்.அதில் ஒரு உரூபம் ஈ.பி.டி.பீயும்,டக்ளசும்.மற்றது ஆனந்தசங்கரி...சிங்களத் தரப்பில் ஜே.வி.பீ,பேரினவாதக்கட்சிகள்,பௌத்த துறவிகளெனப் பல வடிவங்களாக இது விரிகிறது.நாமோ
உதிரிகளாகி உருக் குலையும் நிலையில் ஓலமிடுகிறோம்.

மக்கள் அராஜகத்துக்குப் பலியாகிக் கொத்தடிமையாகிறார்கள்.அகதியாகி அல்லல் படும் நாம் 'சொகுசு'வாழ்வோடு கத்துகிறோமென்று கருத்துவளையத்துக்குள் தலையைக் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள்.
காலம் நம்மெல்லோரையுங் கடந்து நகர்கிறது.அதை விட்டுவிட்டு,அதன் பின்னால் நாம் நாய்யோட்டம் போடுகிறோம்.வாழ்க மக்கள் ஜனநாயகம்.

பிற்குறிப்பு:

படங்கள் தேனீ மற்றும் பெயர் மறுந்துபோன தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.அத்தளங்களுக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2005
வூப்பெற்றால்,ஜேர்மனி.



Wednesday, November 02, 2005

'மகனும் ,ஈ கலைத்தலும்'

"வனத்தின் அழைப்பு"

அஸ்வகோஸ்:'மகனும் ,ஈ கலைத்தலும்'

(சிறு குறிப்பு)


'...என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப் படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்...'

ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்,
நான் துயருற வேண்டி.

சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக
நான் கொள்ளும் தியானம்!
படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி.

'இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது
இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை'

சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள்.

என்னயிது?
சவப்பெட்டி நட்டநடுவே.
ஒன்றல்ல, பல.
ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி.
என் கைகள் நாலாபக்கமும் வீசியடித்தபடி,வேகமாயின.

முடியவில்லை.

அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன்.
யாருமேயில்லை!
எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள்?
இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு.
சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈக்களின் மொய்ப்பில் அவை ஊளையிடுகின்றன.

நான் தனியாகவேயுள்ளேன்.

கனவுதாம்.



ஒரு கவிதைத் தொகுப்புக்கூடாகக் கனவுதாம்.

நிஜம் கனவாகிறதா?
ஏன்?
நான் வெகு தூரத்தில்.
மிகப்பெரிய இடைவெளி உறவுகளுக்கும்,இன்றைய என் வாழ்வுக்கும்.

'வதை தாங்காது அழுது சென்றவர்களும்
வார்த்தையின்றி மௌனித்தவர்களும்
நடந்த தெரு,முற்றமிது
வெறிச்சோடித் துயருடன்

எத்தனையோ இரவுகளில்
புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள்
சாய்ந்து போன உடல்களாய்
சவப் பெட்டிகளுள் ஈயுடன் போராடி...' வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை.

தெருவோரச் சொறிநாய் மாதிரி ஊளையிட்டுக்கொள்ளும்

இலக்கியச் சூழலில் இப்படிச் சிலர்,அஸ்வகோஸ் போல்...
இரத்தமும் சதையுமான வாழ்வோடு வருவதுதாம் கவிதைகள்.ஒரு பாரதிபோல,சு.வில்வரெத்தினம் போல.

'இத்தனை காலமும்
ஏங்கித் தவித்ததின் அர்த்தமென்ன?
நீங்கள் கூறுங்கள்
தாய்மையின் கதறல்
கேலிக்குரியதா?'

இல்லை!

உனக்கும் தெரியும்,எனக்கும் தெரியும் இரஞ்சகுமாரின் சீலனுக்கும்,குலத்துக்கும் என்ன நடந்ததென்று.

கோசலையின் நிலை,ரொம்ப ரொம்ப எங்கள் அம்மாக்கள் அநுபவப்பட்டதுதாமே?

