Thursday, June 30, 2005

பெடியன்களை நோக்கி...



முனியன்,உம்மாண்டி,புதியோன்:பெடியன்களை நோக்கி...

இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாகவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட 'மாதிரி பரப்புரைகள்'மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்.

எனவே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அதன் வாயிலாகவொரு நீண்ட வலுவுள்ள சிந்தனைக்கான தோற்றுவாயைத் திறப்பதும் சமுதாய வளர்ச்சிக்கும்,அதன் இருப்புக்கும் அவசியமானது.இந்தப் பொறுப்புணர்வை நோக்காகவுணர்வோமானால் எமது செயற்பாடுகளில் அறிவைப் 'பெறுதலும்-வழங்குதலும்' சமூக சீவியமாக உருப்பெறுவதும்,அதற்காக நீண்ட திட்டங்கள்-படிப்பு வட்டங்கள்,செயற்கூட்டு முன்மாதிரிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.இந்த மாதிரியைக் கொண்டவொரு கூட்டு வடிவமே வலைப் பதிவுகளும்,அதை இணைக்கும் தமிழ் மணமும்.இந்த எல்லையை ஏற்றுக்கொண்டோமானால் இதன் அளப்பெரிய பயன்பாடும்,சமூகப் பொறுப்பும் மனித மனப் பரப்பில் விசாலாமானவொரு புரிதலையும்,பொறுப்புணர்வையும் தோற்றுவிக்கும்.இந்த வெளியில் உலாவரும் வாசகர்-வலைப்பதிவாளர் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும்,கருத்துக்கும் நீண்ட நிதானிப்பையும்,கடப்பாட்டையும் இலகுவாகக் கண்டடைவார்.இதுவே வெளிப்பாட்டூடகங்களின் இயக்கப்பாடாகும்.

இங்கு சமீப காலமாக நடந்துவரும் செயற்கைத்தனமான கருத்துருவாக்க முயற்சிகள்,காழ்புணர்வையும்,மந்தப் புத்தியையும் உருவாக்குவதில் நம்மைக் கடைக்கோடி நிலைமைக்குள் தள்ளியுள்ளது.ஏலவே நம்மிடமிருக்கும் பிரபுத்துவ எண்ணக் கலவைகள் தத்தமது வீராப்புக்களையும்,தனிநபர் வாதங்களையும் அபரிமிதமாகத் தூண்டுகிறது.இதன் பலாபலன் கூட்டுணர்வு-தோழமையுணர்வு,நட்பாடல் வலுவிழந்து வம்புபண்ணுவதின் உச்சக்கட்டமாக,அநாமதேயங்கள் உருவாகிறார்கள்.இந்த வகைக் கூறு, மக்கள் சமூகத்துள் மலினப்பட்டுக் காணும்போது அந்தச் சமுதாயம் குறைவிருத்திச் சமுதாயமாகவும்,அதன் சமூக உளவியல் குறுகிய பண்பாட்டுணர்வையும் உடையதாகப் பார்க்கப்படுகிறது.இத்தகைய சமுதாயத்தின் உறுப்பினர்கள் நாளாந்தச் சமூகவாழ்வில் தன்னைப்பிணைத்திருப்பினும் அவர்கள் ஒற்றை மனிதர்களாகவும்-மனப்பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவுமிருப்பார்கள்.இவர்களிடம் பலமான சமூகவலு இருப்பதற்கான எந்தச் சாத்தியமும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.

இதைத்தாம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டுக் கல்வியமைப்பு முறைமையும்,காலனித்துவக் கல்விப் பாடநெறிகளும் தந்துகொண்டிருக்கின்றன.

இதை உடைத்தெறிந்து சமுதாய ஆளுமையையும்,மக்களாண்மையும் நிறுவுதல் ஒரு படிநிலை வளர்ச்சியாகும்.இவ்நோக்கு நிலையிலிருந்துகொண்டே நாம் கருத்தாடலுக்குத்தயாராகிறோம்.இங்கு 'பெடியன்கள்' பதிவில் உம்மாண்டியிட்ட பதிவிற்கான எதிர்வினையாக நாம் முன்வைப்பது 'பொறுப்புணர்வையும்-கூட்டுணர்வையுமே'.இதன் தாத்பரியம் நமக்குள் நிலவுகின்ற காழ்புணர்வுகளைக் கலைத்துவிட்டு,உடைந்துபோன எமது சமூகசீவிய ஒழுங்கிற்கும்-பெருவாழ்விற்கும் வழி சமைக்கும் எழுத்துக்களையும்-நோக்கங்களையும் முன்வைப்போம்.

