Friday, July 15, 2005

ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980)


சிந்தனையை சிறப்பாக்கிய சிற்பி!

ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980)
சாற்ராரும் மானுடவிடுதலையும்-கனவுகளுக்கு விடைகொடுத்த இருப்பின் வலியுணர்ந்த உன்னதம்.

வரும் 21.ஜுலை 2005 சாற்ராருக்கு 100 வயது,இது நினைவாகி விட்டது.


ஒரு பிந்திய- மந்தமுடைய சமூகமாக மானுடம் இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தரணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும்.

'சுதந்திரம்-விடுதலை' இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா?

இன்னும் யோசிப்பதே விடையாகும்.

பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி.

இங்கு சாற்ராரும் இந்த நெருக்கடிக்கு உந்தப்பட்டுத் தன் வாழ்நாளெல்லாம் மனித விடுதலைக்காகச் சிந்திக்கிறார். தன் முன்னோர்களையும்,பின்னோர்களையும் கோடுகிழித்து சுதந்திரமென்றால் 'சுயதேர்வு'செயற்படுத்தல்,என்பதும்,எதையும் மறுதலிக்கையில் தேர்விடுதலே சுதந்திரமென்பதாயும் கூறிச் சென்றவர்.இருபதாம் நூற்றாண்டின் மகத்துவமற்ற முறைமைகளுக்காக மனிதம் பலியாகியதைக் காணும் அறிவுப்பரப்புக்குச் சொந்தக்காரர் சாற்ரார்.பிரான்சின் குடிமகனாகவும்,உலகக் குழந்தையாகவும் வரித்துக் கொண்ட அரசியல் மனிதனவர்.
"Being and Nothingness", "Huis Clos", "Les Mouches", "Les Mains Sales","La Nausee" "Critique of Dialectic Reason","Les Mots" என்ற பல நூற்களுடாய் மனிதரின் இருப்புக்கு விடைகாண முற்பட்டவர். தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவருக்கு இரண்டாவது உலகமகாயுத்தம் தேசிய உணர்வைத் தூண்டிவிட பிரான்சின் இராணுவத்தில் சேர்ந்திருந்தபோது ஏற்பட்ட மனச்சிதைவானது பின்னாளில் யூதஎதிர்ப்பு மனத்தளவிலிருந்ததாக இன்றைய சமூகவியலாளர் கூறுகின்றனர்.என்றபோதும் பொதுவுடைமைப் போராளியாகவே இவரை நான் பார்க்கிறேன்.இவர் இரண்டாவது உலகப் போரில் கிட்லரின் படுகொலைகளை:அவுஸ்விச்,செல்மோ,மாஜ்டானேக்,சோபிபோர் ஆகிய யூதஅழிப்புச்சாலைகளைப்பற்றி(இவ்விடங்களில் பல இலட்சம் மக்கள் நச்சுவாயுவுக்குப் பலியானார்கள்)மௌனம் சாதித்ததாகவும்,அதுபற்றி ஒருவார்த்தை எழுதவில்லையென்றும் இந்த நூற்றாண்டின் புதிய தலைமுறை குற்றஞ் சாட்டுகிறது.

சமூகத்தில் அறிவுஜீவியின் பாத்திரமானது இதயத்திற்குச் சமமானதென நாம் பலமாக நம்பலாம்.

1964 இல் நோபல் பரிசையே வேண்டமறுத்துப் போராடிய இந்த மகத்தான மனிதரை,இன்றைய மாணர்வர்கள் புரட்டிப்போடுவதும் கண்கூடாகவே நடக்கிறது. நமது தவறுகள் நாளை நம் மாணவர்களால் புதியபல விளக்கம் பெறுமெனச் சொல்லலாம்.சாற்ரார் பற்றிய நிறைய விமர்சனங்களை பற்பலர் முன் வைக்கின்றனர். தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் பேசும் நம் நண்பர்கள் இவர்மீதான தமது பார்வைகளை இதுவரை முன்வைக்கவில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்
14.07.2005

Monday, July 11, 2005

வாழ்வு நமக்கருகினில்...

வாழ்வு நமக்கருகினில்...

எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம்.

எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்துவிட்டது.காவுகொள்ளத்தக்க கனவுகளுக்கும்,வளமற்ற விருப்புக்களுக்கும்'தோற்றுவாய்'வேறொரு வகையினில் என்னுள்ளே தோன்றி மறையும்போது எனது இருப்பினது அத்தியாவசியமற்ற மனிதத் தேர்வானது என்னை முழுமையாக விழுங்கி விடுகிறது.எனக்கு முன் இருப்பதெல்லாம் திமிர்த்தனங்களின் கூட்டுக் கலைவைதாம்.இது என் மனதைக் காவுகொள்வதால் 'நான்' அழிந்து போவதும்-முகிழ்ப்பதும் வரலாற்று மாய்மாலம்.

அறிவின் பிரச்சனையே தற்கொலைதாம்!