எங்கள் உடன் பிறப்புகள் சீலனுக்கும்,குலத்துக்கும் நடந்ததையிட்டு கோசலைகளாக மாறிய அம்மாக்களின் கதறல்கள் கேலிக்குரியதாக மாறிவிட்டால்:

'பாழாய்ப்போன தேசமே நீ மீண்டும் பாழ்!
மனித வதை,மனித வதை,
இலங்கையில் மட்டுமல்ல
இந்தப் பூமிப்பந்தில் எங்கும்!' ஒவ்வொரு வகையில் தொடர்கிறது.எல்லாம் 'ஒவ்வொரு'நலத்திற்காக.யார்,யாரோ சாகிறார்கள்,யார் யாரோ அரியாசனம் அமர்கிறார்கள்!

எங்கள் நிலை?

'விலங்குகளுக்கெல்லாம் விலங்குகள் செய்த விடுதலை' குறித்துப் பேசியவர்கள்கூட தம்மைத் தாமே அழிக்கமுனைந்த இருள் சூழ்ந்த இழி நிலை,இன்றைய நம் நாட்டில்.இது குறித்து:

'எம் சோகம் சிறையிருந்த
காலம் போதும்
செவிடராய் மௌனித்துப் போன
மக்களின் செவிகளில்
அலைகளை மீட்ட வா!' என்று,அஸ்வகோஸ் அழைப்பு விடுப்பது மிகவும் சரியானதுதாம்.இல்லை?

'நிறையவே சிந்திக்க வேண்டும்!'

மனிதவிடுதலை குறித்து,தேசவிடுதலை குறித்து,தோழமை குறித்து...
உண்மைதாம்!
கடந்தகால அல்லோலகல்லோலப்பட்ட இயக்கவாத மாயையில் நாம் ரொம்பத்தாம் முடமாகிப் போய்விட்டோம்.

அஸ்வகோஸ் புது இரத்தம் பாய்ச்சுகிறார்.
கவிதை ஒருவாழ்வு.
'வாழ்வு கவிதையாக வேண்டும்.கவிதை வாழ்வாக வேண்டும்'என்று சேரன் அடிகடி கூறிக் கொள்வார்.

இங்கு அஸ்வகோஸ் கவிதையில் வாழ்ந்து பார்க்கிறார்.

சமூகசிவியம் சீர்குலைந்து,சின்னாபின்னமாகி மனித இருத்தலே கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் குரலாய் ஒலிக்கும்

'வனத்தின் அழைப்பு' ஒரு காலக்கட்டத்தின்(சமகால) தேச தரிசனத்தைத் தரவில்லை?

தருகிறது!,புயலாக.

'போரின் கனத்த குரல்
இப்போது கேட்கவில்லை
அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்
எங்கு என்ற கேள்வி வேண்டாம்
போரின் கனத்த குரல்
ஒலிக்கும்போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்'

தன் சிரசை உயர்த்தி அறுதியிட்டுக் கூறி முடிக்கும் வரிகளால்,தான் மண்ணைளைந்து விளையாடிய மண்ணின் வாழ்நிலை குறித்து ஓங்கியோங்கி ஒலிக்கிறான்,இங்கு இந்தக் கவிஞன்.

எதற்கெடுத்தாலும் கொலை.'டுமீல்',டுமீல்!குருதி வெள்ளத்தில் மானுடம் புதைந்தபடி!!,இது கால் நூற்றாண்டாய் இலங்கையின் அன்றாட நிகழ்வாச்சு.
மனிதர்களின் எந்த விருப்புகளுக்கும் மதிப்பில்லை.மனிதர்களின் விருப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்த விருப்பு, உயிர்வாழும் 'விருப்பு' ஆகும்.இன்று, இலங்கையில் உயிர்வாழ்தலுக்குரிய மதிப்புபெறுமானம் சொறிநாயின்-விசர்நாயின் இருத்தலைப் போலுள்ளது.

'கருணையுள்ளோரே கேட்டீரா
காகங்கள் கரைகின்றன
சேவல்கள் கூவுகின்றன
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன'

இந்தக் கவிதை வரிகளை எதுக்குள் அடக்கமுடியும்?
மரபுக்குள்ளா,நவீனத்துக்குள்ளா?

இதுவா இப்போதுள்ள பிரச்சனை?இல்லை!