இங்கெவரையும் கையை நீட்டி'நீயே குற்றவாளி' நான் மட்டுமே தங்கக்கம்பி' என்றுரைக்கவில்லை.பெடியன்களின் வருகைக்குப் பின் அநாமதேயங்கள் உருவாகிவிட்டார்களெனும் தொனி நமது கட்டுரையில் இருப்பதை நாம் உணர்கிறோம்.அதை மறுக்கவில்லை.ஆனால் தங்களின் அபரிதமான யுக்திகளின் பின்பு ,அக்கருத்துக்களைக் காவிவரும் பின்னூட்டங்களின் வலுவைத்தாம் அதில் கூறியிருந்தோம்.

இங்கு யாரையும் கழுமரத்திலேற்றும் மனப்பரிமாணம் நம்மிடமில்லை. அத்தகைய எண்ணவோட்டத்தை எமது கட்டுரையாற்றுமானால் நாம் மிக வருந்துகிறோம்.அத்தகைய நோக்கத்தோடு நாம் ஒருபோதும் காரியமாற்றுபவர்களில்லை.மக்களின்-நமது வாழ்வின் சீர்கேடுகள் ஒழிந்து நிம்மதியானவொரு அகப் புறச் சூழலைக் கனவு கண்டுவரும் நாம்,அதற்காக தோழமைகளையும் கூட்டுவாழ்வாதாரத்தையும் தேடியலைகிறோம்.

இங்கு நாம் முழுமையானவொரு புரிதலையும்,அதனூடாகவெழும் மனிதப் பலத்தையும்,சமூகவெழிச்சியையும் கனவு காண்கின்றோம்.இதன் வாயிலாக நமது பாரம்பரிய பூமியில் விலங்கொடித்த வாழ்வையும்-துய்ப்பையும் நிறுவ முனைகிறோம்.

இங்கு எல்லோருமே ஒரு தோழமையோடு-நட்புணர்வோடு உறவாடுகிறோம்.பல்வகைக் கருத்துக்களை நாம் கொண்டிருப்பினும்,மனிதவுணர்வுகளுக்கு முக்கியமளித்து அவற்றைத் தாண்டி மனிதர்களை நேசிக்கிறோம்.இவ் உயரியமதிப்பீடுகளேதாம் நமது வாழ்வையும்-வலுவிழந்த அறிவியற்றளத்தையும் மீளுருவாக்கஞ்செய்து நம்மையும்,நமது இருள்சூழ் நிலைமைகளையும் செப்பனிடும்.எனவே கூடுதலும்,குழம்புதலும் மீளவும் கூடுதலும்... தவிர்க்கமுடியாத விதியாகச் செல்கிறது.

தோழமையுடன்

ப:வி.ஸ்ரீரங்கன்
29.06.05
வூப்பெற்றால்.






Tuesday, June 28, 2005

அநாமதேயங்களும்,அறிவிலித்தனங்களும்...

அநாமதேயங்களும்,அறிவிலித்தனங்களும்...

வலைப் பதிவர்கள்-வாசகர்கள் மத்தியில் இன்றிடம்பெறும் அநாமதேய மிரட்டல்,எச்சரிக்கை-அதுசார்ந்த கருத்தாடல்,அநாவசியப் பின்னூட்டங்கள்,திரு.டோண்டு அவர்களை விடாது பின்தொடரும் அநாமதேயமென நாறடிக்கும் இந்த இழி நிலைமையைப் பற்றி நாம் வாழாதிருக்கமுடியாது.கருத்துக்களின்பாலான அரைவேக்காட்டுத்தனமானது ஒருவரையொருவர் மறைந்து தாக்கும் மர்ம மனிதர்களாக-முகமூடிபோட்டுத்தாக்கும் அநாமதேயங்கள் சொந்த முகவரியோடு-முகத்தோடு வரும் தோழர் இரயாகரனைத் தாக்குவது மிகமோசமான வரட்டுத்தனமாகும்.இதை வன்மையாகக் கண்டிக்கும் நாம் ஆரோக்கியமான கருத்துக்களோடு முகமூடி கழட்டி வரும்படி அனைவரையும் அழைக்கின்றோம்.

