Monday, September 26, 2005

கற்புச் சொல்லும் ஆண்!

கற்புச் சொல்லும் ஆண்!


அரிப்பெடுத்த எனது ஆண்குறி
அல்குல் வழித்துவராக் கனவில்
இன்னொருத்தியின்
மார்புக்காம்பைக்
கோவில் வாசலில் திருகிக் கொள்ளக்
கரங்களைத் தயாராக்கியது



எனது சமயக் கதைகள் இவற்றையும் கடவுள் பெயரில்
காவியமாக்கும்,கதைகளாக்கும்!
உப்புக்கு வழியற்றவளின் உறவோ
ஒரு செம்பு நீருக்கும்
அதுள் வேகும் அரிசிக்குமான தேவையில் அமையும்

அவளுக்கு அம்பாளின் சமனமும்
அளப்பரிய கற்புமுடியும் அவசியமென
அரிப்பெடுத்த எனது ஆண்குறி அறிவுப்புச் செய்கிறது
அப்பப்ப செருகிக்கொள்ளும் ஆசையோடு

நேற்றைய குருதிவெடில்
நாசித்துவாரத்தை விட்டகலா இன்றைய பொழுதில்
எனது அப்பனும்,பாட்டனுமிட்ட அதே கதைகளை
நானும் புதிப்பித்தபோது எனது 'விருப்பு' விலங்குடைத்தது

'தொப்புளில் நா பதித்து
அரசிலை தடவி...'
சீதையையெண்ணக் கம்பனின் இரசம் மேலெழும்பிக் கொண்டது

எனது முகத்தை தரைக்குள் ஆழப்புதைத்தபடி
இப்போது சொல்வேன்:
'எனது குலத்துப் பெண்ணை நான் கனவிலும் புணரேன்
அவள் எனது தாய்-மாதா!'
பாரதத்தின் குலத் தோன்றலான எனக்குப் பெண்மையும்
குலமேன்மையும் தேச மானத்தின் கருவறை!

எனது கச்சையை இறுகப் பிடித்துக்கொண்டு
கிஞ்சித்தும் கலாச்சாரம் மாசடையாதிருக்க
பெண்ணினது கழுத்தில் 'தாலி'யேற்றிவிடத் துடித்தால்
கூலி தரத்தக்க நிலையில் அவள் நிலையில்லை

நடுச்சாமத்தில் பேயோட்டியின்
உடுக்கையின் ஒலியில்

அவள் பிடவை விலக்கப்படும் நடுவீட்டுள்
அதைப் பேயினது பெயரால் கிராமமும் அங்கீகரிக்கும்

இத்தனைக்கும் பிறகும்
எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது-
கருக்கலைத்துக் கொள்ள வரும் சிறுசை
'பெரியவளின் ஒப்புதலோடு'
உறவுக்குப்பிறகிடும் மருந்தே
ஆழச் சென்று அதைக் கொல்லுமெனுஞ் சாக்கில்
மீளக் கலைக்கும் அவள் துணிகளை!


எனதும்,உனதுமான
தமிழ்க் கலாச்சாரத்தின்'உயரிய'பெண்மதிப்பீடு
இப்படியிருக்க

ஒருத்தி எதையோ சொல்லிக் கொள்ள
உருப்படியற்ற எதையோ
எனக்காகவாகவும்> உனக்காகவாகவும்
சில பைத்தியங்கள் சுவர்களில் எழுதிக் கொள்கின்றன(ர்)

-ப.வி:ஸ்ரீரங்கன்
26.09.2005

Sunday, September 11, 2005

தமிழீழ மீட்பு நிதி மீளக்கையளிப்பு...

தமிழீழ மீட்பு நிதி மீளக்கையளிப்பு...



தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒரு திட்டமானது எதைக் குறித்துரைக்கிறது?


அதாவது தமிழீழ மீட்புப் பணிக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதிகள் மீளக் கையளிக்கும் நடவடிக்கை துரிதமாகச் செயல்ப் படுத்தப்பட்டு வருகிறது.இன்று பளையிலிருந்து 'வெக்டோன்'தொலைக்காட்சி நிருபர் இவற்றைத் தொகுத்தளித்தார்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மீளக் கையளிப்புச் செய்வதானால் இலங்கையின் அரச ஆதிக்கத்திலிருந்த ஈழம் விடுபட்டிருக்கவேண்டும்.அது தன்னைத் தனியரசாகப் பிரகடனப்படுத்தி,தமிழ் மக்களுக்கானவொரு அரசாக உலக அரங்கில் அங்கீகரம் பெற்றிருக்கவேண்டும்.இத்தகைய நிலையில் அந்த அரசு மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கையளிப்பது நியாயமானது.இத்தகையவொரு நிலை நமக்குக் கிடைத்துவிட்டதா?தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை'தனியரசு'மூலம் பெற்றுவிட்டதின் குறியீடாக இது இருக்கிறதா?


அல்லது ஈழப்போர்-ஈழமென்ற அரசியற் கருவூலமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,எனவே மக்களிடம் பெற்றதை நியாயமாக அவர்களிடம் ஒப்படைக்கின்றோமென்கிறார்களா?