இஃது ஒரு'காலத்தின்'பதிவு.இலங்கை அரசியலில் நிகழ்ந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுப்போக்கு.இதைக் கவிஞன் பதிவு செய்வது மட்டுமல்ல,கலகக்காரனாகவும் அவன் தன் இறக்கைகளை விரிக்கிறான்.பேனா முனையின் கூரை இன்னுமின்னும் கூராக்கிக் கொள்கிறான்.
அஸ்வகோஸ்க்கும் அவர் படைப்புகளுக்கும் மரபு ரீதியான

எந்தப் புரிதலும் சரிவராது. அவர் கவிதைகள் இலக்கணத் தளைகளை மீறி வாழ்வாய் மலரும் அதேவேளை,தம்மளவில்

கவிதைக்கான இயல்பைக் கொண்டேயிருக்கின்றன-இயங்குகின்றன.

ஈழத்தின் கவிஞர்களில் பலர் 'வெறும்'கவிஞர்கள் இல்லை.அதாவது பண்டைய மன்னன் புகழ் பரப்பும்,இன்றைய சினிமாவுக்கு கூலிக்குழைக்கும் 'கூழை'க் கவிஞர்கள் போலில்லை.மாறாக இவர்கள் சமுதாயத்துள் ஐக்கியமாகி,அதனுடன் கரைந்தவர்கள்.இவர்களே போராளிகளாக தோளில் சுடுகலங்களுடன் காடும்,மேடும் அலைந்து மக்களுக்காக தம் ஆயுளைச் செலுத்தியவர்கள்.முற்றுகைக்குள்ளான தேசத்தின் இதயத்திலிருந்து பீறிட்டெழும் விடுதலைத் தீயிலிருந்து சுடரெழுப்பும் இக் கவிஞர்கள்,தீக் குஞ்சுகள்!,அக்கினிக் குழந்தைகள்.

இந்தக் கவிஞர்களின் கவிதைகளில் காணும் அநுபவங்கள்

இவர்களின் அசல் நாணயமான அநுபவம்.இவர்களின் வேர்கள் சமூகத்தின் அதியுண்மையான சமூக முரண்களிலிருந்து பத்திப் படர்கிறது.இங்கு ஒரு அஸ்வகோஸ் தோன்றவில்லை.பலருள்ளார்கள்,அவர்களுள் அஸ்வகோஸ் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி வருகிறார்.இவரின் ஒப்புமைகள்,புதிய குறியீடுகளை உருவாக்கிவிடுகிறது.புராண,இதிகாச அநுபவம் அவரது நீண்ட கவிதைகளில் மிகவும் உன்னதமான வடிவில் புதிய குறியீடுகளாக உயிர்க்கின்றன!இவரது மொழியாற்றல் மிக அபாரம்.தமிழைப் புதுப்பொலிவோடு கையாளுகிறார்.

போராட்டம் இவரைத் தத்துவத்தில்,வரலாற்றில்,சமுதாய அநுபவத்தில் பட்டறிவுள்ளவராக்கி விட்டுள்ளது.இவரின் சிந்தனை இவருள் முகிழ்த்த அதியுன்னதச் சிந்தனை.இஃது பிறரிடமிருந்து பெற்றதல்ல.இதனால் இவர் உயிர்த்து நிற்கிறார்.எந்தவித இலக்கணக் கட்டுக்களையும் காவாது பேச்சோசையோடு அநுபவத்தைப் பகிர்வதும்,வாழ்வை அதன் இயல்போடு சித்தரிப்பதும்,வரலாற்றைப் பதிவு செய்வதும்தாம் இம்மாதிரியான கவிதைகளுக்கு இலக்கணம்.

அஸ்வகோஸின் கவிதைகளுக்கும்,ஏன் ஈழத்தின் கவிதைகளுக்கு இதற்கு மீறிய எந்தத் தளைகளையும் நாம் ஏற்றிச் சுமைகாவிக் கொள்ள அனுமதிக்க முடியாது.ஏனெனில் இவை நம் உண்மையான-அசலான வாழ்வு.

குரூரமான நமது மெய்வாழ்வுக்கு எந்தவிதப் பூச்சும் வேண்டியதில்லை.நம் வாழ்வும்,கலையும் நமக்குள் முரண்படவில்லை.அது இரண்டும் ஒன்றாய்ப்போய் நமக்குள் சுடர்விடும் உயிராய் மாறுவதில் வெற்றி பெற்றுவிடுகிறது.'வனத்தின் அழைப்பு' அதற்குச் சிறு உதாரணம்.