இந்த நோக்குநிலையற்ற அநாமதேயங்கள் தமது வக்கரப்புத்திக்கான துணையாக வலைப்பதிவுகளை நாறடித்து வருவது மிக மிகக் கேவலமானது.அதுவும் மாற்றார் பெயர்களில் பின்னூட்டமிடுவது இன்னும் அநாகரீகச் செயற்பாடாகும்.கணினி அறிவை இப்படிக் கேவலமாக செயற்படுத்தும் இவர்கள்,இந்த அறிவில் பின் தங்கியிருக்கும் என்னைப்போன்றவர்களுக்குப் பயனடையும் வகையில் கட்டுரைகள்-செய்முறைகள் போன்றவற்றையெழுதி வலைபதிந்தாலாவது பிரயோசனப்படும்.இது ஆரோக்கிமான அறிவை-நுட்பத்திலேற்படுத்தும்.

பெடியன்களின் வருகைக்குப் பின் பற்பல மாறாட்டங்கள்,அநாமதேயங்கள்-கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன.இதன் வாயிலாகப் பின்னூட்டப் பெட்டிகள் யாவும் பதிவுசெய்த வாசகரையே அனுமதிக்கும் நிலைக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.அனைவரும் கருத்தாடும் நிலை வலுவிழந்து போனவொரு சூழலில் எழுத்தினது பெறுமானம் வெறும் சிலருக்காக எழுத்தப்படும் நிலையில் ஆரோக்கியமானவொரு கருத்துநிலை வளர்வு இல்லாது போகின்றது.இதைச் சாத்தியமாக்கும் சமூகப்போக்கானது மென்மேலும் தொடரும் பட்சத்தில் வலைப்பதிவுகளை நாம் துஷ்பிரயோகஞ் செய்வதில் முடியும்.அபரிதமான சாத்தியங்களைத் தந்துகொண்டிருக்கும் இந்த வலைப்பதிவானது கடைந்தெடுத்த அற்ப மனிதர்களால் வலுவற்ற அரட்டையரங்காக மாற்றமுறுவது கவலைக்குரிய விடயமாகும்.இங்கெவரும் பொழுதுபோக்க வருவதில்லை.மாறாகக் கருத்துக்ளோடு முட்டிமோதிக் அறிவையும்-ஆற்றல்களையும் கண்டடையும் நோக்கமும் உண்டு.ஒவ்வொருவருடைய அநுபவமும் புதுமையாக-ஆரோக்கியமான பாடமாக இருக்கும்.அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் ஊடகமாவிருக்கும் இந்த வலைப்பதிவுகள் 'அநாமதேய-சைக்கோ கிரிமினல்களால்' வலுவிழக்கிறது.

எந்த நிலையிலும் இத்தகைய மாறாட்டப் பின்னூட்டங்களை அனுமதிக்கமுடியாது.இதை நிறுத்திக்கொள்ளும்வரை இதற்கெதிரானதும்,கருத்துக்களுக்கு ஆரோக்கியமானதுமான ஒரு வலுவான கருத்தியற்போராட்டத்தைச் செய்வது தேவையாகும்.

இலங்கைப் பிரச்சனைகளை மையப்படுத்திய அமைப்புகளின் ஆர்வலர்களிடும் 'பெடியன்கள்'பாணியிலான பதிவுகள் தமது கருத்துக்களுக்கு ஆரோக்கியமானவொரு தளத்தை உருவாக்குவதைவிட்டு,எல்லோருக்கும் 'எச்சரிக்கை-தளங்களை அழிப்பது',எதையெழுதுவது-எதையெழுத்தக்கூடாது,இன்னமாதிரிச் சொல்வது கொஞ்சமும் நியாயமாகாது. தலைமை முடிவெடுக்கும்,அமைப்பு செயற்படுத்தும் என்பதன் பின்னாலுள்ள அதிகாரமானது திமிர்த்தனமானவொரு அராஜக அரசியலைத் தருவது.

தமிழ்தேசியத்துக்கு எதிராகச் செயற்படுவதைத் 'தாம்' அனுமதியோமெனக் கூறிப் பயம்காட்டிய பெடியன்கள்,தாமே தமிழ்த்தேசியத்தைக் காலில் போட்டு மிதித்ததை அவர்தம் 'ஈழப்போராட்டத் தீர்வு:1-2 இல் நாம் காண்கிறோம்.ஏனிந்தச் செயற்பாடு?சிங்களத்தைத் தாய் மொழியாக ஏற்பதும்,பௌத்தத்தை ஆத்மீக மதமாக ஏற்பதும் தீர்வென விவாதித்தல் தமிழ்தேசியத்திற்கு எந்த வகையிற் ஒத்ததாகவிருக்கிறது?

இவ்வகைக் கருத்தாடலையும்,இதுசார்ந்த செய்கைகளையும் பாசிசச் சிங்களவரசு செய்வதாற்றாம் நாம் போராட வெளிக்கிட்டோம்.அதை மிக இலகுவாகத் தீர்வாக முன்மொழியும் பெடியன்களை எப்படித்தாம் தேசிய நலன்நோக்கர்களாகப் பார்க்க முடியும்?