என்னைவிட்டுப் பிரிந்த என் தம்பிக்காக...

எதைப்பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது.திமிர்த்தனமான-எதேர்ச்சையான இந்தப் பேரண்டம் எந்த உறுதிப்பாட்டைத் தந்தது- இந்த ஊனப்பிறவிக்கு தந்துகொண்டது? தயங்கிக்கொண்ட மனமும்,தவித்துத் திரியும் உணர்வுத் தொடர்ச்சியும் வரலாற்றோட்டத்தில் எந்தப் பாத்திரத்தை எய்கிறது? நிலவுகின்ற மலட்டுத்தனமான இந்தப் படுபயங்கர'விருப்புறுதி' வெறும் பிம்பத்தை மட்டும் வாழ்வாக்கிவிட்டால் -சுதந்திரமென்பது மரணமா?சடுதியில் முடிகின்ற பயணத் தொடர்ச்சி பண்டுதொட்டு நிலவுகின்ற ஊழீயாகும்போது 'நான்'என்பதன் சுட்டலுக்கு ,இருப்புண்டா-பொருளுண்டா?

என்னை உருவாக்க 'நான்'துணையின்றி முடிந்திருக்காது.என்னுள் அமுங்கும் 'நானை' நானே தீர்மானிப்பதால் உணர்வுத் தடத்தில் புதியவொரு உலகை நானே தயார்படுத்துகிறேன்.இதனால் எனக்குச் சிக்கல்கள் வருவதில் என் இருப்பைக் கவனிக்க 'நான்' வருகிறேன்.இதுவே என்னை அழிப்பதிலும் 'நான்'எனச் செயற்படுகிறது.

இந்தப் புலத்தை எனக்காகச் செய்வதில் என் சுதந்திரமே இயங்கிக் கொள்கிறது.இதன்போது உலகத்தை நான் படைக்கிறேன்.அல்லது தூண்டப் படுகிறேன்!எப்படி உருவாக்கிக் கொண்டாலும் எனக்குமுன் விரிந்துகிடக்கும் அண்டம் வரலாற்றுத் தொடர்ச்சியாக ,என்னைக் கட்டிப்போட்டுள்ளது.பொருள் வாழ்வைப் புலப்படுத்தும்போது 'நான்' நேர்மாறாகக் காரியஞ் செய்கிறதே,இதுதாம் என்னை உருப்படவிடுகிறதில்லை.

புறவுலகில் ஒரு அங்கமாக உலாவரும் எனக்குச் சுதந்திரமுண்டா?

சூழ்நிலைகளால் உண்டாக்கப்படும் பொருளுலகமும்,அதன் சமூகக்காரணிகளும் தீர்மானிக்கின்ற உணர்வுக்கூட்டத்தால் 'நான்'முடிவற்ற சூறாவளியாகிறது.இந்தப் நெருக்குதலில் எஞ்சிக்கொள்வதற்கென்றொரு அனுமானம் புலப்படாதபோது,எனக்கு-நான் தடை.இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தெரிந்த பாதை-என்னளவில் தற்கொலைதாம்.இது எனது சுயத்தின் மதிப்பீடாக இருப்பதில்லை!மாறாக என்னைத் தூண்டுகிற பொருள் வாழ்வும்,புறநிலைகளின் உந்துதலுமே -என்னைத் தீர்மானித்துக்கொள்ள 'நான்'பலவீனமாக இருந்திருக்கிறேன்.

எனக்கு இதன் தாக்கத்தால் விமோசனமில்லை!ஆகையினால் எனது சாரமாக 'நான்' வருவதில் சிக்கல்.நான் அற்ற 'நான்' பொய்யன்.பொய்யானது மெய்மையை அழிக்கிறது.அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது.

இன்னொரு விதத்தில் கூறினால் மனிதர்களுக்கு(எனக்கு) முந்தியது எதுவுமேயில்லை.வெறுமையேதாம் எனக்குமுன் கருத்தரித்தது.எனது இருப்பே எனக்கு அடிப்டையாக வருவதும்,அதையே 'நான்' அடிப்படையில்லாத அடிப்படையாக்கி விடுகிறேன்.இந்த மகாகெட்டித்தனம் எனக்கு வழிகாட்டாது.நிச்சியமாக என்னைப் படுகுழியில் தள்ளிவிடப்போகுமிந்த 'நான்' சுதந்திரத்தைப் பயன் படுத்தமாட்டேன்.ஏனெனில் அது என்னிடத்தில் இல்லை.எனவே எனக்கு -நான் அடிமைதாம்.இந்த இழி வாழ்வு ஏற்புடையதில்லை.நான் அழிவதை'நான்' தீர்மானிக்க மௌனித்திருங்கள் மற்றைய 'நான்கள்'.

ப.வி.ஸ்ரீரங்கன்
10.07.2005

Sunday, July 03, 2005

தானாடாது போயினும் தசையாடும்!