இக் கவிதைகள் தம்மளவில் தமக்கானவொரு 'அழகியல் தொடர்ச்சியை'உள்வாங்கியே வெளிப்படுகிறது.இஃது பாரதியிலிருந்து தொடர்கிறது.மனித விடுதலையும்,தேசவிடுதலையும் இந்த அழகியலை இயக்குகின்றன.இக்கவிதைகளின் 'அகவடிவம்'சிறப்புப் பெற்று உள்ளடக்கத்தையும்,உருவகத்தையும் பிரிக்கமுடியாது-இரண்டும் பிணைந்து நிற்கும் ஒரு புதுவகை அழகியலைத் ஈழத்துக் கவிதைகளுக்கு இயல்பாக வற்புறுத்தி வெற்றி கொண்டுவிட்டது.அஸ்வகோஸின் பல கவிதைகளுள் இந்தப் பண்பைக் காணலாம்,உணரலாம்.

இஃதுதாம் இவரது சிறப்பு.இந்தச் சிறப்பு ஆளுமையான படைப்பாளிகளால்தாம் பேணப்படுகிறது,உருவாக்கம் கொள்கிறது.அஸ்வகோஸ் இதற்கு நல்ல உதாரணமாகிறார்.

குதறப்படும் மனித இருப்பின் மெய்யான சூழ்நிலையை ,அதன் உண்மைத் தனத்துடன் படைக்கப்படும்போது அவை சிலவேளைகளில் சகல கவிதை மரபுகளையும் மீறிவிடும்.இத்தகைய மீறலின்றி கவிதை பாரிய எதிர்வினையை வாசககர்களிடம் உண்டுபண்ணமுடியாது.கம்பன் அல்லது வள்ளுவன் பாணியில் இன்றைய நம் அவலத்தைப் பாடினால்-எழுதினால் இஃது மிக மிக அற்ப எதிர்வினையையும் செய்யாத அபாயம் உண்டு.
இத் தேவையால்தாம் மீறல்கள் இயல்பாகிறது.அத்தோடு இந்த மீறல்களால்தாம் கவிதைக்குரிய

புதிய வடிவம் தோன்றிக் கொண்டேயிருக்கு.

நவீனக் கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாகிப் போன இன்றைய புலம்பெயர்வுச் சூழலில,; இத்தகைய'உயர் திறன் கவிதைகள்'கவிதை ஜீவனைக் காவிக் கொண்டே சமூக விமர்சனம் செய்வதால,; இஃது உயரிய இலக்கியமாகவும் விரிகிறது.

அஸ்வகோஸின் மொழியைப் புரிந்து கொள்ளும்போது இவ்வுண்மைகள் புரிந்துவிடும்.

ஒருசில கவிதைகள்(செவல்,நீ போனாய்,ஏவாள்,என் வசந்தம் வராமலே போய்விட்டது) அகம் சார்ந்து வெறும் விபரிப்பு என்ற

பச்சோதாபச் சுற்றுக்குள் முடங்கிவிடினும், அஸ்வகோஸ் ரொம்பவும் நிதானமாகவேயுள்ளார், புறநிலை சார்ந்த கவனிப்புகளில்! அவர் வெறும் ஒப்புமைக்குள்ளோ ஓசை நயங்களுக்குள்ளோ மயங்கவில்லை

'மெய்வாழ்வு' இதற்காகவே எழுத்தை நடைபயில விடுகிறார்.இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வெறும் வார்த்தைக் கட்டுக்குள் முடக்கி விளக்கிட வேண்டிய தேவைகள் இல்லை.கவிதைகள் நாம் அன்றாடம் அநுபவிக்கும் வாழ்சூழலை நம் விழிகள்முன் விரித்தக்காட்டி விடுகின்றென.

இவைகளின் எதிர்வினை நம் எல்லோருக்கும் பொதுவான அநுபவமாகிறது.அதாவது சமுதாய அநுபவம்,ஆவேசம்!

ஏன்?

நாம்'மனிதமறுப்புச் செய்யும் நாட்டின்'குடிகள்.போராட்டமே

வாழ்வாய்ப்போன தேசத்தின் குரல்கள் எம் அகத்துள் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கு,போருழைச்சல் நம் அகத்தை

வாட்டி அழுகுரலாக ஒலிக்கிறது.