இவ்வகைக் காரணங்களும்-எச்சரிக்கைகளும் நம்மையின்னும் மூடர்களாக்கும் எல்லை தாண்டிய சிங்களவரசினது செயற்பாடகக் காணத்தூண்டுகிறது.இவர்களால் ஆரோக்கியமானவொரு கருத்தியற் சூழல் இல்லாதொழிக்கப் படுகிறது.

இத்தகைய நிலையில் இவர்களினதும்,ஆள்மாறாட்டப் பேர்வழிகளினதும் அபரிதமான செயற்பாடுகள் மற்றவர்களைத் துன்புற வைத்தல் ஆரோக்கியமற்ற போக்காகும்.நம்மை நோகடித்துத் துவண்டிடக் காரியமாற்றும் அநாமதேயங்கள் தமிழ்பேசும் மக்களின் அறிவுப்பரப்பை அடியோடழித்துச் சிங்களவரசையும்,அவர்களது நோக்கத்தையும் வலுவாக்கி, எமக்கெதிராகக் கருத்தியல் யுத்தஞ் செய்கின்றனர்.

இவர்களை இனம் காண்பதும்,இவர்களோடான கருத்தாடல்களை வலுவாக்குவதற்கு இவர்கள் முகமூடியைக் கழட்டி வெளியில் வந்தால் நாமும் தயாராக இருக்கின்றோம் கருத்தாட.

ப.வி.ஸ்ரீரங்கன்
28.06.05

Wednesday, June 22, 2005

வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்!


வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்!


இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.இதயவீணை வானொலியும் தன்பங்குக்கு கொழும்பிலிருந்து நம்மை வந்து தாக்குகிறது.



இந்த நிலையில் வலைப்பதிவுகளிலும் பெடியன்கள்வேறு தம்மையுமொரு இயக்கத்தின் பிரதிநிதிகளாகப் பிரகடனஞ் செய்கின்றனர்.இதுகள்(தமிழர் போராட்டம்,அடிப்படையுரிமைகள்,இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறல்) இவர்களுக்கொரு முசுப்பாத்தியாகப்போன விடையமாகிப்போய்விட்டது. இப்போது அனைவரும் போராட்ட வாழ்வையும்,மக்களின் இரண்டும்கெட்டான் சமூகசீவியத்தையும் வெறும் கேலிக்குரிய விடையமாகப் பார்க்கின்ற நிலையை நமது எதிரிகளுடாய்ச் செய்கின்றனர்.இதை யாழ்ப்பாணத்தில் உரசிப்பார்த்த எதிரிகள்,இப்போது பரவலாக நமது மனங்களைச் சிதைப்பதற்கு வந்துவிட்டார்கள்.



மக்கள் சார்ந்த நோக்குநிலையிலிருந்து செயற்படாத தலைவர்கள்களுக்கு, டக்களஸ் தேவாநந்தா மணிமகுடம் சூடுகிறார்.கௌரவ அமைச்சர் மனமிரங்கியிப்போது நம்மிடம் பேசுவதற்காக இதயவீணை வானொலியூடாகத் தினமொரு மடலுன் நம்மைநோக்கி வருகிறார்.நாம் புல்லரிக்கும்படி கருத்தாடுகிறார்.



இந்திய ஆமியோடு சேர்ந்து மண்டையன் குழுவைத் தொடக்கி அப்பாவிகளின் கழுத்தையறுத்துச் சாக்கு மூட்டையில் திணித்த துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் நம்மையின்னும் இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்த நோக்கமானது,சமாதானச் சூழலில் புலிகளைப் பலவீனப்படுத்துவதும்,அவர்களிடம் முழு அதிகாரமும் போய்ச்சேருவதைத் தடுத்துத் தமது கைகளுக்குள்ளும் சிலவற்றைப் பங்குபோடவெடுக்கும் நோக்கமும்,கூடவே தமது இருத்தலை ஆபத்தாக்காத-உயிருக்கு உத்தரவாதம்கோரும் தந்திரத்தோடு மக்களையணுகிறார்கள்.