தானாடாது போயினும் தசையாடும்!


இந்த நிமிஷத்தில்
நெருப்பவன் உடலை உண்டுகொள்ளும்!
தொப்புள் கொடியாய் தொடர்ந்த உறவு
ஒரே கருப்பையுள் மலர்ந்த சொந்தம்
ஒரு துளி விசத்தினதும்
ஒருசிறு உளத்தூண்டலாலும்
நெருப்புக்கு இரையாகிறது


இது நீண்ட கதையின் தொடர்ச்சி...
என்வீட்டின் சுவர்களில் மோதித் தெறித்த இந்தக் கணத்தில்
தவித்தெரியும் உளமோடு
தசையாடும் தவிப்போடு
இயலாமையின் உச்சம் கண்களில் வெடிக்கும் நீர்த்துளியாய்


புகையிலைச் செடிகளுள் மலர்ந்துகொண்ட பாசம்
பாய்ந்து பாய்ந்து 'கணு முறித்து' பெருமிதப்பட எதுவுமற்ற அந்தக் காலத்தில்
சிறு விவசாயின் குழந்தைகளுக்கு
தோட்டத்துச் செடிகள் ஆயிரம் கதைபேசியும்
அழகாய்த் தோன்றி வாழ்வாய்ப்போனது


புகையிலைப்பாணி தலைகளில்பட்டுக் கொள்ளும்
ஒருவர் தலையையொருவர் தடவிக்கொள்வோம்
தலைமுடி கம்பிகளாகக் கைகளில் தட்டிக்கொள்ளும்
ரவியும்
ஜெயாவும்
கருணாவும்
'சின்னண்ணா,சின்னண்ணா தலையைப் பார்!' என்பார்கள்


நினைவின் கனத்த பொழுதாய்ப்போனதந்தக் காலம்


பூப்பறித்துச் சாமிப்பூஜை விளையாடியும்
எட்டு மூலைப் பட்டம் கட்டி
காற்றிலேற்றி நிலாப்போன நம் மலர்ச்சியெல்லாம் தொடர்ந்து துயர் எறிகிறது


ஏன் இந்த ரவி எமைவிட்டகன்றான்?


மும்மாரி தொலைந்த பயிர்ச்செய்கைப் போகத்தில்
நடு இரவுகளில் ஊற்றெடுத்தூற்றெடுத்து நீரிறைப்பதும்
ஒளிர்ந்து முகம்விரிக்கும் நிலவினில்
தோட்டத்துள் ஆடிக்களித்ததும் இந்த ரவி, ஜெயா,கருணாவோடுதாம்!


விடியலில் தூற்றும் மழையினில் நனைந்தபடி
சாரத்தை அவிழ்த்து ஆமத்தூறுகளாய் மொட்டாக்கிட்டு
தென்னை வளவுக்குள் ஓடுவதும்
உதிர்ந்து கிடக்கும் தேங்காய்களைப் பொறுக்குவதும்
தேக்கம் பழங்களை பகிர்வதில் அடிபடுவதும் நம் நால்வரின் தினக்கூத்து


விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம்
பாவப்பட்ட என் தேசத்தைப்போல கொலுவின்றிக்கிடக்கிறது
மாரியில் குளமாகும் சின்னமடுமாதா வளவும்
மாரித் தவளைகளும் நம்மை நீந்த அழைத்துக்கொள்ளும்
அம்மாவின் அடியில் ஒருவரையொருவர் தேற்றுவதும்
புளியம் பழம்
இலந்தைப் பழம் பொறுக்கி
கோவில் கணக்கரிடம் ஏச்சும்
அவர் நாயிடம் கடியும் வேண்டுவதும் கனவுத் தடத்தில் பதியமாகி
நேற்றிரவு விழித்திரையை முட்டியது.


ஆல மரத்தில் பால் குற்றிச் சுவிங்கம் செய்வதும்
பூவரசில் ஊஞ்சல் கட்டி நாளெல்லாம் ஆடுவதும்
ஆடு மாடுகளுக்குப் புல் செருக்குவதும்
தொடரூந்தாய்த் தொடருமிந்த நாலவரும்தாம்


'மங்கலாகக் கப்பல் கடலினில் தெரிகிறது'என்பதை
'மங்கோலக்கா கப்பல்...' என வாசித்து, வீட்டுப் பாடத்தில் அத்தாரிடம் வேண்டிய அடியும்
தம்பிமாரின் சிரிப்பும் அலையலையாய் வலியைத் தந்தபடி...


எல்லாம் தொலைத்த அகதி வாழ்வில்
அன்புத் தம்பியின் உடலத்தைக் காணமுடியாது போயிற்று!
நஞ்சருந்திய உடலம் நீண்ட நாட்தாங்காது தகனமாகிறது
என் வலியைத் தடுப்பதற்கு நீண்ட மையில் தொலைவுகூட
தோற்றுப் போகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.07.05

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...