'மனித அவலங்கள் நினைவில் எழ
மடுமாத கோயிலில்
ஒதுங்கிய மனிதர்களின்
ஜீவத் துடிப்பாய் எழுந்த
கீதங்களில் எனையிழந்தேன்...'

இக்குரல்கள்தாம் எமக்குள் இக்கவிதைகளை வாழ்வாய்,அநுபவமாய் உணரவைக்கிறது.யாவருக்கும் பொதுவான வன்மத்தை தீயாய்-ஜுவாலையாய் ஆத்மாவுக்குள் நிறைத்து வைக்கிறது.

உலகத்தில் சில கவிதைகளுக்கு ரொம்ப ரொம்ப உயர் ஸ்த்தானமுண்டு.பாலஸ்த்தீனக் கவிதைகள்,இலத்தீன் அமெரிக்க-

ஆபிரிக்கக் கவிதைகளுக்கு,இரஷ்சிய-மாவோ சேதுங் கவிதைகளுக்கு

இந்த ஸ்த்தானம் என்றுமுண்டு.இன்றோ 'ஈழத்துக் கவிதைகள்'

என்றிந்த'உயர் திறன்'மிக்க கவிதைகள் அந்த ஸ்த்தானத்தை

நொருக்கிவிடும்.

ஈழத்தின் நவீனக் கவிஞர்களான மகாகவி,நீலாவாணன்,நுஃமான்,சிவசேகரம்,மு.பொ.,

சு.வில்வரெட்னம் நீட்சியாக ஜெயபாலன்,சேரன்,செல்வி,சிவரமணி தாண்டி அஸ்வகோஸ் உயர்கிறார்.இவரது நீண்ட கவிதைகள் இதை நிச்சியம் ஊர்ஜிதப்படுத்தும்.

மில்டனின் 'இழந்த சொர்க்கத்தின்'மகுடத்தை வனத்தின் அழைப்புத் தொகுப்பிலுள்ள 'இருள்'கவிதை உடைத்து நொருக்கி விடுகிறது.இத்தகைய தகர்வை நாளைய வரலாறு சொல்லும்.நம் சிறுசுகள் அதைச் செய்து காட்டுவார்கள் சர்வகலாசாலைக்குள்ளிருந்து?...

சு.வில்வரெத்தினம்,சோலைக்கிளி போன்றோருக்கு மிக மிக நேர்த்தியாக அநுபவமாகிய 'கவிதைஜீவன்' இந்தக் அஸ்வகோசுக்கு ஒரு சில கவிதைகளுள் எப்படி முகிழ்க்கிறது?

பிடுங்கியெறியப்பட்ட தேசத்தின் புதல்வனின் கவிப்பாங்கு அபாரம்தாம்.மரபுக்குள் மடிந்துபோன 'மக்களின் ஆன்மவுணர்வு'

இவ்வகைக் கவிஞர்களால் உன்னதமான வகையில் சமுதாய ஆவேசமாக வெளிவருகிறது.உருதுக் கவிஞன் இக்பால் போலவே இங்கும் கவிஞர்கள் பீறிட்டெழுகிறார்கள்.

அஸ்கோஸின் கவிதைகளை வாசிக்கும்போது,கவிதைகளுக்குள்

நீரோட்டமாக சதா ஊறிக்கொண்டிருக்கும் சமகால வாழ்வியல்

இயக்கப்பாடு நம்மையொரு இக்கட்டான சூழலுக்குள் நகர்த்திச் செல்கிறது.

இது ஒரு அவஸ்த்தை!

கவிதையூடே அநுபவமாகும் வாழ்வு,நம்முடைய மெய்யான வாழ்வு-குருதி சொட்டும் போராட்ட வாழ் சூழலிது.இந்தச் சூழலுக்குள் நகரும் ஈழத்து வாசகர்களுக்கு கவிதையின் பாரம்பரியப் படிமம்,குறியீடு,உத்தி,உள்ளடக்கம்,இறைச்சி இவைகள் பற்றிப்

பேசமுடியாது போகிறது.

இஃதொரு நெருக்கடி.