இவர்களேயிப்போது நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை இலங்கைக்குள் ஏலவே உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய தலைமைத்துவத்தை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த ஆட்சியையும் இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.இதற்காகப் பற்பல நிதி உதவிகள்(முதற்கட்டமாக 2500கோடி இந்திய ரூபாய்கள் கைமாறியுள்ளது) மூலம் புதிய புதிய ஊடகங்களுடாய் நமது மூளையைத் தகவமைக்கும் காரியத்துள் அகண்ட பாரதம் இறங்கியுள்ளது.சும்மா கிடப்பதுபோல் பாசாங்கிடும் இந்தியாவின் முழுப்பார்வையும,; நிழலும் இலங்கைமீதே சூழ்ந்திருக்கிறது.இதன் விளைவுக்குப் பிற் பலமாக இந்தியாவின் வெளித்தொடர்புகள் இருக்கிறது.


மாறிவரும் பொருளியற் சூழலை மதிப்பிட்ட ஐரோப்பியஅமெரிக்க ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்கான பொது சமூக-அரசியற் கட்டமைப்பையும்,அரசியற் சாசனச் சட்டவிதிகளையும் கூடவே அது சார்ந்த பொது நாணய-பொருளாதார நெறிமுறமைகளையும் உலக வங்கியூடாக வலியுறுத்தி வருகிறது.இதைச் செய்யும் பட்சத்தில் அந்தந்த நாடுகளினது அந்நியக்கடன்களை பாதியாகக் குறைப்பதாக பிரேரிக்கப் பட்டுள்ளது.இதன் உந்துதலானது இந்தியத் துணைக்கண்டமானது இனத்துவ முரண்பாடுகளுக்கு தற்காலிகச் சமாதிகட்டிவிட்டு அந்நிய நிதிமூலதனத்துக்கேற்றவாறான உற்பத்தி மையமாக மாற்றப்பட வேண்டும்.இந்தச் சூழலானது உலகக் கம்பனிகளின் தன்னியல்பான தேவைக்களைப் பூர்த்திசெய்யும் அரசையும்-பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்படி இந்தியா தன்னைப் பலப்படுத்தித் தகவமைத்து,பிராந்திய பொலிஸ்காரனாக இருப்பதை வழிமொழிகிறது.



இது இப்படியிருக்க நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த லாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.


இந்தச் சமூகக் காலவர்தமானத்துள் நாம் எதைப் பற்றிச் சிந்திக்கிறோம்?


எம் தரப்பில் புதிய ஜனநாயகப் புரட்சி என்கிறோம்,


புலிகள் தரப்பில் தேசிய விடுதலைப் போராட்டம்,தனிநாடு.


குறுங்குழுக்கள் இலங்கைக்குள் தமக்கான பங்கைக் கோருதலும்,அதுவே மக்கள் நலனும் என்பதாக...


ஆனால் உலக அரசியல் நம்மெல்லோருக்கும் ஒரு குறிப்புணர்த்தியுள்ளது.அதாவது தான் தீர்மானிப்பதே சமூகச் சூழலாக உருப்பெறுவதும்,அதுவே தேவையாகவும் மக்களால் உணரப்படுமென்பதும். அதையே பெடியன்களும்,´இதயவீணை-ரீ.பீ.சீ வானொலிகளும் உறுதிப்படுத்துகின்றன.


என்றபோதும் நாம் உதிரிகள்.எம்மிடம் எந்த அமைப்பு வடிவமுமில்லை.எம்நிலை மாரித் தவளைகளின் நிலை.

ஆனால் இதயவீணை,ரீ.பீ.சீ இயக்கங்களின் பிற்பலத்தோடு நம்மையணுகி,நமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குவேட்டு வைக்கிறது.

எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமாகப் பலர் காரியமாற்றும்போது நாம் புதிய ஜனநாயகப் புரட்சிபேசுவதும்,அது சார்ந்து மக்களை விழிப்படைய வைப்பதும் அவசியமானது.

குறைந்த பட்சமாவது அவர்கள்(மக்கள்) தமது சமூக வாழ்வாதரங்களைக் காக்கும்படியான தேசியத்தையும்,தேசியத் தன்மைகளையும் காக்கவேண்டும்.இதைச் செய்யத் தக்க தேசிய முதலாளியமில்லாத தேசியக் கட்டமைப்பு நிலைக்கமுடியாது.

இறுதிவெற்றி எம்மக்களுக்கானதாக இருக்குமா?

கசப்பான உண்மை: இல்லையென்பதே!

அடுத்த தலைமுறைவரை நாம் விலங்கொடிக்க முடியாத பலவீனத்தோடு இருக்கப்போகிறோமா? தீர்மானிப்பது யார்? மகள் என்று எல்லாவற்றையும் அவர்கள் தலையில் போட்டுவிட்டு நாம் தப்பிக்கிறோம்.வேறு வழி?


ப.வி.ஸ்ரீரங்கன்
21.06.05










மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...