நிறைந்த கேள்விகள் எழுகிறது.


இது என்ன வகை அரசியல்?


மக்களின் வாழ்விடங்கள் நிர்மூலமாகப்பட்டுள்ளது.அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த வாழ்விடங்களைச் சிங்களப் பாசிச இராணுவம்'உயர் பாதுகாப்பு வலையமாக'க் கையகப்படுத்தி வைத்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான சதுர மைல் இப்படிப் பறிபோய், மக்கள் வெவ்வேறு இடங்களில் இடம் பெயர்ந்து'அகதி'யாக உள் நாட்டில் வாழ்கிறார்கள்.அவர்களது சமூக வாழ்வு சிதைக்கப்பட்டிருக்கும்'உயர்பாதுகாப்பு வலையம்' அப்படியேதாம்... மக்கள் தமது வாழ்வாதாரச் சமூக முன்னெடுப்புகளை முன்னெடுக்கத்தக்க 'இயல்பு நிலை' திரும்பி வந்திருக்கிறதா? அதை இந்த ஈழம் உறுதிப்படுத்திக் காக்கும் அரசாகத் தன்னை விடுதலைப் படுத்தியுள்ளதா?

இது என்ன?

மக்களிடமிருந்து பெற்றது வெறும்'பொருள்கள்'மட்டும்தாமா?

அவர்களது உயிர்,உடமை, மாவீரர்களும்,துரோகிகளுமாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள்? என்ன இது?

இன்றும் அரசியற் கைதிகளாக் கிடந்து அவலப்படும் இளைஞர்கள்?

சர்வதேசிய ரீதியாக மதிப்பிடும்படி அமையும் நமது மக்களின் வாழ்வுச் சிதைவுகளுக்கு எந்த நஷ்ட ஈடு வந்துள்ளது?இதைத் தரவேண்டிய இலங்கை அரசின் நிலையென்ன?

ஈழத்தின் கதை என்ன?
இந்த மீள் கையளிப்புத்தாம் மக்களால் எதிர் பார்கப்பட்டதா?
இதன் அரசியலும்,புலிகளின் இந்த நகர்வும் எதைக் குறித்துரைக்கிறது?

-ப.வி.ஸ்ரீரங்கன்
11.09.2005

Saturday, September 03, 2005

கற்பவிழ்ப்பு!



கற்பவிழ்ப்பு!


எதுவும் வெட்கத்தை தருவதாவில்லை
ஒரு இருண்ட பொழுதில் கனத்த உணர்வைத் தவிர
எதுவும் மனதில் தைக்கவில்லை
கனத்த உணர்வும் காலியான எனது பியர்க் குவளையிலிருந்த
நுரையாய்ப் போனது





தெருவெங்கும் ஆராயப்பட்ட
புணர்வுக்குப் பின்பான
'குற்றம் சுத்தம்'
நீதிக்கான திசையைத் திருடிக் கொள்ளும்



கற்பவிழ்ப்பு!



இது தொடர் கதை
அம்மாவினது மடியில் ஆசைகொண்ட அப்பனும்
அவள் தங்கை அகத்துக்காய் ஏங்கிக் கிடந்த சகதியில்
மையம்கொண்ட புயலாய் இது நீண்ட தொடர்



நேற்றுமட்டும்
புதிதாக முளையரும்பிய முயற்சியல்ல


தவித்திருக்கும் உயிர்களுக்கு -உறவுகளுக்கு
ஒரு குவளையால் வயிறு நிரப்பக்
கரம் வலிக்கும் சிறுசுகளுக்கு




அம்மாவுக்கு அடுப்பெரிக்க
தம்பிக்கு போச்சி நிரப்ப
அக்காள் அடுத்தவர் அடுக்களையில் அவிவதும்
வலுக்கரங்களால் வதைபடுதலும்
ஆயிரமாண்டுத் தொடர்ச்சி
என் தேசத்தின் அடி வாரத்தில்




எனினும்
ஒரு தேசம் தெருவெல்லாம் பிணமுருள
எழ முயன்ற கணமெங்கே?
இரும்புத் தொப்பி அந்நியனும்
இருண்ட காலத்தில் ஏறிமிதித்த என் தேசம்
தன்னைத்தாம் சுவரோடு மோதிக் கொண்டது




துருப்பிடித்த குருதிவெறி
அடங்காது அவிழ்த்தெறிந்த கோவணத்தால்
தேசத்தின் மானம் தெருவெங்கும் கந்தலாக
கனத்த உணர்வை கண்ணீர் கரைத்தது



உயிர் தொலைத்து
உணர்வுருக்கி உடல் காத்த ஊரெல்லாம்
திசைமாறி
வெண்ணை திரளும் சாடிகவிழ்த்தால்
என் தேச மகள் கதியிதுதாமோ?




எனது பியர்க் குவளை
வழிந்திறைத்த நுரைபோன்று
என் உணர்வும் சில நொடியில் கரை மேவ




குருதிகொட்டும் விழி
வசவெறிந்த வாயோடு
மதில் பூனைகளும்
வழிமீது உணர்வு குவித்து வாசல்கள் நோக்கி...


ப.வி.ஸ்ரீரங்கன்
03.09.2005

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...