இந்தக் கவிதைப் போக்கைச் சமுதாயச் சூழலே தீர்மானிக்கின்ற

யதார்த்தப் போக்கால் இக் கவிதைகளுக்கு எந்தப் பூட்டுக்களையும் போடமுடியாது போகிறது.இந்திய சுதந்திரத்தைப் பாடிய பாரதியின் விடுதலைக் கவிதைகளுக்குக்கூட நாம் விமர்சன ரீதியாக சில

இலக்கண

மீறல்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.ஆனால் இன்றைய ஈழத்தின் கவிதைகளுக்கு இதைச் செய்யக்கூடிய சூழ்நிலைகளை

இக் கவிதைகள் விட்டுவைப்பதில்லை.

'என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமைகளைச் சொல்வேன்
சிதழுறும் காயங்கள் பேசும்
மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்.'

கவிஞரே 'காலச் சூழலைப் பிரதிபலிக்கின்ற மெய்மையை'

தன் படைப்பூடே சொல்லி விடுகிறார்.
உண்மைதாம்! மண்ணின் குறிப்பை-மானுடவாழ்வை,தரிசனத்தை,

வரலாற்று ஊற்றைத் தன்னகத்தே புதைத்துக் கவிதை

வாழ்வாகிவிடுகிறது.

'போரதிர்வுகளில் உயிரிழந்து
சிதைவுகளை நெஞ்சில் சுமந்து
வலிகளைத் தாங்க ஏலாது
முறிந்த வாழ்வுடன்
இடம் பெயர்ந்துழலும் அவலம்...'

இது ஒரு சத்தியப் பதிவு.

வாழ்வின்மீது கவிந்த கயமைப் போக்கால் முறிந்து விடுகிறது வாழ்வு.

இனி ஒவ்வொரு திக்குத்திக்காய் வாழ்வின் பாதுகாப்புக்காக-

உயிர் வாழ்தலை அச்சமின்றிப் போக்க இடம்பெயர்ந்துழலும் அவலமாக வாழ்வு விரிகிறது.வாழ்வை அவலம் காவுகொள்கிறது.

கவிஞன் ஆவேசமடைகிறான்,கோபக் கனலோடு உரக்கக் குரலெடுத்து, அவலத்தைச் செய்யும் அரசியல் போக்கை-அதை நகர்த்திச் செல்லும்

வர்க்க மனிதர்களின் முகத்தில் தன் வார்த்தைகளால் ஓங்கியடிக்கிறான் இந்த அஸ்வகோஸ்.

'வாவிகளில் பிணமாய்க் கரைந்து
போகையில்
திறந்த வெளியரங்குகளில்
மலரேந்தித் துதித்தவர்
புதை குழிகளில் ஓய்ந்திருந்ததை
துயில் எழுப்பி
ஊர்த்திகளில்
வேட்டைக்கு அனுப்பியவர்
நீவீர்...'

மனித வரலாறு பூராகவும் கவிஞர்களில் பலர் சமுதாய நீதிமான்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் சமூகச் சீரழிவுகளைச் செய்யும்

நிறுவனங்களை நியாயக் கூண்டில் ஏற்றி,தங்கள்

சத்திய வாக்கால் சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.
சிலம்பு சொல்லும் கதை தெரியும் தானே?
மதுரையையே எரித்தான் இளங்கோ முனிவன்.

இங்கே,அஸ்வகோஸ் தன் கைகளை நீட்டி கயவர்களைச் சுட்டி,

மக்கள் முன் இழுத்து வருகிறான் தண்டனைக்காக.ஏனெனில்,

மக்கள்தாம் வரலாற்றைப் படைப்பவர்கள்.

சமூக விரோதிகளை மக்கள் முன் நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

'குரூரத்தை மறக்க இயலவில்லை
போய்ப் பார்
போர் இளமையை
உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது.'

மானுட விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கத்தக்க நிலைகளாக மாறும்போது, சமூக அக்கறை என்பது ஒவ்வொரு 'உணர்வுள்ள' மானுட ஜீவனுக்குள்ளும் பிரதிபலிக்கும்.ஆனால் விடுதலைவேண்டி அதற்காகப் பாடுபட்ட சமூகத்திலுள்ள ஒவ்வொரு விடுதலைப்பங்காளருக்கும்

நேரடியாக அநுபவமாவது எவ்வளவோ! அவை ஒரு வரலாற்றின்

பதிவுகளாக மாறுவதற்கு முன், மானுட ஆத்மாவுக்குள் கேள்வியாக விரிந்து,தன்னையே கேள்விக்குட்படுத்தி'சுயவிமர்சனம்' செய்வது

இயல்பாகி விடும்.

'எதுவரை உண்மையினை அவர்கள்
கொண்டு சென்றார்கள்
அதுவரை நான் வந்தேன்
எங்கு வைத்துக் கொலை செய்தார்கள்
நான் அங்கிருந்தேன்
என்னால் முடியாத பேரழிவினை
ஊழியில் இயற்ற
என்னையங்கு தயார்ப்படுத்தினார்கள்'

இங்கு மனித இருத்தல் மீளவும் மறு ஆய்வுக்குள்ளாகும்.அஃது புதிய வீச்சோடு மெருகேற்றப்பட்டு,நியாயமான உரிமையாக கிளைபரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும்.

'கணக்குகள்
மீளவும் தீர்க்கப்படுகையில்
நான் அஞ்சுகிறேன்...!!'

என்று ஒவ்வொருவரையும் நோக வைக்கும்.

'பொது மானுட விழுமிய நோக்கை'அஃது இயல்பாக ஏற்படுத்தி விடும்.அப்போது தன்னினம்,தன் மொழி,தன் சுயம்மென்பது சுருங்கி சர்வதேசிகளாக மனிதப் பொதுமைக்காக:

'நியாயம் கூற இயலாக் கண்ணீருடன்
விரட்டப்பட்ட மக்களிடையே
விடுபட்டு உதிரிகளாய்
ஒன்றிப் போன ரசூலின் கதை...' சொல்ல எத்தனிப்புகள் தோன்றும்!,தோன்றிவிடுகிறது. இதுதாம் நாம் யாழிலிருந்து

விரட்டிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு ஆற்றும்,ஒத்தும் ஒளடதம்!

இஃதுதாம் மனிதப் பண்பு.அஸ்வகோஸிடம் இந்தப் பண்பு மிகுதியாகப் படர்வதை அவர் படைப்புகளில் நாம் அறியலாம்,உணரலாம்.

'முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனுக்குத் திருப்தியில்லை
அழுவானென்றும் நம்பமுடியவில்லை...' என்றும்,

'அவன் அறிவான்
கண்முன் நடந்ததைவிட
காணாமற்போனது
எதை விட்டுச் செல்லுமென்பதை...'

இந்த வரிகளோடு மிகப் பெரிய வெற்றிடமாக ஈழமண் மாறிவிடுகிறது,

நம் கண் முன்!யாருமே இருப்பதாக உணர்வு ஏற்குதில்லை.எல்லோருமே அழிந்துபோய் வெறும் சுடுகாடாய் கண்முன் 'தமிழீழம்' விரியும்போது

கவிஞன் ஆவேசம்கொண்டு:

'மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத் தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் வலியை
இனியும் தீர்மானிக்க வேண்டாம்...' என்று ஓங்கி உரைக்கிறான்.

இப்போது இன்னுமதிகமாக சுதந்திர தாகமும்,மானுட விழுமியமும் வேர் பரப்பி விழுதெறிகிறது.

இங்கே அஸ்வகோஸ் எனும் மகாப் பெரிய மானுட நேயன்

உண்மையான வாழ்வின் அர்த்தத்தை இலக்காகக் கொண்டு,

நம் முன் உயர்ந்து நிற்கிறான்!

இவன்தாம் ஒரு கட்டத்தில் தன் மைந்தனையே விடுதலைக்காக

பலியாகக் கொடுத்துவிட்டு,மகனின் உயிரற்ற உடலுக்குப் பாதுகாப்பு அளிப்பான்,

ஈக்கள் மொய்க்காது-காகம்,கழுகுகள் கொத்தாதிருக்கும்படி கவனிப்பான்!

அப்போது அவன் உள்ளத்தில் கேள்விகள் முளைவிட்டு வேர்பரப்பும்:

'அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?'

இஃதுதாம், இன்றுவரை நம் எல்லோர் முன்னும் உள்ள கேள்வியும்.

* * *

(வனத்தின் அழைப்பு(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்:அஸ்வகோஸ்

வெளியீடு:நிகரி,21,மினேரிகம பிளேஸ்,கல்கிசை ,இலங்கை.)

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால் ஜேர்மனி.










மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...